காதல்..
அதற்கென்று ஆசைகள்
எதுவும் இல்லாதது
அது நிறைவேற
வேண்டுமென்பதைத் தவிர என்று கலில் கிப்ரான் சொல்வது போலவே தாரிணியின் காதலும்.
“அவர் சந்தோஷமா இருந்தா, நானும் சந்தோஷமா இருப்பேன்.” தாரிணி நொடி கூட யோசிக்காது சொன்னாள். அவள் காதலின் எதிர்ப்பார்ப்பு காதல் மட்டுமே, அதை தாண்டி அவளிடம் ‘காதலின் எதிர்ப்பார்ப்புகள்’ என்று எதுவுமே கிடையாது. பிரதாபனின் புன்னகை! அது போதும் அவளுக்கு.
“உண்மையில நீ பிரதாப பைத்தியம்தான்!” என்று கவலையாக சொன்னான் வினயச்சந்திரன். தாரிணியின் தந்தை மாதவனிடம் வினயன் வாக்குத் தந்திருந்தான். “மேடி டாடி! நீங்க கவலைப்படாதீங்க, சீக்கிரமே நான் தாரிணியை கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கிறேன். நீங்களும் பிரதாபனை பத்தி விசாரிங்க, நான் நேர்லயே போய் பார்க்கிறேன்” என்றான்.
தாரிணி ‘அதுக்கென்ன?’ என்ற ரீதியில் எதிரே இருந்த நண்பனை பார்க்க, வினயன் அவளிடம்
“நேத்து ப்ரண்ட் விஷ் பண்றானு கூட நிக்காம சேட்டா பின்னாடியே ஓடினியே, என்னாச்சு?” என்று விசாரித்தான். தாரிணி முகம் வாட பதில் பேசாமலிருக்க,
“அந்த மனுஷனுக்கே ஆயிரம் கவலை, சொந்த வீட்டை விட்டுட்டு அதையே டெய்லி பார்த்துட்டு நிப்பார். உன்னையெல்லாம் அவர் கண்டுக்கவே மாட்டார், அவருக்கிருக்க கவலையில நேத்து காலையிலயே அம்பலத்துக்குப் போய்ட்டார். இன்னும் நீ என்ன எதிர்ப்பார்க்கிற எனக்குப் புரியலடி” என்றான் வினயன் பொறுமையிழந்து. அதுவரை வாடியிருந்த தாரிணி முகம்
“அச்சச்சன் உனக்கு ஆசிர்வாதம் பண்ணி பூ கொடுத்தாரே, அது சேட்டா கோவில்ல இருந்து கொண்டு வந்தது.” என்றதும் பூத்தது தாரிணி முகம். மதிய வெயில் பட்டுத்தெறித்த முகத்தில் வெள்ளிக்கோடாய் புன்னகை.
“ஒரு விஷேசமுமில்லாம பிரதாபன் ஏன் கோவில் போனார்?”
“எதாவது கஷ்டம்..” என்று சொல்ல வந்ததை முடிக்காது பிரகாசமானது வினயச்சந்திரன் முகம்.
அவன் முகத்திலிருந்த கேள்வியைப் படித்தவள், “எஸ்! பிரதாபனுக்குத் தாரிணின்னா விஷேஷம்” என்றாள் பெருமையாக. அதே வார்த்தைகள் பிரதாபன் அவளிடம் சொல்லியிருக்கிறான், அவன் சொற்களின் சூடு குறையாது, இன்னும் அவள் காதில் ஒலிப்பது போல் பிரமையில் உடல் சிலிர்த்தது.
“இது அவரே எங்கிட்ட சொல்லியிருக்கார். நேத்து எனக்காக கோவிலுக்குப் போய்ட்டு, ஒரு விஷ் கூட பண்ணாம, என்னை திட்டினான் தேஷியக்காரன்!(கோவக்காரன்)” என்று செல்லமாக சொன்ன தாரிணி கண்களில் மின்மினி வெளிச்சம்.
“தாரிணி மோளே! எந்தா இது? என்ன இருந்தாலும் சேட்டா என் முதலாளி, மரியாதையில்லாம பேசாத” என்று வினயன் விளையாட்டாக சொல்ல
“ஆஹான்” என்று சிரித்தவள் “ஏண்டா உனக்கு வேற ஐடியா கிடைக்கல, எதுக்கு வினய் அங்க போய் கஷ்டப்படுற?” என்று தாரிணி உண்மையான வருத்தத்தோடு கேட்டாள். அலைப்பேசியில் ஏற்கனவே கேட்டிருந்தாலும், நேரில் மீண்டும் கேட்க
“எங்க சுஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்தா நான் என்ன செய்வேனோ, அதான் செய்றேன்” என்று வினயன் சொல்ல
“யார் சுஜா?” என்று தாரிணி யோசித்தாள்.
“எங்க வீட்டு இளவரசி, ஜெயேட்டா பொண்ணு” என்றதும்
“டேய்! ஜெயேட்டா பொண்ணுக்கு மூணு வயசிருக்குமா? ஸ்கூல் கூட போகாத பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்க்கிறானாம்” என்றாள் கடுப்பாக.
“ஹாஹா!” சத்தமாக சிரித்த வினயன் “அதாவது என் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடினா என்ன எல்லாம் செய்வேனோ, என் ப்ரண்ட் தாரிணிக்கும் அப்படி பொறுப்பா பார்ப்பேன் சொல்றேன்”
“நானும் சுஜாவும் ஒன்னா?” நண்பனை பற்றி தெரிந்தாலும், அவன் பாசம் நெகிழ்த்தினாலும் வாய்ப் பேசினாள் தாரிணி.
“ரெண்டும் அடம் பிடிக்குற குழந்தைதான்! ஆனா சுஜா கொஞ்சம் சமத்து, உன்னை மாதிரி பிரதாபன் வேணும்னு அடமில்லை” என்றவன்
“உன் அப்பா டிடெக்டிவ் வச்சு விசாரிக்கிறார்தான், ஆனாலும் பக்கத்துல இருந்து பார்க்கிறது வேறதானே? ஒரு ஐடியாவுமில்லாமதான் நான் மாவலிக்கரா போனேன். அவரை பார்த்ததும் என்ன சொல்றது தெரியல, வேலைக்கு வந்தேன் சொல்லிட்டேன். நீ சொன்னது உண்மை தாரிணி, ஒருத்தங்களை தூரத்துல இருந்து பார்க்கிறதுக்கும் பக்கத்துல இருந்து பார்க்கிறதுக்கும் ஆயிரம் வித்தியாசமிருக்கு. சேட்டா என்னை, அவங்க போட்ல வேலைக்கிருக்க ஷிபுவை, நசீரேட்டாவை எல்லாம் ரொம்ப நல்லவிதமா நடத்துறார். அதே நேரம் அவர் தங்கச்சிகிட்ட அப்படி ஒன்னும் பாண்டிங் தெரியல, ஒருவேளை நான் களிஊஞ்சல் மம்முக்கா ஷாலினி மாதிரி ஒரு அண்ணன் தங்கச்சியை இமேஜின் பண்ணியிருந்தேன், அதனால அப்படி தோணலாம்.”
“அவரை புரிஞ்சிக்கிறதை விட என்னை நானே புதுசா பார்க்கிறேன். தேவிகுளத்துல இருந்ததுக்கும் இங்கயும் நிறைய வித்தியாசம், புது அனுபவம். நல்லாத்தான் இருக்கு! மிஞ்சி போனா இன்னும் ஒரு வாரம், அந்த தாமரக்குளமே கேட்கிற மாதிரி, சேட்டாவ ஐ லவ் யூ தாரிணினு சொல்ல வைக்கிறேன்.” என்று வினயச்சந்திரன் சபதமெடுக்க
“தாமரக்குளத்துக்கெல்லாம் கேட்க வேண்டாம், எனக்கு மட்டும் கேட்டா போதும்” தாரிணி வேகமாக சொல்லவும்
வினயன், “நீ பேங்க்ளூர் டேஸ் பார்த்துட்டு, நிவின் பாலி, நஸ்ரியா புருஷனை எல்லாம் காலேஜ் டேஸ்’ல க்ரஷ்னு சொல்றப்பவே நான் யோசிச்சிருக்கணும். ஆனாலும் தமிழ் பசங்களே உனக்குக் கிடைக்கலையா? கொஞ்சம் கூட தாய்மொழி பாசமில்ல.” என்று வம்பிழுத்தான்.
“ஹலோ! சாரே! எனக்குத் தாய்மொழி பற்றெல்லாம் நிறைய இருக்கு, இருந்தாலும் நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்க, நான் ஆலப்புழாக்காரியாக்கும்!” என்று தாரிணி பெருமையாக சொல்ல
“பெரிய ஆலப்புழா! நீதான் உங்க ஊரை மெச்சிக்கணும், எங்க தேவிகுளம் எவ்வளவு அமைதியா இருக்கும் தெரியுமா? மலை, மலைக்காத்துன்னு எங்க ஊர் எத்தனை அழகு! இங்க உப்புத்தண்ணியும், முப்பது டிகிரி வெயிலும், சன்ஸ்கீர்ன் டப்பா காலியானதுதான் மிச்சம்” என்று வினயன் புலம்ப
“சரிடா ரொம்ப புலம்பாத, நீ உங்க தேவிகுளத்துலயே நல்ல தமிழ்ப்பொண்ணா பார்த்து கட்டிக்க” என்றாள் தாரிணி.
“பின்ன, எங்க ஊர் பொண்ணுங்க எல்லாம் அழகு! மலைக்காத்து கொடுக்கிற தேஜஸே தனி தெரியுமா, என் ஸ்கின்னே எங்க ஊர்ல எவ்வளவு நல்லாயிருக்கும் தெரியுமா?” என்று வினயன் சொல்ல
“ஏடா வினய், நின்னே கொண்டு தோற்றுடா. விட்டுடா. உன் தேவிகுளம்தான் பெஸ்ட்! நான் பெர்மிஷன் போட்டு வந்திருக்கேன். கிளம்புறேன்” என்று தாரிணி இருக்கை விட்டு எழுந்து
“அப்பாவுக்கு வேற பதில் சொல்லணும்டா, அட்லீஸ்ட் பிரதாபனை நான் தனியா மீட் பண்ணி பேசுறதுக்கு ஏற்பாடு பண்ணுடா வினய். ப்ளீஸ்” என்றாள்.
“நீ கவலையே படாத! நாளையிலிருந்து ‘மிஷன் பிரேமம்’ ஆரம்பிக்குது. எதாவது பண்ணி அவரை உங்கிட்ட பேச வைக்கிறேன்.” என்றவன் தாரிணி சென்றதும் பிரதாபனிருக்கும் கட்சி அலுவலகம் சென்றான்.
அப்போது மதியம் மூன்று மணிக்கு மேல் ஆகிவிட, வினயன் சென்று பத்து நிமிடம் கழித்தே பிரதாபவர்மன் வந்தான். பிரதாபன் முகமே களைத்திருந்தது.
“சாப்பிட்டியா வினயா?” என்று கேட்க “சேட்டா! நான் சாப்பிட்டேன், உங்களுக்கு என்ன கட்சி ஆபிஸ்ல விருந்தா?” என்ற வினயன் கேள்விக்கு சிரித்த பிரதாபன்
“அடுத்த வாரம் ஆலப்புழாவுல கட்சியோட பெரிய சம்மேளனம் நடக்கப்போகுது, அதுக்கு டெல்லில இருந்து வராங்க. அது பத்தி பேசினதுல சாப்பிட எல்லாம் நேரமில்லை. வீட்டுக்குப் போய் பார்த்துக்கிறேன்” என்றான்.
“என்ன சேட்டா நீங்க? மணி மூணுக்கு மேல ஆச்சு. நம்ம வீட்டுக்குப்போக இரண்டு மணி நேரமாகும். வாங்க சாப்பிட போகலாம்” என்று பிரதாபனை அழைக்க,
“அதெல்லாம் நான் சாப்பிட்டுக்கிறேன், இப்போ சாப்பிடுங்க. நானெல்லாம் சாப்பிட்டு முடிச்சு சாயா குடிக்கிற டைமாச்சு” என்றவன் அங்கே பக்கமாக இருந்த உணவகத்திற்கு, பிரதாபனை கட்டாயப்படுத்தி இழுத்துப்போனான்.
பிரதாபனை உட்கார சொன்னவன் இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்து, “சாப்பாடு இல்லை, பத்திரி இருக்காம், பத்திரியும் மீன் கறியும் சொல்லவா?” என்று கேட்டவன் பிரதாபன் தலையசைக்க, அதையே கொண்டு வர சொன்னான். வினயன் தனக்கு சாயா வாங்கியவன் அதனை ரசித்துப் பருகி, வாசலில் சாயா போட்டுக்கொண்டிருந்த மாஸ்டரிடம் பேச்சுவளர்த்தான். பிரதாபன் தனியே உண்ணட்டும் என்று வினயன் நிற்க, பிரதாபன் பார்வை வினயனிடமே. வினயச்சந்திரனின் அக்கறை அகம் தொட்டது. அங்கேயும் குடித்த சாயாவின் ருசியை மாஸ்டரிடம் புகழ்ந்து கொண்டிருக்க, பிரதாபன் முகத்தில் புன்னகை. வினயனே உணவுக்குப் பணமும் செலுத்தியிருக்க, பிரதாபன் கொடுத்த போது வாங்க மறுத்தான்.
“என்ன சேட்டா நீங்க? எங்கண்ணா சாப்பிட்டா இப்படி காசு வாங்குவேனா?” என்று கேட்டுவிட, பிரதாபன் ஒன்றும் சொல்லவில்லை.
இருவரும் பிரதாபனின் புல்லட்டில் ஊர் திரும்ப, வரும் வழியில் வினயன் “ஏன் சேட்டா உங்களுக்கு அரசியல்’ல ஆர்வம்?” என்று கேட்க
“ஆர்வம்னு இல்லை வினயா. அரசியல் நம்ம ஊர்ல ஒரு அடையாளம், அதிகாரம்! எனக்கு அந்த அடையாளம் வேணும்ன்றதால செய்றேன்.” என்றான்.
“அடையாளமா? எனக்குப் புரியல சேட்டா”
“அடையாளமே இல்லாம இருக்கிறது வேற, நமக்கு ஒரு அடையாளமிருந்து, அதை இழக்கிறது வேற! உனக்குப் புரியலன்னா விடு” என்று என்று பிரதாபன் சொல்ல
“என்னமோ போங்க சேட்டா, நீங்க நிறைய கஷ்டப்படுற மாதிரி தோணுது” என்று மனதில் உள்ளதை பட்டென்று போட்டுடைத்தான் வினயன்.
“இதெல்லாம் எனக்குக் கஷ்டமில்ல..” என்ற பிரதாபனிடம் தாரிணி பற்றி பேசலாம் என்று நினைத்து வாயெடுக்க, வண்டி சட்டென நின்றது. என்னவென்று வினயன் சுற்றிப்பார்க்க, பிரதாபன் இறங்க சொன்னான். கிருஷ்ணபுரத்தில் உள்ள குளம், அதில் யானை ஒன்று குளித்தது. குளத்தின் பின்பக்கம் நெடுக வளர்ந்த மரங்கள்.
யானை தன் தும்பிக்கையால் தண்ணீரை தன் மீது தெளித்துக்கொள்ள, பாகன் பக்கமிருந்து நீரை வாரையடித்தார். யானை மீண்டும் தும்பிக்கையால் நீரை அடித்து, சிலிர்த்து உற்சாகக் குளியல் போட்டது. பாகன் பிடித்திருக்க அப்படியே ஒற்றை பக்கம் மெல்ல சாய்ந்து நீரில் படுத்தது. தும்பிக்கையை மெல்லமாக பாகன் தேய்த்துவிட, மிக மெல்லிய ரோசாப்பூ நிறத்திலிருந்த யானை காதின் மேற்புறம் விசிறியாக ஆடியது. இதனை கண்ட வினயன் முகத்திலும் ரசனையான சிரிப்பு, குளத்தின் ஈரக்காற்று அவர்களையும் தீண்டியது. முன்மாலை பொழுதாகியிருக்க, சூரியனின் கிரணங்கள் மெல்ல மறைந்தன.
“என்ன சேட்டா? யானை குளிக்கிறதைப் பார்க்கவா நிறுத்துனீங்க?” என்று வினயன் கேட்க, பிரதாபன் பதில் சொல்லவில்லை. அவன் கவனம் முழுக்க களிறின் மீது, வாஞ்சையாக அதனையே பார்த்தான். பாகனை அழைத்துப் பேசியவன் பணம் கொடுத்தான்.
“சேட்டா! பணமெல்லாம் கொடுத்திருக்கீங்க? வாங்க ஆசிர்வாதம் வாங்கலாம்” என்று வினயன் ஆவலாக அழைக்க,
களிறின் சேட்டைகளைப் பார்த்தபடி நின்ற பிரதாபன் முகத்தில் பெரும் அமைதி! திருப்தியாக நின்றான். அந்த யானையோ வெயிலுக்கு இதமாக, தண்ணீரிலே கிடந்தது. இருபது நிமிடங்களுக்கு மேல் அதை பார்த்து நின்ற பிரதாபன் வண்டியை எடுக்க, வினயனுக்குப் பேச வந்தது மறந்து போனது.
“சேட்டாவுக்கு யானைன்னா பிடிக்கும் போலயே? நல்ல பெரிய ஆனை இல்ல?” என்று வினயன் கேட்க
“பெருசில்ல, குட்டி ஆனை! அஞ்சு வயசுதான்!” என்றான் பிரதாபன். பிரதாபன் அமைதியாக வண்டியோட்டினான், பிடித்ததைப் பார்த்ததால் மனம் அமைதியாக முகத்திலும் அது பிரதிபலித்தது. எல்லாம் வீடு செல்லும் வரை, வீடு சென்றதும் மின்மினி சொன்னதை கேட்டவன் முகத்தில், அதுவரை இருந்த மென்மை, அமைதி எல்லாம் காணாமல் போனது. பிரதாபனின் முகம் பார்த்த மின்மினியின் முகத்தில் பதட்டம் கூடியது.