புன்னகை – 7
அனய் வீட்டிற்கு மலர் வாழ வந்துவிட்டிருந்தாலும் அவ்வீட்டின் அமைப்பும் அழகும் அவளின் மனதிற்கு இனிமை சேர்க்கவில்லை. எதிலும் மனம் செல்லவில்லை. எதையோ வெறித்துக்கொண்டே இருந்தாள்.
அவளுள்ளம் போர்க்களத்தை விட மோசமாகிக்கொண்டிருப்பதை அவளையன்றி யாரும் அறியவில்லை. அவளின் உணர்வுகளை ஓரளவிற்கு அனுமானித்துக்கொண்ட நேத்ரா அவளுக்கு பக்கபலமாக அவள் உடைந்துவிடாத அளவிற்கு உறுதுணையாக நின்றிருந்தாள்.
மலர் பூஜையறைக்கு சென்று திரும்பியதும் இதோ வருகிறேன் என்று மாடிக்கு சென்றுவிட்டான் அனய்.
வைத்தியநாதனுக்கும் காமாட்சிக்கும் தனித்து நிற்பது போன்றொரு உணர்வே ஏற்படாதவாறு நேத்ரா அவர்களுடன் சலசலத்துக்கொண்டே இருந்தாள்.
அவளை அத்தனை பிடித்துப்போனது அவர்களுக்கு. ஆண்டாளை போல இப்பெண்ணும் தங்களை கண்டுகொள்ளாது ஒதுக்கிவிடுமோ என்றெண்ணி தள்ளி நிற்க நினைக்க அவளோ தானாகவே வந்து ஒட்டிக்கொண்டாள்.
முன்பொருமுறை நேத்ராவை இவர்கள் பார்த்திருக்கிறார்கள் தான். ஆனாலும் பேசும் சந்தர்பம் ஏற்படவில்லை. அன்றைய சூழல் அதற்கு வழி கொடுக்கவும் இல்லை.
அதற்கடுத்த இன்றைய சந்திப்பு கூட அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எத்தனை அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் தரக்கூடியது என்று தெரியும். ஆனாலும் நேத்ரா எந்தவித ஏற்றத்தாழ்வும் இன்றி தங்களோடு பேச பேச ஒரு இனம் புரியாத பாசம் அவள்பால் சுரந்தது.
“நீ ரொம்ப அருமையான பொண்ணா இருக்கேம்மா. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சுடுச்சு…” காமாட்சி நேத்ராவின் கன்னம் வருடி சொல்லியே விட்டார்.
“இவளை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனானப்பட்ட கட்டுமரமே கவிழ்ந்துட்டார்…” என நினைத்தாள் மலர். உதடுகளில் சிறு முறுவல் கூட.
நேத்ராவும், “என் அம்மாவும் ரொம்ப அருமையானவங்க தான். அவங்க பொண்ணு நான் மட்டும் எப்படி இருப்பேன். அதான் நானும் அருமையான பொண்ணாகிட்டேன்…” என சொல்லி சிரித்தவள்,
“ஆனா என் அண்ணா இருக்கானே. அவன் என்னை மாதிரி கிடையாது…” என சொல்ல,
“உன்னையும் விட அருமையான தம்பி அவரு. எங்க மலரு தான் குடுத்துவச்சிருக்கனும்…” என்று காமாட்சி கூற ஆண்டாள் அவர்களை பார்த்து முறைத்தார்.
மலரும் அதை கவனித்துவிட்டாள். அவரின் பார்வையில் தன்னை கீழாக எண்ணினாள். அதுவும் அவளை அன்று ஆண்டாள் அப்படித்தானே கூறினார்.
அவர்களின் பேச்சில் நுழையாமல் இருந்தாலும் அவளை மையப்படுத்தியே இருந்தது நேத்ராவின் பேச்சுக்கள். அதனால் அங்கிருந்து செல்லாமல் அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டே இருந்தாள் தலையை மட்டும் ஆட்டியபடி.
இவர்களின் சம்பாஷனைகள் அனைத்தையும் கண்டும் காணாமல் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தார் ஆண்டாள்.
வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து ஆண்டாளின் கோபமான பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்தே இருந்தாள் மலர். ஆனாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அவள்.
நடந்தவைக்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லாததை போல விட்டேற்றியான முகபாவத்தோடு இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.
ஆனால் என்னதான் நேத்ராவோடு பேசிக்கொண்டிருந்தாலும் வைத்தியநாதனும் காமாட்சியும் தான் உள்ளுக்குள் பெரிதாக கலங்கி நின்றனர்.
மலரின் வாழ்க்கையை சீராகி அவளுக்கொரு நல்ல எதிர்காலம் அமைந்துவிட்ட மகிழ்ச்சியும் மனநிறைவும் நெஞ்சை நிறைத்தாலும் அவர்களை பிரியவேண்டிய தருணம் தங்களை நெருங்கிக்கொண்டிருப்பதை வேதனையோடு எண்ணிக்கொண்டனர்.
வருணியை தூக்கி மடியில் வைத்துக்கொண்டே இருந்தார் வைத்தியநாதன். பேத்தியை இறக்கிவிட மனமில்லாமல் அவளின் முகம் வருட, கால்களில் முத்தமிட என கண்கொட்டாமல் பார்த்து பார்த்து ரசித்து ரசித்து விழிகளில் நிரப்பிக்கொண்டிருந்தார்.
அவரின் தவிப்பு புரிந்தென்னவோ மலருக்கு மீண்டும் அழுகை வரும் போல ஆனது. ஆனாலும் மௌனியாய் பார்த்திருந்தாள்.
அதற்குள் அனய் வந்துவிட்டிருந்தான். வேஷ்டியிலிருந்து ஜீன்ஸ் டிஷர்ட்டுக்கு மாறியிருந்தான்.
“அதோ அண்ணா வந்துட்டான்…” என்றபடி நேத்ரா எழுந்துகொள்ள அனய்யும் அவர்களை நெருங்கிவந்து,
“ஸாரி ஒரு முக்கியமான போன்கால். அதான் லேட் ஆகிடுச்சு. வாங்க சாப்பிடபோகலாம்…” என்று சொல்லி மலரை பார்க்க அவள் நேத்ராவோடு சென்று நின்றுகொண்டாள்.
அதில் பல்லைக்கடித்தவன் தங்கையின் புறம் திரும்பி,
“நேத்ரா நீ எல்லோரையும் அழைச்சிட்டுப்போ. நான் மலரை கூட்டிட்டு வரேன்…”
அழுத்தமாய் சொல்லியவனை அலட்சியம் செய்வது போல மலர் அங்கிருந்து நகரமுற்பட அவளின் கையை இழுத்துப்பிடித்து நிறுத்தியவன்,
“அப்பா நீங்க அம்மாவை கூட்டிட்டு போய் சாப்பிடுங்க. நாங்க வந்திடறோம்…” என சொல்லி,
“நேத்ரா, ப்ளீஸ். நீ வரு பேபியை…”
“டேய் ஓவரா பண்ணாதே. நான் குழந்தையை பார்த்துக்கமாட்டேனா?…” மெல்ல கடிந்துகொண்டவள் வருணிகாவை தூக்கிச்சென்றாள் நேத்ரா.
சுமங்கலியும் காமாட்சியோடு உள்ளே சென்று மறைய அவ்விடத்தில் அனய் மலரை தவிர்த்து ஆண்டாளும் பாலகிருஷ்ணனும் தேங்கி நின்றனர்.
வைத்தியநாதனை அப்பா என்று அழைத்ததும் இல்லாமல் அவர்களை மட்டும் சாப்பிட சொன்னது தகப்பனான அவருக்கு பெரும் வலியை உண்டாக்கியது.
வேதனையை சுமந்த விழிகளோடு அவர் அமர்ந்திருக்க அவரின் உணர்வை புரிந்ததுபோல அவரிடம் சென்றவன்,
“அப்பா இது உங்க வீடு. நம்ம வீடு. இங்க உங்களை சாப்பிட சொல்லி நான் சொல்லனுமாப்பா? நீங்க தானே வந்தவங்களை கவனிக்கனும்…”
அவனின் வார்த்தையில் ஆண்டாள் முகம் மலர்ந்தார் என்றால் மலரின் முகமோ வெகுவாக வாடிவிட்டது.
“அப்போ இத்தனை நாள் அப்பா அம்மா என பாசத்தை பொழிந்தது அனைத்தும் தன்னை அடைய மட்டும் தானா? இன்று அவர்கள் அடுத்தவர்களாகி போயினரா?…” நினைக்க நினைக்க துக்கமாய் வந்தது மலருக்கு.
அனய்யை அந்தளவிற்கு தரம் தாழ்ந்து எண்ண மனம் ஒப்பவில்லை என்றாலும் இந்த பேச்சுக்கள் ஏற்படுத்திய கோவம் அவனை அங்கே கொண்டு நிறுத்தவே பிரியப்பட்டது.
“தன் மாமா அத்தையின் மேல் கொள்ளை அன்பு வைத்திருக்கிறானென ஆறுதல் கொண்டிருந்தோமே?…” வைத்தியநாதனையும் காமாட்சியையும் நினைத்து மனதிற்குள் அழுது தீர்த்தாள். ஆனால் முகம் இறுகி கணவனையே வெறித்துப்பார்த்தாள்.
அவனோ இவளின் ஆறுதலான மிச்ச உணர்வுகளையும் கொன்றுகுவிப்பதை அறியாமல் பாலகிருஷ்ணனின் முகம் பார்த்து நிற்க,
“நானும் நினைச்சிருப்பேன்ப்பா நீ மட்டும் மத்த பசங்களை போல இருந்திருந்தா. ஆனா இந்த வீட்டை கட்டி இத்தனை வருஷத்துல ஒரு முறை கூட எங்களை நீ வீட்டுக்கு அழைச்சதில்லை. எங்களோட போன்ல சரியா பேசினதில்லை. எங்களை வேண்டாம்னு அறவே ஒதுக்கின மகன் நீ. நீ என்ன நினைக்கிறன்னு இப்போ நாங்க எப்படிப்பா புரிஞ்சுக்க?…”
மலருக்கே இது ஆச்சர்யமான விஷயம் தான். ஆனாலும் கேட்டுக்கொண்டாளே தவிர மூளைக்கு செலுத்தவில்லை.
ஆண்டாளுக்கோ இப்படி உடைந்துபோய் பேசும் கணவனை எப்படி தேற்றுவது என்பது புரியாமல் தவித்து நின்றார்.
“உனக்குன்னு பாசமும், அன்பும் காமிக்க புதுசா அப்பாம்மா கிடைச்சுட்டாங்க. ஆனா உன்னை பெத்தவாங்க நாங்க இன்னொரு மகனை தேடமுடியுமா? எங்களை தள்ளி நிறுத்தின உன்கிட்ட நாங்க எப்படி உடனே உரிமை எடுத்துப்போம்னு நினைக்கிற?…”
“போதும்ப்பா. ப்ளீஸ். விடுங்க. இனியாவது எல்லாமே நல்லபடியா நடக்கனும். இப்போ போய் சாப்பிடுங்கப்பா. அம்மா நீங்களும் தான்…” என்று சொல்ல இருவரும் உணவறைக்கு சென்றனர்.
அவர்கள் சென்றதும் சோபாவில் அமர்ந்தவன் மலரையும் பிடித்து அமரவைத்தான். அவன் இழுத்ததில் அவன் மேல் விழப்போனவள் சுதாரித்து உட்கார்ந்தாலும் அவனை உரசித்தான் அமரவேண்டியதாகி இருந்தது.
அதில் கோபம் கொண்டு அவனை எரிப்பதை போல பார்த்தாள். இதெல்லாம் தன்னை என்ன செய்துவிடும் என்பதை போல அலட்சியமாக பார்த்தவன்,
“இன்னும் எதுக்கு உன் முகத்தை உர்ருன்னு வச்சிருக்க? பார்க்க முடியலை…”
“உன்னை பார்க்க சொல்லி இங்க யாரும் தவமிருக்கலை…”
“ஆனா நான் தவமிருந்தேன் ரோஸ்ஃபட். எத்தனை வருஷ தவம்?…” அவளையே ஆழ்ந்து பார்த்தபடி காதலாய் கூறியவனின் விழிகள் அவளின் முகத்தை மொய்த்தது.
அவனின் பார்வையில் கடுப்பானவள்,
“இதை சொல்லத்தான் இழுத்தீங்களா?…”
“நீ வேற எதுக்குன்னு நினைச்ச?…” சீண்டலாய் சிறுபுன்னகையோடு அவன் புருவம் உயர்த்தி கேட்க,
“ஒரு மண்ணும் நினைக்கலை. நான் போறேன். என் கையை விடுங்க…”
இத்தனை பேச்சிலும் அனய் அவளின் கையை விடவே இல்லை. பிடித்திருந்த அவளின் கையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கூட்டினான். அதில் மலரின் ரத்த அழுத்தம் தான் கூடியது.
அவனின் கரங்களுக்குள் பொதிந்திருந்த தன்னுடைய கையை உருவிக்கொள்ள முயல அவளின் முயற்சியை அவன் கண்டுகொண்டதாகவே இல்லை.
சிறுது நேரம் அவளை அதிகபட்ச கோபத்திற்கு ஆளாக்கிவிட்டு அதன்பின்பே அவளின் கையை விட்டான். வேகமாக அவனை விட்டு எழுந்தவள் கடந்துசெல்ல முயல மீண்டுமாய் அவளை இழுத்து அமர்த்த,
“இப்ப உனக்கு என்னதான் வேணும்?…” பொறுமை பறக்க அவனிடம் காய்ந்தாள்.
“கேட்ட உடனே குடுத்திடற மாதிரி பேசற? குடுத்திடுவியோ?…” அவள் முகத்தை தனக்கு நெருக்கமாக்கிக்கொண்டே கேட்க அதில் திடுக்கிட்டுத்தான் போனாள்.
வேகமாய் தன்னருகில் இருந்து அவனை தள்ளிவிட்டவள் மூச்சு தாறுமாறாய் எகிற,
“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?…”
“தெரிஞ்சிட்டே கேட்காதே மலர். ஆமா, இதுல உனக்கென்ன சந்தேகம்?…” என்றவன் தலையை அழுந்த கோதிக்கொண்டு,
“காட், மலர் நான் ஒண்ணு பேச வரேன். நீ என்னை பேசவிடாம டைவர்ட் பன்ற. கொஞ்சம் அமைதியா நான் சொல்ல வரதை கேளு…”
“சொல்” என்பது போல நிமிர்ந்து அமர்ந்தாள். ஆனாலும் முகத்தில் பரவிய கோபச்சூடு தணியவே இல்லை.
“இன்னும் ஒருமணி நேரத்தில் ப்ரெஸ் மீட் இருக்கு மலர். உன்னையும் வரு பேபியையும் இந்த உலகத்துக்கு நான் தெரியப்படுத்தனும். அதை சொல்லத்தான் நான் உன்னை நிறுத்தினேன். சாப்பிட்டு கிளம்புவோம்…”
அவன் சொல்லிமுடிக்கும்பொழுதே படபடவென பொரிய ஆரம்பித்திருந்தாள் மலர்.
“எல்லாம் உன் இஷ்டம் இல்ல. நான் என்ன பொம்மையா? நீ கீ குடுத்ததும் நான் நடக்கவும், ஓடவும்? காலையில மாமா என்னன்னா உயிரை விட்டுடுவோம்னு மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறாங்க…” என்றவளை அதிர்ந்து பார்த்தான் அனய்.
அவன் எதிர்பார்த்திருந்தான் தான். ஏதேனும் சொல்லியோ இல்லை கெஞ்சியோ தான் மலரை இத்திருமணத்திற்கு தயார் செய்திருப்பார்கள் என்று. ஆனால் இப்படி மிரட்டி பணியவைத்திருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை.
“நீ என்னன்னா என்னை உன் பொண்டாட்டின்னு ஊருக்கு காமிக்க என்னை ஜடம் மாதிரி வந்து நிக்க சொல்ற?. என்னை ஏன் யாரும் புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க? எனக்குன்னு ஒரு மனசு இருக்கு. என் மாமாவோட …”
“ஸ்டாப் இட் மலர்…”
அதற்கு மேல் அவளை பேச அனுமதிக்கவில்லை அனய். வேகமாக எழுந்து நின்றவன்,
“அவனை பத்தி இன்னொரு வார்த்தை உன் வாய்ல இருந்து வந்துச்சு நானா மனுஷனா இருக்கமாட்டேன்…” விரல் நீட்டி எச்சரித்தவன் அவளையும் இழுத்துக்கொண்டு சாப்பிட சென்றான்.
மலருக்கோ உடல் பயங்கரமாக நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் இதற்கு முன்பும் கோபம் கொண்டிருக்கிறான் தான். ஆனால் இப்படி ஒரு வெறித்தனமான கோபம், உட்சபட்ச கோபம் அவனிடத்தில் அவளே எதிர்பார்க்காதது.
உண்மையிலேயே பயந்துதான் போனாள். அவளின் உடல் நடுக்கம் அனய்க்கு உணரத்தான் செய்தான். ஆனாலும் அவளை அணைத்து ஆறுதல் சொல்ல முயலவில்லை. அந்தளவிற்கு கோபத்தில் கொதித்துக்கொண்டிருந்தான்.
வேகமாக டைனிங் ஹாலுக்கு நுழைந்தவன் மலரை தன்னருகே அமர்த்தி தானும் அமர்ந்துகொண்டான். அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து பரிமாரியவன் தனக்கும் வைத்துக்கொண்டு,
“ம்ம் சாப்பிடு…” என அழுத்தமாய் கூற மலர் மறுக்காமல் உன்ன ஆரம்பித்தாள்.
அதன் பின்னே அனய்யும் சாப்பிட தொடங்கினான். இருவரின் முகபாவமும் அங்கிருந்தவர்களை கவலைக்குள்ளாக்கியது.
அதிலும் மலரின் கலங்கிய விழிகள் நேத்ராவை வருந்த செய்தது. எந்த சூழ்நிலையிலும் அழுது பார்த்திராத மலர் தன் அண்ணன் அவள் வாழ்க்கையில் நுழைந்த பிறகு அழுகையோடு மட்டுமே பார்க்கவேண்டியதாகிற்றே என எண்ணி மனதில் பெரிதும் குமைந்தாள்.
சாப்பிட்டு முடித்து நிமிர்ந்த அனய் தங்கையின் முகத்தை வைத்தே புரிந்துகொண்டவன் தான் பார்த்துக்கொள்வதாக அமைதிப்படுத்த அது நேத்ராவை இன்னும் கோபத்திற்குள்ளாக்கியது.
“யாருக்கு வேணும் இவன் சமாதானம்? பெருசா வந்துட்டான்…” என முறைத்துக்கொண்டே குழந்தையை தூக்கிச்சென்றாள்.
அவளின் கோபம் பார்த்தவன் இதழ்களில் சிறு மென்னகை பூக்க சற்றுமுன் கனத்திருந்த இதயம் கொஞ்சம் லேசானதை போலானது.
மற்றவர்கள் சாப்பிட்டு சென்றிருக்க மலர் மட்டும் மெதுவாக கொரித்துக்கொண்டிருந்தாள்.
“என்ன மேடம்க்கு ஊட்டிவிடனுமோ?…” என்று அவளின் தோளை இடித்து கேட்க அவனிடமிருந்து சேரை நகர்த்திக்கொண்ட மலர் முறைப்போடு தட்டிலிருந்ததை வேகமாய் காலிசெய்து எழுந்து சென்றாள்.
“அது…” என்பதை போல பார்த்துவிட்டு அவளின் பின்னால் சென்று கை கழுவிவிட்டு வர ஹாலில் மலர் அமர்ந்திருக்க ஆண்டாளின் அருகில் வருணி விளையாடிக்கொண்டிருந்தாள்.
அவள் ஆண்டாளின் கையை பிடிக்க, அவரின் வளையலை பார்க்க, புடவையை பிடித்து இழுக்க, பாலகிருஷ்ணனின் வாட்சை பார்க்க என அவர்களருகிலேயே வளைய வந்துகொண்டிருந்தாள் குழந்தை.
சிறு குழந்தையை தவிர்க்கவும் முடியாமல் கொஞ்சவும் முடியாமல் பெரும் அவஸ்தையாய் இருந்தது பெரியார்களுக்கு.
மலருக்கோ எங்கே தான் தூக்கிக்கொண்டால் அதற்கும் ஆண்டாள் கோபம் கொள்வாரோ, எதுவும் சுள்ளென பேசிவிடுவாரோ என அமைதியாக அமைதிருந்தாள்.
காமாட்சிக்கோ இக்குழந்தையை பார்த்தேனும் இவர்களின் கோபம் குறைந்து மனம் குளிராதா என ஏக்கமாக இருந்தது.
இதை கண்டும் காணாமல் நேத்ரா பார்க்க அனய்யும் கவனித்துக்கொண்டே தான வந்தான். அவன் வந்ததும்,
“ப்பா…” என வருணி தாவிக்கொள்ள அவளை வாரி அணைத்தவன்,
“மலர் வா மாடிக்கு போகலாம்…” அவனின் அழைப்பில் அவள் திடுக்கிட்டு திரும்ப,
“ப்ரெஸ் மீட் இருக்குன்னு சொன்னேன்ல. உனக்கும் பேபிக்கும் ட்ரெஸ் கட்டில்ல எடுத்துவச்சிருக்கேன். ரெண்டு பேரும் சேஞ்ச் பண்ணிட்டு வரலாம்…”
“எதுக்குப்பா இப்போ இந்த ப்ரெஸ் மீட்?…” ஆண்டாள் கேட்க பாலகிருஷ்ணன் தான்,
“ஆண்டாள் அவனை எதுக்கு தடுக்கிற? நாளும் பொழுதும் அவனை பத்தி வர வதந்திகள் உனக்கு தெரியாததா? அதுக்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? அவன் சரியாதான் செஞ்சிருக்கான்…”
“தேங்க்ஸ்ப்பா. ஆனா வதந்திக்கு பயந்து ஒன்னும் ப்ரெஸ் மீட் அரேஞ்ச் பண்ணலை. எனக்கொரு குடும்பம் இருக்குன்னு நானும் காட்டனுமில்லையா? என்னுடைய மனைவி, என்னுடைய குழந்தைன்னு இவங்களை நான் பெருமையா அறிமுகம் செய்யனும். அதுக்கு இன்னைக்குத்தான் எனக்கு வரம் கிடைச்சிருக்கு…”
மலர் அசையாமல் அமர்ந்திருக்க, “ஹேய் அமேஸான், வா வா முதல்ல ரெண்டு பேரும் தயாராகுங்க. கமான், காமன்…” என வருணியை வாங்கிக்கொண்டு மலரையும் தள்ளிக்கொண்டு சென்றாள் நேத்ரா.
பின்னோடு அனய்யும் மாடியேறி வர, “நீ எங்க வர? பேசாம கீழ இரு. முதல்ல நாங்க ரெடி ஆகிட்டு வரோம்…” என கழட்டிவிட்டவள் விழிகள் சொன்ன சமிஞ்சையை சரியாக படித்தவன்,
“ஓகே கேரிஆன்…” என மீண்டும் இறங்கி வந்தான்.
“ப்ரெஸ் மீட் எங்க வச்சு அனய்…” ஆண்டாள் கேட்க,
“கார்டன்ல தான்ம்மா. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க…”
“ஹ்ம்…” என்றதோடு நிறுத்திக்கொண்டார் ஆண்டாள்.
வைத்தியநாதன் அருகில் அமர்ந்தவன் சுமங்கலியிடம் பேச ஆரம்பித்தான். ஊரில் உள்ளவர்களை பற்றியெல்லாம் நலம் விசாரித்து என ஆரம்பிக்க அதில் அவ்வப்போது காமாட்சியையும் பேச்சில் இணைத்துக்கொண்டார் சுமங்கலி.
அவர்களின் ஊர், உறவுகள் என அனைத்தையும் தெரிந்துகொண்டார். அவர்களின் பேச்சுகள் இலகுவாக இருக்க அவர்களோடு இணையாமல் ஆண்டாளும் பாலகிருஷ்ணனும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
சிறிது நேரத்தில் மலரோடு மூவரும் கீழிறங்கி வர லேசான ஒப்பனையில் வனதேவதையென கீழிறங்கி வந்தாள் வனமலர்.
“இவளுக்கு சரியாத்தான் பேர் வச்சிருக்காங்க வனமலர்ன்னு. வனதேவதையாவே பொறந்திருக்கா…” மனதினுள் விசிலடித்துக்கொண்டவன் தன்னுடைய ரசனையை மலரிடம் காட்டிக்கொள்ளவே இல்லை.
மலர் அவனை பார்த்தபொழுது மிக சாதாரணமாக அவளை பார்ப்பது போல பார்த்தவன் மகளை மட்டும் தூக்கிக்கொண்டான்.
“ப்பா.. புத்து த்ரேஸ் அல்லா அல்லா…” என மழலையில் மிழிற்ற,
“ரொம்ப நல்ல இருக்குடா பேபி. அழகா இருக்கு. ரொம்ப ரொம்ப அழகா இருக்கு…” என சொல்லி சொல்லி முத்தமிட அவனின் ஒவ்வொரு முத்தத்திற்கும் வருணியும் பதில் முத்தம் தர தகப்பனாய் பூரித்துப்போனான் அனய்.
மலருக்கே கண்கள் கலங்கிப்போயின.
“என் பெண் இத்தனை ஏக்கங்களையும் இத்தனைநாட்கள் எங்கே ஒளித்துவைத்திருந்தாள்? இந்தளவிற்கா இவனுக்காக ஏங்கிபோயிருந்தாள்?…” நினைத்து நினைத்து மருகினாள்.
அவனை கொஞ்சிவிட்டு அவனைவிட்டு இறங்கிய வருணி ஒவ்வொருவரின் முன்னின்றும் தன்னுடைய உடையை கட்டி காட்டி காண்பித்து கிளுக்கி சிரிக்க அவளை அள்ளிக்கொள்ள ஆண்டாளுக்கே கைகள் பரபரத்துப்போனது.
“பாத்தீ அல்லா த்ரேஸ் அல்லா…” என உடையின் இரு நுனியையும் பிடித்து காண்பித்து அவர்முன் ஒரு சுற்று சுற்ற தன்னை கட்டுப்படுத்துவதே ஆண்டாளுக்கு பெரும் சிரமமாக இருந்தது.
“பாத்தீ…” என மீண்டும் வருணி அழுத்தி அழைக்க,
“நல்லா இருக்கு…” என்று வேறுவழியில்லாமல் வாயை திறந்து சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து நழுவினார்.
பாலகிருஷ்ணனுக்கு ஆண்டாளை போல எந்தவித தயக்கமும் இல்லை. அவர் வருணியை தன் பேத்தியாக வரவேற்கவும் இல்லை. அதே நேரம் அவளை வெறுக்கவும் இல்லை.
அவரை பொறுத்தவரை அவள் குழந்தை. அது யார் குழந்தை என்பது அவருக்கு பிரச்சனையே இல்லை. முன்பின் தெரியாதவர் குழந்தையாகவே இருந்தாலும் அழகாய் மனதை அள்ளும் அழகோடு இருக்கும் குழந்தைகளை ரசிப்போமே அப்படி ஒரு மனோபாவம் தான் அவருக்கு.
“த்தாத்தா த்ரேஸ் அல்லா…” என கேட்க,
“ரொம்ப அழகா இருக்குடா குட்டி…” என்று கன்னம் தடவ மலர் ஆச்சர்யமாக பார்த்தாள்.
“இவரால் இப்படியெல்லாம் என் மகளிடம் பாசம் காண்பிக்க முடியுமா?…” வியப்பாய் இருந்தது அவளுக்கு.
அனைவரும் அவர்களையே பார்த்து நிற்க அதேநேரம் அனய்யை நோக்கி வீராத்தாய் வந்து நின்றார்.
“தம்பி பத்திரிக்கைல இருந்து எல்லோரும் வர ஆரம்பிச்சாச்சு. வந்தவங்க உங்களுக்காக தோட்டத்துல இருக்காங்க…” என,
“இதோ வந்துட்டோம்னு சொல்லுங்க வீராம்மா. சேத்தன் இருப்பான். அவனை பார்த்துக்க சொல்லுங்க…” என்றபடி வேகமாக மாடியேறியவன் போன வேகத்தில் கிளம்பி வந்தான்.
நேர்த்தியான அவனது நடை உடை பாவனையில் பெற்றவர்கள் கொஞ்சம் அசந்துதான் போனார்கள்.
முன்பும் அவனின் உடுப்பில் தனி கவனம் இருக்கும் தான். ஆனால் அதையும் மீறிய ஒரு வசீகரம் இப்போது அவனுக்கு வந்துவிட்டதாக தோன்றியது ஆண்டாளுக்கும், பாலகிருஷ்ணனுக்கும்.
மகனை அருகிலிருந்து பார்த்து எத்தனை வருடங்களாகிற்று? இன்றைக்கு சுற்றிபோடனும் அவனுக்கு என மனதிற்குள் குறித்துகொண்டார் ஆண்டாள்.
“போலாமா?…” என மலரை பார்க்க அவளால் அங்கிருந்து நகரவே முடியவில்லை. கால்கள் அடுத்த அடி எடுத்துவைக்க தயங்க,
“மலர் கிளம்பும்மா. உங்களுக்காக அங்க எத்தனை பேர் காத்துக்கிட்டு இருக்காங்க. போய் பார்த்து பேசிட்டு வாங்க…” என வைத்தியநாதன் சொல்ல நிமிர்ந்து பார்த்தவள் அவரின் பார்வைக்கு பணிந்து அனய்யோடு சென்று நின்றாள்.
ஒரு கையால் வருணியை தூக்கிக்கொண்டவன் மலரை மறு கையால் அணைத்தபடி தோட்டத்திற்கு சென்றான்.
இவர்கள் அவர்களை நெருங்கும் முன்பே சில பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய கேமராவில் இவர்களை விழுங்கதொடங்கினார்கள்.
புன்னகை ஜீவிக்கும்…