வெள்ளையும் ஆரஞ்சும் கலந்த நிறத்திலிருந்த வண்ணாத்திப்பூச்சி வெள்ளைப்பூவொன்றின் மீது சிறகடித்து தேன் குடித்துக்கொண்டிருந்தது. அந்த பூ எப்போது மலர்ந்தது என்று யாருக்கும் தெரியாது. இரவும் பகலும் மாறிடும் இடைவெளி நேரம் நமக்குப் புலப்படுவதில்லை. மெல்ல மெல்ல மாற்றம் கொண்டு ஏதோவொரு நொடியில் மொத்தமாய் இரவு கவிழும் இல்லை பகல் புலரும். வினயனுக்கு மின்மினி மீதான ஆவலும் காதலும் அப்படியான ஒன்று. பூ மலர்ந்தது போல் அவன் காதல் என்றால், அந்த கணம் அவனுக்குப் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பாக இருந்தது.
ஆவலும் படபடப்புமான ஒரு பொழுது. எப்போது மின்மினி வருவாள் என்ற பதற்றமும் என்ன சொல்வாள் என்ற அச்சமும் என்று அதுவரை இல்லாத உணர்வில் உழன்றான் வினயச்சந்திரன்.
ஆர்வமாய்ப் பார்த்தான், அக்கறையாக இருந்தான். பிரியும்போது கூட சிறிதாக வருந்தினாலும் அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை. மின்மினியிடம் பேசி பொழுதைப்போக்கியவனுக்கு ஊருக்குச் சென்றபின்னும் அவள் நினைவே. ஏற்கனவே அவள் மீது அவனுக்கு நிறைய பரிவுண்டு. உறவு என்று அறிந்த பின் உரிமையும் தோன்றியது. ஊருக்குச் சென்றால் கொஞ்சமாக இருக்கும் குழப்பமும் நீங்கிவிடும் என்று நினைத்திருக்க அப்படியில்லை.
அப்பா பெண் பார்க்கிறேன் என்றதும் பிடித்த பெண் என்றால் மின்மினி முகமே முன்னே மின்னியது. மின்மினியைப் பிடித்திருந்தால், அவளுக்கும் என்னை பிடித்தால் என்ன பிரச்சனை என்று நினைத்தான். அவளுக்கும் அவனுக்குமான மொழி, இன வேறுபாடுகள் எதுவும் குறுக்கே நிற்கவில்லை.
எப்படியும் என் அச்சம்மாவின் உறவுதானே என்ற நம்பிக்கை இருந்தது. அவனது ஒரே கவலை மின்மினியின் எண்ணம் என் மீது என்னவாக இருக்குமென்பதே.
மின்மினியும் மூன்று மணிக்கெல்லாம் இரப்பன்பாறா வெள்ளச்சாட்டாம் வந்துவிட்டாள். அந்த அருவிக்கரையை நீரின் ஓசை நிறைத்திருந்தது. பொதுவாக மழையில்லாத காலமது, மிக மிக அரிதாய் எங்காவது மழை பெய்யும். அன்று அப்படியான ஒரு நாள். பெரிய மழையில்லை என்றாலும் காலை முதல் லேசான தூறல்.
இரப்பன்பாறா வெள்ளச்சாட்டத்தின் நீர் கரை புரண்டு ஓட, ஒருபக்கம் கருங்கற்பாறைகள் இருந்தன. புல்தரையில் நிறைய செடிகளும் பூந்தொட்டிகளும் இருந்தன. சாலையோரமிருந்தாலும் பெரிதான சுற்றுலாத்தலமில்லை. ஊரோடு இயைந்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது அருவி.
“எந்தா பறையணும்?” என்று மின்மினி மிடுக்காகக் கேட்டாள். வெள்ளையில் வண்ண வண்ணபூக்களால் நிறைந்த சுடிதார் அணிந்திருந்தாள் மின்மினி. துப்பட்டா காற்றில் பறக்க அதனை கழுத்தை சுற்றிப்போட்டவள்
“இங்க நின்னா ரோட்ல போறவங்க பார்ப்பாங்க, அந்த பக்கம் வா” என்று நீரோட்டம் இரண்டாய்ப் பிரியுமிடத்திற்கு அழைத்துப்போனான். அப்படியே கொஞ்ச தூரம் நடக்க தென்னை மரங்களுக்கு நடுவே அருவியின் நீர் அமைதியாக வாய்க்காலில் ஓடிக்கொண்டிருந்தது.
வாய்க்காலுக்கு மேலே சிமெண்டில் சிறிய திண்டு இருக்க, செடிகளுக்கு நடுவே நடந்து அந்த சிமெண்ட் திண்டில் செருப்பை ஓரமாய் விட்டு நடுவே அமர, மின்மினியும் அவனை போல் அமர்ந்தாள். மின்மினி மனது பட்டாம்பூச்சியாய்ப் படபடத்து. அச்சச்சனுக்கும் ஏட்டனுக்கும் தெரியாமல் சொல்லாமல் வந்திருக்கிறாள், அந்த அச்சம் ஒரு பக்கம். இவன் சொல்லிய காதல் கொடுத்த பரவசம் ஒரு பக்கம் என்று இருமுக உணர்ச்சியில் தவித்தாள்.
வினயனுக்கு எப்போதும் காதலுக்குத் தூது போய் பழக்கம். பெண்களிடம் எந்த மிடுக்கும் காட்டாது இயல்பாகப் பேசி பழகுபவன், அதனால் மின்மினியிடம் பேச பயமெல்லாமில்லை. இருந்தாலும் அத்தனை நாள் பேசியதும் பழகியதும் வேறு, இன்றைய உணர்வு வேறல்லவா? அதை சரியாக அவளிடம் கடத்த வேண்டும், அவள் என்ன சொல்லுவாளோ என்ற கவலை என்று வினயனுக்கும் படபடப்பிருந்தது.
படபடப்பாக இருந்தாலும் காதல் சொல்லித்தானே ஆக வேண்டும் என்று நினைத்தான். நண்பர்களை, அவன் அண்ணனை எல்லாம் காதல் சொல்ல தயங்குகிறார்களே என்று திட்டியிருக்கிறான். காதல் சொல்வது எளிதென்றாலும், காதலை ஏற்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புதானே அதனை சொல்லவே அத்தனை தயக்கம் கொடுக்கிறது? வினயனுக்கு அந்தவுணர்வு அப்பட்டமாக இன்று விளங்கியது.
சிறிது நேரம் ஓடிய நீரைப் பார்த்தவன் மின்மினியிடம் திரும்பி, “உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்” என்றான் ஆழமான குரலில். மிக மிக மென்மையாக அவன் சொல்ல அந்த சொற்களின் சுவை மின்மினியைக் குளிர வைத்தது.
“அம்மா மேல சத்தியம்!” என்றான். மின்மினி கண்கள் அவனையும் அவன் சொற்களையும் மெல்ல பருகின. தவிப்பாக அவனை பார்க்க
“நான் முன்னாடியே இதெல்லாம் சொன்னதில்ல மினி..மின்மினி!” என்று ரசித்து சொன்னவன் “உன் பெயர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம் நீ சமைக்கிறது, பேசுறது எல்லாம் பிடிக்கும். உன்கூட இருந்தப்ப நான் உன்னை ரொம்ப க்ளோஸா பீல் பண்ணினேன் மின்மினி. எங்க அச்சம்மா கூட நான் ரொம்ப க்ளோஸ், சின்ன வயசுல இருந்தே டெய்லி அவங்க வீட்டுக்கு நானும் என் அண்ணாவும் போய்டுவோம். அவன் அச்சச்சன் கூட சுத்தினா நான் எங்கச்சம்மா பின்னாடி சுத்துவேன். எங்கச்சம்மாவோட செல்லப்பேரன் நாந்தான்!” புன்னகை நீள பெருமையாகச் சொன்னான்.
“எங்கம்மான்னா எனக்கும் ஜெய்க்கும் ரொம்ப இஷ்டம். உடம்பு சரியில்லாம திடீர்னு ஒரு நாள் அவங்க போய்ட்டாங்க, அவங்களை நான் இப்பவும் ரொம்ப மிஸ் பண்றேன். அதுவரைக்கும் அம்மாவோட சாப்பாட்டுல இருந்து, அம்மாவோட பேச்சு, ஏன் அம்மா முகம் பார்க்கிறதுன்னு சாதாரணமா என்னைக்குமிருக்கும்னு நினைச்ச விஷயமெல்லாம் இல்லாம போச்சு. என்னை எங்கப்பாவும் ஜெய்யும்தான் அப்பவும் பார்த்துக்கிட்டாங்க, இப்பவும் அப்படித்தான்!”
“எங்கம்மா கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ அவங்களுக்கு அம்மா இல்ல, எதை எப்படி செய்யணும்னு சொல்ல ஆளில்லை. மாமியாரும் கிடையாது. அச்சம்மா சொல்றதைதான் அம்மா செய்வாங்க. உன்கிட்ட நான் என் அச்சம்மாவையும் அம்மாவையும் பீல் பண்ணினேன் மினி” என்றதும் மின்மினிக்கு அதிர்ச்சியாகவும் அதே நேரம் அந்தவுணர்வை கிரகிக்க முடியாமலும் இருந்தது.
“அது பெரிய விஷயமில்லை. அச்சம்மாவோட தங்கச்சிப் பேத்தி நீ! அவங்களோட பழக்க வழக்கமெல்லாம் உனக்கு இருக்கிறது சகஜம்தானே? பட் எனக்கு ஏன் அப்படி க்ளோஸா பீல் ஆச்சுனு ரொம்ப யோசனை, என்னால அதை உன்கிட்ட சொல்லவும் முடியல. ஆனா சந்தோஷமா இருந்தது, நமக்குப் பிடிச்சவங்க மாதிரி இன்னொருத்தங்க இருந்தா அவங்களையும் நமக்குப் பிடிக்கத்தான் செய்யும். அல்லே?” என்று அவளிடம் கேட்க, மின்மினியும் தலையசைத்தாள்.
அச்சம்மாவிற்கும் அச்சனுக்கும் பிறகு அவளை மின்மினி என்று அழைப்பதாகட்டும், அவளை பாராட்டுவதாகட்டும் அவளிடம் அதிகம் பேசியதாகட்டும் எல்லாம் வினயச்சந்திரனே!
“அதெல்லாம் ஒரு ரீசனா இருந்தாலும் எனக்கு மின்மினியை அவளுக்காகவும் பிடிச்சது. ஆனா சொன்னா சோறு கிடைக்காதே, உன் ஏட்டா களரில என் மேல கதகளி ஆடிடுவார்னு சொல்லல. தாரிணி கிட்ட கூட சொல்லியிருக்கேன் இந்த ஆலப்புழக்காரி அழகின்னு” என்று வினயச்சந்திரன் ஒற்றைக் கையில் கன்னம் ஊன்றி, அருகே இருந்தவளை கண்களவு செய்து ரசனையாய்ச் சொல்ல அந்த நொடியை சொல்லுக்குள் அடைத்தால் கவிதையாகிவிடும்.
“நானும் கொஞ்ச வெயிட் பண்ணலாம்னு நினைச்சேன். ரெண்டு நாள்ல என் தொல்லை தாங்காம எங்கப்பா துரத்திவிட்டுட்டார். அப்படி ஒன்னு காலேஜ் படிக்கிற பையன் இல்ல, என்னோட பீலிங் என்னனு எனக்குப் புரியற வயசுதான் மினி. என்னைக்கா இருந்தாலும் சொல்லித்தானே ஆகணும், லேட் பண்ணிட்டா உன் ஏட்டனும் அச்சச்சனும் கோட்டயத்துக்காரனுக்கோ கொல்லம்காரனுக்கோ உன்னைக் கட்டிக்கொடுத்துட்டா. அதான் போன வேகத்துல திரும்பிட்டேன்”
“இந்த தேஷியக்காரியை விட்டு இருக்க முடியல.” என்று சிரிப்பை அடக்கியவன் மூச்சை இழுத்துவிட்டு சட்டென்று மின்மினியின் கையைப் பற்றினான்.
“உன்னை பொன்னு போல பார்த்துப்பேன் மின்மினி. எனக்கு வேற என்ன சொல்றது தெரியல” என்று தயங்கி, என்ன சொல்வதென்று தெரியாத பாவனையோடு அவன் பார்க்க, அது கூட மின்மினிக்குப் பிடித்தது.
கொஞ்சம் அவன் மேல் கோபமிருந்தது. ஆனாலும் அவன் சொன்னது போல் இன்னும் காலம் தாழ்த்தினால் தன் ஏட்டன் வேறு மாப்பிள்ளை கொண்டு வந்து நிறுத்துவான் என்று தெரியும். இப்படி அவள் யோசிக்க
வினயன், “உனக்கு இஷ்டமா சொல்லு” என்று கேட்க, பிடித்திருந்த கரங்களில் பதிந்தது மின்மினி பார்வை. அவள் பார்வை கண்டு சட்டென்று கையை விட்டான் வினயச்சந்திரன். அதில் மின்மினிக்குச் சிரிப்பு வர புன்னகையில் இன்னும் அழகியாய்த் தெரிந்தாள்.
வெள்ளச்சாட்டத்தின் நீர் ஓடிக்கொண்டிருக்க குளுமை நிறைந்த பொழுது. சுற்றிலும் தென்னை மரங்கள், பச்சை பசுமையாய் வெவ்வேறு வகையான செடிகள். அதில் பூத்திருந்த மஞ்சள் பூக்கள். இடையிடையே அந்த காட்சிக்கு வண்ணம் சேர்ப்பது போல் சில வண்ணத்துப்பூச்சிகள் வட்டமடிக்க, அந்த சூழலில் வெள்ளை உடையில் பளிச்சென்றிருந்த மின்மினியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல வினயனுக்குத் தோன்றியது.
“இஷ்டம்” என்றாள் மெல்ல.
“இஷ்டமோ?” என்று உற்சாகத்தில் வினயன் கத்த
“அச்சோ! கத்தாத!” என்றாள் பதறி.
“நிஜமா இஷ்டமா?” மீண்டும் ரகசியக் குரலில் கேட்க
“இஷ்டம்! இஷ்டம்! எனிக்கிஷ்டம்! வளர வளர இஷ்டம். மனசிலாயோ?” என்றாள் அவன் காதருகே சத்தமாக.
“எண்ட பகவதியம்மே!” என்று வானம் பார்த்தான் வினயன். புன்னகையின் முகமாய் அவன்!
அண்ணாந்து பார்க்கும்போது ஆகாயத்தில் நிலா தட்டுப்பட்டால் ஒரு அலாதி உணர்வு வருமே. அதுவும் இரவுக்கு முன் பிற்பகல் பொழுதில் யாரும் காணா நேரம் நாம் கண்டால் ஒரு சிறு பூரிப்பு தோன்றுமே. வினயன் நிலை அதுவே.
கண்களை மூடி அந்த உணர்வை அனுபவித்தவன் மின்மினியின் கண்களைப் பார்த்தபடி கையைப் பற்றினான்.