பிரதாபன் என்ன பேசினான் என்று வினயனுக்குத் தெரியவில்லை. தாரிணியின் அழுகை சத்தம் மட்டுமே அந்த காருக்குள் கேட்டது. வீடு வந்ததும் தாரிணி இறங்கி அப்படியே நின்றாள்.
‘தேவையில்லை’ என்ற பிரதாபனின் ‘பதம்’ பாவையை பதம் பார்த்திருந்தது. விருப்பமின்மை என்பது வேறு, வேண்டாம் என்பது வேறல்லவா?
நான் எப்படி அவனுக்கு முக்கியமில்லாமல் போனேன் என்ற ஆற்றாமையைத் தாரிணியால் தாங்கமுடியவில்லை.
“சேட்டா கிட்ட நான் பேசுறேன்” என்றதும் வேகமாக தலையசைத்து மறுத்தாள் தாரிணி.
“நீ எனக்காக செஞ்சதே போதும் வினய். அவர் என்னை பிடிக்காது சொல்லியிருந்தா என்னை பிடிக்கிற மாதிரி நடந்திருப்பேன். ஆனா வேண்டாம்னு சொல்றவங்களை என்ன செய்றது?” என்று கண்ணீரைத் துடைத்து கரகரத்த குரலில் சொன்னவளை வருத்தமாகப் பார்த்தான் வினயன்.
“தேவையில்லனு சொல்லிட்டார்டா. என்னை நினைக்கிறதே இல்லனு சொல்லிட்டார்.” என்று கண்ணோரமிருந்த கண்ணீரைத் துடைத்தவளுக்கு அழுகை பெருகியது.
“லவ்’ன்றது ரெண்டு பேரும் சேர்ந்து எடுக்கிற முயற்சி இல்லையா? அவருக்கு நான் வேணும்னா அவரும் சேர்ந்து முயற்சி செய்யணும். வேண்டாம்னே முடிவெடுத்துட்டார். அவர் சொன்னாலும் இல்லனாலும் எனக்குன்னு செல்ப் ரெஸ்பெக்ட் இருக்கு இல்ல..” என்றாள் கண்களை மூடி. அவன் சொன்ன வார்த்தைகளில் இன்னும் தன்னை வருத்தினாள் தாரிணி.
“இப்போ என்ன செய்யப்போற தாரிணி?” வினயன் கேட்க
“எனக்கு அப்பாவைப் பார்க்கணும் வினய். அவர்கிட்ட போகணும், நான் எதுவும் செய்ய போறதில்லை. என்ன செய்றது எனக்குத் தெரியல” என்ற தாரிணி
“ஆனா பிரதாபன் இவ்வளவு சொன்ன பின்னாடி அவரை நான் தொந்தரவு பண்ண மாட்டேன். பேச மாட்டேன்” என்றாள் தெளிவாக.
“என்னடி நீ இவ்வளவு சட்டுனு முடிவெடுக்கிற?” வினயன் அதிருப்தியாகப் பார்த்தான்.
“நான் பேசுறேன்” என்று சொல்ல தாரிணி முறைத்தாள்.
“நோ! நீ என்ன பேச போற? நீ ஊருக்குக் கிளம்பு. எனக்காக நீ கஷ்டப்பட்டதெல்லாம் போதும். லவ் இஸ் டூ பீப்பிள் பிஸ்னஸ்! எங்களை சந்திக்க வைக்கிறதெல்லாம் ஓகே, ஆனா காதலை அவர்தானே புரிஞ்சிக்கணும். புரிஞ்சாலும் சாருக்கு நான் வேண்டாம்ல..” என்றவளுக்கு அவன் மேல் உணர்ந்த வாசம் சொன்ன காதல் கதையில் மீண்டும் கண்ணீர் வந்தது.
அப்படியென்ன என்னைப் பிடித்தும் என்னை வேண்டாம் என்கிறான் என்ற எண்ணம்.
“இல்லடி” என்றவன் தாரிணியின் பார்வையில் நிறுத்தினான்.
“என்ன?” என்று வினயன் பார்க்க
“ஒரு பையன் என்னை லவ் பண்ணி நான் வேண்டாம்னு சொல்லியும் என் பின்னாடி வந்தா என்ன செய்வ?” என்று கேட்டாள்.
வினயன் அமைதியாக நிற்க “அடிப்ப, இல்லை வார்ன் பண்ணுவ தானே? அப்போ இப்பவும் அப்படியே இரு. முகத்துக்கு நேரா வேண்டாம் சொல்லிட்டார். இதுக்கு அப்புறம் நானா போக மாட்டேன் வினய்” என்று தாரிணி உறுதியாக சொல்ல
வினயன் உடனே,
“அவ்வளவு சீக்கிரம் உன்னால அவரை மறக்க முடியுமா?” என்றான் அதிர்ச்சியாக.
“நான் மறக்கிறது பத்தியெல்லாம் யோசிக்கலடா.. அவரை நான் தொந்தரவு செய்ய மாட்டேன் சொன்னேன். அவ்வளவுதான்!” என்றவள் அழுகையோடு
“பிரதாபன் என்கிட்ட பேசுறதில்லன்னு தெரிஞ்சாலும் அவர் சிட்டிவேஷன் மாறும்னு நான் வெயிட் பண்ணினேன். அவர் சொன்ன மாதிரி தூரமா இருந்தாலும் நம்ம மேல பாசம் வச்சிருக்கவங்க நம்மை நினைப்பாங்க நினைச்சேன். இப்போ அப்படியில்லனு தெரியும்போது எனக்கு யாருமே இல்லனு பீல் ஆகுது. அப்பா கூட இருக்கணும்போல இருக்கு” என்றதும்
“என்ன யாருமில்லையா? நாங்களாம் இல்லையா உனக்கு?” என்று வினயன் அதட்டினான்.
தாரிணி முட்டியில் முகம் புதைத்துக்கொண்டாள். சிறிது நேரம் அமைதியாக இருந்த வினயன்
“நீ ஓகேதானே? நான் கிளம்பவா இல்ல இருக்கவா?” என்று கேட்க
“எனக்குத் தனியா இருக்கணும். நீ கிளம்பு” என்றாள்.
வினயனும் வாசல் நோக்கிப் போக,
“தேங்க்ஸ்டா” என்ற தாரிணியின் குரலில் நின்றவன் திரும்பிப் பார்க்க
“உன்னை மாதிரி ப்ரண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்” என்றாள்.
“ரொம்ப சந்தோஷம், நீயும் அழாம இருந்தா நானும் அப்படி சொல்வேன். நாளைக்குப் பார்க்கலாம் தாரிணி.” என்று சென்றவன் இருபது நிமிடங்களில் திரும்பி வந்தான்.
“என்ன முறைக்கிற? அழுது முடிஞ்சு டயர்டான்னா பசிக்கும். ஆர்டர் பண்ணனும் நினைச்சாலும் அந்த நேரம் ஹோட்டல் இல்லன்னா என்ன பண்ணுவ. வாங்கித்தர நானும் இருக்க மாட்டேன். இப்போ அழுதுட்டு பசிக்கும்போது அடைதோசையும் அவியலும் சாப்பிட்டு தூங்கு.”
“ப்ராந்தன்” என்று தாரிணி அழுகையோடு திட்ட
“அந்த நிலம இன்னும் வரல. தெளிவாதான் இருக்கேன்! என்ன நடந்தாலும் பசிக்கும், பிரதாபனை நினைச்சா பசிக்காம இருக்காது. ஒழுங்கா சாப்பிடுற, நாளைக்கு வரேன். கதவ லாக் பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு வினயச்சந்திரன் போனான்.
காதலிச்சா பட்டினி கிடக்கணும்னு சட்டம்மா என்ன? என்று நினைத்தான். உணவு ஒழுங்காக இருந்தால் உணர்வும் உள்ளமும் ஒழுங்காக இருக்கும் என்று வாழ்பவன் வினயச்சந்திரன்! உணவை விரும்புவன் மட்டுமில்லை ரசித்து மதிப்பவனும் கூட!
தாரிணியிடம் அப்படி பேசிவிட்டாலும் பிரதாபன் மீது வினயனுக்குப் பயங்கர கோபம். என் தோழியை வேண்டாம் என்பானா என்று வருத்தம், கோபம் எல்லாம் இருந்தது. அதனோடு கிளம்பி தாமரகுளம் வந்தவனை ஆவலாகப் பார்த்தாள் மின்மினி.
“எந்தா?” என்று ஆர்வமாக இவன் வரவும் மின்மினி சாயா கொடுக்கும் நேரம் கேட்க
“எந்தோ?” என்றான் வினயன்.
“ஏட்டன் ஓகே சொல்லியாச்சா?” மின்மினி தன் ஏட்டனின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் கேட்க
“ஏட்டாவுக்கு இஷ்டமில்லாம இருக்கலாமில்ல..தாரிணி சேச்சி தப்பா புரிஞ்சிருக்கலாம்” என்ற மின்மினியின் பேச்சில் வினயனுக்குக் கோபம் வந்தது.
“தாரிணி ஒன்னும் குழந்தையில்ல. அவளுக்கு பசங்க எப்படி பழகுறாங்கனு தெரியும். சும்மா உன் ஏட்டனுக்கு சப்போர்ட் பண்ணாத மினி” என்றான் கோபமாக.
வினயன் அதுவரை இத்தனை கோபமாகப் பேசியதில்லை. காலையில் எழுப்பும்போது மட்டுமே அவன் எரிச்சல் எழும்பும், மற்றபடி புன்னகை மன்னன் அவன். அப்படியானவன் தன் ஏட்டனைப் பேசிட மின்மினிக்குக் கோபம். அதைவிட பிரதாபனுக்குப் பிரியமில்லை என்றால் என்ன செய்ய முடியும். ‘எனக்கும் கூட இவனை பிடிக்கும், இவனுக்கும் அப்படி பிடிக்கிறதா?’ என்ற கேள்வியும் கோபமும் பொங்க
மின்மினி சென்றதும் வினயச்சந்திரன் சிறிது நேரம் யோசனையில் இருந்தான். தாரிணிக்கு சாப்பிடு என்று குறுஞ்செய்தி அனுப்பியவன் கயிற்றுக் கட்டிலில் காலாட்டியபடி உட்கார்ந்திருக்க, மின்மினி வாசலை வாசலை எட்டிப்பார்த்தாள்.
வாசல் பக்கம் வருவதும் போவதுமாக அவள் இருக்க, “என்னாச்சு மின்மினி” என்று வினயன் இயல்பாகக் கேட்டான்.
அதில் மின்மினிக்கு இன்னும் கோபம். அவனுக்குப் பதில் சொல்லாது கேட் வரை சென்று தெருவை பார்த்தாள் மின்மினி.
மின்மினி பின்னே போன வினயன் “என்னன்னு கேட்கிறேன்ல மினி?” என்றதும்
“ஏட்டனைக் காணும்” என்றாள் கவலையாக.
“என்ன?” என்று வினயன் புருவமுயர்த்த
“ஏட்டாவுக்குப் போன் பண்ணினா எடுக்கல, இன்னும் காணும்” என்ற மின்மினியின் முகத்தினை கண்டவனுக்கு ஒப்பவில்லை.
“உன் ஏட்டனுக்கு எல்லாம் அவர் இஷ்டம்தானே? வருவார் இல்லைன்னா அங்க கைனகரியில இருப்பார். நீ விஷமிக்கண்டா”(கவலைப்படாத) என்று வினயன் சாதாரணமாக சொல்லிவிட
மின்மினி உடனே “அது எண்ட ப்ரஷ்ணம். நீ விஷமிக்கண்டா” என்றாள் கோபமாக.
“எந்தாடி? என்கிட்ட ஏன் கோவமா பேசுற? உன் ஏட்டா என்ன சின்ன குழந்தையா? வந்துடுவார்னு சொன்னா என்கிட்ட எரிஞ்சு விழுற?” என்று வினயனும் பேசினான்.
“இனி என்னொடு மிண்டாதிரு” (இனி என்னோட பேசாத) என்று சொன்ன மின்மினி வேகமாக வீட்டினுள் சென்றுவிட்டாள்.
வினயனும் அவள் பின் போகலாம் என்று நினைக்க, அதற்குள் நசீர் வந்துவிட்டார். வினயச்சந்திரன் கை முஷ்டியை நெற்றியில் முட்டிக்கொண்டான்.
“எந்தாடா?” என்று நசீர் வினயனை கேட்க
“ஒன்னுமில்ல நசீரேட்டா, ஐ மிஸ்ட் யூ” என்றான் சின்ன சிரிப்போடு. சிரித்தாலும் மின்மினியின் முகம் இம்சித்தது. நசீரும் அவன் சொன்னதில் சிரித்தார்.
‘பிரதாபன் தாரிணிக்கு ஓகே சொல்லாம இருக்கிறதுக்கும் மின்மினிக்கும் என்ன சம்மந்தம்? அவகிட்ட கத்திட்டேன். மோசம்டா வினயா’ என்று தன்னை தானே திட்டிக்கொண்டான்.
‘நம்ம மின்மினி’ என்ற உணர்வு கொடுத்த உரிமை, உரிமையால் ஒரு கோபம். தவறு என்று புரிய மன்னிப்புக் கேட்க நினைக்க அவள் கண்ணிலே படவில்லை. வினயனும் பிரதாபனுக்கு அழைத்துப் பார்க்க, அவன் அழைப்பை எடுக்கவில்லை. உடனே ஷிபுவுக்கு அழைத்துக் கேட்டான். ஷிபு,
பிரதாபன் யாரும் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொன்னதாக சொன்னான்.
வினயன் நசீரிடம் “மினி சேட்டாவை காணும்னு கேட்டா. அவர் நாளைக்கு வீட்டுக்கு வந்துடுவேன் சொன்னார் சொல்லிடுங்க” என்றதும் நசீர்
“இன்னிக்கு வந்துடுவேன் சொன்னானே?” என்று யோசனையாகப் பார்த்தார்.
“இப்போ கேட்டப்ப சொன்னார் சேட்டா. போங்க” என்று வினயச்சந்திரன் சொல்ல மின்மினியை அழைத்து வினயன் சொன்னதை சொல்ல மின்மினி பார்வை வினயனை லேசாய்த் தொட்டு மீள, வினயன் கண்களை சுருக்கி மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பார்க்க, மின்மினி சட்டென்று முகம் திருப்பிக்கொண்டாள்.
“எந்தோ மினிகுட்டி?” என்று நசீர் மின்மினியின் செயல் கண்டு கேட்டவர் சட்டென வினயச்சந்திரனை பார்க்க, அவன் மின்மினி முகம் திருப்பவுமே வேறு பக்கம் பார்த்தான்.
மின்மினி ‘ஒன்னுமில்லை’ என்றதும் அவள் முகம் பார்த்தவர்
“பிரதாபனுக்கு ஜோலி வந்திருக்கும் மோளே இல்லெங்கில் அவன் வராம இருக்க மாட்டான்ல” என்றார் வாஞ்சையாக. மின்மினி பதில் சொல்லாது அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
மின்மினிக்கு பிரதாபனை நினைத்து கவலையாக இருந்தது. வினயன் தோழிக்காக இத்தனை பார்த்து வருந்தும்போது எனக்கு என் ஏட்டனைக் குறித்து வருத்தமிருக்காதா என்ற வருத்தம். கூடவே வினயன் எப்படியும் போய்விடுவான் என்ற பிரிவுத்துயர். அதைவிட அவன் பேச்சும் கோபமும் மிகுதியாக மின்மினியைக் காயப்படுத்தியிருக்க, இனி அவனோடு பேச்சில்லை என்று முடிவெடுத்தாள்.