“வெல் மலர். நீங்க ஓரளவுக்கு கெஸ் பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஹ்ம். உங்க பாதர்-இன்-லாவுக்கு வந்திருக்கிறது மைல்ட் அட்டாக்…”
அவர் சொல்ல சொல்ல உள்ளுக்குள் சற்று ஆடித்தான் போனாள் மலர். ஓரளவிற்கு எதிர்பார்த்திருந்தாலும் காதால் கேட்கையில் தாளமுடியாத அழுகை முட்டத்தான் செய்தது.
“டாக்டர் இது, எப்படி? காலையில கூட நல்லா தான் இருந்தாங்க டாக்டர். திடீர்னு நெஞ்சுவலி…” பேசமுடியாமல் குரல் தடைபட்டு திணற,
“ஏற்கனவே அவர் ரொம்ப மன உளைச்சல்ல இருந்திருக்கனும். இல்லை ஏதாவது அதிர்ச்சியான விஷயம் கேள்விப்பட்டிருக்கனும். அதை தாங்கிக்க கூடிய அளவுக்கு அவரோட இதயம் பலகீனமான நிலையில் இருந்திருக்கு…”
அப்படியே சமைந்துவிட்டாள் மலர். மன உளைச்சல் என்றால் அது தன்னால் மட்டும் தானே? அவரின் இந்த நிலைக்கு தானா காரணம்? நினைக்கும் பொழுதே நெஞ்சை அடைத்தது.
அதன் பின் டாக்டர் கூறுவதை கவனமாக கேட்டவள் இனி வைத்தியநாதனை எப்படி பார்த்துக்கொள்ளவேண்டும் என்ன ஏது என்ற அனைத்து விபரங்களையும் மிக கவனமாக கேட்டறிந்துகொண்டாள்.
அங்கிருந்து கிளம்பியவள் காமாட்சியை நோக்கி வருகையில் பேத்தியுடன் அவர் பேசிக்கொண்டிருப்பதை கண்டு அவள் நெஞ்சம் குற்றவுணர்ச்சியில் குமைந்து போனது.
“வாம்மா மலரு. உன் மாமாவுக்கு மயக்கம் தெளியவும் போய் பார்க்கலாம்னு அந்த தம்பி சொல்லியிருக்குது. நீ டாக்டர்கிட்ட எல்லாத்தையும் கேட்டுக்கிட்டையா?…”
முகத்தில் ஒருவித நிம்மதியுடன் கேட்ட காமாட்சியிடம் உண்மையை மறைத்துவிடுவது தான் நல்லது என நினைத்தாள்.
ஆனால் எதற்கு இந்த நெஞ்சுவலி வந்தது என கேட்டால் என்ன சொல்வது என யோசிக்க அதற்கு வேலையே வைக்காமல் காமாட்சியே பேசினார்.
“இந்த மனுஷன் கண்ட்ரோலு கண்ட்ரோலுன்னு வாய்கிழிய பேசுவாரு. ஆனா நேத்து வெங்காயபக்கோடாவை வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு. எல்லாம் டிவில மகனை பாத்த சந்தோஷம். அதான் இப்படி ஆகிடுச்சு. நான் ஒரு கூறுகெட்டவ. அவரை கவனிச்சிருக்கனும்…”
தானாக ஒன்றை நினைத்து வெள்ளந்தியாக பேசிவைக்க அவரை கண்டு உள்ளுக்குள் நொறுங்கிபோனாள் மலர்.
இப்படியாக வாரம் ஒன்று சென்றிருக்க குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சம் சிரமம் இருந்தாலும் சமாளித்துக்கொண்டனர். திலீபனுமே அவ்வப்போது உதவ கொஞ்சம் இலகுவாகவே போனது.
ஆதியால் தான் இவர்களை தொடர்புகொள்ள இயலவில்லை. தன் நம்பிக்கைக்குரியவர்களை அனுப்பி அக்கம்பக்கம் சென்று விசாரிக்க அனுப்ப அவர்கள் கேட்ட எதிர்கேள்வியில் விசாரிக்க சென்றவர்கள் திரும்பிவிட்டனர்.
யார், எதற்கு, என்னவென கேட்டு பிரச்சனை ஆகிவிட்டால் தேவையில்லாமல் மலரின் கோபத்திற்கு ஆளாகவேண்டியதாகிவிடும். அதுவும் இல்லாமல் வைத்தியநாதன் தன்னை தொடர்புகொள்ளாமல் இருப்பதிலேயே ஓரளவு புரிந்தது.
வைத்தியநாதனுக்கு கண்டிப்பாக உடல்நிலை எதுவோ சரியில்லை. இல்லை என்றால் நிச்சயம் அவர் பேசியிருப்பார் என நினைத்தாலும் அவருக்கு என்னவோ எதுவோ என உள்ளம் பதறியது.
உடனே கிளம்பமுடியாதளவிற்கு அங்கு ஒப்புக்கொண்ட பணிகள் காத்துக்கிடக்க ஷூட்டிங்கை ரத்துசெய்து கிளம்பமுடியாத சூழலில் சிக்கிக்கொண்டான்.
இன்னும் ஒருவாரம் அங்கு சென்றுவிடுவோமே என கொஞ்சம் சமாதானமானான். ஆனாலும் அவன் நெஞ்சம் முழுவதும் இவர்களை சுற்றியே தவித்துக்கிடந்தது.
ஹாஸ்பிட்டல் வாசம் முடிந்து வீடு திரும்பிய வைத்தியநாதனுக்கு கீழிருக்கும் மற்றொரு அறையை தயார்செய்து கொடுத்து அவரை ஓய்விருக்க சொல்லிவிட்டு மலர் வீட்டை சுத்தம் செய்ய துவங்க பக்கத்துவீட்டு ருக்மணி வந்தார்.
“மலரு என்ன இது? இப்பத்தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்க. அதுக்குள்ளே வேலையா?…”
“ஆமாம் ஆன்ட்டி. ஒருவாரமா வீட்டு அடைச்சுக்கிடந்தது இல்லையா? அதான் கொஞ்சம் சுத்தம் செஞ்சுடலாமேன்னு. இல்லைனா தூசி மண்டிக்கிடக்கும். இதோ ஒரு அரைமணி நேரத்துல முடிச்சிருவேன்…”
“எனக்கு தெரியும் நீ இப்படி செய்வன்னு. மொத்த வீட்டையும் கூட்டி துடைச்சு உன் உடம்புக்கு ஏதாவது வந்திடாம. அதான் எங்க வீட்டு வேலையம்மாவை உனக்கு உதவிக்கு கூட்டிட்டு வந்தேன்…” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவரின் வீட்டு வேலைக்காரம்மா வேகமாக வந்துவிட்டார்.
“ஐயோ அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி. நானே சமாளிச்சுப்பேன். அத்தைக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாங்க…” என சமாளிக்க,
“அழகம்மா நீ போய் வேலையை ஆரம்பி. ஒரு இடம் இல்லாம பளிச்சுன்னு சுத்தம் செய்யனும். புரியுதா?…” என்று அனுப்பியவர் மலரின் புறம் திரும்பி,
“ஆன்ட்டி சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும் மலர். ரொம்ப நம்பிக்கையான ஆளுதான் இந்த அழகம்மா. வேலையும் சுத்தமா இருக்கும். உன் அத்தை எங்க?…” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவர் வைத்தியநாதனையும் போய் எட்டி ஒரு பார்வை பார்க்க அவர் உறங்கிக்கொண்டிருந்தார்.
“அத்தை வருணியை குளிக்கவைக்கிறாங்க. அதான் அதுக்குள்ளே ஏதாவது நானே ஆரம்பிச்சிடலாமேன்னு பார்த்தேன்…” தயக்கமாகவே மலர் கூற ருக்மணி,
“உன் அத்தை எதுவும் சொல்லாம நான் பார்த்துக்கறேன். இன்னைக்கு ஒரு நாள் தானே?…”
“நிக்கிறீங்களே ஆன்ட்டி உட்காருங்க. டீ, காபி ஏதாவது சாப்பிடறீங்களா?…”
“நோ பார்மாலிட்டீஸ் மலர்…” என புன்னகைத்தவர் காமாட்சி வரவும் அவரிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு செல்ல,
“நான் சொல்ல சொல்ல அந்த ஆன்ட்டி கேட்கவே இல்லை அத்தை…”
“சரி விடும்மா. இன்னைக்கு ஒரு நாள் தானே. இனி நாம பார்த்துக்கலாம். நான் போய் சமைக்கிறேன். நீ குளிச்சுட்டு வா…” என காமாட்சியும் சொல்லி செல்ல மலரும் ஒரு பெருமூச்சுடன் உள்ளே சென்றாள்.
அங்கே வருணி குளித்து முடித்து பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். மலரை பார்த்து பெரிதாய் புன்னகைக்க,
“அம்மா குளிச்சிட்டு வரேன் செல்லம். நீங்க விளையாடுவீங்களாம். சரியா…” என மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு குளிக்க சென்றாள்.
ஆனாலும் ருக்மணி பற்றிய சிந்தனை மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது. இந்த வெட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்றுவரை தங்கள் குடும்பவிஷயத்தில் மூக்கை நுழைப்பதோ வேறெந்த அனாவசிய கேள்விகளோ எப்பொழுதும் அவரிடத்தில் இருந்ததில்லை.
அதனாலே காமாட்சிக்கும் ருக்மணிக்கும் இடையில் ஓரளவு நட்பு இருந்தது. மலரிடமும் அவ்வப்போது பேசுவார் தான். அவரின் குணநலன்கள் ஈர்க்க மலராய் ஈர்க்க மலரின் கலகலப்பு ருக்மணியை ஈர்க்க இருவருக்கும் ஒரு எல்லைக்குட்பட்ட ஸ்நேகம் மலர்ந்திருந்தது.
அதனாலேயே இந்த உதவியை அவளால் ருக்மணியிடம் மறுக்கமுடியவில்லை. அதே போல் தநோக்கொரு கஷ்டம் என வருகையில் தயங்காமல் அங்கு சென்று நின்றாள்.
மலர் குளித்து வருவதற்குள் காமாட்சி ஆதிக்கு அழைத்து நடந்ததை விளக்க அவனின் நிலையை சொல்லவே வார்த்தையில்லை. யாருமில்லாமல் குழந்தையோடு அவர்கள் அனுபவித்த கஷ்டம் இவனின் நெஞ்சை வாள்கொண்டு அறுத்தது.
அத்தனை மன்னிப்பு கேட்டு ஆதி கலங்க காமாட்சி தான் அவனை தேற்றவேண்டியதானது. காமாட்சியின் பேச்சில் இருந்தே வைத்தியநாதனுக்கு என்னவானது என தாய் அறிந்திருக்கவில்லை என்பது புரிந்துபோனது.
விரைவில் வருவதாக அவருக்கு நம்பிக்கை அளித்தவன் அதை செயலாக்கும் பொருட்டு தன் காட்சிக்கான ஷெட்யூல்களை மாற்றி அமைத்தான். தன்னை வைத்து படமாக்கவேண்டிய காட்சிகளை விரைவில் முடிக்க ஏற்பாடு செய்தான்.
மேலும் நான்கு நாட்கள் கடந்திருக்க வைத்தியநாதன் கொஞ்சம் உடல்நலம் தேறிவந்திருந்தார். இன்னும் ஒரு வாரம் தன்னுடைய விடுமுறையை அதிகப்படுத்தியிருந்தாள் மலர்.
அன்று மாலை நான்குமணிவாக்கில் ஐந்தாறு பேர் தட்டுத்தாம்பாளத்தோடு விடுவிடுவென நடு வீட்டினுள் வந்தமர காமாட்சி தான் முதலில் பார்த்தது.
“யார் நீங்க?…” என கொண்டே அவர்கள் கடைபரப்பியிருந்த பொருட்களை பார்த்ததும் நடுநடுங்கிப்போனார்.
“வணக்கம்மா. என் பேர் சரோஜா. என் பையன் அழகேசன். அவனுக்கு நாங்க மலரை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்…” என சர்வசாதாரணமாக சொல்ல,
“கடவுளே?…” என அதிர்ந்துபோனார் காமாட்சி.
வைத்தியநாதனும் இதை கேட்டு அறையை விட்டு தடுமாறி வந்து நின்றார். அவருக்குமே இது பேரதிர்ச்சி தான்.
“இத பாருங்க, நீங்க தவறா புரிஞ்சுக்கிட்டு இங்க வந்திருக்கீங்க. மலரு எங்க மருமக. இதோ இது எங்க பேத்தி…” என மேலும் பேச இருந்தவரை இடைமறித்த சரோஜா,
“எல்லாம் எங்களுக்கு தெரியும்ங்கம்மா. அந்த பொண்ணு புருஷனை பிரிஞ்சு தானே வாழுது. இனிமே ஒண்ணு சேரவே போறதில்லைன்னு வேற கேள்விப்பட்டோம். எதுக்கு தனியா கஷ்டபடனும். என் புள்ள அவ மேல இஷ்டபட்டுட்டான். எங்களுக்கு இது ஒரு பெரிய விசயமே இல்ல…”
“போதும் நிறுத்துங்கம்மா…” வைத்தியநாதன் சத்தமிட,
“அட இருங்க ஐயா உங்களுக்கு வேற ஹார்ட்டு வீக்கு. சும்மா கத்தி பேசற வேலை வேண்டாம். மலரு டைவர்ஸ் பன்றதை பத்தி நாங்க பார்த்துக்கிடுதோம். ஆனா உங்க பொண்ண என் பையனுக்கு கட்டிவைக்காம நான் விடமாட்டேன். அவன் ஆசைக்கு நான் என்னைக்கும் குறுக்கால நின்னதே இல்லை…” என்ற சரோஜாவின் முகம் அத்தனை பயங்கரமாய் இருந்தது.
சரோஜாவின் பேச்சின் தொனியே அப்பட்டமான மிரட்டலாய் இருந்தது. நாங்கள் நினைத்ததை நடத்திக்காட்டுவோம் இல்லைஎன்றால் உங்களின் கதி அதோ கதி என்னும் வகையில் கண்களை உருட்டி பேசினாள்.
அவளின் மகன் என்னும் அழகேசன் பெயரில் மட்டுமே அழகாய் வைத்திருக்கும் கரியவன். அவனின் முகத்தை பார்த்ததுமே தெரிந்துவிடும் அவனின் அயோக்யத்தனங்களின் எண்ணிக்கைகள் அதிகமென.
மலரை பெண்கேட்டு வரும் அளவிற்கு இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவளின் கால் தூசிக்கு சமமாவானா? என காமாட்சி கொந்தளிக்க மலரே வந்துவிட்டாள். அனைத்தையும் பார்த்து தான் வந்தாள்.
“அத்தை இதுகளையெல்லாம் யார் வீட்டுக்குள்ள விட்டது?. அதுவும் உட்காரவச்சு பேசிட்டு இருக்கீங்க?…” என காமாட்சியிடம் கேட்க,
“கண்ணு நீதான் மலரா?…” சரோஜா மொத்த பல்லையும் காட்டி,
“நான் சரோஜா. அழகேசனோட அம்மா…” என சொல்ல,
“புள்ளைய ரொம்ப நல்லா வளர்த்துவச்சிருக்கம்மா ஒத்த ரோசா. பெருமைப்பட்டுக்க…” என்ற நக்கலான குரலில் மலர் பேச அதில் வெகுண்ட சரோஜா,
“ஏய் என்ன நக்கலா? யார்க்கிட்ட பேசறோம்னு தெரிஞ்சு பேசு. நான் நினைச்சா என்ன நடக்கும்னு தெரியுமா?…” என சரோஜா சவடால் பேச,
“என் விஷயத்துல நீ நினைக்கிறது ஒன்னும் நடக்காது. என்கிட்டே உன் அதட்டல் மிரட்டலை வச்சுக்காதே. முதல்ல உன் புள்ளைக்கு புத்திமதி சொல்லு. அதைவிட்டுட்டு…” மலரும் விடாமல் பேச காமாட்சிக்கு பயத்தில் வியர்த்து வழிந்தது.
“மலரு, செத்த அமைதியா இருமா…” என கெஞ்ச அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கண்களில் தீப்பொறி பறக்க சரோஜாவை முறைத்து நின்றாள்.
“எதுக்கு அத்தை அமைதியா இருக்கனும்? இவன் என்னனா நான் எங்கபோனாலும் பின்னால சுத்துறான். அவன் சொன்னான்னு கொஞ்சமும் வெக்கமில்லாம தட்டைத்தூக்கிட்டு இவங்க வந்து நிக்கிறாங்க. நான் எதுவும் பேசக்கூடாதா?…” என சொல்லி,
“ஏய் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிட்டேன். என் பின்னால வராதன்னு. உனக்கு தான் அறிவில்லைனா உன் பேச்சை கேட்டு இந்த கூட்டம் வந்திருக்குதே இதுங்களுக்குமா இல்லை…” எனவும் பயங்கரமாய் முறைத்தால் சரோஜா.
“என்னா முறைக்கிற? நீ சும்மா பார்த்தாவே பார்க்க சகிக்காது. இதுல முறைப்பாம். அடச்சீ எழுந்து வெளில போ…” என வாசலை நோக்கி கை காட்ட வேஷ்டியை மடித்துக்கொண்டு வந்த அழகேசன்,
“எங்கம்மாவையே எதிர்த்து பேசறியா? நான் ஆசைப்பட்டேன்னு தான் எங்கம்மா இத்தனை தூரம் இறங்கி வந்திருக்கு. உனக்கு எவ்வளவு திமிரு?…” என்று வேகமாய் வர,
“அப்படித்தான் திமிரா இருப்பேன். உன்னால என்னடா பண்ணமுடியும்? நீ உன் அம்மாலாம் யாரா இருந்தா எனெக்கென்ன? உங்க மூஞ்சியை பாத்தாலே தெரியலை நீங்க எல்லோரும் எப்படிப்பட்டவங்கன்னு. மரியாதையா வெளில போய்டு. இல்லை போலீஸ கூப்பிடுவேன். எப்படி வசதி?…”
அவளின் மிரட்டல் கொஞ்சம் வேலை செய்ய அமைதியாக மற்றவர்கள் வெளியேற அழகேசனும் சரோஜாவும் மட்டும் கோபமாக பார்த்தனர். அவர்களை ஒருவித இளக்காரம் மிகுந்த பார்வையில் மலர் பார்க்க,
“ஏய் உன்னை என்ன பன்றேன்னு பாருடி. இதுக்கு நீ அனுபவிப்ப. எங்களையா இளக்காரமா பார்க்க. சொல்லமாட்டேன். என்ன செய்யறேன்னு பாரு…”
சூளுரைப்பதை போல சரோஜா சொல்லிச்செல்ல அதை கண்டுகொள்ளாத மலர்,
“கிளம்பு கிளம்பு காத்துவரட்டும்…” என மலர் சொல்ல அழகேசன் கொலைவெறியும் குரூரமும் கண்களில் தெறிக்க செல்ல அதில் வைத்தியநாதனும் காமாட்சியும் தான் அரண்டுபோய் நின்றனர்.
புன்னகைக்கும் …