புன்னகை – 3
அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும் எப்படியாவது சரியாக்கிவிடவேண்டும் என்னும் தீர்மானத்தோடு இருந்தவன் அதற்கான முடிவை மனதளவில் தேட துவங்க மீண்டும் அலைபேசி அழைப்பை ஏந்தி வந்தது.
அதில் தெரிந்த இலக்கங்களை கண்டதும் மீண்டும் ஒரு வார்த்தைப்போருக்கு தன்னை தயாராக்கிக்கொண்டான்.
“ஹலோ…” என்று ஆதி ஆரம்பித்ததும் மறுமுனை பேசிய பேச்சில் ஆயாசமாய் இருந்தது இவனுக்கு. ஆனாலும் இவனும் விடாமல் பேச பேச வார்த்தைகள் முற்ற என பேச்சுக்கள் வளர்ந்துகொண்டே தான் சென்றது.
இத்தனை காரசாரமான விவாதம் தேவையா என்றிருந்தது ஆதிக்கு. தொண்டை உலர தண்ணீர் பாட்டிலை எடுத்து வாய்க்குள் சரித்துக்கொண்டவன் மனம் அதீதமாய் சோர்வடைந்தது.
“இதுக்கு மேல இதை பத்தி பேசறது சரியா படலை. நான் யார் என்னனு எனக்கு தெரியும்…” என ஆதி காரமாய் கூற,
“நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சு தான் பேசறியா நீ?…” சற்றே அதட்டலான குரலில் கேள்வி வர,
“நான் என்ன குழந்தையா? உங்க பேச்சு புரியாமல் இருக்க. என்னோட ப்யூச்சர் பத்தி நீங்க கவலைப்படவேண்டிய அவசியம் இல்லைன்னு சொல்றேன். என்மேல நீங்க அக்கறை பட்டவரை போதும்னு சொல்றேன்…” சற்றே காட்டமான குரலில் ஆதி.
ஏற்கனவே மலரின் பேச்சில் களைத்திருந்த அவன் சற்றுமுன் வந்த அலைபேசி அழைப்பில் முற்றிலும் துவண்டுதான் போயிருந்தான். எங்கிருந்து எனக்கு இத்தனை கோபம் வருகிறதோ என நொந்துகொண்டவன் எண்ணங்கள் அதை சுற்றியே வலம் வந்தது.
“இவர்கள் என்று தன்னை புரிந்துகொள்ள போகிறார்களோ?…” என்று ஆயாசமாய் எண்ணிக்கொண்டவன் மீண்டும் பழைய நினைவுகள் ஆக்கிரமிக்க துவங்க தலையை உலுக்கிக்கொண்டு அறையை விட்டு சடேரென வெளியேறினான்.
———————————————————–
காலை ஐந்தரைமணிக்கே விழிப்பு வந்துவிட தன்னருகில் உறங்கிக்கொண்டிருக்கும் மகளின் தூக்கம் கலையாதவாறு மெதுவாக எழுந்தமர்ந்தவள் குளித்து கிளம்பி அறையை விட்டு வெளியில் வந்தாள்.
இன்னும் காமாட்சி எழாமல் இருக்கவே கதவை திறந்து பார்க்க, சற்றுமுன்தான் மழை பெய்து ஓய்ந்ததற்கான அடையாளமாய் வெளியில் அத்தனை ஈரமாய் இருந்தது.
பேப்பரையும் பால்பாக்கெட்களையும் எடுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்து பாலை காய்ச்ச காமாட்சியும் வந்துவிட்டார் அதற்குள். இருவரும் பேசியபடி காலை சமையலை ஆரம்பித்துவிட்டனர்.
“இன்னையில இருந்து லீவ் தானே? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாம்ல. என்ன பொண்ணோ போ?…”
“நான் என்ன அத்தை செய்ய? லீவ் அன்னைக்கு தூக்கம் வரவே இல்லியே. டைம்க்கு முழிப்பு தட்டிடுது…”
“ஆனா வேலைக்கு போற அன்னைக்கு மட்டும் அந்த முழிப்பு தட்டாதே?…” கேலிக்குரலில் காமாட்சி கேட்க அசடு வழிந்தாள் மலர்.
இப்படியாக பேச்சு வளர்ந்து பக்கத்து வீட்டு, கதை எதிர் வீட்டுக்கதை என தன் காதுக்கு வந்த விஷயங்களை அப்படியே மலருக்கு சொல்ல அதை உம் கொட்டியபடி கேட்டுக்கொண்டாள் அவள்.
“காமாட்சி, குழந்தைக்கு பால் ஆற்றி எடுத்துவா…”என்ற வைத்தியநாதன் அழைப்பில் மலர் வேகமாக வருணிக்கு பால் கலக்க ஆரம்பித்தாள்.
“இந்த மனுஷனுக்கு எப்பப்பார்த்தாலும் என் பேரை நீட்டி முழக்குறதே வேலையா போச்சு. சுருக்கமா கூப்பிட்டாத்தான் என்னவாம்?. காமாட்சியாம் காமாட்சி…” என நொடித்துக்கொள்ள விரிந்த சிரிப்பொன்று மலரின் முகத்தில்.
“ஏன் சிரிக்கிறவ? நான் என்ன சொல்லிட்டேனாம்?…”
“ஒண்ணுமில்லைங்க அத்தை…” என சிரிக்க காமாட்சியின் முகத்திலும் புன்னகை.
பின்னே, இதை ஒரு நாளைக்கு நான்குமுறையேனும் சொல்லி புலம்பாவிட்டால் காமாட்சிக்கு அன்றைக்கு ஒருவாய் காபி கூட தொண்டையில் இறங்காது. அவர் சொல்லும் பொழுதெல்லாம் மலருக்கு அத்தனை சிரிப்பாய் இருக்கும்.
சிரித்தபடி, “ரெண்டுபேரும் மாடிக்கு போய்ட்டாங்க போல. நான் போய் பாலை குடுத்திட்டு வரேன் அத்தை. இந்த சட்னியை தாளிச்சிடுங்க…” என திரும்ப,
“இந்த சத்துக்கஞ்சியையும் போய் உன் மாமாவுக்கு குடுத்துடு…” என ஒரு ட்ரேயில் வைத்து பால் கப்பையும் சேர்த்துவைத்து கொடுத்துவிட்டார்.
மலர் மாடியை நோக்கி செல்ல காமாட்சி வேலையை முடித்துவிட்டு பூஜையறைக்குள் நுழைந்தார்.
கீழிறங்கி வந்தவள் வேகமாக வேறொரு சுடிதாருக்கு மாறி பூஜையறைக்குள் நுழைய அவளை கேள்வியாய் பார்த்தபடி காமாட்சி ஸ்லோகத்தை முணுமுணுத்துகொண்டே கற்பூர ஆரத்தி எடுக்க அதை பார்த்தபடி மாமியாருக்கு பதில் கூற ஆரம்பித்தாள்.
“அத்தை நான் நேத்தே சொல்லியிருந்தேனில்லையா? திலீபன் அண்ணாக்கு குழந்தை பிறந்திருக்குன்னு. இன்னைக்கு போய் பார்த்திட்டு வந்திடலாம்னு நினைக்கேன். ஹாஸ்பிட்டல் பக்கம் தானே. போய்ட்டு வந்து சாப்பிட்டுக்கறேன். அரைமணி நேரத்துல வந்திருவேன்…”
மலர் சொல்லுபோழுதே காமாட்சி அவளை முறைக்க அதை கண்டுகொள்ளாமல் மேலும் பேச இன்னும் நன்றாய் முறைத்தார் காமாட்சி.
காமாட்சிக்கு பூஜையறையில், கோவிலில் சாமி கும்பிடும் பொழுதுகளில் பேசினால் அறவே பிடிக்காது. ஆனால் மலருக்கோ என்றோ இறைநம்பிக்கை அற்றுப்போயிருந்தது.
இப்பொழுதும் அவள் கோவிலுக்கு செல்வது பூஜையறையில் காமாட்சிக்கு உதவியாய் இருப்பது அனைத்தும் காமாட்சிக்காக மட்டுமே. நெற்றியில் கடவுள் பிரசாதத்தை இட்டுக்கொள்வது கூட அவருக்காகத்தான். மறந்தும் எனக்கு இதை செய் என வேண்டவோ கடவுளை வணங்கவோ மாட்டாள்.
காமாட்சியும் இந்தளவிற்கு அவள் இருப்பதே போதுமானது என்பதை போல அவளை கட்டாயப்படுத்தாது இருந்துவிடுவார். ஆனால் சில நேரங்களில் காமாட்சியே பொறுமையிழந்து அவளை அவ்வப்போது முறைப்பார்.
ஆம் முறைக்க மட்டுமே செய்வார். இப்பொழுதும் அவர் அதையே செய்ய மலருக்கு அவரை சீண்டுவதில் வெகு சுவாரசியமாக இருக்க பேச்சை வளர்த்தாள்.
“சிசேரியன்றதால இன்னும் ரெண்டுநாள் ஹாஸ்பிட்டல்ல தான் இருப்பாங்க. அதான் அங்க இருக்கிறப்போவே போய் பார்த்துட்டு வந்துட்டா அவங்க வீட்டுக்கெல்லாம் போகவேண்டிய அவசியமில்லை பாருங்க…”
மலர் கடைசி வாக்கியத்தை கூறும் பொழுது இருந்த ஒருவித கவலை தொனித்தது போல இருந்தது அவளது குரலில். என்னவென பார்வையால் காமாட்சி கேட்க மலர் கொஞ்சம் சுதாரிப்பானாள். பேச்சை மாற்றவிரும்பி,
தீபாராதனையை கண்களில் ஒற்றிக்கொண்டவள் சிறு கீற்று விபூதியை நெற்றியில் தீற்றிக்கொண்டே,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தை. நீங்க இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வேலையை முடிச்சிடுங்க. ஈவ்னிங் வருணியை டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போகனும்…” என சொல்லியபடி வாசலுக்கு விரைய தடாலென்ற சப்தத்தில் திடுக்கிட்டு திரும்பினாள்.
அங்கே குழந்தையுடன் கீழே சரிந்திருந்தார் வைத்தியநாதன். ஆனாலும் அடி எதுவும் படாதவாறு குழந்தையை தாங்கிப்பிடித்தபடி தான் விழுந்திருந்தார் அவர்.
“ஐயோ மாமா…” என கத்திக்கொண்டு மலர் அருகே செல்ல காமாட்சியும் பூஜையறையிலிருந்து பதறிக்கொண்டு ஓடிவந்தார்.
என்ன செய்வது என ஒன்றும் புரியாமல் ஸ்தம்பித்துபோய் இருந்த மலரின் மூளை சட்டென உயிர்பெற்றதை போல வேகமாக செயல்பட ஆரம்பித்தது.
ஆம்புலன்சிற்கு காத்திராமல் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ருக்மணியின் கணவரை ஓடிச்சென்று அழைக்க அவர் தனது காரை எடுத்துக்கொண்டு வேகமாய் ஹாஸ்பிட்டலுக்கு காரை விரட்டினார்.
பின்னிருக்கையில் காமாட்சியின் மடியில் வைத்தியநாதனை இருத்தி முன்னிருக்கையில் மலர் வருணிகாவுடன் அமர்ந்திருந்தாள். உடன் ருக்மணியும் அவரது கணவர் சுந்தரமும்.
செல்லும் வழியெங்கும் ஒரே பிராத்தனை மேல் பிராத்தனை காமாட்சிக்கு. கண்களில் கண்ணீர் கரகரவென வழிய வைத்தியநாதனின் கைகளை பற்றியபடி இறைவனை விடாது வேண்டிக்கொண்டிருந்தார்.
மலருக்கோ துக்கம் தொண்டையடைத்தாலும் இப்பொழுது தானும் துவண்டுவிட்டால் காமாட்சியின் நிலை கவலைக்கிடமாகிவிடும் என முயன்று மனதை தைரியமாக்கிக்கொண்டாள்.
சற்றுமுன் மலர் கிளம்பிய அதே மருத்துவமனை ஆதலால் மிக அருகிலும் இருப்பதால் திலீபனுக்கு அழைத்து விவரம் சொன்னவள் திலீபனின் உதவியை நாட அவனும் மனமுவந்து அவளுக்கு உதவிக்கரம் நீட்டினான்.
இவர்கள் செல்வதற்கு முன்பே அங்கு அனைத்தும் தயார்நிலையில் இருக்க வைத்தியநாதனுக்கு துரிதமாக சிகிச்சை ஆரம்பித்தது.
நேரம் கடந்திருக்க ஐசியுவிலிருந்து யாரேனும் வெளிவருவார்களா என்னும் ஏக்கம் சுமந்த விழிகளோடு காமாட்சி அங்கேயே பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
அவரை அதிகம் காக்கவைக்காமல் வெளிவந்த டாக்டர் காமாட்சியின் தவிப்பை உணர்ந்தவராக சிறு முறுவலுடன்,
“பயப்படவேண்டாம். அவர் நல்லாவே இருக்காருங்கம்மா. தைரியமா இருங்க…” என சொல்லி மலரை பார்த்து லேசாக தலையசைத்து வருமாறு கூறி முன் சென்றார்.
அனைத்து கடவுள்களுக்கும் வானத்தை நோக்கி கைகூப்பி நன்றிகூறிக்கொண்டிருந்த காமாட்சியை பார்க்கையில் மனம் கசிந்தது.
எத்தனை அன்பு தம்பதிகளாக இன்றுவரை வாழ்ந்துவரும் அவர்களை பார்க்கையில் ஏனோ தனக்குள் வெறுமையான ஒரு உணர்வு.
நொடிநேரமேனும், “தனக்கும் மட்டும் ஏன் இந்த வாழ்க்கை?…” என்ற நினைப்பு முளைவிட துடித்துப்போனாள் மலர்.
இப்படி ஒரு எண்ணம் எந்த காலத்திலும் தனக்கு வந்துவிடவே கூடாது என்ற தன் நினைப்பை அசைத்துப்பார்க்கவென ஆண்டவன் முடிவுசெய்துவிட்டானா? எந்த சூழலிலும் என் முடிவு மாறவே மாறாது.
இன்னுமின்னும் தன் பிடிவாதத்தின் சங்கிலிகளை வலிமையாக்கினாள்.
வருணியை காமாட்சியிடம் கொடுக்க குழந்தையை வாங்கிக்கொண்டவர் அவளை அணைத்து முத்தமிட்டு,
“உன் தாத்தாவுக்கு ஒண்ணுமில்லையாம்டா. அவருக்கு ஒண்ணுமில்லை. சீக்கிரமே வீட்டுக்கு போய்டலாம்…” என சொல்லி சொல்லி முத்தமிட வருணிகா தன் பாட்டியை கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.
சில நொடிகள் இதனை பார்த்தவள் வேகமாய் திரும்பி டாக்டரின் அறையை நோக்கி சென்றாள். அதற்குள் ஓரளவிற்கு இதுவாகத்தான் இருக்கும் என யூகித்தும் இருந்தாள்.
எதுவாக இருந்தாலும் அதை தாங்கிக்கொள்ளும் வல்லமையை தனக்குத்தானே உருவாக்கிக்கொண்டு டாக்டரின் அனுமதியுடன் உள்ளே சென்று அமர அவள் முகத்தின் அலைப்புருதலை கண்ட டாக்டர் ஸ்ரீநிவாசன் கனிந்த முகத்தோடு,
“ஈஸி மிசஸ் மலர். முதல்ல நீங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க. நிதானம் தான் எதையும் தாங்கக்கூடிய சக்தியை கொடுக்கும். எந்த சூழ்நிலையிலும் நம்மை சரியான வழியில் பயணிக்கவைக்கும்…” என அமைதியாக கூற மலரும் தலையசைத்தாள்.
ஆனாலும் நொடிக்கொருதரம் பயத்தில் தடதடக்கும் இதயத்தை என்ன முயன்றும் கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை.
வைத்தியநாதனுக்கு ஒன்று என்றால் தங்கள் நிலை? எண்ணிப்பார்க்கவே அத்தனை கொடுமையாக இருந்தது. அனைத்து இன்னல்களில் இருந்து தங்களை காத்துவரும் பெரும்சுவரை போன்றவர் வைத்தியநாதன்.
தனக்காக அவர் எதிர்த்து நிற்கும் உறவின, உற்றார்களின் எண்ணிக்கை பெரும்திரள்கொண்டது. இதனை நினைக்கும் பொழுதே நெஞ்சுக்கூடே கசப்பில் கனத்தது.
இவை அனைத்தையும் நொடியில் எண்ணிப்பார்த்தவளின் முகத்தில் விரவிய வலியிலும் பயத்திலும் டாக்டர் ஸ்ரீநிவாசன் பரிதாபம் கொண்டார்.
“மலர், இங்க பாருங்க…” என அவள் முன்பு கையை ஆட்டி அழைக்க அதில் சுயம்பெற்றவள்,
“ஆங், சொல்லுங்க டாக்டர்…”
“என்ன விஷயம்னே தெரியாம இப்படி பதட்டப்படக்கூடாது. உங்க ஹஸ்பண்ட் எங்க இருக்கார்?…” எனவும் அதிர்ந்து விழிக்க அதில் எதையோ புரிந்தவராக,
“உங்க பேமிலில வேற யாராவது பெரியவங்க இருக்காங்களா?…” என மீண்டும் கேட்க அவளது மனக்கண்ணில் சொந்தபந்தங்களாக ஒரு ஊரையே கொண்டிருக்கும் ஜனங்கள் நிழலாக வந்து நின்றனர்.
அவளின் அமைதியில், “நான் எதுக்கு சொல்றேனா நீங்க கொஞ்சம் மெண்டலி டிஸ்டர்ப்டா இருக்கீங்க. அதுக்காகத்தான் கேட்டேன்…” எனவும் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவள் எதிரில் இருந்த தண்ணீர் தம்ளரை பார்த்து,
“ஷெல் ஐ டேக் திஸ் வாட்டர்?…” என கேட்க டாக்டரும் தலையசைத்தார். அதை எடுத்து குடித்து முடித்தவள் முகத்தை கைகளால் அழுந்த துடைத்துக்கொண்டு நிமிர்ந்தமர்ந்தாள்.
“என் குடும்பத்துக்கு என் மாமா தான் பெரியவங்க டாக்டர். எங்களுக்கு வேற யாருமில்லை. எங்களுக்கு நாங்க மட்டும் தான். நீங்க எதுவானாலும் என்கிட்டே சொல்லலாம்…”
சலனமில்லா முகத்தோடு மலர் கேட்க வார்த்தைகளில் தான் அத்தனை அழுத்தம்.
சற்றுமுன் சிறுபிள்ளை போல கலங்கிய பெண்ணா இவள் என்று சற்று ஆச்சரியப்பட்டுப்போனார் டாக்டர் ஸ்ரீநிவாசன்.