“அப்பா சொன்னதுக்காக வந்தியா? அப்போ நீ பிரதாபனை என்னோட சேர்த்து வைக்க நினைக்கல, அவரை பத்தி தெரிஞ்சிக்க வந்திருக்க? உன் செர்டிஃபிகெட் வச்சு என் அப்பா பிரதாபனோட கேரக்டர் டிசைட் பண்ணுவார், அப்படித்தானே?” என்று தாரிணி கோபமாகக் கேட்டாள்.
ஆலப்புழாவின் மதிய நேர அனலோடு போட்டி போட்டது தாரிணியின் குரல். கடற்கரை ஓரமிருக்க, வெப்பமான காற்று அவர்களை தீண்டி போனது.
“அவர் பொண்ணுக்கு ஏத்தவனா இருக்கணும்னு அப்பா நினைக்கிறதுல என்ன தப்பு? அண்ட் என் அருமை பிரதாப பைத்தியமே! பிரதாபன் சேட்டா கேரக்டர் பத்தி நான் ஒன்னும் தப்பா சொல்லல, எனக்கும் உன் அப்பாவுக்கும் நீ சந்தோஷமா இருக்கணும், அதான் ஆசை! நீ அம்மா இல்லாத பொண்ணு, உனக்கு வரப்போற குடும்பம் உனக்கு நிறைய சந்தோஷம் கொடுக்கணும்னு நாங்க எதிர்ப்பார்க்கிறதுல என்ன தப்பு? பிரதாபன் சேட்டா பொதுவா பார்க்க நல்ல மனுஷந்தான், ஆனா அவர் வீட்டு பொண்ணை நடத்துற விதம் எனக்குப் பிடிக்கல, அவ்வளவு ஏன்? உன்னை நடத்துற விதம் எனக்குப் பிடிக்கல, நீ பேச வந்தா எப்படி அவாய்ட் பண்றார்? அப்போ உன்னை பிடிக்கலனு தானே அர்த்தம்?” வினயன் விளையாட்டுத்தனங்களை விட்டு, தோழி மீதான அக்கறையில் பேச, தாரிணிக்கு அது புரிய அதுவரை கோபமாக இருந்தவள், மென் அமைதியோடு பேசினாள்.
“நீயும், அப்பாவும் நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறீங்க, எனக்கு பிரதாபன் சந்தோஷமா இருக்கணும்” என்ற தாரிணியின் முகம் பார்த்த வினயனுக்கு, சத்தியமாக இந்த காதல் புரியவில்லை. ஆனால் தாரிணியின் நலன் முக்கியமாகப்பட்டது.
தாரிணி அவனோடு எம்.பி.ஏ படித்தவள், இருவரும் ஒரே வகுப்பு. தாரிணி அவன் மதிக்கும் ஒரு நல்ல தோழி, தாரிணி ஒருவனை விரும்புகிறாள் என்று தெரிந்ததுமே, வினயச்சந்திரனுக்கு அவனை காண அத்தனை ஆவல்.
இரண்டு மாதங்களுக்கு முன் தாரிணி அவனிடம் சொன்ன காதல் கதையை நினைத்துப்பார்த்தான்.
“வினய், அவங்க அச்சச்சன்கிட்டதான் நான் களரி கத்துக்கிட்டேன், ஸ்கூல் படிக்கிறப்போ எல்லாம் அவர் பெருசா பேசமாட்டார். அவங்க ஊர்ல பிரதாபன் ஃபேமிலி ரொம்ப பெரிய ஆளுங்க, அவர்கிட்ட பேச கூட பயம். நான் அவர் ரொம்ப ரூட், ஆட்டிட்ட்யூட், சீன் பார்ட்டி அப்படித்தான் நினைச்சிருந்தேன், நான் யூஜி படிக்க யுனிவர்சிட்டில சேர்ந்தப்போ எல்லாமே நானே எனக்குப் பண்ணிக்கணும். பிரதாபன் என்னோட சீனியர். நான் கேட்காம எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணினார், அந்த இரண்டு வருஷம் நான் பார்த்த ஆளே வேற. பிரதாபனுக்கு என்னை பிடிக்கும்னு அப்போதான் எனக்குத் தெரியும், ஐ லவ் யூ’னு சொன்னதில்லை தவிர ஐ ஃபெல்ட் இஸ் லவ்”
“பட் நான் காலேஜ் படிச்சு முடிக்கும்போது எல்லாமே மாறிடுச்சு, அவர் ஃபைனல் இயர் முடிக்கும்போது அவங்க அப்பா தவறிட்டார். அப்போ பிரதாபன் ரொம்ப அப்செட்டா இருந்தார், இருந்தாலும் என் கூட முடிஞ்ச நேரம் இருப்பார். காலேஜ் விட்டு வந்த பின்னாடி போன்’ல பேசுறது கூட குறைஞ்சு போச்சு. நான் அவர் அப்பா இறந்த கஷ்டத்துல இருக்கார்னு தொந்தரவு செய்யல, ஆனா அது இத்தனை வருஷம் ஆகியும் மாறல. எனக்கு வேலை கிடைச்சு, நான் மாவேலிக்கரா போன பின்னாடி எத்தனையோவாட்டி அவர்கிட்ட பேச ட்ரை பண்ணியிருக்கேன். பட் அவர் பேசல, அவரை பார்க்க மறுபடியும் களரி பயிற்சி போனேன், பிரதாபன் என்னோட பேசாத, தொந்தரவு பண்ணாதனு சொல்றார்.” என்று தாரிணி சொன்னதும், என் ப்ரண்டை வேண்டாம்னு ஒருத்தன் சொல்றதா என்ற எண்ணம் தலைதூக்கினாலும், விருப்பம் என்பது வேறல்லவா?
“அப்போ நீங்க லவ் பண்ணல, நீ மட்டும் லவ் பண்ற. ஒரு தலை ராகம்ம்ம்ம்ம்ம்ம்!” என்று இழுத்தான் வினயன்.
“நிச்சயமா பிரதாபனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். அதை நான் ஃபீல் பண்ணியிருக்கேன்” என்று தாரிணி அழுத்தி சொல்ல
“ஒரே ஊர்க்கார பொண்ணு, தெரிஞ்ச பொண்ணு. உங்கப்பா ஃபாரீன்ல இருக்கார், நல்ல புள்ள யாரா இருந்தாலும் ஹெல்ப் பண்ணுவாங்க தாரிணி.”
“எரும! உனக்குப் புரிய மாட்டேங்குது, தத்தி லவ் பண்ணியிருந்தாதானே தெரியும்” என்று தலையில் அடித்துக்கொண்டாள் தாரிணி. அவளுக்கும் பிரதாபனுக்குமான உணர்வை சொல்லில் அடைத்து நண்பனிடம் கடத்த தெரியவில்லை.
“ஓஹ் பின்னே? ஊர்ல இருக்கவங்க லவ்வுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணினா, எங்க இருந்து எனக்கு லவ் பண்ண டைம் கிடைக்கும்?” என்று சலித்த வினயன்
“உன்னை நான் புத்திசாலி பொண்ணுனு நினைச்சேன், இப்படி உளறிட்டு இருக்காத. உன்னை லவ் பண்ணினார்னு நீ சொல்ற ஒருத்தர் உங்கிட்ட இப்ப பேசுறது கூட இல்ல, ஜஸ்ட் அவருக்கு காலேஜ் படிக்கிறப்போ கம்பானியனா, ஒரு ப்ரண்டா உன்னை பார்த்திருப்பார். இல்லை எனக்கு ஒரு ஆள் இருக்கா’ன்னு காட்ட நினைச்சிருப்பார். காலேஜ் முடிச்சதும் அந்த ஃபீலிங்ஸ் போயிருக்கும். என்னைக்காச்சும் உன்னை அவர் லவ் பண்றேனு வார்த்தையால சொல்லியிருக்காரா?” என்று கேட்டான்.
வார்த்தையாக சொல்லியிருக்கிறானா? இல்லை! ஆனால் பிரதாபனின் பிரியம் வார்த்தைக்குட்பட்டதில்லை, வார்த்தையால் சொல்லப்படும் பிரியத்தை விட உணர்வால் புரிகின்ற பிரியம் வேறல்லவா? வினயன் கேள்விகளுக்கு நேரடியாக தாரிணியிடம் பதிலில்லை. இருந்தும் அவள் அறிவும் அகமும் அடித்து சொன்னது பிரதாபனின் பிரியத்துக்குரியவள் அவளென்று!
பூவின் வாசத்தை வார்த்தையால் சொல்ல முடியுமா? ஒருவர் உணர்ந்த வாசனை அதே போல் மற்றவருக்கும் இருக்குமா? பிரியத்தின் வாசனையும் அப்படியே! உணர்வே மொழியாக இருக்க, தாரிணிக்கு உணர்வினை மொழிப்பெயர்க்கத் தெரியவில்லை.
தாரிணி அந்த இயலாமையைக் கோபமாகக் காட்டினாள்.
“அது எப்படிடா உன் மத்த ப்ரண்ட்ஸ் லவ் பண்ணினா, எப்படி சேர்த்து வைக்கலாம் யோசிக்கிற? என் லவ்வை மட்டும் ஆராய்ச்சி பண்ற?”
“ஹேய்! நீ சொன்னதை கேட்ட பின்னாடி எனக்கு அவர் லவ் பண்ணினார்னே தோணல.”
“வினய்! உனக்கு இஷ்டமில்லன்னா நோ சொல்லு, அதைவிட்டு இப்படி பேசாத! எனக்குப் பிரதாபனை ரொம்ப நல்லா தெரியும், அவர் சும்மா டைம் பாஸுக்குப் பழகுறவர் இல்லை, உன்னை சொல்லி தப்பில்லை, பிரதாபனை அத்தன வருஷம் பார்த்திருந்தும் கூட நான் அவரை ரூட்’னு நினைச்சிருந்தேன். அவரோட பழகின அப்புறம்தான் தெரிஞ்சது, அவர் அப்படியில்லை. ஒருத்தரை பத்தி தெரிஞ்சா, அவங்களை புரிஞ்சிக்க முடியும் வினய், புரிஞ்சா பிடிக்கவும் செய்யும்னு அவர் விஷயத்துல நான் உணர்ந்தேன்.” என்று கண்களில் புன்னகை மிகுந்திருக்க பேசிய தோழியைக் கனிவாக பார்த்தான் வினயச்சந்திரன்.
தாரிணியின் புன்னகை பிரதாபன் என்றால், அந்த பிரதாபனை தாரிணியோடு சேர்க்க வேண்டும் என்று வினயன் மனதில் நினைத்தபடி தோழியைப் பார்க்க
“என்னடா?” என்று தாரிணி கண்களை சுருக்கி முறைத்தாள். பற்கள் தெரியாமல் தலையசைத்து புன்னகைத்த வினயன்
“எப்பவும் நம்ம பசங்க லவ் பண்ற பொண்ணை பத்தி சொல்லி கேட்டிருக்கேன், முதல்முறையா ஒரு பொண்ணு பையனை லவ் பண்ணி எங்கிட்ட ஹெல்ப் கேட்கிறா, வித்தியாசமா இருக்கு” என்றான்.
“ஆமா! பொண்ணுங்க ஹெல்ப் கேட்டா சார் உடனே செஞ்சுடுறார்.” தாரிணி கடுப்பாக சொல்ல
“பசங்கன்னா ப்ரோபோஸ் பண்ண ஐடியா கேட்பானுங்க, இல்லை அவனுங்க ஆளுக்குப் பிடிச்ச பாட்டை பாட சொல்லி வாங்கிட்டு போவானுங்க, தாரிணி மேடமுக்கு என்ன செய்யணும் சொல்லுங்க” என்று வினயன் கேட்க
“அப்பா மேரேஜுக்கு ரொம்ப கட்டாயப்படுத்துறார், பிரதாபன் கிட்ட பேசவே முடியல. மனுசன் என்னை பார்த்தாலே ஓடுறார், அவர் கிட்ட என்னை பத்தி பேசணும், அவருக்கு என்னை பிடிக்கும்னு அவர் வாயால சொல்ல வைக்கணும். அட்லீஸ்ட் ஒரு பத்து நிமிஷம் என்னோட அவர் பேசணும். அப்பாவையும் என்னால கஷ்டப்படுத்த முடியாது.” என்று தாரிணி அவள் நிலையை சொன்னாள்.
“அப்பா கிட்ட நான் பேசுறேன் தாரிணி, நீ கவலைப்படாத! ஒருவேளை பிரதாபன் மனசுல நீ இல்லைனு சொல்லிட்டா?” என்று வினயன் கேட்க தாரிணி இதுவரையில் அப்படி யோசித்ததே இல்லை. சட்டென்று ஒரு அதிர்வு தோன்றினாலும், பிரதாபனின் பிம்பம் மனதில் தோன்றிய கணம் அவளிடம் ஒரு தெளிவு.
“அவர் கண்டிப்பா அப்படி சொல்ல மாட்டார்.”
“சொல்லிட்டா?”
“அடிச்சேன்னா பாரு, அப்புறம் நீ ஏண்டா நீ லவ்-வினய்னு இருக்க?” என்று எரிச்சல்பட்டவள் “ப்ளீஸ் வினய், நீ நினைச்சு பார்க்காத அளவுக்கு நான் டென்ஷனா இருக்கேன், இப்படி லாஜிக்கா கேட்டு என்னை இம்சை பண்ணாத! பிரதாபனுக்கு என்னை பிடிக்கும்” என்று அதையே சொன்னாள் தாரிணி. அது அவளுக்குக் கர்வம் கூட, ஆனால் கர்வம் உடையும்போது?
“ஏன் தாரிணி பேசாம அவர் வீட்டு வாசல்ல நின்னு ஐ லவ் யூ பிரதாபன்’னு கத்தி சொல்லிடேன், இல்லைன்னா நான் பெருசா பேனர் வச்சிடவா?” என்று காதல் திட்டங்களாக வினயன் எடுத்துவிட
“வினய், பூவம்பள்ளில் பிரதாபன் ஒன்னும் காலேஜ் படிக்கிற பையன் இல்லை. அவர் ரொம்ப மரியாதை எதிர்பார்ப்பார், இந்த மாதிரி சின்னப்புள்ளத்தனமா ஐடியா எல்லாம் செட் ஆகாது. அப்படி செஞ்சா அவர் என்னை திரும்பி கூட பார்க்க மாட்டார், அவர் வேறடா” என்று தாரிணி சொல்ல, வினயனும் தாரிணி அப்பாவிடம் பேசினான். ஒருவழியாக
“இங்க பார் ஒரு வாரத்துல அவர் உன்னை பிடிக்கும்னு சொல்லுவார், இல்லைன்னா ஒழுங்கா அப்பா பேச்சைக் கேட்கணும். புரிஞ்சதா?” என்று தாரிணியிடம் ஒப்பந்தம் போட்டே தாமரக்குளம் சென்றான் வினயச்சந்திரன்.