வினயனுக்கு மின்மினியோடு பேச முடியாத ஆதங்கம் நிறைய நிறைந்திருந்தது. நித்தமும் அலைப்பேசியில் அளாவினாலும் நேரில் ஒரு பார்வை, ஒரு வார்த்தை. அதற்கு ஆவல் கொண்டான் வினயச்சந்திரன். தாமரகுளத்திலிருந்து அவர்கள் வாகனம் தேவிகுளம் நோக்கி சென்றது. ஜெய்ச்சந்திரன் வண்டியை செலுத்த, வினயன் அண்ணன் அருகே முன்னிருக்கையில் இருந்தான்.
சுஜாதா தாத்தாவின் மடியில் உறங்கியிருக்க, அச்சுதனும் பின்னிருக்கையில் இருந்தார்.
“என்னடா ஒரு மாதிரி இருக்க?” ஜெய் தம்பியிடம் கேட்க, அவனோ முறைத்தான்.
“என்னடா?” என்று ஜெய் மீண்டும் கேட்க,
“என்ன என்னடா? மின்மினியைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு தெரியுமா? அவளைப் பார்க்கலாம்னு வந்தா அதுக்குள்ள எல்லாரும் சேர்ந்து சண்டை போட்டு வச்சிருக்கீங்க” ஒருமுறை திரும்பி அச்சுதனையும் அவன் அப்பாவையும் முறைத்தபடி சொன்னான் வினயன்.
“டா தெண்டி! அந்த பொன்னச்சன் அப்படி பேசுறான், அவனை பேசாம வர சொல்றியா?” என்று அச்சுதனும் குரல் உயர்த்தினார்.
“நீ எங்களோட வராம பெரிய இவனாட்டாம் அந்த பிரதாபனைப் பார்க்க போறேன்னு போய்ட்ட. நாங்க என்னடா செய்றது?” ஜெய்யும் தம்பியைக் கிண்டலாகப் பார்க்க,
“ஜெயேட்டா! ஓவரா பண்ணாத. உன் நேரம் ஊர்மியோட அண்ணனுங்க அப்போ ஊர்ல இல்லை, இருந்திருந்தா நீயும் இப்படி மச்சானுங்க பின்னாடி போயிருக்கணும்.” என்று சொல்ல, ஜெய்யோ சிரித்தான்.
“டேய்! என் மச்சானுங்க இருந்தாலும் எனக்கென்ன பிரச்சனை? நானெல்லாம் உன்னை மாதிரி இல்லடா, டைரக்ட் டீலிங்” என்று கண்சிமிட்டினான்.
அவர்கள் தேவிகுளம் வருகையில் பொழுது சாய்ந்திருந்தது.
நேரே ஜெய் அரக்கபறம்பில் வீடு சென்றான். அச்சம்மாவும் ராஜீவனும் இவர்களுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். சுஜாதா உறங்கி விழித்து வரும்போதெல்லாம் கதையளந்தவள், அரக்கபறம்பில் வீடு வரவும் உற்சாகமாக இறங்கினாள்.
“அம்மச்சா” என்று ராஜீவனிடம் ஓட,
“உன்னிமா” என்று சந்தோஷ குரலோடு பேத்தியைத் தூக்கி உச்சிமுகர்ந்தார்.
வினயச்சந்திரன் அந்த பூமுகத்தில் காவியிடப்பட்ட தரையில் அச்சம்மாவின் அருகே படுத்தான்.
“டா சக்கர, என்னாச்சு?” என்று அச்சம்மா பேரனின் தலையை வருடி பாசமாகக் கேட்டார்.
அச்சுதன் அவரின் சாய்வு நாற்காலியில் உட்கார, ஜெய் உள்ளே சென்று எல்லாருக்கும் தண்ணீர் எடுத்து வந்தான். அச்சம்மா சாயா தருகிறேன் என்று சொல்ல, எல்லாரும் வரும் வழியில் குடித்து வந்ததால் மறுத்தனர்.
வேனிற்கால மழை தேவிகுளத்தின் காற்றிலும் ஈரம் பரப்பியது. காற்றின் வேகத்தில் அரக்கபறம்பு வீட்டின் முன்னிருக்கும் தென்னை மரங்கள் அசைந்தன. அதுவும் கேரளத்துக்கு பருவ மழை காலம் என்பதால் வேனிற்கால மழைக்காற்றாக அது தெரியவில்லை. தென்மேற்கு பருவக்காற்றின் தொடக்கமாக இருந்தது.
பருவக்காற்று எல்லாரையும் தீண்டி போக, ஜெய்ச்சந்திரன் பதிமுகம் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை எல்லாருக்கும் பருகக் கொடுத்தான். அச்சம்மா ஜெய்யைப் பார்க்க, அவன் நடந்ததை அவரிடம் பகிர்ந்தான்.
“அதான் நீ கவலையா இருக்கியாடா?” என்று வினயனிடம் கேட்ட அச்சம்மா,
“எல்லாம் சரியாயிடும், நீ விஷமிக்கண்டா(கவலைபடாத) டா வினயா.” என்று ஆறுதலாக சொல்ல, வினயனோ வேகமாக எழுந்தான்.
“போங்க அச்சம்மா, இவங்களாம் நல்லவிதமா பேசுவாங்கனு அழைச்சிட்டுப் போனா சண்டைப் போட்டு வந்துட்டாங்க. நான் மினியை சரியா பார்க்க கூட இல்லை தெரியுமா?” ஆற்றாமை அடங்காமல் பொறுமினான் வினயன்.
“பாருங்க அச்சம்மா எல்லாரும் சிரிக்கிறாங்க. ரெண்டு தாத்தா, ரெண்டு அப்பா, ரெண்டு அண்ணன் இருந்த இவன் லவ்வு கூட பிரச்சனை இல்லை. எனக்கு பாருங்க ஒரே ஒரு அச்சச்சன், ஒரே ஒரு ஏட்டன். மின்மினியைப் பார்க்க கூட முடியல” எரிச்சலாக சொல்ல,
“இவன் போய் உங்க பேரன் பிரதாபனை சமாதானம் பண்ண போனான். நாங்க என்ன செய்றது அச்சம்மா?” என்று ஜெய் கேட்க,
“ஏட்டா?” என்று கணவனைப் பார்த்தார் பத்மினி குட்டி.
“என்னடா பாலா?” என்று ராஜீவன் நண்பனைப் பார்க்க,
“மாமா! பிரதாபன் அவங்க அச்சச்சன் கிட்ட பேசிட்டு சொல்றேன் சொல்லியிருக்கான். அவங்க அச்சச்சன் கிட்ட எல்லாம் நம்ம பேசினா வேலைக்காகாது. அவர் நாங்க தமிழ், வேறு இனம்.. அது இதுனு பேசுறாரு. கொஞ்சமும் கன்சீடர் பண்ணல. இதுல அச்சச்சனை வேற உங்களை வச்சு ரொம்பப் பேசிட்டார்” என்றதும் ராஜீவனும் அச்சமாவும் அச்சுதனைப் பார்த்தனர்.
அவரோ, “அவன் கிடக்குறான் தெம்மாடி. உனக்கு மின்மினியை நாங்க கட்டி வைக்கிறோம் டா. நீ ஃபீல் பண்ணாத டா மோனே” என்று வினயனுக்கு ஆதரவாகப் பேச, ராஜீவன் பாலச்சந்திரனுக்குக் கண்காட்டினார்.
சுஜியோ ராஜீவனின் டீஷர்ட் காலர் பற்றி இழுத்து அவள் சொல்லும் கதையைக் கவனிக்க சொன்னாள். அவர் திரும்ப, அதை கண்ட அச்சம்மா,
“உன்னிம்மா என்னடா?” என்றவர் பேத்திக்குத் தன் கண்மையினைக் கொஞ்சமாக அவள் காதோரமாக வைத்தார். ஜெய்க்கு ஊர்மிளாவுக்கும் அவர் இது போல் வைப்பது நினைவில் வந்தது.
“மாவிக்கரா போயி மாமா பார்த்தோம். மாமா வீட்ல பெரிய பெரிய ஊஞ்சல் அம்மச்சா, இல்லை சித்தப்பா?” என்று பூவம்பள்ளில் தரவாட்டில் கண்ட ஊஞ்சலை அவர்களுக்குக் காட்சிபடுத்தும் பொருட்டு கையை விரித்து,
“பெரிய ஊஞ்சல் பா” என்றாள் அப்பாவிடமும்.
சுஜாதா பேச அங்கே இருந்தவர்களின் கவனம் எல்லாம் அவளிடம் குவிய, வினயச்சந்திரன் அண்ணன் மகளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான்.
“பிரதாபன் பாவம் டா ஜெய். அம்மா, அப்பா இல்லாம இருக்க பசங்க, இந்த அம்மினி வீட்டுக்காரர் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போகக் கூடாதா? ஷங்கரன் இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும். ராஜீவனுக்கு அவனை சின்ன வயசுல ரொம்பப் பிடிக்கும். ஆனா அவனை அவங்கச்சன் இங்க ரொம்ப விட மாட்டார்.”
அச்சம்மா பேரனுக்காக வருந்தினார். அதைக் கண்ட வினயன்,
“அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க அச்சம்மா, உங்களுக்குத் தாரிணி தெரியுமில்ல?” என்று கேட்க,
“தாரிணியத்த” என்று மீண்டும் சித்தப்பாவைப் பார்த்தாள் சுஜிக்குட்டி.
“இதேதான் ஜெய் அங்கயும் பண்ணினா. நான் சொல்லிக்கொடுத்த மாதிரி பிரதாபன் என்னை முறைக்கிறார்.”
“தாரிணி, உன் கூட்டுக்காரி” என்று அச்சம்மா சரியாக ஞாபகம் வைத்து சொல்ல, தாரிணியைப் பிரதாபன் விரும்புவதை சொன்னான் வினயச்சந்திரன்.
அப்படியே அவர்கள் பேச்சு அவர்களின் பால்யகாலத்தைத் தொட்டது.
“அச்சம்மா! சின்ன வயசுல நீங்க எங்களுக்கு மாவலி கதை சொல்லுவீங்க ஞாபகமிருக்கா? எனக்கு அங்க போனப்போ உங்க ஞாபகம்தான்.”
“முத்தஸ்ஸீ எனக்குக் கத” என்று சுஜி அச்சம்மாவின் முகம் பார்த்தாள்.
“கதைதான் என் குஞ்சுமோளேக்கு சொல்லிட்டா போச்சு” என்ற அச்சம்மா பேத்திக்குக் கதை சொல்ல ஜெயனுக்கும் வினயனுக்கும் அந்த கதை அச்சம்மா முன்பே சொல்லியிருந்தாலும், மகளோடு சேர்ந்து மீண்டும் கேட்டனர். இவர்கள் பேச அச்சுதன் ஓய்வெடுக்க அவர் அறைக்குச் சென்றுவிட்டார்.
“மகாபலி சக்கரவர்த்தி ரொம்ப நல்லபடியா ஆட்சி செஞ்சுட்டு இருந்தார். அவர் ராஜசுய யாகம் நடத்தி தேசம் முழுக்க தன்னோட ஆட்சி வரணும்னு நினைச்சார். அந்த யாகம் பண்ணினப்போ யார் என்ன கேட்டாலும் தருவேன்னு சொன்னார். அவரால தர முடியாதது எதுவுமில்லைதானே?” என்று முத்தஸ்ஸீ கேட்க, கொஞ்சம் புரிந்து புரியாமலும் தலையாட்டினாள் குழந்தை.
“வாமனனா வந்த விஷ்ணு மூணு அடி நிலம் கேட்டார். அவர் அளவுதானேனு நினைச்சா விஷ்ணு த்ரிவிக்ரம அவதாரம் எடுத்துட்டார். ஒரு அடி சொர்க்கத்துல ஒரு அடி பூமில வச்சார். மூணாவது அடி வைக்க இடமில்லாம போக, தன்னோட தலையைக் கொடுத்துட்டார். அவர் முட்டிப்போட்டு தன் தலை மேல விஷ்ணு பகவான் காலை வைக்க சொன்னார். உடனே மாவலி கீழ போய்ட்டார்”