புன்னகை – 20
ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வருபவன் அனய். ஒரு வருடத்திற்கு முன்புதான் படிப்பை முடித்துவிட்டு சென்னையிலேயே வேலையில் சேர்ந்திருந்தான்.
தங்களுடைய வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் வெகு தூரம் என்பதாலும் தினமும் வந்துபோகும் நேரமும் அதிகம் என்பதாலும் அவன் அலுவலகத்திற்கு அருகிலேயே பிளாட் எடுத்து தங்கியிருந்தான். அவ்வப்போது விடுமுறை தினங்களில் வந்து அவர்களோடு தங்கி செல்வான்.
தாய், தந்தைக்கு அடங்கிய அமைதியான பையன். அவ்வப்போது அப்படி என்று காட்டிக்கொள்பவனும் கூட. அதுவரை ஆண்டாளின் வார்த்தையை மீறி எதுவும் செய்யமாட்டான் என்பது தான் அவனின் எண்ணமாகவும் இருந்தது.
அதில் ஆண்டாளுக்கு சொல்லொண்ணா பெருமையும். தன் மகன் தன்னை பெருமைப்படுத்த மட்டுமே செய்பவன் என்று பூரித்துதான் இருப்பார் எப்பொழுதும். அதனால் அவனை பற்றிய கவலை என்றுமே அவர் மனதில் எழுந்ததே இல்லை.
நேத்ரா அப்படியல்ல என்பது அவள் பிறந்ததிலிருந்தே தெரிந்தவர் என்பதால் எப்பொழுது என்ன செய்வாளோ என பயந்து கொண்டும் கவலை கொண்டுமே இருப்பார். அதை வெளியில் தெரியாதவாறு கவனமாக நடந்துகொள்வார்.
இன்றும் அவன் நேத்ராவின் காலேஜ் கல்சுரல்ஸ்காக தன் தந்தை வரமுடியாத காரணத்தினால் ஆண்டாள் ‘வா’ என அழைத்ததும் தான் திடீரென விடுமுறை எடுத்து வந்திருக்க அலுவலகத்திலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் அடுத்தடுத்து போன் கால்கள் வந்த வண்ணம் இருந்தது.
ஆடிட்டோரியத்தில் ஆண்டாள் இவனிடம் பேச அதற்கு தலையாட்டிக்கொண்டே அமர்ந்திருக்க சில நிமிடங்களில் மேடையில் நேத்ராவின் நிகழ்ச்சி வர இருந்தது. அந்த நேரம் அவனது மொபைலும் அழைப்பு விடுக்க,
“ப்ச் ரெண்டு நாள் லீவ்ல வரவிடமாட்டானுங்களே என்னை?…” என அலுத்துக்கொண்டே,
“சொல்லுங்க சுபாஷ்…” என்றவனின் காதுகளில் மறுபுறம் கூறும் செய்தி காதில் சரியாக விழாமல் போக அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்து கல்லூரியின் வகுப்பறைகள் இருக்கும் பக்கம் வந்தான்.
“ஹ்ம் ஆமா, இன்னைக்கு நான் லீவ் தான். ஹெச் ஆர்க்கிட்ட சொல்லிட்டேனே. ஹ்ம்ம். ஹ்ம்ம். ஓகே மே பி நாளை மறுநாள் வந்திடுவேன்…”
நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தவன் கொஞ்சம் தூரமாகவே வந்துவிட்டான். ஹச்சோ என்றவாறே மொபைலை பாக்கெட்டில் போட்டவன் மீண்டும் ஆடிட்டோரியம் நோக்கி நடக்க அப்போது கடக்கவிருந்த அறையில் இருந்து,
“ஆஆஆஆஆ…” என்னும் ஒரு பெண்ணின் வீறிட்ட குரலில் ப்ரேக் அடித்ததை போல நின்றான்.
சுற்றும் முற்றும் பார்க்க யாரும் அருகினில் இல்லாமல் தூரத்தில் மட்டுமே சுற்றிக்கொண்டிருந்தனர் அங்குமிங்குமாய்.
“யாரோ இப்போ ரொம்ப கத்தினாங்களே”…” தான் கேட்டது பிரம்மையோ என நிசப்தமாய் இருக்க மீண்டும் அங்கிருந்து நகர அதே வீறிடல் அவனை நிறுத்தியது.
“யாருக்கோ என்னவோ ப்ராப்ளம். சம்திங் ராங்…”
அங்கிருந்த இரண்டு மூன்று அறையை திறந்தவன் ஒன்றுமில்லாமல் போக நான்காவது அறையை திறந்து நுழைந்த நிமிடம் கதவினுள் இருந்து நான்கு பேர் தலைமுதல் கால் வரை வெள்ளை அங்கியால் இடதும் வலதுமாய் கத்திக்கொண்டு குதிக்க சத்தியமாய் அனய் பயந்தே விட்டான்.
“அம்மா. பேய்ய்யய்ய்ய்யி…” என்ற கத்தலோடு பின்னால் நகர்ந்தவன் கால் இடற அப்படியே மல்லாந்து விழுந்துவிட்டான். அச்சத்தில் வியர்த்துவிட்டிருக்க கண்களில் அத்தனை பயம். எழுந்துகொள்ள கூட தோன்றாமல் அவர்களை பார்க்க,
“அச்சச்சோ இது அவன் இல்லைடி. வாங்க ஓடிடலாம்…” இருவர் ஓடிவிட மற்ற இருவர் முகத்தில் அனய்யை பார்த்து அப்படி ஒரு கலவரம் அதையும் தாண்டி பெரிதாய் ஒரு சிரிப்பு. சிரித்துக்கொண்டே அவர்களும் ஓடிவிட,
“ச்சே, யாரோன்னு நினைச்சு விளையாடிருக்குதுங்க. உண்மையிலேயே பிசாசுங்க தான்…”
அவர்கள் முன்னால் கீழே விழுந்துவிட்ட அவமானம் வேறு. கடுப்பாய் எழுந்தவன், “இதுங்கெல்லாம் படிக்கவா வந்திருக்கும்ங்க. பிசாசுங்க பிசாசுங்க…” என திட்டிக்கொண்டே தன் சட்டையை நீவிக்கொண்டே அறையை விட்டு வெளியேற திரும்பினான்.
அறையில் அப்படி ஒரு இருள் சூழ்ந்திருக்க ஜல் ஜல் சத்தத்துடன் வெளியில் ஏதோ வருவதை போல தோன்ற நின்றவன்,
“திரும்பவும் அந்த குட்டிசாத்தானுங்க தான் போல…” என எண்ணி வேகமாய் வெளியேற தன் முன்னால் ஒரு பெண் வந்து மோத தடுமாறி அவளோடு மீண்டுமாய் கீழே விழுந்து வைத்தான்.
“இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்லை. என்ன பொண்ணு நீங்கலாம்?…” என அவளை திட்டிக்கொண்டே எழுந்து அவளுக்கும் கை கொடுக்க நீட்டியவன் அப்படியே உறைந்துதான் நின்றான்.
கீழே விழுந்திருந்தவளோ வெண்பட்டில் மோகினியாட்டத்திற்கு ஏற்ப உடை அணிகலன்களுடன் சர்வ அலங்காரத்தில் தலையில் பெரியகொண்டையோடு பெரிய விழிகளில் அஞ்சனம் பூசி தேவதையென மிளிர்ந்துகொண்டிருக்க பார்க்க பார்க்க இரு கண்களும் போதவில்லை அனய்க்கு.
“வாவ். என்ன ஒரு பிகரு…” அவனையறியாமல் அவனிதழ்கள் அவளிடம் ரசனையோடு மொழிந்தன.
அவனின் வழிசலில் கோபத்துடன் அவனின் கையை தட்டிவிட்டு தானே எழுந்து நின்றவள்,
“வாட்?…” கோபத்தோடு அவனிடம் கேட்க,
“செம்ம அழகா இருக்கீங்கன்னு சொன்னேன்…” என்றவன் அவளின் உடையை பார்த்துவிட்டு,
“ஸாரி, ஸாரி. பெண்குட்டி தமிழ் அறியுமோ?…” என சொல்ல அவளுக்கு கோபம் போய் சிரிப்பு பொங்கியது. அதை வெளிக்காட்டாமல் தலையை இடமும் வலமுமாய் அசைக்க,
“ஞான் பறையும், ஞான் பறையும்…” என சொல்லிவிட்டு,
“அய்யய்யோ அவசரத்துக்கு மலையாளம் வரமாட்டிக்கே? வராம என்ன? எனக்கு தெரியாதுல. தெரிஞ்சா தான வரதுக்கு. என் நேர கிரகம் எனக்கு ஒரு பிரண்ட் கூட கேரளால இருந்து வரலையே? இருக்கிறவனுங்க எல்லாம் தண்டத்துக்கு தமிழ்நாட்ல பிறந்து தொலைச்சிருக்கானுங்க. என்ன செய்வேன்?…”
தலையில் அவசரமாய் தட்டிக்கொண்டவன் நகத்தை கடித்தவாறே மீண்டும் அவளை பார்க்க அவளோ என்னவென புருவம் உயர்த்தி விழிகளால் கேட்க மொத்தமாய் அதில் சாய்ந்தேவிட்டான்.
“ஹைய்யோ, இப்படி இருக்காளே? இப்படி இருக்காளே?…” வாய்விட்டே புலம்ப அதில் மேலும் சிரித்தவள் அங்கிருந்து நகர,
“ப்ளீஸ் ப்ளீஸ் வெய்ட். உங்க பேர்…” என உளற அவள் புரியாததை போல பார்க்க,
“யுவர் குட் நேம்?…”
“வனமலர்…” அதை மட்டும் சொல்லிவிட்டு கிளம்ப அவளின் பின்னால் அவனும் சேர்ந்து நடந்தவனை கேள்வியாய் பார்க்க,
“நத்திங்…” என சொல்லி தோள் குலுக்கியவன் அவளுக்கு முன்னால் நடந்துகொண்டே,
கோணக்கொண்டக்காரி குத்துறா கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கிடக்குறேன் காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க
அனய் பாடிக்கொண்டே முன்னால் செல்ல பின்னால் நடந்துவந்த வணமலருக்கோ அதற்கும் மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவனுக்கு தான் வனமலர் யாரேன்று தெரியாது. ஆனால் அவளுக்கு தெரியுமே?
தன் உயிர்த்தோழி நேத்ராவின் அண்ணன் என்பதும் அவனின் குணநலன்கள் வீட்டில் எப்படி வெளியில் எப்படி என்பதும் தெரிந்திருந்ததால் அவனை தவறாக எண்ணமுடியவில்லை மலரால்.
சிரித்துக்கொண்டே அவனின் பின்னால் சென்றவள் ஆடிட்டோரியத்தின் பின்புறம் சென்று மறைந்தாள்.
அவளையே திரும்பி திரும்பி பார்த்தபடி வந்தவன் கண்களிலிருந்து திடீரென மறைந்தவளை எண்ணி தேடியவன்,
“எப்படியும் இந்த காலேஜ் தானே பார்த்துக்கலாம். இல்லைனா நேத்ராட்ட சொல்லி தேடலாம்…” என்று நினைத்து நினைத்த நிமிடம்,
“ஐயோ அவக்கிட்ட சொன்னா சாமியாடிடுவா. சும்மாவே என்னை எப்ப கோர்த்துவிடலாம்னு பார்ப்பா. வேண்டாம்ப்பா. எதுவானாலும் சொந்த முயற்சி…” ஒரு முடிவுக்கு வந்த பின்னால் உள்ளே சென்று அமர,
“இவ்வளவு நேரமாவா போன் பேசுவ? அடுத்து நம்ம நேத்ரா பெர்பாமென்ஸ் தான். அனாவ்ன்ஸ் பண்ணிட்டாங்க…”
ஆண்டாள் சலிப்பாய் சொல்ல,
“ஆபீஸ் கால். எக்ஸ்ப்ளைன் செஞ்சிட்டு வர லேட் ஆகிடுச்சு. அதான்ம்மா. கரெக்ட் டைம்ல வந்துட்டேன்ல….” அவரை சமாதானம் செய்தவாறே தன்னுடைய இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் ஷாக் அடித்ததை போல நிமிர்ந்துகொண்டான்.
“என்னாச்சு அனய்?…” அவன் துள்ளி அமர்ந்தவிதத்தில் பதறி கேட்க,
“இல்லை இல்லைம்மா, ஒண்ணுமில்லை. எறும்பு கடிச்சது போல இருந்தது. நீங்க ஸ்டேஜ் பாருங்க. நேத்ரா வந்தாச்சு…” அவரை திசைத்திருப்பியவன் மனமோ இனிமையாய் நீந்தியது.
அங்கே மேடையில் நேத்ராவோடு வனமலரும் சேர்ந்து மோகினியாட்டம் ஆடிக்கொண்டிருக்க அவனின் பார்வை மொத்தமும் வனமலரை மட்டுமே மொய்த்தது.
அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் இவன் கொஞ்சம் கொஞ்சமாய் உருகிக்கொண்டிருந்தான்.
அவளை பார்த்ததும் அத்தனை பிடித்தது. இப்பொழுது அவளின் பாவனைகளில் மொத்தமாய் பிடித்தது. அவள் மேல் பித்துப்பிடித்தது.
பெண்களிடத்தில் சரளமாய் பேசுபவன் வலிய சென்று கடலை வறுப்பவன் கூச்சமின்றி அவர்களின் அழகாய் பாராட்டுபவன் காதலென்று யாரிடமும் விளையாட்டிற்கு கூட இயம்பாதவன் இப்பொழுது மனதினுள் அவளுடம் சொல்வதற்காய் புலம்ப ஆரம்பித்தான் உள்ளுக்குள்.
அருகில் தன் மகனின் மனம் காதலில் வயப்பட்டு அதை சொல்வதற்காய் தவித்து தறிகெட்டு அப்பெண் புறம் பாய்வதை உணராத ஆண்டாள் தன் மகளை புன்சிரிப்போடு பார்த்திருந்தார்.
“இதுல ஒன்னும் குறையல்லை. ஆனா மத்த நேரங்கள்ல செய்யிற சேட்டை இருக்கே?…” மகளை நினைத்து பெருமையாய் அலுத்துக்கொண்டார்.
இதுவும் நேத்ராவிற்கு தெரியாமல் தான். தெரிந்தால் தலையில் ஏறி அமர்ந்து மிளகாய் அரைத்துவிடமாட்டாளா?
அவர்களின் நடனம் முடிந்து கரகோஷம் காதை பிளந்தது. அனைவரின் பாராட்டையும் பெற்ற இருவரும் மீண்டும் ஒருமுறை சபையில் வணங்கிவிட்டு செல்ல அனய்யின் நெஞ்சமோ வனமலரின் பின்னாலே கன்றுக்குட்டியாய் ஓடியது.
மேலும் சிறிது நேரம் அமர்ந்திருந்தவர்கள் ஊருக்கு வேறு செல்லவேண்டும் என்பதால் கிளம்பிவிடலாம் என நேத்ராவை பார்க்க வந்தனர்.
வெளியில் வந்தவர்கள் நேத்ராவை தேட இவர்களை தேடி வந்தவள்,
“ஆண்டாளு…” என ஏதோ வேகத்தில் அழைத்துக்கொண்டே வந்து நாக்கை கடித்துகொண்டவள் அவர் முறைக்கவும்,
“வந்துங்கம்மா, ரோஷிணி அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க. உங்களை மீட் பண்ணனும்னு கேட்டாங்க. அதான்…” என படபடவென ஒப்பித்து அனய்யின் கைகளை பிடித்து அவனோடு ஒன்றிக்கொள்ள,
“ம்மா போய் பார்த்திட்டு வரலாம்…” அனய்யும் நேத்ராவை காக்க ஆண்டாளை திசைதிருப்ப,
“ஆண்ட்டி…” என்றபடி வந்துநின்றனர் ராகினி, வனமலர், ரோஷிணி மூவரும்.
வனமலரை பார்த்ததும் ஜெர்க் ஆனவன் அவர்கள் சரளமாய் ஆண்டாளோடு பேசுவதை பார்த்துவாய் பிளந்து நின்றான்.
“ம்மா நீங்க போய் ரோஷிணி அம்மாவை பாருங்க. அதோ நிக்கிறாங்க…” என ஆண்டாளை அனுப்பிய நேத்ரா,
“டேய் அண்ணா, ஹப்பா தப்பிச்சேன். இல்லைனா இன்னைக்கு காது ரெண்டையும் ஆண்டாள்ட்ட கழட்டி தான் குடுத்திருக்கனும்…” என்றவள்,
“அதை விடு, இவங்க என்னோட ப்ரெண்ட்ஸ். ராகினி, வனமலர், ரோஷிணி…”
“இது என்னோட அண்ணா. ஸ்வீட் ப்ரெண்ட், வெல்விஷர், சம்டைம்ஸ் எனிமி, ஆல்டைம் அடிமை இப்படி எத்தனை வேணும்னாலும் சொல்லிக்கலாம். செண்டிமெண்டா சொல்லனும்னா அம்மாவுக்கு மேல அம்மாவா, அப்பாக்கு மேல அப்பாவா இப்படி சொல்லிட்டே போகலாம். எல்லாம் சேர்ந்த மொத்த உருவம் இவன்…”
ஜாலியாக சொன்னாலும் நேத்ராவின் குரல் அண்ணாவின் மீதான அன்பில் நெகிழ்ந்து இருந்தது. அதை உணர்ந்தவர்கள் புன்னகையோடு அவர்களை பார்க்க,
“உடனே எமோஷனல் ஆகிட கூடாது பாருங்க. எனக்கும் இவனுக்கும் அது செட்டே ஆகாது. அதான் எப்பவும் சண்டை போடுவோம். முட்டிப்போம். மோதிப்போம். முட்டிக்கிறதை போல முட்டிக்கிட்டாலும் எனக்கு வலிக்காம பார்த்துப்பான்…”
அவர்களை அறிமுகம் செய்ய அனைவருக்கும் பொதுவாய் ஹலோ சொல்லியவன் வனமலரை தவிர்த்து மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் அனய்யை பார்த்து சிரிக்கவுமாய் இருக்க எரிச்சலாய் போனான் அவன்.
“இவங்களைத்தான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவியா?…” என,
“ஹ்ம் நீதான் ஆபீஸ்லையே இருப்பியே இவங்க வரும்போது…” அவளின் காதருகே குனிந்தவன்,
“நீதான் இவங்க வந்து கிளம்பும் போதுதானே எனக்கு இன்பார்ம் பண்ணவே செய்வ. இதுல நான் பார்க்கலைன்னு குறைவேற…” முன்பே வனமலரை பார்க்காமல் போய்விட்ட நமைச்சலில் அவன் குமுற,
“டேய் அண்ணா, நீ யாருன்னு எனக்கு தெரியும். நான் யாருன்னு உனக்கு தெரியும்…” அவனை செல்லமாய் மிரட்ட,
“ம்க்கும் என்ன தெரிஞ்சு என்ன செய்ய?. என் மனசு இப்போ எப்படி இருக்குன்னு உனக்கென்ன தெரியபோகுது…”
வனமலரை பார்த்துக்கொண்டே அவன் கூறியவிதம் அவளுக்குத்தான் தன் முகம் மாறாமல் இருக்க பெரும் பிரயத்தனம் செய்யவேண்டியதாகிற்று. ஏனோ நேத்ராவிடம் அனய் பேசியதை கூற மனமில்லை.
அனய்யின் விளையாட்டுத்தனம் கலகலப்பான சுபாவம் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறாள் தான். அதனால் இதையும் விளையாட்டாகவே எண்ணியவள் அப்படியே விடுவிட நினைத்தாள்.
“இப்போ உன் மனசுக்கு என்னவாம் குறைச்சல்? சரியில்லைனா அப்பல்லோல அட்மிட் பண்ணு உன் மனசை. என்னை ப்ளேட் போடாத…” என்றவள்,
“என் ப்ரெண்ட்ஸ் வந்திருக்காங்க. பர்ஸ்ட் பர்ஸ்ட் மீட் பண்ணியிருக்க. ஒரு ஹலோ மட்டும் தானா?…”
“என்ன வேணும்?…”
“இன்னைக்கு நான் நல்லா டான்ஸ் வேற பண்ணியிருக்கேன்…”
“அதுக்கு…”
“என்ன அண்ணன் நீ? எங்கள வெளில தான் கூட்டிட்டு போக முடியாது. இங்க கேண்டீன்ல இன்னைக்கு ஸ்பெஷல்ஸ் நிறைய போட்ருக்காங்க. கூட்டிட்டு போய் வாங்கி தா. இன்னும் நேரம் ஆகிட்டா பங்க்ஷன் முடிஞ்சிடும். நீயும் கிளம்பனும்னு போய்டுவ. வந்ததுக்கு உன் பர்ஸ்க்கு வேட்டு வைக்க வேண்டாம்…”
“அதான நீ சும்மா விடுவியா?. சரி வா போகலாம்…”
நேத்ராவோடு பேசிக்கொண்டே மலரை பார்த்தபடி நடக்க ராகினி எதுவோ சொல்லி சிரிக்கவும் ரோஷிணி அவளை அடக்குவதுமாக இருக்க முதலில் கவனிக்காத நேத்ரா கேண்டீன் உள்ளே சென்று அமர்ந்ததும் கவனித்து கேட்டும் விட்டாள்.
“ஹேய் கூழ்வண்டி என்ன அங்க கெக்கபிக்கே? என்னன்னு இப்ப சொல்லலை பார்த்துக்கோ…” கண்களை உருட்ட,
“கேட்டியா நீ? உனக்கு இது தேவையா? வேற வழியே இல்லை. சொல்லித்தான் ஆகனும் நீ…” என்பதை போல ரோஷிணி ராகினியை பார்க்க,
“ஹ்ம் சொல்லுவேன் ஆனா நீ திட்டக்கூடாது. திட்டமாட்ட தானே?…” ராகினி கேட்க,
“ஹேய் அமேஸான். உனக்கு தெரியுமா?…” என வனமலரிடம் கேட்க அனய்க்குதான் பற்றிக்கொண்டு வந்தது.
“என் ஆளை பார்த்தா அமேஸான் மாதிரியா இருக்குது?” என தங்கை மேல் கோபம் கொண்டவன் மலரை அழுத்தமாய் பார்வையிட்டான்.
அப்பொழுதும் வாயை திறந்து பேசாதவள் அவனை முறைத்தவள் நேத்ராவை காட்ட தானும் அவளை பார்த்துவிட்டு,
“நேத்ரா நான் வேணும்னா கொஞ்சம் அப்படி போய் இருக்கேன். நீங்க பேசிட்டு கூப்பிடு…” அவன் எழுந்துகொள்ள,
“நீ முதல்ல உட்காரு. ஒரு ரகசியமும் இல்லை. இவளுங்க சிரிக்கிறதே உன்னை பார்த்துதான்…” என்று சொல்லி ராகினியை பார்க்க,
“ஸாரி நேத்ரா, எங்களுக்கு முதல்ல உன் அண்ணான்னு தெரியாது. சேம் ஷர்ட். அதான் கன்ப்யூஸ் ஆகிடுச்சு…”
“சொல்றதை கொஞ்சம் தெளிவா சொல்லு கூழ்வண்டி…”
“சத்தியமா முறைக்காத. ரொம்ப பயங்கரமா இருக்கு. அதுவும் இந்த மோகினியாட்டம் கெட்டப் வேற. அதுக்கு ஏத்தது போல கண்ணை வேற விரிக்காத…”உண்மையில் பயந்ததுபோல தான் இருந்தது ராகினியின் பேச்சு அனய்க்கு.
ஆனால் ரோஷிணியும் வனமலரும் வாய் பொத்தி சிரித்துக்கொள்ள ராகினி சொல்ல ஆரம்பித்தாள்.
“அந்த நவீன் ரொம்ப பண்ணிட்டு இருந்தான்ல. அதான் பைனல் இயர் நவீன். அவனை இன்னைக்கு ஒரு வழி பண்ணிடலாம்னு தான் நாங்க க்ளாஸ்ரூம்ல ஒளிஞ்சிட்டிருந்தோம். அந்த நேரம் அதே போல ஷர்ட் போட்டு உன் அண்ணா வந்தாரு…”
ராகினி நடந்ததை சொல்ல சொல்ல மலருக்கும் நேத்ராவுக்கும் சிரிப்பு பீறிட அனய்க்கு கோபம் வந்துவிட்டால் என்ன செய்ய என கன்ட்ரோல் செய்தாலும் அனய்யின் பிபி எகிற ஆரம்பித்தது.
“அந்த குட்டிச்சாத்தானுங்க நீங்கதானா? யூ யூ…” ரோஷிணியையும் ராகினியையும் பார்த்து முறைக்க,
“நாங்க முகத்தை பார்க்கலை. பார்த்திருந்தா நீங்கன்னு தெரிஞ்சிருக்கும். ஆனா நீங்க இப்படி பயந்து மல்லாக்க விழுவீங்கன்னு நாங்க என்ன கண்டோம்?. ஆனாலும் நீங்க ரொம்ப பயந்தவங்க தான் போங்க…”
பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவனை கலாய்க்க அவனோ அவள் கூறிய ‘உங்களை பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும்’ என்பதிலேயே நின்றது.
“அப்போ இதுக்கு முன்ன என்னை பார்த்திருக்கீங்களா?…” அனய் கேட்க அவன் கேட்பது மலரை குறித்துதான் என்பது யாருக்கும் தெரியவில்லை மலரை தவிர.
“எஸ் பார்த்திருக்கோமே. நாங்க தான் உங்க வீட்டுக்கு வந்திருந்தோமே? அதுமட்டுமில்லை நேத்ரா தான் உங்க பேமிலி போட்டோ வச்சிருக்கா. அதுல பார்த்தோம்…” ராகினி சொல்ல,
“இவங்க பேசமாட்டாங்களா?…” வனமலரை காண்பித்து கேட்டவனுக்கு தெரிந்துவிட்டது அவளுக்கு தமிழ் நன்கு தெரியும் என்பது. அவனை வெட்டும் விழிகளால் பார்த்தவள் தோளை குலுக்கிக்கொள்ள,
“ஏன் பேசாம? எங்க எல்லோருக்கும் சேர்த்துவச்சு அவ பேசுவா…” ரோஷிணி சொல்ல அவளிடம் ஒரு தோழமை தோன்றியது அனய்க்கு.
“ஓகே, இனி இப்படி செய்யாதீங்க. வந்த வேலையை பார்ப்போமா? முதல்ல போய் சாப்பிடலாம்…”
நேத்ரா எழுந்துகொண்டு மற்றவர்களையும் அழைக்க அவர்களும் சென்று தேவையானதை வாங்க அனய் முதலில் வாங்கி வந்து உட்கார்ந்து விட்டான்.
மலரும் ஜூஸ் மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிட நேத்ராவும் மற்றவர்களும் அங்கே வாய்வளர்த்துக்கொண்டிருக்க அனய் அவர்களை பார்த்துவிட்டு இப்போதைக்கு வரமாட்டார்கள் என நினைத்து,
“என்ன கோகொ பேசமாட்டியா?…” கிசுகிசுப்பாய் கேட்க அதிர்ந்துபோய் நிமிர்ந்து பார்த்தாள்.
“எதுக்கு இவ்வளோ ஷாக்? நான் என்ன கேட்டுட்டேன்?…” மீண்டும் அவளிடம் அவன் அவ்வாறே கேட்க அவள் முறைத்தாள்.
“ஆமாம் நான் உன்கிட்ட பேசினதை நீ ஏன் நேத்ராக்கிட்ட சொல்லலை…” என அதற்கும் ஒரு அலட்சியமான முகபாவனையை பதிலாய் தர,
“நான் பேசறது புரியலையா? ஓஹ் உனக்குத்தான் தமிழ் தெரியாதுல…”அவனின் சீண்டலில் சேரில் நன்கு சாய்ந்து அமர்ந்தவள்,
“ஏன் தெரியாம? நல்லாவே தெரியுமே. அதுவும் தமிழ்நாட்டு பொண்ணுக்கு தமிழ் தெரியலைன்னு சொன்னா நம்பறது போலவா இருக்கும்?. எனக்கு அதை சொல்லனும்னு தோணலை. சொல்லலை. தட்ஸ் ஆல்…” அமர்த்தலாய் அவள் கேட்க,
“அப்போ நான் பேசினது எல்லாமே உனக்கு புரிஞ்சது தானே?…” அவளை போலவே அவனும் கேட்க,
“நல்லாவே…” அதே போல பதில் சொல்ல,
“அப்போ நான் உன்னை சைட்டடிக்கிறது, உன்னை பார்த்து பாடினது, ஸ்டேஜ்ல உன்னை பார்த்ததும் நான் மொத்தமா உன் பக்கம் விழுந்தது, இப்போ உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சது எல்லாமே புரிஞ்சிருக்குமே?…” என்றவன்,
“புரியலைனாலும் நோ ப்ராப்ளம், எனக்கு உன்னை அவ்வளோ அவ்வளோ புடிச்சிருக்கு. உன்னை தவிர இந்த ஜென்மத்துல நான் வேற யாரையும் கட்டிக்க மாட்டேன். நீயும் பண்ண விடமாட்டேன்…”
“ஸீ யூ ரோஸ்பட்…” வசீகர புன்னகையோடு கண்ணடித்துவிட்டு அவளிடம் சொல்லியவன் நேத்ரா நிற்கும் இடம் நோக்கி செல்ல அதுவரை உறைந்துபோய் அமர்ந்திருந்தவள்,
“ராஸ்கல்…” என பல்லை கடித்தாள். அனய்யின் மீதிருந்த நல்ல அபிப்பிராயம் சுத்தமாய் மாறியிருந்தாலும் அவனின் விளையாட்டு குணம் பற்றி அறிந்திருந்ததால் இதிலும் விளையாடுகிறானோ என்றும் ஒரு சந்தேகம்.
“விளையாட்டில்லாமல் உண்மையாகவே இருந்தாலும் எதுவானாலும் என்னை அசைக்க முடியாது. எனக்கு லவ் எல்லாம் வராது”
அவளுக்கு அவளே சொல்லிக்கொள்ள நேத்ராவும் வந்துவிட்டாள்.
“அனய் கிளம்பிட்டான். அம்மாவை நான் போய் பார்த்துட்டு அனுப்பிட்டு வரேன். அதுவரை நீங்க சாப்பிட்டுட்டுருங்க…” என சொல்லி நேத்ராவும் கிளம்பிவிட,
“ஓகே மலர் நீயும் எடுத்துக்கோ. அவ வரும் போது ஜாயின் பண்ணிக்கட்டும்…” ராகினி சாப்பிட ஆரம்பிக்க ரோஷிணியும் மலரை கவனிக்கவில்லை.
“நேத்ராவிடம் சொல்லலாமா வேண்டாமா என எதற்கிந்த குழப்பம்? இது ஒரு சின்ன விஷயம். இதை அவளிடம் சொல்லி எதுக்கு அவளையும் டென்ஷன் பண்ணனும்? அதுவும் இல்லாம அண்ணன் மேல ரொம்ப பாசம் அவளுக்கு. வேண்டாம். சொல்லவேண்டாம்”
அதன் பின்னான நாட்களில் அனய் என்றொருவன் இருப்பதையே மறந்துவிட்டாள் வனமலர். அவ்வப்போது நேத்ராவின் பேச்சில் அவனின் பெயர் அடிபட்டாலும் பெரிதாய் கண்டுகொள்ளவும் மாட்டாள்.
அந்த வருடம் படிப்பு முடியும் வரை நேத்ராவின் திருமணம் வரையும் கூட வனமலருக்கு தெரியவில்லை அனய் இன்னும் தன் நினைப்பில் வாழ்கிறான் என்பது.
அவனின் வாழ்க்கையாக தான் மாறப்போகிறோம் என்பதும் அவளின் வாழ்க்கையே திசைமாறும் காலம் வரப்போகிறது என்றும் அவளுக்கு அப்பொழுது தெரிந்திருக்க நியாயமில்லை.
புன்னகை ஜீவிக்கும்…