புன்னகை – 17
“என்ன? என்ன கேட்டீங்க?…”என மீண்டும் கேட்க அவளின் பதட்டமான பேச்சில் அனய்யின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“இல்ல என்னை அங்க எல்லோர் முன்னாடியும் ஏன் கட்டிப்புடிச்சன்னு கேட்டேன்…”
விழிகளில் குறும்பு கூத்தாட தன்னையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டே மீண்டும் கேட்ட கணவனின் முகத்தை ஒரு நொடிக்குமேல் காணமுடியாமல் முகம் திருப்பிக்கொண்டாள் வனமலர்.
“என்ன பதிலே இல்லை. சொல்லு அதுக்கு என்ன அர்த்தம்?…”
“ப்ச், இதுக்கெல்லாமா அர்த்தம் கண்டுபுடிப்பாங்க? என்னவோ தோணிச்சு. அதான். விடுங்க. முதல்ல வீட்டுக்கு போவோம்…”
பிடிவாதமாய் முகத்தையும் மனதையும் மறைத்துக்கொண்டு அவள் பேச ஆயாசமாய் இருக்கையில் சாய்ந்தமர்ந்தான் அனய்.
வண்டியை கிளப்பும் மனமின்றி கண்களை சோர்வுடன் மூடிக்கொண்டவனை திரும்பி பார்த்த வனமலரின் மனதிற்குள் ஏதோ ஒன்று உருகியது.
சில நொடி அவனையே பார்த்தவள் சற்றும் யோசியாமல் நகர்ந்தமர்ந்து அவனின் தோள்களில் தலைசாய்த்துக்கொண்டாள். கண் திறவாமலேயே அவளை உணர்ந்துகொண்டவன் அவளை வளைத்து தன்னோடு இறுக்கிக்கொண்டு,
“முடியலைடி. இன்னும் எத்தனை நாளைக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம்னு எனக்கு தெரியலை. இன்னும் உன் மனம் திறக்க எத்தனை நாள் வேணும்னாலும் காத்திருக்கலாம்னு ஒரு மனசு சொல்லுது. இன்னொன்னு நீ இப்பவே வேணும்னு பிடிவாதம் பிடிக்குது…”
அவனின் பேச்சுக்களில் தன் மீதான தேடலில் எந்தளவுக்கு போராட்டம் நிறைந்திருக்கிறது என்று முழுமையாக உணர்ந்துகொண்டாள்.
“இன்னும் என்னை எத்தனை நாள் படுத்த போற? பேசேன்டி…” அவளின் அமைதி இன்னமும் நெஞ்சறுத்தது. அதில் கோபம் கொண்டவன்,
“ப்ச், தள்ளிப்போ மலர்…” அவளை தன்னிலிருந்து பிரிக்க முயல அவளோ நகர்வேனா என்பதை போல அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
அவனிடம் தன் மாற்றத்தை வாய் வார்த்தையாக சொல்லவில்லை தான் ஆனாலும் அவனின் தவிப்பை உணராமல் இல்லை.
ஆனாலும் கண்டுகொள்ளாமல் இருந்தவள் சற்றுமுன் தான் உணர்ந்த காதல் உணர்வின் கனம் தாளாமல் தள்ளாட இவனின் கேள்வி வேறு அதற்கு தூபம் போட அதற்கு மேலும் முடியாமல் தோள் சாய்ந்துவிட்டாள்.
சில நேர தவிப்பே இத்தனை சோதனையாக இருக்கிறதே? இவனின் இத்தனை வருட காதலுக்கும், காத்திருப்பிற்கும் எத்தனை மனோபலம் வேண்டும்? நினைக்கையில் பிரம்மிப்பாகத்தான் இருந்தது.
போதும் இந்த தவிப்பு என எண்ணிவிட்டாளோ?
“என்னை ரொம்ப சோதிக்கிற மலர். முடியலை. விடேன்…”
அவனின் அரற்றல் அவளின் மனதை பிசைய அனய்யின் நெஞ்சை நீவிவிட இவன் தடுக்க,
“ப்ச், பேசாம இருங்க…” அவனை அதட்டியவள் சுகமாய் சாய்ந்துகொள்ள அவளின் அனுசரணையில் சலித்தவன்,
“இப்ப என்னதான் சொல்ல வர? எழுந்துக்கோ…”
“மாட்டேன்…” என்று இறுக்கிக்கொள்ள,
“சொல்லும் போதே கேட்டுடு. இல்லைனா…”
“இல்லைனா?…” ராகமாய் மலர் கேட்க அவளின் மனதோ சொல்லமுடியாத உவகையில் திளைத்து தித்தித்திருந்தது.
“ஹ்ம், விளைவு சொல்லிக்கிறது போல இருக்காது. அதுவும் உன் விஷயத்துல நான் ரொம்பவே மோசமானவன். அப்புறம் இது போச்சு அது போச்சுன்னு கத்தகூடாது…” முடிந்தளவுக்கு குரலை கடுமையாக்க முயன்றாலும் அது குழைந்தே கிடந்தது.
“அப்படியா? எனக்கு இவ்வளோ நாளா தெரியாதே?…” அவனை சீண்டிவிடும் நோக்கில் லேசாய் தலை உயர்த்தி பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“தெரிய வச்சுடட்டுமா? …” கண்கள் மின்ன கேட்டவனின் விழிகள் காட்டிய பாவத்திலும், ஜாலத்திலும் மிக மோசமாய் தொலைந்துகொண்டிருந்தாள் மலரவள்.
வெட்கப்பூக்கள் கன்னங்களில் கோலமிட உள்ளத்தில் ஒரு குறுகுறுப்பு தோன்ற வேகமாய் அவனிடமிருந்து விலகி அமர அவனும் அதை அனுமதித்தான். இருவரின் மனநிலையும் உணர்ச்சிமிகுதியில் சொல்லொண்ணா மகிழ்ச்சியில் கூத்தாடியது.
பின்னந்தலையை அழுத்தமாய் கோதிக்கொண்டவன் முகமோ மலர்ந்து விகசித்தது. அத்தனை நிறைவு மனதிற்கு. ஒரு ஜென்மம் வாழ்ந்தே பார்த்துவிட்ட ஒரு திருப்தி நெஞ்சமெங்கும் பரவியது.
அவள் பேசுவாள் என இவன் காத்திருக்க ஜன்னல் புறம் திரும்பியவளுக்கிவனின் முகத்தை பார்க்கும் சக்தியின்றி கார் கதவில் தலை சாய்த்திருந்தாள்.
அவளுக்கு ஒன்றுமட்டும் தெளிவாக விளங்கியது. சரவணன் மீது எப்போதும் இதுபோன்ற ஒரு உணர்வை உணர்ந்ததில்லை என்று. அதில் அத்தனை நிம்மதி அடைந்தாள் என்றால் அது மிகையில்லை.
“எனக்கு மாமா மேல் என்னைக்கும் காதலிருந்ததில்லை. தேங்க் காட். காதல்னா எப்படி இருக்கும்னு இதோ இப்பதான் என்னால பீல் பண்ண முடியுது. இந்தளவுக்கு என்னால சந்தோஷப்பட முடியுது. இந்த காதலுக்கு நான் தகுதியானவளா?”
அவளின் மாற்றங்களை ஒவ்வொன்றாய் இப்பொழுது அசைபோட்டுக்கொண்டிருந்தாள்.
என்றிலிருந்து இந்த மாற்றம் தனக்குள்? எத்தனை யோசித்தும் பயனில்லை அவளுக்கு.
வருணிக்காக என அவனின் வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவள் மனதை இரும்பென இறுக்கி வைக்க அவளறியாமலேயே அவனின் பேச்சுக்களிலும் செயல்களிலும் கொஞ்சம் கொஞ்சமாய் இளக துவங்கி இருந்தாள்.
அனய்யின் அருகாமை அவளுக்கு கொடுத்த உணர்விற்கு பெயர் இதுவரை பாதுகாப்பென மட்டும் நம்பியவள் இன்றைக்கு அதன் அர்த்தத்தை முழுவதுமாய் உணர்ந்துகொண்டாள்.
அதிலும் இன்றைய கசப்பான நிகழ்வும், அதை தொடர்ந்து அனய்யை தான் தேடிய விதமும் அவனை கண்டதும் உண்டான உணர்வும் அவனின் அணைப்பு தந்த இதமும், பலமும் வார்த்தைகளால் வடிக்கமுடியாதது.
“இது காதல் தான். எஸ். நானும் லவ் பன்றேன் என் மேல் உயிராய் இருப்பவனிடம்.”
தன் குழந்தைக்கென ஆரம்பித்து இருவரிடத்திலும் புரிதலுடன் கூடிய தோழமை உருவாகி பின் எந்த கணத்தில் அது காதலாக உருவெடுத்தது என்றால் நிச்சயம் பதிலில்லை மலரிடம்.
“எந்த வித நிபந்தனையோ கட்டாயமோ இல்லாமல் நான் அனய்யை விரும்பறேன். ஐ லவ் ஹிம். ஐ லவ் சோ மச்” நினைக்கையில் சிலிர்த்துத்தான் போனாள்.
“இத்தனை வயதிற்கு பின் காதலா?” மனசாட்சியே அவளிடம் கேட்க,
“ஏன் கூடாதா? காதலுக்கு வயது வரம்பா?. இல்லை தான் விரும்புவது தான் தவறா?” கவலையோடு அதை கடந்தாள். அந்த இடத்தில் தான் குழம்பவும் ஆரம்பித்தாள்.
ஆனால் அதை அனய்யிடம் சொல்லத்தான் பெரும் தயக்கம். இன்றில்லை என்றுமே வாய் வார்த்தையாக தன் காதலை அவனிடம் சொல்ல முடியுமா என்றால் தெரியாது தான்.
ஏற்கனவே திருமணமாகி அவனுடன் இரண்டு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவள் என்னும் கடந்தகாலம் இப்பொழுது அவளின் கண்முன்னால் விரிந்தது.
“ஏதாவது ஒரு சூழ்நிலையில் அனய் தன்னிடம் அதை சொல்லி காண்பித்துவிட்டால்?” அந்த நினைவு சற்று முந்தைய நிமிடங்களில் அவனோடான நெருக்கத்தை மறக்கடித்தது.
தன் எண்ணம் பைத்தியக்காரத்தனம் என்று புரிந்தாலும் ஏனோ மனதில் தோன்றும் அந்த பிரம்மையை ஒதுக்கி தள்ள முடியவில்லை. அவனின் உண்மையான காதலை பதம் பார்க்க ஆரம்பித்தது.
சரவணன் மீதுதான் வைத்திருந்த அன்பும் உண்மை. இன்று அனய்யின் மீது வைத்திருக்கும் காதலும் உண்மை. தான் யாருக்குமே உண்மையாக இல்லையோ?
தான் என்ன மாதிரியான பெண்? நல்ல பெண் இல்லையோ? இதை யாரேனும் சொல்லி காண்பித்து பரிகாசமாய் பேசிவிட்டால்?
சரவணன் இறந்து அனய்யின் தாலியை வாங்கிக்கொண்ட சில நாட்களிலேயே அவனின் காதலை ஏற்று தானும் அவனை காதலித்து நினைக்க நினைக்க உடல் நடுங்கியது.
அந்தளவிற்கு பலகீனமானவளா நான்? தன்னையே நிந்தித்துக்கொண்டாள்.
அப்போ சரவணனோடு தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? புரியாமல் குழம்பினாள்.
இந்த காதல் ஏன் தனக்கு காலம் கடந்து வந்தது? அனய்யின் அன்பையும் காதலையும் தான் புரிந்துகொள்ள தவறியதால் இன்றைக்கு இப்படி ஒரு நிலையில் நின்று தவிக்க வைக்கிறதே?
சற்று நிமிடத்திற்கு முந்தையை இனிமையை தானே கலைத்துவிட்டதை போன்ற பிம்பம் அவளை மிரள செய்தது. இனி ஒவ்வொரு நாளும் தனக்கு சோதனை தானோ என்றெண்ணி அஞ்சினாள்.
கடந்தகாலத்திற்கும் நிகழ்காலத்திற்குமிடையே கிடந்து அல்லாட ஆரம்பித்தவள் கண்களில் கண்ணீர் கரகரவென இறங்க ஆரம்பித்தது.
தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவளின் முகமாறுதல்களை நிதானமாக உள்வாங்கிக்கொண்டிருந்தான் அவளின் மனம் கவர்ந்தவன். அவளின் சிந்தனையை கலைக்காமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
மலரின் மனநிலையும் இப்பொழுது அவளின் எண்ணங்களையும் கண்ணீரையும் அவள் சொல்லாமலே உணர்ந்துகொண்டவன் அவள் தோள் தொட அனய்யின் முக பார்க்காமல் மீண்டும் தோள் சாய்ந்துகொண்டாள்.
“மலர்…” அவனின் மென்மையான அழைப்பு அவளின் உயிர் தீண்டி உருகச்செய்தது.
அனய்யின் அனுசரணையில் மொத்தமாய் துவண்டவள் கதறி அழ ஆரம்பித்திருந்தாள்.
“ஏன்டா உன் காதலால என்னை சாகடிக்கிற? நான் உன்னை வேண்டாம்னு மறுப்பு சொன்னப்போவே உன்னை புரிய வைக்க முயற்சி செய்திருக்கலாம்ல. இப்ப போராடி என்னை கல்யாணம் செய்துக்கிட்டவன் அப்போவே என்னை தூக்கிட்டாவது போய் என் கழுத்துல தாலி கட்டி உன் காதலை உணர வச்சிருக்கலாம்ல…”
“இல்லைனா நான் எக்கேடோ கெட்டு போறேன்னு என்னை மறந்துட்டு உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிருந்திருக்கலாம்ல அப்டின்னு இப்ப கூட என்னால சொல்ல முடியலை. அந்தளவுக்கு இப்ப நீ என் மனசுல ஆழமா பதிஞ்சு போய்ட்ட. நீ ஏன் என்னை விட்டுட்டு போன? எதுக்கு விலகி நின்ன?…”
“இதுதான் உன்னோட உண்மையான காதலா? இவ்வளவு தான் உன் காதலோட லட்சணமா? நீ எல்லாம் என்ன காதலன்? நீ விரும்பின பொண்ணை இன்னொருத்தனுக்கு விட்டுக்கொடுத்துட்டு அப்படி என்ன உனக்கு தியாகி பட்டம் வேண்டிக்கிடக்கு?. என்னை இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கிட்டியே? ஏன்டா?…”
“இப்போ இப்படி ஒரு நிலையில் நான் இல்லைனா இப்பவும் வராம தான போய்ருப்ப? அப்போ என்னை பரிதாபப்பட்டுதான் கல்யாணம் செஞ்சுட்டியா நீ? காதலிச்ச பொண்ணுக்கு வாழ்க்கை குடுப்போம்னு இப்பவும் தியாகி பட்டம் வாங்கலாம்ன்ற முடிவோட தான் என்னை கட்டிக்கிட்டையா?…”
தனக்கு ஏற்பட்ட வலியை விட அவனுக்கு அதிக வலியை தந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் இன்றி மடை திறந்த வெள்ளமாக வார்த்தைகளை கொட்டிக்கொண்டிருந்தாள்.
அவன் விலகலுக்கு தானும் தன் வார்த்தைகளும் மட்டுமே காரணம் என்பதை மறந்துவிட்டிருந்தாள் மலர். அவனின் மனதை கொன்று கூறுபோட்டு அவனை அங்கிருந்து அனுப்பியது தான் என்பதை நினைவில் கொள்ளவே இல்லை அவள்.
இன்றைய தன் போராட்டத்தையும் வேதனையையும் மட்டுமே மனதில் வைத்து அவனிடம் புகார் வாசிக்க அவளின் பேச்சில் கலங்கிவிட்டான் கணவனவன்.
இப்பொழுது அவளுக்கு தேவை தன் அரவணைப்பும் ஆறுதலும் மட்டுமே என செயலாற்றினான்.
அவனின் ஆறுதலான அணைப்பு மேலும் வலியை தர அவனின் மார்பில் முடிந்தமட்டும் அடிக்க ஆரம்பித்தாள். அவளின் அடியை தடுக்காமல் வாங்கிக்கொண்டவன் மலரின் பேச்சில், அவள் சொல்லிய குற்றசாட்டில் அதிர்ந்து தான் போனான்.
அவளை வாய்விட்டு அழ விட்டவன் மனதிற்குள் அழுது கரைந்தான்.
“அவள் சொல்வதும் சரிதானே? அவளே வேண்டாம் என்று சொன்னாலும் தான் அவளை விட்டுக்கொடுத்திருக்க கூடாதோ? எத்தனை பெரும் தவறு செய்துவிட்டேன். நான் எல்லாம் என்ன காதலன்?” உயிர் மறுகிப்போனான்.
முதலில் அடித்து அழுதவள் பின் அவனை கட்டிக்கொண்டு தேம்ப அவளின் தலையை வருடியவன் நிறுத்தவே இல்லை. ஒரு வார்த்தையும் பேசவும் இல்லை. கிட்டத்தட்ட ஒருமணிநேரத்திற்கும் மேல் காரில் அமைதி நிலவ கண்களை துடைத்துக்கொண்டு அவனின் முகம் பார்த்தாள்.
“என்னடா?…” ஒட்டுமொத்த கனிவும் அந்த ஒற்றை வார்த்தையில் கொட்டிக்கிடக்க,
“ரொம்ப பேசிட்டேன்…” முணுமுணுப்பாய் விழி தாழ்த்தி கூற அவனின் முகம் மென்மையுற்றது.
“சோ வாட்?…” சிறு புன்னகையோடு அவன் கேட்க அதில் மீண்டும் அவனை பார்த்தாள்.
அந்த ஒற்றைப்புன்னகை அத்தனை நேரமிருந்த வலியையும் ரணத்தையும் இலகுவாக்குவதை உணர்ந்துகொண்டவள் அவனிடமிருந்து விலக முயன்றாள்.
“வீட்டுக்கு போலாம். காரை எடுங்க…” அவனின் அணைப்பிலிருந்து விடுபடமுயன்றபடி.
“போலாம் போலாம்…” அவனோ விடாப்பிடியாக காரை எடுப்பேனா என்பதை போல சட்டமாக அமர்ந்திருந்தான்.
“ப்ச், எனக்கு வருணியை பார்க்கனும். போகனும்…” சிறுபிள்ளையென சிணுங்கலோடு மலர் சொல்ல அவனின் மனநிலை கொஞ்சம் மாறட்டும் என்று பிடிவாதமாய் அமர்ந்திருந்தான்.
அவனிடமிருந்து விலக அவனோ விடாமல் பிடிக்க மீண்டும் ஒரு மோனநிலைக்குள் சிலபலநிமிடமாக இருவரும் சஞ்சரிக்க அனய்யின் போன் அசந்தர்ப்பமாய் இசைத்து அவர்களுக்கு இடையூறு விளைவித்தது.
மொபைலை எடுத்து பார்க்க ஆண்டாளிடமிருந்து தான் அழைப்பு வந்திருந்தது.
“அம்மா தான் கூப்பிடறாங்க…”
“என்னை விட்டுட்டு பேசுங்க. எவ்வளோ நேரம் தான் இப்படி உங்க மேல சாஞ்சே இருக்கறது? எனக்கு அன் ஈஸியா ஃபீல் ஆகுது…”
“பரவாயில்லை…” என்றவன் தாயிடம் பேச ஆரம்பித்தான்.
பேசி முடிக்கும் வரைக்கும் அவளை விடாமல் தன் கை வளைவிற்குள் வைத்திருந்த அவனின் பிடிவாதத்தை அவ்வளவு பிடித்திருந்தது அந்த தருணத்தில்.
“இந்த பிடிவாதம் தானே இப்பொழுது தன்னை இவனின் மனைவியாக்கி இருக்கிறது. இந்த பிடிவாதம் தான் விலக சொன்ன நிமிடம் எங்கு ஓடி ஒளிந்துகொண்டது?. அன்று ஏன் தன்னை விட்டுக்கொடுக்க முடியாதென இவன் பிடிவாதம் பிடிக்கவில்லை?” என மீண்டும் மனம் சுணங்க ஆரம்பித்தது.
அனய்யின் மேல் காதல் கொண்ட மனமோ மற்ற எதையும் யோசியாதே, இந்த நிமிடம் உனதுடையது. அதை மட்டும் அனுபவி என ஆசை காட்டியது. புத்தியோ பழைய நினைவுகளை சுட்டிக்காட்ட மல்லுக்கட்டியது.
எங்கே தள்ளி அமர்ந்தால் நகர்ந்து நிற்கும் நினைவலைகள் தன்னை சுருட்டிக்கொள்ளுமோ என அஞ்சி அவனை விட்டு விலக மறுத்து அவனோடு ஒண்டினாள்.
பேசி முடித்தவன் மலரை நிமிர்க்க அவளோ விழிமூடி சாய்ந்திருந்தாள்.
“ப்ச் மலர், என்னாச்சு? அம்மா வீட்டுக்கு வர சொல்றாங்க. கிளம்பனும். கொஞ்சம் உன் சீட்ல சாஞ்சுக்கயேன்…” அவனின் கெஞ்சலுக்கு காதுகொடுக்காதவள்,
“பரவாயில்லை, இப்படியே ஓட்டலாம். எடுங்க…” முரண்டுபிடிக்க,
“கஷ்டமா இருக்கும்டா…”
“நான் உங்களுக்கு கஷ்டமா?…” அவளின் குரலே அவனை கலவரப்படுத்த,
“ஓ காட்…” என உள்ளுக்குள் புலம்பியவன்,
“நான் உனக்கு கஷ்டமா இருக்குமேன்னு பார்த்தேன். நீ தானே சொன்ன உனக்கு அன்ஈஸியா இருக்குதுன்னு…”
அவளுக்கு புரிய வைக்கவென அவன் கூற மட்டுப்பட்டிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுத்தது.
“நான் வேண்டாம்னு சொன்னா உடனே விலக்கி வச்சிடனுமா? இப்படித்தான் அன்னைக்கு நான் வேண்டாம் போய்டுன்னு சொல்லவும் என்னை விட்டு விலகிட்டு இன்னைக்கு இந்த நிலைமைக்கு என்னை ஆளாக்கிட்ட. அப்போ, அப்போ இப்ப நான் வேண்டாம்னு சொன்னா கூட என்னை விட்டு போய்டுவ தானே?…”
பேசிக்கொண்டே அவனிடமிருந்து சரேலென விலகியவள் முகம் மூடி கதற செய்வதறியாமல் திகைத்துதான் போனான் அனய். மனமோ சொல்லொண்ணா துயரில் தத்தளித்தது.
சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டவள் தண்ணீர் பாட்டிலை தேட அதை எடுத்து கொடுத்தவன் அவள் குடித்து முடிக்கும் வரை பார்த்தபடியே இருந்தான். அழுது சிவந்த விழிகளோடு அவனை ஏறிட்டு,
“இன்னும் என் முகத்துல என்ன இருக்கு? காரை எடுக்கறீங்களா?…” எனவும் அமைதியாக பார்த்தான் அனய்.
“என்ன?…” என்றாள் முறைத்துக்கொண்டே.
“கீழே இறங்கி முதல்ல முகத்தை கழுவு…”
“ஏன்? இப்படியே என் முகத்தை பார்த்தா ஆகாதா?…” வீம்பாய் கேட்டவளை முறைத்துப்பார்த்து,
“ஒரு அறை விட்டேனா பாரு. எல்லாத்துக்கும் உன் குறுக்கு புத்தியால எதாச்சும் அர்த்தம் பார்த்துட்டே இருந்த நான் மனுஷனா இருக்கமாட்டேன் பார்த்துக்க. சொன்னதை செய்டி…” அதட்டலும் முறைப்பும் நிச்சயம் அவளை பயம் கொள்ள செய்தது தான்.
அமைதியாக கீழே இறங்கியவள் அவன் கூறியதை போல முகத்தை நன்கு கழுவி காரில் ஏற சிறு டவலை அவளின் கையில் திணித்தான். முகம் சிவந்து சற்று வீங்கி இருந்ததை கவலையோடு பார்த்தான்.
அனய்க்கு தெரிந்துபோனது. இனி பணிந்து போனால் தேவையில்லாமல் தன்னையும் குழப்பி அனைவரையும் படுத்தி தனக்குத்தானே மன நிம்மதியின்றி போய்விடுவாள் என எண்ணினான்.
தன்னுடைய ஆறுதல் எந்தளவிற்கு பலனளிக்குமோ அந்தளவிற்கு அவளை பலவீனமாக்கவும் செய்யும் என புரிந்துகொண்டவன் தன் மனதை கடினமாக்க முயன்றான்.
காரை கிளப்பிக்கொண்டே, “முகத்தை கொஞ்சம் இயல்பா வச்சிக்கோ. முகமெல்லாம் வீங்கி இருக்கு…” என அவளிடம் பதில் இல்லை.
“ப்ச் மலர் ப்ளீஸ்டா சொன்னா கேளேன். என்னால இப்படி உன்னை பார்க்க முடியலை…” அவனின் கெஞ்சல் குரல் அவளின் குற்ற உணர்வை அதிகரித்தது.
ஆம். குற்ற உணர்வுதான். தான் செய்த செயலுக்கு அவனை குற்றவாளியாக்கியது மட்டுமின்றி வார்த்தைகளால் அவனை காயப்படுத்தியும் அவன் தன்னிடம் கோபம் கொள்ளாமல் இருப்பதே அவளை குன்ற செய்தது.
“உன்னால் தானே எல்லாம்? என்னை போக செய்தது நீதானே?” என ஒரு வார்த்தையும் பேசாமல் தன் பேச்சுக்கள் அனைத்தையும் கேட்டுகொண்டவனை நினைக்க நினைக்க தனக்குள் முடங்கினாலும் அவனின் ப்ளீஸ் அவளை பெரிதாய் இம்சித்தது.
“கடைசியில் இவனை தன்னிடம் கெஞ்சும் அளவிற்கு இறக்கிவிட்டேனே? எல்லாம் என்னால் தானே?. இதற்கெல்லாம் நான் சரியானவளா?” என உயிர் துடித்தவள்,
“இல்லை நான் இப்படியே யோசிச்சிட்டிருந்தா கண்டிப்பா பைத்தியமாகிடுவேன். இனியும் அனய்க்கு என்னால எந்த ஒரு கஷ்டத்தையும் குடுக்கமுடியாது. சோ இனி அவனுக்காக வேணும் நான் மனநிம்மதியோட இருக்கனும். அவனையும் சந்தோஷமா வச்சுக்கனும்…” என சங்கல்பம் எடுக்க,
“அப்போ பழையவை எல்லாம்?” என மீண்டும் குரங்கென மனம் தாவ முயல,
“நடந்த எதுவும் மாத்த முடியாது. நடந்தது நடந்ததாவே இருக்கட்டும். இனி நடக்க வேண்டியது எல்லாம் நல்லபடியா நடக்கனும். நடக்க வைப்பேன்”
“எனக்காக நடந்திருக்கிற இந்த கல்யாணமும் எனக்குள் உருவாகியிருக்கும் காதலும் ரொம்ப தாமதமாக இருந்தாலும் அது கடவுள் எனக்கு கொடுத்திருக்கும் வரம். அதுக்கான மரியாதையை நான் ஒருபோதும் குறைத்திட மாட்டேன். என் உயிர் போகும் நேரம் வரைக்கும் அதை பொக்கிஷமாய் பாதுகாப்பேன்”
“இப்பவும் நான் தெளிவாகாம பழைய விஷயத்தை நினைச்சு இன்றைய சூழலை கம்பேர் பண்ணி பார்த்துட்டே இருந்தா அது என்னை மட்டுமின்றி என் குடும்பத்தையும் பாதிக்கும். எனக்காக மொத்த குடும்பமும் பார்த்து பார்த்து செய்யும் போது எனக்குள்ள நானே பச்சாதாபத்துல மூழ்க கூடாது”
“என் சந்தோஷம் அனய்யோட காதல்ல இருக்கிறதுபோல அனய்யோட சந்தோஷம் அவன் மீதான என் காதல்ல தான் இருக்கு. அள்ள அள்ள குறையாம குடுப்பேன்”
“அப்கோர்ஸ், என் சந்தோஷம் என்னோட பார்வையில், என் எண்ணத்தில், என் செயலில் தான் இருக்கு. அது முழுக்க முழுக்க இனி அனய்யை மட்டுமே சுத்தி இருக்கும். என்னால இனி யாரோட நிம்மதியும் சந்தோஷமும் பறிபோக கூடாது. முக்கியமா என் அனய்”
தனக்கு தானே முடிவெடுத்துக்கொண்டவள் அதில் ஸ்திரமாக அவளின் முகத்தில் சீரியஸாக வந்து போன பாவனைகள் அனய்யின் முகத்தில் மீண்டும் கலக்கத்தை உருவாக்கியது.
அடிவயிறு கலங்க கலவரமானவன் முயன்று உற்சாகத்தை வரவழைத்துக்கொண்டு அவளை இயல்பாக்க முயன்றான்.
“ஹேய் ரோஸ்பட், ஒழுங்கா சிரிச்சிடு. இல்லை நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது….” என இடது கரத்தால் அவளின் கழுத்தில் குறுகுறுப்பூட்ட அதில் நெளிந்தவள் அவனின் பிரத்யோக அழைப்பில் மொத்தமாய் தெளிந்தாள்.
“ப்ச், விடுங்க. ஆமாம் உங்கம்மா என்ன சொன்னாங்க. என்னவாம் உடனே வீட்டுக்கு வர சொன்னாங்க?…” அவளும் இயல்பாக உரையாட அசந்துதான் போனான்.
நொடிக்கொருமுறை நிறம் மாறும் மலர் போல சற்றுமுன் அழுது கரைந்ததென்ன இப்பொழுது சாதாரணமாய் பேசுவதென்ன? இவளை கணிக்கவே முடியவில்லையே என எண்ணிக்கொண்டவன்,
“அப்பாவும் அம்மாவும் வீட்டுக்கு வந்திருக்காங்களாம். ஏதோ முக்கியமான விஷயமா பேச. அதான் என்னை வர சொன்னாங்க…” என்றவன்,
“காலேஜ்ல நடந்த எந்த விஷயத்தையும் உடனே வீட்ல சொல்லவேண்டாம். பயந்திடுவாங்க. மெதுவா பேசிக்கலாம்…” என்றதும் வேகமாய் சரி என தலை அசைக்க அவளின் தலையை பிடித்து ஆட்டியவன் அவளின் விரிந்த புன்னகையை கண்ட பின்னரே நிம்மதியானான்.
மலரும் புன்னகையோடு அவனிடம் ஏதேதோ பேசியபடியே இருக்க அவளுக்கு சளைக்காமல் அவனும் வளவளத்துக்கொண்டே காரை லாவகமாய் செலுத்தினான் அனய்.
இனி அனைத்தும் சரியாவிடும் என்றும் இனி தன்னால் அவனுக்கோ குடும்பத்தினருக்கோ எந்தவித கஷ்டமும் தரக்கூடாது என்றும் இருவரும் தங்களுக்குள் முடிவெடுத்திருக்க விதி விடாமல் துரத்தியது.
வீட்டை நெருங்கியவர்கள் மகிழ்வோடும், நிம்மதியோடும் காரை விட்டு இறங்க குடும்பமே அவர்களை எதிர்பார்த்திருந்தது.
மலர் தன் பிரச்சனைகள், காலேஜோடு முடிந்துவிட்டது, அனய்யிடமும் மனதிலிருந்ததை கொட்டி பின் தெளிவான முடிவெடுத்துவிட்டோம் என நினைத்தாள்.
ஆனால் இன்றைய அதிர்ச்சிகளின் எண்ணிக்கை அத்தோடு முடியவில்லை, உன் வாழ்வின் அஸ்திவாரமே ஆட்டம் காணும் நிகழ்வுகள் பல இன்றே நடக்கவிருப்பதை அறியாமல் புன்னகையோடு வீட்டினுள் நுழைபவளை காலம் கவலையோடு பரிதாபமாய் பார்த்தது.
புன்னகை ஜீவிக்கும்…