நமக்குப் பிடித்தவர்களை, நம்மைப் பிடித்தவர்களை பிரிவது என்பது மிகவும் கடினமானது. பிரிவை விட பிரியத்தைப் பிரிவது இன்னும் கடினம். பிரதாபன் இரண்டையும் ஒருங்கே அனுபவித்தான். ஒன்று மட்டும் நிச்சயம் அவனுக்குத் தெரியும், தாரிணி தன்னை பிரிந்தாலும் அவள் பிரியம் போகாதென்று.
அது கர்வம் கொடுத்த அதே நேரம் கவலையும் கொடுத்தது. இரவுக்கு இரட்டிப்பு சுவையுண்டு. இரவுகள் எல்லாவற்றையும் மிகையாகக் காட்டும். காதலை, காமத்தை, அச்சத்தை, ஆனந்தத்தை எல்லாவற்றையும் மிகைப்படுத்தும். பிரதாபனுக்கு அவ்விரவு அப்படித்தான் இருந்தது.
ஷிகாராவின் முன்பக்கமிருந்த இடத்தில் வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான் பிரதாபன். இரவு மொத்தமாக அவ்விடத்தை சூழ்ந்திருந்தது.
‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாலும் தாரிணி வேண்டும் என்றே வேண்டினான். விலகி இருந்தபோது கூட இத்தனை வலிக்கவில்லை. ஒரேயடியாக விட்டுப்போ என்றதும் தாங்கமுடியவில்லை. சொன்ன கணம் விட சொன்னதை நினைக்க நினைக்க இக்கணத்தில் கனம் கூடியது! காயல் காற்றில் படுத்திருந்தவனை காதல் வாட்டியது.
ஷிபு வழக்கமான இடத்தில் ஷிகாராவை நிறுத்திவைத்திருக்க, அவனை மட்டும் உண்ண சொன்ன பிரதாபன் எதுவும் உண்ணவில்லை. முதன்முதலாக தாரிணி என்ற பெயரைக் கேட்ட உணர்வு நினைவேக்கமாக எழுந்தது.
‘தாரிணியைப் பாரு பிரதாபா, அவ அம்மா உயிரோட இல்லை. உன்னை விட சின்னப்பொண்ணு அழாம அவங்கப்பா சொல்றதைக் கேட்டு நடக்கிறா. எவ்வளவு ஆர்வமா களரி கத்துக்கிறா பார்த்தியா?’ என்று அம்மா பிரிந்த பின் அடம்பிடிக்கும் பிரதாபனிடம் பொன்னச்சன் கூறிய வார்த்தைகள் இவை.
அப்போதுதான் தாரிணி என்ற பெயர் கேட்டான். அச்சச்சன் பாராட்டும் பெண் யார் என்று பார்த்தான். தாமரகுளத்தில் களரி பயில வந்த தமிழ்ப்பாவை அவள் மட்டுமே! அதில் இன்னும் எளிதாக அவளை அடையாளம் காண முடிந்தது. உண்மையில் தாரிணியைப் பற்றி அச்சச்சன் சொன்னதைக் கேட்ட பிரதாபனுக்கு தன் அம்மா தூரமாய் இருந்தாலும் இருக்கிறாரே என்று சந்தோஷப்பட்டுக்கொண்டான். அப்போது அம்மாவின் பிரிவில் அவர்மேல் கோபமிருந்தது.
அதே நேரம் தாரிணி மீது பரிவு தோன்றியது. அதுவே நாளாக நாளாக அவள் மீது கவனமாக மாறியது. அவன் தரணியில் தாரிணி என்ற பெயரும் பெண்ணும் நுழைந்த காலமது! கல்லூரி காலத்தில் காதலாக வளர்ந்தது!
எல்லா ஒத்துணர்வும்(எம்பதி- empathy) காதலாக மாறுவதில்லை. ஆனால் எல்லா காதலிலும் ஒத்துணர்வு அவசியமாகிறது. காதல் காலம் கடந்து நீட்டிக்க அது அத்தியாவசியமாகிறது! அந்தவுணர்வே பிரியத்தை நிலைபெறச் செய்யும்.
தன்னைப் போல் தாரிணியையும் நினைத்த பிரதாபனுக்கு அவளோடு பழகிய பின் அவளை மிகவும் பிடித்தது. அவன் வாலிப காலத்தின் வாசந்தம் அவள்!
என்று அப்பா இறந்து பொறுப்பு மொத்தமும் அவன்மேல் விழுந்ததோ அன்றிலிருந்து அவன் வயதும் வாலிபமும் காணாமல் போனது. பள்ளி படிக்கும் தங்கை, புத்திர சோகத்தில் வாடிய அச்சச்சன் என்று அவர்களை கவனிப்பது பிரதாபனின் பிரதானமாகியது.
ஏனோ எதுவுமே இப்போது வாழ்க்கையில் சுவைக்கவில்லை, ரசிக்கவில்லை! இந்த சுழலில் தாரிணியையும் இழுத்து வருந்தவைக்க விரும்பவில்லை. வெறுத்துப் பிரிவதை விட இப்படி பிரிவதில் வலி குறைவென்ற எண்ணம்.
இந்த நிலையும் மாறும் மறையும் என்று நம்பினாலும் பிரதாபன் மறுகினான்.
இரவின் அடர்த்தியும் குளிரும் மெல்ல அவனை ஆசுவாசப்படுத்த தாரிணியின் நினைவுகளோடு உறங்கிப்போனான் பிரதாபன்.
வினயச்சந்திரனுக்கு அன்றிரவு சரியான உறக்கமில்லை. புரண்டு படுத்தால் நசீருக்குத் தொந்தரவாக இருக்குமென எழுந்து விட்டான்.
ஆறு மணி போல் தாரிணிக்கு அழைக்க அவள் அழைப்பை எடுக்கவில்லை. மீண்டும் முயற்சி செய்ய ஸ்விட்ச் ஆப் என்று வர, பயந்துபோனவன் யாரிடமும் சொல்லிக்கொள்ளாது பிரதாபனின் வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக மாவேலிக்கரா சென்றான். தாரிணியின் வீட்டுக்குச் சென்றபோது அவள் வாசலில் நின்று தனது ஸ்கூட்டியை எடுத்தாள்.
“பகவதியம்மா!” என்று அம்மனுக்கு நன்றி சொன்னவன் கோபத்தின் வேகத்தோடு தோழி அருகில் சென்றான்.
“அறிவிருக்கா உனக்கு? போனை ஏன் ஸ்விட்ச் ஆப் பண்ணின பட்டி?” என்றான் மூச்சுவாங்க.
அப்போதுதான் அலைப்பேசி நினைவே அவளுக்கு வந்தது.
“சார்ஜ் போட மறந்துட்டேன் டா” என்றதும்
“எவ்வளவு பயந்திட்டேன் தெரியுமா?” என்றான் இன்னும் பதட்டம் குறையாதவனாக.
“டேய் உட்காருடா” என்று தாரிணி உட்கார சொல்ல, வீட்டின் முன் திண்ணை படியில் உட்கார்ந்தான் வினயச்சந்திரன்.
தாரிணி அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அதை வேகமாகக் குடித்துவிட்டு
“உன் வயசுதானே எனக்கு, ஒரு லவ் கிவ் ஒன்னும் பண்ணல. இப்படி என்னை டென்சன் பண்ணி போட்டுத்தள்ளப் பாத்தியே. ஹெல்மெட் கூட போடாம வண்டி ஓட்டியிருக்கேன்” என்று புலம்பினான்.
“டேய்! இப்போ எதுக்கு நீ இவ்வளவு பில்டப் பண்ற? நேத்துல இருந்து போன் யூஸ் பண்ணல. ஆபிஸ் கிளம்புற அவசரத்துல அப்படியே எடுத்துப் பேக்’ல போட்டேன். நீ எப்போ கூப்பிட்ட?” என்று விசாரிக்க வினயன் நேரம் சொல்லவும்
“அப்போ குளிக்க போய்ட்டேன். சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆப் ஆகியிருக்கும். எப்பவும் ஆபிஸ்’ல போய் சார்ஜ் போட்டுடுவேன்” என்று விளக்கியவள் வினயனின் அக்கறையில் நெகிழ்ந்து
“எனக்குப் பிரதாபனை இப்பவும் ரொம்பப் பிடிக்கும்தான்! ஒரே ராத்திரியில அவரை மறக்க முடியாதுதான். அதே நேரம் மிஸ்டர். மாதவனுக்கு நான் ஒரே பொண்ணு. அப்புறம் மிஸ்டர். வினயச்சந்திரனோட அறிவான ப்ரண்ட். பிரதாபனுக்கு மட்டும்தான் நான் தேவையில்லாம இருக்கேன். மத்த எல்லாருக்கும் நான் வேணுமில்ல, நீ ஏண்டா என்னை போய் அப்படி நினைச்ச?” என்றவளுக்கு வினயச்சந்திரனின் கற்பனையில் சிரிப்பும் வந்தது.
“லவ் பெயிலர்னா அதானே எல்லாரும் பண்ணுவாங்க. டக்குனு நீ போன் எடுக்கலனதும் டென்ஷன் ஆகிடுச்சு டி” என்றான் ஆசுவாசத்தோடு. முகத்திலும் புன்னகை பரவியது.
“விடுங்க ப்ரண்ட். பிரதாபவர்மா இல்லன்னா ஒரு ராம்கோபால் வர்மா, ரவிதேஜான்னு நம்ம பார்த்துக்கலாம்.” என்று தாரிணியிடம் சொல்ல அவள் முறைத்தாள்.
“ஆனா பாவம் தாரிணி நீ! லவ் போச்சுன்னா தாடி வளர்க்க கூட முடியாதுல.” என்றதும் தாரிணி சிரித்து விட்டாள்.
அவள் சிரிக்கவும் வினயன் முகம் மாறியது. “என்னடா?” என்று தாரிணி கேட்க
“இல்ல மொக்க போட்டா கூட சிரிக்கிறியே ரொம்ப கஷ்டத்துல இருக்கியோ? சாரிடி. நான் நீ ரிலாக்ஸ் ஆகணும்னு சொன்னேன். ஹர்ட் பண்ணனும் இல்ல” என்று மன்னிப்பு வேறு கேட்டான்.
“அச்சோடா! மோனே! நீ சரியில்லடா! என்னை விட நீதான் குழப்பமா இருக்க மாதிரி இருக்கு. உன் லவ்-வி போஸ்ட்’க்கு இழுக்கு வந்துடுச்சுனு பீலிங்க்ஸா?” என்று தாரிணி கிண்டல் செய்ய வினயன் முறைத்தான்.
“பின்ன என்னடா? விடு! ஒரே நாள்ல எல்லாம் சரியாகாது. நீ நேத்து சொன்ன மாதிரி எது நடந்தாலும் சாப்பிடணும், தூங்கணும் வேலை பார்க்கணும்.” திடமான வார்த்தைகளாக இருந்தாலும் திடமான குரலில் வரவில்லை. மிகவும் சிரமப்பட்டு அழுகையை அடக்கியவள்,
“நான் நைட் அப்பாகிட்ட பேசிட்டேன். அவர் டிக்கெட் பார்த்து சொல்றேன் சொல்லியிருக்கார், இப்போ எதையும் யோசிக்காம ஒரு மாசம் மெடிக்கல் லீவ் போட்டு அப்பா கூட இருக்கப் போறேன். நீயும் தேவிகுளம் போ, பாரு சன் டேன் ஆகி என் ப்ரண்ட் அழகு குறைஞ்சிப்போச்சு” என்று அவனை தேற்றினாள் தாரிணி.
பிரதாபன் அன்றும் ஊர் திரும்பவில்லை. மதியம் மூன்று மணி போல் பொன்னச்சன் உறக்கத்தில் இருக்க, நசீர் கடைக்குப் போயிருந்தார். வினயன் மின்மினியை அழைத்தான்.
எதுவும் பேசாமல் அவள் வந்து நின்றாள். சிலர் எப்படி வருகிறார்கள், ஏன் வருகிறார்கள் என்று தெரியவில்லை. வந்தவர் போகும்போது நம்மில் சிறு துளியாய் நிறைகிறார்கள். நம்மையும் சிறு துளியாய் எடுத்துச் செல்கிறார்கள் போல. அப்படித்தான் எதையோ இழந்து, எதையோ கொடுத்த உணர்வில் இருந்தாள் மின்மினி.
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருந்தா சேட்டா கிட்ட சொல்லியிருப்பேன். இப்போ நான் யார், ஏன் வந்தேன் எதுவும் அவருக்குத் தெரியாது. தாரிணி எதுவும் சொல்லல போல, அவரும் என்னை கேட்கல. போன் பண்ணி ஊருக்குப் போறேன்னு மட்டும் சொல்லிட்டேன். தேவிகுளம் வந்தா மீட் பண்ணுவோம் மின்மினி” என்றான்.
வினயனுக்கு அதுவரை எப்படா வீட்டுக்குப் போவோம் என்ற எண்ணம்தான். மின்மினியின் கண்களை கண்டவன்
“டல்லாயிருக்கியே மினி? ரொம்ப வேலையா?” என்று அக்கறையாகக் கேட்க
“இல்ல” என்று மறுத்தாள்.
“என் நம்பர் உன்கிட்ட இருக்கு’ல்ல. ப்ரீயா இருக்கப்ப கூப்பிடு” என்று சொல்லி தேவிகுளம் நோக்கி மகிழ்ச்சியாகப் புறப்பட்டவன் இரண்டே நாளில் திரும்பி வருவான் என்று மின்மினி எதிர்ப்பார்க்கவில்லை.
வினயனே எதிர்ப்பார்க்கவில்லை.
**********
மின்மினிக்கு அவன் வருகை அதிர்ச்சியாக இருந்தாலும் ஆனந்தப்படுத்தவில்லை.
“என்ன மின்மினி? நான் வந்திருக்கேன். நீ சந்தோஷப்படுவன்னு பார்த்தா…” என்று உற்சாகமாக வந்தவனின் உள்ளம் மின்மினியின் உற்சாகமின்மையில் வாடியது.
“தாரிணி சேச்சிக்கு வேண்டி தன்னே வந்தது?” என்று மின்மினி கேட்க
“ம்ஹூம்!” என்று புன்னகை மன்னன் தலையாட்டினான்.
“பின்னே?”
“மின்மினிக்கு வேண்டி வந்தேன். மின்மினியை மிஸ் செஞ்சதால வந்தேன். மின்மினியை மிஸ் செய்யக் கூடாதுனு வந்தேன்” என்று சட்டென்று வினயச்சந்திரன் ஆவலாக காதல் சொன்னான்.
மின்மினியோ பூரிப்பெல்லாம் அடையவில்லை.
“தாரிணி சேச்சிக்கு வேண்டி புது டிராமாவோ?” என்று கேட்க
“எங்க அச்சச்சன் அப்பவே சொன்னாரு. அது உண்மைதான்” என்றான் கடுப்பாக.
“எந்தோ?” என்று மின்மினி விழிகள் உயர்த்த
“மாவேலிக்கராகாரிக்கு அஹங்காரம் கூடுதலானுன்னு சொன்னார். அது சத்தியம்” என்றான் நக்கலாக.
“ஒஹ் பின்னே? அஹங்காரம் கூடுதலானு உள்ள பெண்குட்டி நினக்கு வேண்டாம்” என்றாள் மின்மினியும்.