புன்னகை – 4
வீடே அருள் இழந்து காணப்பட்டது. சரோஜா வந்துவிட்டு போய் அரைமணிநேரமாக கோபத்தோடு அமர்ந்திருந்தாள் மலர். அவளை நெருங்கவே யோசிக்கத்தான் வேண்டியிருந்தது வைத்தியநாதனுக்கும் காமாட்சிக்கும்.
சற்றுமுன் நடந்த களேபரத்தில் அழத்தொடங்கியிருந்த வருணியின் குரல் கூட மலரை எட்டவில்லை. அந்தளவிற்கு மனம் மரத்துப்போனது போல இருந்தது.
வருணியை சமாதானம் செய்து வைத்தியநாதனுடன் இருத்திவிட்டு மலரை நோக்கி வந்தார் காமாட்சி. இப்படியே இவளை விட்டால் சரியாகாது என எண்ணி வந்தவர்,
“மலரு, இன்னும் எம்புட்டு நேரம்த்தா இப்படியே உட்கார்ந்திருக்க போற? எழுந்து போய் முதல்ல முகத்தை கழுவு…” தோள் தட்டி எழுப்ப அவரை கட்டிக்கொண்டு வயிற்றோடு முகம் புதைத்தவள் பதில் பேசவே இல்லை.
அவளின் நிலையே காமாட்சியை கலங்கடித்தது. இப்படி அமைதியாக இருந்து எதையாவது கோவத்தில் செய்துவிடுவாளோ என அஞ்சினார் காமாட்சி.
“அம்மாடி மலரு. விடுத்தா. ரோட்ல போறவன் பேசறதுக்கெல்லாம் கவலைபடாத. நாம நம்ம வேலையை பார்ப்போம்…” அவளை திசைதிருப்ப நினைக்க அவரிடமிருந்து விலகி எழுந்தவள்,
“அத்தை நான் போய் போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளைன்ட் குடுத்திட்டு வரேன்…”
“என்னது? புகார் குடுக்கவா? ஆத்தீ. என்ன காரியம் செய்யபோற? வேண்டாம்மா. நாம இப்படி போலீஸ், போலீஸ்ன்னு கிளம்பினா காலம் முச்சூடும் நடையா நடக்கவேண்டியது தான். விட்டுட்டுத்தா…”
“அதெப்படி அத்தை விட சொல்றீங்க? என்னால முடியாது. எவ்வளவு தைரியம் இருக்கனும் அந்த நாய்க்கு.? வீடேறி வந்து என்னலாம் பேசிட்டான்…”
அவளின் பேச்சில் அப்படி ஒரு ஆத்திரம், அத்தனை ஆவேசம். காமாட்சிதான் அவளை கட்டுக்குள் கொண்டுவரவேண்டியதானது.
“அவங்களை பார்த்தாலே சரிகிடையாது போல இருக்குதும்மா. எனக்கு பயமா இருக்கு. அந்த பொம்பளை பேசிட்டு போனதை பார்த்தேல. நமக்கு வேண்டாம்…” என மன்றாடும் குரலில் அவர் கேட்க,
“அவங்க எப்படிப்பட்டவங்களா வேணும்னா இருந்துட்டு போகட்டும். எனெக்கென்ன அதைப்பத்தி? ஆனா அவங்களை நான் சும்மா விடப்போறது இல்லை…”
“அதுங்க மூஞ்சியை பார்த்தாலே தெரியலையாம்மா. நாம தான் துஷ்டனை கண்டா தூர விலகனும். அவங்க வழியில இருந்து ஒதுங்கி போய்டனும்…”
“எப்படி அத்தை? நாம ஒவ்வொரு ஊரா போகனும். இவனுங்களை மாதிரி ஆளுங்க துரத்திட்டே இருப்பானுங்களா? இன்னும் எத்தனை ஊருக்கு போகனும்னு சொல்றீங்க?…”
வெகுண்டெழுந்து கேட்ட கேள்வியில் காமாட்சி திகைத்து நின்றார். வைத்தியநாதன் கூட அறையை விட்டு எழுந்து வந்துவிட்டார்.
“எனக்காக என்னோட நிம்மதிக்காக எல்லோரும் சொந்த ஊரை விட்டு வந்தோம். வருணி பிறந்து இத்தனை வருஷத்துல இதோட ரெண்டு ஊர். ஒரு பொண்ணு ஆண் துணையில்லாம தனியா வாழவே முடியாதா? இல்லை சுயமா வாழனும்னு நினைக்கிறது தப்பா?…”
“எனக்கான வாழ்க்கையை நான் நிம்மதியா சந்தோஷமா வாழ இந்த சமுதாயமும் இப்படிப்பட்ட ஆட்களும் ஏன் விடறதில்லை?. என்ன நடந்தாலும் யார் எப்படி நம்மக்கிட்ட நடந்துக்கிட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு கண்ணையும் காதையும் மூடிட்டு ஓரமா மூலையில முடங்கிடனுமா என்ன?…”
“என்னோட தன்னம்பிக்கைக்கும், தைரியத்துக்கும், பாதுகாப்புணர்வுக்கும் இந்த சமுதாயம் கொடுக்கிற பட்டங்களும் என்னைப்பற்றி அவங்கவங்க கற்பனைக்கேற்றதா உருவகப்படுத்தி அதுக்கு அவங்க பூசற சாயங்களும் என்னால முடியலை அத்தை. இன்னும் எத்தனையை நான் தாங்கிக்கனும்?…”
“என்னால இனியும் அப்படி இருக்க முடியாது அத்தை. இவனை நான் சும்மா விடமாட்டேன். இனியும் என் வழில வந்தா அதுக்கப்றம் இருக்கு இவனுக்கு…”
வேகமாய் தன் உள்ளக்குமுறல்களை கொட்டிவிட்டவள் வைத்தியநாதனை கண்டதும் ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்துவிட்டு,
“உங்க புள்ளைக்கும் சேர்த்து தான் சொல்றேன். இனி என் வாழ்க்கையில் வேற யாருக்குமே இடமில்லை. சொல்லிவைங்க…” தீர்க்கமாக சொல்லியவள் வேகமாய் மாடியேறிவிட்டாள்.
கனத்த மனதோடு காமாட்சி அப்படியே அமர்ந்துவிட வைத்தியநாதனும் உள்ளே சென்றுவிட்டார்.
கொடூரமான சரோஜாவின் முகமும், வெறியோடு இருந்த அழகேசனின் முகமும் மனக்கண்ணின் முன் வந்து பயமுறுத்தியது.
“பேச்சியாத்தா எதுவும் தவறா நடந்துதாம நீதான்மா எங்களுக்கு காவலா இருக்கனும். இந்தவருஷ திருவிழாவுல என் பேத்திக்கு மொட்டையடிச்சு காது குத்திடறோம்…”
வேண்டுதலோடு பூஜையறைக்கு சென்றவர் தன் குலதெய்வத்திற்கு சிறு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துவிட்டு வைத்தியநாதன் இருந்த அறைக்குள் சென்றவர்,
“காசு முடிஞ்சிருக்கேங்க. இந்த வருஷ திருவிழாவுல நாம பாப்பாவுக்கு மொட்டையடிச்சு காது குத்திட்டு வந்துடுவோம்…” என சொல்லி நிற்க,
“பார்ப்போம்…” வைத்தியநாதனின் விட்டேத்தியான பதிலில் கலங்கித்தான் போனார் காமாட்சி.
“நடக்கும்ங்க. நீங்க வேணும்னா பாருங்க…” என வரவழைத்துக்கொண்ட நம்பிக்கையோடு பேசியவரை பரிதாபமாக பார்த்தார் வைத்தியநாதன்.
திருமணம் ஆன முதல்முறையை தவிர அடுத்து மலர் அந்த கோவிலுக்கே சென்றதில்லை. செல்லவும் விரும்பவில்லை. அப்படி ஒரு பிடிவாதம் இதிலும். அங்கு செல்லவே மாட்டேன் என்று.
அங்கு தவிர குழந்தைக்கு வேறெங்கும் மொட்டையிட்டு காதுகுத்துவதில்லை என்று வைத்தியநாதன் அதற்கு மேலும் பிடிவாதம் பிடித்தார். இருவரின் கருத்துவேறுபாட்டால் இன்றுவரை வருணிகாவிற்கு காது குத்தாமல் மொட்டையடிக்காமல் இருக்கின்றனர்.
இத்தனை வருடம் வராதவள் இந்தவருடம் மட்டும் வந்துவிடவா போகிறாள்? வைத்தியநாதனுக்கு கொஞ்சமும் நம்பிக்கை என்பதே இல்லை.
கொஞ்சமும் பற்றில்லாத விரக்தியான அந்த பார்வையில் தொப்பென கட்டிலில் அமர்ந்தவர்,
“நான் என்ன செய்யட்டும்ங்க. எனக்கு அந்த ஆத்தாளை தவிர வேற யார்க்கிட்டயும் சொல்லி அழ முடியலை. எனக்கு தெரிஞ்ச ஒரே வழி அதுதான். என்னமோ பயமாவே இருக்கு. மனசே சரியில்ல…”
அவர் பேச பேச கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிய மனைவியின் துக்கத்தை தாங்கமுடியாத வைத்தியநாதன் காமாட்சியை தன்னருகில் அழைத்து தோள்களில் சாய்த்து ஆறுதல்படுத்தினார்.
நடப்பவற்றை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த குழந்தையும் தாத்தாவின் புறம் தவழ்ந்து சென்று அவர் மார்பில் தலைசாய்ந்துகொண்டது. அதுவரை இறுக்கமாக இருந்தவரின் கண்களில் பேத்தியின் செயலால் கண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
மற்ற இருவரும் காணாமல் தன்னை அடக்கிக்கொண்டார். அவரே உடைந்துவிட்டால் மற்றவர்கள் தாங்கமாட்டார்கள் என்று. தனக்குப்பின் இக்குடும்பத்தின் நிலை? நினைவே அச்சம் தந்தது.
இத்தனை துக்கம் தேவையா? என தோன்றியது. மலரின் ஒற்றை பதிலால் இத்துயரங்கள் அனைத்தும் பனிபோல விலக கூடிய வழி இருந்தும் அதனை அடைத்துக்கொண்டு முன்னால் நிற்பதுவும் மலரே.
எந்த வாழ்க்கையை வேண்டாமென அவள் ஒதுக்குகிறாளோ அந்த வாழ்க்கை தான் அவளுக்கு பாதுகாப்பு, எதிர்காலம் என எப்பொழுது புரியப்போகிறதோ?
நினைக்க நினைக்க ஆற்றாமையாக இருந்தது.
மலரை நினைத்து பெருமைகொள்ளுவதா? இல்லை கோபம் கொள்ளுவதா என்றே அவருக்கு புரியவில்லை.
அவளின் இத்தனை பிடிவாதத்திற்கும் ஒரு நியாயமான காரணம் உள்ளதுதான். அதை எண்ணும்பொழுது பெருமையாக உள்ளது தான்.
ஆனால் அந்த நியாயத்தின் அஸ்திவாரமே நம்பகத்தன்மையை இழந்திருக்க இவள் நியாயத்தை பிடித்துக்கொண்டு தொங்குவது எந்தவிதத்தில் நியாயமாகும் என்றுதான் நினைத்தார்.
தனக்கு தெரிந்த அந்த உண்மையை மலரிடம் சொல்லவிடாமல் ஆதியே தடைசெய்ய அனைத்தும் அறிந்து மௌனமாக அந்த உண்மைகளை தனக்குள் புதைத்துக்கொண்டு ஊமையாகிவிட்டார்.
அதிலும் தனக்கு ஹார்ட் அட்டாக் வந்தன்று காலையில் வந்த போன் கால் பற்றிய சிந்தனை மீண்டும் எழ சத்தியமாக குழம்பிப்போனார் வைத்தியநாதன்.
இப்பொழுது தான் யாருக்கு உண்மையாக இருக்கவேண்டும்? அவருக்கு புரியவில்லை.
“இதுதான் நீங்க எங்களுக்கு செய்யும் உபகாரமா? இந்தளவுக்கு நீங்க சுயநலமானவங்களா?. அவளே பிடிக்கலைன்னு சொல்றாளே. எதுக்கு நீங்க அவளை கட்டாயப்படுத்தறீங்க?…” என ஆக்ரோஷமாக ஒலித்த அந்த குரல் இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி எழுந்தது.
அன்று நடந்ததையும் இன்று நடந்ததையும் நினைத்து ஒப்பிட்டு பார்க்க தன்னுடைய முடிவுகளை என்றைக்கும் தன்னால் மாற்ற இயலாது என தெள்ளத்தெளிவானது.
“ஆம், நான் சுயநலமானவன் தான். என் சுயநலம் என் மகன், என் மருமகளுக்காக. என் பேத்திக்காக. இவர்களின் எதிர்காலத்திற்காக நான் சுயநலமாகவே இருந்துவிட்டு போகிறேன்…”
இப்படியாக யோசித்து யோசித்து நேரம் இரவை தொட்டிருக்க இன்னமும் காமாட்சி அவரின் எதிரில் அமர்ந்திருந்தார். பார்த்ததும் தெரிந்தது தன் மனைவியும் தன்னைப்போல் யோசித்துக்கொண்டே தான் இருக்கிறார் என.
வருணி தாத்தாவின் மேலே தூங்கிப்போயிருக்க அவளை மெல்ல கட்டிலில் கிடத்திவிட்டு,
“காமாட்சி, அடுத்தவாரம் ஆதி வரட்டும் பேசிக்கொள்வோம். மலரை இனியும் இப்படியே விட்டுவைக்க முடியாது. இதுக்கொரு முடிவெடுக்காம விடக்கூடாது….”
வைத்தியநாதனின் குரலில் அத்தனை உறுதி நிரம்பி வழிந்தது. காமாட்சிக்கு கொஞ்சம் மனம் சமன்பட அவரை விலகி எழ,
“நீ வருத்தப்படாதே. பார் குழந்தையும் பயந்துருக்கா. முதல்ல நீ போய் மலருக்கு குடிக்க எதையாச்சும் குடு…” என கூற,
“சாப்பிடற நேரத்துல குடிக்க என்னத்துக்கு? அப்புறம் ஒண்ணுமே சாப்பிடமாட்டா. நா போய் கூட்டிட்டு வரேன். நீங்களும் முகம் கழுவிட்டு வாங்க. குழந்தை எழுந்ததும் அவளுக்கு சாப்பிட குடுத்துக்கலாம்…”
மலரை தேடி மாடிக்கு செல்ல கிட்சனில் லைட் எரிவதை கண்டு அங்கே சென்றார். மலர் ஏற்கனவே இரவு உணவிற்கான வேலையை துவங்கி இருக்க,
“என்னம்மா பன்ற?…” சாதாரணம் போல கேட்டுக்கொண்டே உள்ளே வர,
“வாங்க அத்தை. மாமாவை வர சொல்லுங்க. கோதுமை தோசை ரெடி. கூடவே கருவேப்பிலை சட்னியும். கல்லை போட்டுட்டேன். சூடா ஊத்திடலாம். நமக்கு மத்தியானம் செஞ்ச வறுவல் இருக்கு…”
அவள் சொல்லிக்கொண்டே கரைத்துவைத்திருந்த மாவை கல்லில் ஊற்ற காமாட்சி திரும்பும் பொழுதே வைத்தியநாதன் வந்தமர்ந்துவிட்டார்.
அவர் சாப்பிட்டு முடித்து கிளம்பவும் மாமியாரும் மருமகளும் சாப்பிட்டு முடித்து வருணியையும் எழுப்பி அவளுக்கும் ஊட்டிவிட்டு பேசிக்கொண்டே வேலையை முடித்தனர்.
“வருணிக்கு சிரப் குடுக்கனும் மலரு. மத்தியானம் குடுத்துட்டு அப்டியே மாமா அறையிலையே வச்சுட்டேன். இரு எடுத்துட்டு வரேன்…”
அனைத்தும் முடித்து விரைவிலேயே உறங்க சென்றுவிட நடு இரவு வரை நிம்மதியான உறக்கத்தில் தான் இருந்தனர்.
திடீரென படபடவென கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்க வைத்தியநாதனும் மலரும் விழித்துவிட்டனர்.
யாரென பார்க்க கதவை திறக்கச்சென்ற மலரை தடுத்த வைத்தியநாதன்,
“இரும்மா. அர்த்தராத்திரில இந்தளவுக்கு கதவை வேகமா தட்டுறாங்க யாருன்னு தெரியாம திறக்காதே…” என சொல்லி கதவின் அருகில் சென்றவர்,
“யாருங்க நீங்க?…” என கேட்க பதிலே இல்லை மறுபுறம்.
ஒரு நிமிடம் நிசப்தமாகி மீண்டும் கதவை வேகமாய் தட்ட,
“யாருக்கு என்ன அவசரமோ? ஒருவேளை பக்கத்துவீட்ல இருந்து யாரும் கூப்பிடறாங்களோ தெரியலையே?…” மலர் சொல்ல மீண்டும் படபடவென கதவு தட்டப்பட்டது. அத்துடன் சிலீரென எதுவோ உடையும் சத்தமும்.
வேகமாய் மலரை நெருங்கிய காமாட்சி அவளை பிடித்துக்கொண்டார்.
“இல்லைம்மா போகாதே. இது அவனுங்க வேலையா இருக்குமோ? நீ கதவை திறக்கவே செய்யாதே…” என சொல்லி, விட்டால் சென்றுவிடுவாளோ என பயந்து கைய்யோடு கை கோர்த்து நின்றார்.
வைத்தியநாதனின் முகத்திலும் அவ்வளவு அச்சம். என்ன செய்வதென்று புரியாமல் நின்றவர் ருக்மணியின் வீட்டிற்கு கால் செய்தார். அழைப்பு போய்க்கொண்டிருந்ததே தவிர யாரும் எடுக்கவில்லை.
“மலர் ருக்மணி செல் நம்பர் சொல்லும்மா…”
“அவங்க இல்லை மாமா. ஊருக்கு போய்ருக்காங்க. நேத்துதான் கிளம்பினாங்க. வர ஒருவாரம் ஆகும்…” என கலக்கமாய் கூறி,
“டேய் ஒழுங்கா போய்டுங்க, இல்லைனா போலீஸ்க்கு கூப்பிடுவேன்…” என மலர் சத்தமாய் மிரட்ட வெளியிலிருந்து,
“கூப்பிட்டுதான் பாரேன். எவனும் வரமாட்டான். எங்க அண்ணனையா வேண்டாம்னு சொல்ற. அதோட எவ்வளோ பேசின. எங்க இப்ப வெளியில வந்து பேசேன்…” கெக்கலிப்பாய் வெளியில் இருந்து ஒருவன் சொல்ல,
“இவனுங்களை சும்மா விடக்கூடாது…” என வேகமாய் மலர் கதவை நோக்கி செல்ல வைத்தியநாதன், காமாட்சி இருவரும் பிடிப்பதற்குள் திறந்தேவிட்டாள்.
அதிர்ந்துபோய் பார்க்க வெளியில் ஐந்துபேர் குடித்துவிட்டு தங்கள் வீட்டு கேட்டை தாண்டி உள்ளே நின்றுகொண்டிருந்தனர். உடன் அந்த அழகேசனும்.
“நைட்டிளையும் அழகாத்தான் இருக்க மலரே…” என அழகேசன் இளிக்க,
“டேய்…” என மலர் கத்த நொடியில் அவளை உள்ளிழுத்து கதவை அடைத்துவிட்டார் வைத்தியநாதன்.
ஒரு நொடியில் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்குமோ? நினைக்கவே குலை நடுங்கியது காமாட்சிக்கு. நடுவில் க்ரில்கேட் மட்டும் இல்லாமலிருந்தால் மலர் நிச்சயம் அவர்களிடம் சிக்கியிருப்பாள்.
அப்படி என்ன ஒரு பொண்ணுக்கு கண்ணை மறைத்து, அறிவை மழுங்கடிக்கவைக்கும் ஆத்திரம்? காமாட்சியால் தாளமுடியவில்லை.
மலரை இழுத்துக்கொண்டு அவளறைக்குள் சென்றவர்,
“இவ உன் பொண்ணுதானே, இந்த நிம்மதியான உறக்கம் ஒண்ணுதான் உன் பொண்ணுக்கு உன்னால குடுக்க முடிஞ்சது. அதையும் அவக்கிட்ட இருந்து பறிச்சுடலாம்னு பார்த்தியா?…” ஆவேசமாய் காமாட்சி கேட்க,
“அத்தை அவனுங்க ராத்திரில குடிச்சுட்டு வந்து கலாட்டா பண்ணுவானுங்க. நாம அமைதியா போகனுமா?…”
“ஆமா அமைதியாத்தான் போகனும். நாய் கடிக்கத்தான் செய்யும். தெரிஞ்சும் போய் அது பக்கத்துல நிக்கனும்னு நினைக்கிறது மடத்தனம். அதிலையும் அவனுங்க வெறிபிடிச்ச நாய்ங்க…” என்றவர்,
“ராத்திரின்னு தெரியுதுல. இந்த நேரத்துல இவனுங்க பன்ற கலாட்டா இந்த ஏரியால இருக்கிறவங்களுக்கு கேட்ருக்காதுன்னா நினைக்க? கிடையவே கிடையாது. கண்டிப்பா கேட்ருக்கும். ஆனாலும் ஏன் யாருமே வந்து இந்த அநியாயத்தை தட்டிக்கேட்கலை?…”
“ஏனா அவங்கவங்களுக்கு அவங்கவங்க குடும்பத்தோட நிம்மதி முக்கியம். நமக்கெதுக்கு வீண் வம்புன்னு பேசாம இருக்காங்க.இப்படிப்பட்டவங்க இருக்கிற இடத்துல நம்மளை நாம்தான் பத்திரமா பார்த்துக்கனும். நீ வேகமா வெளில போறியே உனக்கு ஆபத்துன்னா காப்பாத்த யாரும் இங்க வரமாட்டாங்க மலரு…”
“கோபம் அவசியம் தான். ஆனா அது எந்த நேரத்துல, எந்த இடத்துல வெளிப்படுத்தனும்னு இருக்கு. நாங்க வாழ்ந்து முடிஞ்சவங்க மலரு. ஆனா நீயும் என் பேத்தியும் வாழ வேண்டியவங்க. உன்னோட கோபத்தால உனக்கோ வருணிக்கோ ஏதாவது ஆபத்து வந்திடுமோன்னு பயமா இருக்கும்மா…”
“மலர், உன் அத்தை சொல்றது நூத்துக்கு நூறு சரி. அமைதியா இரு. எதுவா இருந்தாலும் காலையில பேசிப்போம். இதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சு முடிவெடுப்போம். நீ பேசாம படும்மா…” என்ற வைத்தியநாதன் அங்கேயே சோபாவில் சாய்ந்து படுத்துக்கொண்டார்.
வீட்டில் அனைத்து விளக்கையும் அணைத்துவிட்டு மலரின் மறுபுறம் படுத்துக்கொண்டார் காமாட்சி. இருவருக்கும் நடுவில் இந்த கலவரங்கள் எதையும் அறியாது உதட்டில் சிறு புன்னகையோடு துயில்கொண்டிருந்தாள் வருணிகா.
விடியும் வரை உறக்கத்தை தள்ளிவைத்துவிட்டு யோசனைகளில் தான் இருந்தாள் மலர்.
அவளின் உள்ளமெல்லாம் காமாட்சி சொல்லியவையே ஊர்வலமாய் சுற்றி சுற்றி வந்தது. என்னதான் வெளியில் தைரியமாய் இருந்தாலும் உள்ளுக்குள் நடுநடுங்கித்தான் போனாள்.
ஒருவேளை கதவை திறந்த நேரம் அவர்கள் உள்ளே நுழைந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ? நினைக்கவே உடலெல்லாம் பயத்தில் சில்லிட்டுப்போனது. கைகள் வருநினை தன்னிச்சையாக பற்றிக்கொண்டது.
விடிந்தப்பின் கூட கதவை திறக்கவே பயந்தார் காமாட்சி. நன்றாக விடிந்து ஆள்நடமாட்டம் தெரிந்தப்பின் தான் கதவையே திறந்து வெளியில் வந்தார்.
அங்கே பார்க்கவே அத்தனை அருவருப்பாய் இருந்தது. குடித்ததுமில்லாமல் அங்காங்கே வாமிட் செய்து குடித்த பாட்டில்களை உடைத்துப்போட்டு பிரியாணி பொட்டலங்கள் சிதறியடிக்கப்பட்டு என அலங்கோலமாய் கிடந்தது.
கண்கள் கலங்க உள்ளே வந்தவர் அதனை சுத்தம் செய்ய போக அவரை தடுத்த மலர்,
“நான் பார்த்துக்கறேன் அத்தை. நீங்க பாப்பாவை பிடிங்க. உங்களை தேடிட்டிருக்கா…” என வருணியை அவர் கைகளில் கொடுத்துவிட்டு துடைப்பத்தோடு வெளியில் சென்று சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
அதற்கு முன்பே தனது மொபைலில் வீடியோ, போட்டோ என சாட்சிக்கு எடுத்துவைத்துக்கொண்டு தான் இதனை செய்ய அக்கம்பக்கத்தினர் கேட்டிலிருந்து எட்டிப்பார்த்துவிட்டு கண்டும் காணாமல் நகர்ந்து சென்றனர்.
இன்னும் சிலரோ தன்னையே ஏதோ வித்தியாசமாய் பார்ப்பதை போல தோன்ற வேகவேகமாய் சுத்தம் செய்து கழுவிவிட்டுவிட்டு உள்ளே நுழைந்தவள் அடக்கமாட்டாமல் அழுகை பொங்கியது.
காமாட்சியின் மடியிலிருந்து வருணி தன்னையே பார்ப்பதை போல தோன்ற கண்களை துடைத்துக்கொண்டு,
“குளிச்சிட்டு வரேன் அத்தை…” என சொல்லு உள்ளே சென்றுவிட்டாள்.
தண்ணீருக்குள் நின்றவளின் இதயம் முழுவதும் அனலாய் தகிக்க அந்த வெம்மை கொஞ்சமும் தணியாது மேலும் மேலும் கனன்று கொண்டே இருந்தது அவளுள்.
காமாட்சியோ பயத்தில் மலரை வெளியில் எங்கும் அனுப்பவே அஞ்சினார். கிட்டத்தட்ட கெஞ்சியே மலரை வீட்டினுள்ளே இருக்கவைத்தார்.
ஆனால் காமாட்சி வெளியில் வந்து அருகில் இருப்பவர்களிடம் பேச முயல அவர்களோ வேண்டுமென்றே தவிர்த்துச்சென்றனர். கசந்துதான் போனார் காமாட்சி.
“மனுஷங்களோட வாழ இந்த வீடுவாங்கி வந்தா இங்க எல்லோரும் மனசாட்சி இல்லாதவங்களா இல்ல இருக்காங்க. என்ன ஆளுங்களோ?…” என புலம்பியபடி வீடு திரும்பினார்.
மலருக்கோ தானே இதற்கொரு தீர்வு காணமுடியும் என தோன்றவில்லை. தன் தோழி ரத்னாவிற்கு அழைக்க அவளும் அனைத்தையும் கேட்டுவிட்டு மாலை வருவதாய் சொல்ல கொஞ்சம் அமைதியானாள் மலர்.
மதியம் மூன்றுமணிக்கு தன்னுடைய மொபைலுக்கு அழைப்பொன்று புதிய எண்ணிலிருந்து வர குழப்பத்தோடே அதை ஏற்றாள்.
“என்னம்மா மருமகளே, வாசல்ல கிடந்ததை எல்லாம் கூட்டி அள்ளிப்போட்டு கழுவிவிட்டு களைச்சுப்போய்ட்டியோ? ச்சு ச்சு என்ன செய்ய? உன்னை இப்படி வேலை வாங்க எனக்கும் வருத்தமாதான் இருக்கு. ஆனாலும் நீ வழிக்கு வரமாட்டேங்கறையே?…” சரோஜாவின் எகத்தாள குரலில்,
“எனக்கு நல்லா வாய்ல வந்துரும். அசிங்கமா பேச வச்சுடாதே…” சூடு குறையாமல் மலரும் திருப்பி பேச,
“இந்த திமிர்தாண்டி உன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு. இப்பவும் முறுக்கிட்டு இருந்தேன்னா இன்னமும் அனுபவிப்ப. நீயா எங்களை தேடி நான் வரவைப்பேன். பார்த்துட்டே இருக்கு…” என சவால் விட,
“அடச்சீ போனை வை…” என மலர் அழைப்பை துண்டித்து விட்டாள்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர் காமாட்சியும் வைத்தியநாதனும். ஆனாலும் எதுவும் கேட்கவில்லை.
மாலை நெருங்க அப்போதுதான் ரத்னா வருவதை பற்றி வைத்தியநாதனிடம் கூறினாள். அவரிடமிருந்து வெறும் தலையசைப்பு மட்டுமே பதிலாய்.
ஏற்கனவே உடலால் சோர்வுற்றிருந்தவர் இப்போது மனதாலும் வெகுவாய் களைத்து தெரிந்தார். காலையில் எழுந்ததிலிருந்து ஆதித்யனுக்கு அழைத்து அழைத்து தொய்ந்துபோய்விட்டார்.
மாலை வீட்டிற்கு வந்த ரத்னாவோடு அவள் கணவனும், உடன் திலீபனும் வந்திருக்க அனைத்தையும் காமாட்சியும் மலரும் சொல்ல திலீபனும் காவல்நிலையத்திற்கு செல்லலாம் எனவும் வேகமாய் புறப்பட்டாள் மலர்.
அங்கே சென்று திரும்பியவர்களின் முகத்தில் ஏகப்பட்ட கோவமும் ஆதங்கமும்.
“நாங்க போய் கம்ப்ளைன்ட் குடுத்தோம் அத்தை. அவங்களும் கூடவே வந்தாங்க. இங்க வந்து பக்கத்துல எல்லாம் விசாரிக்கவும் செஞ்சாங்க. ஆனா ஒருத்தரும் நடந்ததை சொல்லவே இல்லை. எங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லிட்டாங்க…” அத்தனை வெறுப்பிருந்தது மலரின் முகத்தில்.
“வீட்டுக்கே வந்து என்ன எதுன்னு கேட்காம வெளில இருந்தே பேசிட்டு போய்ட்டாங்க. அவங்க விசாரிக்க வந்தது கூட சும்மா கண்துடைப்புதான்னு நினைக்கிறேன் அங்கிள்…” என திலீபன் சொல்ல காமாட்சியின் முகம் கலவரம் சூழ்ந்தது. அதை பார்த்தவன்,
“ஆன்ட்டி நீங்க பயப்படாதீங்க. இன்னைக்கு நைட்டும் வந்தானுங்கன்னா நைட் எந்நேரம்னாலும் நீங்க எனக்கு கால் செய்ங்க. நான் எங்க ஏரியா பசங்களோட வரேன்…”
திலீபனும் ,ரத்னாவும் அவள் கணவனும் ஆறுதல் கூறி செல்ல மனம் ஆறவே இல்லை காமாட்சிக்கு. இரவு கவிழத்தொடங்கியதும் ஏதோ பெயருக்கு உண்டுவிட்டு ஒரே அறையில் அமர்ந்துகொண்டனர்.
மணி ஒன்பதை தாண்டி பத்தை எட்டியது. வருணியை சீக்கிரம் உறங்கவைக்க வேகமாய் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.
வெளியில் எதோ சப்தம் கேட்க பயத்தில் வெளிறியது மலரின் முகம். இருந்த இடத்திலிருந்து நகராமல் அமர்ந்திருந்தாள்.
காலிங் பெல் சப்தம் எழுப்ப ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். மீண்டும் ஒருமுறை பெல் அடித்து ஓய்ந்தது.
“மலர் கதவை திற…” என்ற அழுத்தமான குரல் அனைவரின் செவியையும் சென்றடைய வேகமாக எழுந்தவள் தன்னையறியாமல் ஓடிச்சென்று கதவை திறந்தாள்.
அங்கே க்ரில் கேட்டின் வெளியே ஆதித்யன் அவளையே பார்த்தபடி. ஆனால் முகத்தில் அவளை பார்த்துவிட்ட சந்தோசம் துளியும் இல்லை. அவன் விழிகளில் ரசனைக்கு மாறாய் ரௌத்திரம் கொட்டிக்கிடந்தது.
இவையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் மலர் இல்லை. அவனெப்படி இங்கே வந்தான்? என்னும் கேள்வி கூட எழவில்லை. அதிர்வு மட்டுமே அவளுக்கு. இத்தனை வருடங்கள் கழித்து அவனை பார்த்த அதிர்வு.
ஆனால் அவளறியாமல் அவளின் மனதிற்கு ஒருவித நிம்மதி ஊற்று பெருக்கெடுத்தது.
அதையும் தாண்டி அவன் வந்ததும் விழிகளில் இருந்து உடைப்பெடுத்த கண்ணீர் கட்டுக்கடங்காமல் பொங்கியது. அழுகையான அழுகை மலருக்கு.
அதை உணரக்கூட முடியாமல் அவள்.
அவளின் நிலையை புரியாத ருத்ர ரூபனாய் அவன்.
புன்னகைக்கும்…