புன்னகை – 19
அந்த நிமிடம் அவர்களுக்கு சங்கடங்கள், வருத்தங்கள், மன சுணுக்கங்கள் என மாறி மாறி மூளையை தின்றாலும் அதை மற்றவருக்கு தெரியாமல் மறைத்து சாதாரணம் போல உரையாடினர்.
சிறிது நேரத்தில் ஆண்டாளும் பாலகிருஷ்ணனும் வருணியோடு வந்துவிட வரும் வழியிலேயே வருணி தூங்கி இருந்தாள். பாலகிருஷ்ணனிடமிருந்து அவளை தன் தோளில் மாற்றிக்கொண்ட அனய்,
“நீங்க பேசிட்டு இருங்க பேபியை படுக்க வச்சிட்டு வரேன்…” சொல்லி கீழே ஆண்டாளின் அறையிலேயே உறங்கவைத்து விட்டு வர அப்போதும் அனைவரும் அமைதியாகவே இருக்க,
“என்ன ஆச்சு? சைலண்டா இருக்கீங்க?…” என்று உற்சாகமாக கேட்டுக்கொண்டே வந்தமர்ந்தவன் மனம் அத்தனை நிறைவாய் இருந்தது. மலரின் வார்த்தையில் சந்தோஷ வானில் மிதந்துகொண்டிருந்தான் என்பதுதான் உண்மை.
“அப்பா நீங்க பேசனும்னு சொன்னீங்களே?…” வைத்தியநாதனை தூண்ட அப்பொழுதுதான் ஆண்டாள் பாலகிருஷ்ணன் முகத்தையே நிமிர்ந்து பார்த்தார் வைத்தியநாதன்.
“வந்ததும் அவங்கக்கிட்ட இதை பத்தி பேசாம இப்போ இவ்வளவு நேரம் கழிச்சு பேசினா என்ன நினைப்பாங்களோ?…” என்ற எண்ணமே தயங்க செய்தது. பாலகிருஷ்ணனை பார்த்தவர்,
“எங்க குலதெய்வம் கோவில்ல திருவிழா வருது. குழந்தைக்கு முடி இறக்கலாம்னு பேசிட்டு போக வந்தோம்ங்க…” என்றவர்,
“நீங்க தவறா எடுத்துக்க கூடாது உங்கள்ட்ட தான் முதல்ல கலந்து பேசி இருக்கனும். ஆனா மலரோட சம்மதம் இல்லாம உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தான் முதல்ல ஆதிக்கிட்ட பேசி மலரை சம்மதிக்க வைக்கலாம்னு பார்த்தேன்…”
“ஏன் இதுல மலர் சம்மதம் தனியா என்ன தேவை இருக்கு?…” பாலகிருஷ்ணன் கேட்டுவிட,
“வருணிக்கு இதுவரை மொட்டை போடலை. காதும் குத்தலை. மலர் அந்த கோவிலுக்கு வந்தே பல வருஷம் ஆச்சு. அவளுக்கு அங்க வரவோ அங்க குழந்தைக்கு இந்த விசேஷம் செய்யவோ இஷ்டம் இல்லை. பிடிவாதமா மாட்டேன்னு சொல்லிட்டா…”
ஆண்டாளும் பாலகிருஷ்ணனும் ஆச்சர்யமாக பார்க்க மலர் அனய்யை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனுக்கு இதில் நிரம்ப சந்தோஷம் என அவனின் முகத்திலேயே தெரிந்தது. இதற்கு தானே ஆசைப்பட்டாள். முகத்திலோ கசப்பு விரவிக்கிடந்தது.
“இனி இவனோடு மனம் ஒன்றி என்னால் வாழ்ந்துவிட முடியுமா? குற்ற உணர்ச்சி என்னை ஒவ்வொரு நாளும் கொன்று தின்னுமே?” மனம் ஊமையாய் அழுதாலும் அதை காட்டிக்கொள்ள முயலவில்லை.
“நான் ஒரு நொடி உணர்ச்சிவயப்பட்டாலும் சரியாக கண்டுபிடித்துவிடுவான் இவன். அதற்காகவே என்னால் வருணியை பார்க்கவே முடியவில்லை. பார்த்தால் கண்டிப்பாக உடைந்துவிடுவேன்”
அவளின் எண்ணவோட்டங்களை கவனமாக மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாலும் உள்ளத்தில் பேரலை ஒன்று எழுந்து எழுந்து அவளை சுருட்டிக்கொள்ள நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது.
இவள் இப்படி சிந்தித்துக்கொண்டிருக்க வைத்தியநாதன் பேசிய விஷயங்களை அசைபோட்ட ஆண்டாள்,
“இந்த விஷயத்தில் நீங்க எங்கக்கிட்ட பர்மிஷன் கேட்கனும்னு நாங்க எதிர்பார்க்கலை. பார்க்கவும் கூடாது. ஆனாலும் முன்னாடியே கலந்து பேசியிருக்கனுமா இல்லையா? எங்களுக்கு இதை இன்ஃபர்மேஷனா சொல்றீங்களோன்னு தோணுது…” என முடிக்கும் முன்,
“ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நாங்க முதல்ல உங்ககிட்ட இதை செய்யலாமா, உங்க தோது எப்படின்னு கேட்ருக்கனும். ஆனா சூழ்நிலை…” வைத்தியநாதன் கலங்கிப்போனார்.
“இப்போ வந்து சூழ்நிலை அது இதுன்னு சொல்றீங்க. திருவிழான்னு உங்களுக்கு இப்பதான் தெரியுமா? பத்துநாளைக்கு முன்னால வந்து சொன்னா நாங்க வேற என்னன்னு நினைக்கிறது? கடைசி நேரத்துல வந்து நெருக்கடி குடுத்தா உடனே சம்மதிச்சிடுவோம்ன்னு நினைப்போ?…”
“சத்தியமா அப்படியெல்லாம் இல்லைங்க. நீங்க நம்புங்க…”
“இல்லை பரவாயில்லை. விடுங்க…” என வைத்தியநாதனின் பதற்றத்தை தனித்த பாலகிருஷ்ணன் ஆண்டாளை ஒரு பார்வை பார்க்க அந்த இடத்தில் அமைதியாகிவிட்டார் ஆண்டாள்.
அதன் பின் அங்கே கோவிலுக்கு என்றைக்கு, எப்படி செல்வது, என்னென்ன முறைகள், எத்தனை நாள் திருவிழா என்ன ஏதென்ற பேச்சுக்கள் மட்டுமே.
அதற்குள் வீராத்தாய் வந்துவிட இரவு உணவும் தயாராக ஆரம்பித்தது விரைவிலேயே.
“எல்லாம் பேசினீங்க சரி, குழந்தைக்கு யார் மடியில வச்சு காது குத்தனும்னு முடிவு செஞ்சிருக்கீங்க? யார், யாரை கூப்பிடனும் இதையெல்லாம் பேசலையே…”
ஆண்டாள் மீண்டும் பேச அனைவரும் யோசனையானார்கள். பாலகிருஷ்ணன் தான்,
“ஏன் நம்ம மாப்பிள்ளை இருக்காரே. மலருக்கு அண்ணன் முறையாகனும் தானே? அவர் மடியில உட்கார வச்சுக்கலாம்…”
மிக இயல்பாய் சொல்லிவிட ஆண்டாளுக்கோ அவரின் முகத்திலேயே தெரிந்தது இதில் தனக்கு விருப்பமில்லை என்பது.
“உங்க இஷ்டத்துக்கு முடிவு செய்வீங்களா? அவருக்கு அப்போ என்ன வேலையோ? அதைவிட அந்த குடும்பத்து பெரியவர் மாப்பிள்ளை அம்மா அப்பா அவங்க இதுக்கு சம்மதிக்கனுமே? சும்மா வார்த்தையை விடகூடாது…” அமைதியாகத்தான் சொன்னார் ஆண்டாள் ஆனால் அழுத்தமாக.
அதற்குள் அனய் ரிஷிக்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட அவன்தான் கடிந்துகொண்டான் அனய்யை.
“உனக்கு மூளையே இல்லையா? இதை நான் செய்யாம வேற யார் செய்வா? இதுல சார் என்கிட்டே பர்மிஷன் கேட்கறீங்களோ? என் வொய்ப்க்கு மட்டும் இது தெரிஞ்சது நீ தொலைஞ்ச பார்த்துக்கோ…”
சிறு மிரட்டலிலேயே தனக்கு முழு விருப்பம் என்பதை சொல்லிய ரிஷி,
“முதல்ல விஷயம் இப்படின்னு நேத்ராவுக்கு சொல்லு. அவ உன் அம்மாவுக்கு லெக்சர் எடுக்கட்டும். அப்பத்தான் அவங்களை ஆஃப் பண்ண முடியும்…”
ஆண்டாளை சமாளிக்கும் வழியையும் சொல்லியவன் கோவிலுக்கு எப்போது செல்வது என பேசிவிட்டு வைக்க அனய்யின் முகத்தில் அத்தனை பெருமிதம்.
“இவரை கணவனாக கிடைக்க தன் தங்கை மட்டுமல்ல மாப்பிள்ளையாக கிடைக்க தாங்களுமே பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என நினைத்துக்கொண்டான்.
ஆண்டாளிடம் வந்தவன் ரிஷி பேசியதை சொல்ல ஆண்டாளுக்கு கொஞ்சம் சந்தோஷமும் கொஞ்சம் பிடித்தமின்மையும் தோன்றியது.
அதற்குள் நேத்ராவும் அழைத்துவிட ஆண்டாளிடம் கொடுத்தவன் அவர் சற்று தூரம் சென்று பேசி சில நிமிடங்களில் வந்து அனய்யிடம் மீண்டும் கொடுத்துவிட்டார்.
“என்னடா அண்ணா உன் பொண்ணுக்கு காதணி விழா நடத்தபோற போல…”
“ஆமாம் நேத்ரா, கண்டிப்பா நீயும் மாப்பிள்ளையும் வந்திருங்க…” என சொல்ல,
“கண்டிப்பா வரமாட்டேன்….” என்றால் நேத்ரா குரலில் கடுமை கலந்து.
“நேத்ரா…” அதிர்ச்சியுடன் அனய் கேட்க,
“உனக்கு நான் இருக்கிறது இப்பதான் தெரியுதா? அதுவும் உனக்கு இருக்கிறது நான் ஒரே தங்கச்சி. என்னை இப்படித்தான் விசேஷத்துக்கு அழைப்பியா? எனக்குன்னு ஒரு மரியாதை என் புருஷனுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு. மரியாதையா என் மாமனார் மாமியாருக்கு என் குடும்பத்துக்கு எல்லாருக்கும் நீ தான் அழைப்பு வைக்கனும். இல்லைனா கண்டிப்பா வரமாட்டேன்…”
“ஊஃப் இவ்வளவு தானா?. செஞ்சிட்டா போச்சு…” என்று சுலபமாக சொல்லமுடியாமல் அயர்ந்து போனான். எழுந்து சற்று தூரம் போனவன் தாழ்ந்த குரலில்,
“நேத்ரா அத்தனை பேருக்கும் சொல்லனுமா?…” பரிதாபமாய் கேட்க,
“நா வரவே மாட்டேன். உன்னால ஆனதை பார்த்துக்கோ. உன் பொண்ணுக்கு என்னைவிட்டுட்டு மொட்டை போட்டுடுவியா? போட்டு பாரேன்…” சவால் போல வேண்டுமென்றே கூற,
“வேணும்னா இப்படி செய்வோமே?…” அனய் கேட்க,
“எப்படி?…”
“உன் மாமனார், மாமியார், தாத்தா, பாட்டி இவங்களை மட்டும் கூப்பிடட்டுமா?…”
“என்ன?…” அவளின் மிரட்டல் குரலில்,
“புருஷனும் பொண்டாட்டியும் ஒண்ணுபோல மிரட்டறாங்க…” என எண்ண,
“இங்க பாரு அனய், தாத்தா பெரியமாமா வீட்ல இருக்காங்க. அங்க அவங்களை மட்டுமா அழைப்ப? மாமா அத்தை அவங்க பிள்ளைங்கன்னு கூப்பிடனும். அங்க கூப்பிட்டு மத்த எல்லோரையும் கூப்பிடாம விட்டா நல்லாவா இருக்கும்? நீயே சொல்லு…”
“இப்போ என்னதான் செய்யனும்? அங்க வந்து எல்லோரையும் ஒவ்வொரு வீடா போய் கூப்பிடனுமா என்ன?…”
“உன்னால முடிஞ்சா நேர்ல வந்து அழை. இல்லைனா நீ போன்ல சொல்லு. ஆண்டாளையும் ஆவின் பாலையும் இங்க அனுப்பி வச்சு அவங்களை அழைக்க சொல்லு….”
நேத்ரா சொல்வதும் சரிதான் என்று தோன்ற ஒப்புக்கொண்டவன் ,
“ஓகே நான் போன் பண்ணிடறேன். அம்மாவையும் அப்பாவையும் அழைக்க சொல்றேன். ஆனா அம்மா வருவாங்களான்னு எனக்கு தெரியலை. நீதான் எப்படியாச்சும் வரவைக்கனும்…”
அங்கு நடந்ததையும், ஆண்டாள் பேசியதையும் சொல்லி தங்கையிடம் உதவிக்கு நிற்க அவனிடம் தைரியம் சொல்லி தான் பார்த்துக்கொள்வதாக கூறியவள்,
“உனக்கு கிடைக்கிற வாய்ப்பை யூஸ் பண்ணிக்க தெரியாத யூஸ்லெஸ் நீ. இது தான் மலர் எங்க ஃபேமிலியோட மிங்கிள் ஆகறதுக்கு இதுதான் சரியான டைம்…”
“இதுல இவ்வளோ இருக்கா? நான் இதை யோசிக்கவே இல்லை. ஆமா எல்லோருமே வருவாங்களா?…”
“நீ எதைத்தான் யோசிச்ச? அதை விடு. கூப்பிடும் முறைக்கு நீ கூப்பிட்டுடு. வரது அவங்கவங்க இஷ்டம். அதையும் விட அவங்கவங்க சூழ்நிலை. சிலரால வரமுடியாமலும் இருக்கலாம். நீ புரிஞ்சுக்கனும்…”
“ஓகே, ஓகே. நீயே எல்லோரோட போன் நம்பரும் அனுப்பிடு. மறக்காம அம்மாக்கிட்டயும் பேசிடு…” என சொல்லி அழைப்பை துண்டித்தான்.
“என்னப்பா நேத்ரா என்ன சொன்னா?…” என ஆண்டாள் கேட்க,
“அம்மா உங்ககிட்ட அப்பறமா பேசுவா. வாங்க எல்லோரும் சாப்பிட்டு வரலாம். வந்து கோவிலுக்கு எப்படி என்னைக்கு போகனும், எத்தனை பேரை கூப்பிடனும், எல்லாம் பேசலாம். அங்க வரவங்களை தங்க வைக்கிறதுக்கு ஏற்பாரு பண்ணனும். அதுக்கு லிஸ்ட் போடனும்…”
படபடவென பேசியவன் நிற்காமல் டைனிங் ஹாலிற்கு சென்றுவிட அனைவரும் அவனோடு சென்றனர். சாப்பிடும் நேரம் யாரும் எதயும் பேசவில்லை. அவரவற்குள் அடுத்து என்ன எப்படி என்கின்ற யோசனைகள்.
மற்றதை நாளை வந்து பேசுகிறோம் என சொல்லி வைத்தியநாதனும் காமாட்சியும் கிளம்பிவிட அனய்க்கு நாளை ஷூட்டிங் பற்றிய செய்தி அழைப்பு வந்துவிட மொபைலை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று பேச ஆரம்பிக்க வருணியை சென்று பார்த்த மலர் அவள் இன்னும் உறங்குவதை கண்டு எழுப்புவதா வேண்டாமா என பார்த்தபடி நின்றாள்.
“பார்க்ல இருந்து வரும் போதே டிபன் சென்டர்ல பூரி மசால் சாப்ட்டுட்டு தான் வந்தா. இப்போ எழுப்ப வேண்டாம். தூங்கட்டும். கொஞ்ச நேரம் கழிச்சு நாங்க எழுப்பி பால் குடுத்துக்கறோம்…”
பாலகிருஷ்ணன் சொல்லி அறையினுள் நுழைந்துகொள்ள மலருக்குத்தான் அதிசயமாகிற்று.
“இன்று என்ன ஆகிற்று இவருக்கு? மாமியாரை அதட்டுகிறார், என்னிடம் இவ்வளவு நீளமாய் பேசிவிட்டார்?” என வியந்தபடி திரும்பியவள் ஆண்டாள் பார்த்தபடி நிற்க மாடிக்கு செல்வதா? வேண்டாமா? என தயங்கி நின்றவள் உள்ளமோ,
“இப்பொழுது யாரிடமும் இதற்குமேல் என்னால் நிற்கவோ, பேசவோ முடியாது. ஐம் டயர்ட். நான் போகனும். தனியா இருக்கனும். நான் மனசுவிட்டு அழுதே ஆகனும். என் கண்ணீரை அடக்க இதுக்கும் மேல முடியவே முடியாது”
உள்ளுக்குள் கதறிக்கொண்டு அவரை பார்க்க ஆண்டாள் அவளின் முகத்தில் என்ன கண்டாரோ அவளிடம் பேசவேண்டும் என எண்ணியவர் இப்பொழுது வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவர் கிட்சனிற்குள் சென்றார்.
“நீ இத்தனை பலவீனமானவளா?” வேகமாய் மாடி ஏறியவளின் மனசாட்சி அவளை சாடியது.
“இருக்கட்டும் நான் பலவீனமானவள் தான். நான் அப்படியே இருந்துட்டு போறேன்” அறைக்கு வரும் முன்னரே கண்களிலிருந்து கண்ணீர் அருவி பெருகியது.
உள்ளே வந்து படுத்தவளுக்கு கதறி அழ தோன்றினாலும் வாயை திறக்கவே இல்லை. கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.
“ஏன் மாமா இப்படி பண்ணுனீங்க? என்னை உயிரோடு சாகடிச்சுட்டீங்களே? நான் என்ன பாவம் பண்ணினேன்?” என தன்னை தன் நிலையை எண்ணி அழுதவள் அனய் கதவை திறக்கும் சத்தம் கேட்க அசையாமல் படுத்துக்கொண்டாள்.
அறையில் விளக்கு போடப்படாமல் இருக்க விடிவிளக்கை மட்டும் போட்டவன் மங்கலான ஒளியில் மலரின் அருகே சென்றான். அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவளை ஆழ்ந்து பார்த்திருந்தான் சில நிமிடங்கள்.
அறையில் குளிர் அதிகமாக இருக்க ஏஸியை குறைத்து வைத்தவன்,
“பிளாங்கெட் கூட போர்த்தாம இப்படி தூங்கறாளே?…” என அவளுக்கு போர்த்திவிட்டவன்,
“ஹேய் ரோஸ்பட்…” என அவளருகே அமர்ந்து மெல்ல அழைத்தான்.
“ம்ம்ம்” என்னும் முணங்கல் மட்டுமே அவளிடமிருந்து வெளிப்பட அவள் ஏற்கனவே குறுகிப்போய் படுத்திருந்ததில் உடம்புக்கு முடியவில்லையோ என எண்ணி பதறித்தான் போனான்.
நெற்றியில் கைவைத்து பார்த்தவன்,
“நல்லவேளை காய்ச்சலோன்னு கொஞ்சம் பயந்துட்டேன்…” தனக்கென சொல்லியது மலரின் காதுகளிலும் தான் கேட்டது.
முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை இழுத்துப்பிடித்தவள் அப்படியே சிலையென இருக்க சிரமப்பட்டுத்தான் போனாள். அவளின் தோள் தொட்டு அழைத்தவன்,
“இப்படி தூங்கிட்டயே கோகொ. சத்தியமா இன்னைக்கு நான் நமக்குள்ள எதுவும் எக்ஸ்பெக்ட் பண்ணலைதான். ஆனாலும் முடியலை. அநியாயத்துக்கு சோதிக்கிறடி…”
ஒரு ஆண்மகனாக இத்தனை நாள் காத்திருப்பிற்கு அவனின் எதிர்பார்ப்பு நிச்சயம் தவறில்லை தான். ஆனாலும் உடல் வெடவெடக்க நடுங்கி போனாள்.
“கடவுளே என்னை காப்பாத்தி விட்டுடு. என்னால முடியலை” என அரற்ற அவளின் வேண்டுதலுக்கு இணங்க அனய்யின் மொபைல் இசைத்தது.
பால்கனிக்கு சென்று பேசிவிட்டு வந்தவன் மலரை எழுப்பினான். அவளோ கண்ணை திறக்காமல் பிடிவாதமாய் இருக்க,
“ப்ச் மலர் ஐ நோ. நீ இன்னும் தூங்கலை. சும்மா டென்ஷன் பண்ணாத. என்ன பண்ணிடுவேன் நான்?. முதல்ல நீ முழிச்சுக்கோ…”
அவனின் பேச்சில் அதிர்ந்து எழுந்துகொண்டவள் பிடிபட்ட விதத்தில் திருதிருவென முழித்தாள். இருள் சூழ்ந்த அறையில் அந்த மெல்லிய விளக்கொளியில் அவளின் அழுத முகமும் சிவந்து வீங்கிய விழிகளும் அவனின் கண்களுக்கு புலப்படவில்லை.
“வந்து, நான்…” அவள் ஆரம்பித்ததும் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டவன் அவளையே கூர்ந்து பார்க்க,
“இல்லை, நிஜமாவே தூக்கம் வந்திருச்சு. கொஞ்சம் தலைவலி வேற. அதான்…”
அவனின் முகத்தை பார்க்கும் தைரியமற்று தலை குனிந்தவாறே மலர் சொல்ல அவனுக்கு குறுநகை தவழ்ந்தது. அவள் பக்கத்தில் வந்தவன்,
“இன்னைக்கு நீ பயந்து ஓடற இந்த விஷயம் என்னைக்கானாலும் நமக்குள்ள ஏற்படத்தான் போகுது…” திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க அதில் அவனின் புன்னகை அழகாய் விரிந்தது.
“ஆனா உடனே இல்லை. நடக்கவேண்டியது தானாவே நடக்கும். சோ நீ உன்னை இவ்வளோ கஷ்டபடுத்திக்க வேண்டாம்…” என்றவன்,
“உன்னோட மூச்சுக்காத்தை வச்சே நீ உறக்கத்தில் இருக்கயா இல்லையான்னு நான் ரொம்ப ஈஸியா சொல்லிடுவேன். என் கிட்ட இப்படி நடிச்சு என்னையும் கஷ்டப்படுத்தாதே. உன் விருப்பமில்லாமல் இங்க எதுவும் இல்லை…”
“ஸாரி…” மலரும் அவனிடம் மெல்லிய குரலில் கேட்டுவிட,
“இதுக்கு எதுக்கு ஸாரி? அதை விடு. எனக்கு வேண்டியதெல்லாம் உன்னோட அருகாமை மட்டும் தான். என்னையும் கொஞ்சம் நீ புரிஞ்சுக்கோ மலர். நானும் பாவம் தானே?…”
மறையா புன்னகையோடு அவள் நெற்றியில் மெலிதாய் இதழ் பதித்தவன்,
“இப்ப தூங்கு. உன் அண்ணன் கால் செஞ்சிருக்காரு. நான் போய் பார்த்துட்டு வரேன்…” என சொல்லி கிளம்ப அவளறியாமல் அவனின் கைபிடித்துக்கொண்டவள்,
“இப்போவா?…”சிறுபிள்ளையென அவனையே பார்த்தவளின் முகத்தின் பாவனையை உணரமுடியாமல் சிலநொடிகள் திண்டாடியவன்,
“எடிட்டிங்க் போய்ட்டு இருக்கு மலர். என்னவோ தெரியலை, ரிஷி மாப்பிள்ளை உடனே வர சொல்றாரு. என்னன்னு போய் பார்க்கனும்…” சொன்னதும் அவனின் கையை விட்டவள்,
“பார்த்து போய்ட்டு வாங்க. கவனமா கார் ஓட்டுங்க…” அவனிடம் சொன்னவள் அப்படியே அமர்ந்திருக்க அவளின் கன்னம் தட்டி,
“அம்மாக்கிட்ட மட்டும் காலேஜ் மேட்டரை லைட்டா சொல்லிருக்கேன். நாளைல இருந்து நீ காலேஜ் போகலைன்றது வரை. மத்ததை நாளைக்கு பேசிக்கலாம்னு இருக்கேன். சோ பீல் ப்ரீ. இப்போ நிம்மதியா தூங்கு…” என்று கூறி,
“குட்நைட்…” என சொல்லிவிட்டு சென்றுவிட அடைக்கப்பட்ட கதவையே சிலநிமிடங்கள் பார்த்திருந்து மீண்டும் படுத்துகொண்டாள்.
அன்று முழுவதும் நடந்த நிகழ்வுகளை அசைபோட்டபடி படுத்திருந்தவள் விழிகளுக்குள் அவனை முதன்முதலில் நேரில் சந்தித்த நாள் கண்முன் ஓவியமென விரிந்தது.
அதற்கு தூண்டுகோலென அவனின் கோகொ என்ற அழைப்பும் மிகப்பெரிய காரணமாக இருந்ததென்றால் மிகையில்லை. இமைகளை மூடிக்கொண்டவளின் கருவிழிகளுக்குள் காட்சிகளாய் படமெடுத்தது.
அதே நேரம் காரில் சென்றுகொண்டிருந்த அனய்யின் முகத்திலும் புன்னகையில் தடம் உறைந்தே இருந்தது.
மலரை முதன் முதலில் தான் கண்ட சூழ்நிலையும் அதைதொடர்ந்த நிகழ்வுகளும் பிம்பங்களாய் அவனை சுற்றிவர அதற்குள் விருப்பமாய் தொலைந்துபோனான் அவன்.
பல வருடங்களுக்கு முன் …
புதுக்கோட்டை ஆர்.ஜே கல்லூரியின் வளாகம் வண்ண வண்ண அலங்காரங்களுடன் மாணவ மாணவிகளின் கொண்டாட்டங்கள் என கண்ணுக்கு குளிர்ச்சியாக நந்தவனம் போல காட்சியளித்தது.
“வாட் எ பிகர்ஸ்…” உல்லாசமாய் விசிலடித்துக்கொண்டான் அனய்.
ஐந்துபேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று இவனை கள்ளப்பார்வை பார்த்தபடி வர காலரை தூக்கிவிட்டுக்கொண்டவன்,
“ஹ்ம் ஸார் பர்சனாலிட்டி அப்படி…” தன்னை தானே பெருமையாக எண்ணியபடி அவர்களுக்கு கையசைக்க வலதுகையை தூக்கியவன்,
“அம்மாடியோ ஆதிபராசக்தி ஆண்டாளு…” தூக்கியவேகத்தில் அப்படியே தலையை சொரிந்துகொண்டான்.
“கேண்டீன் போய்ட்டு வறேன்னு சொல்லி இங்க என்ன பன்ற அனய்?…” என்றபடி ஆண்டாள் கேட்க,
“ம்மா நேத்ராவை இன்னும் காணோம். வந்ததும் பார்த்துட்டு போனவ தான். அதான் இங்க எங்கயும் இருக்காளான்னு பார்த்தேன்…”
“அவளை எதுக்கு டிஸ்டர்ப் பன்ற? சொல்லிட்டு தானே போனா ப்ரோக்ராம் முடியவும் வந்து பார்க்கறேன்னு. வா ஆடிட்டோரியம் போலாம்…”
“உங்கப்பாவுக்கு லீவ் இருந்தா உன்னை நான் தொந்தரவே செய்திருக்க மாட்டேன். இப்படி உன்னையும் இழுத்தடிக்க வேண்டியதா இருக்கு. உன் டென்ஷன் எனக்கும் புரியுது. வரலைனா நேத்ரா ஆடிடுவா ஆடி. அதான் உன்னையாச்சும் வரசொன்னேன்…”
அவராக பேசியபடி அவனையும் இழுத்துக்கொண்டு ஆண்டாள் செல்ல ஈஈஈஈ என பல்லை கடித்தபடி அவரின் பின்னாலே சென்றான் அனய்.
ஜீவிக்கும்…