தாமரகுளத்தை மழை நனைத்திருந்தது. பூவம்பள்ளில் வீட்டில் ஆட்கள் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுப்பட்டிருக்க, பிரதாபன் அதனை மேற்பார்வையிட்டான்.
பூவம்பள்ளில் வீடு அவனுக்குப் பிரியப்பட்ட பாட்டினை போல் துணை நிற்க, காலை மாலை என்று கிடைத்த நேரமெல்லாம் தரவாட்டிலே கழித்தான். மின்மினியும் அண்ணனிடம் மன்னிப்புக் கேட்டிருந்தாள்.
“தாரிணி சேச்சிக்கு உங்களை பிடிக்கும், உங்களுக்கு அவங்களைப் பிடிக்கும்னு வினயன் சொன்னார். அவங்க நம்ம முத்தஸ்ஸீ சொந்தம். அதான் நானும் சொல்லல, மத்தபடி உங்களை ஏமாத்த நினைக்கலயேட்டா, நான் பொறந்த நாள் அன்னிக்கு சொல்லணும்னு நினைச்சேன். சாரியேட்டா” என்று மின்மினி கேட்டிருந்தாள். அவளுக்கும் பிரதாபன் தன்னிடம் பேசாமல் இருந்தது மிகவும் வருத்தமாக இருந்தது.
பிரதாபன் தங்கையின் பேச்சில் அமைதியாக இருக்க, மின்மினி கண்ணில் மின்னலின்றி மழை பெய்தது.
“எந்தா இது உன்னிமா?” என்று பிரதாபன் அதட்ட
“நீங்க ஏன் பேசமாட்டேங்கிறீங்க? நீங்க பேசாம எனக்குக் கஷ்டமா இருக்குயேட்டா, உங்களுக்கு இஷ்டமில்லன்னா நான் வினயன் கிட்ட பேசமாட்டேன். எனக்கு வேண்டாம்” என்றாள் மின்மினி.
ஏதோ அன்று அந்த நேர கோபம். வினயச்சந்திரனை அடித்ததால் ஏட்டனிடம் பேசாமல் இருந்தாலும், அவளுக்குப் பிரதாபனே பிரதானம். வினயனுடன் தினமும் பேசினாலும் பிரதாபனின் பாரா முகம் பாவையைப் பாதித்திருந்தது.
வினயனின் காதல் எத்திறமானாலும்(எவ்வகையானாலும்) ஏட்டனின் பிரியமே அவளுக்கு ஏகமானது(ஒப்பற்றது). வினயச்சந்திரன் எத்தனை பாசமாக பேசினாலும், பிரதாபனின் அமைதி மின்மினியை மிகவும் காயப்படுத்தியது. மின்மினிக்கு அவள் அச்சனை நிறைய பிடிக்கும், ஆனால் அவர் அவளுக்காக என்ன செய்தார் என்பதெல்லாம் நினைவே இல்லை. சிறு வயது முதலே
‘உன்னிமா!’ என்ற வார்த்தையே பிரதாபன் அதிகம் சொல்லியிருப்பான். தங்கைக்கு அச்சனின் கடமையை நிறைவேற்றியிருந்தான். மின்மினி சில நாட்களாக யோசித்தாள், தன் ஏட்டனுக்குப் பிரியமாய்த் தாரிணி இருந்தும், அவன் நினைத்திருந்தால் தாரிணியை மணந்து தனக்கென்று வாழ்ந்திருக்க முடியும். அவனோ தரவாட்டை மீட்டிட, தந்தையின் கடனை அடைத்திட என்று அவன் விருப்பங்களை விலக்கி வைத்திருக்கிறான். அதெல்லாம் புரிய புரிய, ஏட்டன் மீதான அன்பு மின்மினிக்குப் பெருகியது.
“இஷ்டமில்லங்கில்?” பிரதாபன் மின்மினியிடம் கேட்க
“ஏட்டனுக்கு இஷ்டமில்லெங்கில் எனிக்கும் வேண்டா” என்றாள் மின்மினி. சொல்லும்போதே அழுகை வந்தது. வினயச்சந்திரனை வேண்டாம் என்று சொன்னாலும் அது உளமாற உதிர்த்த சொல் அல்ல!
இப்போதைக்குப் பூவம்பள்ளி வீடே அவன் சரணடையும் இடமாக இருந்தது. வீட்டின் முற்றத்தில் இருக்கும் பெருந்தூணில் சாய்ந்து மாடிப்படிக்கும் செல்லும் வழியினருகே நின்று அலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தான் பிரதாபன்.
“மாமா” என்ற குரலில் திரும்பினாள் யாருமில்லை. மீண்டும் மாமா என்று குரலில் பார்த்தாள் தூணின் மறுப்பக்கம் ஒரு குட்டி பெண்குட்டி.
வெள்ளை சட்டையும், பச்சையில் பூக்கள் பூத்திருந்த ஸ்கர்ட்டும் அணிந்திருந்த குழந்தையை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.
“குட்டி யாரானு?” பிரதாபன் குனிந்து குழந்தையின் முகம் பார்த்து கேட்க
“நான் சுஜாதா” என்று சுஜாதா தன்னை அறிமுகம் செய்ய,
“சுஜிமோளுக்கு என்ன வேணும்? யாரோட வந்தீங்க?” பிரதாபன் யாரென யோசித்துக் கேட்டிட,
“மின்மினி வேணும்” என்ற பதிலில் விழியுயர்த்திப் பார்த்திட, வினயச்சந்திரன் நின்றான்.
“மின்மினி வேணும்” குழந்தையும் சித்தப்பாவின் வார்த்தைகளை திரும்பப் படிக்க, குழந்தை பேசிய தமிழும் அருகே நின்றவனையும் பார்க்க குழந்தை யாரென புரிந்தது.
பிரதாபன் வினயச்சந்திரன் நேரில் வந்து நிற்பான் என எதிர்ப்பார்க்கவில்லை. முதலில் வினயனின் முகத்தை ஆராய்ந்தவனுக்கு வினயனின் நெற்றியிலிருந்த சிறு தழும்பு கண்ணில் பட்டது.
“சேட்டா! ப்ளீஸ் நான் உங்ககிட்ட பேசணும்” பிரதாபனிடம் வினயன் கெஞ்சலாகக் கேட்க
“எங்கிட்ட பேச என்ன இருக்கு? நீ பேசின கள்ளம் போதாதா?” என்றான் பிரதாபன் கோபமாக. வேகமாக வெளியேற முன்னே அடி வைக்க,
“சேட்டா! ப்ளீஸ்” என்று பிரதாபனின் கைப்பற்றினான் வினயச்சந்திரன். சுஜாதாவும் சித்தப்பாவைப் போல் இன்னொரு கைப்பற்றி,
“மாமா ப்ளீஸ்” என்றாள். அவள் அப்படி சொல்வாள் என்று வினயச்சந்திரன் எதிர்ப்பார்க்கவில்லை.
“சுஜி” என்று அதட்ட, பிரதாபன் திரும்பி முறைத்தான்.
“என்னடா குழந்தையை வச்சு என்னை சமாதானம் செய்ய பார்க்கிறியா?” என்று பிரதாபன் சீறினான்.
“அச்சோ சேட்டா! இவ சும்மா விளையாடுறா.” என்ற வினயச்சந்திரன் “ஒரு அஞ்சு நிமிஷம் நான் பேசுறத கேளுங்க சேட்டா” என்றான் பிடிவாதமாக.
குழந்தையின் முன் கத்த விரும்பாது, “என்ன?” என்று முறைப்பாகக் கேட்டான் பிரதாபன். வினயன் சுஜாதாவை எங்கேயும் விடாமல் கையில் பிடித்துக்கொண்டான். பிரதாபன் பார்த்தாலும் அமைதியாக இருந்தான்.
வினயச்சந்திரன் பிரதாபனின் அமைதியில் அப்படியே அவன் உள்ளத்தில் ஓடியதை சொன்னான்.
“சேட்டா! நான் இங்க வந்தது தாரிணிக்காக” என்று சொல்ல,
“தாரிணியத்த” என்று சுஜாதா சித்தப்பாவை பார்த்தாள். அவளுக்குத் தெரிந்த பெயர் என்றதும் குழந்தை ஆவல் மிகுதியில் பேச, வினயச்சந்திரன் முறைத்தான்.
“சுஜி! நான் மாமா கிட்ட பேசுற வரைக்கும் நீ பேசக்கூடாது. புரிஞ்சதா?” என்று அதட்டலாக சொல்ல, சுஜியும் கண்கள் சுருங்க அமைதியாக நின்றாள்.
குழந்தையின் பேச்சு வெளியே பெய்த மழை போல் குளிராய்ப் பிரதாபனை மகிழ்வித்தது. உள்ளே ரசித்தாலும் வினயன் மீதான கோபத்தில் அழுத்தமாக நிற்க, வினயச்சந்திரன் எல்லாம் சொன்னான்.
“நான் இங்கயிருந்து போற வரைக்கும் மின்மினியை அவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியல சேட்டா. எங்க ஊருக்குப் போன பின்னாடி அவளை விட்டு இருக்க முடியாமதான் திரும்ப வந்தேன். மின்மினியை நான் பொன்னு போல பத்திரமா பார்த்துக்குவேன் சேட்டா. நான் பொய் சொன்னது தப்புன்னா இன்னும் அடிச்சுக்கோங்க.”
“சுஜி மேல சத்தியமா சொல்றேன் சேட்டா உங்க கிட்ட பொய் சொல்லிட்டு நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன். நீங்க நினைக்கிற மாதிரி நானும் மின்மினியும் ஊர் சுத்திட்டே இல்ல, இங்க திரும்பி வந்தனைக்கு இரப்பன்பாறாவுல ஒரு நாள், பின்னே மின்மினி பர்த்டே அன்னிக்கு பாதிரா மணல் போனேன். மீதி நாளெல்லாம் உங்க கூட தானே சுத்தினேன், எனக்குப் பயமாயிருந்தது சேட்டா அவ்வளவு பொய் சொல்லிட்டு உங்ககிட்ட உண்மையை சொல்ல, அதை சொல்லணும்னு நினைச்சப்ப நானே மாட்டிக்கிட்டேன். எங்க ஜெய்கிட்ட கூட நான் சொல்லல சேட்டா, அவனைத்தான் நான் உங்ககிட்ட பார்த்தேன்” என்றதும்
“உன் ஏட்டன் போல என்னை நினைச்சியா? ஓஹ் பின்ன, அன்னிக்கு ராத்திரி நானும் நீயும் கைனகரி போனப்போ கூட உனக்கு உண்மை சொல்லத் தோணல இல்லை. என்ன சொன்னாலும் இவன் நம்புவான் நினைச்சிட்ட? அதானே?” பிரதாபன் பொறுமலாகக் கேட்க
“அய்யோ சேட்டா! அப்படியில்ல நீங்க அன்னிக்கு உங்க மனசு விட்டுப் பேசினீங்க, அப்போ குறுக்க பேச வேண்டாம்னுதான்” வினயன் பதறிக்கொண்டு சொன்னான். அதை வினயன் மீண்டும் சொல்ல, பிரதாபனுக்கு நான் எத்தனை ஆழமாய் என் மனதை பகிர்ந்தேன், இவன் என்னிடம் பொய்யுரைத்தானே என்று பொறுமினான்.
“எனக்கு நிச்சயமா மின்மினி மேல காதல் வரும்னு ஜோசியமா சேட்டா தெரியும்? உங்களுக்குத் தாரிணி மேல காதல் இருக்கே, அப்படித்தானே? அப்படி மின்மினி மேல காதல் வரலன்னா நான் திரும்பி வந்திருக்க மாட்டேன், உங்களுக்குத் தாரிணி வேண்டாம்னு சொன்ன பின்னாடி நான் என்ன யாருனு சொல்லாம போயிடலாம்னு நினைச்சேன்.”
“தாரிணி உங்களுக்கு ஒரு தாசேட்டா பாட்டுன்னா, எனக்கு மின்மினி ஒரு எம்.ஜி சேட்டன் பாட்டா இருக்கக் கூடாதா?” என்று வினயச்சந்திரன் முணுமுணுக்க
“டா தெண்டி” என்று பிரதாபன் பல்லைக் கடித்தான்.
“இப்போ உனக்கு என்ன வேணும்டா? எதுக்கு வந்த?” என்று பிரதாபன் எரிச்சலை அடக்கிக் கேட்டிட
“உன்னிமாவுக்கு இஷ்டம்ன்றதால அதுக்கு நான் ஒத்துக்கிறேன். உன்னை என்னால மன்னிக்க முடியாது, எங்கிட்ட வேற ஒன்னும் எதிர்ப்பார்க்காத.” என்று பிரதாபன் சொல்ல வினயனின் முகம் வாடியது.
இதில் சுஜாதா வேறு, “சித்தப்பா கால் வலிக்குது” என்று முகம் சுருக்க,
“நீ மாமா கிட்ட வாடா” என்று பிரதாபன் சுஜாதாவின் கைப்பிடிக்க, மகள் வினயனின் முகம் பார்த்தாள். அவன் தலையசைக்க, சுஜாதா பிரதாபனின் கையைப் பிடித்துக்கொள்ள குழந்தையோடு மாடிப்படிகளில் உட்கார்ந்தான். எதிரே வினயன் நின்றான்.
“சேட்டா! எல்லாத்துக்குக் காரணம் உங்க தாஸேட்டா பாட்டுதானே? அவ கிட்ட இப்படி பேசுவீங்களா? வினய’ன்னா மட்டும் பேசுவீங்க?”
“டா! வாயை மூடல அவ்வளவுதான்!” என்று பிரதாபன் மெல்லிய குரலில் அதட்டினான்.
“எனிக்கு நின்னை இஷ்டமில்லா(எனக்கு உன்னைப் பிடிக்கல), இப்படித்தான் நான் பேசுவேன்” பிரதாபனும் பிடிவாதமாக சொன்னான். மின்மினிக்காக வினயனை ஏற்றாலும், வினயன் தன் நட்பையும் சகோதர பாசத்தையும் எளிதாய் எடுத்தது பிரதாபனுக்கு இன்னும் தாங்கமுடியவில்லை.
வினயனோ உடனே, “இட்ஸ் இம்பாசிபிள்” என்றதும் பிரதாபன் புரியாமல் பார்க்க
“சீ, இத்ரயும் சுந்தரனாய, சல் சுபாவியாய, சக்கரக் குட்டனாய நிங்களுட மினிக்குட்டிக்கு மனோகரமாய ஒரு ஜீவிதம் வாக்தானம் செய்யான் கழிவுள்ளனாய ஈ வினயச்சந்திரனை நிங்களுக்கு ஒரிக்கலும் வெறுக்கான் பற்றில்லா”(இவ்வளவு அழகான நல்ல சுபாவமுள்ள சக்கர குட்டியா இருக்கற, உங்க மினிகுட்டி அழகான ஒரு வாழ்க்கையைத் தரப்போற என்னை உங்களுக்குப் பிடிக்காம இருக்காது, அது முடியாத ஒன்னு) மூச்சைப் பிடித்துக்கொண்டு மோகன்லால் ஒரு படத்தில் சொல்லும் வசனத்தை சொல்லிவிட்டு பிரதாபனை நோக்கினான்.
பிரதாபனுக்கு வினயச்சந்திரனைப் பார்க்கும்வரை அவ்வளவு வருத்தம், கோவமிருந்தாலும் அவன் பேசும்போது நிச்சயம் அவனை பிடிக்காமல் இருக்க முடியாது.
சிலரெல்லாம் வரம் வாங்கி வந்தவர்கள். அவர்களும் மகிழ்வாக இருந்து, சுற்றத்தையும் மகிழ்வாக்குவார்கள். வினயச்சந்திரனைப் போல்! பிரதாபனை வினயனுக்குப் புரியாமல் இருந்தாலும், பிரதாபனுக்கு வினயனைப் புரிந்தது. தோழிக்காக இங்கே வந்து அவன் வேலை செய்ததெல்லாம் கண்டவன் தானே? அச்சமயத்தில் அவனை வற்புறுத்தி வீட்டில் இருக்க சொன்னாலும் அவனோடு பிடிவாதமாக சுற்றியதெல்லாம் நினைவில் வர, வினயச்சந்திரன் மீது பழைய பாசம் வரவிட்டாலும், கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
அதுவும் அவன் உன்னிம்மாவுக்கு இஷ்டமெனும்போது, பிரதாபன் மறுக்க போவதில்லை. எல்லாம் கண நேரம் கோபம். பிரதாபன் சிரிப்பை அடக்கிக்கொண்டாலும், அவன் முகம் காட்டிக்கொடுதத்து.
“யாருடா சக்கர குட்டன்? நீ கள்ள குட்டன்” என்றான் முறைப்பாக.
“சேட்டா! இட்ஸ் இம்பாசிபிள்” என்று மீண்டும் ஆரம்பிக்க,
“ஜீவிச்சுப் போடா” என்ற கையை வீசிய பிரதாபன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு,
“உன் அச்சனை, ஏட்டனை வர சொல்லு. வீட்ல பேசலாம்” என்றான்.
“சேட்டா! நிஜமாவா சொல்றீங்க” என்று கூச்சலிட, பிரதாபன் முறைத்தான்.
“அதெல்லாம் அவங்க வந்துட்டாங்க, கூடவே அச்சச்சனும். அங்க உங்க வீட்ல இருக்காங்க. நீங்க இங்க இருக்கீங்கன்னு நசீரிக்கா சொல்லவும் நான் உங்களைப் பார்க்க வந்தேன்” என்றதும்
“ஏடா! பெரியவங்க வந்திருக்காங்க சொல்லாம இங்க எங்கிட்ட டயலாக் பேசுற” என்று திட்டிய பிரதாபன் குழந்தையோடு அவன் வீடு நோக்கி வினயனோடு நடந்தான்.
அங்கே அச்சுதனுக்கும் பொன்னச்சனுக்கும் வாய்த் தகராறு மட்டுமே நடந்தது. இனம், மொழி, இன்னும் பிரிவினை தூண்ட என்னவெல்லாம் இருக்கிறதோ அத்தனையும் பேசினார் பொன்னச்சன். அச்சுதனும் பொறுமையாகப் பேச, அவர் மகன் ராஜீவன் கதையெல்லாம் இழுத்துப் பேசி அச்சுதனின் பொறுமையைச் சோதித்து, அவரையும் பேச வைத்தார். பாலச்சந்திரனும் ஜெய்ச்சந்திரனும் அச்சுதனுக்காக பொறுமை காத்தனர்.
பிரதாபனும் வினயனும் வரும்போது, அச்சுதன், பாலச்சந்திரன், ஜெய்ச்சந்திரன் மூவரும் அவர்கள் காரில் ஏற வந்தனர். ஜெய் வினயனுக்கு அழைக்க அலைப்பேசி எடுக்க, அதற்குள் வினயச்சந்திரன் வேகமாக வர,
“முத்தச்சா!” என்று பிரதாபனும், அவனிடமிருந்து இறங்கி சுஜாதாவும் அச்சுதனிடம் போக,
“ஜெயேட்டா! என்னாச்சு?” என்றான் வினயன்.
“உன் அச்சச்சனை ஒழுங்கா இருக்க சொல்லுடா, என் பாலா மகனுக்குப் பொண்ணு கொடுக்க மாட்டானா தெம்மாடி” என்றார் அச்சுதன் தன்னிடம் வந்த பிரதாபனிடம்.
பொன்னச்சன் வாசலில் நின்று அவர்களிடம் பேச போன பிரதாபனை அழைக்க,
“முத்தச்சா! நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க! நான் பேசிக்கிறேன்” என்று பிரதாபன் பொறுமையாக அச்சுதனிடம் பேச
“இல்ல பிரதாபன்! உங்க அச்சச்சனை முதல்ல நீங்க கன்வீன்ஸ் பண்ணுங்க. பின்னே பார்க்கலாம், நாங்க கிளம்புறோம்” என்று ஜெய் பேச, மின்மினியைப் பார்க்க முடியாத ஆதங்கத்தில் ஜெய்யை முறைத்தான் வினயச்சந்திரன். அவன் விழிகள் பாவையைப் பார்க்க பரிதவிக்க, மின்மினியோ ஜன்னல் வழி வினயச்சந்திரனை கண்ணில் நிறைத்தாள்.