புன்னகை – 2
தவிப்பாய் அவளுள் இறங்கிய அவனது குரல் அவளுக்கு தீயாய் தகிக்க ஆரம்பித்தது.
“ஹேய், ரோஸ்பட் லைன்ல இருக்க தானே?…” என மீண்டுமாய் அழைக்க இவனுக்கெல்லாம் பதில் சொல்லியாகவேண்டுமா என்னும் திண்ணக்கத்துடன் மேலும் மௌனம் சாதித்தாள் மலர்.
ஆனாலும் அவனின் அழைப்பை வெறுத்தவளாய் அவன் மேல் பொங்கிய கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வேகமாய் மூச்சுவாங்க அவளின் இருப்பை அந்த சிறு சப்தம் அவனின் காதுகளுக்கு துல்லியமாய் கொண்டுசேர்த்தது.
அதில் புன்னகை விரிந்தது அவனுக்கு. அவன் ஆதித்யவர்மன்.
“மேடம் செம சூடா இருக்கீங்க போல? லாஸ்ட் வீக் நான் பேசலைன்னு ரொம்ப கோபமா?…” என்று சீண்ட அது சரியாய் வேலைசெய்தது அவளிடம்.
“தேவையில்லாமல் பேசாதீங்க. உங்களை யாரும் இங்க நினைச்சுட்டே இருக்கலை. சும்மா என்னை சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டாம்…”
இதைத்தானே எதிர்பார்த்தான் அவளிடம். அவனுக்கு தேவை அவளிடம் பேசுவது. அவளை பேசவைப்பது. அவள் திட்டுவதாகவே இருந்தாலும் கூட.
அவளின் குரல் தான் அவனை இந்த உலகத்தில் இத்தனை வருடங்களாய் ஜீவிக்கச்செய்கிறது. அனைவருக்கும் மூச்சுக்காற்று முக்கியமே. ஆதித்யாவிற்கு அதைவிட முக்கியம் மலரின் குரல்.
அவனின் உயிரோடு கலந்துவிட்டிருந்த குரல். அவனின் உலகமென உறைந்துவிட்டிருந்த குரல். இந்த குரலின்றி அவளின் மொழியின்றி அவனின் இச்சரீரம் சடுதியில் கலைந்து காற்றில் கரைந்துவிடாதோ.
“ஏன் வாராவாரம் எனக்கு போன் பண்ணி இம்சையை கூட்டறீங்க? இந்த வீட்ல உங்களுக்கு பிடிச்சமானவங்க கூட பேசறீங்க தானே. நான் எதுவும் சொல்றதில்லையே. எனக்கு பிடிக்கலைன்னு நான் ஒதுங்கிபோறேன். அதை தெரிஞ்சிருந்தும் நீங்க திரும்ப திரும்ப என்னை ஏன் டார்ச்சர் பன்றீங்க? கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோங்க…”
மலரின் வார்த்தைகளில் இருந்த தணிவு அவள் பேசியவிதத்தில் கொஞ்சமும் இல்லை. மிக மிக கடுமையாக கராறாக பேசினாள்.
கிட்டத்தட்ட மிரட்டலே விஞ்சியிருந்தது அதில். மலர் அப்படித்தான். எதையும் அவனிடத்தில் அமைதியாகவோ கெஞ்சும் விதமாகவோ பேசவே மாட்டாள். அப்படி பேசவும் தெரியாது என்பது தான் உண்மை.
“உன் விஷயத்தில் இத்தனை வருஷம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நான் நடந்தது போதும். இனியும் அப்படி நடப்பேன்னோ உங்க எல்லோரையும் விட்டு ஒதுங்கி இருப்பேன்னோ எதிர்பார்க்காதே. இனி என்னால அது முடியாது…”
கொஞ்சமும் இரக்கமின்றி அவன் பேசியதும் கொஞ்சம் விதிர்விதிர்த்துதான் போனாள் மலர்.
“என் பொண்ணை விட்டு என்னால தனியா இருக்கமுடியாது. இருக்கவும் மாட்டேன். இந்த வாரம் ஒரு போன் கால்ல என்னோட ஏக்கங்களை என் தவிப்புகளை, என் உறங்கா இரவுகளை உன்கிட்ட பகிர்ந்துக்க போதாது ரோஸ்பட். உனக்காக, உன் மனசு மாறும்ன்னு பைத்தியக்காரத்தனமா நான் தள்ளியிருந்தது போதும். இனி என்னால முடியாது, முடியவே முடியாது…”
அவனின் இந்த பிடிவாதத்தில் அதிர்ந்துப்போனவளாய், “நோ நோ. இதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன். வரு என்னோட பொண்ணு. போதும் உன்னால அவ படற கஷ்டம்…” என்று கத்த,
“நீ எத்தனை கத்தினாலும் வரு எனக்கும் பொண்ணுதான். நீ இதை இல்லைன்னு சொன்னா நான் கேட்டுக்கனுமா?…” என்றவன்,
“என்ன சொன்ன? என்னால அவளுக்கு கஷ்டமா? ஹ. எனக்கு தெரியும் என் பேபி பத்தி. நீ எதுவும் சொல்ல வேண்டாம். உண்மையை சொல்லன்னும்னா அவ என்னை பிரிந்து கஷ்டபட காரணமே உன் வறட்டுப்பிடிவாதத்தால தான்…”
ஆதியின் வார்த்தைகளில் அத்தனை தீவிரம் நிரம்பிக்கிடந்தது. அவ்வளவும் ஆதங்கம், மனதில் வலி, இத்தனை வருட குமுறல், பிரிவின் துயரம் என அனைத்தும் சேர்ந்து மேலும் அவனை பேசத்தூண்டியது.
“உன்னுடைய முன்கோபம் தான் அவளை என்னோட சேரவிடாமல் தடுக்குது. இரக்கமே இல்லாமல் என்கிட்டே இருந்து என் பொண்ணை பிரிச்சுவைக்கிற. இது நீ எனக்கு குடுக்கிற தண்டனை இல்லை. நம்ம பொண்ணுக்கு கொடுக்கிற தண்டனை…”
தான் அவனை குறை சொன்னால் அவன் தன்னையே குற்றம் சாட்டுகிறானே என்கிற திகைப்போடு சிறு ஆதங்கமும் மேலெழும்பியது மலரின் மனதில்.
என் மகளை நானே தண்டிப்பேனா? எப்படி எல்லாம் பேசறான்?…” மேலும் மேலும் அவனை மனதின் அடியாழத்திலிருந்து வெறுத்தாள். முன்னைவிட அதிகமாகவே வெறுத்தாள் மலர்.
மேலும் அவளை சீண்டும் வகையாக,
“ஓஹ் உன்னையும் பிரிந்து என்னால இருக்கமுடியலைன்னு சொல்லலைன்னு கோபமா?…” அதுவரை இருந்த தீவிரபாவத்தை கைவிட்டு கேலியாக வினவ கொதித்து எழுந்தாள் மலர்.
“நான் இப்படி எல்லாம் எதிர்பார்ப்பேன்னு நினைப்பு வேறையா?…” என சீற,
“பொண்டாட்டிக்கிட்ட வேற எதை எதிர்பார்க்கமுடியும்? நீ இப்படித்தான் யோசிக்கனும்னு நான் ஆசைப்படறேன். இத்தனை வருஷத்துல உன்கிட்ட ஏதாவது ஹார்மோன் சேஞ்சஸ் இருக்கும்னு தப்புக்கணக்கு போட்டுட்டேனோ?…”
இன்று அவளை ஒருவழியாக்கிவிடும் உத்வேகமும் ஒருவித உற்சாகமும் அவனின் பேச்சில் பொங்கி ததும்பியது.
இங்கு இவளின் கோபத்தில் முகத்தில் ரத்தம் பாய்ந்து மூளை சூடாகி வார்த்தைகள் தாறுமாறாய் அவனை நோக்கி பாய ஆரம்பித்தது.
“இதுக்கு மேல ஏதாவது பேசின உன்னை கொன்னுடுவேன்டா…”
“அதை முதல்ல செய். தாராளமா என்னை கொன்னுடு. நித்தமும் உன்னை நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நிமிஷமும் நரகத்தில் தவிச்சிட்டுருக்கிற என்னோட மூச்சுக்காத்தை உன் கையாலையே நிறுத்திடு. நிம்மதியா போய் சேர்ந்திடறேன்…”
“என்மேல இருக்கிற வெறுப்பில் என்னை பிரிஞ்சு எந்த ஒரு கவலையும் இல்லாம குடும்பமா நீ வாழற. ஆனா நான் உன் மேல வச்சிருக்கிற மொத்த காதலை, அதோட கனத்தை சுமக்க முடியாம மூச்சுமுட்டி போய் நிக்கிறேன். அதோட இந்த தனிமை வேற. இப்போவும் நீ என்னை, என் உணர்வுகளை கொன்னுட்டு தான்டி இருக்க…”
“நான் கடந்துவந்த ஒவ்வொரு நிமிஷமும் என்னுடைய கனவுலகத்தில் உன்னோட வாழ்ந்துட்டு தான் இருக்கேன். இந்த நிமிஷம் கூட. உன்னோட நான் சேர்ந்தபின்னால உனக்கு சொல்ல என்னுடைய கற்பனை வாழ்க்கையின் மிச்சங்கள் எக்கச்சக்கமா எனக்குள் புதைந்து கிடக்குது. அது எல்லாமே என்னோடவே புதைந்து போய்டட்டும். கொன்னுடுடி…”
சுவாசத்திற்கு கூட இடமளிக்காமல் விடாது பேசியவனை எண்ணி கொஞ்சமும் மனம் இறங்கவில்லை பாவையவளிற்கு.
“ப்ச் இப்போ எதுக்கு இப்படி டயலாக் அடிச்சிட்டு இருக்கீங்க? யூஸ்லெஸ்…” அலட்சியமாக கூற,
“இதுக்குதான், இந்த அலட்சியமும் கூடத்தான் என்னை உன்பக்கம் வேரோடு அடிச்சு சாய்ச்சிடுச்சு. உன்னுடைய ஒவ்வொரு செயலும் என்னை உன்னை விட்டு விலகிடாதன்ற அளவுக்கு பித்துபிடிக்க வச்சிருக்கு. எழுந்துக்கவே முடியாத காதலன்ற அதளபாதாளத்துல விழுந்துகிடக்கிற என்னை ஈஸியா விரட்டிடலாம்னு நினைக்காதே கோகொ…” உணர்ச்சிக்குவியலாய் அவன்.
அதிர்ந்துவிட்டாள். அவனின் கோகொ என்ற அழைப்பு பழைய நினைவுகளை தட்டி எழுப்பியதைப்போல ஒரு பிரம்மை. முகம் கன்ற தலையை சிலுப்பிக்கொண்டவள்,
“வேண்டாம். தேவையில்லாம பேசாத…” காரம் ஏறிய குரலில் கடுகடுக்க,
“மேடம்க்கு இப்போதான் பழசு ஞாபகத்தில் வருதோ? மை ஸ்வீட் கோகொ…” இயல்புநிலைக்கு திரும்பியவனாய் அவளை வம்பிழுக்க,
“வேண்டாம்டா, என்கிட்டே சும்மா சும்மா அடி வாங்கப்போற…” பொறுமையிழந்து மரியாதை தேய்ந்தது.
“அடியை அமொண்ட் குடுத்து யாராச்சும் வாங்குவாங்களா? அடிக்கிறவங்க சும்மா தான் அடிப்பாங்க. அதுவும் நீ அடிச்சா இன்னும் ஸ்பெஷல் இல்லையா?…” என்றவன் குரல் சடுதியில் காதலில் குழைந்து,
“நீ என்னை அடிக்கும் போது அப்டியே உன்னை ஆக்டோபஸ் போல வளைச்சு பிடிச்சு எனக்குள்ள இறுக்கிக்கொண்டால் என்ன செய்வ ரோஸ்பட்?…”
அவனின் புன்னகை தவழும் பேச்சு இவளுக்கு காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல இருந்தது.
“டேய்…” என ஏகத்துக்கும் கத்தியவள்,
“என்ன எங்கயோ இருக்கிறோம்ன்ற தைரியமா? இந்த சைட் ட்ராக்கில் ஆட்டோ ஓட்டனும், பஸ் ஓட்டனும்னு நினைச்ச நீ தொலைஞ்ச…”
அவளின் பேச்சில் ஆக்டோபஸை ஆட்டோ பஸ்ஸாக மாற்றிய விதத்தில் வாய்விட்டு சிரித்தவன்,
“நேர்ல வந்தா என்ன செய்வியாம்?…” விடாது கேட்க,
“உன் மண்டையை உடைச்சு தலையில மாவிளக்கு போட்டு உனக்கு பரிவட்டம் கட்டி உன்னை கதற விடலை என் பேர் மலர் இல்லைடா…”
தஸ்புஸ் என மூச்சுவாங்க அவள் கூறியதில் இன்னும் அடங்காத ஆதி,
“திருவிழாவே உண்டுன்னு சொல்லு. அப்போ என் கழுத்துக்கு மாலை நிச்சயம் உன் கையாள கிடைக்கும். இல்லையா?…” என வேண்டுமென்றே கேட்க,
“நீயெல்லாம் திருந்தாத ராட்சஷன். என்னை விட்டுடுன்னு எத்தனை தடவை சொல்றேன் உறைக்காதா உனக்கு?. அதான் நாளுக்கொருத்தின்னு கூடவே கும்பலா சுத்துறாளுங்களே அவளுங்க எவளையாச்சும் கட்டிக்கிட்டு எங்கையாவது போய் தொலையேன். இம்சை, இம்சை…” அடிக்குரலில் சீற,
“என் பொண்டாட்டி நீ இருக்கும் போது நான் எதுக்கு இன்னொருத்தியை கட்டிக்கனும்?…”
“இன்னொரு தடவை என்னை அப்படி சொன்ன நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. நான் தான் நீ வேண்டாம்னு எப்போவோ விலகிட்டேனே. எனக்கு நீ வேண்டாம். எப்பவுமே வேண்டாம். அவ்வளோ தான் சொல்வேன். கொஞ்சமாவது ரோஷம்னு இருந்தா இத்தோட என்னையும் என் பொண்ணையும் விட்டுடு…”
மலரின் பேச்சு வலிக்கசெய்த போதும் பொறுமையிழக்காமல் புன்னகையோடு அப்பாவித்தனமான குரலில்,
“பொண்டாட்டி பேச்சுக்கு புருஷன் ரோஷப்பட்டா குடும்பத்திற்கு ஆகாதாம். ஊமையடிகள் சுவாமி சொல்லியிருக்காங்க…” என சிரிக்க அவள்தான் நொந்து போனாள்.
அவளின் மனநிலையை நன்கு உணர்ந்தவன் இதற்கு மேலும் விட்டால் அவளின் கோபம் கரையை உடைத்துக்கொண்டு சிலபல நல்லவார்த்தைகளை வெள்ளமென அள்ளிக்கொண்டு வந்துவிடும். அந்த அபாயத்திலிருந்து தப்பிக்க,
“அப்பாவை கூப்பிடு…” எனவும் தான் நிம்மதியானாள் மலர். அவள் எழுந்து செல்லும் அரவம் உணர்ந்தவன் வைத்தியநாதனுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
“மாமா…” எனவும் அவளை திரும்பி பார்த்தவர் அவளின் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தார். கோபம் கனன்ற முகத்தை மறைக்க பெரும் சிரமம் மேற்கொண்டாள்.
அவரின் பார்வையை உணர்ந்த மலர் முகத்தை இயல்பாக வைக்க எத்தனை முயற்சித்தும் முடியாமல் பரிதாபமாய் நின்றாள்.
மலரின் முகத்தை வைத்தே புரிந்துகொண்டவர் மனதிற்குள் வேதனை எழும்பினாலும் அதை மறைத்துக்கொண்டு உள்ளே சென்று மறைந்தார் வைத்தியநாதன்.
இத்தனை களேபரத்திலும் மலரின் குரல் மாமனார், மாமியார் காதுகளை எட்டாதவண்ணம் இருந்தது. அதில் மிக கவனமாகவே இருந்தாள். இருந்தும் அவளின் முகபாவம் காட்டிக்கொடுத்தேவிட்டது.
வைத்தியநாதனின் கலங்கிய கண்களை கண்டதும் அச்சோவென ஆகிவிட்டது மலருக்கு.
“நான் என்ன செய்ய? பேசி பேசியே என்னை கோபப்படுத்திடறான். நானும் அதை காட்டிக்காம இருக்க ட்ரை பன்றேன். ஆனாலும் முடியலையே…” என எண்ணியவள் மனம்,
“அட விடு மலரு. இதென்ன புதுசா? நீ கோபமா அவன்கிட்ட பேசறதும், அதை பாத்து இவங்க பீல் பன்றதும் வாரா வாரம் நடக்கிறது தானே? நீ ஏன் வீணா உன் கோபத்தை மறைக்க ட்ரை பன்ற?…” என அவளுக்கு சாதகமாக கூறியது.
அதை ஏற்றவள் கோபம் குறைந்து தலைவலிப்பது போல இருக்க பரபரவென கையால் தலையை அழுத்தி தேய்த்துக்கொண்டவள் வீட்டினுள் நுழைய அங்கே மகள் போனில் அவனுடன் உரையாடிக்கொண்டிருப்பது தெரிந்தது.
அதைக்கண்டு மீண்டும் கோபம் வந்தாலும் குழந்தையின் முகத்தில் இருந்த மலர்ச்சியும் புன்னகையும் மனதை ஏதோ செய்தது. ஆனாலும் இதனை தடுத்து குழந்தையை தூக்கி வந்தால் என்ன? என்ற உத்வேகம் தோன்ற,
தோன்றிய நொடி வைத்தியநாதன் இவளின் எண்ணப்போக்கை உணர்ந்ததை போல நிமிர்ந்து பார்த்தார். அதில் சற்று வெலவெலத்து தான் போனாள்.
“நாம நினைச்சதை கண்டுபிடிச்சுட்டாரோ?…” என மாட்டிக்கொண்ட தினுசில் விழித்தாள். அவர் முகம் பேத்தியின் புறம் திரும்பியதும்,
“நாம பேசவேண்டாம்னு சொன்னா மட்டும் இவங்க கேட்கவா போறாங்க. நமக்கென்ன?. ஆவூனா நம்மளையே முறைச்சுப்பார்க்கறது. அவன் கிட்ட பேசறப்போ இந்த பொடுசு கூட நம்மை கண்டுக்கறது இல்லை…” என நினைத்து மகளையே பார்த்து நின்றாள்.
காமாட்சியும் கூட மலரை பார்த்துவிட்டு பேத்தியின் பேச்சில் கவனத்தை திருப்பினார். இதையெல்லாம் கண்டுகொண்டால் அவள் மலர் இல்லையே.
“இதெல்லாம் நமக்கென்ன புதுசா மலர்? எவ்வளவோ பார்த்தாச்சு. இனியும் பார்க்கவேண்டியதை பார்த்துட வேண்டியது தான்…” தலையில் சுருக்கென வலிக்க,
“ஸ்ஸ்யப்பா, தலைவேற இப்படி வலிக்குது. எல்லாம் இவனால. முதல்ல ஒரு டீ குடிச்சாதான் தலைவலி போகும்…” தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே கிட்சன் உள்ளே நுழைந்தவள் ப்ளாஸ்கில் இருந்த சூடான டீயை கப்பில் சரித்துக்கொண்டு திரும்ப, அங்கே இருந்த பக்கோடாவை பார்த்துவிட்டாள்.
“வெறும் டீயை மட்டும் குடிச்சா நல்லாவா இருக்கும்?…” என்றபடி அதையும் ஒரு தட்டில் நிரப்பிக்கொண்டு தனது ரூமில் உள்ள பால்கனிக்கு சென்று அமர்ந்தாள் தன் மொபைலோடு.
மழையை வேடிக்கை பார்த்தபடி டீயை பருகியவள் ஒரு கையால் மொபைலை எடுத்து அதில் மூழ்க ஆரம்பித்தாள்.
சற்றுமுன் ஆதித்யனுடன் நடந்த சம்பாஷனைகள் அனைத்தும் பின்தங்கி போனது அவளுக்கு. அவன் மனமுருகவும், கோபமாகவும் பேசியதை ஒரு பெரிய விஷயமாகவே கருதவில்லை.
இதுதான் மலரின் இயல்பு. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதையே நினைத்துக்கொண்டு அதில் மூழ்கிவிடுவது அவளுடைய குணம் அல்ல. அடுத்த நொடி அதை ஒதுக்கிவிட்டு வேறு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவாள்.
அதற்காக எதையும் எளிதில் மறந்துவிடுபவளும் அல்ல. அந்த குணமே இன்னமும் ஆதித்யனை மன்னிக்கவிடாமல் பிடிவாதமாக இருக்கச்செய்கிறது.
சற்றுமுன் பேசும் பொழுது அவனின் வார்த்தைகளில் இருந்த தீவிரம் அவளை லேசாக அசைத்தாலும் தன்னை மீறி, தன் விருப்பமின்றி அவன் எதையும் செய்யமாட்டான் என்னும் நிச்சயம் அவளை கலங்கவிடவில்லை. அதில் சற்று கர்வமும் கூட.
அவளின் அலட்சியப்போக்கு வைத்தியநாதனுக்கு கவலையை அளித்தாலும் அவளின் கைகளில் இருந்த டீயும் பக்கோடாவும் சிரிப்பை வரவழைத்தது.
“கோபம் வந்தா உடனே பசி எடுத்துடும். என்ன பொண்ணோ?…” என நினைத்துக்கொண்டவர் மனம் ஆதியின் அழைப்பில் கனிந்தது.
“சொல்லுப்பா ஆதி. உன் பொண்ணோட பேசியாச்சா?…” என,
“வரு என்னை ரொம்ப மிஸ் பன்றாளாப்பா?…” ஏக்கத்துடன் கேட்டவனின் குரல் அந்த முதியவரின் மனதை கனக்கச்செய்தது. ஒரு பெரும் மூச்சை இழுத்துக்கொண்டவர்,
“கண்டிப்பா இல்லைன்னு சொல்லமாட்டேன் ஆதி…” என சொல்லி சற்றுமுன் தொலைகாட்சியில் அவனின் உருவம் பார்த்து அவனை தேடிய குழந்தையின் தவிப்பை கூற ஆதியின் மனம் சொல்லொண்ணா வேதனையில் தத்தளித்தது.
உடனே சென்று மகளை அள்ளி அணைத்து உச்சிமுகர்ந்து தனது முத்தங்களால் பாசத்தை, அன்பை அவள்மேல் மழையென பொழிய ஆவல் கொண்டான்.
அதை செய்யவிடாமல் மலரின் பிடிவாதம் முள்வேலி என இடையில் தடையாய் இருப்பதை எண்ணி அவனது நெஞ்சத்தில் குருதி கசிந்தது. அந்த நொடி தன் கையை கட்டிப்போட்டிருந்த மலரின் மேல் தீராத கோபம் கொந்தளிக்க ஆரம்பித்தது.
தான் தெரியாமல் செய்த தவறிற்காக இன்னும் எத்தனை நாள் சிலுவை சுமக்க போகிறேனோ? தான் மட்டுமல்லாது தன் குழந்தையும் அதற்கான தண்டனையை அனுபவிக்கவேண்டியதாகிற்றே என குமைந்துபோனான்.
காதலுக்காக, தன் காதலை காப்பாற்ற எந்த ஆண்மகனும் செய்யும் ஒரு செயல் தான். காதல் வேகத்தில் நிதானமின்றி நடந்துகொண்ட செயல்.
கோபம் கண் மறைக்க காதல் காதல் என்று பிதற்றிக்கொண்டு மலரின் மனதை புரிந்துகொள்ளாமல் தான் நடந்துகொண்ட விதம். அவளின் பக்க நியாயத்தை உணராது செய்த பெரும் பிழை.
அவனின் காதல் உண்மையானது தான். ஆனாலும் மலரின் பார்வையில் அது பெரும் தவறாகிப்போனது.
அன்று தான் விதைத்த அந்த விதை இன்றுவரை வெறுப்பை உமிழும் விருட்சமாய் இன்னமும் வளர்ந்துகொண்டிருப்பதை கண்டு நொறுங்கிக்கொண்டிருக்கிறான்.
“இன்னும் எத்தனை நாளைக்குப்பா இந்த வனவாசம்? நீயாவது கொஞ்சம் குழந்தையை மனசுல வச்சு யோசிக்கலாமே?…” என்ற வைத்தியநாதனின் பேச்சில் கலைந்தவன்,
“அது மலரோட கையில் தானப்பா இருக்கு. ஒருதடவை அவளை புரிஞ்சுக்காம நான் செஞ்ச தப்பே இந்த ஜென்மத்துக்கும் போதும். திரும்பவும் அவளை நோகடிக்க என்னால முடியாதுப்பா. இப்போ நான் அவளோட பேசறது கூட என் மனசை கட்டுப்படுத்த முடியாமத்தான்…”
சற்றும் கூச்சமின்றி தன் மனதை அவரிடம் சொல்ல வைத்தியநாதனுக்கு பேச்சு எழவில்லை.
“வரேன்ப்பா. சீக்கிரம் இதுக்கொரு முடிவு வந்துதானே ஆகனும். பேபி இப்போதான் வளர ஆரம்பிக்கிறா. அதுக்காகவேணும் மலர் கொஞ்சம் மனசு மாறலாம்னு நினைக்கிறேன். இன்னைக்கு அவ பேசியதை வச்சுதான் சொல்றேன்ப்பா…” என அவன் கூற,
“உன் இஷ்டம் ஆதி…” என்றவர் காமாட்சியிடம் குடுக்க,
“ஆதி, நல்லா இருக்கியாப்பா? சரியா சாப்பிடறது இல்லையா? மெலிஞ்சி தெரியிற. நேரத்துக்கு சாப்பிடவேண்டியது தானே?…”
போனை வாங்கிய நொடியிலிருந்து இன்னும் பலபல கேள்விகளை அவனை நோக்கி எய்த அவரின் பாசத்தில் நெக்குருகி விழிகள் கசிவதை போல இருந்தது.
“அம்மா கொஞ்சம் கேப் விட்டு கேள்வியை கேளுங்க. எனக்கு பதில் சொல்ல டைமே கொடுக்கலை நீங்க. அடுத்த படத்தோட ஸ்க்ரிப்ட் அந்த மாதிரி. போலீஸ் வேஷம் போடனும். அதான் டயட்ல இருக்கேன்…”
அவருக்கு புரியும் வகையில் மெதுவாக எடுத்துச்சொல்ல அதை புரிந்துகொண்ட காமாட்சி,
“அப்பப்போ டீ, காபியாச்சும் எடுத்துக்கப்பா…” என அறிவுரை வழங்க வைத்தியநாதன் முறைத்தார்.
“ஓகே ஓகே. கண்டிப்பா எடுத்துக்கறேன்மா. அப்பாவுக்கு கோபம் வந்திடப்போகுது நீங்க எனக்கு சொன்ன அட்வைஸ்க்கு…” என கூறி சிரிக்க,
“அவருக்கென்ன என்கிட்டே கோபப்படறதை தவிர வேற வேலை ஏது?…” என நொடித்துக்கொள்ள வாய்விட்டே சிரித்துவிட்டான் ஆதி.
“நீ கெட்டுப்போறதும் இல்லாம அவனையும் சேர்த்து கெடுக்க பார்க்கிற நீயெல்லாம் திருந்தவே மாட்ட…” என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து செல்ல அதை கண்டுகொள்ளாத காமாட்சி இன்னும் சில நிமிடங்கள் பேசி பேத்தியையும் இடையிடையே பேசவைத்து அதன் பின்னே அழைப்பை துண்டித்தார்.
நிசப்தமாகிபோன அலைபேசியை வெறித்துப்பார்த்தபடி அப்படியே சற்றுநேரம் அமர்ந்திருந்த ஆதி எழுந்து சென்று கட்டிலில் விழுந்தான்.
சுவிட்சர்லாந்தில் உள்ள உயர் ரக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் படப்பிடிப்பிற்காக வந்து தங்கியிருந்தான். அறையை சுற்றி விழிகளை ஓடவிட்டவனின் கண்களுக்கு அவ்வறையின் பகட்டு எந்தவிதத்திலும் நிறைவளிக்கவில்லை.
என்ன முயன்றும் அவனின் தனிமையின் வெறுமையை விரட்டவே முடியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டு இருட்டை விரட்டிவிடும் முயற்சியில் இறங்கி தோல்வியை தழுவிய விழிகளின் உள்ளிருந்து சூடான கண்ணீர் மட்டுமே வெளிப்பட்டது.
வேண்டாம் இந்த இருட்டு, தனிமை, நிசப்தம் எதுவும் வேண்டாம். என் மனைவி, என் குழந்தை என குடும்பமாய் சண்டைகள் என்னும் கோடை வெயிலில் சமாதான குளிர் மழையுடன் சுகமாக நனையவேண்டும் என்ற ஏக்கம் அவனை தீயென சுட்டது.
இவை அனைத்தையும் விட வருணிகாவின் ஏக்கம் நிறைந்த அழைப்பு அவனை அலைகழித்தது. முகத்தை அப்படியும் இப்படியுமாக திருப்பியவன் சட்டென எழுந்தமர்ந்தான்.
“கடைசி வரை மலரின் நெஞ்சம் மாறாவிட்டால்?…” அவன் இதயம் தாளம் தப்பி ஏறுக்கு மாறாய் துடிக்க ஆரம்பித்தது.
“இதற்கு மேலும் என்னால் முடியாது. மலரா? நானா? பார்த்திடனும். அவளின் பிடிவாதம் கொஞ்சமும் குறையாமல் போய்ட்டா அவ வாழ்க்கை மட்டுமில்லை, நான், என் குழந்தைன்னு எங்க மூணுபேர் வாழ்க்கையும் பாழாகிடும்…”
அலசி ஆராய்ந்து ஒருமுடிவுக்கு வந்தவனாக அடுத்த இருபதாம் நாள் அங்கே செல்வதென முடிவெடுத்தான் தீர்மானமாக.
அவனின் முடிவில் எந்தளவிற்கு ஸ்திரமாக இருப்பான்? இருக்கவிடுவாளா மலர்?
ஜீவிக்கும்…