புன்னகை – 22
மறுநாள் காலையே மலர் கிளம்பும் முன் ஹாஸ்டல் வந்தவன் அங்கு வைத்தியநாதனை பார்த்ததும் கொஞ்சம் தயங்கி நின்றவன் அதிகமாய் பேசியே இராத அவரை பார்த்து ஒரு வணக்கம் தெரிவிக்க,
“ நல்லா இருக்கீங்களா தம்பி?…” அவர் கேட்டதும்,
“எஸ், அங்கிள் நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க?…” என கேட்க,
“போலாம் மாமா…” வனமலர் அங்கே வந்து நிற்க,
“பஸ் கிளம்ப இன்னும் டைம் இருக்கே. இப்போவே கிளம்பி அங்க ஏன் வெய்ட் பண்ணனும்?…”
அனய் மலரிடம் பேசமுடியாமல் போகும் தவிப்பை வெளிப்படுத்தமுடியாமல் தன்னுள் அடக்க பெரும் பிரயத்தனம் செய்ய அதை வேடிக்கையாக பார்த்தாள் மலர்.
“நாங்க பஸ்ல போகலைப்பா. கார் எடுத்துட்டு வந்துட்டேன். பஸ் டிக்கெட் கேன்சல் பண்ணியாச்சு. கிளம்பனும்…” அவர் சொல்ல அவரின் மொபைலில் மலரின் தாய் ஆனந்தி வர,
“இதோ வரேன்பா…” என சொல்லி சற்று தள்ளி சென்று பேச,
“நீ என்ன முடிவு செய்திருக்க மலர்?…”
இதுதான் சந்தர்ப்பம் என்று மலரிடம் அனய் கேட்க அவளுக்கோ கோபம் வந்துவிட்டது. வைத்தியநாதன் அருகில் இருக்கும் பொழுதே இப்படி கேட்கிறானே என்று.
“இன்னைக்கு மட்டும் நான் என்ன புதுசாவா கேட்க சொல்ல போறேன். நேத்து சொன்ன அதே பதில் தான். இனி எத்தனை முறை கேட்டாலும் இதுதான் என்னோட பதில்…” பட்டென கத்திரிப்பதை போல சொல்ல,
“நீ அவசரப்படற மலர். கொஞ்சம் யோசி. என்னால… என்னால உன்னை விடமுடியாது. என்னை ரொம்ப பேச வைக்காத…”
காத்திருந்த காதலின் வலியை அவளுக்கு எப்படி புரியவைக்க போகிறோம் என தடுமாறியபடி பார்த்திருந்தான்.
அவனறியாமல் விழிகள் கலங்குவது போல் இருக்க தொண்டையை செருமிக்கொண்டவன் எப்படியாவது அவளின் சம்மதத்தை வாங்கிவிடும் வேகத்துடன் அவளை இன்னும் நெருங்கி நிற்க அதில் திடுக்கிட்டவள்,
“என்ன பன்றீங்க?…” பயத்தோடு அவனை பார்த்தாள்.
“இப்படி பார்க்காத மலர். சத்தியமா நொறுங்கிட்டிருக்கேன்…”
ஏனோ அவளிடம் இத்தனை வருடங்கள் பகிராத காதலில் கூட இவ்வளவு தனிமையை, வெறுமையை உணர்ந்ததில்லை. அவள் தன்னோடே இருப்பதை போன்ற மனநிலையில் நிம்மதியாக சந்தோஷமாக இருந்தான்.
முதல் நாள் அவளிடம் தன் காதலை பகிர்ந்ததிலிருந்து ஒருவித உணர்வு அவனை பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது.
எத்தனை நாட்கள் ஆனாலும் யோசித்தே சொல் என அவளுக்கு சொல்லிவிட்டு ஒரு இரவை கடக்கமுடியவில்லை. இரவுறக்கம் இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருந்தவன் காலையே அவளை பார்க்க கிளம்பியும் வந்துவிட்டான்.
“சொல் மலர். மாட்டேன்னு சொல்லாம எதுவாச்சும் சொல். எனக்கு ஒரு ஹோப் வேணும். என்னால முடியலை…”
“நான் தான் இன்னும் எத்தனை நாள் ஆனாலும் வெய்ட் பன்றதா சொன்னேன். ஆனாலும். முடியலை. என்னென்னவோ தோணுது. டெல் மீ சம்திங்…”
மலரின் கையை பிடிக்க முயல வேகமாய் பின்னால் நகர்ந்தவள்,
“இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க. என்னால என்னைக்குமே உங்களை காதலிக்கவோ, கல்யாணம் செஞ்சுக்கவோ முடியாது. உங்க மேல அப்படி ஒரு நினைப்பு வரவே வராது. வர நான் அனுமதிக்கவும் முடியாது…”
பிடிவாதமாய் மலர் சொல்ல சொல்ல அனய்யின் நெஞ்சமோ உயர் அழுத்தத்திற்கு ஏறியது. நிதானம் இழந்தே விட்டான்.
“இல்லை. ஐ கான்ட். நோ வே…” புதிதாய் ஒரு பதட்டம் மலரின் தீர்மானமான பேச்சில். ஒரு முடிவெடுத்தவனாய்,
“ரோஸ்பட், நான் டிஸைட் பண்ணிட்டேன்…” என,
“எதுவா வேணாலும் இருக்கட்டும். எனக்கு அதைப்பத்தி கவலை இல்லை. தெரிஞ்சுக்கவும் இஷ்டம் இல்லை. நீங்க சொல்ற எதையும் கேட்க எனக்கு விருப்பமும் இல்லை…”
முகத்தில் அடித்தது போல கடுமையாய் அவனை நோக்கி பேச்சில் வீசியவள் நின்றால் மேலும் ஏதாவது பேசுவானோ என அஞ்சி வைத்தியநாதன் அருகே சென்றாள்.
அதற்குள் அவளின் பொருட்கள் காரில் ஏற்றப்பட்டிருக்க,
“எல்லோர்க்கிட்டையும் சொல்லிட்ட தானே?…” வைத்தியநாதன் கேட்க,
“ஆச்சு மாமா…”
“அப்போ கிளம்பலாம் மலர்…” அவர் சொல்லவும் மலர் காரில் அமர்ந்துவிட்டாள். அனய்யும் அதற்குள் வந்துவிட்டிருக்க,
“அங்கிள் ஒரு நிமிஷம். ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்…” என்று நிற்க,
“என்ன விஷயம்?…”
“நான் மலரை விரும்பறேன். அவளை கல்யாணம் செஞ்சுக்கனும்னு ஆசைப்படறேன். ஐ லவ் ஹெர்…”
அனய் சொல்லியேவிட வைத்தியநாதன் அதிர்ந்தாலும் மலரை ஒரு பார்வை பார்க்க அவளோ இல்லை என்பதை போல பயத்துடன் தலையசைத்தாள்.
“மலர் இங்க இருந்தப்போ நீங்க செய்த உதவிக்கேல்லாம் நன்றி. நன்றி மட்டும் தான் எங்களால சொல்ல முடியும். எங்ககிட்ட இருந்து வேற எதையும் நீங்க எதிர்பார்க்க முடியாது. நாங்க கிளம்பறோம் தம்பி…”
“நான் சொல்றதை கேட்டுட்டு கிளம்புங்க…” அவரை செல்ல விடாமல் மீண்டும் நிறுத்தியவன்,
“மலர் தான் என் வொய்ப். அதில் என்னைக்கும் எப்பவும் எந்த மாற்றமும் இல்லை. உங்களுக்கு தெரியனும்னு நினைச்சேன். சொல்லிட்டேன். ரொம்ப சீக்கிரமே எங்க வீட்ல பேசி பொண்ணு கேட்டு நாங்க குடும்பத்தோட வருவோம். அப்போ உங்க பொண்ணை எனக்கு கட்டிகுடுங்க…”
வைத்தியநாதனின் அசையாத பார்வையை பொருட்படுத்தாது தன் மனதில் இருந்ததை சொல்லியவன் மலரை திரும்பி பார்த்தான். அத்தனை கலவரம் நிரம்பிக்கிடந்தது அவள் விழிகளில்.
“ரொம்ப பயந்துட்டாளோ? இருக்காதே?” யோசனையோடு பார்த்தவன்,
“ஐ லவ் யூ ரோஸ்பட்…” என அழுத்தமாய் சொல்லியேவிட ஆடித்தான் போனாள் மலர்.
வைத்தியநாதன் அவள் புறம் திரும்பவும் இல்லை.
“காரை எடுப்பா…” அடக்கப்பட்ட கோபம் அவரின் குரலில் வெடித்தது.
கிளம்பிய கார் திருவாரூர் நோக்கி பயணிக்க ஆரம்பிக்க மலரின் உள்ளமோ அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் சுழன்றது. தோழிகளின் மலராய் இல்லாமல் கூட்டுக்குள் முடங்கும் வனமலராய் தங்கள் ஊரை நெருங்க நெருங்க தனக்குள் சுருண்டுகொண்டிருந்தாள்.
அதிலும் தாயை நினைக்க நினைக்க எப்படி அவரை சமாளிக்க போகிறோம்? என பயத்தில் தொண்டை உலர்ந்து போனது.
எப்படியெல்லாம் தன்னை கேட்பார்களோ? எப்படி தான் பதில் சொல்லவேண்டுமோ? சொன்னால் தன்னை நம்புவார்களா? என உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டிருந்தாள்.
வைத்தியநாதன் வேறு எதற்கும் அவளிடம் பேசவில்லை. மதிய உணவிற்கு காரை விட்டு இறங்கியவர் ஒரு பார்வை தான் பார்த்தார். கூடவே சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறிவிட அதே மயான அமைதி.
தனக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான் இந்த அமைதி. ஊரில் தன்னை சுற்றி பாதி நேரங்களை விழுங்கிக்கொள்ளும் இந்த அமைதி மிகவும் பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனாலும் இன்று மிரட்டியது.
எப்பொழுதும் அவரிடம் கலகலத்ததில்லை தான். ஆனாலும் இப்பொழுது இந்த விஷயத்தில் தன்னை முறைத்தாவது பார்த்துவிட்டால் தான் என்ன? என்ற எண்ணம் புரட்டிக்கொண்டிருந்தது.
தானாக பேசவும் அச்சமாக இருக்க கண்களை மூடி அமர்ந்துவிட்டாள். ஊருக்கு சென்றதும் மாமா இதை வீட்டில் சொல்ல போகிறார். பெரும் பிரளயமே வெடிக்க போகிறது. அப்பொழுது காதுகளையும் மூடிக்கொண்டாள் தேவலை.
நினைப்புகள் அங்கும் இங்குமாய் சுழன்று சுழன்று ஓடிக்கொண்டிருக்க நேத்ராவின் ஞாபகமோ, ஆண்டாளின் ஞாபகமோ எட்டவே இல்லை. அவர்களிடம் அனய் செய்த வேலையை சொல்லவும் மறந்தே போனாள்.
இரவு வீடு வந்து சேர்ந்ததும் காமாட்சி வந்து மலரை அணைத்துக்கொள்ள தாய் ஆனந்தி தன் மகளை பார்த்தபடி அண்ணனை நோக்கி சென்றார்.
“உங்கம்மாவை திருத்தவே முடியாது. எம்புட்டு மாசம் செண்டு நீ வந்திருக்கற. உன்னை பாக்காம என்னமோ பலவருஷம் பிரிஞ்ச மாதிரி அண்ணனை பார்க்க போய்ட்டா. இதுக்கு உண்ட அப்பாரும் உடந்த…”
காமாட்சியின் பெருமூச்சு வனமலரை சுடவில்லை. பார்வையெல்லாம் வைத்தியநாதன் பக்கம் மட்டுமே. அவர் இதை பற்றி எதுவும் பேசவில்லை என்று மட்டும் தெரியும்.
“வாசல்லையே நின்னது போதும். உள்ளே போங்க….” என்ற வைத்தியநாதன்,
“மாப்ள…” என,
“இதோ வந்துட்டேனுங்க மச்சான்…” என்றபடி வந்து நின்றார் ராமைய்யா. வனமலரின் தந்தை.
“எல்லாத்தையும் எடுத்து உள்ள வைக்கனும். வா…”
இருவருமாக அனைத்தையும் மலரின் வீட்டில் வைக்க மலரோ வைத்தியநாதன் வீட்டில் காமாட்சியோடு பேசிக்கொண்டிருந்தாள்.
இருவரது வீட்டிற்கும் ஒரு சுவரே இடையில். தன் தங்கைக்கு திருமணம் முடித்து தன்னருகே ஒரு வீடும் கொடுத்து தன் கண்முன்னே அவர்களை வைத்து பார்த்துக்கொண்டார் வைத்தியநாதன்.
உழவுத்தொழில் அவர்களின் பிரதானமாக இருந்தது. ஊரின் செல்வாக்கான குடும்பம் வேறு. அவர்களுக்கென தனிமரியாதையும் கௌரவமும் அவர்களின் ஜனக்கட்டுகென்ற தனி அடையாளமும் அவர்களை எப்பொழுது அதை வைத்தே யோசிக்கவைக்கும்.
“மலரு சரவணன் தம்பி வந்திருக்காரு. இந்த கருவாட்டுகுழம்பை கொண்டுபோய் அத்தைக்கிட்ட குடுத்துட்டு வா…”
மாடியில் தன் அறையில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தவளிடத்தில் ஆனந்தி போய் சொல்ல,
“மாமா எப்ப வந்தாங்க? வரதா அத்தை கூட சொல்லவே இல்லையே…” தனக்குள் தான் பேசிக்கொண்டே எழுந்தாள்.
“சொன்னா சரின்னு கேட்டு பழகு. என்கிட்டே சொல்லலை அது இதுன்னு நீயா உன்னை பெரியமனுஷித்தனம் பண்ணிக்காதே. எப்ப பாரு கூட கூட பேசிட்டு. பேச்சை குறைன்னு நானும் தலைப்பாடா அடிச்சுக்கறேன். இந்த புள்ள கேட்டா தானே…” ஆனந்தி புலம்பிக்கொண்டே வேலையை பார்க்க,
“நான் என்னைக்கு இங்க வாயை திறந்து அதிகமா பேசியிருக்கேன். என்னமோ வாய் மூடாம பேசிட்டே இருக்கிறது போல இந்த புலம்பல். கடவுளே இன்னைக்கு நைட் தூக்கம் போச்சு. இவங்கக்கிட்ட நான் காலேஜ்ல இருக்கிறது போல இருந்தா எப்படி இருக்கும்?” மனத்திற்குள்ளேயே பேசிக்கொண்டாள்.
நினைக்கும் பொழுது சிரிப்பு வராமல் பீதியை கிளப்பியது அந்த கற்பனை.
“நல்லவேளை வாய் வழியா வெளியே சத்தம் வரலை. தப்பிச்சேன். ஆமா இந்தம்மா கத்தரிக்காய் கூட்டும், ரசமும் தானே செஞ்சது. கருவாட்டு குழம்பு எப்ப வச்சது?” என்றபடி அவர் எடுத்துவைத்த பாத்திரத்தை தூக்கிக்கொண்டு காமாட்சியின் வீட்டிற்குள் நுழைந்தாள்.
“வாம்மா நேத்து பார்த்தது. இப்பத்தான் மருமகளுக்கு வீட்டுக்கு வரவழி தெரியுதாக்கும்?…” வேண்டுமென்றே நொடித்துக்கொண்டவர் அவளின் கையில் இருந்த பாத்திரத்தை வாங்கிக்கொள்ள அவரின் நக்கலில் முறைத்தவள்,
“ஏன் சொல்லமாட்டீங்க, நேத்து நைட் இங்கதான இருந்தேன். மாமா வராங்கன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை. நீங்க பேசவேகூடாது. நான் தான் கோச்சுக்கனும் உங்களை…”
மலர் கோபிப்பதை போல முகத்தை திருப்பிக்கொள்ள,
“ம்க்கும் கோச்சுக்கிட்டே இரு. யாருக்கு தேவை உன் கொஞ்சலும், கோபமும். உங்கம்மாவுக்கு எம்மவன் வந்தா மட்டும் தான் கை ரப்பராட்டம் அத்தனை வளையும்…”
“நமக்குன்னு என்னைக்காச்சும் இப்படி மணக்க மணக்க செஞ்சு தந்திருக்காளா? என்னவோ உனக்கும் எனக்கும்னா அவளுக்கு அம்புட்டுத்தான் ஓரவஞ்சனை…” அவர் சொல்வதில் இருந்த உண்மை சுட்டாலும் அமைதியாக கேட்டாள் வனமலர்.
அவளின் முகம் சட்டென கூம்பிவிட அதை கண்ட காமாட்சிக்கு பொறுக்கவே இல்லை.
“நானும் கோழி அடிச்சு குழம்பு வச்சேன். எங்க அதை சாப்பிட போறான் உன் மாமன்? உனக்கும் சேர்த்து சோறு வடிச்சேன். கருவாட்டுக்குழம்புனா உனக்கு உசுராச்சே. வேண்டாம்னா போயேன்…” வேண்டுமென்றே கழுத்தை வெட்டிக்கொண்டு செல்ல,
“என்னை விட்டுட்டு நீங்க சாப்பிட்டிருவீங்களோ? நான் நெஜமாவே கோச்சுப்பேன்…”
இத்தனை பேச்சுக்களும் அடுக்களையில் மெல்லிய குரலில் மட்டுமே நடந்தது இருவருக்குமிடையே. ஆனந்திக்காக காமாட்சியும் மலரிடம் பேசும் பொழுது அடக்கியே வாசிப்பார்.
காமாட்சிக்கு ஆனந்தியை பிடித்தும் பிடிக்காத நிலை. என்ன பெண் இவள் என்று நினைக்காத நாளே இல்லை.
எத்தனை சாடலுடன் காமாட்சி ஆனந்தியை வம்பிழுத்தாலும் ஒரு பார்வையோடு அதை எளிதாய் கடந்துவிடுவார் ஆனந்தி. அந்த பார்வையே சொல்லும் என்னை அத்தனை எளிதில் மாற்ற இயலாது என்று.
காமாட்சியும் அதிகமாக வைத்துக்கொள்ள மாட்டார் என்றாலும் மலரின் நிலையை கண்டு அவ்வப்போது பொறுக்கமாட்டாமல் துடுக்காய் பேசிவிடுவது தான். கண்டுகொள்ளாமல் செல்லும் ஆனந்தியை நினைத்து மேலும் பொருமித்தள்ளுவார் காமாட்சி.
“உங்கம்மா எது மேலையோ மழை பெஞ்சது போல அவ பாட்டுக்கு போய்ட்டே இருக்கா. கொஞ்சம் கூட ரோஷமில்லாம. நான் பேசினதுக்கு என் தலையை பிடிச்சு ஆஞ்சிருக்க வேண்டாமா?…”
பொங்கி பொங்கி காமாட்சி போசும் பொழுதே மலருக்கு சிரிப்பு பொங்கும்.
“அம்மா திருப்பிகேட்டுட்டா மட்டும் என்ன பண்ணிடுவீங்கலாம்?…”
“நல்லா உரைக்கிறது போல ஒண்ணொண்ணா புட்டு புட்டு வச்சிடமாட்டேன்?…”
“இப்ப கூட ஒன்னும் கெட்டுபோய்டலை. நேரா கூப்ட்டு சொல்லிடவேண்டியது தானே?…” என மலரும் வம்பாய் கேட்க,
“ம்க்கும், உன் அம்மா அப்பவும் வாயை திறக்கமாட்டாளே. அமுக்குணி. ஆனா உன் மாமா பாத்தாரு. என்னை உரிச்சு உப்பு தடவிறுவாரு. அதுக்குத்தேன் நானும் கம்முன்னு போறேன்…”
இப்படியாக இருக்கும் காமாட்சி வைத்தியநாதனின் ருத்ரவதாரத்தை பார்க்க அஞ்சிக்கொண்டு நேரம் கிடைக்கும் பொழுது ஆனந்தியை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல பேசினாலும் அவர் அதை பொருட்படுத்துவதே இல்லை.
அதிலேயே வெறுத்துபோகும் காமாட்சி ஆனாலும் விடுவதுதான் இல்லை.
“இப்படியே ரெண்டுபேரும் பேசிட்டே இருந்தா எனக்கு எப்போ சாப்பாடு போடுவீங்க?…” திடுமென கேட்ட வைத்தியநாதனின் குரலில் திடுக்கிட்டு திரும்பினார்கள் காமாட்சியும், வனமலரும்.
அடுப்படி நிலைவாசலில் ஒரு ஒரு கையை ஊன்றியவாறு தலைசாய்த்து நின்றபடி இருவரையும் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தான் சரவணன். வைத்தியநாதன் காமாட்சியின் அருமை புதல்வன்.
அவனை பார்த்ததும் தான் கொஞ்சம் நிம்மதினானது. உண்மையிலேயே வைத்தியநாதன் தான் வந்துவிட்டாரோ என பயந்துவிட்டனர்.
“மாமா நீங்களா?…” என நெஞ்சில் கைவைத்து ஆசுவாசமானவளை பார்த்து அட்டகாசமாய் அவன் சிரிக்க,
“நல்லா கேட்ட போ. எப்ப பார்த்தாலும் விளையாட்டு. நீ போய் அங்கன இரு கொண்டாறேன்…” என்றவர்,
“மசமசன்னு நிக்காம அவனுக்கு எடுத்து வை…” எனவும் மலர் சாதம் வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சரவணன் அருகே வைக்க,
“நீயும் உட்கார். அம்மா எடுத்து வைப்பாங்க…” அவளின் கைபிடித்து அவனருகே அமர்த்திக்கொண்டவன்,
“அம்மா மலருக்கும் ஒரு தட்டு வைங்க…” அவளை எழுந்துகொள்ளவிடாமல் அழுத்தமாய் பிடித்துக்கொள்ள,
“யாருக்கு வேணும் உங்க கரிசனம்? விடுங்க மாமா, நீங்க வரதை பத்தி இந்த வீட்ல ஒருத்தரும் என்கிட்டே சொல்லலை. நீங்க கூட போன வாரம் போன்ல பேசறப்போ சொல்லை. ஒன்னும் பேச வேண்டாம்…”
“இவ ஒருத்தி என்கிட்டே சொல்லலை சொல்லலைன்னு. இந்த வீட்லயே குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்திட்டு இருக்கேன். எனக்கே சொல்லலை. விடியக்கருக்குல வந்து நிக்கிறான் இவன். நான் எங்க போய் சொல்ல?…”
காமாட்சி அதற்கு மேல் புலம்ப மலர் யோசனையாக சரவணனை பார்க்க அதற்குள் தட்டில் சாதத்தை வைத்து கோழிக்குழம்பை ஊற்ற போக,
“ம்மா முதல்ல அத்தை வச்ச குழம்பை குடுங்க. முதல்ல அதை சாப்பிடறேன்…” என்று வாங்கிக்கொள்ள பார்த்தியா என்பதை போல மலரை பார்க்க,
“எங்கம்மா குழம்பு ருசி அப்படி. அதை விடுங்க. இப்ப திடீர்ன்னு நீங்க வந்ததுக்கு என்ன ரீசன்? அதை சொல்லுங்க…” என,
“அப்படி கேளு, வந்ததும் போய் படுத்தவன் இப்பதான் எழுந்துவந்திருக்கான்…” காமாட்சியும் குறைபட இருவரையும் ஒரு புன்னகையோடு பார்த்திருந்தவன்,
“முதல்ல நீ சாப்பிடு. முடிச்சிட்டு பேசலாம்…” என்று மலருக்கு தானே பரிமாறியபடி அவளை சாப்பிட சொல்ல அவளோ தட்டில் வைத்திருந்த உணவில் கையே வைக்கவில்லை.
பிடிவாதமாய் அவள் அமர்ந்திருக்க அவளின் தலையில் ஒரு கொட்டு கொட்டியவன்,
“ஒழுங்கா சாப்பிடு…” என,
“முதல்ல நீங்க சொல்லுங்க…” என்று சொல்லும் போதே வைத்தியநாதன் உள்ளே வர அவரை பார்த்ததும் தன்னைப்போல சாப்பிட ஆரம்பித்தாள் வனமலர்.
இருவரையும் ஒரு நிமிடம் பார்த்தவர் முகத்தில் லேசாக புன்னகை அரும்பியது. ஒருவித நிம்மதியோடு அங்கிருந்து நகர்ந்துவிட அவரின் முகத்தை அவதானித்துக்கொண்டிருந்த காமாட்சிக்கு எதுவோ புரிவது போல் இருக்க நல்லபடியாக நடந்தால் சரி என மனம் வேண்டுதல் வைக்க ஆரம்பித்தது.
சரவணனுக்கோ மலரின் செய்கை இன்னும் சிரிப்பை அதிகமாக்க,
“நீ என்னைக்குதான் மாறப்போறயோ?…” அவன் இன்னும் வெடித்து சிரிக்க அதில் மலர் முறைத்தாள். அவள் கவனிக்காதது சரவணனும் தன் தந்தையை பார்த்ததும் சத்தமில்லாமல் சாப்பிட ஆரம்பித்ததை.
வேறொரு சமயமென்றால் நீங்களும் தான் பயந்த கோழி என அவனையும் ஓட்டுவாள். இன்றோ அதையெல்லாம் பேசவே இல்லை.
“நான் பாதி சாப்பிட்டாச்சு. இப்ப சொல்லுங்க…” அவள் விடாமல் கேட்க,
“ஹ்ம்ம் விடமாட்டியே. அப்பா தான் போன் பண்ணி உடனே வான்னு சொன்னாங்க. வந்துட்டேன். ஆனா இப்பதான் தெரியுது நான் வரதை பத்தி யார்ட்டையுமே சொல்லலைன்னு…”
காமாட்சிக்கு தெளிவாக புரிந்து விட்டது. ஏன் வர சொல்லியிருப்பார் என.
“அதை விடு, படிப்பு முடிஞ்சது நீ அடுத்து என்ன செய்யலாம்னு இருக்க?…”
இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடிக்க அவர்களுக்கு தேவையானதை கவனித்துகொண்டிருந்தார் காமாட்சி.
சரவணன் வேலூரில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தான். நல்ல வேலை. நல்ல வருமானமும் கூட. மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ஊருக்கு வந்து செல்வான்.
உருவத்தில் வைத்தியநாதனை கொண்டிருந்தாலும் குணத்தில் காமாட்சியை கொண்டிருந்தான். அதில் காமாட்சிக்கு ஏக பெருமை. என் மகன் என்னை போல குணசாலி என வாய்க்கு வாய் சொல்லிக்கொள்வார்.
மலருக்கு உற்ற தோழன் என்று சொல்ல முடியாவிடிலும் அவளின் மேல் அத்தனை அக்கறை இருக்கும் அவனின் பேச்சிலும் செயல்களிலும். மலருக்கு அத்தனை கட்டுபாடுகள் விதிக்கும் ஆனந்தியே அமைதியாய் சரி என கேட்டு தலையாட்டிக்கொள்வார்.
இருவரும் சாப்பிட்டு முடித்து காமாட்சியோடு நேரம் செல்வது தெரியாமல் அரட்டையில் இருக்க வைத்தியநாதன் வந்து அமர்ந்தார் வரவேற்பறையில். அவரை பார்த்ததும் காமாட்சி எழுந்து வர சரவணனும் பின்னால் சென்றான்.
“சொல்லுங்கப்பா…” என அவருக்கு அருகில் இருந்த சோபாவில் அமர,
“மலர்…” உள்ளேயே நின்றுகொண்டிருந்தவளை அவர் அழைத்தார். அவள் வரவும்,
“உட்கார்…” என்றதும் பயத்தோடு,
“இல்லை பரவாயில்லை மாமா…” என சொல்லும்பொழுதே ஆனந்தியும் ராமைய்யாவும் வந்துவிட்டனர்.
அனைவரையும் கூட்டி இவர் அனய்யின் விஷயத்தை தான் சொல்ல போகிறாரோ என பயத்தில் வெடவெடத்து நின்றுகொண்டிருந்தாள் மலர். காமாட்சியின் பின்னால் நின்றுகொண்டிருந்தவள் விரல்களை இறுக மூடி திறந்து கொண்டிருந்தாள்.
“போச்சு இன்னைக்கு அம்மா என்னவெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்ய போறாங்களோ?” முகமோ வெளிறிக்கொண்டிருந்தது.
“காமாட்சி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்…” அனைவரையும் பார்த்தவரின் பார்வை சரவணனிடம் வந்து நின்றது. தன்னிடம் தான் ஏதோ பேச வருகிறார் போலும் என நினைத்தவன்,
“சொல்லுங்கப்பா…” என்றான் அமைதியாக.
“உனக்கும் மலருக்கும் கல்யாணம் செஞ்சிடலாம்னு முடிவு செஞ்சிருக்கேன்…”
வைத்தியநாதன் சொன்னதும் சரவணனின் முகம் இருண்டுபோனது. அதை யாருக்கும் காமிக்காமல் சாமர்த்தியமாக மறைத்தவன் மலரை பார்க்க அவள் முகத்தில் ஆச்சர்யம் தானே இருந்ததே ஒழிய மறுப்பு இல்லை.
உண்மையில் மலர்க்கு மறுப்பதற்கான எந்த காரணமும் இல்லை. காமாட்சியை போன்ற குணமுடையவன். தன்னை சிறுவயதிலிருந்தே புரிந்து வைத்திருப்பவன். தன் மேல் அக்கறை கொண்டிருப்பவன். நல்ல தோழனும் கூட.
இப்படி சரவணன் மேல் ஏகப்பட்ட நல்ல அபிப்ராயங்கள் மலரை மறுக்க விடவில்லை.
ஆனால் சரவணன் நெஞ்சமோ பந்தையக்குதிரையை போன்று வேகமாய் ஓடியது. எதை எதையோ யோசித்தான். என்னென்னவோ எண்ணங்களும் கற்பனைகளும் அவனை தடம்புரள செய்தது.
இன்னொன்று வைத்தியநாதனை மறுத்து இதுவரை எதுவும் செய்ததில்லை. பழக்கமும் இல்லை. மலர் ஆனந்திக்கு எப்படி பயமோ, சரவணனும் அப்படியே.
காமாட்சிக்கு அத்தனை சந்தோஷம். உள்ளுக்குள் கொண்டாடி கூத்தாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனந்தியை பார்க்க அவர்களுக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் என்பதை போல அமர்ந்திருந்தனர்.
“கல்லுளிமங்கி. ஒரு ஜாடையாச்சும் காட்டியிருப்பாளா?” என ஒரு பக்கம் நொடித்துக்கொண்டாலும்,
“அவ என்னைக்கு உனக்கு ஜாடையெல்லாம் காமிச்சிருக்கா?” இன்னொரு மனம் காமாட்சியை நொடித்தது.
வைத்தியநாதன் சில நிமிடங்கள் விட்டு சரவணனை பார்த்து,
“நீ என்ன சொல்றப்பா?…” என கேட்க, அவரின் அழுத்தமான குரல் அவனை யோசிக்கவே விடவில்லை.
“எனக்கு சம்மதம் தான்…” பட்டென்று சொல்லிவிட்டான். அடுத்து அவர் மலரை பார்க்க,
“அவ என்னங்கண்ணா சொல்ல போறா? நல்லதுகெட்டது நாம பார்த்து குடுக்கிறது தானே? நாம ஒன்னு சொல்லி அவ என்னைக்கு மறுத்திருக்கா?…” ஆனந்தி சொல்ல மலர் வாய் திறக்கவே இல்லை.
“நீ என்னைக்கு அவக்கிட்ட கேட்ருக்க வேணுமா வேண்டாமான்னு? வந்துட்டா நல்லது கெட்டது பத்தி பேச…” என நினைத்த காமாட்சி,
“இல்லைங்க நீங்க மலருக்கிட்ட ஒருவார்த்தை கேட்டுடனும். இந்த விஷயத்துல கேட்டுத்தான் ஆகனும்…”அவரின் குரலில் அதை செய்துதான் ஆகவேண்டும் போல பிடிவாதம் இருந்தது.
வைத்தியநாதனும் மலரை பார்க்க, “எதுவானாலும் உங்க இஷ்டம் தான் மாமா…”
மலரின் சம்மதத்தில் காமாட்சிக்கு பூரிப்பாய் இருந்தது.
“இனி என் மருமகளை அதை செய்ய கூடாது இதை பேச கூடாதுன்னு உங்கம்மா வாயை திறக்கட்டும் அப்பா தெரியும் சேதி…”
காமாட்சி மலரின் காதை கடிக்க அவளுக்கோ சிரிப்பு பொங்கியது.
உடனடியாக நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்க திருமணத்திற்கு என்ன செய்யவேண்டும் எப்படி செய்ய வேண்டும் என ஆலோசிக்கவென ஆரம்பித்திருந்தார்கள் பெரியவர்கள்.
அவர்களின் ஆர்வத்தில் சற்றும் கலந்துகொள்ளாமல் குற்றவுணர்வோடு எழுந்து உள்ளே சென்றுவிட்டான் சரவணன்.
“ச்சீ எத்தனை சுயநலமானவன் நான்” என மலரின் முகத்தை பார்க்க கூட கூசிப்போனான்.
அனைத்தும் பேசி முடித்து மலரை தனியாக அழைத்த வைத்தியநாதன்,
“அந்த பையன் விஷயம் எதுவும் நான் சரவணன்ட்ட சொல்லலை. நீயும் சொல்லிடாதே…” என கூற,
“மாமா, வந்து…” மலர் பேச முனைய,
“முதல்ல நான் சொல்றதை கேளு. சொல்ல கூடாதுன்னா கூடாது தான். இது நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்சதவே இருக்கட்டும். அவன் மூலமா பிரச்சனை எதுவும் வராம நான் பார்த்துப்பேன். நீ போ…”
அவளிடம் கட்டளையாக சொல்லியவர் மலரை அனுப்பிவிட்டு ஆண்டாளுக்கு அழைத்துவிட்டார்.
இருவரை தாண்டி எந்த விஷயம் வெளியே செல்லக்கூடாது, அது தன் மகனாகயிருந்தாலும் கூட என நினைத்தவருக்கு தெரியாமல் போகிற்று நிச்சயத்தன்று இந்த ஊருக்கே தெரியவைப்பான் அனய் என்று.
புன்னகை ஜீவிக்கும்…