புன்னகை – 16
தன்னை நோக்கி வருபவர்களின் முகத்தில் இருந்த ஆவேசத்தை துல்லியமாக கண்டுகொண்டவள் பார்வை யோசனையாய் ரத்னாவை நோக்கியது.
“என்னாச்சு ரத்னா?…” மலர் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே அக்கல்லூரியின் கரஸ்பாண்டென்ட் ஜானகி வந்துவிட்டார் அவ்விடம்.
“சார், ப்ளீஸ். நான் என்னன்னு கேட்டு சொல்றேன். கொஞ்சம் அமைதியா இருங்க…” என கூட்டத்தினரை தடுத்து நிறுத்த,
“என்னதா இருந்தாலும் எங்க முன்னாடி தான் விசாரிக்கனும். இந்தம்மா என்ன பதில் சொல்லுதுன்னு நாங்களும் தெரிஞ்சுக்கனும் இல்லையா?…” என அவர்களில் ஒருவர் ஆத்திரத்தோடு சொல்ல,
“அதெப்படி சார், புரிஞ்சு பேசுங்க. இப்போவே ஸ்டூடன்ஸ் சிலருக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சு. வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சிலருக்கு தெரிஞ்ச விஷயம் எல்லோருக்கும் தெரியனுமா?…”
“எப்படி? எப்படி? நீங்க தனியா போய் பேசி உங்க காலேஜ் பேரை எப்படி காப்பாத்தறதுன்னு யோசிப்பீங்க. நாங்க வெளில நின்னு அதுக்கு காவல் காத்துட்டு இருக்கனுமா? அதெல்லாம் முடியாது…”
இன்னொருவன் துள்ள அவனின் பேச்சினை ஆமோதித்து முடியாது முடியாது என கூச்சலிட ஆரம்பித்தனர்.
“ஹலோ சார். போன்ல வந்தது உண்மையா இருக்கும் பட்சத்தில் உங்க பசங்க மேலையும் தப்பிருக்கு இல்லையா? அதை விட்டுட்டு என்னவோ எங்க மேல மட்டும் தப்பு சொல்லிட்டு இருந்தா பிரச்சனை வேற மாதிரி ஆகிடும். பார்த்துக்கோங்க…”
ரத்னா பொறுக்கமாட்டாமல் கோபமாக அவர்களிடம் பேச,
“ரத்னா கீப் கொய்ட். பேரன்ட்ஸ் அப்டித்தான் இருப்பாங்க. நாம தான் பொறுமையா விளக்கனும். தப்பு நம்ம ஸ்டாஃப்ஸ் பக்கமும் இருக்கு…”
ஜானகியின் பதில் ரத்னாவிற்காக இருந்தாலும் பார்வை மலரை கோபமாக உறுத்து விழித்தது.
அதில் துணுக்குற்றவள் மனம் சஞ்சலத்தில் மூழ்க ஆரம்பித்தது. ஏற்கனவே கலக்கமுற்றவள் இன்னமும் கலங்கி தவித்தாள்.
ஏனோ அனய்யை, அவனின் அருகாமையை எதிர்பார்த்தது அவளின் உள்மனது. வந்துவிடமாட்டானா என்ற எண்ணச்சுழலை விட்டு வெளிவந்தவள்,
“மேம் என்ன ப்ராப்ளம்னே இன்னும் யாரும் சொல்லலை. என்னன்னு சொல்லுங்க…” என ஜானகியிடம் கேட்க,
“ஷட் அப் மலர். எதுவானாலும் ரூம்ல பேசலாம். நீ செஞ்சு வச்சிருக்கிற காரியத்துக்கு விளக்கம் வேறையா?…” என அனைவரின் முன்பும் கோபமாக வார்த்தைகளை பல்லிடுக்கில் கடித்துத்துப்ப மலரின் முகம் அவமானத்தில் சிறுத்துவிட்டது.
“மேம், மலர் நிச்சயம் இப்படி செய்திருக்கமாட்டா. நீங்க கொஞ்சம் ரெஸ்பெக்ட் குடுத்து பேசுனா நல்ல இருக்கும். மத்தவங்க முன்னாடி அவளை இப்படி பேசறது சரியில்லை…” ரத்னா மலருக்கு ஆதரவாக நிற்க,
“எஸ் மேம். நீங்க வார்த்தைகளை கொட்டிடாதீங்க. பின்னால வருத்தப்படுவீங்க…” என திலீபனும் மலருக்கு துணையாய் தோள்கொடுத்தான்.
“எனக்கு எப்படி பேசனும்னு நீங்க கத்து தறேங்களா? ரெண்டு பேருக்கும் தெளிவா ஒன்னு சொல்லிக்கறேன். இந்த விஷயத்துல நீங்க தலையிடாதீங்க. இவ பெரிய செலிபரட்டியோட வொய்ப்னா நாங்க மரியாதை குடுத்து பேசனுமா?…”
இதே ஜானகி தான் பேப்பரில் அனய் மலர் இருவரது புகைப்படம் வந்ததும் பார்த்துவிட்டு மலரை அந்த தாங்கு தாங்கியது.
இப்பொழுது காலேஜில் மற்ற பேரன்ட்ஸ் முன்னால் தான் நடுநிலையுடன் பேசுவதாக காட்டிக்கொள்ள பேசும் பேச்சுக்கள் தான் எத்தனை?
பிரின்ஸிபால் லதாவிற்கு கூட ஜானகியின் பேச்சுக்கள் சுத்தமாக பிடிக்கவில்லை. அதிலும் மலரை பற்றி ஒரு குறையும் சொல்லமுடியாது. அப்படி இருக்கும் பெண்ணை இப்படி அவமதிப்பதை தடுக்கமுடியாமல் பார்த்துநின்றார்.
ஜானகியின் பேச்சில் முதலில் அதிர்ந்தாலும் அனய்யையும் இதில் இழுத்து பேசி தன்னை மேலும் மேலும் அவமதிப்பதை கண்டு பெரும் கோபம் எழுந்தது மலருக்கு.
மலரின் இயல்பான குணம் தலைதூக்க இனியும் அமைதிகாக்க கூடாதென அவரை முறைத்தவள் ஜானகியை தாண்டிக்கொண்டு நேராக ஷ்ராவனியின் அம்மா முன்பு நின்றாள்.
அதில் பதறிய ரத்னாவும் திலீபனும் அவளோடு வேகமாக சென்றனர்.
“சொல்லுங்க ஷ்ராவனி அம்மா. என்னாச்சு? ஏன் அழறீங்க?…” என அவரின் கை பிடித்து கனிவோடு கேட்க அவரோ இவளின் கையை கோபத்தோடு தட்டிவிட்டு தள்ளி சென்று நின்றுகொண்டார்.
“செய்யறதையும் செஞ்சிட்டு இப்போ வந்து ஒன்னும் தெரியாத மாதிரி எப்படி பேசறா பாருங்க. இவளை மாதிரி பொம்பளையை சும்மா விடக்கூடாது…” அதில் இருந்த அரசியல்வாதி ஒருவன் சத்தமிட அவனின் கைத்தடி,
“இவக்கிட்ட என்ன பேச்சுவார்த்தை, விசாரணை? தூக்கிப்போட்டு நாலு மிதி மிதிச்சா தானா உண்மையை சொல்லிடப்போறா…”
அவன் சொல்லிக்கொண்டே மலரின் மீது கை வைக்க வர திலீபன் தடுக்கும் முன்பே மலர் அவனை அடித்திருந்தாள்.
பிரச்சனை கை மீறி செல்வதை கண்டு அதிர்ந்துபோன ஜானகி கையை பிசைந்துகொண்டு நிற்க ஏற்கனவே திலீபனின் வற்புறுத்தலால் சேர்மனுக்கு அழைப்புவிடுத்திருந்த பிரின்ஸிபால் லதா இன்னமும் சேர்மன் வராததை கண்டு இன்னும் எதுவும் ரசாபாசம் ஆகிவிடுமோ என பயந்து போய் பார்த்தார்.
ஆனாலும் அவனை மலர் அடித்தது சரியென சபாஷ் சொல்லவும் தவறவில்லை.
ஜானகிக்கோ ஆத்திரமாத்திரமாக வந்தது. சேர்மனின் தங்கை என்னும் பெயரில் அக்கல்லூரியின் நிர்வாகத்தில் தன்னை சமீபமாக நுழைத்துக்கொண்டவர் மேலும் தன் அண்ணனின் நல்லெண்ணத்தை சம்பாதித்துவிடும் நோக்கில் செயல்பட நினைக்க நடப்பதோ அவரின் எண்ணத்திற்கு மாறாய்.
மலரை எப்படியாவது பேசி அனைவரின் முன்பும் மன்னிப்பு கேட்கவைத்து பெற்றோர்களின் முன்னிலையில் நல்லபெயர் வாங்கி பிரச்சனையை சுமூகமாக முடித்துவிட நினைக்க நடந்ததோ வேறு.
மலருக்கோ ஆத்திரம் தலைக்கேறியது. விஷயம் என்னவென தெரிவிக்காமல் தன்னை சாடுவதை, தாக்கவருவதை அனுமதிக்கவில்லை அவள்.
“எவன்டா எவன்டா பக்கத்துல வருவீங்க? பொம்பளைன்னா உங்களுக்கு இளக்காரமா போச்சா? எங்க என் பக்கத்துல வாங்க பார்க்கலாம். நீ வருவியா வா, டேய் நீ யா? வா…” என ஒவ்வொருவரின் முன்பும் சொடுக்குப்போட்டு கை நீட்டி கேட்க,
“தப்பு செஞ்சுட்டு உனக்கு இவ்வளவு தைரியம் ஆகாது மலர்…” ஜானகி தன் அண்ணன் வருவதை பார்த்துக்கொண்டே மலரிடம் கேட்க,
“தப்பா? நானா? என்ன பண்ணினேன்னே சொல்லாம உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்க, அதை நான் கேட்டுட்டு சும்மா இருக்கனுமா? அதுக்கு வேற ஆளை பாருங்க…”
“அப்படியெல்லாம் நீங்க சொல்லமுடியாது மலர். இங்க நீங்க வேலைபார்க்கறீங்க. நீங்க எங்களுக்கு இந்த நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டு தான் ஆகனும்…” மீண்டும் மரியாதையாக ஜானகி பேச வெறுப்புடன் அதையும் கண்டுகொண்டாள் மலர்.
மலரை அடக்கவென அவர் சொல்ல அதுவே மலருக்கு இன்னமும் கோபத்தை கிளப்பியது.
“அப்படி இந்த காலேஜ்ல நான் வேலை பார்க்கனும்னு அவசியமில்லை மிசஸ் ஜானகி…”என சொல்லிவிட,
“என்ன ஒரு திமிர் இவளுக்கு. இவளை சும்மா விடக்கூடாது…” என பல்லைக்கடித்தார் ஜானகி. அதற்குள் அவர்களை சேர்மன் நெருங்கிவிட,
“இதுதான் நீ இந்த காலேஜை நிர்வாகம் பன்ற லட்சணமா?…” என ஜானகியை பார்த்து சீற அதில் பயந்துபோனார் ஜானகி.
“இல்லை அண்ணா…”
“போதும் எதுவும் பேசவேண்டாம்…” என சொல்லி மலரையும் பார்த்துவிட்டு அனைத்து பேரன்ட்ஸ் முன்பும் நின்றவர்,
“முதல்ல நான் நடந்ததுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கறேன். எதுவானாலும் நாம ரூம்ல போய் பேசலாம்…” என தன்மையாக சொல்ல அவர்களும் அவரின் பின்னே சென்றனர்.
“இவங்களையும் அழைச்சிட்டு வாங்க…” என மலரை காண்பித்து சொல்லி சென்றுவிட,
“மலர் நீங்க ஒன்னும் வொரி பண்ணிக்காதீங்க. கண்டிப்பா இதுல ஏதோ தப்பு நடந்திருக்கு. நாங்க இருக்கோம் உங்களுக்கு சப்போர்ட்டா…” என லதாவும் அவளின் தோள்தட்டி உள்ளே சென்றுவிட ரத்னாவோடு மலர் உள்ளே சென்றாள்.
அவர்களையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்த திலீபன் மீண்டும் அனய்க்கு அழைக்க இப்பொழுது கனெக்ட் ஆனது.
அனய்யும் மலரை இறக்கிவிட்டு கோபமாக வந்துவிட்டாலும் காலேஜின் சற்று அருகிலேயே தான் காரை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தான்.
சிலபல நொடிகளுக்கு பின் மனைவியின் கலங்கிய முகத்தை எண்ணிப்பார்த்து அவளுக்கு அழைக்கவென தனது மொபைலை ஸ்விட்ச் ஆன் செய்திருந்தான்.
மகளுக்கு பள்ளிக்கு செல்வதற்காக அணைத்து வைத்திருந்த மொபைலை இப்பொழுது உயிர்ப்பித்தான்.
உடனே அழைப்பு வரவும் திலீபனின் அழைப்பை ஏற்றவன்,
“சொல்லுங்க திலீபன், ஹவ் ஆர் யூ? இப்போ தான் மலரை ட்ராப் செஞ்சுட்டு வந்தேன்…” தன் மனவலிகளை தள்ளிவைத்து அவனுடன் இயல்பான குரலில் உரையாட,
“இப்போவாச்சும் உங்களுக்கு லைன் கிடைச்சதே சார். உடனே காலேஜ் வர முடியுமா? மலர்க்கும் உங்களுக்கும் காலைல இருந்து ட்ரை செஞ்சுட்டே இருந்தோம் நானும் ரத்னாவும்…”
திலீபனின் படபடப்பான பேச்சில் புருவம் சுருங்கியது அனய்க்கு.
அப்பொழுதுதான் மலரின் மொபைல் காரினுள் கிடப்பதை கண்டவன் அதை கையில் எடுத்து ஆன் செய்ய அத்தனை மிஸ்ட்கால்ஸ் வந்து விழுந்தது.
“மொபைல் கார்லயே விட்டுட்டு போய்ட்டா போல…” என சொல்லி காரை கிளப்பிக்கொண்டே,
“திலீபன்? என்ன ப்ராப்ளம்?…” என சரியாக விஷயத்திற்கு வந்துவிட திலீபனும் கடகடவென சொல்லிவிட்டான்.
அதில் அதிர்ந்த அனய், “நான் இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்பேன். கொஞ்சம் பார்த்துக்கோங்க…” இறுகிய குரலில் சொல்லி மேலும் ஒருசில விஷயங்களை பேசிவிட்டு வேகமாக காரை ஓட்டினான்.
அனைவரும் உள்ளே சென்றாலும் மலரை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டு தான் இருந்தனர். அவர்களை அமைதிப்படுத்தவே சில நொடிகள் ஆனது.
“நீங்க எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருக்கிறது நல்லது. பிரச்சனையை பேசி என்ன நடந்ததுன்னு உண்மையை வெளிக்கொண்டுவர விடாம இப்படி கூச்சல் போட்டா என்ன அர்த்தம்?…”
வெளியில் போல் தன்மையாக அல்லாது கொஞ்சம் சப்தமாக கடிந்தார் சேர்மன் பெற்றோர்களை. அதில் ஒரு பெண்மணி,
“வெளில வச்சு அமைதியா பேசிட்டு உள்ள வந்ததும் மிரட்டுறது போல பேசறீங்க. இதுதான் நீங்க விசாரிக்கிற லட்சணமா?…” என,
“அதை பத்தி நீங்க சொல்லகூடாது மேடம். புள்ளைங்களை ஒழுக்கமா வளர்க்கனும். நீங்க வளர்த்த லட்சணம் தான் இப்படி ஒரு பிரச்சனையை கொண்டுவந்திருக்கு. முதல்ல உங்க பசங்க அப்படி செஞ்சதுக்கு இந்த காலேஜ் அவங்க மேல ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கனும்…”
சேர்மனின் தடாலடி பேச்சில் அனைவரின் முகமும் விழுந்துவிட்டது. தலைகுனிந்து நின்றிருந்தவர்களை அழுத்தமாய் பார்த்தவர் மலரை முன்னால் அழைத்து,
“மிசஸ் வனமலர், உங்க மொபைல் எங்க?…” என,
“ஸார், முதல்ல என்ன ப்ராப்ளம்னு எனக்கு தெரியனும். எதுக்காக இவங்க என்மேல கோபப்படறாங்கன்னு எனக்கு புரியலை. விஷயம் என்னன்னே சொல்லாம இப்படி பேசறது சரியில்லை…” என மலரும் நிமிர்வாகவே கேட்டாள்.
“இதத்தான் சார் சகிச்சுக்க முடியலை. செய்யறதையும் செஞ்சுட்டு, எதுவும் தெரியலைன்னு சொல்றா பாருங்க. இவளால இந்தம்மாவோடு பொண்ணு தற்கொலை முயற்ச்சி பண்ணி உயிருக்கு போராடிட்டு இருக்குது. இப்பவும் எப்படி நடிக்குது இந்த பொம்பளை…”
ஷ்ராவனியின் அம்மாவை காட்டி ஒருவர் சொல்ல மலருக்கு கால்கள் வெடவெடக்க தொடங்கியது.
“ஷ்ராவனி சூஸைட் அட்டெம்ட்?…” திரும்பி ரத்னாவை பார்க்க அவளும் ஆமாம் என தலையசைத்தாள். மலரின் தளிர்விரல்கள் நடுங்க துவங்கியது. ரத்னா அவளை தைரியப்படுத்துவது போல அவளின் கைகளை அழுந்த பற்றினாள்.
“ஆல்ரைட் மிசஸ் வனமலர். விஷயம் என்னன்னு நான் சொல்றேன்…”
“இவங்களோட பசங்க சம்பந்தப்பட்ட வீடியோஸ், போட்டோஸ் எல்லாம் உங்க மொபைல்ல இருந்து ஒரு சில ஸ்டூடன்ஸ், பேரன்ட்ஸ் எல்லோருக்கும் போயிருக்கு. அதனால ஷ்ராவனின்ற ஸ்டூடன்ட் சூஸைட் அட்டெம்ப்ட் பண்ணிருக்கு…”
“வாட்?…” என மொத்தமாய் அதிர்ந்தாள்.கால்கள் தரையிலேயே வேரோடிவிட்டது.
“எத்தனை பெரிய பழி?…” என மனதில் அரற்றியவள்,
“நோ ஸார்…” என்றவள்,
“அப்போ இதை நான் அனுப்பியிருப்பேன்னு நினைக்கறீங்களா ஸார்?…” என குரல் நடுங்க கேட்டுவிட அவர் அமைதியானார்.
“ஸார் இப்பவும் சொல்றேன். கண்டிப்பா இது மலர் செஞ்சிருக்க மாட்டாங்க. நாம வேற ஆங்கிள்ல விசாரிச்சு பார்த்தா உண்மை தெரியவரும்…” லதா மலர்க்கு பரிந்துகொண்டு வர ஜானகிக்கு பற்றிக்கொண்டு வந்தது.
“அதெப்டி மேடம்? இவ்வளோ பெரிய காலேஜ்ல ஒரு அட்மினிஸ்ட்ரேஷன் செக்ஷன்ல பொறுப்பான வேலைல இருக்கிறவங்க அவங்க மொபைலை கேர்லஸா விட்டுடுவாங்களா? இல்லை அதை எடுத்து வேற யாரும் மிஸ் யூஸ் பண்ணிடத்தான் முடியுமா?…”
ஒருவன் இடக்காய் கேட்க அதை கண்டு ஜானகியின் முகம் மின்னியது.
“பாய்ண்ட். நீங்க சொல்றதும் யோசிக்கவேண்டிய விஷயம் தான். நாங்க கண்டிப்பா உங்களுக்கு நியாயம் செய்வோம். நீங்க கவலைப்பட வேண்டாம்…”
வள்ளலென வாக்களித்த ஜானகியை எரிக்கும் பார்வை பார்த்த சேர்மன் பார்வையாலேயே அடக்கி வைத்தார். அதில் வாயை கப்பென மூடிக்கொண்டவர் நினைத்ததை பேசிவிட்ட இறுமாப்பில் மலரை துச்சமாய் பார்த்து பின்னால் நகர்ந்துகொண்டார்.
“என்னையா பேர் சொல்லி திமிரா பேசின. மாட்னடி…” என கருவினார்.
“லதா மேடம் சொல்றதும் நாம யோசிக்கவேண்டிய விஷயம் தான் இல்லையா? நாம ஒருத்தரையே குற்றம் சாட்டுவது சரியா இல்லை. இன்னொரு கோணத்திலையும் பார்க்கனும் ஸார்…” அங்கு பணிபுரியும் இன்னும் சில பேர் மலருக்கு ஆதரவாக குரல் கொடுக்க,
“அதெல்லாம் முடியாது. உங்களால முடிஞ்சா பாருங்க. இல்லைனா எங்கள்ட்ட விட்ருங்க. நாங்க பார்த்துக்கறோம் இவளை. போலீஸ்ல கம்ப்ளைன்ட் பன்றோம்…” என இன்னொருவன் மலரை பார்த்து கை முஷ்டியை மடக்க,
“போலீஸ் எல்லாம் வேண்டாம். நம்ம பசங்க சம்பந்தப்பட்டது. அவங்க ப்யூச்சர் பாதிக்கும்…” இன்னொருவன் சமாளிக்க,
“முதல்ல மிசஸ் வனமலர் என்ன சொல்றாங்கன்னு கேட்போம்…” என மலரை பார்க்க,
“நோ ஸார். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் இப்படிப்பட்ட ஒரு இழிவான காரியத்தை என்னைக்குமே செய்யவே மாட்டேன். மாட்டேன்…” என சத்தமாகவே சொல்ல சேர்மன் உட்பட அனைவரின் நம்பாத பார்வையில் இன்னமும் வெகுண்டாள்.
“இதை நீங்க நம்பினாலும் சரி, இல்லைனாலும் சரி. நான் சொல்றது தான் உண்மை…” என சொல்லி ஷ்ராவனியின் தாயை பார்க்க அவரோ அவளை வெறுப்பாய் பார்த்தார்.
ஷ்ராவனியின் தாயுடன் மிக நெருங்கிய நட்பில்லை என்றாலும் நல்ல பழக்கமே அவருடன். கணவனை இழந்து அரசாங்க வேலை பார்த்து மகளை படிக்கவைக்கும் அவரின் மீது அத்தனை மரியாதை இருந்தது மலருக்கு.
தன்னுடைய நிலையும் அதேதான் என்பதால் அவர் கடந்துவந்த இன்னல்கள் சமூகத்தை அவர் சமாளித்த விதம் என அனைத்தையும் அவள் அறிந்துகொண்டாள்.
அவருக்கும் மலரின் மீது மிகுந்த மதிப்பு. எப்பொழுதாவது ஷ்ராவனியை பற்றி விசாரிக்க கல்லூரி கட்டணம் சம்பந்தமாக பேச என போனில் பேசும் பழக்கமும் இருந்தது.
இருவருக்குள்ளும் நல்ல புரிந்துணர்வும் உண்டு என்பதால் அவர் தன்னை புரிந்துகொள்ள வேண்டுமே என மனம் அடித்துக்கொண்டாலும் நடந்தது என்னவென புரியாமல் தலைசுற்றி தான் நின்றாள்.
அதிலும் ஷ்ராவனியின் தற்கொலை முயற்சி மொத்தமாய் நிலைகுலைய செய்துவிட்டது. எப்படி தன் மீது தவறில்லை என புரியவைப்பது? என யோசிக்க யோசிக்க தலைவலித்தது.
“மலர்…” அனய்யின் அழுத்தமான குரலில் திரும்பி பார்த்தவள் அவனை கண்டதும் நொடியும் தாமதியாமல் பாய்ந்து சென்று கட்டிக்கொண்டு,
“நான் எதுவும் செய்யலை. ஆனாலும் யாரும் நம்பலை…”
அதுவரை அடக்கியிருந்த கண்ணீர் கணவனை பார்த்ததும் கரகரவென வெளியேற அனைவருமே இருவரையும் பார்த்தபடி இருந்தனர்.
அந்த நிமிடம் உணர்ந்துகொண்டாள் அவன் தனக்கு எத்துனை முக்கியம் என்று. தன் இதயத்தில் எந்தளவிற்கு ஆட்சி செய்கிறான் என்பதை. அவன் தன்னை முழுவதும் மனதால் ஆள தொடங்கிவிட்டான் என்பதை. இக்கட்டான இந்த நிலையில் அவனின் அருகாமையை தன் மனம் ஏன் நாடியது என்பதை.