புன்னகை – 28
மாடியில் வேறொரு காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. காட்சிகள் முடிந்து அடுத்ததிற்கான பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்க இங்கே ரிஷி நேத்ராவிடம் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தான். முகத்தில் அவ்வளவு புன்னகை. அதுவும் வசீகரமாய்.
தன்னருகில் யாரோ வந்து அமரும் அரவம் தெரிய நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் நேத்ராவிடனான பேச்சில் தன்னை நுழைத்துக்கொண்டான்.
அவள் அப்படத்தின் இன்னொரு கதாநாயககி அபர்னிதா. அவனின் அருகில் அமர்ந்தவள் தன்னை நிமிர்ந்துபார்த்தவன் ஒரு மரியாதைக்காவது புன்னகைப்பான் என்று பார்த்தாள்.
அவனின் கண்டுகொள்ளாத தன்மையில் முகம் வாடினாலும் அதை காட்டிக்கொள்ள முடியாமல் ரிஷியின் புன்னகை அடியோடு சாய்த்தது அவளை.
“ஹாய் ஸார்…” என்றாள் அவன் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தும்.
“ஹாய்…” அவ்வளவுதான் நிமிர கூட இல்லை. இதை அனைத்தையும் செல்வா பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
“இந்த பொண்ணு நம்ம பெரியசாமி ஸார் பத்தி தெரியாம போய் உட்கார்ந்திருக்குதே?…” பயத்தோடு தான் பார்த்திருந்தான்.
“யூ லுக் வெரி ஹேண்ட்சம் ஸார். பேசாம நீங்களும் ஹீரோவா நடிக்கலாம் பெரியசாமி ஸார். ஆனா உங்க நேம் வேற மாத்திடுங்க…” என சொல்லி சிரிக்க பொறுமை இழந்தவன் எரிச்சலாய் அவளை பார்க்க,
“இன்னைக்கு ஷூட் அவ்வளோ தானா ஸார்?. முக்கியமான ஸீன் இன்னும் எடுக்கலையே…” என விடாமல் கேட்க,
“செல்வா….” என அனைவரும் கேட்கும் விதமாய் கத்தினான். அதிர்ந்து போய் ரிஷியின் முகம் பார்த்தவள் இன்னும் அரண்டு போனாள்.
அதிகமாய் பேசமாட்டான் தான். ஆனாலும் ஒரு நடிகையிடம் பேசாதவனும் உண்டா என்னும் மிதப்பில் இருந்தவள் அப்படத்தில் நடிக்க ஆரம்பித்திலிருந்தே அவனின் திமிரான ஒதுக்கத்தில் ஒருவித ஈர்ப்பு என்றும் சொல்லலாம்.
அவனிடம் வேண்டுமென்றே அவ்வப்போது பேச்சு வளர்க்கவும் முயல்வாள். அதற்கு சந்தர்பம் எதுவும் கிடைக்காமல் இருந்து இன்றைக்கு அவனை தனிமையில் பார்த்ததும் பேசவும் வந்துவிட்டாள்.
ஆனால் இப்படி அனைவரின் முன்பும் கத்திவிடுவான் என எதிர்பார்க்காததில் கூசிப்போனவள் ரிஷியின் முகத்தையே வெறித்து பார்க்க அதற்குள் செல்வாவும் வந்துவிட்டான்.
“எங்க போன நீ? தேவையில்லாம யாரும் என்கிட்டே வந்து பேசறது எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியுமா தெரியாதா?…” செல்வாவிடம் இரைய அப்படி தான் என்ன தவறு செய்துவிட்டோம் என்ற ஆணவம் தலை தூக்க,
“ஸார் கேட்டது நான், நீங்க எதுக்கு அவர்க்கிட்ட பாயறீங்க?…”
“லுக் மிஸ் அபர்னிதா. உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை…” என்றவன் கொஞ்சம் நெருக்கமாய் நின்று,
“நீங்க எந்த இன்டேன்ஷன்ல என்னோட பழக நினைக்கறீங்கன்னு புரியாத அளவுக்கு நான் குழந்தை இல்லை. சோ நீங்க டிஸ்டன்ஸ் மெய்ண்டன் பன்றது உங்களுக்கு நல்லது…” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியவன் செல்வாவை பார்க்க,
“ஸாரி ஸார், நான் பார்த்துக்கறேன்…” என்ற செல்வா,
“மேம், உங்களுக்கு ஏதாவது கேட்கனும்னா என்னை கூப்பிடுங்க…” என்றதும் அவனை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்று தன்னுடைய கேரவனுக்குள் மறைந்துகொண்டாள்.
அவளின் பின்னே போகவிடாமல் செல்வாவின் மொபைலில் நேத்ராவின் அழைப்பு.
“போச்சுடா…” என தலையில் கை வைக்காத குறை தான்.
“சொல்லுங்க மேடம்…” பாவமாய் ஆரம்பிக்க,
“என்ன நடக்குது அங்க? யார் அவ?…” நேத்ரா பொரிய ஆரம்பிக்க,
“இல்லை மேம். நான் நான் பார்த்துக்கறேன்…”
“அதான் பார்த்தேனே நீ பார்த்த லட்சணத்தை. இனி எவளாச்சும் அவர் பக்கத்துல வந்தான்னு தெரிஞ்சது நீ தொலைஞ்ச பார்த்துக்க…” என்று வைத்துவிட,
“நேரமே சரியில்லை…” என புலம்பிக்கொண்டே அனய்யை பார்க்க சென்றான் அவன் தயாராகிவிட்டாகிற்றா என்று பார்க்க.
உள்ளுக்குள் பொசுங்கிக்கொண்டிருந்தாள் அபர்னிதா. அத்தனை தலையிறக்கமாய் போயிற்று அவளுக்கு. தன்னுடைய அழகிற்கு எத்தனை பேர் வரிசையில் நிற்கிறார்கள். இவன் என்னடாவென்றால் இப்படி அவமதித்துவிட்டானே? நினைக்க ஆறவில்லை.
வேண்டுமென்றே வந்து அவர்களே மன்னிப்புகேட்டு அழைத்துசெல்லட்டும் என பிடிவாதமாய் அமர்ந்திருக்க அவளின் பிஏ வேகமாய் வந்தான்.
“மேம், என்ன இப்படி பண்ணிட்டேங்க?…”
“நான் என்ன பண்ணினேன்? அந்த கேமராமேன் தான் என்னை இன்சல்ட் பண்ணினான். வந்து ஸாரி கேட்கிற வரை நான் வரமுடியாது. சொல்லிடு…”
அவளின் பேச்சில் அதிர்ந்தவன், “புரியாம பேசாதீங்க மேம். அவரை யார்ன்னு நினைச்சீங்க? ஆதி ஸார் மச்சான். இங்க என்ன ஆனாலும் அவர் உங்க கிட்ட வந்து ஸாரி கேட்க மாட்டார். அதுக்கு பதிலா ஹீரோயினை வேணும்னாலும் மாத்துவாங்க. இந்த மூவி உங்களுக்கு கிடைச்ச பெரிய ஆபர்ச்சுனட்டி. மிஸ் பண்ணிடாதீங்க மேம்…”
அவன் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டவள் இப்போதைக்கு அமைதியாய் போவோம், அதுதான் சரி என்று முடிவெடுத்து வெளியே வந்தவள் அங்கே ரிஷியும் அனய்யும் பேசிக்கொண்டிருக்க இவளை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
அனய் எப்பொழுதும் இயல்பாய் பழகுபவன். அவனின் இந்த ஒதுக்கம் அபர்னிதாவை கொஞ்சம் யோசிக்க வைத்து தன் எதிர்காலத்திற்காய் தழைந்து போக சொன்னது அவளின் அறிவு.
“ஸாரி ஸார்…” பிழைக்க தெரிந்தவளாய் ரிஷியிடம் வந்து நிற்க சிறு தலையசைப்போடு அவன் எழுந்து சென்றுவிட அப்பொழுதுதான் அனய்யின் முகமே தெளிவாய் இருந்தது.
லேசான புன்னகையோடு அனய்யும் அவளிடம் தலையசைத்து நகர எரிச்சலான மனதோடு அவர்களை பார்த்திருந்தாள். ஆனால் வெளிக்காட்ட முடியாதே. அடுத்த அனய்யின் புது படத்திற்கும் தன்னையே கமிட் செய்வது பற்றிய பேச்சுக்கள் தன் காதில் விழுந்திருந்ததே.
அடுத்த காட்சி திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டில் நடைபெறும் சடங்கிற்கானது. அதில் காதல் காட்சிகளும் அரங்கேற சரியாக வந்து சேர்ந்தாள் வனமலர்.
புது மாப்பிள்ளையாய் மனைவியிடம் காதலுடன் நடந்துகொள்ளும் காட்சிகளும் சம்பாஷனைகளும். தன் கணவனை இன்னொரு பெண்ணுடன் பார்த்ததும் அதிலும் நெருக்கமாய் அனலில் இட்ட புழுவென துடிதுடித்து தான் போனாள் மலர்.
அவளின் அதிர்ந்த பார்வையும் தோற்றமும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க பார்த்ததும் கண்டுகொண்டனர் அனய்யின் மனைவி என.
யாரையும் ஏறிடும் சக்தி இல்லாமல் அங்கிருந்த அறைக்குள் நுழைந்து விட இன்னமும் புண்பட்டுதான் போனாள்.
மலரின் வெறித்த பார்வையில் அவளின் விழிகள் பார்த்த திசையில் தானும் பார்த்தவன் தலையில் அடித்துக்கொண்டான்.
கதைக்கான அடுத்த காட்சி முதலிரவு. அதற்கான ஏற்பாடு அந்த அறை முழுவதும் அலங்காரமாய். பூக்களால் அந்த அறையையும் படுக்கையையும் ரசித்து ரசித்து அலங்கரித்திருந்தனர்.
“போச்சு, இன்னைக்கு காலி. என்ன ஆகுமோ? சண்டை போடுவாளா? அப்படியாவது போட்டுட்டா தான் தேவலை. ஆனா வாயை திறக்கமாட்டாளே…”
அவனின் எண்ணம் அறியாமல் உயிரற்ற ஜடமாய் அப்படியே சமைந்து அமர்ந்திருந்தாள். அனய் தன் பின்னே வந்தது, தன்னை பார்த்து பதித்து நிற்பது என எதையும் அறியாமல் அவளின் விழிகள் நிலைகுத்திட்டு நின்றது.
இதயத்தினுள் ஆயிரமாயிரம் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு உயிரை வதைத்தது. கண்ணீர் கண்ணீர் கண்ணீர் மட்டுமே கண்களுக்குள்.
“இந்த நிமிடம், இந்த நொடி தான் அனுபவிக்கும் இதே வேதனையை அனய்க்கு எத்தனை வருடமாய் நான் கொடுத்திருந்தேன்?”
“கதைக்கென்றாலும் கூட அவனை இன்னொரு பெண்ணோடு நெருக்கமாக பார்க்க முடியாத தன் மனநிலை. ஆனால் நிஜமாய் ஒருவனின் மனைவியாக தான் இருந்ததும், வாழ்ந்ததும். ப்ச். அந்த சூழ்நிலை அனய்க்கு எத்தனை பெரிய தண்டனையாய் இருந்திருக்கும்?”
மனதிற்குள் அரற்றி துடித்தவள் தாங்கமுடியாமல் முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்தாள் மலர்.
பதறிய அனய் அவளருகில் ஓட அவனின் அருகாமையை உணர்ந்துகொண்டவள் கண்களை திறவாமலே அவனின் மார்பில் சாய்ந்துகொண்டாள்.
“டேய் மலர், என்னடா?…” அவளின் முகத்தை நிமிர்த்த முயன்று தோற்று தான் போனான்.
அத்தனை அழுத்தமாய் அவனின் சட்டையை பற்றிக்கொண்டு அழுகையில் கரைந்துகொண்டிருந்தாள் வனமலர்.
“ப்ச் இப்ப என்ன ஆகிடுச்சுன்னு இப்படி அழுதிட்டிருக்க. வெளில எல்லோரும் இருக்காங்கம்மா. அழாத. சொல்றேன்ல. கேளேன்டி…”
அதட்டலில் தொடங்கி கெஞ்சலில் இறங்கி வர அவையெல்லாம் மலரிடம் எடுபடவே இல்லை. அவனின் மார்பில் அடித்துக்கொண்டே அழுதவள்,
“என்னை கொன்னு போட்ருக்கலாம் நீ. என்னால இதை பார்க்க கூட முடியலை. ஆனா நான் உனக்கு எத்தனை பெரிய பாவத்தை செஞ்சிருக்கேன். எவ்வளவு கஷ்டம் அனுபவிச்சிருப்ப நீ. ஏன்டா ஏன் என்னை போய் விரும்பின? நான்லாம் உனக்கு…”
சுயநினைவில்லாதவளை போல சத்தமாய் பிதற்ற ஆரம்பிக்க அவளை கட்டுப்படுத்த முடியாமல் அவளிதழ்களை முற்றுகையிட்டான் அனய். சட்டென ஏற்பட்ட இதழ் ஸ்பரிசத்தில் தடுமாறியவள் விழிகள் மயங்க அவனோடு மூழ்கித்தான் போனாள்.
எத்தனை முயற்றும் அவன் கொடுத்த முதல் முத்தம் ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை மலரால். அன்று அவன் முத்தம் கொடுத்ததும் அதன் பின்னான நிகழ்வுகளும் உயிரை தின்றது.
மட்டுப்பட்டிருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க அவளை விட்டு விலகியவன் சுவற்றில் சாய்ந்தமர்ந்துகொண்டான்.
“இன்னும் என்னடி. உன்னோட போராடுறதே எனக்கு வாழ்க்கையா போச்சு…” சலிப்பாய் அவன் கூற அனய்யின் கண்களில் இருந்த வலி கண்டு அமைதியாக இருக்க முடியாமல் இதற்கு தான் தானே காரணம் என்ற எண்ணம் மேலும் அழுகையை தான் கொண்டுவந்தது.
“திரும்ப திரும்ப பழசை நினைக்காதே மலர். இந்த நிமிஷமும், இனி வரும் எதிர்காலமும் தான் நமக்கு நிஜம். கடந்தது இறந்த காலம். இறந்ததாவே மட்டும் இருக்கட்டும். நீ திரும்ப பேசி அதுக்கு உயிர் கொடுத்து உன்னை அழிச்சு என்னையும் அழிச்சிடாதே…”
“இல்லை வந்து…”
“இப்பவும் நீ என்னோட மலர் தான். என் ரோஸ்பட் தான். நீ எனக்குன்னே பிறந்தவ. அதுதான் இத்தனை கஷ்டத்திலையும் உன்னை என்கிட்ட கொண்டுவந்து சேர்த்திருக்கு. நாம சந்தோஷமா வாழ பிறந்தவங்க மலர்…”
“உண்மைதான். எதோ கடவுளுக்கு கருணை இருந்திருக்கு. அதுதான் என்னை எந்த களங்கமும் இல்லாம உன்கிட்ட வந்து சேர்த்திருக்கு…” என்றதும் அதிர்ந்து பார்த்தான் அனய்.
“மலர், இடியட் மாதிரி பேசாதே. என்ன நினைப்பு இதெல்லாம்?…” அவளின் பேச்சின் திசையை அவன் விரும்பவில்லை என்பது அவன் முகத்தில் இருந்தே புரிந்துகொண்டாள். இன்றே இதை பேசி விடவேண்டும் என்று முடிவெடுத்தவள்,
“நான் உண்மையை தான் சொன்னேன். அப்படி மட்டும் ஏதாவது நடந்திருந்தா என்னை என்னாலையே மன்னிக்க முடிஞ்சிருக்காது. சத்தியமா செத்துதான் போய்ருப்பேன்…” உடல் நடுங்க சொல்லியவளை வேதனை பொங்க பார்த்தவன்,
“மலர் உனக்கு, உனக்கு…”
“ஆமா எனக்கு எல்லாமே தெரியும். தெரியும்…” முகத்தில் அடித்துக்கொண்டு அவள் அழ,
“வேண்டாம்டி. அழாத. ப்ளீஸ்…” அவளை அணைத்துக்கொண்டவன் உள்ளமோ கிடந்து தவித்தது.
“எனக்கு தெரியும். தெரிஞ்சிடுச்சு. அதுக்காக நான் சந்தோஷம் தான் படறேன். நான் எதுக்காக இதை நினைச்சு கவலை படனும்? வருணி எனக்கு அந்த கடவுள் கொடுத்த கிப்ட். அதே மாதிரிதான் நீங்களும்…”
“ஆனா ஆனா அவங்க…” சரவணனை குறிப்பிட்டு சொல்ல,
“வேண்டாம், வேண்டவே வேண்டாம். இதை பத்தி இனி நாம பேசவோ நினைக்கவோ கூடாது…” கண்டிப்பாய் சொல்லியவன்,
“மலர் கற்பனையாய் சந்தோஷத்தை உருவாக்கிக்கலாம். ஆனால் கற்பனையாய் துயரத்தை கஷ்டத்தை உருவாக்கறது தப்பு. இந்த மாதிரி யோசிச்சு உன்னோட நிம்மதியை இழந்திடாதே. சில விஷயங்கள் கற்பனையா கூட நினைக்க கூடாது. புரியுதா?…” அனய்யின் சமாதானம் எதுவும் செல்லுபடியாகவில்லை மலரிடம்.
“என்னால முடியலை. நான் என்ன பன்றது. உங்களுக்கு ரொம்ப கஷ்டம் குடுத்துட்டேன்ல. உங்களை உங்க காதலை அலட்சியம் செஞ்சதுக்கு எனக்கு இந்த தண்டனை தேவைதானோன்னு தோணுது. விலகிடனும்னு கூட. ஆனாலும் நீங்க இல்லாம இந்த லைப். சத்தியமா முடியலை…” நடுக்கம் குறையாமல் அவனின் முகத்தை பார்த்து பரிதாபமாய் கேட்க,
“எல்லாம் சரியாகிடும். நீ முதல்ல இப்படியெல்லாம் நினைச்சு புலம்பறதை நிறுத்திட்டு என்னை எப்படி லவ் பண்ணலாம்னு மட்டும் யோசி…” அனய்யின் மனதில் இருந்த மொத்த சஞ்சலங்களும் அழிந்து போக துடைத்து வைத்த பளிங்கு போல் இருந்தது அவனின் உள்ளம்.
புன்னகை முகத்தோடு அவன் மலரிடம் சொல்ல இன்னும் எதையோ எதிர்பார்த்தது அவளின் மனது. அசையா பார்வை கொண்டு விழிகளில் அவனை சிறைபிடித்துக்கொண்டிருந்தாள் மலர்.
“ஹேய் இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்ப? வெளில போகனும்டா…”
அவனின் பேச்சையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அவனின் முகத்தையே பார்த்தபடி இருக்க,
“என்ன தான் நினைச்சுட்டிருக்க மலர். நான் சொல்றது எதுவும் உன் காதுல விழலையா?…” அவளை எழுப்பி நிறுத்தி கேட்க,
“கேட்டா கோச்சுக்க மாட்டீங்க தானே…” சொல்லியவளின் விழிகள் எதையோ யாசிக்க அவளின் முகம் பற்றி கன்னம் தாங்கியவன்,