“எங்கயும் புருஷன் பொண்டாட்டிக்குத்தான் இந்த சாங் சூட் ஆகும். இங்க எல்லாம் தலைகீழ். மாமியாரை இந்த பார்வை பார்க்கிறா. என்னை எவன்டா நீன்னு ஒரு லுக் விடறா…” என அனய்யும் நேத்ராவிடம் புலம்பும் படி இருக்கும் அவர்களின் அலம்பல்.
இப்பொழுது அந்நிகழ்வுகள் ஞாபகம் வர மலரின் முகத்தில் புன்னகை. ஆண்டாளும் அதையே நினைக்க புன்னகை தான் அவருக்கும் கூட.
வெகு வருடங்களுக்கு பின் இருவரும் ஒருவரை ஒருவர் புன்னகை முகமாக காண்கின்றனர். அதுவரை இருந்த கசப்புகள் கூட மனதின் ஆழத்தில் சென்று ஒளிந்துகொள்ள அந்த நொடி அப்புன்னகை இருவரின் மனதையும் நிர்மலமாக்கியது.
தன்னையறியாமல் மலர் அவரிடம் தலையசைக்க அவரும் பதிலுக்கு தலையசைக்க அதே நேரம் மொபைலை எடுக்க வந்த அனய்,
“இதேதடா அதிசயம் நம்பர் எய்ட்?…” என வாய்பிளந்து நிற்க,
“ப்பா ப்பா…” என வருணி காலை கட்ட மலரும் அவனை பார்த்து என்னவென கேட்க,
“மொபைலை மறந்துட்டேன்…” என்றபடி குழந்தையோடு மாடிக்கு சென்றான். அவன் வரும் வரை யோசனையோடே நின்றவள் வந்ததும்,
“உங்களுக்கு ஷூட்டிங் இப்போவே இருக்கா? இல்லை டைம் இருக்கா?…” என மலர் கேட்க அவசரமாக,
“இல்லையே. ஷூட்டிங்க்கு இல்லையே. வேற டிஸ்கஷனுக்காக தான் போறேன்.டைம் இருக்கு. என்னன்னு சொல்லு…” என வேகமாய் பேச,
“இல்லை, இன்னைக்கு என்னை காலேஜ்ல ட்ராப் பண்ணிட முடியுமா?…” அவனின் பதிலுக்காய் முகம் பார்த்து நின்றாள்.
“இன்னைக்கு என்ன ஷாக் மேல ஷாக். காலேஜ்க்கு கார்ல போன்னு சொன்னதுக்கு அந்த குதி குதிச்சா? எனக்கு கை கால் நல்லா தான் இருக்கு. என் ஸ்கூட்டியில எனக்கு போக தெரியும். அப்படி இப்படின்னு நைட் ஃபுல்லா தூங்கவிடாம அவ்வளோ பேச்சு பேசினா…”
அனய்க்கு ஒன்றுமே புரியவில்லை. தானாக தன்னிடம் வரும் மனைவியை பார்க்க அத்தனை சந்தோஷமாய் இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு யோசனை. மகிழ்ச்சியையும் தாண்டிய ஒரு சிந்தனை.
திடீரென மலர் தன்னை கொண்டு வந்து விடுமாறு கேட்கவும் அங்கு எதுவும் அவளுக்கு பிரச்சனையா? அந்த அழகேசன் அவளிடம் எதுவும் வம்பு செய்கிறானா? இல்லை வேறு இவருமா? என மனம் பதறிப்போனான்.
ஆனால் பிரச்சனை இனிமேல் தான் என அப்போது அவனுக்கு புரியவில்லை. அதை தொடர்ந்து பிரச்சனைகள் அடுத்தடுத்து அவனை சூழ இருப்பதை அறியாமல் அவளை பார்த்தான்.
“என்ன என் முகத்தையே பார்த்துட்டு இருக்கீங்க? முடியலைன்னா சொல்லுங்க. நான் போய்ட்டே இருக்கேன்…” என அவனை கடந்து செல்லவேகமாய் அவளின் கையை பிடித்து நிறுத்தினான்.
“காலேஜ்ல ஏதும் ப்ராப்ளமா மலர்?…” என அவனின் எண்ணம் புரிந்தவளாக,
“போயா…” என்று கை நீட்டி முறைத்து சொல்லி செல்ல அவளின் பின்னோடு ஓடிவந்தவன்,
“ஹேய் கோச்சுக்காத ரோஸ்பட். திடீர்ன்னு கேட்டதும் நான் கொஞ்சம் பயந்துட்டேன்…” என சமாதானம் சொல்ல அவளோ அவனை தாண்டி சென்றுகொண்டே இருந்தாள் ஸ்கூட்டி இருக்கும் இடம் நோக்கி.
ஸ்கூட்டியில் அமரவும் சுற்றும் முற்றும் பார்த்தவன் அவளின் கையில் இருந்த சாவியை பிடுங்க,
“ஏய் கீயை குடு. இல்லை செம்ம கடுப்பாகிடுவேன்…” என எச்சரிக்க,
“இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ்வளோ கோவம்?…”
“பிரச்சனைன்னு வந்தா உன் முதுகுக்கு பின்னால ஒளிஞ்சுப்பேன்னு நினைச்சியா? அந்தளவுக்கு நான் ஒன்னும் கோழை இல்லை. எவ்வளோ தைரியம் உனக்கு என்னை பத்தி இப்படி நினைக்க?…” என சீற,
“அப்படி என்னை தேடினாத்தான் என்னவாம்? தப்பில்லையே…” அவனும் விடாமல் வாய் வளர்க்க,
“அந்த அவசியமே இல்லை எனக்கு. போ. போ. நான் ஒன்னும் உன்கூட வரமாட்டேன். போ. என் கீயை என்கிட்டே குடுத்துட்டு போ…” அவனை விரட்ட,
“நீ ஒன்னும் என் கூட வரவேண்டாம். கீயை குடு. எனக்கு போகத்தெரியும்…”
அவனிடமிருந்து சாவியை பறிக்க வர அவளிடமிருந்து விலகிக்கொண்டே மீண்டும் சுற்றி சுற்றி பார்த்தவன் அவள் அசந்த நேரம் படக்கென கைகளில் அள்ளிக்கொண்டான்.
அதில் விதிர்விதிர்த்துப்போனவளாய் அவனிடமிருந்து திமிறி விடுபட முயல அவளின் முயற்சிகளை அசால்ட்டாய் ஊதித்தள்ளியவன் மலரை காரினருகே நிறுத்தி கையணைப்பில் வைத்துக்கொண்டே தன் காரின் லாக்கை விடுவித்தவன் கதவை திறந்து அவளை உள்ளே தள்ளி தானும் மறுபுறம் வேகமாய் ஏறிக்கொண்டான்.
“மரியாதையா என்னை இறக்கிவிடு. ஏதோ ஞாபகத்தில் உன்கிட்ட கேட்டுட்டேன். என் சாவியை குடு…” என அவனின் கையை பிடித்து இழுக்க,
“ஏதோ நீ கேட்ட அழகுல மயங்கி ஒரு நிமிஷம் பதில் சொல்ல யோசிச்சுட்டேன்…” என்று உல்லாசமாய் விழிகளில் குறும்பு மின்ன சொல்ல அவன் சொல்லிய அழகில் வேறொரு பெண் சொக்கித்தான் போயிருப்பாள்.
மலரின் மனமெல்லாம் இப்படி வீட்டு வாசலில் இத்தனை ஆட்கள் முன்னிலையில் தன்னை தூக்கிவிட்டானே என ஆத்திரமாய் வந்தது.
“இதுதான் அழகுல மயங்குற லட்சணமா? ட்ராப் பண்ண சொன்னதுக்கு உனக்கு என்ன ப்ராப்ளம்னு பின்ன எதுக்கு கேட்டியாம்?…” அவள் பொரிய,
“இதுவரைக்கும் நீ என்கிட்டே கேட்டதில்லை. திடீர்ன்னு வந்து நிக்கவும் நான் என்னனு நினைக்க? ப்ராப்ளம் இல்லைன்னு இப்போ புரிஞ்சது. ப்ளீஸ் ஆர்க்யூ பண்ணாம வாயேன்…” என்று புன்னகையோடு காரை கிளப்ப,
“கொண்டுபோய் விட்டா அங்க நான் எப்படி வேலை பார்க்கிறதாம்? என் ஐடி கார்ட் என் பேக்ல இருக்கு. பேக் ஸ்கூட்டில இருக்கு…”
“ஓகே போய் எடுத்துட்டு வா…” சென்ட்ரல் லாக்கை எடுத்துவிட,
“ஹைய்யோடா, நானா கார்ல வரேன்னு சொன்னேன். என்னை வலுக்கட்டாயமா தூக்கிட்டு வந்திருக்க. நான் ஏன் போய் எடுக்கனும்? நீ நீதான் எடுத்து வரனும்…”
கட்டளைக்குரலில் கூறியவள் சட்டமாக நன்றாக சாய்ந்து அமர்ந்துகொண்டு மிதப்பாய் அவனை ஒரு பார்வை பார்க்க அவளின் செயலில் இன்னமும் புன்னகை விரிந்தது அவனுக்கு.
காரில் இருந்து இறங்கி அவள் பேக்கை எடுத்து வர செல்ல அவனை கண்டு இளநகை நெளிந்தது மலரவள் இதழ்களில்.
“நீ என்ன சொன்னாலும் செய்வேன். ஆனா நீ என் கூட இருக்கனும். எப்படி இப்படி இருக்கடா?…” அவளறியாமல் அவனை மட்டுமே பார்த்திருந்தாள் கண்ணாடியை இறக்கிவிட்டு.
அனய் வந்ததும் அவளிடம் கொடுத்துவிட்டு காரை கிளப்ப இருவருமாக காலேஜ் வரை ஏதேதோ பேசியபடி சென்றனர்.
அன்று காலேஜ் நுழைந்ததிலிருந்தே ஒருவித உற்சாக மனநிலையோடு, உதடுகளிலேயே நிரந்தரமாக குடியேறிவிட்ட புன்னகையோடும் வலம்வந்தபடி அனைத்து வேலைகளையும் பார்த்தாள் மலர்.
இன்னும் ஒருமணி நேரத்தில் கிளம்பவேண்டும் என்னும் எண்ணத்துடன் கரஸ்பாண்டென்ட் அறைக்கு லீவ் சொல்வதற்காக எழ அவளின் மொபைலும் சரியாக அடித்தது.
“என்ன இந்நேரம் கால் செய்திருக்கார்?…” என எண்ணிக்கொண்டே அட்டென் செய்ய,
“மலர், சாரிடா. ப்ளான் சேஞ்ச் ஆகிடுச்சு. நாம நாளைக்கு மார்னிங் போகலாம்…” என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே கால் கட்டாகிவிட எடுத்துப்பார்க்க அது அணைந்துவிட்டிருந்தது.
“அடடா ஆஃப் ஆகிடுச்சே. சார்ஜ் போட எப்படி மறந்தேன்?…” என புலம்பியபடி ரத்னாவிடம் சார்ஜர் வாங்கி சார்ஜ் போட்டவள் மொபைலை வாங்கி அனய்க்கு அழைத்தாள்.
“சாரிங்க. சார்ஜ் போடாம விட்டுட்டேன். அது பவர் ஆஃப் ஆகிடுச்சு…”
“இட்ஸ் ஓகே. நான் இதை சொல்லத்தான் கூப்பிட்டேன். நீ லீவ் சொல்லிட்டா கார் அனுப்பிடறேன் கிளம்பி வீட்டுக்கு போய்டு…”
“அதெல்லாம் வேண்டாம். நான் இன்னும் சொல்லலை…”
“நீ கேட்க மாட்டியே? லஞ்ச் வேற எடுத்துவரலை…” விடாமல் அனய்யும் பேச,
“அடடா விடுங்களேன். இன்னைக்கு கேண்டீன்ல சாப்ட்டிக்க மாட்டேனா? ஈவ்னிங் ரத்னாவோட வந்திடறேன். போதுமா?…”
பொறுமையிழந்து மலர் கொஞ்சம் சூடாகி பேச அதில் வாய்விட்டே சிரித்தான் அனய்.
“ஓகே, ஓகே. பார்த்து வா. டேக் கேர். பை…” என வைத்துவிட மலரின் முகத்திலும் புன்னகை ஒட்டிக்கொண்டது.
“இவரோட பெரிய இம்சை…” என சிரித்தபடி ரத்னாவிடம் மொபைலை கொடுத்துவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர,
“மலர் வாயேன் கேண்டீன் போய்ட்டு வருவோம்…” ரத்னா அழைக்க,
“ப்யூன்ட்ட சொன்னா இங்கயே கொண்டுவந்திடுவார்…”
“அதெல்லாம் வேண்டாம். இன்னைக்கு ஒருநாள் அங்க போய் காபி குடிப்போம்…” என மலரை மறுவார்த்தை பேசவிடாமல் ரத்னா இழுத்து செல்ல அறையில் இருந்த வேறு இருவருமே வேறொரு வேலையாக பிரின்ஸிபலை பார்க்க சென்றுவிட்டனர்.
யாருமற்ற அறையில் மலரின் மொபைல் சார்ஜ் ஏறியபடி மேஜையில்.
புன்னகை ஜீவிக்கும்…