வினயச்சந்திரன் பிரதாபனிடம் அவ்வளவு கோபத்தை எதிர்ப்பார்க்கவில்லை. பிரதாபனும் எதிர்ப்பார்க்கவில்லைதான்! வினயனின் குணம், அவன் மீது தோன்றிய பரிவுணர்வு என்று அத்தனையும் பொய்யான ஆத்திரம். அவன் அச்சச்சன், அச்சன் போல அவனும் முட்டாள்தானே என்ற ஏமாற்றம். நம்பியவர்களும் நண்பர்களும் ஏமாற்றுவதும், அவர்கள் ஏமாறுவதும் வழக்கமாகவும் வாழ்க்கையாகவும் மாறிய அதிர்வு, ஏமாற்றம் எதையும் அக்கணம் தாங்க முடியவில்லை.
ஆராயவும் அறியவும் அவன் மனம் இடம்கொடுக்கவில்லை. வினயச்சந்திரன் தங்கையைக் காதலிக்கிறான் என்பதால் வந்த கோபமா? இல்லை தன்னை ஏமாற்றியதால் வந்த கோபமா என்று பிரித்தறியா முடியாத நிலையிலிருந்தான் பிரதாபன். சில நாட்களாக பிரதாபன் கொஞ்சம் நல்ல மன நிலையில் இருந்தான், வீடு கிடைக்கப்பெற்றதும் தங்கைக்குத் திருமணம் செய்துவிடலாம் என்று அவன் கற்பனைகள் செய்திருக்க, தங்கை அவனுக்கே தெரியாமல் வினயனுடன் ஊர் சுற்றியிருக்கிறாள்.
மின்மினியும் தன்னை ஏமாற்றியிருக்கிறாள் என்று தெரிய, பிரதாபன் வெகுவாகக் காயப்பட்டுப் போனான். மின்மினியை அவன் குழந்தையாகவே பார்த்தான். தாயும் தந்தையும் உடனில்லாது போக, என் தங்கைக்கு நான்தான் எல்லாம் பார்க்க வேண்டும் என்று நினைத்து, அத்தனையும் பார்த்து பார்த்து செய்தவனுக்குப் பெரிய ஏமாற்றம். காதலிப்பதை அவன் குற்றமாக நினைக்கவில்லை, அதே நேரம் என்னிடம் சொல்லவில்லையே, என்னை விட நேற்று வந்தவன் முக்கியமாகிப்போய்விட்டானா என்ற ஆற்றாமை.
அதைவிட வினயன்? அதைத்தான் இன்னும் ஏற்கமுடியவில்லை. நேற்று பாதிரா மணலில் வினயன் மின்மினியின் தோளில் கைப்போட்டபடி ஏதோ சொல்ல, மின்மினி முகமெல்லாம் புன்னகையுடன் அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தது அழகாய்ப் புகைப்படமானது, நண்பர்களோடு பாதிரா மணல் சென்ற ஜேக்கப் அதனை பிரதாபனுக்கு அனுப்பி வைத்திருக்க, பிரதாபனுக்கு நம்பவே முடியவில்லை.
கண்மூடிய ஆத்திரத்தை எல்லாம் வினயனிடம் காட்ட, வினயச்சந்திரன் மின்மினியிடம் நேற்றே சொல்ல சொன்னான். பிரதாபன் வீடு வர தாமதாக மின்மினி சொல்லவில்லை. காலையில் சொல்லலாம் என்று வினயன் வர, அதற்குள் காலம் தாழ்ந்துவிட்டது.
காலம் உண்மையின் அடர்த்தியை எப்போதும் குறைத்துவிடும். வினயச்சந்திரனின் காதலை அவனோ, மின்மினியோ அவர்கள் வாய்மொழியாக சொல்லியிருந்தால் வேறு. நாம் தேடும் உண்மைகளுக்கும், நம்மைத் தேடி வரும் உண்மைகளுக்கும் அதனை நாம் அணுகும் விதத்திற்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.
“சேட்டா! நான் சொல்றதைக் கேளுங்க” வினயச்சந்திரன் தன்னை புரிய வைத்திடும் நோக்கில் கத்த, பிரதாபனின் கோபம் மட்டுமே வெளிப்பட்டது.
“எந்தாடா? என்ன பேசணும்? ஒன்னும் பறையண்டா! கள்ளன்” என்று சரமாரியாகக் கன்னத்தில் அடிக்க, வினயன் தடுப்பதற்காகக் கையை நீட்ட, பிரதாபனின் வேகத்தில் வினயன் தடுமாறி அங்கிருக்கும் பெரிய மரக்கட்டையின் மீது விழுந்தான்.
“ஏட்டா ப்ளீஸ்! எனிக்கு வினய் இஷ்டமானு ஏட்டா. ப்ளீஸ். அடிக்கண்டா” என்று மின்மினி வினயன் அடிவாங்குவது பொறுக்காது அழுகையோடு சொல்ல, பிரதாபன் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. வினயன் விழுந்த வேகத்தில் மரத்தில் நன்றாக மோதிக்கொண்டான், அதில் தலையிலும் கன்னத்திலும் அடிப்பட்டு ரத்தம் வர, மீண்டும் அடிக்க போனான் பிரதாபன்.
“எத்தர பொய்? எத்தர கள்ளம்?” என்று பொறுக்காது அவனை நெருங்க, சத்தம் கேட்டு வந்த நசீர் அவனை தடுத்தார்.
“பிரதாபா? எந்தா இது? டா வினயா? என்னாச்சு?” என்று கேட்க, வினயன் பதில் சொல்லும் நிலையில்லை. வலி தாங்காது முகம் சுருக்கிக் கிடந்தான்.
“இதைப் பாருங்க” என்று நசீரிடம் பிரதாபன் தன் அலைப்பேசியை நீட்ட, அதில் வினயனும் மின்மினியும் ஜோடியாக நிற்பது கண்டு நசீரின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
“டா! என்னடா இது?” என்று வினயனை முறைக்க, மின்மினி அழுகையுடன் நிற்பது கண்டு பொன்னச்சனும் எட்டிப்பார்க்க, அவருக்கும் கோபம் வந்தது.
“ஜோலிக்காரனோட நினக்கு எந்தா பிரேமம்? எங்கனே தைரியம் வன்னு?(எப்படி உனக்கு தைரியம் வந்தது?)” என்று திட்ட, அழுதபடி மின்மினி வினயனிடம் போக
“மினி” என்று கத்தினான் பிரதாபன். கோபத்தின் குரலாக அது இருக்க, மின்மினி கண்ணீரோடு தன் ஏட்டனைப் பார்க்க, அவனோ
“வீட்டினுள்ளில் போ” என்று சத்தம் போட, பொன்னச்சனும் தன் பங்குக்கு வினயனை அடிக்க போக, யாரும் மின்மினியோ வினயனோ பேச வருவதைக் கேட்கத் தயாராக இல்லை. நசீருக்கு மனம் கேட்கவில்லை, ரத்தம் சொட்ட வினயன் இருக்க சாலைக்குச் சென்று வேகமாக ஆட்டோ பிடித்து வந்தவர்
“சின்ன பையன் தெரியாம செஞ்சிருப்பான், இப்படியே விட்டா எதாவது ஆகிடும் பிரதாபா” என்று சொல்லி வினயனை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை சென்றார்.
மின்மினியும் உடன் போக நினைக்க, பிரதாபன் கைகள் தங்கையின் கைகளை இறுகப் பற்றி வீட்டினுள் இழுத்துப்போயின. தங்கையின் கரத்தை விட்டவன்,
“நீயும் நுண(பொய்) பறஞ்சோ அல்லே?” பிரதாபன் தங்கைக்கென வாழ்பவனுக்கு அவளின் செயல் வருத்தம் கொடுத்திருக்க, மின்மினிக்கு அது புரியவில்லை. காதலிப்பவர்களுக்கு மட்டும் சிறு காலத்திலே உலகில் உன்னத உணர்வாய் காதல் மாறிப்போய் மற்றவை பின்னே போய்விடுகிறது. மின்மினிக்கு தன் ஏட்டனின் பிரியம் பின்னுக்குப் போய்விட, வினயன் மட்டுமே முன் நின்றான்.
வினயனுக்கு என்னவானதோ என்ற பதட்டமும் பயமும் அழுகை கொடுக்க, மின்மினிக்குப் பதில் பேச முடியவில்லை. பொன்னச்சன் பேத்தியைத் திட்ட, பிரதாபன் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான். நசீர் சென்று அரைமணி நேரம் மேல் ஆகிவிட, அவரிடமிருந்து தகவல் இல்லை என்றதும் பிரதாபனுக்கும் மனம் கேட்கவில்லை. நசீருக்கு அழைக்க, அவர் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று சொல்லவும் பிரதாபனும் அங்கு சென்றான்.
அங்கே தாரிணி கண்கள் சிவந்து, அழுது அத்தனை கோபமாக பிரதாபனை பார்த்தாள். வினயன் நேற்றே தாரிணியிடம் இன்று பிரதாபனிடம் அவன் காதல் விஷயம் பகிர போகிறேன் என்று சொல்லியிருக்க, தாரிணி காலையில் என்னவானது என்று கேட்க அழைத்திருந்தாள். அச்சமயம் வினயனை மருத்துவர் பரிசோதிக்க, அவனின் அலைப்பேசி நசீரிடம் இருந்தது. நசீர் எடுக்கவும் தாரிணி என்றதும் அவளிடம் எல்லாம் சொல்லிவிட, தாரிணி உடனே நண்பனைப் பார்க்க வந்துவிட்டாள்.
“தாரிணி?” என்று பிரதாபன் கேள்வியாக அவள் பக்கம் போனதுதான், தாரிணி கத்தித் தீர்த்தாள். அவளுக்காக, அவள் காதலுக்காக, அவள் நண்பனுக்காக என்று அத்தனை நாள் காட்டாத கோபம் அத்தனையும் கொட்டினாள்.
பிரியத்தை மட்டுமே பார்வையாலும், வார்த்தையாலும் காட்டிய தாரிணியின் கோபம் பிரதாபனை மிகுதியாகக் காயப்படுத்தியது.
“நீ எங்க இங்க?” என்று பிரதாபன் தாரிணிக்கு உடல் நலமில்லையோ என்று அக்கறையில் அவசரமாகக் கேட்க, தாரிணி வேகமாக பிரதாபனின் சட்டையைப் பிடித்தாள்.
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க? உங்க தங்கச்சியை லவ் பண்ணினா அடிப்பீங்களா? என்ன செஞ்சான் அவன் அப்படி? உங்களை மாதிரி லவ் பண்ணிட்டு அதை ஒத்துக்க கூட மனசில்லாம விட்டுட்டு எல்லாம் என் ப்ரண்ட் போக மாட்டான்.” என்று தாரிணி கோபமாகப் பேச
“ப்ரண்ட்?” பிரதாபன் புரியாமல் பார்த்தான்.
“ஆமா ப்ரண்ட்தான்! என்னோட பெஸ்ட் ப்ரண்ட். அப்படியென்ன நீங்க மினிக்கு வினயனை விட நல்ல பையன் பார்த்திடுவீங்க? அவன் உங்க வீட்ல வேலை செய்றவன்னு இளக்காரமா? அவன் ஒன்னும் வேலைக்காரன் இல்லை. அவன் உங்க தங்கச்சிக்காக ஒன்னும் அங்க வரல, எனக்காக வந்தான்” என்று கண்ணீர் கன்னம் நனைத்தவண்ணம் தாரிணி பேச, பிரதாபனுக்கு வினயன் தாரிணிக்காக தன்னிடம் பேசிய தருணங்கள் நினைவில் வந்தன.
பிரதாபன் பேசாமல் அப்படியே நிற்க, தாரிணி கொஞ்சமும் தணியாத கோபத்தோடு அவன் சட்டையில் இருந்த கையை எடுக்கவில்லை.
“அவனுக்கு யாருமில்ல நினைச்சீங்களா? அப்படி நினைச்சுத்தானே கை வைச்சிருக்கீங்க? அதுவும் ரத்தம் வர அளவுக்கு அடிச்சிருக்கீங்க? மனுசனா நீங்க? அவங்க வீட்ல எப்படி இருக்க பையன் தெரியுமா? அவன் யார் மேல அன்பு வச்சாலும் அவங்களை கடைசி வரை விட மாட்டான். உங்களை மாதிரி இல்லை!” என்று சத்தம் போடும்போதே நசீர் மருந்து வாங்க போனவர் வந்துவிட்டார். பிரதாபனிடம் தாரிணி சட்டையைப் பிடித்து சண்டை போடும் காட்சி கண்டவருக்குத் தாங்கவில்லை.
“மோளே! என்ன பண்ற?” என்று தாரிணியைப் பிடித்து விலக்கியவர்,
“அந்த பையன் வினயன் மேலதானே தப்பு? நம்பினவங்க வீட்டு பொண்ணுகிட்ட என்ன பொல்லாத பிரேமம் வேண்டியிருக்கு அவனுக்கு? பிரதாபன் அவன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தான் தெரியுமா? உன் கூட்டுக்காரனுக்காக நீ நம்ம பிரதாபனை பேசுவியா? ” என்று நசீர் பேசவும் தாரிணி அவரிடம்
“போதும் நசீரிக்கா! அவன் எனக்குப் ப்ரண்ட்தான், அதைவிட உங்க பிரதாபனுக்கு அவன் சொந்தம். இப்போ எப்படி அவர் முத்தஸ்ஸீயைப் பார்ப்பார்? அவங்களோட செல்லப்பேரன் வினயனை இப்படி அடிச்சு வச்சிருக்காரே?” என்று கேட்க, பிரதாபன் தாரிணியை அசையாது பார்த்தான்.
பிரதாபன் யாரும் அவனை முக்கியமாக நினைக்கவில்லை என்ற எண்ணத்தில் நின்றிருந்தான். அதுவும் அவன் பிரிய தாரிணி? தாரிணிக்குத் தன்னைப் புரியவில்லையே என்ற பொங்கெழுச்சி அவனை பலமாக தாக்கியது. என் ஏமாற்றம் இவளுக்குத் தெரியவில்லையா என்று வருந்தி நின்றாலும் வார்த்தையால் கூட அதனை காட்டவில்லை.
“என்ன சொல்ற தாரிணி?” என்று நசீர் தாரிணியிடம் கேட்க
“வினயனோட ஊர் தேவிகுளம். இவரோட அச்சம்மாவோட அக்கா பத்மினி வினயனோட அண்ணிக்கு அச்சம்மா.” என்றவள் வினயனின் படிப்பு, தொழில் அத்தனையும் சொல்ல, நசீர்
“அப்புறம் ஏன் அவன் பொய் சொல்லி இங்க வந்தான்?” என்று தாரிணியிடம் கேட்க,
“அதை உங்க பிரதாபன் கிட்ட கேளுங்க” என்றவள் வினயன் இருந்த அறைக்கு முன்பாக உட்கார்ந்தாள். தாரிணி பிரதாபனிடம் காட்டிய உரிமை, அவள் பேச்சு எல்லாம் நசீருக்குப் புரிய, பிரதாபனை அவர் எதுவும் கேட்கவில்லை. அதுவும் வினயனும் தாரிணியும் நண்பர்கள் என்றதிலே அவருக்குப் புரிந்தது.
போகும்போது தாரிணியைப் பிரதாபனின் பார்வைத் தொட்டுப்போக, அவள் பார்வையோ அவன் பக்கமில்லை.
***************
ஜெய்ச்சந்திரன் காலை முதலே தம்பிக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பி ஓய்ந்திருந்தான்.
“இந்த எருமையோட” என்று மனதில் திட்டியவன் தம்பிக்கு அழைக்க, அச்சமயம் பிரதாபன் மருத்துவமனை வந்து போயிருந்தான். நசீர் அலைப்பேசியைத் தாரிணியிடம் தந்திருக்க ‘ஜெயேட்டா’ என்று அழைப்பு தொடர்ந்து வர, தாரிணியும் அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ ஜெயண்ணா!” என்று தாரிணியின் குரலில் ஜெய்ச்சந்திரனுக்குச் சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை. என்றாலும் கூட நண்பனின் அலைப்பேசியை எடுப்பது சகஜம் என்று நினைத்தவன்,
“தாரிணி! எப்படி இருக்கமா? வினயன் எங்க?” என்று விசாரிக்க
“அண்ணா!” என்ற தாரிணி வினயனும் மின்மினியும் விரும்புவது, பிரதாபன் வினயனை அடித்தது, இப்போது மருத்துவமனையில் இருப்பது என்று எல்லாம் சொல்லிவிட, ஜெய்ச்சந்திரனுக்கு அவ்வளவு கோபம். அதைவிட கலக்கம்.
என் தம்பியை அடித்தானா என்ற எண்ணமே அவனை வேகமாக எழ வைக்க, “ நான் வரேன் தாரிணி” என்று போனை வைத்தவன் வேகமாக தன் ஜீப்பை எடுத்தான்.
“ஏடா ஷஜி! நான் வெளியே போறேன்” என்று சொல்லி ஜீப்பை கிளப்பியவன், போகும் வழியில் அப்பாவுக்கு அழைத்தான்.
“அப்பா! வினயன் எங்க போயிருக்கான் தெரியுமா?” என்று கேட்க
“அது ஜெய்… அவனே உங்கிட்ட சொல்றேன் சொன்னான் டா” என்ற பாலச்சந்திரனின் பதட்டத்தில்
“அப்போ நீங்களும் அவனும் சேர்ந்துதான் கூட்டுக்களவாணித்தனம் பண்ணியிருக்கீங்க? வந்து பேசிக்கிறேன் இருங்க” என்று கத்தியவன் மாவேலிக்கராவுக்கு விரைந்தான்.
காலையில் கிளம்பியவன் முன்மாலையில் சென்று சேர்ந்தான். நசீரிக்கா மட்டும் உடனிருக்க, பூவம்பள்ளில் வீட்டில் மின்மினியைப் பொன்னச்சன் வார்த்தைகளில் வாட்ட, மின்மினி
“வினயன் ஜோலிக்காரன் இல்லை, அவரும் நமக்கு சொந்தம். நம்ம முத்தஸ்ஸியோட சொந்தம்” என்று சொல்ல
“என்ன அந்த அச்சுதனுக்குச் சொந்தமா? உன்னை தேவிகுளத்துக்கு அனுப்புவேன் நினைச்சியா? இந்த பூவம்பள்ளில் பொன்னச்சன் பேத்தி ஒரு தமிழனைக் கட்டுறதா?” என்று கத்திக்கொண்டிருந்தார். சொந்தம் என்ற பின்னும் கூட அவர் அப்படி பேச மின்மினிக்கு அவரிடம் பதில் பேச முடியவில்லை. அமைதியாக சென்று அறைக்குள் அடைந்தாள். நசீரும் வினயன் விழித்தால் சொல்ல சொல்லிவிட்டு வீடு சென்றார்.
மின்மினி நசீர் வரவும் அவரிடம் வினயன் குறித்துக் கேட்க, “அவன் நல்லாயிருக்கான், நீ போ மினிமா” என்று சொல்லும்போதே பொன்னச்சன் பேத்தியை முறைத்தார். அவள் அன்று எதுவும் சமைக்கவில்லை. பிரதாபனும் வீடு வரவில்லை.
மூன்று மணி கடந்த பின் பிரதாபன் வீடு வர, பொன்னச்சன் அவனிடம் பேத்தி சொன்னதை சொல்ல, பிரதாபன் மின்மினி அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.
“உனக்கு முன்னாடியே எல்லாம் தெரிஞ்சும் எங்கிட்ட மறைச்சிருக்க இல்ல?” என்று கேட்டவன் அவள் பதிலை எதிர்ப்பார்க்காது அவன் அறைக்குச் சென்றான்.
சிறிது நேரத்தில் வாசலில் சத்தம் கேட்கவும்,
“எந்தோ சப்தம் இவிட?” என்று எட்டிப்பார்க்க, ஜெய்ச்சந்திரனின் ஜீப் வாசலில் நின்றது. வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கோபமாக உள்ளே நுழைந்த ஜெய்ச்சந்திரனை பிரதாபன் திண்ணையில் நின்றபடி பார்த்தான். பொன்னச்சன் மருந்து உண்டு உறங்கியிருக்க, நசீர் யாரது என்று ஷெட்டிலிருந்து எழுந்து பார்த்தார்.
“டேய்! நீதான் பிரதாபனா? என்ன தைரியமிருந்தா என் தம்பி மேல கை வைப்ப?” என்று பிரதாபனை அடிக்க போனான் ஜெய்ச்சந்திரன். நசீர் சட்டென்று குறுக்கே வந்தவர்
“மோனே! நீதான் வினயனோட அண்ணனா?” என்று கேட்க, அவர் குரலில் பக்கவாட்டில் திரும்பினான் ஜெய்.
அதற்குள் வாசற்படியில் இறங்கி கீழே வந்து, “நான்தான் பிரதாபன்! உங்க தம்பியை நான்தான் அடிச்சேன்” என்ற பிரதாபனின் கம்பீரக் குரலில் ஜெய்ச்சந்திரனுக்கு இன்னும் கோபம் கிளம்பியது.
“காதலிச்சா அடிப்பியா நீ? என்ன திமிரா?” என்று ஜெய்யும் கோபமாகக் கேட்டான்.
“மோனே! கோபம் வேண்டா, எல்லாம் குழப்பமாயி. வினயன் மேல தப்பு, நீ பிரதாபன் கிட்ட கோபம் காட்டாத” என்று நசீர் பொறுமையாக சொல்ல, வாசலில் பேச்சுகுரல் கேட்டு மின்மினி ஓடி வந்தாள்.
“ஜெயேட்டா” என்று அவள் அழுதபடி ஜெய் பக்கம் செல்ல, பிரதாபன் தோற்றதாக உணர்ந்த கணம் அது. உள்ளத்தில் கனம் கூடிய உணர்வு.
“வினய் எப்படி இருக்கார், எல்லாம் என் தப்பு. சாரி ஜெயேட்டா” என்று அழுதாள். முன்பே அவனை கண்டு பேசியிருக்கிறாள் தானே?
“நீ ஏன்மா அழற? அவன் நல்லாயிருக்கான். நீ அழாதம்மா” என்ற ஜெய்
“மிஸ்டர். பிரதாபவர்மா, நல்லா கேட்டுக்கோ. என் தம்பி வினயச்சந்திரனுக்கு உன் தங்கச்சி மின்மினிதான் மனைவி. காதலிச்சா அடிப்பியா நீ?” என்று பிரதாபனை முறைத்தான்.
பிரதாபன் தன் முன் கோபமாக நின்றவனை பார்த்தான். வினயச்சந்திரன் போல் முகத்தில் விளையாட்டுத்தனமில்லை. தன்னை விட இரண்டொரு வயது பெரியவனாகத் தெரிந்தான். முழுக்கை சட்டையை மடக்கி விட்டு, வேட்டியை மடித்துக் கட்டி முகத்தில் கோபம் என்ற உணர்வை மட்டும் தாங்கி நின்றான். கோபத்தையும் தாண்டி பிரதாபனுக்கு வினயச்சந்திரன் மேல் ஜெய் வைத்திருந்த பாசம் புலப்பட்டது, புரிந்தது.
வினயன் சொல்லி பிரதாபன் கற்பனை செய்திருந்த அவன் அண்ணனின் தோற்றத்துக்கு அப்படியே எதிராக ஒரு தோற்றம், தெளிவு, கம்பீரம் என்றிருந்தான் ஜெய்ச்சந்திரன்.
“ஓஹ் பின்னே?! சேட்டா! உங்க குடிகார அச்சன் எப்படி இருக்கார்? நீங்க பொறுப்பில்லாம ஊர் சுத்துறதா வினயன் சொன்னான். ஆனா நீங்க வினயனுக்காக இங்க வந்து சண்டை போடுறீங்க?” என்ற பிரதாபனின் குரலில் நிச்சயம் நக்கல் நிரம்பியிருந்தது.
“என்ன? குடிகார அச்சனா?” என்று ஜெய் கோபத்தோடு பிரதாபனை அடிக்க முன்னே வர, நசீர் அவன் கையைப் பிடித்து,
“அவனை ஏன் அடிக்க போற, அந்த தெண்டி வினயன் அப்படித்தான் எங்ககிட்ட சொன்னான்” என்றார். ஜெய் அதிர்ச்சியாக பார்க்க,
“உங்க தம்பியை காதலிச்சதால அடிக்கல, கள்ளம் பரஞ்சதால அடிச்சேன். ஞான் பரஞ்சது சேட்டனு மனசிலாயி என்னு விசாரிக்குன்னு”(நான் சொன்னது அண்ணனுக்குப் புரிஞ்சதுனு நினைக்கிறேன்) என்று அழுத்தமாக சொன்ன பிரதாபன் அங்கே நின்ற மின்மினியை ஒரு பார்வை பார்த்தபடி, அவன் புல்லட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினான். ஜெய்ச்சந்திரன் தம்பி ஏதோ செய்திருக்கிறான் என்று புரிய, மீண்டும் மருத்துவமனை சென்றான். தாரிணி நண்பனுடன் இருந்தாள்.
“ஜெயேட்டா” என்று வினயன் பாசமாக விளிக்க,
“உன்னை அந்த பிரதாபன் இன்னும் நாலு அடிச்சிருக்கணும்டா பட்டி” என்று தம்பியை முறைத்தான் ஜெய்ச்சந்திரன்.