புன்னகை – 5
அன்று சுவிசர்லாந்தில் வேகவேகமாய் தான் நடிக்கவேண்டிய காட்சிகளை முடிக்க சொல்லியவன் இன்னும் மூன்றுநாளில் எப்படியும் தன்னுடைய காட்சிகள் முடித்துவிடலாம் என கணக்கிட்டுக்கொண்டிருந்தான்.
இது அவன் தயாரிக்கும் படம். அதுவும் தமிழில் முதன் முதலில் தயாரித்து நடிக்கும் முதல் படம். அதனால் மிக கவனமாகவே இருந்தான்.
பாடல் காட்சிகளோடு இன்னும் சில காதல் காட்சிகளும் இருக்க இப்போதைக்கு தன் மனநிலைக்கு அக்காட்சிகளில் ஒன்றி நடிக்க இயலாது என நினைத்து அதற்கு மாற்று ஏற்பாடு செய்யும் யோசனைகளில் ஆழ்ந்தான்.
ஏனோ அவனுடைய சிந்தனை முழுவதும் எதுவோ சரியில்லை என்று அறிவுறுத்திக்கொண்டே இருந்தது. மலரையும் வருணியையும் உடனே பார்க்கவேண்டும் போல ஒருவித பரிதவிப்பு.
இந்த உணர்வை எப்படி கையாள்வது என்றே அவனுக்கு புரியவில்லை. என்றுமில்லாமல் கட்டுப்பாடிழந்து அவனது இதயம் பந்தையக்குதிரையின் வேகத்தில் பறந்தது.
உடனே சென்று அவர்களை அரவணைத்துக்கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் அவனுள் தீயாய் பரவி அவனை நிலைபிறழ்த்தியது. என்றும் இல்லாதவகையில் இப்படி ஒரு உந்துதல் அவனை ஆட்டிப்படைக்க அவனுமே கொஞ்சம் ஆடித்தான் போனான்.
தன்னாலேயே இனி இங்கே இருக்கமுடியாதென முடிவெடுத்து விரைவில் வேலைகளை துரிதப்படுத்த அவனது வேகத்திற்கு அங்கு வேலைகள் நடக்காமல் இழுத்துக்கொண்டே சென்றது.
சிலபல சிக்கல்கள் சிறிதாயும் பெரிதாயும் படப்பிடிப்பிற்கு பங்கம் விளைவிக்க குழம்பித்தான் போனான். தன்னுடைய படக்குழுவினரிடம் கூட அதைப்பற்றி கலந்தாலோசிக்கவும் செய்தான்.
படப்பிடிப்பை ரத்துசெய்துவிட்டு மீண்டும் ஒருமுறை வந்து செல்வதால் உண்டாகும் வீண் செலவுகளை யோசித்து மெதுவாக திட்டமிட ஆரம்பித்தான்.
வருவது வரட்டும் என ஹீரோயின் மற்றும் மற்றவர்களை வைத்து எடுக்கவேண்டிய ஒன்றிரண்டு காட்சிகளை எடுத்துவிட்டு அனைவரும் கிளம்பி வருமாறு கூறி மற்ற பொறுப்புக்களை தன் உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு உடனே தான் மட்டும் கிளம்புவதற்கான ஏற்பாட்டை ஆரம்பித்தான்.
தன்னறையில் லக்கேஜ்களை பேக் செய்துமுடித்திருக்க அறைக்கதவு தட்டப்பட வேகமாக சென்று கதவை திறந்தான். அங்கே தன் படத்தின் நாயகி திவிஷா நின்றிருந்தாள்.
“வாங்க திவிஷா. எதாச்சும் ஹெல்ப் வேணுமா?…” என கேட்டுக்கொண்டே அவளை உள்ளே அழைத்துவிட்டு மீண்டும் அனைத்தையும் எடுத்தாகிற்றா என்று ஒரு பார்வையிட்டுவிட்டு அனைத்தையும் முன்னிருக்கும் ஹாலில் கொண்டுவந்து வைத்துவிட்டு டிஷர்ட்டின் மேல் ஜெர்கினை அணிந்தான்.
அவன் கிளம்பிவிட்டதை புரிந்தவளோ அவஸ்தையாக கையை பிசைந்து நின்றது ஒருநொடியே. இப்படி நின்றால் ஆகாது என நினைத்துக்கொண்டே,
“உங்ககிட்ட ஒரு விஷயம் பேசனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன் ஆதி. ஷூட்டிங் முடிஞ்சு கிளம்பும் போது பேசலாம்னு டிஸைட் பண்ணியிருந்தேன். பட் நீங்க இன்னைக்கே கிளம்பறதால இப்போவே பேசிடலாமேன்னு வந்தேன்…”
நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனின் மூளைக்குள் எச்சரிக்கைமணி அடித்தது. அவளை கூர்மையாக அளவிட்டான்.
“ஐ திங்க் ஐம் இன் லவ் வித் யூ ஆதி…”
திவிஷா பளிச்சென்று சொல்லியேவிட்டாள். ஆதி இதை என்றோ எதிர்பார்த்து தான் இருந்தான். அதற்கு காரணம் திவிஷாவின் பழகும் முறை.
ஏற்கனவே இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருந்தாலும் அன்றைய திவிஷாவிற்கும் இன்றைய திவிஷாவிற்கும் இடையே மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் தெள்ளதெளிவாக தெரிந்தது.
அன்றைய திவிஷா நட்புணர்வோடு எந்தவித கள்ளமுமின்றி தன்னிடம் ஒரு தோழியாக மட்டுமே பழகியவள்.
ஆனால் இப்போதைய திவிஷா அதுவும் சுவிசர்லான்ட் வந்ததிலிருந்து அவளின் அணுகுமுறை, தன்னை பார்க்கும் விதம், தங்களுக்கிடையேயான காதல்காட்சிகளில் அவள் காட்டும் அளவுக்கதிகமான ஈடுபாடு என அனைத்தும் அவளின் மனநிலையை புரியவைத்தது.
அவளை தான் தவிர்க்க நினைக்க அவளோ அதற்கு வாய்ப்பே தராமல் அவனிடம் தானாகவே உரிமை எடுத்துக்கொண்டு நடந்துகொள்ள மற்றவர்கள் முன் அதை காட்டிக்கொள்ளாமல் மற்றவர்கள் பார்வைகளுக்கு காட்சிபொருளாகாமல் முடிந்தளவு அவளிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்தான்.
இதோ இன்று தான் கிளம்பும் சமயம் வந்து காதல் என பிதற்றிக்கொண்டிருப்பவளை என்ன செய்து இங்கிருந்து அனுப்ப என புரியாமல் நின்றான்.
அவனின் அதிர்வை பொருட்படுத்தாமல் அவனை நெருங்கி மார்பில் சாயவந்தவளை தள்ளி நிறுத்தியவன்,
“வாட் நான்சென்ஸ் திவிஷா?…” கொஞ்சம் பொறுமையை இழுத்துப்பிடித்து அவன் கூற அவளின் கண்களில் பிடிவாதம் ஏறியது.
“நான் உங்களை விரும்பறதா சொல்லியிருக்கேன். நீங்க நான்சென்ஸ்னு சொன்னா என்ன அர்த்தம் ஆதி?…” அவன் அருகில் வந்து நின்றாள்.
“இவளை இப்போது திட்டியோ மிரட்டியோ இங்கிருந்து அனுப்பமுடியாது. தேவையில்லாமல் சீன க்ரியேட் பண்ணுவாள்…” என நினைத்தவன் மெதுவாக திரும்பி நின்று தன்னுடைய மொபைலை எடுத்து தன் உதவியாளர் செல்வாவிற்கும், திவிஷாவின் தாயிற்கும் அழைத்து கான்பரென்ஸ் காலில் போட்டுவிட்டான்.
“நான் உங்களை மனசார காதலிக்கிறேன் ஆதி. நான் ஒரு நடிகைன்னு என்னோட காதலை நீங்க மறுக்காதீங்க. நம்ம மேரேஜ்க்கு பின்னால நிச்சயம் நான் நடிப்பை விட்டுட்டு உங்களோட மனைவியா மட்டும் இருக்கேன். ஐ ப்ராமிஸ் யூ…”
ஆதிக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போலானது. பொறுமை பறக்க,
“லுக் திவிஷா, நான் நேரடியாவே சொல்றேன். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. ஒரு குழந்தை கூட இருக்கு…”
“சோ வாட். இதுதான் உங்க ப்ராப்ளம்னா அதுக்கும் ஒரு சொல்யூஷன் இருக்கு ஆதி. நீங்க ஓகே சொன்னா நான் தயார் தான்…” அவள் கூலாக சொல்ல,
“வாட் யூ மீன்?…”
“எனக்கு உங்களோட வாழனும். அது லிவ்விங் டூ கெதர் லைப்னாலும் ஓகே தான். இந்த காலத்துல அதுவும் நம்ம இண்டஸ்ட்ரில இப்போ இது சகஜம் தானே? எனக்கு சம்மதம். நீங்க என்ன சொல்றீங்க?…”
அவளின் பேச்சை கண்டு அதிர்ந்தவன் அவளை அடிக்க கையே ஓங்கிவிட்டான். சரியாக செல்வாவும் திவிஷாவின் தாயும் வந்துவிட அவர்களுக்கும் அதிர்ச்சிதான்.
“தம்பி எதுக்காக நீங்க என் பொண்ணை அடிக்க கை ஓங்கினேங்க?. நான் அவளுக்கு புரியவைக்கிறேன். நீங்க கோபப்படாதீங்க…” என மகளை அணைவாக பிடித்துக்கொண்டு கேட்க,
“ஏய் உன் வயசென்ன? என் வயசென்ன? ஒரு பொண்ணா இருந்துட்டு இப்படி பேச வெக்கமா இல்லை உனக்கு?…” அடக்கமுடியா கோவத்தில் உறுமினான்.
“ஏன் ஸார்? இதையே ஒரு ஆண் பெண்கிட்ட கேட்டா தப்பில்லை. ஒரு பொண்ணு தனக்கு பிடிச்ச ஒரு ஆண்கிட்ட கேட்கிறது மட்டும் தப்பா? எனக்கு உங்களை பிடிச்சிருக்கு. அதன் கேட்டேன். காதல் வயசு வித்தியாசம் பார்க்காது…”
“திவி, போதும் நிறுத்து. என்ன பேச்சு பேசற? ஆண் பெண் உரிமை பேச்சு பேசற விஷயமா இது? அறிவில்லை உனக்கு…” என அவளின் தாய் திட்ட,
“மாம், ஐ லவ் ஹிம்…” திவிஷா திரும்பவும் இதையே சொல்ல இனி அவளிடம் தனக்கென்ன பேச்சு என்பதை போல அவளிடமிருந்து திரும்பிக்கொண்டவன்,
“இங்க பாருங்கம்மா உங்க பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கனும். அதான் புரியாம பேசிட்டு இருக்கு. இந்த துறைல வேற யார்க்கிட்டையாச்சும் இதையே உங்க பொண்ணு கேட்டிருந்தா நடந்திருக்கும் விபரீதம் என்னன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க…”
“நான் பார்த்து அறிமுகப்படுத்திய பொண்ணு. இன்னும் முழுசா ரெண்டு படம் கூட முடியலை. இந்த இண்டஸ்ட்ரில இப்போதான் நுழைஞ்சிருக்கிற பொண்ணு. இன்னும் பதினெட்டு வயசு கூட முடியலை. அதுக்குள்ளே இப்படி நடந்துக்கறது சரியில்லை…”
“எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை கூட இருக்கு. நான் நடிகனானது ஜஸ்ட் ஒரு ஆக்ஸிடன்ட். இருந்தாலும் வாழ்க்கைல சில கோட்பாடுகளோட வாழனும்னு நினைக்கிறவன் நான். என் குடும்பமும் அப்படித்தான். நீங்க, உங்க பொண்ணு பிறந்து வளர்ந்தது வேணா வேற மாநிலமா இருக்கலாம். ஆனா உங்க பூர்வீகம் தமிழ் தானே? நமக்குன்னு ஒரு கல்ச்சர் இருக்கு. தெரியும் தானே?…”
“உங்களை அம்மாவா நினைச்சு சொல்றேன். உங்க பொண்ணுக்கு புரியவைங்க. உங்க பொண்ணு இப்படி இருந்தா அவ வாழ்க்கை, எதிர்காலம் எல்லாம் பாழாகிடும்…” என்றவன் முன் நின்று,
“நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நீங்க இல்லைனாதான் என் வாழ்க்கை பாழாகிடும் ஆதி. ஐ லவ் யூ…” என கத்தினாள்.
“ஜஸ்ட் ஷட்டப்…” என அவளிடம் பாய்ந்தவன்,
“உன்னை அறையனும் போல வருது எனக்கு. ஆளை பாரு. லவ்வாம் லவ்வு. ஏதாவது சொல்லிடப்போறேன்…” கோவம் கொந்தளிக்க பேசியவன் திவிஷாவின் கண்ணீரில் கொஞ்சம் நிதானித்தான்.
தலையை அழுந்த கோதிக்கொண்டவன் அவளை கைபிடித்து சோபாவில் அமர்த்தி தானும் அவளருகே அமர்ந்துகொண்டு,
“இங்க பார் திவிஷா, உனக்கு என் மேல வந்திருக்கிறது லவ் கிடையாது. ஜஸ்ட் ஒரு அட்ராக்ஷன். அவ்வளோ தான். இதை நீயா காதல்ன்னு பினாத்திட்டு இருக்காதே…” என அமைதியாக எடுத்து சொல்ல,
“இல்ல, இது லவ் தான். நீங்க அன்னைக்கு பிரஸ் மீட்ல கூட சொன்னீங்களே?…” என சிறுபிள்ளை போல மீண்டும் சொல்ல மானசீகமாக தலையிலடித்துக்கொண்டவன்,
“அதுக்கு பேர் அன்புன்னும் வச்சுக்கலாமில்லையா? நான் அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன்மா…” விளக்கம் போல சொல்ல,
“நீங்க அப்படியே இருங்க. ஆனா நான் லவ் தான் பன்றேன். இங்க ஷூட்டிங் ஸ்பாட்ல கூட நம்ம டீம்ல எல்லோருமே பேசிக்கறாங்க. உங்களுக்கு வர வொய்பை நீங்க ரொம்ப நல்லா கேர் பண்ணிப்பீங்கன்னு. அவ்வளோ பெருமையா சொல்றாங்க. உங்களுக்கு நான் நல்ல பொருத்தம்னு வேற சொல்றாங்க…”
அவள் சொல்ல சொல்ல அவளுக்குள் தன்மீது சிறு பொறியாய் தோன்றியிருந்த இனகவர்ச்சியை அனைவரும் தங்களறியாமலேயே தங்களுடைய பொழுதுபோக்கு பேச்சால் தூபமிட்டு வளர்த்திருக்கின்றனர் என நன்றாகவே புரிந்து போனது.
“இதோ பார் திவிஷா. பிடிவாதம் செய்யாதே. இப்போதான் ஒரு புது உலகத்துக்குள்ள காலடி வச்சிருக்க. இங்க நீ சாதிக்கவேண்டியது நிறைய இருக்கு. அதை விட்டுட்டு காதல் அது இதுன்னு உன்னை நீயே அழிச்சுக்காத. இந்த சினிமா உலகம் எந்தளவிற்கு பெயரும் புகழும் தருதோ அந்தளவுக்கு ஆபத்தையும் கொடுக்கும்…” திவிஷா அமைதியாக யோசிக்க,
“நீ எத்தனை வருஷம் கழிச்சு கேட்டாலும் என்னுடைய பதில் இதுதான். எனக்கு என் குடும்பம் தான் முக்கியம். உனக்கு எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் கேள். ஒரு நல்ல வெல்விஷரா நான் உனக்கு செய்வேன். நிச்சயமாக…”
அவனின் பேச்சில் அப்படி ஒரு அழுகை பொங்க முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். அவளை விட்டு விலகி எழுந்தவன்,
“நீங்க அழைச்சிட்டு போங்கம்மா. நான் கிளம்பறேன்…” என சொல்ல,
“மன்னிச்சிடுங்க தம்பி. இந்த மாடலிங், சினிமா இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். கேட்கவே இல்லை இவ. மாடலிங் மட்டும் போதும்னு இருந்த இவளை இந்த சினிமாவுக்கு கட்டாயமா கொண்டு வந்தது இவ அப்பாவும், அத்தையும் தான்…”
“பொறுப்பில்லாத அப்பா. ஏதோ பொழுதுபோக்குக்காக மாடலிங் செய்திட்டிருந்த என் பொண்ணோட வயதுக்கு மீறிய வளச்சியும், அழகும் அவளோட வாழ்க்கையை திசைமாத்திருச்சு…”
“நிறைய பெரிய ஆஃபர்ஸ் வர, வர கொஞ்சம் அதிகமான காசை பாத்ததும் அவரு இவளை சினிமாவுல நடிக்க வைக்க படாத பாடு பட்டாரு. அதுல அவ்வளவா விருப்பம் இல்லாத என் பொண்ணுக்கு அவ அப்பாவால நல்ல வாழ்க்கையை அமைச்சுத்தர முடியாதுன்னு நல்லாவே தெரிஞ்சுடுச்சு..”
“அதான் அவளுக்கான வாழ்க்கையை அவளே தீர்மானிச்சு இந்த சினிமாவை விட்டு விலகிடனும்னு முடிவெடுத்துட்டா. மத்தவங்க பேச்சால தான் அவ மனசு உங்க பக்கம் திரும்பிருக்கு தம்பி. நீங்க அவளை தவறா நினைக்காதீங்க. இனி அவ புரிஞ்சுப்பா…” என சொல்லி,
“இங்க நடந்த விஷயத்தை யார்க்கிட்டயும் சொல்லிடாதீங்க தம்பி…” என கை கூப்பி கெஞ்ச அவரின் கையை கீழே இறக்கிவிட்டவன்,
“நீங்க பயப்படாம திவிஷாவை கூட்டிட்டு கிளம்புங்கம்மா. கண்டிப்பா இந்த விஷயம் வெளில போகாது. என்னை நம்பலாம்…” என்றவன் செல்வாவை திரும்பி பார்க்க அவனும் தலையசைத்து ஆறுதலாய் புன்னகைத்தான்.
திவிஷாவோ தலைநிமிராமல் அங்கிருந்து வெளியேற ஒரு பெரும் அலையே அடித்து ஓய்ந்ததை போல இருந்தது.
“ஓகே செல்வா, இருந்து எல்லாத்தையும் கவனிச்சுக்கோ. நான் கிளம்பறேன். என்ன நடந்தாலும் எனக்கு போன்ல அப்டேட் பண்ணிட்டே இரு. எனி டைம் எனக்கு இன்பார்ம் பண்ண மறந்திடாதே…”
இன்னும் சில இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துக்கொண்டே அந்த ஹோட்டலை விட்டு வெளியேறியவன் சென்னை நோக்கி மலர்ந்த முகத்தோடு பயணமானான்.
ஆனால் அவனது திட்டங்கள் அனைத்தையும் தகர்க்கும் விதமாய் இருந்தது சென்னை ஏர்போர்ட் வந்திருங்கியதும் அவன் அறிந்த செய்தி.
வைத்தியநாதனிற்கு ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் சேர்த்திருந்ததாக தான் அறிந்த அன்றே மலரின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
அங்கு நடக்கும் அனைத்தையும் தனக்கு தெரிவிக்குமாறு ஏற்பாடு செய்திருந்த செக்யூரிட்டி மூலம் நடந்ததை அறிந்த ஆதிக்கு அப்படி ஒரு கொலைவெறியே பிறந்தது.
“யூஸ்லெஸ் ஃபெல்லோ. அவங்களுக்கு ஹெல்ப் பண்ணாம என்கிட்டே கதை சொல்லிட்டு இருக்கியே? நீயெல்லாம் என்ன செக்யூரிட்டி?…” என அவனிடம் காய்ந்துவிட்டு அவனின் ஏஜன்சியையும் பிடித்து ஒருவாங்கு வாங்கிவிட்டான். அவர்கள் சொல்ல வருவதை எதையும் கேட்க அவன் தயாரில்லை.
இனியும் தாமதித்து இன்னுமின்னும் சிக்கல்களை உருவாக்கிக்கொள்ளவும் அவர்களை விட்டு தள்ளியிருப்பதும் நடக்காத காரியம் என்பதால் தன்னுடைய முடிவுகள் சிலதை மாற்றியமைத்தான்.
தன்னை அழைக்க வந்த காரை தானே எடுத்துக்கொண்டு ட்ரைவரை பணம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தான்.
இனி மலரின் பார்வைக்காக அவள் மனமாற்றத்திற்காக தான் அவள் பின்னோடு அலைவதில்லை என்னும் முடிவுக்கு வந்தவன் சில ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான்.
அனைத்தையும் செய்து முடிக்கும் வரை அவன் ஓயவில்லை. ஒற்றையாளாய் கவனித்தவன் மனதோ மொத்த குடும்பத்தையும் நினைத்து அவர்கள் தோள்சாய எதிர்பார்த்தது.
சுணங்கி நின்றால் வேலைக்காகாது என நினைத்தவன் தனது காரை எடுத்துக்கொண்டு மலரின் வீட்டிற்கு வண்டியை விட்டான்.
வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் அத்தனை கோபம் மலரின் மீது மனம் முழுவதும் வியாப்பித்திருந்தது. கொஞ்சமும் அவள் நிலையிலிருந்து யோசிக்க அவன் தயாராகவே இல்லை.
இந்த நிலை அவளாக அவளின் பிடிவாதத்தினால் ஏற்படுத்திக்கொண்டது. வீண் பிடிவாதம், வறட்டு பிடிவாதம் என அவளை மனதினுள் வசைபாடிக்கொண்டே சென்றாலும் அந்த நேரத்தில் எத்தனை துயரத்தை அனுபவித்திருப்பாள் என நினைக்க நினைக்க நெஞ்சம் ரணமாய் காந்தியது.
வேகமாய் வாசலில் காரை நிறுத்தியவன் கேட்டின் மீது கைவைத்து தட்டிப்பார்க்க கதவை திறப்பதற்கான எந்தவித சப்தமும் இல்லை. வீட்டில் எந்த விளக்கும் எரியாமல் வேகமாய் கேட்டை தாண்டி எகிறிக்குதித்து உள்ளே வந்தவன் காலிங் பெல்லை அழுத்தினான்.
மலர் வந்து கதவை திறந்ததும் அவளின் முகத்தை பார்த்து வாய் வரை வந்துவிட்ட கோப வார்த்தைகளை விழுங்கிக்கொண்டான்.
தேவையில்லாமல் இப்போது ஏதாவது பேசி அவளின் கோபத்தை மேலும் தூண்டவேண்டாம் என எண்ணியவன் முடிந்தமட்டும் முறைத்துவைத்தான்.
அவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியையும் தாண்டிய தவிப்புகளையும் தன் வரவை எதிர்க்காத அமைதியையும் கவனித்தவன் இப்போதைக்கு இறுக்கமாகவே இருந்துவிடுவோம் என முடிவுகட்டினான்.
“வாப்பா ஆதி…” என அளித்த வைத்தியநாதனை,
“நல்லா இருக்கீங்களாப்பா?…” என பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தவன் காமாட்சியை லேசாக அணைத்துக்கொண்டான்.
அவர் விசும்பவே, “ம்மா நான் தான் வந்துட்டேன்ல. அழாதீங்க. எதுவானாலும் பார்த்துக்கலாம். வரு எங்க?…”
“அந்த ரூம்ல இப்போதான் தூங்க ஆரம்பிச்சா…” என சொல்லி கூட்டிக்கொண்டு காண்பிக்க அங்கே அரை உறக்கத்தில் வருணிகா படுத்திருந்தாள்.
அவளருகில் சென்று அமர்ந்தவன் மனமோ மகளை அள்ளிக்கொஞ்ச தவிக்க எங்கே தூக்கிக்கொண்டால் அவளின் தூக்கம் கலையுமோ என அஞ்சி மென்மையாக வருடி வருடி பட்டும்படாமலும் முத்தமழை பொழிந்தான்.
சில நிமிடங்கள் கழிந்து எழுந்து நின்ற அவனின் விழிகள் கலங்கி கசிந்திருக்க,
“எதுக்குய்யா கண்ணு கலங்குற? எப்போ வந்த ஊர்ல இருந்து? சாப்ட்டியா?…”
காமாட்சியின் கேள்வியில் கொஞ்சம் தெளிந்தவன் வீட்டிலிருந்து வேகமாக தன் காரை நோக்கி சென்றான். மலர் நின்ற இடத்திலிருந்து கொஞ்சமும் நகரவே இல்லை.
போனவன் காரிலிருந்து சில பார்சல்களை எடுத்துவந்து கொடுத்துவிட்டு,
“நாளைக்கு காலைல வடபழனி முருகன் கோவிலுக்கு போறோம். 5 மணிக்கே ரெடியா இருக்கனும் எல்லோரும். இதுல எல்லோருக்கும் ட்ரெஸ், ஜ்வெல்ஸ் இருக்கு. இதை தான் நாளைக்கு எல்லோரும் போட்டுக்கனும்…”
அவனின் பேச்சில் காமாட்சிக்கும் வைத்தியநாதனுக்கும் இன்ப அதிர்ச்சி என்றால் மலருக்கு இடியாய் இருந்தது.
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? உங்க இஷ்டத்துக்கு முடிவெடுப்பீங்களா?…” பட்டென வெடித்துக்கிளம்பிய கோவத்தில் பேச,
“நீ என்னவேனாலும் பேசிக்கோ. எனக்கொன்னுமில்லை. நாளைக்கு கோவிலுக்கு போறோம். கண்டிப்பா போயே ஆகனும். கிளம்பி இரு…” என்றவன் அவளை நெருங்கி,
“இல்லைனா நான் வந்து உன்னை கிளப்பவேண்டியதா இருக்கும்…” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு,
“அப்பா மத்த விஷயங்களை நாம காலைல பேசிப்போம். இப்போ நீங்க போய் தூங்குங்க. நான் வெளில கார்ல தான் இருப்பேன்…”
மலரை ஒரு பார்வை பார்த்தவன் வேகமாக வெளியேறிவிட்டான் யாரையும் பேசவிடவும் இல்லை. அதற்கு நேரமும் கொடுக்கவில்லை.
கேட்டின் அருகில் யாரும் உள்ளே செல்லாதவாறு வாசலை மறித்து காரை நிறுத்தி அதில் அமர்ந்துகொண்டவன் உள் விளக்கை அணைத்து சீட்டை சாய்த்து அதில் படுத்துக்கொண்டான்.
அவன் எதிர்பார்த்ததை போல பர்சனல் மொபைலில் மாறி மாறி அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது. இப்போதைக்கு எதையும் ஏற்க அவன் தயாரில்லை. சில நிமிடம் கண்களை மூடித்திறந்தான்.
படுத்துவிட்டானே தவிர கொஞ்சமும் உறக்கமில்லை அவன் கண்களில். விழிகள் சிவக்க அழகேசனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தான். அடுத்த அரைமணி நேரத்தில் முதல் நாள் போல அவர்களும் வந்துசேர்ந்தனர்.
“என்னடா வாசலுக்கு குறுக்கால கார் நிக்குது. யாராச்சும் வந்துருப்பாங்களோ?…” என கேட்டுக்கொண்டே அருகே வர,
“அதுக்கென்ன தல. காம்பவுண்ட் சுவரை தாண்டி உள்ள போவோம்…” என சொல்லி திரும்ப காரை திறந்துகொண்டு இறங்கினான் ஆதி.
வேகமாய் அவர்களை நெருங்கியவன் பளாரென அறைந்தான் ஒருவனை. அவனின் அடியில் சுருண்டு விழுந்தவன் போதையில் இருந்ததால் மீண்டும் எழ முடியவில்லை.
“ஏய் யார்க்கிட்ட கைவச்சுக்கின்ன?…” என மற்றவர்கள் துள்ள அலட்டிக்கொள்ளாமல் பக்கெட்டில் வைத்திருந்த பிஸ்டலை எடுத்து அழகேசனின் நெற்றியில் வைத்து ட்ரிகரை அழுத்த அவனோ அலறினான்.
“விட்டுடுங்க ஸார். நான் சும்மா உதார் உடத்தான் இங்க வந்தேன். இனிமே இந்த திசைக்கே தலைவச்சு படுக்கமாட்டேன். என்னை விட்ருங்க…”
ஆதியின் தோரணை ஒரு பெரிய காவல்துறை அதிகாரியாய் மற்றவர்களுக்கு தோன்றியது.
“தனியா ஒரு பொண்ணு இருந்தா கலாட்டாவா பன்ற? உன்னையெல்லாம் விட்டுவைக்கிறதே தப்புடா. சாவு…” என சொல்ல அனைவரும் காலில் விழாத குறையாக கெஞ்சினர்.
“தெரியாம பண்ணிட்டோம் ஸார். இனிமே எந்த பொண்ணுக்கிட்டையும் வச்சுக்கவே மாட்டோம்…” என சொல்லியவர்கள் அவன் அமைதியாக நிற்க இதுதான் நேரம் என அங்கிருந்து அடித்துப்பிடித்து ஓடிவிட்டனர்.
அவர்கள் செல்லும் திசையையே சிறிதுநேரம் பார்த்தவன் மீண்டும் காரில் ஏறி படுத்துவிட்டான். நேரம் சரியாக ஐந்தை தொட மீண்டும் கேட்டை தாண்டி குதித்து காலிங் பெல்லை அழுத்தினான்.
“நைட் கேட் சாவியை வாங்கி வச்சிருந்திருக்கலாம். எத்தனை தடவை ஏறி ஏறி குதிக்க?…” என தன்னையே நொந்துகொண்டு நிற்க,
வைத்தியநாதன் வந்து திறக்க ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று அவர் அறையில் குளித்து கிளம்பினான்.
கிளம்பி வரும் பொழுதே அனைவரும் கிளம்பி தயாராய் இருக்க வருணி நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவளை ஆசையாக வாங்கி தன் தோளில் போட்டுக்கொள்ள,
“பாப்பாவை அப்போவே எழுப்பி லேசா குளிச்சுவிட்டுட்டேன். பாலை குடிச்சுட்டு திரும்பவும் தூங்கிட்டா…” காமாட்சி அவனுக்கு பதில் அளிக்க,
“போலாம்மா. டைம் ஆச்சு…” என சொல்லியவன் மலரை பார்க்க அவளும் தயாராகவே இருந்தாள். மனதினுள் சிறு ஆச்சர்யமாக உணர்ந்தவன் வைத்தியநாதனின் முகத்தை பார்க்க அவர் முகமோ இறுக்கத்தில் கடுமையாக இருந்தது.
அதிலேயே புரிந்துகொண்டான் எதுவோ நடந்திருக்கிறது என.
“இருய்யா வீட்ல விளக்கேத்தி சாமிகும்பிட்டுடு போவோம்…” என காமாட்சி சொல்லிக்கொண்டே பூஜையறைக்கு செல்ல மற்றவர்களும் பின்தொடர்ந்து இறைவனை வணங்கிவிட்டு வெளியேறினர்.
ஆதி எதுவும் பேசாமல் முன்னே நடக்க மற்றவர்கள் பின்னே வீட்டை பூட்டிக்கொண்டு சென்று காரில் அமர்ந்தனர்.
காரோட்டும் பொழுதில் வருணியை வைத்தியநாதன் வாங்கிக்கொள்ள பின்னிருக்கையில் காமாட்சியும் மலரும் அமர்ந்துகொண்டனர். கோவிலுக்கு செல்லும் வழியில் இருந்த சிறு சிறு கோவில்களிலும் தேங்காய் உடைக்க மறக்கவில்லை காமாட்சி.
சரியாக ஆறேகால் மணிக்கு உள்ளே செல்ல பூஜைக்கான வேலைகள் துவங்கியது. ஏற்கனவே அங்கே ஆதியை சேர்ந்தவர்கள் நின்றிருந்தார்கள் என்பதை மலர் பார்க்காமலே உணர்ந்துகொண்டாள்.
யாரையும் நிமிர்ந்துபார்க்கும் எண்ணமில்லை மலருக்கு. இப்படி ஒரு இடத்தில் இதை போல் வந்து நிற்போம் என என்றைக்கும் எண்ணியதில்லை.
“அவளுக்கு இது தெரியுமா?…” என தோழியை தேடியது மலரின் உள்ளம். தெரிந்திருந்தால்? நிற்கவே முடியாமல் கால்கள் தள்ளாடியது.
தன்னருகில் நின்ற ஆதியின் தோள் தன்னை உரச தீச்சுட்டதை போல தள்ளி நின்றாள். அங்கிருப்பவர்கள் பார்வை தன்னையே துளைப்பதை போல உணரவும் இன்னும் ஒதுங்கினாள்.
“இன்னும் எத்தனை நாளைக்கு நீ என்னை தள்ளிவைப்ப? …”
“நினைச்சதை சாதிச்சுட்ட இறுமாப்பா?…”
“சத்தியமா இல்லைடி. ரொம்ப வருத்தமா இருக்கு…” என கசங்கிய குரலில் சொல்ல அவள் அவனின் குரலில் ஏறிட்டுப்பார்க்க சரியாக அதே நேரம் அவளின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டி தன் சரிபாதியாக்கிக்கொண்டான்.
அந்த அதிகாலை வேளையில் மேளவாத்தியங்கள் இன்றி, மணமேடை இன்றி, இளைஞர் பட்டாளம் இன்றி கலகலப்பில்லாமல் அமைதியான சூழலில் விரல்விட்டு எண்ணிவிடும் சிலரே இருக்க ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாய் நடந்தேறியது அவர்களின் திருமணம்.
அவளின் நெற்றியில் குங்குமமிட்டு, “இனியாவதும் நம்முடைய வாழ்க்கை போராட்டமில்லாமல் அமைதியா சந்தோஷமா இருக்கனும்னு நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன்…” என சொல்ல மலர் அவனை நிமிர்ந்தும் பார்த்தாள் இல்லை.
“உன்னை நான் காதலிக்கிறேன். ஆனா அதையும் தாண்டிய ஒரு புரிதல் உன்மேல எனக்கிருக்கு. அதிகமான அன்பு, பாசம் இதையெல்லாம் விட அதிகமான புரிதல் நம்மோட உறவை பலப்படுத்தும். அது இந்த ஜென்மம் முழுவதும் தொடரும் மலர்…”
“இந்த தாலி சொல்லும் உனக்கு நான் இனி யாருன்ற உண்மையை. உன்னிடத்தில் எனக்கான உரிமையை. இதுதான் நிஜம். இதுதான் நிரந்தரம். புரிஞ்சுக்கோ மலர்…”
அவன் பேச பேச தன் கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை குனிந்து கையிலெடுத்து பார்த்தாள். ஏனோ அழுகையாக வந்தது. கண்ணீர் சிதற அதை பார்த்தபடியே அப்படியே நின்றாள்.
“அமேஸான்…” என்ற குரல். அவளின் மனதிற்கு நெருக்கமான குரல் கேட்க விசுக்கென நிமிர்ந்து பார்த்தவள் தன்னெதிரே நின்றவளை கண்டு,
“நேத்ரா…” என ஓடிச்சென்று கட்டிக்கொண்டு கதறிவிட்டாள் மலர்.
நேத்ராவின் தோழி வனமலர்.
புன்னகை ஜீவிக்கும்…