“பிரதாபா! உறங்கு” என்ற நசீரின் குரலில் வாசலில் நின்ற பிரதாபன் மெல்ல திரும்பினான்.
“எந்தா நசீரேட்டா?” என்று பிரதாபன் கேட்க, நசீர் அவனை உறங்கச் சொல்ல
“அச்சச்சன் எவிட?” என்றான் பிரதாபன்.
“அவர் உறங்கி” என்று நசீர் சொல்லி நிற்க, பிரதாபன் அவரை போக சொன்னான். பிரதாபன் விழிகள் போன திசையில் பார்த்தார் நசீர். ‘தலவாடி’ தரவாட்டில் மாலை ஏதோ விஷேஷ பூஜை நடந்திருக்க, இன்னும் அங்கே அவர்கள் வீட்டினர் கூடி நின்றனர். பிரதாபனை சின்ன வயதிலிருந்தே தெரியும் என்பதால், அவன் மனம் இந்த நேரம் எப்படி உணரும் என புரிந்தவர் அவன் போக்கில் விட்டு, அந்த சிறிய மாடி வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் ஷெட்’டில் இருக்கும் கயிற்றுக் கட்டிலில் உறங்க போனார்.
பிரதாபனுக்கு அந்த வீட்டினை பார்க்க பார்க்க நினைவேக்கம் தாக்கியது. அவனுடைய வீடு அது, அவர்களின் ‘பூவம்பள்ளி தரவாடு’! இன்று தலவாடி வீட்டினர் உரிமை கொண்டாட மனது பொறுக்கவில்லை. பனி காற்று நிரம்பிய அந்த இராத்திரி பொழுதில் வெகு நேரம் அப்படியே நின்றவனை கலைத்தது தலவாடி ராஜகோபாலனின் குரல்.
“எந்தா பூவம்பள்ளி பிரதாபா? நீ உறங்கி இல்லே?” என்று கேட்க, அந்த குரலின் நக்கலும் அவர் பார்வையும் கண்டவனுக்கு பயங்கர கோபம். ஆனால் பல வருடமாய் பழக்கப்பட்டது போல் அடக்கிக்கொண்டவன், பதில் பேசாது கேட்டை சாற்றி வீட்டுக்குள் நுழைந்து கதவடைத்தான்.
சில நிமிடங்கள் தலவாடி ராஜகோபாலனின் வார்த்தையே காதில் கேட்டது, எப்போதும் அவர் சீண்டுவதுதான், சில மாதங்களாக இருவரும் பார்த்துக்கொள்ளவில்லை. அதனால் தன்னை பாதிக்கிறது என்று உணர்ந்தான். அவர் கிண்டலாய் எள்ளலாய் சொன்னாலும் அவன் ‘பூவம்பள்ளி பிரதாபவர்மா’ என்பதில் மாற்றே இல்லை, அது அவனின் மாண்பு!
எதை எதையோ நினைத்தவன் உறங்கி போக, காலை ஐந்துபோல் விழித்தான். குளித்து முடித்து வீட்டின் இன்னொரு பக்கத்தில் இருக்கும் களரிப்பயிற்றுவிக்கும் குடிலுக்குள் சென்றான், அவனுக்கு முன்பே அவனின் அச்சச்சன் ‘பூவம்பள்ளி பொன்னச்சன்’ வந்திருந்த மாணவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பத்திருக்க, அவர்கள் உடலை வளைத்தல், நீட்டுதல் போன்ற அடிப்படை உடற்பயிற்சிகளை செய்ய, பிரதாபனும் ஐந்தரை வரை அவர்களோடு பயிற்சியில் ஈடுப்பட்டான்.
பாரம்பரியமான களரி உடையான வெள்ளை வேஷ்டியும் இடுப்பில் சிவப்பும் சில வீரர்கள் அணிந்திருக்க, தென்கேரளத்தில் பழக்கத்தில் இருக்கும் ‘தெக்கன் களரி’ அங்கே பயிற்றுவிக்கப்பட்டது. மலபார் மற்றும் வடக்கு பகுதிகளில் ‘வடக்கன் களரி’ வழக்கத்திலிருக்க, தெக்கன் களரி பள்ளிகள் திறந்தவெளி அல்லது தரையில் கட்டப்பட்ட ஓலைக் கட்டமைப்புகளுக்குள் நடக்கும். ‘பூவம்பள்ளில் பொன்னச்சன்’ களரி பள்ளி ஓலை கட்டமைப்பிலானது.
பூவம்பள்ளில் பொன்னச்சன் அவரின் பத்து வயதிலிருந்து களரி கற்றவர், முப்பது வருடமாக ‘ஆசானாக’ இருக்கிறார், அவர் பெயரன் ‘பிரதாபனு’க்கும் அவர்தான் குரு. இப்போது களரிக்காக தேசிய அளவில் போட்டிகள் நடைபெற அதற்குரிய பயிற்சியெல்லாம் பிரதாபன் மாணவர்களுக்கு வழங்குவான், பெண்கள், ஆண்கள் என்று பாகுபாடற்ற தற்காப்பு கலை களரி.
பரசுராம முனிவர் தன் கோடரியை அரபிக்கடலில் எறிந்து, கடலை உள்ளிழுக்க சொல்லியதால் உருவான நிலப்பரப்பாக புராணங்களில் வழங்கப்படுகிறது ‘கேரளம்’. அந்த கேரளத்தின் மிக மிக தொன்மையான கலை களரி, களரி என்பது போர்க்களத்தைக் குறிக்கும். போர்க்களத்தில் பயிலுதல் என்பதே அதன் பொருள். பரசுராமர் சிவபெருமானிடமிருந்து கற்று உலகுக்குத் தந்த கலையாக ‘களரி பயிற்று’ பார்க்கப்படுகிறது.
களரிபயிற்று அடித்தல், உதைத்தல், கொழுவிப் பிடித்தல், தொடர்தாக்குதல் நகர்வுகள், ஆயுதங்கள் ஆகியவற்றையும், உடற்பிடித்தல் மூலிகைகள் போன்ற மருத்துவ நுணுக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான கலையாகும். வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்டகோடாலி போன்ற ஆயுதங்களை களரி விளையாட்டில் பயன்படுத்துவர். பொன்னச்சன் ஆறு மணி ஆனதும் சென்றுவிட, அவரை தொடர்ந்து பிரதாபன் வயதொத்தவர்களும் வேலைகளுக்கு சென்றனர். பிரதாபன் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தான்.
பிரதாபன் தன் பக்கம் நின்ற மாணவனுக்கு ‘மெய்பயட்டு அல்லது ‘உடற்பயிற்சி’ ‘ சொல்லிக்கொடுத்தான், இரு கால்களும் சமமான இடைவெளியில் தரையில் ஊன்றி, தலையை பின்பக்கமாக வளைத்து கைகளால் வணக்கம் வைக்கும் பயிற்சி. உடல் பயிற்சி களரியின் முதுகெலும்பு, பிரதாபன் மிகவும் லாகவமாய் உடலை வளைத்து வணக்கம் வைக்க, அவன் பார்வை இப்போது தரையைத் தொட்டாலும் தன்னை தொடரும் பார்வையைக் கண்டுகொண்டான். தாரிணி அவனை பார்த்தபடி நின்றவள் பயிற்சி செய்யவில்லை.
தாரிணி அருகே சென்றவன் அவளை கை பயட்டு செய்ய சொன்னான். கைகளை தரையில் அழுத்தி செய்யப்படும் பயிற்சி, அவன் சொல்லவும் தாரிணி உடனே செய்தாலும் அதில் கவனமில்லை, ஒரு நேர்த்தியில்லை. கோபத்தின் பிரதாபன் அவளிடம்
மெய் கணவனம் என்றால் உடலை ஒரு கண்ணாக ஆக்கு என்று அர்த்தமாகும்! களரியில் உடலும் மனமும் ஒரே கவனத்தில் இருக்க வேண்டும். மனம் சொல்வதை உடல் கேட்டு வளைய வேண்டும், களரியில் கவனம் மிக மிக முக்கியம்.
அந்த சிவப்பு மண்ணாலான களரி தரையில் தாரிணியின் கைகளை அழுத்தி ஊன்றியவன்
“மனசும் மூளையும் ஒரே கவனத்துல இருக்கணும்” என்று அழுத்தமாக சொல்ல அதுவரை அவனை பார்வையால் தொட்ட தாரிணி பேசினாள்.
“எனக்கு எப்பவும் ஒரே கவனம்தான்! மத்தவங்க மாதிரி எனக்கு ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு கவனம் இல்ல” என்று பிரதாபனை பார்க்க தாரிணியின் கைகளை விட்டவன் அவளுக்குப் பதில் சொல்லவில்லை.
தாரிணி அந்த தாமரகுளத்தில் இருக்கும் தமிழ்ப்பாவை! தாரிணியின் தந்தை மத்திய அரசாங்க பணியில் இருந்தபோது மாவேலிக்கரா தாலுக்காவில் குடியிருந்தனர், இப்போது அவர் வேலையை விட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கிறார், இருந்தும் தாரிணி பிறந்து வளர்ந்த ஊரை விட்டு போக மனமில்லாமல் மாவேலிக்கராவில் தங்கிவிட்டாள். காலை களரி பயிற்சிக்காக தாமரக்குளம் வருபவள் தன் இருசக்கர வாகனத்தில் மாவேலிக்கரா போய்விடுவாள்.
பிரதாபனிடம் பதிலில்லை என்றதும் சிறிது நேரம் பயிற்சி செய்தவள் போகும் முன் பிரதாபனை விழியால் நிரப்பி சென்றுவிட, பிரதாபவர்மனால் தாரிணியை எதிர்கொள்ள முடியவில்லை. ஏனோ அந்த தமிழ்ப்பாவை தரும் உணர்வுகளை கடப்பது அவனுக்கு மிகவும் கடினமாக இருக்க, அதில் சிந்தனை போக விடாது உள்ளே நுழைந்தாள், அவன் தங்கை மின்மினி குட்டி.
“ஏட்டா! போன்” என்று அவன் அலைப்பேசியை அவள் நீட்ட, அதனை வாங்கியவன் மின்மினியை போக சொல்ல அவளும் நிற்கவில்லை. அவள் சென்ற திசையைப் பார்த்து நின்றான் ஒரு இளைஞன். அது பிரதாபனின் பார்வையில் விழ, ஏற்கனவே தாரிணியால் கோபத்தில் இருந்தவன் இப்போது மின்மினி மீது கோபம் கொண்டான். இவளை யார் வந்து நிற்க சொன்னது என்று எண்ணம் ஓட, அதே கோபத்தில் தங்கையைப் பார்த்தவனை அருகே அழைத்தான்.
அவனை மெய்பயட்டு செய்ய சொல்ல, சட்டென்று அழைத்ததில் தடுமாறியிருந்த அந்த ஆடவன் தவறாக செய்ய, கைகளை நன்றாக பிடித்து வளைத்தான் பிரதாபன். அந்த ஆடவன் வலி தாங்காது கத்த
“ஷ்ரத்தை களரியில் இரிக்கணும்” (கவனம் களரியில் இருக்கணும்)” என்று அழுத்தி சொல்ல, அந்த ஆடவனுக்கும் பிரதாபனின் கூற்று புரிய
“சாரி சேட்டா!” என்றான். அவனை விட்ட பிரதாபன் மற்ற மாணவர்களை கவனிக்க, ஏழு மணி தொடும்போது எல்லாரும் வீடு சென்றனர். பிரதாபனும் வீட்டுக்குள் நுழைந்தவன்
“மினி!” என்று கத்தினான்.
“ஏட்டா” என்று மினி ஓடி வர
“அவிட வரருதுன்னு எத்தர தவண நினக்கு பறையணும்? (அங்க எல்லாரும் இருக்கப்ப வர கூடாதுனு உனக்கு எத்தன தடவ சொல்லணும்?) என்று அதட்டிட மின்மினி
“சாரியேட்டா” என்று மட்டுமே சொன்னாள். அவனுக்கு ஆலப்புழாவில் அவர்கள் போட் அவுஸ் பார்க்கும் ஆளிடமிருந்து அழைப்பு வந்ததால் எடுத்து சென்றாள். முக்கியமான அழைப்பினை எடுக்காவிட்டால் அதற்கும் பேசுவான்.
“போன் வந்தா கொடுக்க என்ன?” என்று அதற்கும் கத்துவான், பழகிபோய் விட்டதால் அமைதியாக நிற்க, பொன்னச்சன் காலை உணவை உண்டவர் பேத்தியைத் திட்டினார். அதற்கும் மின்மினி பதில் பேசவில்லை, பொன்னச்சனுக்கு பேரன் மட்டுமே வாரிசு, பேத்தி என்பவள் சுமையாகவே தெரிவாள். மின்மினி குட்டி கல்லூரிக்குக் கிளம்பி சென்றாள்.
மாலை அவள் வந்தபோது புதிதாய் ஒருவன் அவர்கள் வீட்டுக்கு விஜயம் செய்திருந்தான். அவன் வினயச்சந்திரன்!
ஏற்கனவே ஒரு வாரம் முன்பு இங்கு வந்தவன்தான். நசீரேட்டாவோடு ஷெட்டில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவன் குரல் கேட்டாலும், மின்மினி யாரையும் கண்டுகொள்ள மாட்டாள். ஆள் இருப்பதை உணர்ந்தவள் போல் காட்டாது அவள் அறைக்கு சென்று உடைமாற்றியவள், இரவு சமையலுக்கு ஆயத்தம் செய்தாள். வீட்டு வேலைகளுக்கு உதவிக்கு ஆள் இருந்தாலும் சமையல் அவள் செய்ய வேண்டும், அது பொன்னச்சனின் ஆணை!
சமையல் கட்டிலிருந்தாலும் வினயச்சந்திரன் உரத்த குரல் காதில் கேட்டது. வினயச்சந்திரன் இடுக்கியிலிருக்கும் தேவிகுளத்துக்காரன், இங்கு வேலை தேடி வந்திருந்தான். மலைப்பிரதேசத்தில் வளர்ந்தவனுக்கு ஆலப்புழாவின் இயல்பான வானிலை கூட வெப்பமாக இருந்தது.
நசீரிடம் “சேட்டா! ஈ நாட்டில் சூடு சஹிக்கான் பற்றுனில்லா”(இந்த ஊர்ல வெப்பம் தாங்க முடியல) என்றான் சட்டையின் மேல் பொத்தானை கழட்டிவிட்டு.
“ஹாஹா, இடுக்கிக்காரனுக்கு தாமரக்குளம் சூடா தெரியுதா?” என்று சிரித்தார் நசீர். நசீர் அந்த வீட்டில் உதவிக்கு இருப்பவர்.
“பிரதாபன் சேட்டா எங்க?” என்று கேட்க
“இதோ வந்தாச்சு” என்றார். அவனோடு பொன்னச்சனும் வர அவருக்குப் பேரன் ஒரு தமிழனை வேலைக்கு வைத்தது பிடிக்கவில்லை. மதிக்காமல் சென்றுவிட, பிரதாபன் ஒருவாரமாக வினயச்சந்திரனை பார்த்து, அவதானித்து இப்போது வீட்டை பார்க்கும் பொறுப்பைக் கொடுக்க மனதில் நினைத்தான். அவனுக்கு ஆலப்புழாவில் இருக்கும் ‘கைனகரி’ கிராமத்தில் விவசாய நிலங்கள் உண்டு, கூடவே ஒரு பெரிய ஹவுஸ் போட், ஷிகாரா மற்றும் சில சிறிய படகுகள் உண்டு. எல்லாம் அவனே பார்க்க வேண்டும்., கூடவே காலையில் களரிபயிற்சி, அது மட்டுமின்றி கேரளத்தின் முக்கிய கட்சியின் உறுப்பினராக இருக்கிறான், அது சார்ந்து அவனுக்கு சில வேலைகள் வரும் காலங்களில் இருக்க, வேலைக்கு ஆள் வைக்கலாம் என்று யோசித்தபோது எதிர்ப்பாரா ஒரு நிலையில் வந்து சேர்ந்தவன் வினயச்சந்திரன்.
ஒரு வாரமாக கைனகரியிலும் ஆலப்புழாவிலும் பிரதாபனுடனே இருந்தவனின் குணம் பிடித்ததால் மட்டுமே இப்போது பூவம்பள்ளிக்குள் அவனால் விஜயம் செய்ய முடிந்தது. வினயச்சந்திரனை பார்க்கவும் பிரதாபன் தலையசைத்து உள்ளே போனான். முகம் கழுவி உடை மாற்றி வந்தவன் வினயனிடம் ஆயிரம் ரூபாயை நீட்ட,
“எதுக்கு சேட்டா?” என்று கேட்டான்.
“உனக்குத்தான் வினயா, வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரமாகுது. மாச சம்பளம் அடுத்த மாசம் போடலாம், அதுக்குள்ள உனக்கு செலவுக்கு வேணுமில்ல” என்று கேட்க
“எனக்கெதுக்கு?” என்று அப்போதும் அவன் இயல்பாக சொல்ல, நசீர் உடனே
“வேலைக்கு சேர்ந்து காசு சம்பாரிக்கணும் சொல்லிட்டு வாங்காம இருக்க டா?” என்று வினயச்சந்திரனை கேட்க, அப்போதுதான் வினயனுக்குப் பொறித்தட்டியது.
“நன்னி சேட்டா” என்று நன்றி சொல்லி வாங்கியவனிடம்
“பத்திரமா செலவு பண்ணு, உன் அச்சன், ஏட்டன் கிட்ட எல்லாம் காசு கொடுக்காத! நீ பொறுப்பா இருந்துக்கோ, இன்னிக்கு நசீரேட்டா கூட தங்கிக்க” என்று சொல்லிய பிரதாபன் புல்லட் எடுத்து வெளியே சென்றுவிட
“இவருக்கு எங்கச்சனை, ஏட்டனை எப்படி தெரியும்?” என்று வினயன் மெல்ல முணுமுணுக்க, “நீதானே சொன்ன? எல்லாத்தையும் மறந்துட்ட” என்ற நசீரும் மின்மினி அழைக்கவும் உள்ளே சென்றார்.
உண்மை என்றால் தானாக வரும், வினயச்சந்திரனோ இங்கு விஜயம் செய்ய வேண்டி பொய்களாய் சொல்லியிருக்க என்ன சொன்னோம் என்று யோசித்தான்.
“குடிகார அப்பா, உதவாக்கர அண்ணன், வில்லி அண்ணி” என்று அவன் சொன்னது நினைவில் வர, “அச்சோடா! இது மட்டும் ஜெயேட்டனுக்குத் தெரிஞ்சா என்னை கொளுக்கு மலையிலயிருந்து தள்ளி விட்டுடுவானே” என்று மனதுக்குள் புலம்பியவன் பார்வை களரி பள்ளியைத் தொட்டது.
“அவனாச்சும் கூட பொறந்தேனு விடுவான், இந்த பூவம்பள்ளில் பிரதாபன் என்னை களரில வச்சு காலி பண்ணிடுவானே, குருவாயூரப்பா என்னை ரக்ஷிக்கணும்” என்று வேண்டுதல் வைத்தவனுக்கு களரி பள்ளியில் கண்ட வாள், கதாயுதம், கட்டாரா எல்லாம் நினைவில் வர பயம் எழுந்தது. அசையாது நின்றவன் நசீரின் குரலில் நிமிர்ந்தான்.