மின்மினியின் பேச்சில் சோம்பல் முறித்தெழுந்தான் வினயச்சந்திரன். அவன் எழுந்து உட்கார்ந்து,
“பால் கறந்துட்டு எழுப்பு” என்றான்.
மின்மினி அவள் இடப்பக்கத்தில் கண்காட்டினாள். பால்வாளி அங்கிருந்தது.
“லேட்டாச்சா?” என்று வினயன் பார்க்க
“அதானு ஞான் பரயுன்னது(அதானே நான் சொல்றேன்)” என்று மின்மினி முறைத்தாள்.
வினயன் “டூ மினிட்ஸ்” என்று சொல்லி பாத்ரூம் சென்று வந்தான். அதன்பின் பூவம்பள்ளில் வீட்டில் அன்றைய நாள் தொடங்கியது, வினயன் பால் கொடுத்து வந்ததும் மின்மினி அவனுக்கு சூடாகக் காபி நீட்டினாள்.
“நேத்து என் கதையெல்லாம் சொல்லியும் என்னை வேலை வாங்குறியே, நியாயமா?” என்றான் வினயன்.
“பின்னே எந்தினா ஜோலிக்கு வரணும்?”( பின்ன எதுக்கு வேலைக்கு வரணும்?) என்ற மின்மினியின் கேள்வியில்
“சேட்டா எதுக்கு வந்தன்னு கேட்டதும் ஒரு அவசரத்துல பொய் சொல்லிட்டேன், சரி வேலைக்கு வந்தா பக்கத்துல இருந்து கவனிக்கலாம், நேத்து வரைக்கும்தான் இந்த வினயன் பூவம்பள்ளில் வீட்டில் வேலைக்காரன்..”
“ஒஹ்,இன்னலே ஜோலிக்காரன், அப்போல் இன்னு?
(நேத்திக்கு வேலைக்காரன், அப்போ இன்னிக்கு)
“ஆஹ்ன், உன் தாரிணி சேச்சியோட ப்ரண்ட்மா நான்” என்றான்.
“அதினு வேண்டி?” (அதுக்கு?) என்று மின்மினி கேட்க, வினயன்
பாவமாகப் பார்த்தான்.
அதில் மின்மினிக்குச் சிரிப்பு வர, “சாரி, இவிட ஆருமில்லை.” என்று மின்மினி மன்னிப்புக் கேட்கவும்
“ஹே! மின்மினி சாரியெல்லாம் எதுக்கு? விடு, நேத்து லேட்டா தூங்கினதால எனக்கு எந்திரிக்க முடியல, ஆனா பரவாயில்லை நீ சீக்கிரம் எந்திரிச்சிட்ட. சரி உண்மையை சொன்னா ஸ்பெஷல் கவனிப்பு கிடைக்கும் நினைச்சேன், மிஸ் ஆகிடுச்சு” என்றான் வினயனும் விளையாட்டாக.
“ஏட்டனுக்குக் கள்ளம் இஷ்டமில்லா, கள்ளம் பரஞ்சது அறிஞ்சால் ஏட்டன் எந்து செய்யும் எனிக்கறியில்லா”(அண்ணனுக்குப் பொய் பிடிக்காது, பொய் சொன்னது தெரிஞ்சா என்ன செய்வார் எனக்குத் தெரியாது) என்று மின்மினி கவலையாக சொல்ல
“அடடே! அதெல்லாம் ஒன்னும் சொல்லமாட்டார், நான் சாரி சேட்டான்னு கையைப் பிடிச்சிடுவேன், இல்லைனாலும் தாரிணி பார்த்துப்பா. தாரிணியும் சேட்டாவும் பேசி ஓகே ஆகிடுச்சுன்னா நான் தேவிகுளத்துக்கு ஓடிடுவேன். அப்புறம் உன் சேட்டாவோட கல்யாணத்துக்குத்தான் நான் இங்க வருவேன்.”
“பரஞ்சது போலே நடன்னால் நன்னாயிருக்கும்” என்று மின்மினி சொல்ல
“பரஞ்சது போலே நடக்கும் மின்மினி, கவலைப்படாத மோளே” என்றபடி காபி டம்ளரை நீட்டி,
“எனிக்கு ஜோலியுண்டு, நான் வரட்டா” என்றபடி களரிப்பள்ளியில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட போனான். பொன்னச்சன் மாணவர்களுக்கு வழக்கம்போல் பயிற்சியளிக்க, வழக்கமான ஒரு நாளாக அது தொடங்கியது.
மதிய உணவுக்கு முன் பொன்னச்சன் அவர் அறையில் ஓய்வெடுக்க, மின்மினிக்கு இரண்டு நாட்களில் பிரியாவிடை நாளிருக்க, அவளுக்கு இன்று விடுமுறை. மதிய சமையலில் ஈடுபட்டிருந்தாள் மின்மினி.
வினயனுக்கு நசீர் இல்லாது பொழுதுபோகவில்லை. அப்படியே வீட்டை சுற்றிக்கொண்டிருந்தான், பின்கட்டில் உள்ள அம்மியில் மின்மினி மசாலா அரைப்பதைப் பார்த்தவன் பார்வை அவளில் நிலைத்தது.
வினயனின் கண்களுக்கு முன், அவன் செவிகள் நிறைந்தன. அவன் விரும்பும், பழக்கப்பட்ட ஒலி அது! அம்மியரைத்த மின்மினியின் வலைக்கரங்கள் எழுப்பிய அந்த ராகம் வினயனை இழுத்தது. வினயனின் அம்மா சுஜாதா, எப்போதும் கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருப்பார். அம்மியில் அரைக்கும்போது வளையல்கள் சத்தம் எழுப்பும், அவரின் கொலுசொலி வீட்டை நிறைக்கும், அம்மாவின் மறைவுக்குப் பின் அவர்கள் வாழ்க்கையைப் போல், வீடும் நிசப்தமானது.
வினயனின் அண்ணன் ஜெய்ச்சந்திரனின் திருமணத்திற்குப் பின், ஊர்மிளா அந்த வீட்டுக்கு வந்தாள். அவளின் வருகை அவர்களின் வீட்டுக்கும் வாழ்வுக்கும் புது வசந்தமாக இருந்தது. ஆனாலும் ஊர்மி அம்மியெல்லாம் பயன்படுத்தியதில்லை, அவளின் கொலுசொலியும் மிக மெல்லியதாக இருக்கும், அதற்காகவே அண்ணன் மகளுக்கு நிறைய முத்துகளுள்ள கொலுசை வாங்கித் தந்திருந்தான் வினயன். ஆனாலும் குழந்தையின் ஓட்டத்திற்கு கொலுசு தாங்கவில்லை, கீறிவிடும். கூடவே பாதுகாப்பு கருதி, ஊர்மிளா மகளுக்கு நகைகள் அணிவிக்க மாட்டாள்.
பல வருடங்கள் கழித்து அவனுக்குப் பிடித்த சத்தம் கேட்க, கவனம் மின்மினியிடம் திரும்பியது.
“என்ன மின்மினி? என்ன சமையல்?” என்ற வினயனின் குரலில் ஒரு நொடி அதிர்ந்து முன்னே பார்த்தாள்.
“பீச்சிங்கா செம்மீன் கறி” (shrimp and ridge gourd curry)
மின்மினியின் ‘ம்ம்’முடன் ராகமிசைத்தது அவளின் இரண்டு ஜோடி தங்க வளையல்கள். அம்மிகுளவியை முன் பின் அசைக்க, வளையல்களும் உரசி எழுப்பிய ஓசை செவியை நிறைக்க, மசாலா வாசம் நாசியை நிறைத்தது.
நமக்குப் பிடித்தவர்களையும், அவர்களின் பிடித்தத்தையும் பிறரிடம் தேடும் சுழற்சியே மனிதரின் வழக்கம். அவர்களின் சாயலை, அவர்கள் கொடுத்த பிரியத்தை, அவர்களின் பழக்கத்தை பிறரிடம் தேடுகிறோம், அது கிட்டிவிட்டால் அவர்களும் நமக்குப் பிடித்தவர்களாகிப் போகிறார்கள். மனிதர்கள் புது மனிதர்களிடமும் பழைய பழகிய உணர்வையே தேடுகிறார்கள். பழகிய உணர்வில் ஒரு பாதுகாப்பிருக்கிறது, அப்படி தேடி கிடைக்கும் அவ்வன்பில் ஒரு ஆசுவாசமிருக்கிறது.
அப்படித்தான் மின்மினியின் பழக்கங்களில் அவன் அம்மாவைத் தேடினான் வினயன்.
“எங்கம்மா கூட அம்மிலதான் மசாலா அரைப்பாங்க மின்மினி” என்று வினயன் வெயிலை வெறித்து சொல்ல
“அச்சம்மா கூட இப்படி செய்வாங்க” என்றாள் மின்மினி.
“ஆனா அவங்களாம் வயசானவங்க, நீ இன்னும் அதையே பாலோ பண்ற?” ஆச்சரியம் விழிகளில் நிறைய கேட்டான் வினயன்.
“அச்சம்மா பரஞ்சது போல செய்தால், அவர் கூட இருக்க போல ஒரு பீல் உண்டு. அவருடே ஷீலங்கள்(பழக்கங்கள்) ஞான் ஷீலிச்சு. நமக்கு இஷ்டபட்டவரை எங்கனே ஒழிவாக்கும்?”(அவங்க பழக்கங்கள் எனக்கும் பழகிடுச்சு, நமக்குப் பிடிச்சவங்களை நமக்குள்ள எப்படி வச்சுக்குறது?)
“ஞான் எந்து செய்தாலும், எனக்கு எண்டே அச்சம்மா கூட இருந்து பரயுன்னது போல இருக்கும்”
“அக்சுவலி நானும் இதை பீல் பண்ணியிருக்கேன், நமக்கு ரொம்ப பழக்கப்பட்டவங்க எதாவது வார்த்தையா சொல்லியிருந்தா கூட, நமக்கு அதை படிக்கும்போது அது அவங்க குரல்ல கேட்கும். எங்கப்பா, அண்ணா எல்லாம் மெசெஜ் போட்டா, நான் படிக்கும்போது அவங்க குரல்லதான் கேட்கும்.” வினயன் சிரித்து சொன்னான்.
மின்மினி சொன்னது எல்லாம் இயல்பாக இருந்தாலும், வினயனை அது மென்மையாய்த் தொட்டது. நமக்குப் பிடித்தமானவர்களை நமக்குள் வேறெப்படி நிறைத்துக்கொள்ள முடியும்? நமது வாழ்க்கையில் வழக்கங்களாக, வார்த்தைகளாக, பழக்கங்களாக மட்டுமே நம்மை பிரிந்தவர்களை நினைத்து நினைவு கூற முடியும்.
ஊர்மிளாவின் கைப்பக்குவம் அவள் ஆச்சியைப் போல், அவள் அம்மா ஜமுனாவைப் போல இருக்கும். நாளை அவள் மகளுக்கும் அது வரும், சமையல் என்றில்லை ஒவ்வொரு வழக்கத்திலும், ஏன் பேசுகின்ற வார்த்தையிலும் கூட நம்மவர்களை, நமக்குப் பின்வருபவர்களுக்கு நாம் வெகு இயல்பாகக் கடத்திக்கொண்டிருக்கிறோம்.
“நான் எதாவது ஹெல்ப் செய்யவா?” என்று வினயன் கேட்க, அதிர்ச்சியாகப் பார்த்தாள்.
“எந்தானு, தமாஷோ?” என்று முறைக்க
“எண்ட பகவதியம்மே! எது சொன்னாலும் கள்ளம், தமாஷா? உனக்குத் தெரியாதுல, எங்க வீட்ல காலையில நாந்தான் காபி போடுவேன் தெரியுமா, நான் சமைப்பேன் மின்மினி” என்றான் வினயன்.
மின்மினியின் விழிகளில் ஆச்சரிய பாவனை.
“ஓஹ்! ஷரி” என்றபடி அடுப்படிக்குள் நுழைய சென்ற மின்மினி, கதவைப் பிடித்து தலை சாய்த்து,
“மினின்னே விளிக்கு” என்று மின்மினி சொல்ல
“உன்கிட்ட முன்னாடியே சொன்னேன்ல, மின்மினின்னு அழகான பெயரை ஏன் மினியாக்கணும்? நான் மின்மினின்னு தான் சொல்லுவேன். மின்மினி” என்றான் மீண்டும்.
“நிங்கள் இஷ்டம்” என்று மின்மினியும் சொல்லி சமையலை கவனித்தாள்.
மதியம் பொன்னச்சனுக்குப் பரிமாறிவிட்டு அவர் உண்ட பின், வினயனை அழைத்து உணவு பரிமாறினாள் மின்மினி.
“நீ சாப்பிட்டியா?” என்று வினயன் கேட்க,
“நிங்களுக்குப் பின்னே..” என்று மின்மினி சொல்ல
“சமைக்கிற நீ முதல்ல சாப்பிட மாட்டேங்கிற, பாரு டயர்டா இருக்க. பசிச்சா சாப்பிடணும்.” என்று அக்கறையாக சொன்னான்.
“நசீரேட்டா இருந்தா எனக்கு கம்பெனி இருந்திருக்கும், நீ என்கூட சாப்பிடேன்”
“அய்யோடா! அச்சச்சன் கண்டால் ஷகாரிக்குன்னு”
“சாப்பிடுறதுக்குத் திட்டுவாரா?”
“நிங்களோடு சாப்பிட்டா திட்டுவார்”
“உன் சாப்பாடு மாதிரி கொஞ்சம் சுவையாய்த் தமிழ் பேசலாம், என்ன பண்றது இங்க தமிழ் பஞ்சமாத்தான் இருக்கு..” வினயன் சலிப்பாக சொல்ல
“எனிக்கு தமிழ் அறியாம்”
“எங்கனே?” (எப்படி)
“சினிமா கண்டு”
“ஓஹ், சரி என்ன சமைச்சிருக்க?” என்றபடி அவன் இலையைப் பார்த்தவன் விழிகள் இன்னும் விரிந்தன.
“சுட சுட சோறு, அடடே இதென்ன?”
“பைனாப்பிள் அச்சார்”
“ரொம்ப மாசமாச்சு இதெல்லாம் சாப்பிட்டு, எங்க வீட்ல இப்போ எல்லாம் காஞ்சிபுரம் இட்லி, தஞ்சாவூர் சாம்பார்னு தான் ஓடுது..” என்று சிரித்தான் வினயன்.
“நேந்திரம் பழம் விட்டு காய்ச்சிய மோறு, பப்படம். செம்மீன் கறி.. “ அதில் வந்த தேங்காய் வாசமும், அதன் மஞ்சள் நிறமும் கண்ணையும் மனதையும் நிறைத்தது.
“அச்சச்சன் வயசானவர், நம்ம ரெண்டு பேர்தானே? நீ சிம்பிளா எதாவது செஞ்சிருக்கலாமில்ல?”
“சிம்பிளா செஞ்சிருந்தா நீங்க இப்படி சந்தோஷமா சாப்பிட மாட்டீங்களே?”
“அடடே!”
“எத்தனை பேர் இருந்தாலும் ஒரே மாதிரி அவங்க நல்லா சாப்பிடு மாதிரி சமைக்கணும்னு எங்கச்சம்மா சொல்வாங்க” என்று கொஞ்சும் சேர வாசத்தோடு பைந்தமிழ் பேசினாள் மின்மினி.
அவள் வார்த்தையோடு அந்த வாசமும் வினயனை ரசிக்க வைத்தன.
“லஞ்ச் பிடிச்சோ?”
“ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு”
வினயச்சந்திரனின் பூரண பாராட்டில் மின்மினியின் முகம் பளிச்சென்றது. அச்சச்சன், நசீர், பிரதாபன் என்று அந்த வீட்டில் ஆண்களிருந்தாலும், மின்மினிக்குத் தனிமை அதிகம். பிரதாபன் தனியாளாக அவர்களின் வீட்டை, மின்மினியின் படிப்பை, நிலங்களை, கட்டுவள்ளங்களைப் பார்க்க வேண்டும். கூடவே அவனது கட்சி பிரவேசம் வேறு.
அண்ணனின் வேலை புரிந்த தங்கை, அவனுக்கு வீட்டிலமர்ந்து தங்கையோடு கதை பேச நேரமிருக்காது, அதே நேரம் தங்கையின் நலனை எப்போதும் முன்னிறுத்தியே அவன் செயல்கள் உண்டு, இன்று கூட மதிய உணவுக்கு முன் அழைத்து மின்மினியை விசாரித்தான். அவள் கேட்டு எதையுமில்லையென்று சொன்னதில்லை. இருந்தாலும் மின்மினிக்குப் பேச பிடிக்கும், மனிதர்களோடு உடனிருப்பதை அதிகம் விரும்புவாள்.
இப்போது வினயச்சந்திரன் மிகவும் நேரடியாக பேச, அவனோடு பேசிக்கொண்டிருப்பதில் மின்மினிக்கு நேரம் நன்றாக போனது, விரைந்து போனது.
மாலை வேலைகள் முடிந்து, மின்மினி மருதாணி இலைகள் பறித்துக்கொண்டிருந்தாள். பொன்னச்சன் உறவினர் ஒருவர் இல்லத்தில் விசேஷத்திற்குச் சென்றார். வினயன் வீட்டை சுற்றி உலாவினான்.
“என்ன மின்மினி மருதாணி பறிக்கிறியா? ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்க
“வேண்டா” என்றவள் “எனிக்கு பேர்வெல், அதினு வேண்டி மைலாஞ்சி” என்றாள்.
“ஓஹ், சூப்பர். நல்லா எஞ்சாய் பண்ணு. அதுக்கு அப்புறம் இந்த டைம் கிடைக்காது, நான் தாரிணியெல்லாம் பேர்வெல் அன்னிக்கு செம ஆட்டம். ரொம்ப ஜாலியா இருந்தோம், இங்க பாரு நிறைய இலையிருக்கு.. அந்த கூடையைக் கொடு. நான் பறிச்சித்தரேன்” என்று இயல்பாகக் கூடையை வாங்கினான்.
“ஞான் மருதாணி பறிக்கும், எனிக்குப் பிடிக்கும், நான் போட்டுக்கக் கூட செய்வேன்”
“எந்தோ?”
மின்மினியின் குரல் கூட அதிர்ச்சியில் உயர்ந்தது.
“எண்ட பகவதியம்மா! இதுக்கெல்லாமா ஷாக் ஆவ? முன்னாடி பொய் சொன்னேன், அதுக்கு ஷாக் ஆன. இப்போ உண்மையை சொன்னா கூட இப்படி எந்தோன்னு பயங்கர ரியாகஷ்ன் தர?”
“பின்னே பாய்ஸ் மைலாஞ்சி இடுமோ?”
“ஏன் பசங்க வச்சா சிவக்காத?” என்று சிரித்த வினயன்
“எங்க வீட்ல நாங்க ரெண்டு பேருமே பசங்க, என் அண்ணா சின்ன வயசுல வச்சுப்பான், பெருசாகி வச்சுக்கிட்டதில்லை. சின்ன பையன்னு எங்கம்மா எனக்கு வச்சிவிடுவாங்க. மருதாணி வைக்கிற அன்னிக்கு அம்மா ஊட்டிவிடுவாங்க, தினமும் அதை பார்த்து எங்கம்மாவுக்கு ஒரு சந்தோஷம். எனக்கும் அந்த வாசம் பிடிக்கும், அதனால வச்சுப்பேன்.”
வினயன் பேச பேச, அவன் மேல் மின்மினிக்கு மரியாதை வந்தது. அவன் செய்கின்ற அத்தனையிலும் ஒரு சமத்துவமிருந்தது, இயல்பானதாக இருந்தது. ஆனால் அதை அவன் பெருமையாக சொல்லாமல் இயல்பாக நடப்பது இன்னும் மின்மினியைக் கவர்ந்தது.
“ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக்கட்டி, மருதாணி இலைகளைப் பறித்துக் கூடையில் போட்டவன் மேல் மின்மினியின் பார்வை அசையாமல் நிலைத்தது.
அன்றைய பொழுது எந்த பிரச்சனையுமில்லாமல் கழிய, அன்றிலிருந்து இரண்டாம் நாள் பூவம்பள்ளில் வீட்டுக்கு வந்த ஆட்களைப் பார்த்து, தலை தெறித்து ஓடினான் வினயச்சந்திரன். வாசலில் நின்றவன் வந்த வண்டியைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்குள் ஓடினான். காரிலிருந்து இறங்கினான் ஜெய்ச்சந்திரன்.