புன்னகை – 14
இரண்டுமாதம் கடந்திருந்த நிலையில் நித்தமும் சின்ன சின்ன வம்புகளுடன் வாழ்க்கை தெளிந்த நீரோடை போன்றுதான் சென்றுகொண்டிருந்தது அனய் வனமலர் இருவருக்கும்.
அவ்வப்போது வைத்தியநாதன் காமாட்சியுடன் வந்து சென்றார். வனமலர் வருணியின் காய்ச்சலுக்குக்கு பின் அங்கு சென்று தங்கி வந்ததிலிருந்து தன் மன இறுக்கம் தளர்ந்து அவர்கள் மீதான கோபத்தை விடுத்து முகம் திருப்பாமல் அவர்களுடன் சகஜமாக பேசவும் செய்தாள்.
அதிலேயே அவர்களின் நிம்மதி கொஞ்சம் மீண்டிருந்தது. அக்குடும்பத்துடன் அழகாய் பொருந்திப்போனவளை பார்த்து பார்த்து பூரித்துக்கொண்டனர்.
வருணிகா அவ்வீட்டின் வாரிசாகவே மாறிவிட பேத்தியின் கவலை அகன்றவராக இனி எந்த நேரமும் என் உயிர் பிரிந்தாலும் தனக்கு கவலை இல்லை, எமன் எந்நேரம் அழைத்தாலும் முழுமனதுடன் தான் செல்லாம் என எண்ணியவருக்கு காமாட்சியை பற்றிய கவலை எழவே இல்லை.
“அவளுக்கென்ன அவள் மகன் ஆதி பார்த்துக்கொள்வான்…” அவருக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது அனய்யின் மீது.
வைத்தியநாதனுக்கு நன்றாகவே புரிந்தது. தன்னுடைய நாட்கள் இவ்வுலகில் குறைவானது என. அதை நிறைவுடனே எதிர்கொள்ள முடிவு செய்தார்.
மலருக்கும் மற்றவர்களுக்கும் வேண்டுமானால் தனக்கு வந்தது முதல் அட்டாக். ஆனால் அவருக்கு தன்னுடைய உடல்நிலை நன்றாக தெரியுமே.
அவருக்கு இது இரண்டாவது ஹார்ட் அட்டாக் என்பதும் மூன்றாவது அட்டாக்கை தாங்கும் அளவிற்கு தன்னுடலிலும் உள்ளத்திலும் வலு இல்லை என்பது.
இந்த இரண்டு மாதத்தில் மலரையும் வருணியையும் விட்டு பிரிந்திருந்தாலும் தங்களோடு அவர்கள் இருந்த பொழுது அடைந்த சந்தோஷத்தை விட இப்பொழுதுதான் அவர்களை குடும்ப சகிதமாக காணும் பொழுது தான் முழுமையான மகிழ்ச்சியை அவர் அடைகிறார்.
தனக்கு இன்னும் ஒரே ஒரு ஆசை. அது மட்டும் நிறைவேறிவிட்டால் அந்த நொடியே உயிர்துறக்கவும் அவர் தயார் நிலையில் இருந்தார். ஆனால் நிறைவேறுமா? மலர் சம்மதிப்பாளா? அது மட்டும் தான் அவருக்கு.
ஒவ்வொரு முறை அனய்யை சந்திக்க வரும் வேளையில் எப்படியாகினும் அதைப்பற்றி பேசிவிடவேண்டுமென்று வைத்தியநாதன் நினைப்பார். தான் பேசுகிறேன் என்னும் காமாட்சியை கூட தடுத்து தானே பேசுவதாக வைத்திருந்தார்.
ஆனால் மலரின் சம்மதத்தை விட இதில் ஆண்டாளின் சம்மதம் மிக முக்கியமானது. அவர் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்பதுதான் இன்னமும் கலக்கமே.
ஞாயிற்றுகிழமை மலர் கொஞ்சம் தாமதமாகவே எழுந்துவர சோபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழ்களை புரட்டிக்கொண்டிருந்தான் அனய்.
நேராக சமையலறைக்கு சென்று வீராத்தாயோடு பேசியபடி தனக்கு காபியை கலந்தவள் அனய்க்கும் ஒரு கப் எடுத்துக்கொண்டு அவனருகே வந்தமர்ந்தாள்.
“வாங்க மேடம் இன்னைக்கு என்ன இவ்வளோ லேட்?…” என்றவாறே தனக்கான கப்பை வாங்கி பருக ஆரம்பித்தான்.
“அதான் லேட்ன்னு தெரியுதுல. தெரிஞ்சுட்டே என்ன கேள்வி?…”
அவனிடமிருந்து பேப்பரை பறித்தவள் பக்கம் பக்கமாய் புரட்ட ஆரம்பிக்க அங்கொரு பக்கத்தில் அவள் பார்வை நிலைகொள்ள கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள்.
எதை பார்த்திருப்பாள் என புரிந்தவ முறைக்க அதை கண்டு இன்னமும் சிரித்தவள்,
“எதுக்கு இந்த விளம்பரம்?…” என கேட்டு மீண்டும் சிரித்தாள்.
அந்த விளம்பரம் அனய்யின் முதல் படம் வெளிவரப்போவதற்கான விளம்பரமும், அதற்கு ரசிகர்கள் அவனுக்கு வைத்த கட்டவுட்டும் டைரக்டரின் பேட்டியும் அடங்கிய தொகுப்பு.
அதில் சில வாசகங்கள் மலருக்கு புன்னகையை ஏற்படுத்த சிரித்தவள் அனய் முறைக்க ஆரம்பிக்கவும் அவன் டென்ஷன் ஆனதை கண்டு மேலும் சிரித்தாள்.
“என் படம் ரிலீஸ் ஆகறதுக்கு விளம்பரம் செஞ்சுதானே ஆகனும். இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு?…” எரிச்சலோடு பேப்பரை தன் பக்கம் இழுத்துக்கொள்ள,
“சிரிக்காம? பாருங்க, எப்டி பப்ளிசிட்டி குடுத்திருக்காங்கன்னு? விடிவெள்ளி, எரிமலை, எழுச்சி சிங்கம்னு. செம்ம காமெடி…” பொங்கி பொங்கி சிரித்தாள்.
“அது என்னோட ரசிகர்கள் செஞ்சது. உனக்கென்ன வந்தது?…”
“எது? இப்போதான் நீ முதல் முதல்ல தமிழ் படத்துல நடிக்கிறீங்க. அதுக்குள்ளே உனக்கு தமிழ் ரசிகர்கள் வட்டாரமா? பீலா விடாதீங்க. எவ்வளோ காசு குடுத்தீங்க இந்த கட்டவுட்டுக்கு?…” அவனை கலாய்க்க,
“மலர்…” பல்லைக்கடித்தான்.
“கட்டவுட்டுக்கு ஓகே. ஆமா இந்த எதுகை மோனை டயலாக் எல்லாம் எப்படி கிடைச்சது? இதுக்குன்னு நாப்பதுபேர் கொண்டு குழு எதுவும் வச்சிருக்கீங்களா?…”
“என்னோட தெலுங்கு மூவீஸ் சிலது இங்க டப்பிங் செஞ்சும் ரிலீஸ் பண்ணியிருக்காங்க. அதனால நான் கோலிவுட்க்கு புதுசு இல்லை. என் நேரடி தமிழ் படம் இதுதான். ஆனாலும் என்னை இங்க எல்லோருக்கும் தெரியும் தானே?…” அசால்ட்டாக சொல்ல,
“அச்சச்சோ…” என மலர் கையை உதறி பதற,
“என்னாச்சு? மலர், என்னாச்சு?…”
“இன்னும் சில வேர்ட்ஸ் மிஸ் ஆகிடுச்சு. சிந்தனையின் சிக்கனே, சிலிண்டரின் குக்கரே இப்டி இன்னும் எக்கச்சக்க பிட்டு போட்டிருக்க வேண்டாமா? அப்போதானே படிக்கிறவங்க மனசுல சும்மா நங்கூரம் மாதிரி நச்சுன்னு போய் இறங்கும்…”
“என்ன நக்கலா? உனக்கு பொறாமை ரோஸ்பட். அதான் என் புகழை ஏத்துக்க முடியாம இப்படி பொங்கற. நீ என் மூவீஸ் பார்த்ததில்லைல. அதான்…”
அதைக்கண்டு இன்னமும் பெரிதாய் சிரித்தவள்,
“நல்ல வேளை நான் பார்க்கலை. நேர்லயே பார்க்க முடியலை. இதுல மூவில வேற?…” என சொல்ல அவன் முறைக்க,
“ஒரு ரகசியம் சொல்றேன் மிஸ்டர் ஆதித்யவர்மன்…” என அவனை நெருங்கி காதுக்கே சென்றவள்,
“உங்க ஆழ்மனசுக்குள்ள புகுந்து யாரோ உங்களை நல்ல நடிகன்னு சொல்லி நம்ப வச்சிருக்காங்கப்பா. ஏமாந்திடாதீங்க…”
ஏதோ சொல்லபோகிறாள் என நினைத்து காதை கொடுத்து அவள் அருகாமையில் செயலிழந்து இருக்க மலர் அவனின் மோனநிலையை கலைக்கவென காதை பிடித்து திருக சரியாக அதே நேரம் ஆண்டாள் வந்து பார்த்தும்விட்டார்.
மலர் திருகியதில் வேகமாய் கத்தியவன் தாயை கண்டதும் வாயை மூடிக்கொண்டான். இருவரையும் மாறி மாறி பார்த்து முறைத்துவிட்டு ஆண்டாள் செல்ல,
“என்ன பாஸ்? உங்க மம்மி என் சங்கத்து ஆளை அடிச்சது எவன்டான்ற ரேஞ்ச்ல என்னை பார்த்துட்டு போறாங்க?…” என கிண்டல் பேச,
“உனக்கு எங்கம்மா மேல பயம் விட்டுப்போச்சு…” மலரின் தலையில் செல்லமாய் கொட்டியவன்,
“இன்னைக்கு ஈவ்னிங் ப்ரிவ்யூ ஷோ இருக்கு. நாம எல்லோரும் போறோம். வேற ப்ரோக்ராம் எதுவும் வச்சிருந்தா தள்ளிவச்சிடு…” என சொல்லிவிட்டு எழுந்து செல்ல,
“கடவுளே இதையே கடந்த பத்துநாளா சொல்லி உயிரை வாங்கறாங்க” என வேண்டுமென்றே சிரிப்போடு அலுத்துக்கொண்டாள்.
மேலும் சில வாரங்கள் கடந்திருக்க அனய்யின் படம் வெளியாகி தமிழ்நாடு மட்டுமல்லாது பல பெருநகரங்களிலும் வெற்றிகரமாக ஓட அதை அறிந்து உலகமெங்கும் தமிழ் படங்கள் திரையிடப்படும் அனைத்து நாடுகளிலும் விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டுக்கொண்டு படத்தை வாங்கி வெளியிட்டனர்.
படத்தின் மிகப்பெரிய வெற்றியை குடும்பத்தில் அனைவரும் கொண்டாடினாலும் அதை முழுதாய் அனுபவிக்க நேரமில்லாமல் அடுத்த படம் ஆரம்பித்தது.
இதில் அனய் நடிக்க மட்டுமே செய்ய மிகப்பெரிய நிறுவனம் ஒன்று படத்தை தயாரிப்பதாக முடிவு செய்ய, அவர்களிடம் அனய்யின் ஒரே கண்டீசன் இதிலும் ரிஷியை கேமராமேனாக்க நேத்ரா அனைவரையும் பிடி பிடியென பிடித்துக்கொண்டாள்.
வேறு ஒருவரை ஒளிப்பதிவிற்கு தேர்ந்தெடுக்க சொல்ல அனய் ரிஷியை தவிர வேறு எவரோடும் ஒத்துப்போக முடியாது என பிடிவாதம் செய்ய தயாரிப்பாளரும் டைரக்டரும் விழிபிதுங்கி நின்றனர்.
அப்படி என்ன இந்த நடிகனுக்கு பிடிவாதம்? வேறு ஒருவனை நடிக்கவைக்க கூடாதா? என டைரக்டர் அனய்யை சாட தயாரிப்பு துறையோ அவனை வைத்துதான் படம் பண்ணவேண்டும் என முடிவோடு இருக்க டைரக்டருக்கோ வேறு வழியிலாமல் போனது.
அதுமட்டுமில்லாமல் ரிஷியின் திறமையும் ஒன்றும் குறைவானது அல்லவே. முதல் படத்திலேயே தேசியவிருது வாங்கிய ஒளிப்பதிவாளன் என்னும் பெருமையும் அவனுக்குண்டு. அதனாலேயே அடக்கிவாசித்தார் டைரக்டர்.
அவனை கொஞ்சமும் குடும்பத்தோடு இருக்கவிடாமல் அனய் தொந்தரவு செய்வதாக வரிந்துகட்டிக்கொண்டு அவனிடம் சண்டைக்கு நிற்க அவளை சமாளிக்கவே போதும் போதும் என்றானது ரிஷிக்கு.
மனைவியை விட்டுக்கொடுக்கவும் முடியாமல் தன்னுடைய ஆசையையும் கட்டுப்படுத்த முடியாமல் தலைவேதனையாக போயிற்று அவனுக்கு.
ஆசைக்கு ஓரிரண்டு நல்ல படங்கள் பேர்சொல்லும் படி செய்துவிட்டு தன்னுடைய இயல்புவாழ்க்கைக்குள் திரும்பிவிட நினைத்தவனால் அது முடியாமல் போனது தான் பரிதாபம்.
தன் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த பரிசாய் புகழ்ச்சியின் உச்சத்தில் தன்னை நிறுத்திய துறையை விட்டு செல்ல ரிஷிக்கு மனமே இல்லை. இதில் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்னும் பேராசையும், பெரிதாக இன்னமும் சாதிக்கவேண்டும் என்னும் உத்வேகமும் அவனை ஆட்கொள்ள அதற்கு கடிவாளமாய் அவனின் ஆருயிர் நேத்ரா.
இதில் நேத்ராவிற்கு துணையாக துரைச்சாமி மீசையை முறுக்க, அதில் கடுப்பான ரிஷி சிவராமனிடம் நிற்க, வழக்கம் போல் மகனுக்காக அவர் தான் துரைச்சாமியிடம் சமாதானம் சென்றார்.
அவரோ ரிஷியை முறைத்தவாறே நேத்ராவை பார்க்க இப்பொழுதும் கணவனுக்காக நேத்ரா தான் இறங்கி வந்தாள்.
“தக்காளி எப்படிடி?…” என நம்பமுடியாமல் கேட்க,
“என்ன செய்ய? எனக்கு பிடிச்சவனுக்கு இந்த ஒளிப்பதிவைத்தானே ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லாம் என் தலையெழுத்து…”
நேத்ரா வேண்டுமென்றே சலித்துக்கொண்டாலும் அதில் தெறித்துவிழுந்த காதல் அலையில் இப்பொழுதும் ரிஷி சுகமாய் மூழ்கினான்.
“உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கும் ரொம்ப பிடிக்கும் கட்டுமரம். நீ என்பது நீ மட்டுமில்லை. உனக்குள்ள இருக்கிற உன்னோட எல்லா உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், உன் கனவுகள் இது எல்லாம் சேர்ந்தது தான நீ…”
“இப்போ சொல்லு. நான் காதலிக்கிறது உன்னைத்தானே. உன்னோட இந்த பக்கவிஷயங்கள் எல்லாமே உனக்குள்ள சேர்ந்தது தானே?…”
“யூ ஆர் அமேஸிங் மை தக்காளி…” என அழுத்தமாய் தன் காதல் முத்திரையை அவள் கன்னத்தில் பதித்தவன்,
“இதை முதல்லையே சொல்லியிருக்கலாமே நீ? எதுக்கு உன் அண்ணன்கிட்ட சண்டை போட்டு, மீசைக்கிட்ட போட்டுக்குடுத்து இவ்வளவு சண்டை, எத்தனை ஆர்ப்பாட்டம் செஞ்ச?…”
“நேத்ரான்னா சும்மாவா? ஈஸியா உனக்கு ஓகே சொல்லிட்டா என் கெத்து என்ன ஆகறது?…” அவனை பார்த்து புருவம் உயர்த்த,
“அடிப்பாவி…” என ரிஷி பாவமாய் அவளை பார்க்க,
“அதுமட்டுமில்லை. இனி உன்னோட பர்ஸ்ட் ப்ரிபரன்ஸ் எல்லாமே எனக்குத்தான். அடுத்து நம்ம பேமிலிக்கு. அதுக்கப்பறம் தான் கேமரா தூக்கறதும், படம் புடிக்கிறதும் எல்லாம். இதுல எதாச்சும் மிஸ் ஆச்சு…”
“ஆச்சுன்னா?…” என்ன சொல்வாளென பார்க்க அவன் கேட்க,
“இனி நீ நடந்துக்கறதுல தான் இருக்கு தொடர்ந்து வீடியோக்ராபர் வேலை பார்க்கனுமா இல்லையான்னு…”
“என்ன?…” என அதிர,
“மிஸ் ஆச்சுன்னா தான். அப்படி ஆகிட்டா உன் மொபைல்ல கூட நீ வீடியோ எடுக்க முடியாது பார்த்துக்கோ…” என மிரட்டலாய் மனைவியவள் கூற கணவனவன் பாடுதான் திண்டாட்டமானது.
எக்கச்சக்க எச்சரிக்கையோடு ரிஷியும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அவ்வப்போது நேத்ராவும் சென்னைக்கு வந்து சென்றாள் மகனுடன். வரும் நேரமெல்லாம் பட்டாசுதான்.
வேண்டுமென்றே அனய்யை வெறுப்பேற்ற, “என் புருஷனை என்கிட்டே இருந்து தள்ளிக்கிட்டு வந்துட்ட…” என வரும் நேரமெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
ஒருசில நேரம் இருவருக்குள்ளும் சண்டை ஆரம்பித்து கடைசியில் அனய் தான் இறங்கி வந்து அவளை சமாதானம் செய்ய வேண்டியதாகும். ரிஷியோ கண்டுகொள்ளவே மாட்டான்.
“உன் பாடு, உன் தங்கை பாடு…” என விவரமாக விலகிக்கொள்வான். சில நேரங்களில்,
“நேத்ரா சொல்றதுல என்னடா தப்பிருக்கு?. நீ தானே என்னை வரவழைச்ச…” என மனைவிக்கும் சேர்த்து கொடிபிடிப்பான் ரிஷி. இதில் நொந்து நூலாவது அனய் மட்டுமே.
“உங்களுக்கு தேவையா? நேத்ரா சொன்ன வாயை மூடிட்டு கேட்டுட்டு பேசாம போய்டனும். உங்களுக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை? ரெண்டு நாள் எல்லோரோடும் இருந்துட்டு போகலாம்னு வந்திருக்கிற அவளை ஏன் டென்ஷன் ஆக்கறீங்க?…”
மலரும் சேர்ந்து தங்கைக்கே சப்போர்ட் செய்ய எங்காவது சென்று முட்டிக்கொள்ளத்தான் தோன்றும் அனய்க்கு.
அன்றும் நேத்ரா ஊருக்கு கிளம்பி விட ரிஷியும் அன்றிரவு தங்கிவிட்டு மறுநாள் கெஸ்ட்ஹவுஸ் சென்றுவிட்டான். ரிஷி நேத்ரா வரும் நேரங்களில் மட்டுமே அனய் வீட்டில் தங்குவான்.
“மலர் இன்னைக்கு காலேஜ்ல ஆஃப் டே லீவ் சொல்லிடு. பேபிக்கு ஸ்கூல் சீட் பார்க்க போகனுமில்ல. அதுக்கு நான் விசாரிச்சுட்டேன். லஞ்ச் முடிச்சுட்டு போறோம். நானும் ப்ரீ பண்ணிட்டேன்…”
மலரிடம் சொல்லிக்கொண்டே சாப்பிட,
“ஓகே, அத்தைக்கிட்ட சொல்லிடுங்க…”
“ஏன் நீயே சொன்னா என்னவாம்?…” என அனய் முணுமுணுப்பது காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
மலர் எத்தனை மாறியிருந்தாலும் இன்றளவும் ஆண்டாளிடம் தானாக சென்று பேசவே இல்லை. பேச விரும்பவும் இல்லை.
ஆண்டாள் மீது துவேஷமில்லாவிட்டாலும் அவரின் மீதான சில சில வருத்தங்கள் இப்பொழுதும் அவரை கண்டால் தன்னையறியாமல் மலரை ஒதுங்கத்தான் செய்கிறது.
ஆண்டாலும் அதை கண்டுகொண்டதே இல்லை. அவளின் முகம் பார்த்து பேசவில்லை என்றாலும் பாலகிருஷ்ணனையோ, வருணியையோ, அனய்யையோ யாரையாவது இடையில் வைத்துக்கொண்டு தான் சொல்வார்.
ஆனாலும் அதற்கு பதில் பேசாதவள் அவரின் பேச்சை தட்டவும் மாட்டாள் மலர். அனய்க்குத்தான் சில நேரம் ஆயாசமாக தோன்றும்.
அதுவும் நேத்ராவும் சுமங்கலியும் காட்டும் அன்யோன்யம் அவ்வப்போது மலரும் தன் அம்மாவும் காட்டினால் எப்படி இருக்கும் என எண்ணியதும் உண்டு. அந்தளவிற்கு இல்லையென்றாலும் இருவரும் முகம் பாத்து பேசும் அளவிற்காவது ஒத்துப்போக கூடாதா என நினைத்ததும் உண்டு.
இப்பொழுதும் அதை போல நினைத்தவன் சாப்பிட்டுவிட்டு எழுந்துகொள்ள ஆண்டாள் வர,
“அம்மா, இன்னைக்கு மத்யானம் நாங்க வருணிக்கு ஸ்கூல் பார்க்க போறோம். கார் அனுப்பறேன். கூட சேத்தன் வருவான். பேபியை அனுப்பிவைங்க…” என சொல்ல,
“நானும் வேணும்னா கூட வரனுமா?…”
“இல்லைம்மா, நாங்க இன்னும் கன்பார்ம் செய்யலை. பார்த்து விசாரிச்சுட்டு தான் வருவோம்…”
“அதுக்கு குழந்தை எதுக்குடா?…” என யோசித்தவர்,
“வேணும்னா ஒன்னு செய்யறேன். நானும் வந்து வருணியை உன்கிட்ட விட்டுட்டு திரும்ப ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்துடறேன்…”
ஆண்டாளின் பேச்சை உணர்ந்தவன் முகம் புன்னகையை பூசியது. சிரித்தபடி அவரை சேரில் அமர்த்தியவன்,
“அம்மா, சேத்தன் ரொம்பவே நம்பிக்கையானவன்ம்மா. நீங்க என்னை போல அவனை நம்பலாம். பயப்படவேண்டாம்…” என சொல்ல மனமில்லாமல் தலையசைக்க,
“எங்களுக்கு லஞ்ச் வேண்டாம் வெளில பார்த்துப்போம். நான் போன் பன்றேன். உங்களுக்கு அப்போ அனுப்பிவச்சா போதும்…” என சொல்லி கிளம்ப அவனின் பின்னே மலரும் கிளம்பினாள்.
வருணியோடு பேசி கொஞ்சிவிட்டு பாலகிருஷ்ணனிடம் தலையசைத்தவள் ஆண்டாளை பார்க்க அவரும் பார்த்தார்.
இது அன்றாடம் நடக்கும் ஒன்றுதான். மலர் ஆண்டாளிடம் சொல்லிவிட்டு செல்லமாட்டாள். ஆனால் அவரின் முகம் பார்க்காமலும் செல்லமாட்டாள். கிளம்பும் நேரம் சரியாக அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு தான் கிளம்புவாள்.
இதையே அவள் வழக்கமாக வைத்திருக்க பின் அதுவே வழக்கமாகி பழக்கமானது. நேத்ரா கூட,
“பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா? பேசாத கண்ணும் பேசுமே…” என பாட்டு பாடி அவர்களை கலாய்ப்பாள்.