பிரதாபன் நிச்சயம் தாரிணியின் வருகையை எதிர்ப்பார்க்கவில்லை. நேற்றுவரை மாநாட்டை நல்ல விதமாக முடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஓடியவன் இன்று வழக்கமான வேலைகளைப் பார்க்க நினைத்து ஆலப்புழா வந்திருந்தான். அந்த ஷிகாராவை செலுத்திக்கொண்டிருந்தவன் வேகம் அவன் மனதோடு ஒத்திருந்தது.
இதே காயலுக்கு காதலோடு காதலியோடு வர வேண்டும் என்ற ஆவல் அவனுக்கிருந்தது. தாரிணி பிரதாபனின் தீரா பெருங்கனவு! அவனுக்குப் பிரியமான கனவு!
தாரிணியோடுனான தருணங்கள் அவனுக்கு எப்போது பிடித்தவை, அதனை எதிர்நோக்கிக் காத்திருப்பவன் சில நேரம் தானாகவே அமைத்துக்கொள்வான். பருவ வயதில் அவள் மீது இயல்பாக தோன்றிய ஈர்ப்பு, கல்லூரி காலத்தில் காதலாக வளர்ந்தாலும் வார்த்தையாக அதனை சொல்லியதில்லை.
படித்து நல்ல நிலைக்கு வந்தபின் அவளிடம் தன் பிரியத்தை இதோ இந்த காயலின் நடுவே காற்றோடு கலந்து காதல் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான். அந்த வயதில் அந்த சூழலில் அப்படியான ஆவல் இருந்தது. இப்போது அவனுக்கு அதே வயதிலில்லை, சூழலுமில்லை. கல்லூரி காலத்தில் தாரிணி ரசித்த பிரதாபன் அவனில்லை.
“ஹவுஸ் போட்’ல அப்படியென்ன இருக்கு. அப்பா அம்மாவோடு போயிருக்கேன். கொஞ்ச நேரம் எக்ஸைட் ஆனேன், ஆனா அவ்வளவு பெருசா நான் எஞ்சாய் பண்ணல.” என்று அவனோடு இந்த உப்பங்கழி பற்றி பாவை பேசியது பிரதாபனுக்கு நினைவில் நின்றது.
“நீ பார்த்தது எல்லாரும் பார்க்கிற ஆலப்புழா, ஆலப்புழா ரொம்ப ரொம்ப அழகானது. நம்ம ஊரோட சாபமே இதான் டூரிஸ்ட் ஸ்பாட் ஆனதால நிறைய இடங்களோட அழகு போயிடுச்சு. என்ன இருந்தாலும் எண்டே கேரளம் சுந்தரமல்லே?” என்றவன் கண்கள் காட்டிய பாவனையை தாரிணி கண்கள் ரசித்தன.
“நம்ம கேரளம்!” என்று தாரிணி முறைப்போடு திருத்த, கண்களில் சிரிப்பை சிந்தியவன்
“ஷமிச்சு! நம்ம கேரளம்” என்றான் அழுத்தமாக.
“உன்னை நான் கைனகரி அழைச்சிட்டுபோறேன். குட்டநாட்டுல இருக்க வில்லேஜ் எல்லாமே ஒவ்வொரு வகையில் அழகு! உண்மையில தெய்வதிண்டே ஸ்வந்த நாடு நம்ம கேரளம்தான்!” என்றான் பிறந்த ஊரின் மீது கொண்ட பிரியத்தோடு.
“தாரிணி வந்தா எல்லாம் ஸ்பெஷல்தான்” என்று இயல்பாக சொல்வது போல் சொன்னவன் எழுந்து போய்விட்டான்.
இன்றுவரை அப்படியொரு நாள் வரவே இல்லை. என்ன பேசுவாள், நான் என்ன சொல்ல வேண்டும் என்று பிரதாபன் போராடியபடி ஷிகாரவை செலுத்தினான்.
தாரிணி சிறிது நேரம் ஷிகாராவில் உட்கார்ந்து தன்னை சமன்படுத்தியவள், அதன் ஓட்டத்திற்கு பழகியதும் மெல்ல எழுந்தாள். அவள் அணிந்திருந்த புடவை முந்தானை காற்றில் ஆடியது. சுற்றிலும் பார்க்க தண்ணீர்! தண்ணீர்!
நடுவே இவர்களின் ஷிகாரா. ஷிகாராவின் வேகத்தில் காற்று அவள் மீது மோதியது. ஷிகாராவின் சத்தம் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை, அதன் சத்தம் கூட பெரிதாக இல்லை. நீரின் ஓட்டம், காற்றின் சத்தம் மட்டுமே. வார்த்தைக்குள்ள வடிக்க முடியாத ஒரு அமைதி. அதுவும் வானம் நீரைத் தொட்டு செல்வது போன்ற உணர்வு. வழக்கமான சுற்றுலா பயணிகள் செல்லும் இடம் நோக்கி செல்லாது பிரதாபன் வேறு வழியில் படகை செலுத்தியிருக்க, அந்த அமைதி அலாதியானதாக இருந்தது.
பிரதாபன் படகை செலுத்தும் இடத்தில் நிற்க, அவன் பக்கவாட்டுத் தோற்றம் தெரியுமிடத்தில் தாரிணி நின்றாள்.
“பிரதாபன்…” என்று அவள் பெயர் சொல்ல,
“பேசாத தாரிணி” என்றான் அதட்டலாக. முன்பெல்லாம் தாரிணியிடம் பிரதாபன் இப்படியான தொனியில் பேசியதே இல்லை. கோபப்பட்டிருக்கிறான், இருந்தும் அதைக் கட்டுப்படுத்தி பேசுவான்.
“நான் பேசத்தான் வந்திருக்கேன்” தாரிணியும் விடாது சொல்ல
“இறங்கு” என்று சொன்னவன் இறங்கி முன்னே நடந்தான். அந்த தேனீர் கடை பக்கமாக இருந்த வயல்வெளிக்கு அழைத்துச் சென்றான். சுற்றிலும் நாற்று நட்டிருந்தனர். அந்த இடத்தின் பசுமைவிட தாரிணிக்குப் பல வருடம் கழித்து பிரதாபனோடு கிட்டிய தனிமை பல வருடங்களுக்கு முன்பான பசுமையை நினைவுப்படுத்தியது. சில கணங்கள் இருவரும் காற்றோடு மட்டும் கதை பேசி நின்றனர்.
தாரிணி அந்த தருணத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவதானித்து அனுபவிக்க, பிரதாபனுக்கு அவஸ்தையாக இருந்தது, அச்சமாக இருந்தது.
வரப்பில் நின்று
“பரயு” என்றபடி முண்டுவை மடித்து கட்டினான். கை கட்டி நின்றவனை தலைசாய்த்துப் பார்த்த தாரிணி
“ரொம்ப வருஷமாச்சுல நம்ம ரெண்டு பேரும் மட்டும் இப்படி தனியா நின்னு பேசி..” ஆசையாக அசைப்போட பிரதாபன் அந்த ஆவலுக்குத் தடைப்போட்டான்.
“பேசிட்டு வேகம் போகணும் தாரிணி” என்றான் அழுத்தமாக.
அவன் பேச்சு தாரிணியைத் தூண்டிவிட,
“இப்போ நான் பேசணும் அதானே? எங்கப்பா என்னை கல்யாணம் செய்ய சொல்றார். எனக்கு உங்களைத்தான் பிடிச்சிருக்கு, உங்களுக்கும் என்னை பிடிக்கும்தானே?” என்று அவள் கேட்ட அடுத்த நொடி
“உன்னை கல்யாணம் செய்றேனு நான் எப்பவாச்சும் சொல்லியிருக்கேனா?” என்று கேட்க, தாரிணி ஒரு நொடி புரியாமல் விழித்தாள்.
பிரியத்தை வார்த்தையால் சொல்லவில்லை. அந்த வார்த்தை தெளிவு வஞ்சியைக் காயப்படுத்தாது என்று நினைத்து பிரதாபன் சொல்ல, காற்றை, பூவாசத்தை எல்லாம் இப்படியென்று வார்த்தைக்குள் அடக்க முடியுமா? தானாக உணர்ந்தால் மட்டுமே புரியும், தாரிணி காதலை அப்படித்தான் உணர்ந்து புரிந்தாள். பிரதாபனும் அப்படித்தான்!
“அப்போ நீங்க சொன்னதில்லை, ஆனா என்னை உங்களுக்குப் பிடிக்கும்தானே?”
“பிடிக்கும்தான்” தாரிணியிடம் அப்படி அப்பட்டமாக பொய் சொல்ல முடியாதே.
“அப்போ என்ன பிரச்சனை பிரதாபன்?”
“தாரிணி இப்பவும் உன்னை பிடிக்கும். ஆனா பிடிச்சதால உன்னை கல்யாணம் செய்ய முடியாது. இப்போ எனக்கு நீ முக்கியமில்லை, மனசிலாயோ?” என்றான் இறுகிய குரலில்.
சொல்லிவிட்டு பெருமூச்சோடு அவன் திரும்பி நிற்க,
“முக்கியமில்லைன்னா?” தாரிணி அவன் முன் நின்று கேட்டாள்.
“தாரிணின்னா எனக்கு விசேஷம்னு நீங்க சொன்னதெல்லாம் பொய்யா?”
குரல் தடுமாற கோபம் கலந்து கேட்டாள் தாரிணி. பிரதாபன் காட்டிய பிரியத்தின் வாசத்தை உள்ளத்தில் நிறைத்து, அந்த உள்ளாடும் உணர்வினை தேக்கி வைத்து ரசித்தல்லவா காதல் வளர்த்தாள்.
“தாரிணி! அப்போ நீ எனக்கு முக்கியமா இருந்த. இப்போ இல்லை, கொஞ்ச வருசமா நான் உன்னை அவாய்ட் பண்றேனே அப்போ கூட உனக்குப் புரியலயா?” என்றான் ஆதங்கமாக.
“உங்களுக்குத்தான் புரியல” தாரிணிக்கு அவன் ‘முக்கியமில்லை’ என்று சொன்னதை தாங்க முடியவில்லை. கண்ணீர் கண்களை நிறைத்தது.
“என்ன புரியல? என் கூட பேசாத சொல்லிட்டேன். உன்னோட பேசாம இருக்கேன். இதுக்கு மேல எப்படி எனக்கு விருப்பமில்லனு சொல்லணும் நினைக்கிற?”
தாரிணி இப்படியெல்லாம் தவிக்கக் கூடாது, வருந்த கூடாதென்றுதான் அவன் சில வருடங்களாக அவளோடு பேச்சைக் குறைத்தான். பின் மொத்தமாக தவிர்த்தான்.
தாரிணிக்கு அவன் சொல்வது புரிந்தாலும் ஏற்கமுடியவில்லை. விட்டுச்செல்லுதலும் விலகி செல்லுதலும் ஒன்றல்ல! ஆனால் விலகி செல்வதற்கு விட்டுசெல்லுதல் ஒத்திகையாக இருக்கலாம்.
பிரியத்தைப் பற்றி பேசுவதை விட அந்த பிரியம் பேச வேண்டும். அப்படி அவன் காட்டிய பிரியத்தை உணர்ந்தவளுக்கு வார்த்தைகளால் அதை வலியுறுத்த தேவையிருக்கவில்லை. பிரதாபனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நேசத்தை காட்ட முடியாத நேரமில்லா நெருக்கடி அவனுக்கு. நேரம்!
நேரத்தின் கைகளுக்குள்தான் ‘நாம்’. இந்த நொடி தவிர மற்ற எல்லாம் கற்பனைக்குள் வரும், இல்லை கடந்தவையாக இருக்கும். பிரதாபனும் ஒரு சராசரி இளைஞனாக கல்லூரி காலத்தில் காதல் கொண்டு, தனக்கென ஒரு வேலை அமைந்ததும் காதலியைக் கரம்பிடிக்க வேண்டும் என்று கற்பனை கண்டிருந்தான். ஆனால் நேரம் நினைத்ததை எதுவும் பிரதாபனுக்கு நடத்தி தரவில்லை.
அவன் ஆசையாக வளர்த்த கேசவனை இழந்தான், பின் அம்மாவை பிரிந்தான். அதையெல்லாம் கடந்து கல்லூரி செல்கையில் அவனது வீட்டினை இழந்தான். எல்லாவற்றையும் மீட்டு விடலாம் என்று நம்பிக்கையோடு காத்திருந்தவனை அவன் தந்தை இழப்பு முற்றிலும் தளரச் செய்தது. இழந்தது ஒரு புறமிருக்க, கடனும் சேர்ந்து கொள்ள தங்கையின் கல்வி, திருமணம் என்று எல்லாம் அவன் வசத்தில் இருக்க அவனை யோசிக்கக் கூட நேரமில்லை.
இதில் எங்கே அவன் தாரிணியை நினைக்க? நினைத்தாலும் அவனுக்கு முன்புபோல் அவளிடம் பிரியம் காட்ட முடியுமா தெரியவில்லை. அவனையும் அறியாமல் மெல்ல விலகியவன் பின் தெரிந்தே விலகிவிட்டான். தாரிணிக்கு ரோஷம் அதிகம், புரிந்துகொள்வாள் என்று நினைத்திருந்தான். அவளுக்கு ரோஷம் அதிகம்தான், அதே நேரம் பிரதாபன் மீதான பிரியமும் புரிதலும் அதிகமிருக்க அடாது வளர்ந்திருந்தது அவள் அன்பு.
இப்போதைக்கு மின்மினியின் திருமணம், அவர்கள் தரவாட்டை மீட்க வேண்டும். பொன்னச்சனுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறான் அவர் இறப்பின் போது அவர் பிறந்து வளர்ந்த வீட்டில்தான் இருப்பார் என்று. சொந்த ஊரில் எல்லாம் இழந்து, அதுவும் வாழ்ந்த வீட்டை இழந்து நிற்பது இகழ்ச்சிக்குரியது என்பதையெல்லாம் தாண்டி பிரதாபன் தான் தோற்றதாக உணர்ந்தான். அவன் அச்சன் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும். இழந்த மாண்பை அவன் மீட்க வேண்டும்! அவன் வளர்ந்த வாழ்ந்த வீட்டை மீட்க வேண்டும். பூவம்பள்ளில் பிரதாபனுக்கு இன்றைக்கு அதுதான் பிரதானம்! பிரியம் எல்லாம் பிறகே!
அவன் உள்ளத்தில் தளும்பும் உணர்வினை எல்லாம் யாரிடமாவது பகிர வேண்டும் என்று தோன்றினாலும், யாரும் புரிந்துகொள்வார்களா அவனுக்குத் தெரியவில்லை. என் உணர்வுகள் என்னோடு என்று அவனை காயப்படுத்தி அவனை நேசிப்பவளையும் காயப்படுத்தினான்.
அச்சச்சன், தங்கை, தரவாடு என்று யோசித்தவன் தன்னைப் பற்றி யோசிக்கவில்லை. இத்தனை போராட்டத்தில் தாரிணியை இழுக்க அவன் தயாராக இல்லை. தாரிணிக்கு நிச்சயம் ஒரு ஆனந்தமான குடும்பம் வேண்டும்தான்! இப்போது அது அவனால் சாத்தியமில்லை என்றே பிரதாபனுக்குத் தோன்றியது. ஏனோ தாரிணியோடனான கல்லூரி காலங்கள் எல்லாம் கடந்தவையாக தோன்றியது! நினைத்து அசைப்போடலாமே தவிர மீண்டும் ஆசைகொண்டு சுவைக்க முடியும் என்று தோன்றவில்லை.
அவனுக்கு வாழ்க்கைக் கசந்திருக்க அந்த கசப்பின் சுவையைத் தனக்குப் பிடித்த தாரிணிக்குத் தர அவன் மனம் விரும்பவில்லை.
தாரிணி சொன்னதைக் கேட்டவனுக்கு அவன் மீதே ஒரு அதீத ஆத்திரம். அப்பா இருந்திருக்கலாம், அவர் இருப்பே எனக்கு ஒரு நம்பிக்கைக் கொடுத்திருக்கும். அப்போதே அவன் இஷ்டப்படி வாழ்க்கை செல்லாது, வாழ்வின் இழுப்பின் படி செல்வதாகத்தான் பிரதாபனுக்குத் தோன்றியது.
“அப்போ சொன்னேன். அன்னிக்கு உன்னை பிடிச்சது, உன்னோட இருக்க பிடிச்சது. இப்போ அப்படியில்லை! அது உனக்கே தெரியலயா? நீ எனக்குத் தேவையில்ல தாரிணி” என்று சொல்லிவிட
‘தேவையில்லை’ என்ற வார்த்தை தேவைக்கும் அதிகமாகவே தாரிணியைக் காயப்படுத்தின. இதற்குமேல் என்ன பேசுவாள், விலகிச் சென்றவன் விட்டு விட மாட்டான் என்று நினைத்தால். அவனோ வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லிவிட்டான். தாரிணிக்கு அந்த சூழல் பிடிக்கவில்லை. தன்னையே பிடிக்கவில்லை. எதுவும் பிடிக்கவில்லை.
வேகமாக வந்த திசையில் அவள் புடவை சரசரக்க நடக்கத் துவங்க, தாரிணியைப் பின் தொடர்ந்தான் பிரதாபன். தாரிணி நேராக ஷிகாரவில் ஏறப்போக, வேகமாக வந்த பிரதாபனும் அவள் பின் நின்றான். சட்டென்று ஒரு நெருக்கம்.
“நான் முக்கியமில்லனு தானே சொன்னீங்க? தேவையில்லனுதானே சொன்னீங்க?” என்று அவன் சட்டை காலரைப் பற்றினாள்.
“தா..ரிணி” என்று பிரதாபன் அவள் நெருக்கத்தில் பேச்சிலும் திணற, தாரிணியின் அழுகை புரியவில்லை. கோபத்தோடு நடந்து வந்தவள் ஏன் தீடீரென அழுகிறாள் என்று விளங்காது நின்றான்.
“புரிஞ்சிக்கோ” பிரதாபன் குரல் கெஞ்சலாக ஒலிக்க
“என்னை வேண்டாம் சொல்லிட்டு என்னை நினைக்கல சொல்லிட்டு நான் பழக்கிவிட்ட அத்தர் மட்டும் எப்படி மறக்காம இருக்கு?” என்றாள் கண்ணீரோடு. அவள் கண்ணீர் அவன் சட்டை நனைக்க பிரதாபன் என்ன பதில் சொல்வான்?
வாசத்தின் கதைக்கு வார்த்தையேது?!
அவளின் நினைவை, அவள் பேச்சை அவள் பழக்கிவிட்டவைதான் அவன் வழக்கம், வாழ்க்கை என்றா?
அதெல்லாம் தாரிணிக்குத் தேவையானதாக இருக்கவில்லை. எத்தனங்களின்றி (முயற்சி-எத்தனம்) எத்தனை அன்பிருந்தாலும் அது வீண் தானே? பிரதாபனுக்குத் தான் பிரதானமாக இல்லை, தன் மீதான பிரியம் பிரதானமாக இல்லை என்பதே தாரிணியைத் துவளச் செய்தது. அப்படி என்னை முற்றிலும் மறந்தவன் என்றால் நான் சொன்னபின் அத்தர் பயன்படுத்த துவங்கியவன் விட வேண்டியதுதானே? ஆக இவனுக்குப் பிடித்தாலும் நான் பிரதானமில்லை.!
பிரதாபனின் பிரத்யேகப் பிரியத்தில் லயித்து லாளிதத்தில் இருந்தவளை இன்று தவிக்க செய்தான். அத்தரை பயன்படுத்தும்போதெல்லாம் உன் ஞாபகம் வரும் என்று சொன்னான் தானே? எல்லாம் நினைக்க நினைக்க தாரிணிக்குத் தாங்க முடியாத அழுகை. ஆனாலும் தேவையில்லை என்றவன் முன் அழ விருப்பமின்றி அவன் சட்டை காலரை விட்டவள், மூச்சு வாங்க ஷிகாராவின் பின்னிருக்கையில் போய் அமர்ந்தாள்.
அழுததில் முச்சு வாங்கியிருக்க தாரிணியைப் அப்படி பார்க்க பிரதாபனுக்குத் தாங்கவில்லை. தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொண்டு நீட்ட, அப்படியே தள்ளிவிட்டாள். பிரதாபன் முறைக்க தாரிணி அவனை பார்க்கவில்லை. கண்களை மூடி சாய்ந்துவிட்டாள்.
மீண்டும் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலான பயணம். வந்த பாதைதான் ஆனால் வரும்போது தாரிணிக்கு ஒரு பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. இப்போது ஏமாற்றத்தோடு பயணித்தாள் பாவை.
ஆலப்புழாவின் தாரிணி பிரதாபனின் வருகைக்காக காத்திருந்த வினயச்சந்திரன் மனதில் மின்மினி வந்து போனாள். தாரிணியைப் பற்றி யோசித்தவன் மனம் சோர்வாக இருந்தது. நேற்று மின்மினியோடு நடந்த சண்டையே காரணம்.
“தாரிணி அம்மா இல்லாத பொண்ணு மின்மினி. நீ இந்த நாத்தனார் கொடுமையெல்லாம் பண்ணாம என் ப்ரண்டை நல்லா பார்த்துக்கணும்” என்று விளையாட்டாகவும் தாரிணி மேல் கொண்ட அக்கறையினாலும் வினயன் சொல்ல
மின்மினி ஏற்கனவே ஏட்டன் வந்துவிட்டால் இவன் சென்றுவிடுவானே என்று பிரிய வேண்டுமே என்று அவ்வெண்ணத்தில் உழல, வினயனின் இந்த பேச்சுக் காயம் கொடுத்து கோபப்படுத்தியது.
“நிண்ட ப்ரண்டை ஞான் ஒன்னும் பண்ணல” என்று கோபமாகப் பேசினாள் மின்மினி.
“அம்மே! என்ன நீ இப்படி கோவப்படுற? நாட்டுல நடக்குறதுதானே?” என்று வினயன் பொறுமையாகப் பேச
“எந்தா நடக்குன்னு? தாரிணி சேச்சி மட்டும் நல்லவங்க நாங்க எல்லாம் மோசமோ?” என்றாள் எரிச்சலாக.
“பகவதியம்மே! என்னாச்சு மின்மினி உனக்கு? நான் ஜஸ்ட் கிண்டலுக்கு சொன்னேன்” என்று சொல்லியும் மின்மினி கோபம் குறையவில்லை.
“எல்லாம் தமாஷு அல்லே” என்று கத்திவிட்டு செல்ல
“தேஷியக்காரி! ஏன் டி இப்படி பண்ற” என்றான் வினயனும் கோபமாக.
அவனும் இரண்டு நாட்களாகப் பார்க்கிறான், மின்மினி எல்லாவற்றுக்கும் எரிந்து விழுந்தாள். வினயனுக்கு அதை ஏற்கமுடியவில்லை. மின்மினி மீது அவனுக்கு நிறைய நல்லெண்ணம் இருக்க அவள் இப்படி நடப்பது பிடிக்கவில்லை.
யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று வினயன் நினைக்க மாட்டான். பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிவிடுவான். அவனுக்குப் பிடித்தவர்கள் என்றால் அவர்களுக்காக மற்றவரைப் பேச தயங்க மாட்டான். அப்படித்தான் தாரிணிக்காகப் பேச போய் அது மின்மினிக்குப் பிடிக்காமல் போனது.
மின்மினிக்கு இப்போதெல்லாம் நிறைய பயம். வினயன் சென்றுவிடுவான் என்ற நிதர்சனம் புரிய, அவன் மீது தனக்குத் தோன்றிய பிடித்தத்தைப் பிரிய வேண்டும் என்று புரிந்தது. அதுவும் அவனுக்குத் தானும் சொந்தம் என்று தெரிந்த பின் வினயச்சந்திரன் நித்தமும் அவன் வீட்டு கதையை சொல்லிவிடுவான். இவளுக்கும் தேவிகுளம் போக ஆசை, வினயனின் குடும்பம் பார்க்க ஆவல். வினயனின் குடும்பமாக ஆவல். எதையும் காட்டிக்கொள்ளாது அவள் இருக்க, வினயனுக்கு அது தெரியவில்லை.
தாரிணியோடு பிரதாபன் ஒருவழியாக வந்து இறங்க, அழுத தாரிணி கண்டு வினயச்சந்திரன் அவளிடம் போக
“வினயா!” என்று கத்தினான் பிரதாபன்.
“தாரிணியைக் கொண்டு வீட்ல விடு” என்றான். பிரதாபன் மீண்டும் ஷிகாராவில் ஏறியவன் ஷிபுவை இயக்கச் சொன்னான். வினயச்சந்திரனுக்கு ஒன்னும் விளங்கவில்லை. தாரிணி தன்னைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று புரிந்தது.
தாரிணியும் வினயனும் தமிழ், வீட்டில் இருவரும் பேசி இருமுறை பார்த்திருக்கிறான். அதனால் தான் இங்கே இருப்பதை தாரிணி கேட்கவும் வினயன் சொல்லியிருப்பான் என்பதே பிரதாபன் புரிதல். அதற்குமேல் அவனால் அந்த நேரம் யோசிக்க முடியவில்லை.
“தாரிணியை விட்டுட்டு நீ வீட்டுக்குப் போ” என்ற உத்தரவோடு பிரதாபன் சென்றுவிட, பிரதாபனின் காரில்தான் தாரிணியை அழைத்துப்போனான் வினயன்.
காரில் ஏறியதும்
“அப்பா கிட்ட போகணும் வினய்” என்று அழுதாள் தாரிணி.
“என்னாச்சு தாரிணி” என்று வினயன் கேட்க
“என்னை வேண்டாம் சொல்லிட்டார், நான் முக்கியமில்லை சொல்லிட்டார்” என்று தாரிணி அதனை சொல்ல முடியாமல் சொல்லி அழத்துவங்கினாள். மாவேலிக்கராவில் இருக்கும் அவளின் வீட்டில் விட்டவனுக்கு மனதே ஆறவில்லை.
அந்த கோபத்தை அப்படியே மின்மினியிடம் காட்டினான். அடுத்த நாள் காலை வினயன் தாரிணிக்கு அழைக்க, அவள் அழைப்பை எடுக்கவில்லை என்றதும் பதறி அவளின் வீட்டிற்குச் சென்றான். அன்று மாலையே ஜெயமில்லா அவன் விஜயம் முடிவுற தேவிகுளம் புறப்பட்டான் வினயச்சந்திரன்.