“அவர் அப்படி கால் வச்ச இடம்தான் மாவலிக்கரா, முத்தஸ்ஸீயோட ஊரு. மாவலி சக்கரவர்த்திக்காகத்தான் நம்ம ஓணம் கொண்டாடுறோம். ஒவ்வொரு வருஷமும் அவர் ஓணத்துக்கு நம்மை காண வருவார்” என்று பெருமையாக சொல்லி முடித்தார் அச்சம்மா.
“இப்பவும் வருவாரா முத்தஸ்ஸி?” ஆவலாக சுஜி கேட்க,
“வருவார்டா” என்ற அச்சம்மா எழுந்துகொண்டார்.
“பொன்னு மோளுக்குப் பசிக்கும்ல. நீ வா டா சாப்பிடலாம்” என்று பேத்தியை உள்ளே அழைத்துப்போக, தங்களைப் போலவே அரக்க பறம்பில் வீட்டு தன் மகளும் உரிமையோடு போக, உறைந்த புன்னகையோடு பார்த்தான் ஜெய்ச்சந்திரன். வினயன் மின்மினிக்கு குறுஞ்செய்தி அனுப்ப, பாலச்சந்திரனிடம் ராஜீவன் பேசினார்.
“நான் போய் பேசுறேன் டா” என்று ராஜீவன் சொல்ல,
“டேய்! உன்னை வச்சுத்தான் டா அங்க பேச்சே போச்சு. நீ வேற மதத்துல கல்யாணம் பண்ணிட்ட அப்படின்றதான் உன் சித்தப்பாவோட பெரிய பிரச்சனையே. இதுல நீ பேசப்போறியா?” பாலச்சந்திரன் கேட்க, ராஜீவனும்
“ஏண்டா இவங்க எல்லாம் இப்படியே இருக்காங்க?” என்றார் ஆயாசமாக.
“நீ கவலைப்படாத உன்னிமா. நான் பார்த்துக்கிறேன்” என்று பிரதாபன் சொல்ல, மின்மினி அந்த கவலைகள் இல்லை. மறுப்பாகத் தலையசைத்தவள்,
“எனக்காக நீங்க செய்வீங்கனு தெரியும் ஏட்டா, ஆனா ஏன் அச்சச்சன் இப்பவும் இப்படி பேசுறாங்க. பாவம் முத்தச்சனும் எவ்வளவோ பொறுமையா பேசினாங்க. எனக்குக் கஷ்டமா இருக்கு” என்று கண்கலங்க, தங்கையைத் தோளோடு அணைத்துக்கொண்டான் பிரதாபன்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் டா மினி. இன்னிக்கு அந்த கள்ளகுட்டன் என்ன செஞ்சான் தெரியுமா?” என்று கேட்டு வினயன் செய்ததை எல்லாம் சொல்ல, மின்மினிக்குச் சிரிப்பு வந்தது.
“ஜெயேட்டாவோட பொண்ணு, அவ எவ்வளவு அழகா பேசினா தெரியுமா?” என்று சுஜாதா பேசியதை சொல்லி ரசித்தவன் தங்கையின் மன நிலையைத் தேற்றினாலும் அவன் மனதில் இன்னும் கவலைகள் கேட்பாரற்று கிடந்தன.
அதே மனதோடு வெளியே வர, நசீர் அவனிடம் வந்தார்.
“என்ன சொன்னான் வினயன்? உன்னைப் பார்க்கணும்னு கேட்டான்” என்று விசாரிக்க, பிரதாபன் எல்லாம் சொல்ல,
“சேட்டாவை நினைச்சுக் கவலைப்படாத பிரதாபா. நீ வினயனைப் பத்தி விசாரிச்சு ஒத்து வந்தா மினிக்குப் பேசு. என்ன இருந்தாலும் உங்க முத்தஸ்ஸீயோட சொந்தம். அவங்களை நான் பார்த்திருக்கேனே, சேச்சியோட மனசும் அவங்க சேச்சி வீட்ல பொண்ணு கொடுத்தா ரொம்ப சந்தோஷப்படும்” என்றார். பிரதாபன் எல்லாம் யோசிக்க, அவன் அச்சச்சன் அவனைப் பேசவே விடவில்லை. கொஞ்சம் பொறுத்துப் பேசுவோம் என்று பிரதாபன் நினைக்க, அடுத்த இரண்டு நாட்களில் வினயச்சந்திரனிடமிருந்து அவசரமாக அழைப்பு வர கொச்சி விரைந்தான் பிரதாபன்.
கூடவே மின்மினியையும் அழைத்துப் போயிருந்தான். மின்மினிக்கு அவ்வளவு சந்தோஷம். விமான நிலையத்தில் பிரதாபன் அவன் இருக்குமிடம் சொல்ல, வினயச்சந்திரன் அன்று ஜீன்ஸ், டீஷர்ட் என்றிருந்தான். மின்மினி அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். காரை விட்டு இறங்கி பிரதாபனும் அவன் அருகே மின்மினியும் நிற்க, மின்மினியைக் கண்ட வினயச்சந்திரன்,
“மின்மினி” என்றான் ஆச்சரியமாக. அவன் குரல் சத்தமாக வர
“டேய்! கள்ளா! நானும் இங்கதான் இருக்கேன்” என்று பிரதாபன் சொல்ல,
“உன் ஏட்டா உன்கிட்ட சொல்லலயா?” என்று அவளைத் திருப்பிக் கேட்டான் வினயச்சந்திரன்.
“இல்ல” என்று மின்மினி விழிக்க, “தாரிணி துபாய் போக போறா, அதை சொல்லித்தான் நான் சேட்டாவைக் கூப்பிட்டேன். போய் அவ கிட்ட பேசுங்க சேட்டா” என்று மீண்டும் வினயச்சந்திரன் அழுத்திச் சொல்ல
“உன் ஜோலியைப் பாருடா” என்ற பிரதாபன் அவர்களுக்குத் தனிமைக் கொடுத்துத் தள்ளி நின்றானே தவிர தாரிணி பக்கம் போகவில்லை.
“ஏட்டா! தாரிணி சேச்சி ஊருக்குப் போறாங்க. ப்ளீஸ் போய்ப் பேசுங்க” என்று மின்மினியும் ஏட்டனுக்கு வேண்டிப் பேச, அவன் எங்கே கேட்டான்.
“நீ இவனைப் பார்க்கணும்னுதான் நான் உன்னை அழைச்சிட்டு வந்தேன் மினி. என்னை டிஸ்டர்ப் பண்ணாத, நான் யாரையும் பார்க்க வரல” என்றான் பிரதாபன் பிடிவாதமாக.
ஏனோ தாரிணி அவனிடம் சொல்லாமல் ஊருக்குப் போக வந்தது பிரதாபனுக்கு வருத்தமாக இருந்தது. அந்த வருத்தம், கோபம் எல்லாம் பிடிவாதமாக மாறியிருந்தது. வேண்டாம் வேண்டாம் என்று விலகி சென்றாலும் தாரிணிக்காக அவனிடம் பிரியம் தாராளமாகக் கொட்டிக் கிடந்தது. அதைக் காட்ட முடியாத கோபம் அவனிடம்.
அவன் அங்கேயே நிற்க, மின்மினி தாரிணி உட்கார்ந்திருந்த இடம் நோக்கி நடக்க, வினயச்சந்திரனும் உடன் நடந்தான். மின்மினிக்கும் வினயனுக்கும் பேச அத்தனை ஆவலிருந்தாலும், அந்த நேரம் பிரதாபனும் தாரிணியும் முக்கியமாக இருந்தார்கள்.
“சேச்சி! ப்ளீஸ் ஏட்டன் கிட்ட கோவம் வேண்டா” என்று மின்மினி அண்ணனுக்காகப் பேச,
“உன் ஏட்டா மேல எனக்கென்ன கோவம்?” என்று கேட்டாள் தாரிணி.
மின்மினி விழிக்க, “மினிகுட்டி! நீயெல்லாம் இவங்களை ஹாண்டில் பண்ண முடியாது. உங்க ஏட்டன் மாதிரி சரியான அஹங்காரி இவ. இவளும் போய் பேச மாட்டா, அந்த தேஷியக்காரனுக்கு ஏத்த தேஷியக்காரி இவ” என்று தோழியையும் திட்டினான் வினயச்சந்திரன்.
அவனுக்குத் தெரியுமே பிரதாபனுக்குத் தாரிணியைப் பிடிக்குமென்று. அதை இந்த பிரதாபன் சொன்னால் என்ன என்ற கோபமிருந்தாலும், தாரிணி இந்த நேரம் துபாய்ப் போவது வினயனுக்கும் உவப்பாக இல்லை.
மின்மினியும் தாரிணியிடம் பேச, வினயச்சந்திரன் அப்போதுதான் கவனித்தான். பிரதாபனின் பார்வை அங்கே அவர்களிடம், இல்லை! தாரிணியிடம் குவிந்திருந்தது தலைவன் பார்வை.
தாரிணிக்கும் பிரதாபனிடம் ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என்று தோன்றினாலும், தன்னை வேண்டாம் என்று சொல்லிய பிறகு என்ன பேச என்ற எண்ணத்தில் உழன்றாள். அவளுக்கு சிறிது நாட்களாவது அப்பாவிடம் போக எண்ணம். பிரதாபனின் புறக்கணிப்பை இன்னும் அவளால் ஏற்க முடியவில்லை.
“மினி! நீ பேசாத. அங்க உன் ஏட்டனைப் பாரு” என்று சிரிப்பை அடக்கி சொல்ல, தாரிணி திரும்பினால் பிரதாபன் அங்கே அவளையே பார்த்து நின்றான். தாரிணிக்கு வேண்டாம் என்றுவிட்டு என்ன பார்வை வேண்டியிருக்கு என்ற எரிச்சல் மிக, வேகமாக அவனிடம் சென்றாள்.
“என்னை வேண்டாம் சொல்லிட்டு இங்க என்ன பார்வை? இங்க ஏன் வந்தீங்க?” என்று படபடவென கேட்க
“நான் உன்னைப் பார்க்க வரலையே” என்று தோளைக் குலுக்கிய பிரதாபன், மடித்துக் கட்டியிருந்த வேட்டியை இழுத்துவிட்டான்.
“ஓஹ், அப்போ கொச்சி ஏர்ப்போர்ட்ல உங்களுக்கு என்ன வேலை?” என்று தாரிணியும் விடாது கேட்டாள்.
“நீ எங்கிட்ட சொல்லிட்டுப் போகல, பின்னே நான் எதுக்கு உன்னைப் பார்க்க வரணும்? நான் எங்க கட்சியோட லீகல் அட்வைசர் வரார்னு சொன்னாங்க. அவரை காண வந்து” என்றவன் அவனது கைகடிகாரத்தைப் பார்த்தான். தாரிணி பிரதாபனுக்குக் கையெட்டும் தூரத்தில்தான் இருந்தாள். அவனிடமிருந்து வந்த அத்தர் வாசம் தாரிணியைச் சூழ, இன்னும் கோபம் வந்தது.
அவன் பொய் சொல்கிறானோ என்று பார்க்க, உண்மையில் கூட்டமாக யாரோ வர, பிரதாபன் அவர்களை நோக்கிச் சென்றான். வினயன் தோழி தனியாக நிற்கவும் அவளிடம் வர,
“உன்னை யார்டா அவர்கிட்ட நான் போறேன்னு சொல்ல சொன்னா? பெரிய இவனாட்டாம் லீகல் அட்வைசரைப் பார்க்க வந்தாராம். என்னைப் பார்க்க வரல, அவர்தான் நான் வேண்டாம் சொல்லிட்டார் சொன்னேன்ல. நீதான் அவருக்கு என்னைப் பிடிக்கும்னு சொல்லி என்னை டென்ஷன் பண்ற” என்று வினயனைக் கத்தினாள் தாரிணி.
வினயச்சந்திரனுக்குக் குழப்பமாகிவிட்டது. உண்மையில் இந்த பிரதாபன் எதற்கு வந்தான்? பத்து நிமிடம் கழித்து அவன் வரவும், அவனிடமே கேட்க இரு இமைகளும் லேசாய் மூடித்திறக்க கண்களால் புன்னகைத்தான். பிரதாபனின் பிரத்யேக புன்னகை. தாரிணியால் அவனிடமிருந்து க்கண்களை அகற்ற முடியவில்லை.
“ஏட்டா! பரயு” என்று மின்மினியும் அவள் ஏட்டனை அழுத்தமாகக் கேட்க,
“நீதான வினயனைப் பார்க்கக் கேட்ட, அதான் அழைச்சிட்டு வந்தேன்” என்றான் அழுத்தமாக. பேச்சு தங்கையிடமிருந்தாலும், பார்வை முழுக்க தாரிணியிடம்.
தாரிணிக்குப் பிரதாபனின் அழுத்தம் கோபம் தர, “நான் துபாய்ப் போறேன், நீங்க என் தொல்லை இல்லாம சந்தோஷமா இருங்க பிரதாபன்” என்றாள் கண்களில் ஈரம் படர. தாரிணி சொல்லிவிட்டு முன்னே அடிவைக்க, பிரதாபன்
“ஏடி” என்று சட்டென்று தாரிணியின் கையைப் பற்றினான். வினயன் இதனைப் பார்த்தவன், மின்மினியின் கரத்தைப் பற்றி அவர்களை விட்டு தள்ளிப் போனான்.