புன்னகை – 6
நேத்ராவை அணைத்துக்கொண்ட வனமலருக்கு அழுகை நின்றபாடில்லை. பொங்கி பொங்கி அழுக அவளை தேற்றியபடியே நேத்ரா எதிரில் நின்றவனை முறைத்தாள்.
இந்த முறைப்பெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்பதை போல அவனும் மிக தெனாவெட்டாக நின்றான். அதில் பல்லை கடித்த நேத்ரா,
“ஹைய்யோ அமேஸான் முதல்ல இந்த வாட்டர் பால்ஸை நிறுத்தேன். சும்மா இதுக்கெல்லாம் அழுதுட்டு. இவன்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்காக அழுதுட்டு இருக்க…”
“நேத்ரா பாரு, எந்த நிலைல கொண்டுவந்து இவன் நிறுத்திட்டான் பாரு…” என மீண்டும் மலர் அழ,
“உன் நிலைக்கு இங்க என்ன குறைச்சலா போச்சாம்? ஒன்னும் இல்லை. எல்லாம் சரியாகிடும்…” என்றவள் ஆதியை பார்த்து,
“இவ இவ்வளோ அழறா. உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லை. என்னில இருந்து இப்படி மனசாட்சி இல்லாதவனா மாறின?…”
“இப்போ என்ன நடந்துபோச்சுன்னு நீ என்கிட்டே பாயுற? என்ன பண்ணிட்டேனாம் அவளை? கல்யாணம் தானே செஞ்சிருக்கேன்…” என அவனும் சூடாக,
“இப்போ என்ன அவசியம் வந்துச்சுன்னு நைட்டோட நைட்டா இந்த முடிவுக்கு வந்த?…”
“இதுவே லேட். இனியும் என்ன நடக்கனும்? எதுவும் தவறா நடந்திடகூடாதுன்னு தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்…” நேத்ராவுடன் சரிக்குசரி மல்லுக்கு நின்றான்.
“அவளோட மனசை நீ எப்போ புரிஞ்சுக்கப்போற? அவ சந்தோஷத்தோட நடக்கவேண்டியதை அவ கண்ணீரோட நடத்திருக்க…” என நேத்ரா மீண்டும் கேட்க,
“உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை அனய்…” கலங்கிய குரலோடு தன் பக்காவாட்டில் ஒலித்த குரலில் தேகம் விறைக்க திரும்பியவன்.
“இல்லை. நீங்க இதைத்தவிர என்கிட்டே வேற எதையும் எதிர்பார்த்திருக்க கூடாது. என்னை தவறா கணிச்சுட்டீங்க. அந்த இடத்தில் தான் என்னை நீங்க தவறவிட்டதும் கூட…” என்றான் அனய் ஆதித்யவர்மன்.
“ஏன்டா உனக்கு என் மனசு புரியவே இல்லை?…” என ஆண்டாள் கதற,
“உங்க அனய் என்னைக்கோ செத்துட்டான். இப்போ இருக்கிறது ஆதித்யா மட்டும் தான்…” என்றவன்,
“போதும்மா உங்களுக்காக உங்க மனசுக்காக நான் அமைதியா ஒதுங்கி நின்னது வரைக்கும் போதும். அதனால நானும், மலரும் ரொம்பவே இழந்துட்டோம். இனியாவது நாங்க நல்லா இருக்கனும்னு வாழ்த்துங்க…” என்றவன்,
“உங்களுக்கு மனசிருந்தா முழுமனசோட வாழ்த்துங்க. இல்லைனா வேண்டாம்…” என முடிக்க ஆண்டாள் முகத்தை மூடிக்கொண்டு அழ அதை பார்த்த நேத்ரா,
“அனய் போதும். நீ ரொம்ப பேசற. கோவிலுக்கு நீ கல்யாணம் பண்ணிக்க வந்தியா? இல்லை அம்மாவோட சண்டை போட வந்தியா? இப்படி அவங்களை நோகடிக்கிற?…” என கத்த அவளை முறைத்தான்.
“இந்த முறைப்பெல்லாம் வேறெங்கையாச்சும் போய் வச்சுக்கோ. என்கிட்டே வச்சுக்கிட்ட அவ்வளோ தான்…” என்றவள்,
“எங்கடா என் புருஷன்? அவரை விட்டுடு நீ மட்டும் கிளம்பி வந்திருக்க…”
அவளின் கேள்வியில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தவன்,
“அவரும் இங்க வந்துட்டா அங்க ஷூட்டிங்கை யார் கவனிக்கிறதாம்?…”
“பொல்லாத ஷூட்டிங். நாலு ஓட்டை கேமராவை வச்சு அதுல வீடியோ எடுக்கிறதுக்கு பேரு ஷூட்டிங்காம். உன் படத்துக்கு என் புருஷன் வீடியோக்ராபரா?…” என்றவள் தலையில் கொட்டியவன்,
“அதுக்கு பேர் கேமராமேன். இரு மாப்பிள்ளை வரட்டும் சொல்றேன் அவர்க்கிட்ட…” என,
“வீட்ல மூத்த மருமகன் அதுவும் ஒரே ஒரு மருமகன், அவர் இல்லாம கல்யாணத்தை நடத்தியிருக்கீங்க. கொஞ்சம் கூட மரியாதையே இல்லை உங்களுக்கு. இதுக்கே நான் இங்க வந்திருக்க கூடாது. பொண்ணு என்னோட அமேஸான்றதால வந்தேன்…” என நேத்ரா வரிந்துகட்ட,
“ரொம்பத்தான் குதிக்கிற. அதெல்லாம் உன் புருஷன்ட்ட சொல்லிட்டுதான் நடந்தது எல்லாம்…”
“போதும் நேத்ரா. எல்லாம் இங்க மனசுக்கு பிடிச்சா நடக்குது?. நீ என்னனா விளையாட்டிட்டு இருக்க…” ஆண்டாள் மனத்தாங்கலுடன் குத்தலாக பேச,
“அம்மா போதும். இந்த சுட்சுவேஷனை கொஞ்சம் மாத்தலாம்னு பார்த்தேன். இப்பவும் நீங்க இன்னும் மனசு மாறாம இருக்கறது சரியில்லை…” என நேத்ரா கூற,
“ஆண்டாள் அம்மா, நாங்க என்ன சொல்றோம்னா…” என்றபடி காமாட்சி வர,
“போதும்ங்க, நான் ஒன்னும் கேட்க தேவையில்லை. அதான் எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சே. இனியும் பேச என்ன இருக்கு. என் பிள்ளையை உங்களுக்கு தாரைவார்த்துக்குடுத்தது மாதிரி அவன் வாழ்க்கைல நீங்க நாட்டாமைத்தனம் பண்ணி இன்னைக்கு என் பிள்ளை வாழ்க்கையை மாத்திட்டீங்க…”
“எது நான் நடக்கக்கூடாதுன்னு இத்தனை வருஷம் நெருப்புமேல நின்னேனோ அது இன்னைக்கு என் கண்முன்னால நடந்தும் என்னால தடுக்கமுடியலை. கையாலாகத என் நிலையை நானே வெறுத்துட்டு இருக்கேன்…” என்றவர்,
“ஏன் சார் நான் படிச்சு படிச்சு சொன்னேனே? உங்ககிட்ட எத்தனை முறை மன்றாடியிருப்பேன். கெஞ்சகூட செஞ்சேனே. நீங்க ஒரு சுயநலவாதின்னு காட்டிட்டீங்க…” ஆண்டாள் கோபாவேசமாக கூற,
“விதின்னு ஒன்னு இருக்கும்மா. அதான் இத்தனை இடையூறுகளை தாண்டி மலரை ஆதி தம்பிகிட்டையே சேர்த்துடுச்சு. இதுதான் இறைவன் சித்தம்னு நடந்ததை நாம ஏத்துக்கிட்டு தான் ஆகனும்…” வைத்தியநாதன் அமைதியாக கூற,
“வேதாந்தமா பேசறீங்க? உங்களுக்கென்ன உங்க மகன் அல்பாயுசுல மேல போய் சேர்ந்துட்டான். இப்போ மாட்டியிருக்கிறது என் மகனாச்சே? அவனோட வாழ்க்கை, எதிர்காலம் எல்லாம் இவளோட…”
இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பாரோ ஆண்டாள்? ஆத்திரத்துடன் அனய் வாயை திறப்பதற்குள் பொரிய ஆரம்பித்தாள் நேத்ரா.
“அம்மா போதும். இதுக்குமேல மலரை இன்னும் ஒரு வார்த்தை பேசினீங்க நான் சும்மா இருக்க மாட்டேன். இத்தனை நாள் நீங்க அனயை படுத்தினதும் போதும். உங்களுக்காக அவன் தனிமரமா நின்னதும் போதும். இன்னுமின்னும் பேசி பேசி நீங்க உங்களை தனிமைப்படுத்திக்காதீங்க. எப்பயிருந்து ஊரே வேடிக்கை பார்க்கிறது போல சண்டைபோட ஆரம்பிச்சீங்க? நீங்க பேசின வரைக்கும் போதும்….” என்றவள்,
“இங்க கல்யாணம் செய்ய வந்தோமா? இல்லை சண்டைபோட்டு நம்மளை நாமே அசிங்கப்படுத்திக்க வந்தோமா? இவ்வளோ நாள் எப்படியோ இனி நாம எல்லோருமே உறவாகிட்டோம். ஒருத்தரை மாத்தி ஒருத்தர் குறைபேசி வார்த்தையால் காயப்படுத்திக்க வேண்டாம். இனியாவது சுமூகமா போக முயற்சி பண்ணுங்க…” என சொல்லி அனயை பார்த்து திரும்பியவள்,
“இன்னும் எவ்வளோ நேரம்டா இங்கயே நிற்க வைப்ப? வீட்டுக்கு அழைச்சிட்டு போகாம இங்க என்ன சினிமாவா ஓட்டப்போற? இப்போ உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போறியா? இல்லை நாங்க ஊர்ப்பார்த்து கிளம்பவா?…”
நேத்ராவின் பேச்சில் அனைவரும் அமைதியாகினர். இனியும் இங்கே நின்றால் அதற்கும் தாய் ஏதாவது பேச ஆரம்பித்துவிடுவாரோ என நினைத்தவன்,
“வாங்க கிளம்பலாம்…” என சொல்லி மலரின் கைபிடித்து முன்னே நடக்க மற்றவர்கள் பின்னே நடந்துவந்தனர்.
அனைத்திற்கும் வெறும் பார்வையாளராய் மட்டுமே நின்றிருந்தார் நேத்ராவின் தந்தை பாலகிருஷ்ணன். உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவில் கூட வெகுவாக தளர்ந்துபோய் இருந்தார்.
அனய் காரின் அருகில் சென்றதும் திரும்பியவன்,
“நேத்ரா நீயும் எங்களோட வாயேன்…” என அழைக்க,
“நான் உன்னோட வந்துட்டா என் மாமியாரை யார் அழைச்சுட்டு வரது?…” என வேண்டுமென்றே நக்கலாக கூற அப்போதுதான் அவளுக்கு பின்னால் காமட்சியோடு பேசிக்கொண்டே வந்த சுமங்கலியை பார்த்து பதறினான்.
“ஐயோ அத்தை மன்னிச்சிடுங்க. நான் கவனிக்கலை உங்களை. ப்ளீஸ் மன்னிச்சிடுங்க அத்தை. மாமா வரலையா?…” என கேட்க,
“அடேங்கப்பா ஓவர் ஸீன் தான்டா அண்ணா. நீ எங்கத்தையையே உன் மேரேஜ்க்கு இன்வைட் பண்ணலை. எனக்குமே ஜஸ்ட் ஒரு இன்பர்மேஷன் தான் குடுத்த. இதுல நான் என் குடும்ப சகிதமா வந்து கலந்துக்கனுமாக்கும்? நினைப்புதான்…”
“நேத்ரா…” என பல்லை கடித்தான் அனய்.
“பாரேன் இப்போ கூட நீ மாமாவை தேடற. ஆனா என் பையனை பார்க்கனும்னு கூட உனக்கு தோணலை. என் பையன் மேல நீ வச்சிருக்கிற பாசத்தை பார்த்து புல்லரிக்குது போ…” என்று உதட்டை பிதுக்க,
“எங்க என் மருமகன்? வந்திருக்கானா?…” என ஆவலாய் பின்னால் தேட,
“பாசக்கார பயபுள்ளையாம். நான் நம்பிடனுமாம். ஆனாலும் ஐ வான்ட் மோர் எமோஷன் தம்பி…” என வம்பு செய்ய,
“நேத்ரா, விடேன். வந்ததும் ஆரம்பிக்கனுமா? ஏற்கனவே எவ்வளோ டென்ஷன். நீயும் படுத்தாதே…” என்ற சுமங்கலி அனயிடம் திரும்பி,
“குழந்தையை அவன் தாத்தாக்கிட்ட விட்டுட்டு வந்திருக்கோம்பா. தகவல் தெரிஞ்சதும் நேத்ரா போயே ஆகனும்னு சொல்லிட்டா. மலருக்கு நான் இப்போ வேணும் அத்தைன்னு சொல்லி. அவளை தனியா அனுப்பமுடியாதில்லையா. அதான் நாங்க நைட் கிளம்பிட்டோம்…”
சுமங்கலி சொல்லவும் மீண்டும் மலர் கண்ணீர் உகுக்க அதை கண்ட நேத்ரா,
“உனக்கொரு ரகசியம் சொல்றேன் அமேஸான். முன்னாடி உன் மூஞ்சில சிரிப்பையே என்னால பார்க்கமுடியாது தெரியுமா? நீ சிரிச்சா அவ்வளோ பயங்கரமா இருக்கும். இதுல நீ இப்போ அழ வேற செய்யுற. இன்னும் கன்றாவி. அந்த தெய்வம் தான் என்னை காப்பாத்தனும்…”
அவள் விளையாட்டாக மலரின் மனநிலையை மாற்ற முயல அதை புரிந்துகொண்டவளோ மீண்டும் நேத்ராவை அணைத்துக்கொண்டாள்.
“ஐய போதும். எத்தனை தடவை கட்டிப்பிடிப்ப? கட்டுமரத்துக்கு தெரிஞ்சது நீ காலி…” என கூறி சிரிக்க மலரின் முகத்திலும் புன்முறுவல்.
எத்தனை வருடம் ஆகிற்று தன் தோழியின் பேச்சை கேட்டு. அவளின் கட்டுமரம் பற்றி பேசி. என நினைத்துக்கொண்டே பார்வை நேத்ராவை தாண்டி செல்ல அங்கே ஆண்டாள் வந்துகொண்டிருந்தார் இவளை பார்த்தபடியே.
எத்தனை ஒதுங்கினாலும் விதி இவரிடமே தன்னை பினைக்கிறதே? இன்னும் எத்தனை எத்தனை உதாசீனங்களை எதிர்கொள்ளவேண்டி வருமோ? நினைக்க நினைக்க ஆயாசமாக உணர்ந்தாள் வனமலர்.
“என்ன ப்ரீஸ் ஆகிட்ட? அம்மாவை அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ முதல்ல கார்ல ஏறு. வீட்டுக்கு போகவேண்டாமா?…” என கேட்டுக்கொண்டே மலரை காரின் முன் சீட்டில் தள்ளியவள் மலரின் முறைப்பை பொருட்படுத்தாமல் காமாட்சியை பின்னால் அமரசொல்லி,
“அனய் போய் காரை எடுடா…” என்று அனுப்பிவிட்டு,
“அப்பா நீங்க அண்ணா காரை ஃபாலோ பண்ணுங்க…” என தந்தையிடம் சொல்லி,
“அத்தை நீங்க அம்மாவோட வந்திருங்க. நான் இவங்களோட போறேன்…” என்று சொல்ல சுமங்கலியும் ஆண்டாளோடு செல்ல நேத்ரா ஒருபுறம் ஏறிக்கொண்டாள். மறுபுறம் வைத்தியநாதன் வருணியோடு ஏறி அமர்ந்தார்.
“பாப்பாவை குடுங்கப்பா. எவ்வளோ நேரம் தான் நீங்க தோள்ல போட்டுட்டு இருப்பீங்க?…” என இயல்பாக வாங்கிக்கொண்டவள்,
“ஏய் குட்டி இன்னும் என்ன உனக்கு தூக்கம்? எழுந்துக்கோ?…” என வருணியின் கன்னத்தை பிடித்து கொஞ்சியவள்,
“ஏய் அமேஸான் உன் பொண்ணு உன்னை விட அழகு. கன்னத்தை பாரேன் எவ்வளோ சாஃப்ட்…” என்று வருடிவிட்டாள்.
அதுவரை ஏதோ ஒரு மாயவுலகில் மூச்சுக்காற்று கிடைக்காமல் தத்தளித்துக்கொண்டிருந்தவள் முகத்தில் வெந்நீரை கொட்டியது போல துடித்துப்போனாள்.
“என்னையே வெறுக்கும் அவனின் பெற்றோரால் என் பெண்ணை ஏற்றுக்கொள்ள முடியுமா? எத்தனை உதாசீனத்தையும் வெறுப்பையும் நெருப்பாய் சுடும் சொல்லம்புகளையும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் என் குழந்தை தாங்குவாளா?…”
பலவித யோசனைகளை வில்லை கடந்த அம்புகளாய் தன்னை தாக்க நிலைகுலைந்து போனாள் மலர்.
என்ன செய்ய என்ன செய்ய? மனம் யோசனைக்கு மேல் யோசனையில் ஆர்ப்பரிக்க மயக்கமே வரும் போல் ஆனது. அனாதரவாக தன் வருணி நிற்பது போன்றொரு பிரம்மை அவளை ஆட்டிப்படைக்க துடிதுடித்துவிட்டாள்.
ஒரு நொடிகூட அதை நினைத்துப்பார்க்க பிடிக்காதவளாய் அச்சிந்தனையில் இருந்து விடுபட தலையை வேகமாக உலுக்க அதுவரை அவளின் முகத்தில் வந்துபோன பாவனைகளை கண்டும் காணாமல் பார்த்துவந்த அனய் தவித்துதான் போனான்.
அனய் பார்வையை உணராது தன் போக்கில் இருந்தவள் கார் செல்லும் திசையை அப்போதுதான் கவனித்தவளாய் புருவம் சுருக்க அவள் எதுவும் பேசுவாளோ என அனய் எதிர்பார்த்தான்.
ம்ஹூம் சாலையையே தீவிரமாய் பார்த்தாலே தவிர வேறெங்கும் பார்வையை செலுத்தவில்லை. ஆனால் உள்மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது மட்டும் உண்மை.
சிறிது நேரத்தில் சற்றே பெரிதான பங்களா வாசலில் காரை நுழைத்தவன் உள்ளே சென்று காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி,
“வாங்கப்பா. நம்ம வீட்டுக்கு வந்திட்டோம்…” என சொல்லி வருணியை வாங்கி தன் தோளில் போட்டுக்கொண்டான்.
அனைவரும் கீழிறங்கி நிற்க ட்ரைவர் வந்து காரை அங்கிருந்து நிறுத்தும் இடத்திற்கு எடுத்து சென்றான்.
அனய் தூக்கியதும் உறக்கம் கலைந்த குழந்தை அவனின் முகத்தை ஏறிட்டு பார்க்க,
“வரு பேபி…” ஒட்டுமொத்த பாசத்தையும் குழைத்த குரலில் அழைக்க குழந்தையோ தன் தந்தை வந்துவிட்ட மகிழ்ச்சியில் வாய்கொள்ளா சிரிப்போடு அவனின் தலைமுடியை பிடித்து இழுத்து ஆட்டி கால்களை உதறிக்கொண்டு,
“ப்பா… ப்பா… வ…ந்தூ. நாநூ.. ப்பாப்பா… ப்பா..” என முகமெல்லாம் கடித்துவைத்து கொஞ்ச அவளின் எச்சில் பட்ட இடமெங்கும் அமிர்தமாய் ஆனது அனய்க்கு.
அவனுக்கான தேடல் மகளிடத்தில் அபரிமிதமாய் இருக்க கண்கள் கலங்கி உருகியே போனான்.
“இத்தனை தவித்திருக்கிறாளே தன் பெண். இனி இவளை பிரிந்து எங்கும் செல்லவே மாட்டேன்…” என மனதிற்கும் பெரும் தீர்மானமே கொண்டான்.
இவர்களின் பாசச்சிதறல்களை பார்த்த மலருக்கோ தன்னை விட எந்தவிதத்தில் இவன் தன் மகளுக்கு முக்கியமானவனாய் போனான்? என நினைக்க நினைக்க தாளவில்லை.
ஆனாலும் ஏதோ ஒரு மூலையில் மனதிற்குள் சிறு நிம்மதி குமிழியிட்டது என்னவோ அவளறியாத உண்மைதான்.
இவர்கள் வந்திறங்கியதுமே பாலகிருஷ்ணன் காரும் வீட்டை வந்தடைய அவர்களும் இறங்கியதிலிருந்து இந்நிகழ்வை பார்த்துக்கொண்டு தான் இருந்தனர்.
ஆண்டாளும் பாலகிருஷ்ணனும் எப்படி உணர்ந்தனர் என்றே தெரியவில்லை. அவர்கள் இதை ஆச்சர்யமாக பார்த்தபடியே இருந்தனர்.
முதல்முறை பார்த்த ஒருவனை அப்பா என்று அக்குழந்தை அழைப்பதும் அவளின் மேல் தன் மகன் கொண்டிருக்கும் அளப்பறியா அன்பும் திகைப்பாய் தான் இருந்தது.
அதை கண்கள் பனிக்க பார்த்துக்கொண்டிருந்த வைத்தியநாதனை முடிந்தளவு முறைத்தார் ஆண்டாள். ஆனால் அதை உணர்ந்தும் ஆண்டாளின் புறம் தன் பார்வையை செலுத்தவே இல்லை வைத்தியநாதன்.
“என்ன ஒரு திண்ணக்கம் இந்த பெரியமனுஷனுக்கு?…” என மனதிற்குள் புகைந்தே ஆற்றாற்றுப்போனார்.
வீட்டிலிருந்து ஆரத்தி தட்டோடு வெளியே வந்த வைரத்தாய் அவ்வீட்டை பராமரிப்பவர்.
“தம்பி நல்லநேரம் முடியுறதுக்குள்ள வீட்டுக்கு வந்திடுங்க தம்பி…” என அழைக்க அவரிடமிருந்து தட்டை வாங்கிக்கொண்ட நேத்ரா,
“டேய் அண்ணா, வா வந்து உன் பேமிலியோட நில்லு. என்னோட கடமையை நான் செஞ்சிடனுமில்லையா?…” என சொல்ல,
“பெரிய பொல்லாத கடமை…” என்றபடி மலரை பார்க்க அவளோ எதுவுமே பேசாமல் அவனருகில் வர மறுத்து அங்கேயே நின்றாள்.
“என்ன அமேஸான், உனக்கு தனியா சொல்லனுமா? நீயா வரியா? இல்லை உன் பொண்ணை தூக்கினது போல உன்னையும் தூக்கிட்டு வந்து நிக்க சொல்லவா?…”
செல்லமான நேத்ராவின் மிரட்டலில் தூக்கிவாரிப்போட நிமிர்ந்தவள் அவளை முறைத்தாள்.
“அண்ணனும் தங்கச்சியும் இதுல மட்டும் ஒண்ணா யோசிப்பாங்க…” என முனகிக்கொண்டே அவனருகில் வந்து நிற்க கையில் குழந்தையோடு முழு குடும்பமாக நின்ற தன் அண்ணனை பார்க்கவே அத்தனை பாந்தமாக இருந்தது.
அத்தனை நிறைவாக இருந்தது வைத்தியநாதனுக்கும் காமாட்சிக்கும். மனம் குளிர அவர்களை பார்த்தபடி நின்றிருந்தார்கள்.
வீட்டிற்குள் நுழைந்ததும் நேத்ராவும் சுமங்கலியும் மலரை பூஜையறைக்கு சென்று விளக்கேற்ற சொல்ல அவர்களின் பேச்சை தட்டமுடியாமல் அதை செய்துவிட்டு வந்தாள் மலர்.
அனைத்தும் முடிந்து மாலை கிளம்பும் நேரம் வைத்தியநாதனும் காமாட்சியும் கிளம்ப அவர்களை மறித்த ஆண்டாள்,
“உங்க பேத்தியை ஏன் விட்டுட்டு போறீங்க? அவளையும் கூட்டிட்டு போங்க…” என வருணியை காட்டி சொல்ல அனைவரும் அதிர்ந்து தான் நின்றனர்.
மலருக்கு உயிரே போய்விட்டது அவரின் பேச்சில். தணலில் இட்டம் புழுவென துடிதுடித்துப்போனாள். இந்நிலை தன் பெண்ணிற்கு வரவேகூடாதென எத்தனை நாள் தவித்திருப்பாள்.
இன்று வந்தேவிட்டது. அதை உணரக்கூட முடியாமல் அனயின் கால்களை சற்றி சுற்றி விளையாடிக்கொண்டிருந்தாள் வருணி.
“நான் சொல்லிட்டே இருக்கேன். நீங்க அவனை பார்த்தா என்ன அர்த்தம்?…” என வைத்தியநாதனை பார்த்து கேட்க,
“அம்மா உங்க நாக்கு என்ன தேள்கொடுக்கா?…” என மலர் கேட்டேவிட்டாள் ஆண்டாளிடம்.
“மலர் நீ அமைதியா இரு…” என அவளை தடுத்தவன்,
“அம்மா போதும். இன்னைக்கு உங்க பேச்சு எல்லையை மீறிட்டு இருக்கு. என் பொண்ணை எங்கே அனுப்ப சொல்றீங்க? அவ என்னோடத்தான் இருப்பா. நான் உயிரோடிருக்கும் வரை என் பொண்ணு என்னோட தான் இருப்பா…”
அனய் ஆவேசமாய் பேசியபடி வருணியை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
“உன் பொண்ணா? இது உனக்கே அபத்தமா தெரியலயா அனய்?…”
ஆண்டாள் அவனிற்கு மேல் கோபம் கொள்ள கண்களை இறுக மூடித்திறந்தவன்,
“உங்களுக்கு தெரியாத இன்னொரு விஷயம் சொல்லவா? வருணி பிறக்கும் பொழுதே என்னுடைய பொண்ணாதான் பிறந்தா. அவளோட அப்பா நான் மட்டும் தான். இதை யாராலும் மறுக்க முடியாது…”
அவன் சொல்ல சொல்ல ஆண்டாளுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் அதிர்ச்சியில் நின்றிருந்த இடத்திலேயே கால்கள் வேரோடிவிட்டன.
இதற்கு என்ன அர்த்தம்?
புன்னகை ஜீவிக்கும்…