புன்னகை – 18
ஹாலில் பாலகிருஷ்ணன் வைத்தியனாதனுடன் உரையாடிக்கொண்டிருக்க காமாட்சி வருணியை மடியில் வைத்துக்கொண்டு அவளோடு பேசிக்கொண்டிருந்தார்.
ஆனால் அனைத்தையும் பார்வையாளராய் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க காமாட்சி அவரின் முகம் பார்ப்பதும் வருணியோடு பேசுவதுமாய் இருக்க ஆண்டாளுக்கே காமாட்சியின் பார்வை கொஞ்சம் சங்கடத்தை தோற்றுவித்தது தான்.
“நான் என்ன செய்யமுடியும்? அவரை பார்க்கவும் பாவமா தான் இருக்கு. ஆனாலும் என்னால இவங்களோட பேசமுடியாது. முடியவே முடியாது. கடவுளே இவங்க என்னை பார்க்காம இருந்தா தேவலை” என எண்ணியபடி கவனமாக காமாட்சியின் புறம் பார்வையை திருப்பாமலே அமர்ந்திருந்தார் ஆண்டாள்.
“ப்பா…” என காமாட்சியின் மடியிலிருந்து குதித்துக்கொண்டு இறங்கி ஓடினாள் வருணி.
திரும்பி பார்த்தவர்களின் முகத்தில் சிறு ஆச்சர்யம் தோன்றி மறைந்தது மலரின் வருகையால்.
எப்பொழுதும் வரும் நேரத்தை விட முன்னமே வந்துவிட்டதால் யோசனையோடு பார்த்தனர். அதைவிட காமாட்சிக்கு கொஞ்சம் கலக்கமாவே இருந்தது.
அனய்யிடம் தனியாக பேச நினைக்க இப்படி மலரும் அவனோடு சேர்ந்தே வந்துவிட்டதால் பேசுவதா இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாமா என குழம்பி தவித்தார்.
“இதற்கு தான் சொன்னேன், கேட்டாயா நீ?” என்பதை போல் வைத்தியநாதன் காமாட்சியை ஒரு பார்வை பார்க்க இருவரின் பார்வை பரிமாற்றத்தை அனய் மட்டுமல்லாது மலரும் கவனித்துக்கொண்டுதான் வந்தமர்ந்தாள்.
இருவரையும் வரவேற்ற அனய் வைத்தியநாதன் அருகில் அமர மலரும் இருவரின் உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு அனைவருக்கும் குடிப்பதற்கு எடுத்துவர உள்ளே சென்றாள்.
அங்கே வீராத்தாய் ஏற்கனவே ஏதோ வேலையாக நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்து புன்னகைத்துவிட்டு ஜூஸ் போடுவதற்காக ப்ரிட்ஜிலிருந்து பழங்களை எடுத்து வைக்க,
“மலரம்மா, அம்மா கொஞ்சம் முன்னதான் ஜுஸ் குடுத்தாங்க…” என,
“ஓஹ் அப்படியா?…” வேறென்ன செய்வது என பார்த்து நிற்க,
“நீங்க வரதை பார்க்கவுமே பால் காய வச்சிட்டேன். இப்ப காபி போட்டுடலாம். பாப்பாக்கு புடிக்குமேன்னு கட்லட்க்கு ரெடி பண்ணிருக்கேன். இப்போ அதையும் போட்டுடலாம்…”
“வீராம்மான்னா வீராம்மா தான். தேங்க்ஸ்…” என அவரின் கை பிடித்து குதூகலித்தவள்,
“மாமாவுக்கு பல் தான். அதுல கொஞ்சம் பனங்கற்கண்டும் போட்டுடுங்க…”என சொல்லி,
“உங்களுக்கொரு ரகசியம் சொல்லவா? இன்னைக்கு வருணி கட்லட் கேட்டது எனக்குத்தான். நான் தான் ஈவ்னிங் உங்ககிட்ட சொல்லி செய்ய சொல்லுவோம்னு பேசிருந்தேன்…”
கண்ணடித்து கூற மலரிடம் எப்பொழுதாவது மட்டுமே வெளிப்படும் அவளின் இந்த உற்சாகத்தில் மனம் மகிழ்ந்தவர் அவளின் தாடையை பிடித்து ஆட்டி,
“நல்ல பொண்ணு. என்கிட்டே நீயே சொல்லிட்டு போய்ருக்கலாம்ல…” என பேசியபடி காபியை இறக்கி கட்லட்டையும் போட்டு முடித்து ட்ரேயில் எடுத்து செல்ல அங்கே அனய்யையும், வைத்தியநாதனையும் தவிர அனைவரும் இருந்தனர்.
“அத்தை எங்க அவங்களை காணும்?…” காமாட்சியிடம் கேட்க வருணி,
“ப்பா, த்தா த்தா மேல்ல்ல…” என மாடியை காண்பிக்க பாலகிருஷ்ணனுக்கும் ஆண்டாளுக்கும் காபி ஸ்நாக்ஸ் கொடுத்துவிட்டு அவர்களை அழைத்துக்கொண்டு வருவதாக சொல்லி மாடி ஏறினாள்.
அங்கு வைத்தியனாதனின் தணிந்த பேச்சும் அனய்யின் சீறலும் எதுவோ சரியில்லை என்று உணர்த்த திகைத்துபோனாள்.
“அப்பா ப்ளீஸ், இதுக்கு நான் எப்படி சம்மதிப்பேன்னு எதிர்பார்த்து என்கிட்டே கேட்டு வந்துருக்கீங்க? அம்மாவுக்குதான் எதுவும் தெரியாது. ஆனா எல்லாம் தெரிஞ்ச நீங்களும் இப்படி கேட்கறதுதான் என்னால தாங்கமுடியலை…”
அனய்யின் கோபமான பேச்சு அறைக்கு வெளியே வந்து நின்ற மலரின் காதுகளில் தெள்ளதெளிவாக இறங்கியது. அவனின் கோபம் எதற்கென புரியாமல் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள்.
அவன் வைத்தியநாதனிடம் எப்பொழுதுமே இவ்வாறு பேசியதில்லையே. செல்ல கண்டிப்போடு எப்பொழுதாவது பேசுவானே தவிர இப்படி பேசி பார்த்ததில்லையே. அதுவே உள்ளே செல்லவிடாமல் நின்ற இடத்திலேயே தேங்க வைத்தது.
“மன்னிச்சிடுங்கப்பா, நீங்க வேற எதையாச்சும் பேசுங்க. இதை பத்தி பேசினா நான் என்ன செய்வேன்னு என்னால சொல்ல முடியாது. என் கோவத்தை கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்…”
முகம் முழுவதும் ரவுத்திரம் பொங்க பேசியவனை பயம் நிறைந்த கண்களோடு வைத்தியநாதன் ஏறிட அவனின் குரலில் தெறித்த ஆத்திரத்தில் மலரின் புருவங்கள் முடிச்சிட்டன.
“இப்போ என் மாமா என்ன கேட்டுட்டார்ன்னு இவ்வளோ கோவம் இவருக்கு? இதை நான் சும்மா விடமாட்டேன்” மலருக்கு அவ்வளவு கோபமாய் வந்தது.
“வந்தவங்க கிளம்பட்டும் வச்சிக்கறேன் கச்சேரியை” என கருவிக்கொண்டே எங்கிருந்து செல்ல திரும்ப அடுத்து அனய் பேசிய பேச்சில் கால்கள் நின்ற இடத்திலேயே வேரோடிவிட்டது.
அடுத்தடுத்து அவன் பேசிய பேச்சிலும் அதை ஆமோதித்து வைத்தியநாதன் கூறிய விஷயத்திலும் உயிர் பறந்தேவிட்டது.
உடல் சமைந்து விழிகள் நிலைகுத்தி நிற்க அங்கிருந்து செல்லமுடியாமலும் உள்ளே சென்று அனய்யின் சட்டையை பிடித்து உலுக்கமுடியாமலும் பித்து பிடித்தவளை போல நின்றுவிட்டாள்.
நெஞ்சம் கனத்து அதிலிருந்து ரத்தம் வடிவத்தை போல ஒரு வலி தோன்ற கதறவேண்டும் என்னும் எண்ணத்தை அனய்யின் குரல் தடுத்தது.
“இதை பத்தி பேசறது இதுவே கடைசியா இருக்கட்டும்ப்பா. இன்னொருமுறை இதை பேசி மலர் காதுல அசந்தர்ப்பமா கூட விழுந்திட கூடாது. இந்த ஜென்மம் முழுக்க இதை அவ தெரிஞ்சுக்காம இருக்கிறது தான் நல்லது…”
“இல்லை ஆதி, உன்னோட முடிவு இதுவா தான் இருக்கும்னு எனக்கும் தெரியும். ஆனாலும் இதை நான் உன்கிட்ட கேட்கலைனா காமாட்சி கேட்ருப்பா. அவ கேட்டு நீ மறுத்துட்டா அவளால தாங்கமுடியாது. அதான் நான் எதுக்கும் கேட்டு சொல்றேன்னு சொல்லிருக்கேன்…”
சங்கடமாய் தலை குனிந்து நின்றவரை கண்டு மனம் வருந்தியவன் அவரின் கையை பிடித்துக்கொண்டு,
“அப்பா, நீங்க சொன்ன இன்னொரு விஷயம் வேணும்னா கண்டிப்பா நான் மலர்க்கிட்ட கேட்டு சொல்றேன். ஆனா இது மலரே சம்மதிச்சாலும் நான் ஒத்துக்க மாட்டேன். அம்மாக்கிட்ட நான் பேசிக்கறேன்…”
மலருக்கு இன்னமும் நம்பமுடியவில்லை. இதுவரை விடை தெரியாத பல கேள்விகளுக்கு இப்படியாப்பட்ட பதில்கள் கிடைக்கும் என நினைத்தே பார்த்திருக்கவில்லை.
சரவணன் மீதான வைத்தியநாதனின் வெறுப்பிற்கு காரணம் அறிந்துகொண்டாள். எதற்காக அவனின் பெயர் எடுத்தாலே அனய்யின் குரலில் கோபமும், ஆத்திரமும், துவேஷமும் கொப்பளிக்கிறது என புரிந்துகொண்டாள்.
அனய்யை நினைக்கையில் நெஞ்சம் வேதனையில் விம்மியது. அவனின் எல்லையில்லா காதலையும் வருணியின் மீதானா அன்பையும் நினைக்க நினைக்க வலி கூடியது.
அதே சமயம் சரவணனை நினைக்க மனம் விண்டுபோனது.
“இதுக்கு என்னை கொன்று இருக்கலாமே சரவணா மாமா?. எனக்கு இத்தனை பெரிய வலியை குடுத்துட்டு போய்ட்டீங்களே? ரொம்ப வலிக்குதே மாமா…” நெஞ்சை பிடித்துக்கொண்டு மனதால் அரற்ற ஆரம்பித்தாள்.
“மலரு…” என காமாட்சி அழைக்க எட்டி சென்று கீழே பார்த்தவள்,
“இதோ வரேன் அத்தை…” என சொல்லி முகத்தை புடவை தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.
முகமோ உணர்வுகளற்று களையிழந்து கிடந்தது. கதவை மெலிதாய் தட்டியவள் அப்போதுதான் வந்ததை போல, இயல்பாய் பேசுவதை போல,
“மாமா…” என வைத்தியநாதனை அழைத்துக்கொண்டே உள்ளே சென்றாள்.
“கீழே உங்களுக்கு பால் ஸ்நாக்ஸ் வச்சிருக்கிறேன் மாமா. அதான் கூப்பிட வந்தேன்…” அனய்யின் முகம் பாராமல் சொல்லி திரும்ப அவள் முகத்தில் எதையோ தேடியவன் அது கிடைக்காமல்,
“மலர்…” அனய்யின் குரல் அவளை நிறுத்த கலங்கிய கண்களின் கண்ணீரை வெளியேற்றாமல் உள்ளிழுத்துக்கொண்டே தவிப்பாய் விழியை சுழற்றினாள்.
“அப்பா நீங்க கீழே போங்க. நாங்க வரோம்…” என சொல்லி அவரை அனுப்பியவன் மலரை படுக்கையில் அமரவைத்து அவளின்முகத்தையே பார்க்க இவளுக்குத்தான் கஷ்டமாய் போனது.
தன் உணர்வுகள் கட்டுடைந்து அவனின் மீது விழுந்து கதறிவிடுவோமோ என அஞ்சி வாயை இறுக மூடிக்கொண்டாள். அவளின் முகத்தை நிமிர்த்த உணர்வுகளற்று அவனை அமைதியாக பார்த்தாள்.
அதை கண்டவன் மனம் திக்கென்று அதிர்ந்தது.
“ஒருவேளை ஒருவேளை கேட்டிருப்பாளோ?” இதயம் நொடிக்கு லட்சம் முறை துடிப்பதுபோல் தோன்ற,
“மலர், இங்க என்னை பாரு…” குரல் நடுங்க அழைக்க அவனின் மாற்றத்தை கண்டுகொண்டவள் அவசரமாய் முகத்தை மாற்றிக்கொண்டு வேண்டுமென்றே,
“என்னாச்சு? எவ்வளவு நேரம் தான் உங்க முகத்தை பார்க்க? ஏற்கனவே தலை வலிக்குது எனக்கு. போய் காபி குடிக்கலாம்னு உங்களை கூப்பிட வந்தேன் பாருங்க…” என சொல்லி அங்கிருந்து எழுந்து செல்ல அவளை மீண்டும் இழுத்து அமர்த்தியவன் கட்டிக்கொண்டான்.
“ஒண்ணுமில்லை.உன் முகத்துல ஏதோ ஒன்னு குறைஞ்சது போல இருந்துச்சா, அதான். ஒண்ணுமில்லை. ஒண்ணுமில்லைடா…” என சொல்லி சொல்லி மேலும் அவளை இறுக்க அவளின் எலும்புகள் உடைவதை போல வலி உண்டானது.
அதிலேயே தனக்கு தெரிந்துவிட்டதோ என எண்ணி அவன் சில நொடிகளில் எத்தனை வேதனை கொண்டுவிட்டான் என புரிந்துபோனது.
“இல்லை எனக்கு இந்த ஜென்மத்துல தெரியக்கூடாதுன்னு நினைக்கிற அனய்யை நான் எதுவும் தெரிஞ்சது போல காட்டி கஷ்டப்படுத்த மாட்டேன். மாட்டேன்…” அவனை தானும் அவனுக்கிணையாய் அணைத்துக்கொண்டவள் கண்ணீருக்கு அணைபோட பெரும் பாடாய் இருந்தது.
“ப்ச் விடுங்க. வாங்க கீழே போகலாம். எல்லோரும் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. வாங்க…” அவனை எழுப்ப முயன்றவள் அவனிடம் அடங்கித்தான் போகவேண்டியதாகிற்று.
“போலாம் கொஞ்ச நேரம் இப்படியே இரு. போகலாம்…” அவளை அசையவிடாமல் பிடிவாதமாய் பிடித்து வைத்திருந்தவனின் மனமோ உலைகலனென கொதித்துக்கொண்டிருந்தது.
அன்று வருணி இன்னும் பேசாததை பற்றி சரவணனின் ஜீனோடு ஒப்பிட்டு மலர் பேசியதிலிருந்தே ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தவன் அவளின் காதலில் கொஞ்சம் சமாதானமாகி இருந்தான்.
அதையும் கெடுப்பதை போல வைத்தியநாதனின் பேச்சு பழைய விஷயங்களை கிளறிவிட மொத்தமாய் நொறுங்கிப்போனான்.
அதிலும் தாங்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் மலரின் வருகை, அவளின் முகத்தில் உணர்ச்சிகளற்ற தன்மை, அவள் அதை கேட்டிருப்பாளோ என்கிற தன் பயம், அவள் வாயிலிருந்து இல்லை என்னும் பதில் வரும் வரை அனைத்து கடவுள்களிடமும் வைத்த வேண்டுதல் என்று பலதரப்பட்ட உணர்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் செத்துக்கொண்டிருந்தான் என்றால் கூட மிகையாகாது.
அவள் சாதாரணமாய் தன்னிடம் பேசியதிலிருந்தே மலர் எதையும் கேட்டிருக்கவில்லை என்பதை புரிந்துகொண்டவன் உயிர் அப்போதுதான் நிம்மதியானது. அதுவரை தவித்த தவிப்பிற்கு அவளை அணைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
அந்த ரகசியம் எக்காரணம் கொண்டும் தன்னை தாண்டி யாருக்கும் முக்கியமாய் மலருக்கோ வருணிக்கோ போகவே கூடாது என்பதில் அத்தனை ஸ்திரமாய் இருந்தான்.
“வனமலர் என் மனைவி, வருணி என்னுடைய பெண். எனக்கு மட்டுமே உரிமையானவங்க…” அவனுடைய பிதற்றல் மலரின் காதுகளில் மெல்லிய சத்தமாய் கேட்க கண்களை அழுத்தமாய் மூடிக்கொண்டாள்.
“கடவுளே எனக்கு இவனோட அன்பை தாங்குற சக்தியை கொடு. இவன் வேதனையை தீர்க்கும் வல்லமையை கொடு. இன்னும் கொஞ்சம் விட்டா கண்டிப்பா நானே அழுது உண்மையை சொல்லிடுவேன். எனக்கு மனதிடத்தை கொடு” என இறைஞ்சியவள்,
“இப்போ என்னை விடறீங்களா இல்லையா? நான் கூட எதோ பேசறதுக்கு தான் இருக்க சொன்னீங்களோன்னு நினைச்சா இதுக்குத்தான் என்னை இருக்க சொன்னீங்களா?…” அவனிடம் வேண்டுமென்றே கோபம் கொள்ள,
“ப்ச் எப்போ பார்த்தாலும் சண்டைக்கோழி மாதிரியே பேசு…” அவளின் தலையில் செல்லமாய் முட்டியவன் அப்பொழுதுதான் இயல்புக்கு திரும்பியிருந்தான்.
“இன்னைக்குத்தான் உன் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சது. கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணலாம்னா விடமாட்டியே…”
சிரித்துக்கொண்டே அவளின் முகத்தில் கலைந்து விழுந்திருந்த முடிக்கற்றையை ஒதுக்கிக்கொண்டே பேச அவனையே விழியசைக்காமல் பார்த்தபடியே இருந்தாள்.
“நீங்க ஏன் என்னை இவ்வளோ லவ் பன்றேங்க?…” தன்னையறியாமல் கேட்டுவிட அதை கண்டு வியந்தவன்,
“இப்போ கதை கேட்கிறது ரொம்ப முக்கியமா?…” அவளின் கன்னம் கிள்ளி சிரித்தவன்,
“ஒரு முக்கியமான விஷயம் பேசனும் மலர். நீ கோபப்பட மாட்டியே…” என இல்லை என்பதை போல தலையசைத்தாள்.
அவன் எதை பற்றி பேச போகிறான் என்று தான் அறிந்துவிட்டாளே. அதனால் ரூ முடிவுடன் தான் அவனை பார்த்திருந்தாள்.
“இன்னும் பத்து நாள்ல உங்க குலதெய்வ கோவில் திருவிழால பாப்பாவுக்கு முடி இறக்கனும்னு காமாட்சி அம்மா ஆசைப்படறாங்க. அதை பத்தி பேசத்தான் அப்பாவும் வந்திருக்காங்க…”
அமைதியாக இருக்க இருக்க மறுத்துவிடுவாளோ என்னும் பயத்தில்,
“மலர் இங்க பாரு. உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லைனா அதை மத்தவங்க மேல திணிக்க கூடாதுடா. நாம…” அவனை பேசவிடாமல் கையமர்த்தியவள்,
“உங்களுக்கு என்ன தோணுது…”
“என்ன?…”
“உங்களுக்கு என்ன தோணுது? ஐ மீன் இந்த விஷயத்துல உங்க விருப்பம் என்னன்னு கேட்டேன்…”
“ஓஹ் அதுவா? எனக்கென்ன? நான் மட்டும் வேண்டாம்னா சொல்ல போறேன். என் பொண்ணுக்கு மொட்டை போட்டு, காதுகுத்தி குட்டி குட்டியா தோடு போட்டு தலையில சந்தனம் தடவி பட்டுப்பாவாடை சட்டையில அவளோட உங்க குலதெய்வ கோவிலை சுத்தி சுத்தி வந்து ரவுண்டடிக்கனும்…” என்றவன்,
“ஹ்ம் ஆசைப்பட்டுட்டா மட்டும் நடந்திடுமா என்ன?…”
“போலாம்…” சட்டென அவள் ஒப்புக்கொள்ளவும் அதிசயமாய் அவளை திரும்பி பார்த்தவன்,
“நிஜமா தான் சொல்றியா?…” மீண்டும் மீண்டும் கேட்க சிரித்தேவிட்டாள்.
“கண்டிப்பா, உண்மையா, சத்தியமா, இப்படி எத்தனை வேணும்னாலும் சொல்லிக்கலாம். ஆனா நிஜமாவே தான் சொல்றேன்…”
அவன் வாயடைத்துப்போய் இருக்க அவனின் தாடையை பிடித்து ஆட்டியவள்,
“கேட்டாச்சுல. இப்ப போலாமா?…” என்று கேட்டும் அவன் அசையாமலிருக்க,
“எனக்கென்ன? இப்படியே சிலையாட்டம் உட்கார்ந்திருங்க. நான் போறேன்…” என சொல்லி வேகமாய் அங்கிருந்து எழுந்து நடக்க அவளின் பின்னால் கிட்டத்தட்ட ஓடியே வந்தான்.
“கொஞ்சம் வெய்ட் பண்ணினாதான் என்ன? விட்டுட்டு போறதுலையே இரு…”
அவன் வேண்டுமென்றே சொல்லியதும் அவனோடு கை கோர்த்துக்கொண்டவள்,
“மாட்டேன். இனி அவ்வளவு சீக்கிரமா உங்களை விட்டுட்டு எங்கையும் போகவே மாட்டேன்…” அவனுக்கு சொன்னதை போல தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
கீழே சென்றதும் வைத்தியநாதன் காமாட்சியின் முகத்தில் இருந்த அமைதியில் சங்கடமுற்றவன் அங்கு சென்று அமர அவர்களின் முகத்தில் எதையோ உணர்ந்துகொண்ட ஆண்டாள்,
“நீங்க பேசிட்டே இருங்க. வருணியை கூட்டிட்டு நாங்க பார்க் வரைக்கும் போய்ட்டு வந்திடறோம்…” பொதுவாய் சொல்லியவர் பாலகிருஷ்ணனை பார்க்க அவரும் எழுந்துகொண்டார்.
“இல்லைங்க, நாங்க இதோ கிளம்பிட்டோம்…” கோவித்துக்கொண்டு ஆண்டாள் இப்படி சொல்கிறாரோ என பதறி காமாட்சி வேகமாய் எழுந்துகொள்ள,
“அனய் நாங்க இன்னும் ஒருமணி நேரத்துல வந்திடுவோம். நைட் சாப்பிட்டு போகலாம்னு சொல்லு. எல்லாத்துக்கும் நானே சொல்லனும்…” என்றவர்,
“வீரா…” என வீராத்தாயை அழைக்க,
“அம்மா சொல்லுங்க…” வந்து நின்றார் அவர்.
“கோவிலுக்கு போகனும்னு சொன்னியே. இப்போவே போய்ட்டு வந்திடு. நைட் எல்லோருக்கும் டின்னர் செய்யனும்ல. இப்போ கிளம்பினா தான் சரியா வரும்…”
அவரிடம் சொல்லிவிட்டு வருணியை அழைத்துக்கொண்டு சென்றுவிட அவரையே பார்த்திருந்த மலரின் மனதில் நேசம் பொங்கியது.
“இவங்களை இதுக்குத்தான் எனக்கு இவ்வளோ பிடிக்குது. எப்படி இங்க இருக்கிற சுட்சுவேஷனை புரிஞ்சு அத்தையும் மாமாவும் சங்கடமில்லாம பேசனும்னு அவங்க கிளம்பறாங்க. சச் எ க்ரேட் லேடி”
“இதுல ஒன்னும் இவங்களை அடிச்சுக்க முடியாது தான்” மாமியாரை சில்லாகித்துக்கொண்டவள் லேசாக புன்னகைத்துகொண்டாள்.
அவர்கள் சென்றதும் வைத்தியநாதன் புறம் திரும்பியவன்,
“அப்பா கோவிலுக்கு எப்ப போகனும்? அங்க எத்தனை நாள் ஸ்டே பண்ணனும். இந்த டீட்டெய்ல்ஸ் சொன்னீங்கனா அதுக்கேத்தது போல நான் என்னோட ஷெட்யூல் மாத்திப்பேன். ஷூட்டிங்ல எந்த ப்ராப்ளமும் வந்துட கூடாது. அதான்…”
அனய் சொல்லியதும் நம்பாமல் பார்த்தவர் அவனின் அடுத்தடுத்த திட்டத்தில் நம்பமுடியாமல் வியந்து மகிழ்ந்து தான் போனார்.
“உண்மையாவா சொல்ற ஆதி?…” என,
“என்னால நம்பவே முடியலைப்பா…” என்ற காமாட்சி மலரை தன்னருகில் அமர்த்திக்கொண்டவர் அவளின் முகத்தை ஆராய அமைதியாக இருந்தாள் மலர்.
“என்னம்மா என் வொய்பை இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்துட்டு இருக்கீங்க?…” அனய் கேலி செய்ய,
“அதொண்ணுமில்லப்பா, இம்புட்டு நாள் நாங்க சொல்லி கேட்காதவ இன்னைக்கு நீ சொன்னதும் ஒத்துக்கிட்டாளே. அதான் பார்த்தேன்…”
தயங்கி தயங்கி மலரை பார்க்க அவளுக்கும் புரிந்து தான் இருந்தது அவரின் பார்வைக்கான அர்த்தம்.
“அத்தை நீங்க என்ன கேட்க போறீங்கன்னு எனக்கு நல்லா புரியுது…” என்ற மலரை மேலும் பேசவிடாமல் தடுத்த அனய்,
“இரு மலர், நான் சொல்றேன்…” என நிறுத்தி,
“அம்மா, கோவிலுக்கு பாப்பா மொட்டைக்கு போறோம். இப்போ அதை பத்தி பேச வேண்டாமேன்னு மலர் நினைக்கிறா. அதைத்தான் சொல்ல வரா…”
எத்தனை முயன்றும் அனய்யின் குரலில் இயல்பை கொண்டுவர முடியவில்லை இதை கூறும் பொழுது. ஆனால் காமாட்சியின் அப்பாவித்தனம் அந்த பேதத்தை அறியவிடவில்லை.
ஆனாலும் மலர் அதை அப்படியே விட்டுவிட விரும்பவில்லை. இன்று தான் பேசாவிட்டால் மீண்டும் ஒருநாள் இதே பேச்சு கிளம்பும். இதற்கு இன்றோடு ஒரு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும்.
“என்னால அனய் முகத்தை இப்படி பார்க்க முடியாது. ஐ கான்ட். இது இந்த பேச்சு இன்னையோட கடைசியா இருக்கட்டும்” என நினைத்தவள்,
“அத்தை, நான் அதை சொல்ல வரலை. நான் தெளிவா பேசிடறேன். இன்னையோட இந்த பேச்சு முடியட்டும்…”
“நீங்க தவறா எடுக்கமாட்டீங்கன்னு நம்பறேன். இந்த வருஷம் சரவணன் மாமாக்கு திதி செய்ய நான் வரமாட்டேன் அத்தை. இதுவரைக்கும் எப்படியோ, இப்ப நான் இவரோட மனைவி. வருணி அவரோட பொண்ணு. இதுக்கும் மேல நான் எப்படி எந்த உரிமையில திதி குடுக்க வந்து நிப்பேன். அது என் புருஷனை பாதிக்காதா?…”
மலர் பட்டென போட்டு உடைக்க காமாட்சிகோ பெரும் அதிர்ச்சியாக இருந்தது. உண்மையில் இதை மலரிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை.
அனய்க்கோ நடப்பதை நம்பவே முடியவில்லை. இன்று என்ன ஆகிற்று மலருக்கு என அதிர்வோடு பார்த்தான். அதிலும் தன்னை அவளின் கணவன் என விளித்தது அத்தனை மகிழ்ச்சியை அள்ளித்தந்தது.
முன்பு வைத்தியநாதன் தான் பிடிவாதம் பிடிப்பார். வீட்டில் அவனின் படத்தை வைத்து பூஜை கூட செய்ய விடமாட்டார். ஏதாவது ஒரு கோவிலில் வைத்து அவர் மட்டுமே திதி கொடுத்துவிட்டு வருவதாக சொல்ல, தாங்களும் வருகிறோம் என்றால் அத்தனை ருத்ரதாண்டவம் ஆடுவார்.
அன்றெல்லாம் மலர் வைத்தியநாதனிடம் அத்தனை போராடுவாள் எதற்கு இப்படி செய்கிறீர்கள் என்று. அவளிடம் வாதாடமுடியாமல் அவளை மட்டும் அழைத்து செல்பவர் வருணியை காமாட்சியிடம் விட்டு செல்வார்.
இந்த மட்டும் மலரையாவது அழைத்து செல்கிறாரே என மனதை தேத்திக்கொண்டார். எவரும் போய் பேச முடியாது அவரிடத்தில். அவருக்கு துணையாய் வைத்தியநாதனிடம் இந்தவிஷயத்தில் பேச மலர் மட்டுமே இருந்தாள்.
இன்று மலரே வரமாட்டேன் என்னும் பொழுது அழுகை வரும் போல் ஆனது காமாட்சிக்கு. முதலில் அதிர்ந்தவர் பின் சூழ்நிலை அறிந்து புரிந்துகொண்டார் மலரை.
“என் மகன் இவளுக்கு இப்போ யாரோ தானே? இன்னொருவனின் மனைவியான பின் தான் அழைப்பதும் முட்டாள் தனம் தானே” என எண்ணியவர்,
“தப்புதான்மா. நீ இந்த வீட்டுக்கு வாழ வந்த பின்னால நான் கேட்டிருக்க கூடாது தான். என் வயசுக்கு நானே யோசிச்சிருக்கனும். கண்டிப்பா இது தப்புதான்…”
எத்தனை முயன்றும் வந்துவிட்ட கண்ணீரை எப்படி மறைக்கவாம்? முந்தானையால் துடைத்துக்கொண்டே அவர் பேசியதும் அவரை அணைத்துக்கொண்ட மலர்,
“அத்தை ப்ளீஸ் அழாதீங்க. நான் வந்து…”
“இல்லைமா நீ கோவிலுக்கு வரேன்னு சொன்னதே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். இதுக்கும் மேல நான் வேறென்ன எதிர்பார்க்க போறேன்…” என்றதும் மலரும் அழ ஆரம்பித்துவிட்டாள்.
“காமாட்சி பாரு அவளையும் அழ வச்சுட்ட. வரும் போதே நான் சொன்னேனே கேட்டியா?…” அவரை வைத்தியநாதன் கடிந்துகொள்ள காமாட்சிக்கு அழுகை பொங்கியது.
“நான் ஏதோ கேட்டுட்டேன். இனி எப்பவுமே கேட்க மாட்டேன். நீ அழாத…” அவளின் கன்னம் துடைத்தவர் பாவமாய் அனய்யை பார்த்தார்.
“போதும் ரெண்டுபேரும் முதல்ல அழறதை நிறுத்துங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மாவும் அப்பாவும் வந்திடுவாங்க. வந்து என்ன என்னன்னு கேட்பாங்க…”
அனய் சொல்லியதும் தான் இருவருக்கும் சுவிட்ச் போட்டது போல அழுகை நின்றது. அதன் பின் முகத்தை துடைத்துக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருக்க அவர்களை அனய் பேசி பேசியே கொஞ்சம் மனநிலையை மாற்றினான்.
காமாட்சிக்கோ அதற்கு மேல் அங்கிருக்கவே விருப்பமில்லை. ஆனாலும் ஆண்டாள் இருக்க சொல்லி சென்ற பின் அவரின் பேச்சை மறுத்து சென்றால் ஏற்கனவே பேசாமல் இருப்பவர் பார்க்காமல் கூட இருந்துவிட்டால் என்ன செய்வது என யோசித்தார்.
அதை விட முக்கியமாக வருணியின் காதணி விழாவிற்கு கண்டிப்பாக ஆண்டாள் பாலகிருஷ்ணன் வரவேண்டும் என எதிர்பார்த்தார். அவர்களிடம் இதை பற்றி பேசி அவர்களை அழைத்துவிட்டு சென்றால் தான் மரியாதை என எண்ணி அமர்ந்திருந்தார் காமாட்சி.
அதையும் தாண்டிய ஒரு பயம் ஆண்டாள் இதற்கு ஒப்புகொள்வாரா என்பது தான். மலரிடம் பேசி அவளின் சம்மதம் பெற்ற பின் ஆண்டாளிடம் பேசலாம் என நினைத்திருந்தவர் மலர் இன்றே ஒப்புக்கொள்ள இப்பொழுதே ஆண்டாளிடமும் பேசி செல்வது தான் சரி என்பது காமாட்சி வைத்தியநாதனின் எண்ணம்.
ஆண்டாள் பாலகிருஷ்ணனுக்காக காத்திருந்தனர் அனைவரும்.
புன்னகை ஜீவிக்கும்…