புன்னகை – 21
நேத்ராவின் திருமணத்தில் கூட அவனின் முழு மனதும் தெரியாமல் அவனோடு கேலியும் கிண்டலுமாய் சகஜமாய் தான் பேசினாள்.
அவனும் அப்படியே என நினைத்திருக்க அது உண்மை இல்லை என்பது மேற்படிப்பின் பொழுது இரண்டாம் வருட முடிவிலேயே தெரிந்துவிட்டது மலருக்கு.
மூன்று வருடங்கள் ஆர்ஜே கல்லூரியில் படித்தவள் அதன் பின் மேல் படிப்பை சென்னையில் தொடர்ந்தாள்.
தன் மாமா வைத்தியநாதன் தன்னுடைய நண்பரின் ஆலோசனையின் படி மலரின் மேல் படிப்பிற்கு சென்னை அனுப்ப நினைக்க அவளின் தந்தை அப்படியே ஒத்துக்கொண்டார்.
அவரின் தாயும் தந்தையும் வைத்தியநாதனின் பேச்சினை என்றுமே தட்டமாட்டார்கள். அவரின் முன்பு எதிர்த்தும் பேச துணிய மாட்டார்கள். அவர்கள் குடும்பத்தில் வைத்தியநாதன் சொல்வது தான் வேதவாக்கு.
வனமலர் எந்தளவிற்கு கல்லூரியில் குறும்பும் துறுதுறுவென சிரிப்பும் கொண்டாட்டமுமாக இருந்தாலும் அவை அனைத்தும் வீட்டினில் துளியும் இருக்காது அவளிடத்தில்.
“எனக்கு காலேஜ் தான் பிடிச்சிருக்கு நேத்ரா. வீட்டுக்கு ஏன்தான் போறோமோன்னு இருக்கு. லீவ் விட்டுட்டா எப்போடா திரும்ப காலேஜ் வருவோம்னு இருக்கும்…” என சொல்லி தன் தோழிகளின் மடியில் சேய் போல் தலைசாய்த்து கொள்பவள்,
“எனக்கு இதுதான் அம்மா மடி போல இருக்கு. அம்மா எப்பவும் மாமா என்ன சொல்றாங்கன்னு முகம் பார்த்தே இருப்பாங்க. அடுத்து அப்பாவை கவனிக்கிறது. இப்படித்தான் அவங்க வாழ்க்கை முழுவதும் போய்ருக்கு. இனியும் அப்டித்தான் போகும்…”
“நான் அம்மா கையால எப்ப சாப்பிட்டேன்னு கூட எனக்கு ஞாபகம் இல்லை. அதுக்குன்னு என் மேல அவங்களுக்கு பாசம் இல்லாமல் இல்லை. அதைகாட்டத்தான் அவங்களுக்கு நேரம் இல்லாம போய்டுதே. நானும் அதை எல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து சலிச்சு ஒரு கட்டத்துல எதுவும் தேவையில்லைன்ற முடிவுக்கே வந்துட்டேன்…”
“அப்பாவுக்கு அன்பு என் மேல. ஆனாலும் வெளிக்காட்டவே மாட்டாங்க. ஆனா அம்மாவை பொறுத்தவரை முதல்ல அப்பா தான் அவங்களுக்கு எல்லாம். அடுத்தது தான் யாரும். தேவையானது வேணுமன்ற நேரத்துல கண்டிப்பா கிடைக்கும். அந்த குறை எப்பவுமே இருந்ததில்லை…”
“ஆனா அது ஒருவித கண்டிப்போட மட்டும் தான் கிடைக்கும். எனக்கு இங்க பயம்னா என்னனே தெரியலை. ஆனா அங்க நான் பயப்படுவேன். ஏதாவது ஒரு விசேஷத்தில கூட ஆனந்தி பொண்ணு எப்புடி பேசறான்னு யாராச்சும் சொல்லிட்டா போதும் அடுத்த ஒரு வாரத்துக்கு அம்மா முகத்தை பார்க்கவே முடியாது…”
“அடுத்தவங்க என்னை பெருமையா சொல்றாங்களா இல்லை கேலியா சொல்றாங்களான்னே யோசிக்க மாட்டாங்க. இவ எதுக்கு பேசறா பேசினதால தான நம்ம பொண்ணை பத்தி அடுத்தவ பேசி சிரிக்கிறான்னு புலம்பி சரியா சாப்பிடாம தூங்காமலே இருப்பாங்க. அதுக்கு பயந்தே நான் அங்க யாரோடையும் அவ்வளவா பேசவோ ஏன் சத்தமா சிரிக்க கூட மாட்டேன்…”
“யார்க்கிட்டயும் ஒரு சொல் வாங்கிடகூடாதுன்னு பயந்து பயந்து என்னை வளர்த்து எனக்கு அங்க இயல்பாவே இருக்கமுடியாம எனக்குள்ள முடங்கிதான் இருப்பேன். என் அம்மாவுக்காக. அப்பாவுக்காக…”
“இப்படி ஒரு பேமிலி பேக்ரவுண்ட்ல எப்படி படிக்க வந்தன்னு எல்லோருமே யோசிக்கிறது தான். அதுக்கு காரணம் என் மாமா தான். மாமா அந்த காலத்துலயே டிகிரி முடிச்சவர். வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ஆனாலும் என்னோட படிப்பு விஷயத்துல மாமா எடுத்தது தான் முடிவு…”
“அம்மா, அப்பாவும் மூச். நோ சொல்லவே இல்லையே. ஆனாலும் ரொம்பவே அட்வைஸ். என்னை இங்க அனுப்பறதுக்குள்ள பாதி உயிரை எடுத்துட்டாங்க. அப்படி இருக்கனும். இப்படி நடக்கனும்னு. அதனாலையே மாமா மேல இன்னும் மரியாதை எனக்கு…”
“அப்பாம்மாக்கு நான் மேல படிக்கிறதுல அவ்வளவா இஷ்டம் இல்லை. ஆனா மாமா சொன்னதுக்காக ஒத்துக்கிட்டாங்க.ஆனாலும் அவங்க காலேஜ் பக்கமே வரமாட்டாங்க. ஏனோ விருப்பமில்லை. மாமாவும் சொன்னும் சொல்லலை. தேவைனா மாமா தான் வருவாங்க…”
“ஆனா என் காமாட்சி அத்தை ரொம்ப சாப்ட். எனக்கு இருக்கிற ஒரே ஆறுதல் அவங்க தான். அவங்ககிட்ட தான் எப்பவும் பேசிட்டே இருப்பேன். நானும் என் அத்தையும் அவ்வளோ க்ளோஸ். இங்க உங்களோட இருக்கிற மலர் வேற. அங்க வீட்ல என் சொந்தபந்தங்கள் மத்தியில இருக்கிற மலர் மொத்தமாவே வேற…”
வனமலர் வார்த்தைகளில் இருந்த வலியும் வேதனையும் அவள் குரலிலோ முகத்திலோ துளியும் இல்லாதது தான் ஆச்சர்யம்.
“இதுதான் என் குடும்பம். இப்படித்தான் என்னோட வாழ்க்கை. இவ்வளவு தான் நான்…”
என்றோ ஒருநாள் மலர் நேத்ராவின் வீட்டில் வைத்து தன் தோழிகளிடம் பகிர்ந்துகொண்டது அனய் கேட்க நேர்ந்து அவளின் படிப்பு முடியும் வரை எந்தவித தொந்தரவு தராமல் தன் காதலை தனக்குள் அடக்கியவன் அவளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்தான்.
அந்த கல்லூரிக்கும் வைத்தியநாதன் மட்டுமே வந்து செல்ல நேத்ரா குடும்பத்தின் மீது பெரும் மதிப்பு உண்டானது அவருக்கு. வயதுப்பெண்ணை தனியே விட்டிருக்கிறோமே என்கிற கவலை ஓரளவிற்கு அவரை விட்டிருந்தது. அதற்கு ஆண்டாள் ஒரு காரணமென்றால் மிகையாகாது.
இரண்டாம் வருடம் கடைசி செமஸ்டர் எக்ஸாம் முடிந்து மீண்டும் அந்த கூண்டிற்குள் செல்கிறோம் என்கிற அலுப்பு இருந்தாலும் பெற்றோரிடம் செல்கிறோம் என்ற மகிழ்ச்சியும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டு தான் இருந்தது மலருக்கு.
அனய் வீட்டிற்கு சென்று ஆண்டாள் பாலகிருஷ்ணனிடம் சொல்லிக்கொண்டு வர சென்றவள் அவனை பார்ப்பதற்காக அனய்க்கு அழைக்க,
“மலர் நான் முக்கியமான மீட்டிங்க்ல இருக்கேன். நீ கிளம்பு…” என சொல்லி வைத்துவிட்டான்.
“அவனுக்கு முக்கியமான வேலை இருக்கும் போல. நான் சொல்லிடறேன்…”
ஆண்டாளுக்கு அனய் நேத்ராவிற்காக மலருக்கு நட்பு ரீதியில் உதவுகிறான் என்றுதான் தெரியும். அவனின் மனம் இன்றுவரை அவருக்கு தெரியாமலேயே போனது.
“நீ நேரமே கிளம்பு மலர். ஏதாவது வேணும்னா கால் செய். நான் அங்கிள் கிட்ட குடுத்துவிடறேன். பத்திரமா போய்ட்டு வா. ஊருக்கு போனதும் கால் பண்ணு. அப்போதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கும். அடுத்து சென்னைக்கு வரும் போது கண்டிப்பா வீட்டுக்கு வரனும்…”
“கண்டிப்பா வருவேன் ஆண்ட்டி. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன்…”
ஆண்டாள் சொல்ல சொல்ல தலையசைத்து கேட்டுக்கொண்டவள் அவரின் பாதம் பணிந்து எழுந்தாள்.
“நல்லா இருடா. போய்ட்டு வா. ஹாஸ்டல் போனதும் கால் பண்ணு. இதுல உனக்கு பிடிச்சது எல்லாம் இருக்கு. எடுத்துக்கோ…”
“எதுக்கு ஆண்ட்டி இதெல்லாம்?…”
“ப்ச், சின்ன பேக், இதை உன்னோட பேக்ல வச்சுக்கறதுல என்ன கஷ்டம்? எடுத்துக்கோன்னா எடுத்துக்கோ. இல்லைனா நேத்ராக்கிட்ட சொல்லிடுவேன்…”
“ஹய்யய்யோ, இதுக்கு நான் எடுத்துட்டே போய்டுவேன்…”
ஆண்டாள் மிரட்டுவது போல் மிரட்ட மலரும் பயந்தது போல் நடிக்க இருவரின் பேச்சில் சிரித்த பாலகிருஷ்ணன்,
“இன்னைக்கு நீ கிளம்புவது போல தெரியலை. நான் புக் பண்ணின கேப் கேன்சல் பண்ணிடறேன். நாளைக்கு போகலாம்…” அவர் சொல்லியதும்,
“அச்சோ அப்படியெல்லாம் செஞ்சுடாதீங்க அங்கிள். இனிமேதான் அங்க எல்லாமே பேக் பண்ணனும். நான் கிளம்பறேன்…”
இருவரிடமும் சொல்லிக்கொண்டு ஆண்டாள் கொடுத்ததையும் தன் பேக்கில் வைத்துக்கொண்டு மலர் கிளம்பிவிட்டாள்.
நேத்ராவின் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் கடந்து மெயின்ரோட் வரவும் அவளின் காரை ஒரு பைக் வழிமறிக்கவும் சரியாக இருந்தது.
“யார்ரா அது பரதேசி, காருக்கு குறுக்கால?…”ட்ரைவர் கன்னாபின்னாவென கத்த ஆரம்பித்தான்.
பைக்கில் பின் சீட்டிலிருந்து தன் ஹெல்மெட்டை கழட்டியபடி காரின் அருகே அனய் வரவும் அவனை பார்த்த மலர்,
“அண்ணா எனக்கு தெரிஞ்சவங்க தான். ப்ளீஸ்…” என சொல்லி கார் கண்ணாடியை இறக்கியவள் ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்து,
“என்ன மீட்டிங்க்னு சொன்னீங்க? இங்க நின்னுட்டு இருக்கீங்க?…” மலர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கதவை திறந்தவன்,
“உள்ளே தள்ளி உட்கார் மலர்…” அவள் நகர்ந்ததும் உள்ளே அமர்ந்தவன்,
“தேங்க்ஸ் டா மச்சி. நாளைக்கு பார்ப்போம்…” என தன்னுடைய நண்பனை அனுப்பிவிட்டு,
“மலர் கொஞ்சம் வெளில போகனும் அவசரமா…” ட்ரைவரிடம் போகவேண்டிய இடத்தை சொல்லிவிட்டு சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
ஏற்கனவே முடிவு செய்தது தான். அவள் படிப்பு முடிந்து செல்லும் நாள் தன் காதலை அவளிடம் தெரிவிக்கவேண்டும் என்று. கிளம்பி வந்தாகிற்றுதான். ஆனாலும் ஏதோ ஒரு பதட்டம். கலக்கம்.
எங்கே மறுத்துவிடுவாளோ என்கிற பயமும் கூட.
அவனின் முகத்தில் அத்தனை டென்ஷன். சோர்ந்துபோய் அமர்ந்திருந்தவனை யோசனையாய் திரும்பி திரும்பி பார்த்தபடி இருந்தாள் மலர்.
“ப்ச் இப்போ எதுக்கு என்னையே இப்படி திரும்பி திரும்பி பார்த்திட்டே இருக்க?…”
சட்டென கண்களை திறந்து தன்னிடம் அப்படி கேட்பான் என எதிர்பார்த்திராத மலர் திருதிருவென முழித்தாள்.
அதிலும் அந்த குரல் இதுவரை தன்னிடம் இப்படி இளகி இராத, குழைந்து இராத, காதலில் கனிந்து இராத இந்த குரல் அவனின் பால் அவளை காந்தமென ஈர்ப்பதை போன்றொரு ஒரு பிரம்மை.
அந்த பிரம்மையே அவளை அடித்து புரட்டிப்போட்டது.
“இது, இவங்க ஏன் இப்படி?…” என்றொரு பயம் கவ்வ ஆரம்பித்தது.
அதையும் தாண்டி அவன் பார்வை அவளிடம் எதையோ உணர்த்த துடிக்க தனக்குள் கலவரமானவள் அதில் மிரண்டுபோனாள்.
வேடிக்கை பார்க்கவென திரும்பிக்கொண்டவள் இதயமோ பலமடங்கு வேகத்துடன் துடித்தது.
சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அவனை திரும்பி பார்க்க அவனின் அசையா காதல் பார்வையில் அடிவயிற்றினுள் தடதடத்த உணர்வில் வியர்க்க ஆரம்பித்தது.
“எதுவோ நடக்கபோகிறது” அவளின் உள்மனம் எச்சரிக்க கைகள் நடுங்க மீண்டும் வெளிப்புறம் திரும்பிக்கொண்டாள்.
அவளை நொடியில் உணர்ந்துகொண்டவன் இதழ்கள் புன்னகையில் நெளிந்தது.
“ஹ்ம், வெரி க்ளவர். கெஸ் பண்ணிட்டா” மந்தகாச புன்னகை வந்தமர்ந்தது அவன் இதழ்களில்.
“அப்டியே ஓகே சொல்லிட்டா அடுத்து ஆகவேண்டியதை நான் பார்ப்பேன். அம்மா வேற சீக்கிரம் பொண்ணு பார்க்கனும்னு சொல்லி படுத்திட்டு இருக்காங்க. இன்னும் எவ்வளவு நாள் தான் நானும் கன்னிப்பையனாவே இருக்க?…” ஒரு பெருமூச்சுடன் மலரை பார்த்தவன் அவளின் நிலையை கண்டு,
“ஈஸி ரோஸ்பட். எதுவானாலும் பேஸ் பண்ணித்தானே ஆகனும். ரிலாக்ஸ்…” அவளிடம் சொல்லிவிட்டு வெளியே பார்க்க ஆரம்பித்தான்.
அவன் என்னவோ வெகு சாதாரணமாய் சொல்லிவிட்டான் தான். மலருக்குத்தான் அவனின் ரோஸ்பட் என்கிற அழைப்பில் தூக்கிவாரிப்போட்டது.
“இவன் இன்னும் இதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறானா? இத்தனை வருடங்களும் இதை மனதில் வைத்துக்கொண்டுதான் எனக்கு அத்தனை உதவியும் செய்திருக்கிறான்”
நினைக்கையில் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. அப்பொழுதே அவனிடம் சண்டையிட துடித்த நாவை அடக்கியவள் எதுவானாலும் அவனின் வாய்வார்த்தையாகவே வரட்டும்.
அவனை எதிர்கொள்ள தெளிவாய் தயாரானாள். இதுதான் விஷயமென்றால் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசவேண்டும். என்ன பேசவேண்டும் என மனதிற்குள் ஒத்திகையே பார்த்துக்கொண்டாள்.
பெசன்ட் நகர் பீச்.
கடற்கரைக்கு வந்து இருபது நிமிடங்கள் ஆகப்போகிறது. அதிக கூட்டமில்லாமல் ஓரிடம் தேடி அமர்ந்து ஒன்றும் பேசாமல் அலைகளை மட்டுமே பார்த்திருந்தவன் மலரை திரும்பியும் பார்க்கவில்லை.
அவனே ஆரம்பிக்கட்டும் என அவளும் எப்படி தொடங்குவது என அவனும் அமைதியாய் இருக்க அவள் பொறுமை இழந்து மீண்டும் எழுந்துகொள்ள வேகமாய் கை பிடித்து அமர்த்தினான்.
விழுவதை போல கீழே அமர்ந்தவள் அவனிடமிருந்து தள்ளி அமர அதில் வாய்விட்டு சிரித்தவன்,
“ரொம்ப கோபமா இருக்க போல?…” என்றதும் மலர் முறைக்க அதற்கும் அட்டகாசமாய் சிரித்தான்.
“நான் ஹாஸ்டலுக்கு போகனும். டைம் ஆகிடுச்சு…” அவனை பார்க்காமல் சொல்ல,
“போ, உன்னை யார் போகவேண்டாம்னு தடுத்தது?…” அனய் சொன்னதும் மீண்டும் அவள் எழ அனய் மீண்டும் அவள் கை பிடித்து அமர்த்த,
“டோன்ட் டச் மீ…” பல்லை கடித்துக்கொண்டு அவள் கத்த,
“நான் சொல்றதை கேட்டுட்டு கிளம்புன்னு தானே சொல்றேன். அதுக்குள்ளே எழுந்து போக ஏன் ட்ரை பன்ற?…” என சொல்லி,
“நான் உன்னை டச் பன்றது உன்னை அவ்வளோ டிஸ்டர்ப் செய்யுதா?…”
அவள் புறம் குனிந்து ரகசியமாய் அவன் கேட்க மலரின் விழிகளோ கலங்கியேவிட்டது.
“ப்ச் மலர், நான் எதுக்கு உன்னை இங்க அழைச்சுட்டு வந்திருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரிஞ்சிடுச்சு. நீ புரிஞ்சிட்ட. அதுக்கப்பறமும் ஏன் இப்படி பிகேவ் பன்ற?…”
“ஓகே நான் நேரடியாவே சொல்றேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. இன்னைக்கில்லை பர்ஸ்ட் டைம் உன்னை பார்த்த அன்னையில இருந்தே. எஸ். ஐ லவ் யூ. யூ ஆர் மை எவ்ரித்திங்…”
அவளின் அதிர்ந்த பார்வையும் அதில் தெரிந்த பரிதவிப்பும் ஏனோ அனய்யின் மனதில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மறுப்பாய் தலையசைத்து அவள் பேச முயல்கையில்,
“நோ மலர், இப்ப எதுவும் சொல்லிடாதே. உன்கிட்ட இருந்து சின்னதா கூட மறுப்பை ஏத்துக்கற மனநிலையில நான் இல்லை. ஒவ்வொரு நாளும் உன் நினைப்பை மட்டும் தவம் மாதிரி என் நெஞ்சில சுமந்துட்டிருக்கேன். அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாத…”
அவன் பேசியதும் கோபமாய் அவனிடம் சண்டை போட்டு நன்றாய் கேள்வி கேட்கவேண்டும் என ஆங்கரித்து இருந்த மனது இப்போது அவனின் தவிப்பில் தடுமாறியது.
“கடவுளே இது எப்படி சரியா வரும்?எனக்கு அப்படி நினைக்கவே தோணலையே. நான் என்ன செய்ய?” வார்த்தை வராமல் குழம்பியவள்,
“நீங்க ஏன் இப்படி பேசறீங்க? எனக்கு பிடிக்கலை. நீங்க முன்ன போலவே என்னோட ப்ரெண்டா மட்டுமே இருங்க ப்ளீஸ். இது, இது வேண்டாம். நீங்க… உங்கள.. இல்லை , இல்லை என்னால முடியவே முடியாது…”
அனய் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல் காதுகளை இறுக பொத்திக்கொண்டவள் விழிகளையும் மூடிக்கொண்டாள்.
மூடிய கண்களுக்குள் தன்னிடம் கள்ளமின்றி பேசி பழகிய அந்த அனய்யின் முகம் அழகாய் ஊடுருவி வந்து நின்றது.
“எதையும் பேஸ் பண்ணித்தான் ஆகனும் மலர்…” அவன் சொன்னதையே தானும் திரும்ப சொல்லிக்கொண்டவள் ஒரு நிமிடம் நிதானித்தாள்.
ஆழமாய் மூச்சொன்றை இழுத்து விட்டவள் முகத்தில் அத்தனை தெளிவு மீண்டிருந்தது. ஒரு முடிவோடு அனய்யை ஏறிட்டவள் முகத்தில் அத்தனை தீர்க்கம் நிரம்பி இருந்தது.
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். எதையும் கேட்க எனக்கு விருப்பமில்லை. நான் சொல்றதை நீங்க புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. இனி இது போல என்கிட்டே பேச முயற்சி பண்ணாதீங்க. இதனால உங்க மரியாதயைத்தான் நீங்க இழக்க வேண்டியதாகும்…”
“நீ அவசரத்துல முடிவு எடுக்காத மலர். அது என்னைக்கும் ஆபத்தில் தான் கொண்டுவிடும். முதல்ல நீ யோசி. உன்னுடைய பதிலை நீ இப்போவே சொல்லனும்னு நான் எதிர்பார்க்கவே இல்லையே…”
“நீங்க என்ன சொன்னாலும் என்னுடைய பதில் நோ தான்…” பிடிவாதமாய் மலரும் சொல்ல,
“என்னை மறுக்க என்ன காரணம் கோகொ?…” அவனுடைய அந்த அழைப்பு அந்த நாளைய ஞாபகத்திற்கு இழுத்துச்செல்ல பிடிவாதமாய் மனதை திருப்பியவள் முகத்தை திருப்பிக்கொள்ள,
“என்னை மறுக்க எதாச்சும் ஒரு ரீசன்?…” அப்படியாவது அவள் யோசித்து பார்க்கமாட்டாளா என பார்க்க,
“ஏன் இல்லை. நீங்க என் ப்ரெண்டோட அண்ணா. அந்த ஒரு ரீசன் போதுமே…”
“நான் உன் ப்ரெண்டுக்கு தானே அண்ணா. உனக்கு எப்பவாச்சும் அண்ணாவா இருந்திருக்கேனா? இல்லை உனக்குத்தான் அப்படி தோணிருக்கா?…”
“ஆண்டாள் ஆண்ட்டி என் மேல எவ்வளவு மதிப்பும் நம்பிக்கையும் வச்சிருக்காங்க. அவங்க பையன் நீங்க அந்த ஒரு காரணத்துக்காக தான் உங்களோட சகஜமா பழகினேன். ஒரு ப்ரெண்டா மட்டும் தான் நினைச்சேன்…”
தாயை பற்றியும் அவரின் நம்பிக்கையை பற்றியும் பேசினாள் அவன் யோசித்துவிட மாட்டானா தன்னை விட்டுவிட்டால் பரவாயில்லை என நினைத்து அவள் சொல்ல,
“அப்படி என்ன அவங்க நம்பிக்கைக்கு நான் துரோகம் செஞ்சுட்டேனாம்? உன்னை யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சு புள்ளை குட்டியோடவா போய் நிற்க போறேன். நீ அக்ஸப்ட் பண்ணிட்டா உடனே அரேஞ்ச் பண்ணிடலாம்னு தான உன்கிட்ட உயிரை குடுத்து பேசிட்டிருக்கேன்…”
“அம்மாவுக்கு பிடிக்கலை, அப்பத்தாவுக்கு பிடிக்கலைன்னு சும்மா சப்பைக்கட்டு கட்டிட்டு இருக்காத. வேற எதாச்சும் வேலீட் ரீசன் சொல்லு…”
விட்டேனா பார் என்பதை போல அவளை கேள்விமேல் கேள்விகேட்டு திகைக்க வைக்க மலருக்கோ அழுகை வரும் போல் ஆனது. எப்படி சொல்லி இவனுக்கு விளக்குவது?
அவன் சொல்லிய குழந்தை குட்டியோடா நின்றேன் என்ற பேச்சில் எதார்த்தமாய் வர்ணம் தீட்ட அவனோடு குடும்பம் சகிதமாய் அந்த நினைப்பையே வெறுத்தாள்.
“இல்லை, என்னால் முடியவே முடியாது. இது சரிப்பட்டு வராது. எனக்கு உங்களை பிடிக்கலை. என்னால ஒரு செகேன்ட் கூட உங்களை அந்த மாதிரி கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியலை. இது ஒரு ரீசன் போதாதா? இதை விட வேற வேலீட் ரீசன் என்ன வேணும்?…”
மலரின் மறுப்பு உள்ளுக்குள் பெரும் ரணமாக வலித்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் இயல்பாய் அவளிடம் உரையாடினான்.
“நமக்கு இன்னும் டைம் இருக்கு மலர். எவ்வளவு நாள் வேணும்னாலும் நீ எடுத்துக்கோ. என்னால உனக்காக காத்திட்டு இருக்க முடியும். ஆனா உன்னை விட்டுக்கொடுக்க தான் முடியாது…”
ஆரம்பிக்கும் பொழுது கூலாக அவளிடத்தில் கூறியவன் முடிக்கும் பொழுது அக்குரலில் அத்தனை அழுத்தமும் ஆளுமையும் கூடி தெரிந்தது.
“நான் கிளம்பறேன்…” என வேகமாய் எழுந்துகொண்டவள் நடக்க ஆரம்பிக்க அவளோடு பின்னே வந்தவனை முறைத்து பார்க்க,
“கூட்டிட்டு வந்தேன்ல. உன்னோட சேப்டிக்கு நான் தானே பொறுப்பு. நானே உன்னை கொண்டுபோய் ஹாஸ்டல்ல விட்டுடறேன்…”
மறுத்தாலும் கேட்கமாட்டான் என்பதாலும் லேசாய் இருள் சூழ ஆரம்பித்திருப்பதால் தனியாய் செல்வது கொஞ்சம் ரிஸ்க் என்பதாலும் அமைதியாய் இருந்தாள்.
இன்னொரு மனமோ, “அவன்தானே பாதிவழியில் இங்கே கூட்டி வந்தது. கூட்டிக்கொண்டுபோய் விடட்டுமே. என்ன குறைந்துவிடும்?” என நினைத்தது.
ஒரு ஆட்டோவை பிடித்தவன் அவளோடு அமர்ந்துகொண்டு ஹாஸ்டல் வரை பேசாமல் அமைதியாக வந்தான்.
ஹாஸ்டல் வாசலில் இறங்கி ஆட்டோவை வெய்ட்டிங்கில் நிறுத்திவிட்டு அவளோடு சேர்ந்து நடந்தவன் கேட்டை நெருங்கவும்,
“மலர்…” என்றழைக்க அவன் புறம் திரும்பாமல் அமைதியாகவே நின்றாள்.
“என்னடா கார்ல வந்தவளை ஆட்டோல கூட்டிட்டு வந்து விடறானேன்னு நினைச்சியா?…”
சம்பந்தமே இல்லாமல் நினைக்காத ஒன்றை நினைத்தாயா என்று கேட்கிறானே என புரியாமல் பார்த்தாள் மலர். ஏனென்றால் அவளுக்கிருந்த கோபத்திற்கும் குழப்பத்திற்கும் அனய் சொல்வது போன்ற ஒரு எண்ணமே தோன்றவில்லை.
“நினைக்கலைனாலும் இப்போ நினைச்சுக்க…”
“எதுக்கு?…” என்னவாக இருக்குமோ என்ற யோசனையோடு கேட்க,
“பீச் போகும் போது கார்ல நிறைய கேப் நமக்கு நடுவில். ஆனா ஆட்டோல எவ்வளோ பக்கத்தில உட்கார்ந்திருந்தோம். அதான் ஆட்டோ எடுத்தேன். கேப்பே இல்லை. அதான் நீ நினைக்காட்டிலும் இதை உனக்கு ஞாபகப்படுத்தனும்னு எனக்கு தோணுச்சு…”
அவனின் விளக்கத்தில் கொலைவெறிக்கு ஆளானவள் எதையாவதவன் தலையில் போட்டு உடைத்தால் என்ன என்னும் கொதிநிலைக்கு செல்ல,
“என் மனசுல நான் எதை எந்த எண்ணத்தில் செய்யறேன்னு உனக்கு தெரியனும் பாரு. அதுக்குத்தான். பை ரோஸ்பட். சீக்கிரமே பார்க்கலாம்…”
அவளிடம் விடைபெற்று ஆட்டோவில் ஏறிக்கொண்டவன் சென்ற வழியையே வெறித்து பார்த்தவள் இதை யாரிடம் சொல்லி புலம்புவது என தெரியாமல் குழம்பிக்கொண்டே உள்ளே சென்றாள்.
“நல்ல எண்ணம் இவன் எண்ணம். இவன் நினைக்கிறதை தெரிஞ்சு நான் என்ன செய்ய போறேனாம்?. எனக்கெதுக்கு இவன் எண்ணம்?”
மலர் அவனை திட்டிக்கொண்டே மறுநாள் செல்வதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட அவளுக்கு தெரியவில்லை.
அவனின் அடுத்தடுத்த எண்ணங்களை அறிந்துகொள்ளாமல் அதை அவன் சொல்வதற்கு வாய்ப்புகொடுக்காமல் தான் தவிர்த்து அதனால் எத்தனை பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்க போகிறோம் என்பது.
புன்னகை ஜீவிக்கும்…