புன்னகை – 15
மறுநாள் அதிகாலை வேகவேகமாய் எழுந்து மலருக்கு முன் கிளம்பியவன் மலர் கல்லூரிக்கு செல்லும் முன்பே வீட்டிற்கு திரும்பிவிட்டான்.
மலர் வருணிக்கு இட்லியை ஊட்டிக்கொண்டே அவனை பார்த்தவள்,
“சாப்பிட்டாச்சா?…” என,
“இன்னும் இல்லை. ப்ளேட் வை…” என சொல்லி கை கழுவிவிட்டு அமர்ந்து வருணியை தன்னுடைய மடியில் அமர்த்திக்கொண்டான்.
“பேபி சமத்தா சாப்பிடறீங்களே குட் கேர்ள்…” குழந்தையின் நுனிமூக்கோடு உரசியவன் முகத்தில் லேசாக இட்லி துணுக்குகள் ஒட்டிக்கொள்ள,
“ப்பா, ட்லி. ச்சீய்…” என மூக்கை சுருக்கி பிஞ்சுக்கைகளை விரித்து அதனை துடைக்க அதில் மயங்கிப்போனான்.
“நீ அழகுடா என் பொண்ணே…” என அனய் வருணியின் கன்னம் தேய்க்க மீண்டும் இட்லி அப்பிக்கொள்ள குழந்தை துடைக்க என்று சிறு விளையாட்டு அரங்கேறியது.
“போதும் போதும். முதல்ல சாப்பிடுங்க. அப்பறமா விளையாடலாம்…”
மலரின் அதட்டலில் வருணி வாய் பொத்தி சிரிக்க அனய்யும் சேர்ந்துகொண்டான் அதில்.
“என்ன கிண்டலா? எனக்கு காலேஜ்க்கு லேட் ஆகுது. நான் கிளம்பறேன். நீங்களே அவளுக்கு ஊட்டிவிடுங்க…” என்று கூறி மலர் திரும்ப அவளை பிடித்து நிறுத்தியவன்,
“என்ன கிளம்பற? இன்னைக்கு பேபிக்கு ஸ்கூல் பார்க்க போகனும்னு சொல்லியிருந்தேனே?…”
“அடடா மறந்துட்டேன். ஓகே நான் ரத்னாக்கிட்ட பர்மிஷன் சொல்ல சொல்லி சொல்லிடறேன். ஸ்கூல் பார்த்துட்டு கிளம்பிடலாம். நோ ப்ராப்ளம்…”
மீண்டும் அமர்ந்துகொள்ள வருணி அனய்யின் முகத்தை தன் புறம் திருப்பி,
“ப்பா புஜ்ஜி ஆ…” என வாய் திறக்க அதில் புன்னகை விரிந்தது அனய்க்கு. இட்லியை பிட்டு சாம்பாரில் தோய்த்து வருணிக்கு ஊட்ட,
“நான் ஊட்டறேன். நீங்க சாப்பிடுங்க…” என மலர் கேட்க,
“ம்ஹூம். ப்பா ஆ. நோ…” தந்தையின் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள் வருணி.
மலர் முறைக்க அதில் பெரிதாய் வாய்விட்டு சிரித்தவன் மகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு,
“நானும் சாப்பிட்டுட்டே அவளுக்கு ஊட்டறேன். வேணா நீ போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ…”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்…”
“மலர் அவ குழந்தை. எதுக்காக கோவிச்சுக்கற?…” அவன் சமாதானம் பேச முயல,
“நீங்க என்ன நாட்டாமையா? உங்க வேலையை பாருங்க. பெருசா வக்காலத்து வாங்க வந்துட்டாங்க…” என அதட்ட,
“நீ சாப்பிட்டாச்சா?…” தானும் இடையிடையே உண்டுகொண்டே கேட்க அவனுக்கு தட்டில் குறைவதை பார்த்து கவனித்தவள்,
“எல்லாம் ஆச்சு ஆச்சு…”
“ஹ்ம் கொஞ்சம் சிரிச்ச முகமாதான் சொல்றது?…” முணுமுணுப்போடு சொல்ல,
“பேசாம சாப்பிடறீங்களா? இல்லை நான் எழுந்து போகவா?…” இப்போது உண்மையில் மிரட்டல் மட்டுமே.
“ஹப்பா சரியான மிளகா…” என மகளுடன் சொல்லி ஊட்ட,
“ஆங்.. மி..ள…கா…” என உச்சரிப்பு மாறாமல் மலரை நோக்கி கை நீட்டி வருணி சொல்லிவிட அனய்க்கு புரையேறிவிட்டது.
“ஆஹா ஆப்பை தேடி போய் உட்கார்ந்துட்டேனே?…” என மகளையும் மனைவியையும் மாறி மாறி பரிதாபமாய் பார்த்துவைத்தான்.
வருணி சொல்லிய அழகில் லேசாய் சிரித்தவள் அனய்யின் பார்வையில் இதழ் விரிய சிரித்துவிட்டாள்.
“மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு மைக்ல சொல்லிட்டீங்களோ?…” என சொல்லி பொங்கி சிரிக்க,
“அப்போ உனக்கு கோபமே இல்லையா? நானா தான் பயந்துட்டேனா?…” ஆசுவாசமாய் அவன் கேட்க,
“இல்லை நான் ரொம்ப கோவமா தான் இருக்கேன்…”
“என்ன?…” என பார்க்க தலையில் அடித்துக்கொண்டவள்,
“அவ சாப்பிட்டு முடிச்சுட்டா. நீங்க முடிச்சுட்டு வாங்க. நான் போய் அவளுக்கு வேற ட்ரெஸ் மாத்தி கிளப்பறேன்…”
வருணியை தூக்கிக்கொண்டு மலர் சென்றுவிட அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த அனய் தானே எடுத்துப்போட்டுக்கொள்ள ஆண்டாள் வந்தார்.
“உனக்கு பரிமாறிட்டு போறதை விட என்ன வேலை அவளுக்கு?…” என கோபத்தோடு சொல்லி அவனுக்கு சட்னியை ஊற்ற,
“அவ இப்போ தான்மா போனா. வருணியை ரெடி பண்ண. நாங்க இன்னைக்கு பேபிக்கு ஸ்கூல் பார்க்க போறோம்ல…”
“அதுக்குன்னு சாப்பிட்டுக்கிட்டு இருக்கிற உன்னை பாதில விட்டுட்டு போறதா?…”
“அம்மா…” என சலிப்போடு அனய் பார்க்க,
“ஒன்னு சொல்லிடகூடாது. உடனே சப்போர்ட்க்கு வந்துடுவ…” என சொல்லி அவனுக்கெதிரில் அமர்ந்தவர் அந்த பள்ளியை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார்.
அவனிடம் அதன் சிறப்புகளை கேட்டு தானறிந்த விஷயங்களையும் சொல்லி அது தான் வருணிக்கு ஏற்ற பள்ளியென அவர் சொல்ல சொல்ல அனய்யும் கேட்டுக்கொண்டே உண்டு முடித்து எழுந்துகொண்டான்.
“உன் ஷர்ட்டை மாத்திட்டு போ. சாம்பாரும் சட்னியுமா இருக்கு…” போகிற போக்கில் சொல்லிச்சென்றார்.
மகளின் வண்ணம் இது என புரிந்தவன் புன்னகையோடு தங்களறைக்குள் சென்றான்.
அங்கே வருணிக்கு தலைவாரியபடி எங்கே செல்கிறோம் என்றும் அங்கு எப்படி இருக்கவேண்டும் என்றும் அவளுக்கு மலர் விவரிக்க குழந்தையோ சீரியசான முகபாவத்தில் தாய் சொல்வதை கர்மசிரத்தையோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.
“இப்போவே பாடம் எடுக்க ஆரம்பிச்சிட்டியா? அவ இப்போவே பயந்துடுவா. முதல்ல உன் வாயை மூடு…” என்றவன் குழந்தையை தூக்கி கன்னத்தில் முத்தம் வைக்க வருணியும் அப்படியே செய்தது.
“வாவ் மை பார்பி டால்…” என மேலே தூக்கிப்போட்டு பிடித்தவன்,
“செல்லக்குட்டி கீழே பாட்டிக்கிட்ட இருப்பீங்களாம். அப்பாவும் அம்மாவும் வந்திடுவோமாம்…” என்றதும் வருணி தலையசைத்து குட்டி கால்களோடு குடுகுடுவென ஓட,
“ம் பேபி பார்த்து மெதுவா நடந்துதான் போகனும்…” என்றதும் தன் கட்டைவிரலை உயர்த்தி காண்பித்து வருணி புன்னகைத்து செல்ல அவள் பின்னோடு சென்று பார்த்தவன் கதவினருகே நின்று கீழே சரியாக இறங்கிவிட்டாளா என பார்த்தபின் தான் உள்ளே வந்தான்.
தன்னுடைய கைப்பைய்யோடு அவனையே முறைத்து நின்றவளை சிரித்தபடி நெருங்கி,
“என்ன மேடம் கோபமா?…”
“நான் கோபப்பட்டு என்ன நடக்கபோகுது? அதான் நீங்க இருக்கீங்களே சொல்லித்தர. நான் இனிமே எதுவும் அவக்கிட்ட சொல்லலை…”
ஏனோ வருணியிடமிருந்து அனய் தன்னை தள்ளி நிறுத்துவதை போல தோன்றிவிட்டது ஒரு நொடி. அதில் அழுகை முட்டிக்கொண்டு வந்தாலும் அவனின் அணுகுமுறை தவறென்று தோன்றவில்லை என்றாலும் என்னவோ ஒரு வருத்தம் தங்கிவிட்டது அவளிடத்தில்.
“ப்ச் என்ன பேச்சு இது? சின்ன குழந்தை. இன்னும் ஸ்கூல் அப்டினா என்னன்னு கூட தெரியாது. அந்த அட்மாஸ்பியர்ல அவ அட்டாச் ஆகறவரைக்கும் நாமளா அவளுக்கு பயத்தை காட்டிட கூடாது…”
“நான் ஒன்னும் பயம் காட்டல. அங்க அவ எப்படி இருக்கனும்னு தான் சொன்னேன்…”
“இதைத்தான் செய்யாதேன்னு சொல்றேன். இப்போ நீ சொல்றதை வச்சு குழந்தையே ஒரு இமாஜின் பண்ணிடும். நாம அங்க குட் கேர்ளா மட்டும் தான் இருக்கனுமோ? சுட்டியா சேட்டை செஞ்சா யாருக்கும் பிடிக்காது போல அப்டி இப்டின்னு குழந்தைங்க மனசுக்குள்ள ஒருவித உருவகம் உண்டாகிடும்…”
“ஸ்கூல்னா பிடிச்சு போகனும். பயந்து போக கூடாது. போறதுக்கு முன்னமே அவங்களுக்குள்ள ஸ்கூல் டீச்சர்ஸ் பத்தி ஒரு பேட் இம்ப்ரெஷன் க்ரியேட் ஆகிட்டா அப்புறம் அங்க குழந்தைங்க அவங்களா இருக்கமாட்டாங்க…”
அனய் கூறியதன் அர்த்தம் புரிந்து அமைதியாக நின்றவள் தானும் அப்படி சொல்லியிருக்க கூடாது என நினைத்தாள்.
“என்னாச்சு? இன்னும் ஏன் சைலன்ட் மோட்ல இருக்க?…” என்றவனிடத்தில் ஒன்றுமில்லை என தலையசைக்க,
“நம்ம குழந்தை ரொம்ப ரொம்ப புத்திசாலி. எந்த இடத்தில் எப்படி இருக்கனும்னு சரியா தெரிஞ்சவ. கண்டிப்பா ஸ்கூல்ல செட் ஆகிடுவா…”
“என்னமோ அந்த ஸ்கூல்ல சும்மா பார்க்கத்தான் போறோம்னு சொன்னீங்க. இப்போ என்னமோ அங்கயே சேர்த்திட்ட போல பேசறீங்க?…” சீண்டலாய் கேட்க,
“பார்த்துட்டு வந்து வீட்ல டிஸ்கஸ் பண்ணலாம்னு தான் நினைச்சேன். ஆனா அம்மா அதுக்குள்ளே அவங்க ப்ரெண்ட்ஸ் சர்க்கிள், அவங்களோட ப்ரெண்ட்ஸ் சர்க்கிள்னு ஒரு சர்வேயே நடத்திருக்காங்க. இந்த ஸ்கூல் பெஸ்ட்னு சொல்றாங்க. அதான் பார்த்தேன்…”
“அப்போ கண்டிப்பா நாம அங்கயே சேர்த்திடலாம்…” மலர் பளிச்சென சொல்லிவிட,
“ஆர் யூ சூர்…”
“இதுல என்ன டவுட்? உங்கம்மா கண்டிப்பா சரியாதான் சொல்லியிருப்பாங்க. அதான் நானும் டக்குன்னு சொல்லிட்டேன்…” அவனிடம் சொல்லி கிளம்பிவிட அவளோடு இணைந்து வந்தான் அனய்.
அவர்களை பார்த்ததும் ஆண்டாள் பூஜையறையிலிருந்து அழைக்க அங்கே சென்றால் ஆண்டாளை போலவே சம்மணமிட்டு அழகாய் கைகளை குவித்து சாமி முன் அமர்ந்து இருந்தாள் வருணி.
அப்படியே ஆண்டாளை போலவே இருக்க அவர்களை ஆச்சர்யமாய் மலர் பார்க்க பெருமையாய் ஆண்டாள் பார்த்தார்.
“ப்பா உக்கா…” என தன்னருகே அமரச்சொல்லி தரையை தட்டி காண்பிக்க வேகமாய் சென்று அமர்ந்துகொண்டவன்,
“அம்முக்குட்டி என்ன பன்றீங்க?…” என அவளிடம் குனிந்து கேட்க,
“ஆமி……… ஆமி……” என அங்கிருந்த படங்களை காண்பித்து சொல்லியவள் அனய்யின் கையிரண்டையும் தானே எடுத்து கூப்பிவைத்து,
“ஆமி……… ஆமி…” என சொல்லிகாண்பித்து தீபாராதனையை தொட்டு அனய்யின் கண்களில் அவளே ஒற்றி எடுக்க ஆண்டாள் மனம் குளிர்ந்தே போனது.
மகளை அணைத்துக்கொண்டவன், “தேங்க்ஸ் டா பேபி…” என உச்சிமுகர்ந்து முத்தமிட இருவரையும் விழியகற்றாமல் பார்த்தது பார்த்தபடி நின்றாள் மலர்.
“ஒவ்வொருத்தரையும் வெத்தலைபாக்கு தாம்பாளம் வச்சா அழைக்கமுடியும்?…” என ஆண்டாள் பேச அனய் மலரை பார்த்து வா என தலையசைத்தான்.
“உட்கார்…” என சொல்ல மலர் அவனருகே அமர்ந்துகொண்டாள்.
ஆண்டாள் மீண்டும் மணியொலிக்க தீபாராதனையை காண்பிக்க வருணியும் அனய்யும் கைகூப்பி கண்கள் மூட மலர் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் பார்வை சுடர்விடும் தீபஜோதியிலேயே நிலைத்திருக்க திரும்பி திரும்பி அவளையே பார்த்த ஆண்டாள்,
“அனய்…” என அழைத்து மலரை காண்பிக்க மலரும் அவரை பார்த்தாள்.
“சாமி கும்பிடும் போது நெனப்பெல்லாம் எங்க இருக்குமோ? முதல்ல தெய்வத்தை வழிபட சொல்லு…” என சொல்ல அனய் மலரை பார்க்க அவள் ஆண்டாளை பார்த்தபடி இருந்தவள் அசராமல் இருந்தாள்.
அவர் முறைக்க முறைக்க அவள் சலனமின்றி அவரை பார்க்க அனய்க்கு தான் பயமாகிவிட்டது. ஏதேனும் வாக்குவாதம் ஆகிவிடுமோ என.
ஆண்டாள் மலரின் இறுகிய முகபாவனையில் என்ன கண்டாரோ பேசாமல் பூஜையை தொடர்ந்து முடித்தவர் எழுந்து நின்று ஆரத்தி காண்பித்து அனய்க்கும், வருணிக்கும் திருநீற்றை பூசியவர் எங்கே மலர் மறுத்துவிடுவாளோ என நினைத்து வேகமாய் அவளுக்கும் நெற்றியில் இட்டுவிட்டார்.
மலரோ அமைதியாக இதையும் வாங்கிக்கொள்ள தட்டில் இருந்த பூவை அவளின் கைகளில் திணித்துவிட்டு ஒரு பார்வையோடு வெளியே சென்றார். மலரும் பூவை தலையில் வைத்துவிட்டு வெளியேற,
“ஹ்ம் இவங்களை புரிஞ்சுக்கவே முடியலையே…” என அலுத்துக்கொண்டான்.
ஆரம்பத்தில் நேத்ராவிடம் கூறி பூ வைக்க சொன்னவரை மறுக்கமுடியாமல் வைத்துக்கொண்டதன் காரணம் சுமங்கலியும் ரிஷியும். அவர்கள் முன்னிலையில் ஆண்டாளின் பேச்சை நிராகரிக்க மனமில்லாமல் போனது மலருக்கு. பின் அதை தொடராமல் விட்டுவிட சொல்லி சொல்லி பார்த்தவர் கைகளில் கொடுக்க ஆரம்பித்தார்.
ஆண்டாள் சொன்னாரென்றால் மலர் பூ வைத்துக்கொள்ளவே மாட்டாள். அதையே அவர் கைகளால் கொடுத்தால் வாங்கி வைத்துக்கொள்வாள். ஏனோ அவளுக்கு பிடித்தமானவைகளில் இதுவும் ஒன்றாகி போனது. உண்மையில் அதில் ஆண்டாளுக்கும் கொஞ்சம் சந்தோஷம் தான்.
வருணி அவனின் கைகளை பிடித்து இழுக்க அவளை பார்த்து தூக்கிக்கொண்டவன்,
“ம்மா நாங்க கிளம்பறோம்…” என சொல்லி வாசல் நோக்கி செல்ல ஆண்டாளும் முறைத்தார். மலரும் முறைத்தாள். சொல்லிவச்சது போல ரெண்டுபேரும் முறைக்கிறாங்க என தன்னை குனிந்துபார்த்தவன் அப்பொழுதுதான் தன்னுடைய உடையை பார்த்தான்.
அசடுவழிய, “இதோ பைவ் மினிட்ஸ்ல மாத்திட்டு வந்துடுவேன்…” என வருணியை இறக்கிவிட்டு வேகமாய் மாடியேறி சென்ற வேகத்தில் திரும்பியும் வந்தான் ஷர்ட் மட்டும் மாற்றிவிட்டு.
“இதை முதல்லையே செஞ்சிருக்கலாம்ல…” ஆண்டாள் சொல்ல அவன் மலரை பார்த்து சிரிக்க அவளுக்குத்தான் பதறிப்போனது.
“இப்ப எதுக்கு என்னை பார்த்து பல்லைக்காட்டுறான்?” இப்படித்தான் இருந்தது அவளின் நினைப்பு.
அவனின் குறும்பு சிரிப்பையும் மலரின் பதட்டத்தையும் கண்டும் காணாமல் பார்த்தவர் உள்ளம் லேசாகிப்போனது.
“நல்லா இருந்தா சரி…” என எண்ணிக்கொண்டே,
“சரி சரி. அந்த ஸ்கூல்ல தாரான்னு ஒரு பொண்ணு வொர்க் பண்ணுது. நம்ம ரிலேஷன் தான். உனக்கு இப்போ சொன்னா புரியாது. வந்து சொல்றேன். நான் ஏற்கனவே பேசிட்டேன். வாட்ஸ்ஆப்ல அந்த பொண்ணு காண்டேக்ட் நம்பர் உனக்கு அனுப்பிட்டேன். நீ ஸ்கூலுக்கு போனதும் எனக்கொரு கால் செய். அந்த பொண்ணே வந்து உன்னை ரிசீவ் செய்வா…”
“ஓகே ம்மா நாங்க கிளம்பறோம்…” ஒருவழியாக காரில் ஏறி பள்ளியை நோக்கி வண்டியை செலுத்தியவன்,
“என்ன இன்னும் மௌன விரதமா?…” என கேட்க அவள் வருணியோடு பேசிக்கொண்டே அவனை கண்டுகொள்ளாமல் இருக்க அவன் தன் பேச்சுக்குள் குழந்தையை இழுத்தான்.
வருணியும் தாயை விட்டு தந்தையோடு அளவளாவ ஆரம்பிக்க மலருக்கு காதில் புகைவராத குறைதான். அவளை ஓரவிழிகளால் அளந்துகொண்டே வருணியை மலரோடும் பேசவைத்தான்.
“ஏன் பாப்பா அவன் சொன்னாதான் என்னோட பேசவும் செய்வியா நீ?” என சிணுங்கிய மனதை மறைத்து மகளோடு பேசியபடி வர பள்ளியும் வந்தேவிட்டது.
பள்ளியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள் தான். ஆனால் இன்று தான் நேரில் பார்க்கிறாள். பார்த்ததும் மலருக்கு அத்தனை பிடித்தம். ஆனால் மகளுக்கு?
கேம்பஸ் உள்ளே சென்றதும் காரை நிறுத்தி இறங்க அங்காங்கே குழந்தைகள் விளையாட அதனை பார்த்ததும் வருணிக்கு ஏக குஷியாகிவிட்டது. குழந்தைகளை பார்த்து பார்த்து தன் கைகளை தட்டி சிரித்தாள் வருணி.
“ஹப்பாடா” என்றிருந்தது மலருக்கு. அவள் பயப்படாமல் அச்சூழ்நிலையை பார்த்ததும் சந்தோஷம் கொண்டதே நிம்மதியாகி போனது.
அதற்குள் ஆண்டாள் சொன்ன தாராவும் வந்துவிட வருணியை சிறிது நேரம் பள்ளிக்குழந்தைகளோடு விளையாடவிட்டு பின் உள்ளே அழைத்துச்சென்றனர்.
அங்கே அனய்யின் பேச்சில் திகைத்துத்தான் போனாள் மலர். இவன் கேட்ட கேள்வியில் அப்பள்ளியின் முதல்வர் ஆடித்தான் போனார். ஆயினும் அவனின் சந்தேகங்களில் கொஞ்சமும் கோபம் கொள்ளாமல் நிதானமாக பதிலளித்தனர்.
இவனை போல எத்தனை பெற்றோரை பார்த்திருப்பார் அவர்? இயல்பாக கையாண்டு அனய்யின் முழு திருப்தியை பெற்றுவிட்டார். ஒருவழியாக பேச்சுவார்த்தை முடிந்து பள்ளியை சுற்றிப்பார்த்தவன் குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரவசதி, குழந்தைகளை கவனிக்கும் மேற்பார்வையாளர்கள் என ஒன்றையும் விடாமல் அலசி ஆராய்ந்தான்.
வருணிக்கும் அப்பள்ளி வெகுவாய் பிடித்துவிட மேலும் யோசியாமல் உடனே முடிவுசெய்துவிட்டான்.
ஒருவழியாய் அட்மிஷனை போட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் பள்ளியை விட்டு கிளம்ப மடியில் உறக்கத்தில் இருந்த வருணியை தடவியபடி மலர் அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வர,
“என்ன? ஏதாவது கேட்கனுமா?…”
“ஹ்ம்…”
“எதுக்கு அடுத்த வருஷம் ஸ்கூலுக்கு போகவேண்டிய பிள்ளைக்கு இப்போவே அட்மிஷன்? அதுவும் இல்லாம அவங்களை அந்த பாடுபடுத்தி இத்தனை கேள்வி? இன்னும் ஒருவருஷத்துல எவ்வளவோ மாறலாம். இதுக்கு இத்தனை அலப்பறை. இதை என்னைக்குத்தான் நிறுத்துவீங்களோ?…”
அவளின் கேள்வியில் புன்னகைத்தவன்,
“இந்த ஸ்கூல் பத்தி உனக்கே தெரியும், எவ்வளவு நல்ல ஸ்கூல்னு. சீட் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். அதான் இப்போவே வந்துட்டோம். அதுவும் இல்லாம இப்போலாம் இது சகஜம் தானே…”
“ஆனாலும் அங்க உங்க வாயை குறைச்சிருக்கலாம்…”
“நம்ம குழந்தையோட கம்பார்ட், சேப்ட்டி நமக்கு முக்கியமில்லையா? அப்போ கேட்கத்தான் செய்யனும். பதில் சொல்லவேண்டியது அவங்களோட கடமை…”
வீடு வரும் வரை மலர் அவன் பேசியதை சொல்லி சொல்லி காண்பிக்க, இப்பொழுது நிதானமாக அவளுக்கு பதிகொடுத்தபடி அவன்.
“அவங்களுக்கு வருணியை ரொம்ப பிடிச்சிருக்கு இல்லையா?…”
“ஹ்ம் ஆமாம் மலர். நம்ம பேபி சோ ஸ்வீட். எல்லோரையும் கவர் பண்ணிடுவா. ரொம்ப நல்ல பேசறா, நல்ல பதில் சொல்றான்னு தாரா பிரின்ஸி ட்ட சொன்னாங்க…”
“ஆனா என் பொண்ணு இன்னும் சரியா தெளிவா பேசவே இல்லையே?…”
கண்கள் கலங்க குரல் நடுங்க மலர் கேட்டதும் பதறியவன் சட்டென காரை ஓரம்கட்டி நிறுத்தி,
“ஹேய் மலர்?…” என அவளின் முகம் நிமிர்த்த பார்க்க அவளோ உதடு துடிக்க மகளின் இதழ்களை வருடியபடி குனிந்து அமர்ந்திருந்தாள்.
மனைவியை அழைத்து அழைத்து பொறுமையிழந்தவன் குழந்தைக்கு கேட்காவண்ணம் மெல்லிய குரலில் சீறினான்.
“நீ லூசாடி? என்ன வயசாகிடுச்சு அவளுக்கு?…”
“இவ வயசு குழந்தைங்க வார்த்தை கோர்வையோட ஓரளவுக்கு தெளிவா பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா என் பொண்ணு…” மலரின் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிய துவங்கியது.
“அப்டியே அறையனும் போல வருது. உன்னையெல்லாம் என்னதான் செய்ய?…” என மலரை கடிந்தவன்,
“ப்ச், மலர். எத்தனையோ குழந்தைங்களுக்கு பேச்சு கொஞ்சம் லேட்டா கூட வந்திருக்கு. நம்ம குழந்தையும் சீக்கிரம் ரொம்ப தெளிவா பேசுவா. நீ முதல்ல இப்படி திங்க் பன்றதை நிறுத்து…”
வருணி லேசாய் சிணுங்க, “இந்தா டிஷ்யூ. உன் முகத்தை துடை. வீட்டுக்கிட்ட வந்துட்டோம்…” கோபத்தோடு அவன் சொல்ல மறுக்காமல் வாங்கியவள் முகத்தை துடைத்துவிட்டு ஜன்னல்புறம் திரும்பிக்கொண்டாள்.
வீட்டிற்கு சென்று வருணியை படுக்க வைத்துவிட்டு சாப்பிட்டு கல்லூரிக்கு கிளம்ப அப்பொழுது தான் மொபைலை சார்ஜில் வைத்துவிட்டு சென்றது ஞாபகம் வர அதையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
சரியாக அனய்யும் அவளருகில் வந்து காரை நிறுத்த மறுக்காமல் ஏறி அமர்ந்தவள் முகம் யோசனையில் ஆழ்ந்திருந்தது.
சிறிது நேரம் பொறுத்தவன் அவளிடம் கேட்க எதையோ சொல்ல வந்து பின் தயங்கி தயங்கி சொல்லாமலே நிற்பதை பார்த்தவன் காலேஜ் பக்கம் வந்துவிடவும் என்னவென கேட்காமல் செல்ல மனமில்லை.
“என்னன்னு சொல்லிடு மலர். மனசுக்குள்ளயே வச்சுக்காம பேசிடு. என்னவோன்னு நான் தான் தலையை பிச்சுக்கனும். சொல்லிடு….”
கிட்டத்தட்ட கெஞ்சியேவிட்டான். ஆனாலும் மலரின் முகத்தில் லேசாக அச்சம் எட்டிப்பார்ப்பதை சரியாக கண்டுகொண்டவன்,
“வில்லங்கமா எதோ கேட்கபோறா, இல்லை பேசப்போறா. எதுவானாலும் பொறுமையா ஆபத்தில் சொல்லனும்” தனக்குத்தானே கூறிக்கொண்டு,
“எதுவானாலும் கண்டிப்பா நான் கோபப்படவே மாட்டேன். சொல்லு…”
“அது வந்து…” அவன் பார்வை அவளிடமே நிலைகொண்டு நிற்க அவளால் மேலும் கேட்கமுடியாமல் போனது.
“நான் வேணும்னா ஈவ்னிங் வீட்டுக்கு வந்து சொல்றேனே?…” என,
“ம்ஹூம் எதுவானாலும் சொல்லிட்டுப்போ. இல்லைனா விடமாட்டேன்…” காரை சென்ட்ரல் லாக்கில் போட்டு காலேஜிலிருந்து பத்தடி தூரத்தில் நிறுத்திவிட்டான்.
ஐந்து நிமிடம் கடந்தும் அவன் அசையாமல் அவளையே பார்த்திருக்க பெரும் மூச்சொன்றை எடுத்து திடமாய் அவனை பார்த்தவள்,
“வருணி இன்னும் பேசாததுக்கு ஜெனிட்டிக் காரணமா இருக்குமோ?…” என,
“வாட் யூ மீன்?…” அவனின் பார்வையே அவளை கூர் வாளென கிழித்தது.
“வந்து சரவணா மாமாக்கும் கொஞ்சம் லேட்டா தான் பேச்சு வந்தது ஐந்து வயசுக்கு பின்னால தான். அதான் வருணிக்கும்…”
“ஏய்…” என்ற பெரும் சத்தத்தோடு அடிக்க கையை ஓங்கியிருந்தான் அனய்.
அதில் அதிர்ந்தவள் கதவோடு ஒண்டிக்கொண்டு பதட்டத்தில் கையிலிருந்த போனை நழுவவிட்டாள்.
ஒரு நொடி தன்னை நிதானித்து வியர்த்துவிட்டிருந்த முகத்தை துடைத்துக்கொண்டவன் சென்ட்ரல் லாக்கை விடுவித்து,
“இறங்கி போ…” என அவளை பாராமல் சாலையை வெறித்தபடி கூற பயந்துதான் போனாள் அவனின் செயலில்.
“வந்து, நான் வேணும்னு…”
அவளை பேச கூட விடாமல் அவனே மறுபுறம் சாய்ந்து கதவை திறந்து அவள் தோளை பிடித்து,
“இறங்கி போடி. என் மனசை எத்தனை தடவை தான் கொன்னுட்டே இருப்ப. கண்ணு முன்னால இருக்காத. இறங்கி போடி…” என தள்ள மலரும் இறங்கிக்கொண்டாள் கண்ணீரோடு.
அவள் இறங்கிய நொடி அவனின் கார் பறந்துவிட்டிருந்தது உட்சபட்ச வேகத்தில். உறைந்துபோய் பார்த்தபடி நின்றவள் மற்ற வாகன ஓசையில் மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
“நான் பேசியிருக்கக்கூடாது இவனுக்கு பிடிக்கலைன்னு தெரிஞ்சும் நான் மாமா பத்தி பேசியிருக்கவே கூடாது. ஏற்கனவே நான் பேசி எத்தனை எத்தனை வருத்தங்கள்?…” தன்னைப்போல் பேசிக்கொண்டே சென்றாள்.
அவளின் ஆழ்மனம் அனய்யின் காதலை உணர ஆரம்பித்திருப்பதை அறியாமல் அவனின் மனம் வருந்த செய்துவிட்டோம் என மருகிக்கொண்டே நடந்தாள்.
கல்லூரியினுள் நுழைந்தும் சுற்றம் மறந்து சென்றுகொண்டிருந்தாள் மற்றவர்கள் தன்னை பார்ப்பதை உணராமல். யார் அழைத்தும் திரும்பவில்லை. யார் அழைப்பும் காதுகளில் ஏறவில்லை.
பழக்கப்பட்ட கால்கள் தன்னுடைய அலுவலக அறை இருக்கும் வளாகத்தை நோக்கி செல்ல அப்பொழுதுதான் கசகசவென கூட்டம் கூடியிருப்பதை கவனித்தாள்.
‘என்னவோ பிரச்சனை’ என பார்த்ததும் உணர்ந்துகொண்டவள் நடையை எட்டிபோட அங்கிருக்கும் கும்பலில் சிலரை அடையாளம் தெரிந்தது. அதிலும் ஒருவரை நன்றாகவே.
“என்னவா இருக்கும்? நிறையப்பேர் இருக்காங்களே?…” என்ற சிந்தனை சூழ அங்கே போக அதற்குள் ரத்னா வேகமாய் ஓடி வந்தாள் இவளை நோக்கி.
“என்னாச்சு ரத்னா? என்ன ப்ராப்ளம்? ஷ்ராவனி அம்மா கூட வந்திருக்காங்க…” என கேட்டுக்கொண்டே ரத்னாவை இழுத்து நடக்க,
“நில்லு மலர். நீ அங்க போகவேண்டாம். நீ ஏன் இங்க வந்த?…” தன் திடத்தை எல்லாம் ஒன்று சேர்த்து அவளை பிடித்து நிறுத்த அதற்குள் கூட்டம் மலரை நோக்கி ஆவேசமாக வந்தது.
“நான் ஏன் போகக்கூடாது?…” என அழுத்தமாக கேட்டவள் தங்களை நோக்கி வருபவர்களின் முகத்தை ஆராய்ந்தாள்.
அத்தனை ஆத்திரமும் கோபமும் கொப்பளித்தது அவர்களின் முகத்தில். செய்வதறியாமல் நின்றாள் ரத்னா.
புன்னகை ஜீவிக்கும்…