கொண்டவன் துணை இருந்தால் எத்தனை பெரிய இடர்களையும் தாண்டிவிட முடியும் என்று முழுவதுமாக புரிந்துகொண்டாள்.
உயிரோடு உரசி சென்ற உணர்வுகள் அவனோடான உறவை எடுத்துச்சொல்ல அழகாய் புரிந்துகொண்ட தருணம் பெரும் உவகையாய் ஊற்றெடுத்தது உள்ளுக்குள்.
“ப்ச் மலர். ஷ்ஷ். போதும் அழுதது…” என அவளை பிரித்து எதிரில் நிறுத்தியவன்,
“அழறதை முதல்ல நிறுத்து. உன் மேல தப்பில்லைன்னு நீ தான் ப்ரூ பண்ணனும். இப்படி அழுதுட்டு நின்னா எதுவும் நடக்காது. என்ன செய்யபோற?…”
அனய்யின் கேள்வியில் வழிதெரியாத குழந்தையாய் விழித்தவள் அவனையே பார்க்க அவனின் விழிகளில் கொட்டிய ஆயிரமாயிரம் சக்திகள் மலரை தேற்றியது. கண்ணீரை துடைத்துக்கொண்டு அவனிடம் தலையசைக்க,
“தட்ஸ் குட்…” என அவளின் கன்னம் தட்டி சொல்லியவன் அங்கிருந்த ஒரு சேரை எடுத்துப்போட்டு அமர்ந்துகொண்டான். அவன் பேசியதும் நடந்துகொண்டதும் சேர்மனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
“ம்ஹூம், இது சரியில்லை மலர். இது நம்ம காலேஜ் விஷயம். இவர் உங்க ஹஸ்பன்ட் தான். ஆனா என்னோட பர்மிஷன் இல்லாம நீங்க அவரை அழைச்சது தவறு…”
அனய்யை பார்த்தபடி சேர்மன் சொல்ல அதை அனய் கண்டுகொண்டான் இல்லை. அவனின் பார்வை முழுவதும் வனமலரின் மீதே. என்ன செய்யவேண்டும் என்ன கேட்கவேண்டும் என்பதை வேகவேகமாக சிந்திக்க தொடங்கினாள் மலர்.
“மலர் இந்த நிமிஷம் உனக்கு நீ மட்டும் தான் துணை. இங்க உனக்கு சார்பா யாருமே இல்லைன்னு நினைச்சுக்கோ. உன்னை நீயே காப்பாத்திக்கோ. உன்னால முடியும்…” என சொல்லி அவளின் மொபைலை எடுத்து மேஜை மீது போட்டான்.
அதை எடுக்க ஜானகி வர சேர்மனோ அவரை ஒற்றை பார்வையில் நிறுத்திவைத்தார்.
“ஸார் எனக்கு சில கேள்விகள் இருக்கு. நான் கேட்கனும்…” என அவரும் தலையசைக்க,
“உங்களுக்கு என் மொபைல இருந்து தான் வீடியோஸ் போட்டோஸ் வந்ததுன்னு எப்படி தெரியும்?…”
“உங்க நம்பர் என்கிட்டே இருக்குதேம்மா…” ஷ்ராவனியின் தாய் சொல்ல அதில் தெரிந்த வேற்றுமையில் சுணங்கினாலும்,
“எப்போ அந்த மெசேஜ் வந்தது? ஐ மீன் டைமிங் தெரியனும்…”
அவர்கள் சொல்ல மலர் அந்நேரம் எங்கிருந்தோம் என யோசிக்க ரத்னா முன்வந்தாள்.
“மலர் நாம கேண்டீன் போய்ட்டு லதா மேடம் ரூம்க்கு போனோம்…” என வேகமாய் சொல்ல,
“கரெக்ட்…” என்று லதாவும் முன்வந்தார். அவரை என்னவென பார்க்க,
“நான் தான் ஸார் இவங்களை அழைச்சிட்டு ரியா மேம் ரூம்க்கு கூட்டிட்டு போனேன்…”
“வாட் ரியா ரூம்க்கா?…” ரியா சேர்மனின் மகள். அக்கல்லூரியின் அட்மிஷன் அக்கௌண்ட்ஸ் பார்த்துக்கொள்பவள்.
“ஆமா ஸார். அவங்கதான் இந்த வருஷ அட்மிஷன் பீஸ் டீட்டைல்ஸ் பத்தி கேட்டாங்க. அதான் அழைச்சிட்டு போனேன்…” லதா சொல்ல,
“ஸார், சிசி டிவி புட்டேஜ் வேணும்னா பாருங்க…” என்றபடி திலீபன் வந்தான்.
“எஸ் ஸார். என்னோட மொபைல்ல சார்ஜ் சுத்தமா இல்லை. நேத்து என் ஹஸ்பன்ட் கால் பண்ணினப்போ ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு. நான் ரத்னா மொபைல்ல இருந்து கால் பண்ணி அவருக்கு பேசிட்டு கேண்டீன் போய்ட்டோம். அடுத்து ரியா மேம் ரூம்க்கு. அப்போவும் மொபைல் என்கிட்டே இல்லை…”
மலர் சொல்ல சொல்லு சேர்மனுக்கு எதுவும் புரியவில்லை. வேறு யாரால் அனுப்பப்பட்டிருக்கும்? என அதை வேறு கண்டுபிடிக்க வேண்டும் என கோபமாக நினைத்தார்.
தலை சுற்றியது அனைவருக்கும். மலர் அனுப்பவில்லை. ஆனால் மலரின் மொபைலில் இருந்து வீடியோஸ் போயிருக்கிறது. எப்படி?
ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றனர். சேர்மனோ மலரையும் அனய்யையும் மாறி மாறி பார்த்தார்.
அதுவரை அமர்ந்திருந்தவன் எழுந்துகொள்ள அவனோடு சேர்மனும் எழுந்து நின்றார்.
“ஓகே இப்போ எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் மலர் மேல எந்த தவறும் இல்லைன்னு. அந்த கர்மத்தை என் வொய்ப் அனுப்பலைன்னு. யாரோ இந்த காலேஜ்ல தான் அவ மொபைலை வச்சு மிஸ்யூஸ் பண்ணியிருக்காங்க…” என அனய் சொல்ல,
“ஏதோ தவறான புரிதல். நாங்க அதுக்கு வருத்தப்படறோம். இந்த விஷயத்தை இனிமே நாங்க பார்த்துக்கறோம். மிசஸ் வனமலர் நீங்க உங்க சீட்க்கு போகலாம்…”
“வாட்? நான் ஏன் போகனும்? என் ஜாபை எப்பவோ ரிஸைன் பண்ணிட்டேன். இனி இந்த காலேஜ்க்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…” என்றவள்,
“தென், என்ன சொன்னீங்க என் மேல போலீஸ் கம்ப்ளைன்ட்டா? இப்போ நான் குடுக்கறேன் கம்ப்ளைன்ட்…” என சொல்ல,
“என்ன?…” என அதிர்ந்து பார்த்தார் ஜானகி.
“என் மேல அபாண்டமா பழி சொன்னதுக்காகவும், என் மொபைலை இங்க இருக்கிற யாரோ மிஸ் யூஸ் பண்ணினதுக்காகவும். என்னை மனவுளைச்சலுக்கு ஆளாக்கினதுக்காகும் உங்க எல்லோர் மேலையும் இந்த காலேஜ் மேலையும் நான் தான் கேஸ் போடறேன். மான நஷ்ட வழக்கு பதிவு செய்றேன்…”
படபடவென சொல்ல அனைவரின் முகமும் வெளிறிவிட்டது. எல்லோரையும் நிமிர்வாய் ஒரு பார்வை பார்த்தவள் அங்கிருந்து வெளியேற,
“இரு மலர். இன்னும் விஷயம் முடியலை. நீ கேட்டுட்ட. நானும் கேட்கனும் இல்லையா?…”
“மிஸ்டர் ஆதித்யன்…” சேர்மன் அழுத்தமாய் அழைத்தார்.
மற்றவர்கள் பார்வையில் அனய் என்பவன் நடிகன் ஆதித்யனே.
அவரை திரும்பி பார்த்தவன்,
“நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும் ஸார். அதை யார் செஞ்சதுன்னு நாங்க பேசி முடிவு செஞ்சு கண்டுபிடிச்சுப்போம். நீங்க கிளம்புங்கன்னு எங்களை அனுப்பிவைப்பீங்க. அதானே?…”
அவன் சொல்லியதை தான் அவரும் சொல்லவிருந்தார். அதை நக்கலுடன் அனய் கூறியதில் எரிச்சலுற்றவர்,
“அதே தான். புரிஞ்சதுக்கு நன்றி. நீங்க கிளம்பலாம்…” என சொல்லி வாசலை பார்த்தால் அங்கே சேத்தன் வேகமாய் உள் நுழைந்து அனய்யின் பின்னால் நின்றுகொண்டான்.
அவனின் தோற்றமும் முகத்தில் காட்டிய முறைப்பும் உடலில் காட்டிய விறைப்பும் அனைவரையும் இரண்டடி பின்னால் நகர்த்தியது. ஆனாலும் சேர்மனின் முறைப்பு மட்டும் குறையவில்லை.
“அவ்வளவு சீக்கிரம் நாங்க எப்படி விட்டுடுவோம்? பாதிக்கப்பட்டது என் வொய்ப். தவறே செய்யாம அவளை அக்யூஸ்ட் மாதிடி ட்ரீட் பண்ணியிருக்கீங்க. இதுக்கு காரணமானவங்க யாருன்னு எனக்கு தெரிஞ்சே ஆகனும். அதுவும் இல்லாம இங்க இருக்கிற மத்தவங்க எல்லோரும் என் வொய்ப்ட்ட மன்னிப்பு கேட்கனும். இது நடக்காம நான் எப்படி போறதாம்?…”
தன்னுடைய கல்லூரியில் தனக்கு முன்பே அமர்ந்துகொண்டு திமிராய் எடுத்தெறிந்து பேசியதும் இல்லாமல் வெளியேற சொல்லியும் கிளம்பாமல் தன் பேச்சை அவமதித்து, நாட்டாமை செய்யும் அவனை பார்க்க பற்றிக்கொண்டு வந்தது.
“இவன் என்ன எனக்கு கட்டளை இடுவது? நான் பேசாமல் இருப்பது…” என எதிர்த்துபேச நினைத்தாலும் ஏனோ வாய்திறக்க தோணவில்லை.
“நீங்க முதல்ல அமைதியா இருங்க ஸார். என்மேல கோபப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை…” என்றவன்,
“எங்க பக்கம் இருக்கிற ஒரே தவறு மலர் மொபைலை செக்யூர் செய்யாம அப்டியே விட்டது. லாக் பண்ணியிருந்தா இந்த பிரச்சனையே வந்திருக்காது…” என சொல்லி,
“திலீபன்…” என அழைக்க அவன் இன்னொருவனோடு உள்ளே வந்தான்.
“ஹலோ ஸார். நான் இந்த காலேஜ் ஸ்டூடன்ஸ் சேர்மன். அசோக்…”
அனய்க்கும் கல்லூரி சேர்மனுக்கும் பொதுவாக தன்னை அறிமுகப்படுத்திவிட்டு பேசினான்.
“முதல்ல நான் தெளிவு படுத்தக்கறேன். உங்க எல்லோருக்கும் வந்த அந்த வீடியோஸ் போட்டோஸ் இப்ப எடுக்கப்பட்டதில்லை. இரண்டு வருஷங்களுக்கு முன்னால் காலேஜ் ல இருந்து பைவ் டேய்ஸ் ட்ரிப் போனப்போ எடுத்தது. அப்போ மலர் மேம் இங்க வொர்க் பண்ணவே இல்லை…”
“அந்த ட்ரிப் ல நமச்சிவாயம் சாரும் இன்சார்ஜ். அங்க லவ்வர்ஸ் கொஞ்சம் க்ளோஸா இருந்தாங்க. அப்போ தான் எடுத்திருக்கார் இதை எல்லாம்…” சேர்மனை பார்க்காமல் மிக சங்கடப்பட்டே அசோக் சொல்ல அந்த ட்ரிப் இன்சார்ஜில் லதாவும் ஒருவர்.
“உங்களுக்கு தெரியாமலா?…” என்பது போல சேர்மன் எரிக்கும் பார்வையை வீச பார்க்க அவரும் தலைகவிழ்ந்தார்.
உண்மையில் அவருக்கு தெரியவே தெரியாது என்பது தான் உண்மை. அவரின் பார்வையில் எந்த மாணவ மாணவிகளும் அப்படி நடக்கவே இல்லை. ஒரு வேலை தான் தான் சரியாக கவனிக்கவில்லையோ என வெட்கிபோனார்.
அனைவரும் மலரையும் சேர்மனையும் அந்த பையனையும் மாறி மாறி பார்த்தனர். என்ன பதில் சொல்வதென தெரியாமல் மௌனமாய் நின்றனர்.
“நாங்க காலையிலேயே பேசியிருக்கனும். சாரி லேட் பண்ணினதுக்கு. ப்ராப்ளம் என்னன்னு தெரியவும் எங்க பசங்க எல்லோரும் சேர்ந்து விசாரிச்சதுல *** டிபார்ட்மென்ட் பையன் தான் இந்த வேலையை பார்த்திருக்கான். அதுக்கு ப்யூனும் துணை…” என சொல்லி ப்யூனை இழுத்துவர சொல்ல,
“அய்யா மன்னிச்சிடுங்க. அந்த சந்துரு தம்பி தான் நேத்து இந்த ரூம்க்கு ரத்னா மேடத்த பார்க்க வந்துச்சு. ஏதோ பைல் கொண்டு வந்துச்சு. அந்நேரம் போனு சார்ஜ்ல இருக்கவும் என்னவோ எடுத்து பண்ணுச்சு. நான் கூட வேணா சொன்னேன். கேட்கலை. என்னை மிரட்டி பணம் நிறைய குடுத்துட்டு போய்டுச்சு. யார்க்கிட்டயும் இதை சொல்ல எனக்கு பயம்…”
ப்யூன் மன்னிப்பை கேட்டு சேர்மனின் காலில் விழுந்து கதறி அழ அனைவருமே ஸ்தம்பித்து போயினர்.
“சந்துருவை அழைச்சிட்டு வர பசங்க போய்ருக்காங்க. செய்யறதையும் செஞ்சிட்டு ப்ரெண்டோட ரூம்ல பதுங்கி இருக்கான். ரூம் இங்க பக்கத்துல தான்…” என சொல்லி முடிக்க சந்துருவை இழுத்து வந்தனர் அடுத்த ஐந்து நிமிடத்தில்.
அவனை இரண்டடி அடித்ததுமே உண்மையை ஒப்புக்கொண்டு அனைத்தையும் கடகடவென கொட்டிவிட்டான்.
“ஆமாம் ஸார். நான் தான் அனுப்பினேன். ஷராவனியும் நானும் காலேஜ் பர்ஸ்ட் இயர்ல இருந்தே லவ் பண்ணோம். நல்லாதான் போய்ட்டு இருந்தது எங்க லவ். இடையில மலர் மேடம் வந்து ஷ்ராவனிக்கு என்ன சொன்னாங்களோ தெரியலை. அவ சில மாசமா என்னை அவாய்ட் செய்ய ஆரம்பிச்சுட்டா…”
“நானும் எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் திரும்பி பேசவே மறுத்துட்டா. அவ அம்மா ரொம்ப கஷ்டப்படறாங்களாம் அவளை படிக்க வைக்க. அதனால அவங்க மனசு கஷ்டப்படற மாதிரி நடந்துக்க மாட்டாளாம். என்னோட லவ் வேண்டாம்னு சொல்லிட்டா. எனக்கு ரொம்ப ஷாக் ஆகிடுச்சு. மலர் மேடம் சொல்லித்தான் அவ மாறிட்டான்னு எனக்கு அவங்க மேலையும் கோவம்…”
“ஆனாலும் என்னால ஷ்ராவனியை மறக்கமுடியலை. அவங்க என்னையும் கூப்பிட்டு எனக்கு புத்தி சொன்னாங்க. திரும்ப அவளை டிஸ்டர்ப் செஞ்சா காலேஜ்ல இருந்து ஆக்ஷன் எடுப்பேன்னு வார்ன் செஞ்சாங்க. என்னால ஷ்ராவனியை நல்லா பார்த்துக்க முடியாதுன்னு சொன்னாங்க. என்னால முடியும்னு அவங்களுக்கு தெரியலை…”
மலரை பார்த்துக்கொண்டே அவன் சொல்ல சொல்ல அனைவரும் இன்னும் என்ன சொல்லப்போகிறான் என பார்த்தனர்.
“அப்போ தான் நம்ம ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் நமச்சிவாயம் ஸார் வீட்டுக்கு போய்ருந்தேன் ஒரு ப்ராக்டீஸ் விஷயமா ப்ரென்ட் கூட. அப்போ ஸார் லேப்டாப்ல எதோ ப்ராப்ளம்னு என்னை பார்க்க சொன்னாரு. அந்த நேரம் போன் வர அவர் பிசியாக நான் என்னனு பார்த்தப்போ தான் சில போல்டர்ல நம்ம காலேஜ் பசங்க பொண்ணுங்க வீடியோஸ் போட்டோஸ் இருந்தது…”
என்னதிது? தோண்ட தோண்ட பூதம்? என்றுதான் அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.
“எனக்கு முதல்ல ஷாக் கூட ஆகிடுச்சு. கோவமும் கூட. அதுல என்னோட ஷ்ராவனியோட க்ளிப்பிங்ஸ் இருந்துச்சு. எனக்கு சட்டுன்னு ஒரு ஐடியா. ஷ்ராவனியும் வேணும். பழி மலர் மேடம் மேல…” அவனை சொல்லிமுடிக்க விடாமல் பளாரென அறைந்தான் அனய்.
“ஸார் ஸார் ப்ளீஸ் ஸார்…” என கதற,
“படிக்கிற வயசுல லவ் பண்ணினது சரியில்லைன்னு சொல்றதுக்கெல்லாம் பழிவாங்க கிளம்பினா உன் பேரன்ட்ஸ தான் முதல்ல பழி வாங்கனும். அவங்க தான் முதல்ல புத்தி சொல்வாங்க வேண்டாம்னு…”
“அதை கூட விடுடா. உனக்கு சொல்லித்தர வாத்தியார் தப்பு செஞ்சிருக்கான். அதுவும் உன் கூட படிக்கிற பொண்ணுங்களை தப்பா படம் புடிச்சு வச்சிருக்கான். அதை தெரிஞ்சும் நீ உன்னோட சுயநலத்துக்காக அதை யூஸ் பண்ணியிருக்கியே நீயெல்லாம் என்ன மனுஷன்?…” அனய் மீண்டும் மீண்டும் அடிக்க அதில் தொய்ந்து கீழே விழுந்தான் அவன்.
“விடுங்க. விடுங்க. முதல அவனை விடுங்க…” என மலர் அனய்யை தன் பக்கம் இழுத்து சந்துருவை தண்ணீர் தெளித்து எழுப்பினாள். அதில் தெளிந்தவனுக்கு தண்ணீர் கொடுக்க குடித்துவிட்டு,
“ஸாரி மேடம், நான் தெரிஞ்சு தான் பண்ணினே. அதுவும் மத்த ஸ்டூடன்ஸ் க்ளிப்பிங்ஸ் அவங்க பேரன்ட்ஸ்க்கு அனுப்பிட்டு எங்களோடதை மட்டும் நெட்ல எல்லோரும் பார்க்கிறதா போட்டது தப்பு தான். எனக்கு ஷ்ராவனி வேணும்னு அப்டி பண்ணினேன். இனி நான் மட்டும் தானே அவளை மேரேஜ் பண்ணிக்க முடியும்னு பண்ணினேன்…” அழுதுகொண்டே அவன் சொல்ல,
“முதல்ல அழறதை நிறுத்து. இதுவே உன் வீட்டு லேடீஸ் சம்பந்தப்பட்ட வீடியோ இருந்தா இப்படி யாரும் பார்க்கட்டும்னு விட்டுட்டு வந்திருப்பியா? இந்த காலேஜ்ல நல்லா படிக்கிற பையன் நீ. எத்தனை கேர்ள்ஸ் உன்னை அண்ணான்னு சொல்றாங்க. நீ பண்ணினது உனக்கே சரியா படுதா?…”
“இல்லை மேடம். நான் லேப்டாப்பை அப்டியே விட்டுட்டு வரலை. என்கிட்டே தான் இருக்கு. நான் ஹாஸ்டலுக்கு வரதுக்கு முன்னாடியே அதை ப்ரெண்ட் வீட்ல குடுத்து வச்சிருக்கேன். ஸார் கேட்டதுக்கு பஸ்ல வரப்போ மிஸ் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டேன். அவரும் கம்ப்ளைன்ட் குடுத்து வச்சிருக்கார் ஸ்டேஷன்ல…”
அனய் திரும்பி சேத்தனை பார்க்க அவனும் புரிந்ததற்கு அடையாளமாய் விரைந்து செயல்பட ஆரம்பித்தான்.
அடுத்த ஒருமணி நேரத்தில் லேப்டாப் வரவழைக்கப்பட்டு நமச்சிவாயம் கைது செய்யப்பட்ட தகவல் வந்த பின் தான் அங்கிருந்து மலரை அழைத்துக்கொண்டு கிளம்பினான் அனய்.
விசாரணையிலும், லேப்டாப்பில் கிடைத்த வீடியோஸ் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு முன்பிருந்து எடுக்கப்பட்டிருந்தது. கல்லூரி மட்டுமில்லாது வெளி இடங்களிலும் எடுக்கப்பட்ட வீடியோஸ் கிடைக்க நமச்சிவாயத்தை சக்கை என அடித்து துவைத்துவிட்டனர் காவல் துறையினர்.
கல்லூரியே இந்த பிரச்சனையை கண்டுபிடித்து நமச்சிவாயத்திற்கு தண்டனை வாங்கி தந்ததை போல வெளியில் காண்பித்து கல்லூரியின் பெயரை காப்பாற்றி கொடுத்துவிட்டான் அனய்.
சேர்மனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அனய்க்கு நன்றி சொல்லக்கூட தோன்றாமல் ஜானகியை காய்ச்சி எடுத்துவிட்டார். நிர்வாகத்தின் பொறுப்பிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் ஜானகியை நீக்கிவிட்டு அந்த பொறுப்பில் மகளை நியமித்துவிட்டார்.
“இனியாவது தவறு நடந்தா அதுக்கு உண்மையான காரணகர்த்தா யாருன்னு கண்டுபிடிங்க. கிடைச்சவங்க மேல எல்லாம் பழியை போட்டு கடமையை தட்டிக்கழிக்க பார்க்காதீங்க…” என சொல்லிவிட்டே சென்றான்.
அனய் சொல்வது புரிந்தாலும் மலரை மீண்டும் வேலைக்கு அழைக்கவோ அவர்களிடம் வருத்தம் தெரிவிக்கவோ சேர்மனின் மனநிலை இடமளிக்கவில்லை. இறுக்கமாகவே இருந்தார்.
ஷ்ராவனியின் தாய் மலரிடம் பேச வருகையில் அவரை விலக்கி விட்டு மலரை கூட்டிவந்துவிட்டான். ஒரு வார்த்தையும் பேச அனுமதிக்கவில்லை அங்கிருந்தவர்களை.
திலீபன், ரத்னா, லதா மூவருக்கும் நன்றி சொல்லி அசோக்கிற்கும் ஒரு நன்றியை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டனர்.
காரில் வரும் வழியெல்லாம் மலர் வெளியே பார்த்தபடி அமர்ந்திருக்க அவளை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அனய் காரை செலுத்தினான்.
“எதாச்சும் கேட்கனுமா?…” என மலர் அவன் புறம் திரும்பாமலேயே கேட்க,
“கண்டிப்பா கேட்கனும்…” என்றான் அவசரமாய்.
“அப்போ கேளுங்க…” என்று அவனின் பக்கமாக நன்றாய் திரும்பி அமர்ந்தாள்.
“இல்ல நீ ஏன் என்னை அங்க வச்சு கட்டிப்புடிச்ச?…”
அவனின் கேள்வியில் திகைத்துப்போய் பார்த்தாள்.
“பதில் சொன்னாலே ஆச்சு…” என்பதை போல காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு அவனும் அவளை போலவே நன்றாய் திரும்பி அமர்ந்து பார்த்தான்.
புன்னகை ஜீவிக்கும்…