புன்னகை – 23
புதுக்கோட்டையில் தங்கள் கல்லூரியில் புதிதாய் நர்ஸிங் படிப்பு ஆரம்பிப்பதற்காக அப்ரூவலை பெறுவது சம்பந்தமாக முக்கிய பிரமுகர் ஒருவரை சந்திக்க நேத்ராவும், அவள் மாமனார் சிவராமனும் வந்திருந்தனர்.
முதல்நாள் வேலை முடியாமல் அங்கேயே தங்க வேண்டிய சூழலில் அனய்யும் அவர்களை பார்க்க இரண்டுநாள் விடுப்பில் வந்திருந்தான்.
ஆறுமணிக்கு எழுந்ததும் ரிஷியிடம் பேசியவள் அப்படியே தன்னுடைய மொபைலில் முகநூல் பக்கத்திற்கு சென்றாள்.
“காலாங்காத்தால ஃபேஸ்புக். ஹ்ம்ம்…” என்று ஒரு நக்கலுடன் அவளுக்கான காபியை கையில் கொடுத்துவிட்டு அவளருகே அமர,
“உலக நடப்பு நாலும் தெரிஞ்சுக்கனும் ப்ரோ. அதெல்லாம் மூளை இருக்கிறவங்க செய்யறது. நீ செய்யமாட்டன்னு எனக்குதான் தெரியுமே…”
“எனக்கா மூளை இல்லை, உன்னை…” என்று அவளின் தலையில் கொட்டியவன் டீப்பாயில் இருந்த பேப்பரை எடுத்துக்கொள்ள,
“இன்னைக்கு என்ன எலி எக்ஸாமுக்கு ரெடி ஆகறது போல காலையிலையே உன் லேப்டாப்பை நோண்டிட்டு இருந்த?. என்னடா அண்ணா பன்ற?…” நேத்ரா கேட்டதும் புரையேறியே விட்டது அனய்க்கு.
“என்னை பார்த்தா எலி மாதிரியா இருக்கு?…”
“சத்தியமா நீ புலி இல்லை. அப்ப எலின்னு சொன்னா என்ன தப்பு?…”
“நீ திருந்தவே மாட்ட. நான் என்ன பன்றேன்னு நோட்டம் விட்டுட்டா இருந்த?…” என,
“ஹ்ம்ம் உன்னை மாதிரி ஒரு ஜீவனை அண்ணனா அடைஞ்சிருக்கேனே. உன்னை பொத்தி பாதுகாத்து ஒரு நல்ல பொண்ணா பார்த்து பத்தரமாத்து தங்கமா ஒப்படைக்க வேண்டிய கடமை எனக்கு இருக்குப்பா…”
“அதுக்கு…”
“அதான் உன்னை பாலோ பன்றேன். அதை விடு, நீ என்ன பண்ணின தம்பி? அதை சொல்லு. இல்லேன்னா உன் லேப்டாப்பை தூக்கி ஆண்டாள் கிட்ட குடுத்துடுவேன்…” கெத்தாய் கால்மேல் கால் போட்டுக்கொண்டு சாய்ந்தமர்ந்து கேட்க அரண்டு தான் போனான்.
ஏனென்றால் மலரின் போட்டோ லேப்டாட்ப்பில் பதிந்து வைத்திருக்கிறான் அனய். ஆன் செய்த உடனே அவளின் முகமே அங்கு மின்னும். மலரின் சம்மதம் கிடைக்காமல் தன் காதலை பற்றி வீட்டில் யாருக்கும் தெரிவதை விரும்பவில்லை அவன்.
வைத்தியநாதனிடம் சொன்னது கூட ஏதோ ஒரு வேகத்தில் தான். ஆனாலும் அவரும் இதுவரை ஆண்டாளிடம் இதை பற்றி பேசியதை போல தெரியவில்லை. பார்த்தால் தேவையில்லாமல் பிரச்சனை வரும் என்று பயந்தே,
“கொஞ்சம் வாயை மூடேன். அம்மா காதுல விழுந்திட போகுது. இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங். அதுக்கான வேலையை தான் பார்த்திட்டு இருந்தேன்…”
பல்லை கடித்துக்கொண்டு அவளிடம் சொல்ல நம்பமுடியாத பார்வை பார்த்தவள்,
“மெய்யாலுமா சொல்ற? ஆனாலும் எனக்கு டவுட்டா தான் இருக்கு…” என்று அவனை பதறவிட்டு,
“சரி, என்ன இருந்தாலும் அண்ணனா வேற போய்ட்ட. போனா போகுதுன்னு விடறேன். நேத்ரான்னா சும்மாவா? அந்த பயம் இருக்கனும் உனக்கு…” என,
“எல்லாம் என் நேரம்…” அனய் அலுத்துக்கொண்டவாறே நிம்மதியாக இருவரின் முகத்திலும் புன்னகை.
“அப்ப ஆபீஸ் கிளம்ப போறயா நீ?…”
“ஹ்ம், இன்னும் ஒன் ஹவர்ல கிளம்பிடுவேன். ஏன்?…” பேப்பரில் பார்வையை ஓட்டியவாறே கேட்க,
“அதான பார்த்தேன். இன்னைக்கு ஆண்டாள் அலாரம் இவ்வளோ சீக்கிரமே கூவிடுச்சுன்னு. அதைவிடு, மாமா மட்டும் தான் இன்னைக்கு அந்த ஆளை பார்க்க போறாங்க. நான் ப்ரீ தான். அதான் வெளில போகலாம்னு நினைச்சேன்…”
“அம்மாவை சீண்டலைனா பொழுது விடியாதே உனக்கு? ஒரு மூணு மணி போல வேணும்னா வந்திடறேன். கிளம்பி இரு…” என்று சொல்ல அவனின் கன்னம் கிள்ளியவள்,
“நீ தான்டா உடன்பிறப்பு…” என்று சொல்ல,
“இன்னும் சின்னபிள்ளையாவே இரு…” என அனய்யும் நேத்ராவின் தலையில் செல்லமாய் ஒரு தட்டு தட்டினான்.
அவனை வம்பு செய்துகொண்டே காபியை குடித்தபடி விரல்களை அலைபேசியின் திரையில் ஓடவிட்டவள் அதிர்ந்து நிமிர்ந்தமர்ந்தாள். அவள் நிமிர்ந்த வேகத்தில் கையில் இருந்த காபி முழுவதும் அனய்யின் மீது அபிஷேகமாக அதன் சூட்டில்,
“ஆஆஆஆஆ…” என்று அலறி எழுந்து நின்று குதித்தவன்,
“ஏய் லூஸு, காபி எல்லாம் என்மேல கொட்டிடுச்சு…” என்று கத்த நேத்ராவின் முகமோ கோபத்தில் ஜிவுஜிவுத்து போனது. அதை கண்டவன்,
“நேத்ரா எனிதிங் சீரியஸ்…” பதட்டமாய் அவளருகில் அமர,
“அண்ணா இந்த அமேஸான் என்ன பண்ணிவச்சிருக்கா பாரு…” என்று தன்னுடைய மொபைலை அவனுக்கு தர அனய் பரபரத்து போனான்.
“இவ ஊருக்கு போனா போன் கோட்ட பண்ணமாட்டா தான். இது எங்களுக்கு புதுசு இல்லை. ஆனா கல்யாணம்னு வரப்போ ப்ரெண்ட்ஸ் எங்கக்கிட்ட சொல்லனும்னு கூட தோணலை பாரேன்…” பொடுபொடுத்தாள் நேத்ரா.
என்னவோ என்று அதை வாங்கி பார்க்க அவனின் தலையில் இடி விழுந்ததை போல ஆனது.
ஃபேஸ்புக் டைம்லைனில் சரவணன் வைத்தியநாதன் என்னும் ஐடி வனமலரை டேக் செய்து தங்களுக்கான நிச்சயதார்த்தத்தை பற்றி பகிர்ந்திருக்க அவன் கண்களை நம்பமுடியாமல் பார்த்திருந்தான்.
கண்கள் ரத்தமென சிவக்க ஆத்திரம் தலைக்கேற மொபைலை தூக்கி வீசி எறிந்தான். சுவற்றில் பட்டு சுக்குநூறாகி சிதறி தூள் தூளாகியது. ஆண்டாளும், பாலகிருஷ்ணனும், சிவராமனும் பதறி எழுந்து வந்தனர். அதிர்ந்து பார்த்த நேத்ரா,
“உனக்கென்ன பைத்தியமாடா பிடிச்சிருக்கு? எதுக்கு என் மொபைலை உடைச்ச?…” என்று கேட்டவளுக்கு அவனின் இறுகிய தோற்றத்தில் துணுக்குற்றவள்,
“அனய் வாட் ஹேப்பன்ட்? நீ சரியில்லையே…” என்றவள் அவனின் செய்கையை ஆராய நொடியில் எதுவோ புரிய,
“அண்ணா, உண்மையை சொல்லு. அவளுக்கு கல்யாணம்னா உனக்கு ஏன் கோவம் வருது?…” அனய்யிடம் கேட்க அவனோ இடிந்து போய் நின்றான்.
“அண்ணா உன்கிட்ட தான் கேட்கறேன். சொல்லு. நீ லவ் பன்றயா?…” பளிச்சென கேட்டுவிட அப்பொழுதும் ஆண்டாள் வாயை திறக்கவே இல்லை. தனக்கு முன்னமே தெரிந்ததை போல காட்டிக்கொள்ளவே இல்லை.
அனய் என்ன சொல்ல போகிறான் என்று மட்டுமே பார்த்து நின்றார். அவருக்கு திடீரென இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்றே புரியவில்லை.
முகத்தை மூடிக்கொண்டு சோபாவில் அமர்ந்தவனுக்கு தண்ணீர் எடுத்து வந்த நேத்ராவிற்கு புரிந்துவிட்டது அனய்யின் காதல் வனமலரின் மீது என.
சிறிது நேரம் சென்று மெல்லிய குரலில் அவனின் காதலை பற்றி விவரிக்க அசந்து போய்தான் பார்த்தார்கள் அனைவரும்.
“முதல்ல இந்த தண்ணியை குடி. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிடு. அப்பறம் பேசுவோம்…” என அவள் குடுத்த தண்ணீரை வாங்கி அதையும் வீசி எறிந்தான். அதில் அனைவரும் பயந்து பார்க்க நேத்ராவிற்கு கோபமே வந்துவிட்டது.
“கன்பார்ம். உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. என்ன விஷயம்னு வாயை திறந்து சொல்லமாட்ட. ஆனா எல்லாத்தையும் தூக்கி போட்டு உடைப்ப. நல்லா இருக்குடா…” என்றவள்,
“உனக்கு இதை ஹேண்டில் பண்ண தெரியலை. உன்னோட இஷ்டத்துக்கு ஆடாதே. லவ்வை சொல்லி அக்ஸப்ட் செய்ய வைக்க உனக்கு முடியலை. அவ கல்யாணம் செய்துக்க போறான்னு தெரிஞ்சதும் உனக்கு கோபம் வேற வருதா? நீயெல்லாம் எதுக்கு லவ் பன்ற?…”
“நேத்ரா…” அவன் அலற அசராமல் பார்த்தவள்,
“உன்னோட இந்த கோபத்தையெல்லாம் ஏன் எங்ககிட்ட காட்டுற? இந்த வீட்ல உன் லவ் பத்தி யார்க்கிட்டையாச்சும் சொல்லியிருக்கியா? இல்லை என்கிட்டயாவது ஷேர் பண்ணியிருக்கியா? இல்லையே…”
“இந்த வீட்ல உயிருள்ள மனுஷங்க யாருக்கும் உன்னோட லவ் தெரியகூடாதுன்னு மறைச்சு வைப்ப. ஆனா உன் கோபத்தை மட்டும் காமிச்சு எல்லோரையும் வேதனைபடுத்துவ, இதுக்கு மட்டும் நாங்க வேணுமா?…”
நேத்ரா சொல்ல சொல்ல தலை குனிந்து அமர்ந்திருந்தவன்,
“என்னால மலரை விட்டுட முடியாது. என்னோட வொய்ப் அவதான்னு நான் பிக்ஸ் ஆகிட்டேன். எதுக்காகவும் என் மனசை மாத்திக்க மாட்டேன் நான்…” பிடிவாதமாய் அவன் சொல்ல,
“அவளுக்கு தான் விருப்பம் இல்லையே…” நேத்ராவும் பேச,
“அவளுக்கு விருப்பம் இல்லைனாலும் மேரேஜ் பண்ணி என்னை விரும்ப வைப்பேன்…” அனய்யும் சொல்ல,
“உனக்கு உன் காதல் பெருசு. அது போல அவளுக்கு அவ குடும்பம் தான் பெருசு. நீ மட்டும் அவ தான் வேணும்னு பிடிவாதமாய் இருக்கலாம். ஆனா அவ நீ வான்னு சொன்னதும் வந்து உன்னை லவ் பண்ணிடனுமா? உனக்கொரு நியாயம், அவளுக்கொன்னா?…”
“அவளை நான் மட்டும் தான் நல்லா பார்த்துக்க முடியும்…”
“ஓவர் கான்பிடன்டா? அதை நீ சொல்லகூடாது அண்ணா. உன்னை விட பெட்டரா அவர் மலரை பார்த்துக்கிட்டா? பாஸிட்டிவா யோசி…”
“நான் எதை பத்தியும் யோசிக்கமாட்டேன். எனக்கு மலர் தான் வொய்ப். இதுல என்னைக்கும் எந்த சூழ்நிலையிலையும் மாற்றம் இல்லை. இன்னொருத்தனுக்கு மனைவியா என்னால நினைக்க கூட முடியலை…” தலையை அழுத்தமாய் பிடித்துக்கொண்டான்.
காதலின் வலியில் தன் அண்ணன் தவிப்பதும் துடிப்பதும் நேத்ராவின் மனதை கொள்ளாமல் கொன்றது. அவனை நிச்சயம் ஆதரிக்க முடியாது. இந்த வேகமும் கோபமும் சரியே இல்லை. இவனை இப்படியே விடகூடாது என நினைத்தவள்,
“அண்ணா…” என அவனருகே அமர்ந்துகொள்ள,
“முடியலை நேத்ரா. அவளுக்கு நான் என் காதலை புரியவைக்க தவறிட்டேன். என்னோட மனசை அவக்கிட்ட வெளிப்படுத்தினப்போ அவ என்னை விட்டு ரொம்ப தூரம் போய்ட்டா. எல்லாம் என்னோட தவறு தான்…”
தங்கையின் தோள்களில் ஆறுதல் தேடும் சேயாய் சாய்ந்துகொள்ள அவனை அரவனைத்துக்கொண்டவள்,
“அண்ணா நான் சொன்னா கேட்பியா?…”
“மலரை மறக்க சொல்றதை தவிர அவளை என்னவளா மாற்ற என்னவேணும்னாலும் சொல்லு நான் கேட்டுக்கறேன்…” அவன் சொல்லவும் அவனின் தலையை தள்ளிவிட்டவள்,
“என்னை என்ன உனக்கு தூது போக சொல்றியா? தொலைச்சுடுவேன். இத்தனை வருஷம் லவ் பண்ணியிருக்க அப்போவெல்லாம் விட்டுட்டு இப்ப வந்து சின்னபுள்ளையாட்டம் அழுதுட்டு நிக்கிற. அறிவில்லை உனக்கு. இதுல நான் ஐடியா வேற குடுக்கணுமாம்…” அவனை திட்டியவள்,
“என்னை டென்ஷன் ஆக்காத அண்ணா. இப்போ நாம ஒன்னும் செய்ய முடியாது. அவளுக்கு வேற ஒருத்தனை பேசி முடிச்சுட்டாங்க. இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் வேற. இப்போ போய் நாம அங்க பேச முடியாது…”
“நீயும் விட்டுட்டல என்னை…” அவளையும் அவன் குற்றம் சாட்ட,
“அப்படியே உன்னை அறைஞ்சிடனும் போல இருக்குடா. ஆனா அண்ணனா போய்ட்ட. அவதான் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டாள. திரும்பவும் நீ பிடிவாதம் பிடிக்கிறது நல்லதுக்கில்லை…”
“லவ் ரெண்டுபேருமே ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு மத்தவங்களோட நிறைகுறையோட முழுமனசா ஏத்துக்கிட்டு பன்றது. ஆனா நீ செய்யறதுக்கு பேர் உனக்கு லவ்வா தெரியலாம். ஆனா அவளுக்கு?…”
“வேண்டாம்டா, அவளை கட்டாயப்படுத்தி அவளுக்கு இஷ்டமில்லாம உன்னோட இணைய வேண்டாம். விட்டுடு. உன் உண்மையான நேசம் அவ நல்லா இருக்கிறதை தான் விரும்பும். உன் மனசார அவ நல்லா இருக்கட்டும்னு நினை. ப்ளீஸ்டா…”
ஆனால் பின்னாளில் அதுதான் நடந்தது. அனய் மலரின் விருப்பமில்லாமல் தான் தன்னோடு திருமண பந்தத்தில் அவளை இணைத்துக்கொண்டான்.
தங்கையின் கெஞ்சல் அவனின் மனதை கொஞ்சம் அசைத்து பார்த்தாலும் அவனின் காதலோ வேறெதையும் சிந்திக்க விடவில்லை.
ஒரு அரைமணிநேரம் கூட அமரமுடியாமல் நிலைகொள்ளாமல் தவித்தான். அவனின் இந்த போராட்டத்தை பார்த்தும் செய்வதறியாமல் ஆண்டாள் கண்கள் கலங்கியது.
ஆனால் எதுவும் பேச முற்படவே இல்லை. நேத்ரா தான் அனைத்தும் பேசிவிட்டாளே. என அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
சிவராமனுக்கு பேசவும் சங்கடமாய் இருந்தது. அங்கிருந்து நகர்ந்துவிட்டாலும் தவறாகிவிடுமே என அமைதியாக பார்த்தபடி இருந்தார். பாலகிருஷ்ணனுக்கு தன் மகனா இப்படி என்னும் அதிர்ச்சி நீங்கவே இல்லை.
திடுமென எழுந்தவன் தன்னறைக்குள் சென்று பத்தே நிமிடத்தில் உடைமாற்றி தன்னுடைய கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்ப பதறியேவிட்டனர்.
“அனய் எங்க கிளம்புற?…” அவனை மறித்து நின்று கேட்க,
“திருவாரூர் போறேன். மலரை அழைச்சிட்டு வர…” என்றதும் தூக்கிவாரிபோட்டது அனைவருக்கும்.
“நீ தப்பு பன்ற. இவ்வளோ சொல்லியும் இதென்ன பிடிவாதம் அண்ணா?…” நேத்ராவும் சொல்ல கண்டுகொள்ளாமல் ஆண்டாளை தாண்டி செல்ல முயன்றவனை தடுத்தவர்,
“நீ போக கூடாது. அவ நம்ம குடும்பத்துக்கு வேண்டாம்…”
“எனக்கு அவ தான் வேணும். உங்களுக்கு தெரியாது அம்மா, என்னால அவ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியலை…” என,
“நீ என்ன சொன்னாலும் நான் உன்னை அனுமதிக்க மாட்டேன். அதுவும் இல்லாம நான் வாக்கு குடுத்துட்டேன். உன்னால இந்த கல்யாணத்துல எந்த பிரச்சனையும் வராதுன்னு…”
முதலில் சாதாரணமாக கேட்டிருந்தவர்கள் ஆண்டாளின் கடைசி வாக்கியத்தில் சிலையாகி போயினர்.
“அம்மா உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?…” நேத்ரா கேட்க,
“ஹ்ம்ம், ஆமா. மலரோட மாமா எனக்கு பத்துநாளைக்கு முன்னாடி போன் பண்ணியிருந்தாரு…”என்றதும் புரிந்துகொண்டவன் ஒரு விரக்தி பார்வை பார்த்து,
“தேங்க்ஸ் அம்…” அம்மாவென சொல்ல வந்து பாதியில் நிறுத்த அதில் கலங்கி போனார் ஆண்டாள்.
“அனய், எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்ப்பா…”கண்ணீர் வழிய அவர் சொல்ல,
“என்னோட உயிரே அவதான். அதை என்கிட்டே இருந்து பிரிக்க நீங்களும் உடந்தையாகிட்டீங்களே?. இதை இந்த ஜென்மம் முழுக்க மறக்கவே மாட்டேன்…”
உடைந்து போய் பேசிய அவனை உறைந்து போய் பார்க்க நொடியும் தாமதியாமல் வெளியேறியவன் காரை எடுத்துக்கொண்டு திருவாரூர் பறந்தான்.
அவனின் மின்னல் வேகத்தில் திகைத்தவர்கள் வேகமாய் தாங்களும் கிளம்ப சிவராமனின் உடல்நிலையை மனதில் வைத்து நேத்ரா அவரை வீட்டில் இருக்கும்படி சொல்லி கிளம்பிவிட்டாள் பெற்றோரோடு.
——————————————————————-
வீடே நிச்சயதார்த்த ஏற்பாட்டில் மிக மிக பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. ஆளுக்கொரு வேலையாய் சுற்ற சரவணனுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
இதை ஏற்றுக்கொள்ளவும் பயமாய் இருந்தது. வேண்டாமென்று மறுத்தால் அதற்கான காரணம் கேட்பார்கள், அதுவும் அச்சத்தை கொடுத்தது. அதுவும் மலரின் முகம் காண காண குற்றவுணர்வு அதிகமாகிக்கொண்டே தான் போனது.
“எத்தனை பெரிய சுயநலம் எனக்கு? அவள் நன்றாய் வாழவேண்டும் என நினைக்கும் நானே அவளின் வாழ்க்கை அஸ்தமிக்க காரணமாக போகிறேனே?” தன்னை நினைத்தே அருவறுத்தான் சரவணன்.
“இத்தனை கோழையாய், பயம் கொண்டவனாய் தான் பிறந்திருக்கவே கூடாது. நான் எல்லாம் என்ன மனிதன்?…” நினைத்து நினைத்து வெட்கிக்கொண்டான்.
ஏதாவது ஒரு நேரத்தில் மனசாட்சி அதிகமாய் குத்திகிழிக்கும் பொழுதுகளில் மலரிடம் உண்மையை சொல்லிவிட நினைப்பான். ஆனால வைத்தியநாதனின் முகம் தோன்றி அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.
அவனுக்கு தெரியாத ஒன்று, அவரிடமே அவனது பிரச்சனையை நேரடியாய் சொல்லியிருந்தால் அவரே இந்த திருமணத்தை நிறுத்தியிருப்பார் தான். ஆனால் அதை பற்றிய யோசனைகள் கூட அவனுக்கு தோன்றவில்லை.
“நடப்பது நடக்கட்டும். இதுதான் எங்கள் விதிப்பயனோ, என்னவோ?…” என நினைத்து அமைதியாகிவிட்டான்.
அன்று காலையே உறவினர்கள் கூட்டத்தில் வைத்தியநாதனின் வீடே அமர்க்களப்பட்டது. வெளியூர் உறவினர்கள் அனைவரும் கூட வந்துவிட கொண்டாட்டத்திற்கு குறைவின்றி மகிழ்ச்சியோடு அணைத்து வேலைகளும் கச்சிதமாக நடந்தேறியது.
மாலை வைத்தியநாதன் வீட்டில் வைத்தே நிச்சயம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க மலரும் அங்கேயே தான் தயாராகிக்கொண்டிருந்தாள்.
சரவணனும் கூட தன் அத்தனை நாள் கவலையை ஒதுக்கிவைத்துவிட்டு மாப்பிள்ளை களையோடு அனைவரிடமும் இன்முகமாய் பேசிக்கொண்டிருந்தான்.
“என்னங்க…” என காமாட்சி அழைக்க ஐயரிடம் பேசிக்கொண்டிருந்த வைத்தியநாதன் திரும்ப,
“நானும் சரவணனும் கோவில்ல விளக்கு ஏத்திட்டு வந்திடறோம்ங்க…” என,
“என்ன விளையாடிட்டு இருக்கியா நீ? இன்னும் ஒரு மணி நேரத்துல நிச்சயதார்த்தம். இப்ப போய் கோவிலுக்கு போகனும், அது இதுன்னு…” என்று கடிந்து,
“ஏற்கனவே ராமைய்யா வேற இலை கட்டு பத்தலைன்னு அவனே போய் வாங்கிட்டு வரலாம்னு போய்ருக்கானாம். இதுக்கு கூட அவனே போவனுமா? எல்லாரும் ஏன்தான் இப்படி புத்தியில்லாம இருக்கீங்களோ?…”
“இல்லை நம்ம ஜோசியர் தான் சொன்னார். விளக்கு போட்டா நல்லதுன்னு. அதான் போய்ட்டு பட்டுன்னு வந்துடுவோம். இதோ நாலு வீதி தாண்டித்தானே. மோட்டார்ல போய்ட்டு உடனே வந்துடுவோம்…”
காமாட்சி சொல்ல வைத்தியநாதனுக்கு கூட்டத்தில் வைத்து மேலும் மறுக்க யோசனையாய் இருந்தது. பல்லை கடித்துக்கொண்டு சரவணனை அழைத்தவர்,
“பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க. ரோட்ல குண்டும் குழியுமா இருக்கும். கவனமா பைக் ஓட்டனும். புரியுதா?…” பல்லிடுக்கில் இருந்து வார்த்தைகளை கடித்து துப்ப சரவணனுக்கு அவரை பார்க்கவே பயமாய் போனது.