‘கேலிகட் பல்கலைகழகத்தில்’ புதிதாய் சேர வந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் வழிநடத்த, அன்று மாதவனையும் தாரிணியையும் பிரதாபவர்மா கண்டுகொண்டான்.
தாரிணியின் தந்தை மாதவன் மகளை அழைத்து வந்திருக்க, அவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு சென்றான். மாதவனும் மகளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்து தர சொல்லிக் கேட்டார். அப்பாவும் பிரதாபனும் பேசியிருந்தாலும் தாரிணி புன்னகையோடு நிறுத்திக்கொண்டாள். அதற்கு முன்னும் அவனிடம் பெரிதாக பேசியதில்லை. தாரிணிக்கு அப்பா தன்னை விடுதியில் சேர்த்துவிட்டு துபாய் போய்விடுவார் என்ற வருத்தம், கோபம்.
பிரதாபனை எல்லாம் அவள் கருத்தில் கொள்ளவில்லை. பள்ளி படிக்கும்போதே அம்மா மறைந்துவிட, அப்பாவும் இங்கு செய்த அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டார்.
துபாயில் பெரிய ஊதியத்தில் அவரின் நண்பரின் உறவினர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். மகளை அங்கே படிக்க சொல்ல வளர்ந்த ஊரை விட்டு வர மறுத்துவிட்டாள் தாரிணி. அதில் அப்பாவுக்கும் பெண்ணுக்கும் மனத்தாங்கல்.
தாரிணி புதிதாய் கல்லூரியில் சேர்ந்த பூரிப்பு, பயம், புது நண்பர்கள் என்று அதில் மூழ்கிப்போனாலும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கென்றிருந்த களரிப்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்வதை வாடிக்கையாக்கினாள். பிரதாபவர்மாவும் தினமும் அங்கு பயிற்சிக்கு செல்வான்.
தாரிணிக்கு அத்தனையும் புதிதாக இருக்க களரிப்பயிற்சியை விடவில்லை. பழகிய ஒன்றை செய்வதில் ஏற்படுகின்ற ஆசுவாசம் தனியல்லவா? அதிலும் தாரிணி அப்போது தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து வெற்றியும் பெற்றிருந்தாள். பிரதாபவர்மாவும் அப்படியே. மாதவன் சொல்லிவிட்டு சென்றாலும் தாரிணி எதற்கும் யாரையும் நாடவில்லை. அவள் தனி உலகில் தனியாக இருந்தாள்.
பிரதாபன் மட்டும் அவளாக எதாவது கேட்பாள் என்று காத்திருக்க, அவள் பேசவில்லை என்றதும் அவனாகவே ஒரு நாள் அவளிடம் பேசினான்.
களரிப்பயிற்சி முடிந்து அதன் பக்கமிருக்கும் சிமெண்ட் பெஞ்சில் தாரிணி உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் பர்ஸும் அதன்மேல் அவள் அலைப்பேசியும் கிடந்தது. தாரிணி முகம் சுருங்கியிருக்க அமைதியாக எதிரே இருந்த பூச்செடியை பார்த்தாள்.
“ஹாய் தாரிணி” என்றபடி பிரதாபன் அவள் பர்ஸ் பக்கமாக அமர்ந்தான்.
“ஹாய் பிரதாபன்” என்று தாரிணி பெயர் சொல்ல, சட்டென்று அவன் முகத்தில் கோபத்தின் நிறம்.
“பெயர் சொல்லாத தாரிணி” என்று பிரதாபன் சொல்லவும் தாரிணிக்கு ‘பெரியவன் என்று தோன்றாது, பெரிய இவனா? என்று கடுப்பானது. என்னை விட ஒரு வயது இல்லை ஒன்றரை வயது பெரியவனாக இருப்பான், பெயர் சொன்னால் என்ன இப்போ என்ற எரிச்சல்.
தாரிணி உடனே “ஓகே சொல்லல” என்றாள். என்னவோ தாரிணியிடம் உற்சாகமில்லாததை போல் பிரதாபன் உணர்ந்தான். எப்போதும் தோழமை கூட்டத்தோடு இருப்பாள், இல்லை அப்பாவோடு போனில் பேசியபடி அந்த இடமெல்லாம் சுற்றிவருவாள். அப்பாவிடம் கதையளப்பவள் பூச்செடிகளில் உள்ள பூவையெல்லாம் வருடிக்கொடுப்பாள். புன்னகையோடு பேசுபவளை பார்வையால் வருடுவான் பிரதாபவர்மா. ரோஜா நிறத்தில் பூத்திருந்தன போகைன்வில்லா மலர்கள். கண்களை ஈர்க்கும் நிறம், அழகு! ஆனால் அதனை ரசனையாக ரசிக்கவில்லை தாரிணி.
“என்ன பூவை முறைச்சிட்டு இருக்க?” பிரதாபன் கேட்க
இப்போது பூவை முறைத்தவள் அவனை முறைத்தாள்.
தாரிணியின் அலைப்பேசியில் அழைப்புகள் வந்துகொண்டிருக்க, அதனை எடுக்கவில்லை. பிரதாபன் இயல்பாக பார்த்தாலே ‘அப்பா’ என்ற அழைப்பு தெரிந்தது. அப்பா மேல கோபம் போல் என்று பிரதாபன் புரிந்துகொண்டான்.
“காலேஜ் எப்படி போகுது? செட் ஆச்சா? பிடிச்சிருக்கா?” என்று கேட்க
“எஸ்” என்றாள்.
“அப்பா மேல கோவம்னாலும் பேசிடு தாரிணி. வேற ஊர்ல இருக்காங்க இல்ல” என்று பிரதாபன் சொல்ல, அவனை ஓரவிழியால் பார்த்தவள் பதில் சொல்லவில்லை. நிச்சயம் அவமதிப்பு, அது புரிந்தாலும் பிரதாபவர்மனுக்குக் கோபமே வரவில்லை. அடம் பிடிக்கும் மழலையாகப் பார்த்தான்.
பிரதாபனுக்குத் தாரிணி பேசாமல் இருப்பது பிடிக்கவில்லை. அவளோடு அதற்கு முன்னும் நன்றாக பேசியதில்லை. அதே நேரம் அப்படியே விட்டுச்செல்லவும் மனமில்லை.
கேண்டீன் சென்றவன் சூடாக இரண்டு கட்டஞ்சாயா வாங்கி வந்தான். அமைதியாக தாரிணி முன் நீட்டினான். களரி பயிற்சி முடித்து களைத்திருந்தவள் வாங்கி வந்துவிட்டானே என்ற எண்ணத்தில்
“தேங்க்ஸ்” சொல்லி வாங்கிப்பருகினாள்.
அவ்வளவுதான் அவர்களின் சந்திப்பு. தாரிணிக்குப் பிரதாபன் மேல் பெரிய அபிப்ராயமில்லை, அதற்கான வயதுமில்லை. அப்போதுதான் பள்ளி முடித்த இளம்பெண். பூவம்பள்ளில் பொன்னச்சன் அவள் களரி ஆசான், ஆசானின் பெயரன் பிரதாபவர்மா. இதில் பிரதாபனும் யாரிடமும் அவ்வளவு எளிதாக பேசமாட்டான், அவன் நண்பன் உன்னிகிருஷ்ணனிடம் மட்டுமே நெருக்கம். தாரிணி எல்லாரிடமும் நட்பு பாராட்டும் பெண். தானாக சென்று பேசுவாள். அதிகாலை நேரம் பயிற்சி என்பதால் பெரிதாக பேசவும் நேரமிருக்காது, தேவையுமிருக்காது.
அன்றைய சந்திப்பு சாயாவில் தொடங்கியிருக்க அடுத்து வந்த நாட்களும் இதே பழக்கமானது. பிரதாபன் சாயா வாங்கி வருவான் தாரிணி குடிப்பாள், நன்றி சொல்வாள். படிப்பதற்கு இருந்தால் அவள் படிக்க பிரதாபன் சாயா குடித்ததும் சென்றுவிடுவான்.
அப்பாவோடு சண்டையிட்டு கோபத்தோடு இருந்தவள் நண்பர்களிடமும் தனியே விட சொல்லியிருக்க, அந்த நேரம்தான் பிரதாபன் தாரிணியை விசாரித்தான். அவனிடமும் எரிந்துவிழுந்திருக்க அவனோ பெரிதாக கோபம் காட்டாது, சாயா வாங்கிகொடுத்து அமைதியாக சென்றுவிட ஒருவாரம் கழித்து தாரிணி இயல்பாகிவிட்டாள்.
அவன் பயிற்சி முடிந்து ஆசானிடம் பேசிகொண்டிருக்க, இவள் சாயா வாங்கி காத்திருந்தாள்.
பிரதாபனும் அந்த போகைன்வில்லா மலர்களைப் பார்த்தபடி சாயாவைப் பருக, தாரிணி பேசினாள்.
“அப்பா’வ துபாய் போகாதீங்கன்னு சொன்னேன். அவர் கேட்காம இங்க ஜாப் விட்டு போய்ட்டார், அதான் கோவம் போகல”
“நான் ஒன்னும் கேட்கலயே” பிரதாபன் சாயாவைப் பருகிக்கொண்டே சொல்ல
தாரிணி ஒரு நொடி தயங்கியவள் பின், “அன்னிக்கு நான் கோவத்துல இருந்தேன். அதான் பேசல. இப்போ சொல்லணும்னு தோணிச்சு. நான் கேட்காமத்தானே நீங்க டீ வாங்கிக்கொடுத்தீங்க” என்றதும்
“அதான் நீயும் கொடுத்திட்டியே” என்றான் புன்னகையோடு. முதல்முறை அவன் புன்னகை பார்க்கிறாள். முதலில் அவனை அத்தனை ஆர்வமாக கவனித்ததில்லை. தாரிணிக்கு எப்போதும் எதை செய்தாலும் தன்னுடைய மொத்த முயற்சியையும் கொடுப்பாள். அவளுக்குக் களரியை ஒழுங்காக பயின்று பொன்னச்சனிடம் பெயர் எடுப்பதே அப்போது ஆசையாக இருக்கும். இன்றுதான் பிரதாபனின் புன்னகை பார்க்கிறாள். இதழ்கள் விரியாமல் கண்களால் சிரித்தான்.
தாரிணி வாய்விட்டு சிரிப்பாள். ஈறுதெரிய சிரிப்பவர்கள் அழகென்பார் வண்ணதாசன். தாரிணி அப்படித்தான்! அவள் மகிழ்ந்தால் முகத்தில் அது அப்பட்டமாகத் தெரியும். கண்களும் முகமும் சேர்ந்து சிரிக்கும். அவள் அப்பா மாதவன் போல் சிரிப்பு. பிரதாபன் இப்படி கஞ்சத்தனமாக சிரித்தாலும் அந்த ஒளித்துவைத்த சிரிப்பை பார்க்க பிடித்தது.
தாரிணி கோபமாக இருக்க அது புரிந்து தோழியர் விட்டுச்சென்றிருக்க, பிரதாபனின் உடனிருப்பு அந்த நேரம் கோபத்தோடு கொஞ்சம் ஆசுவாசமும் கொடுத்தது. யாரும் வேண்டாம் என்ற கூச்சலோடு யாராவது என்னோடு இருங்களேன் என்று பரிதவித்தாள் அந்த பதினெட்டு வயது பாவை. பிரதாபன் அதனை எல்லாம் கடந்துவந்தவன். அதனால் அவனால் தாரிணியைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அவன் கல்லூரி சேர்ந்தன்று ஷங்கரன் மகனை அழைத்து வந்திருந்தார். முதல் நாள் அவனே எதிர்ப்பார்க்காத வகையில் சுமா வந்திருந்தார். முன்பு போல் அம்மாவிடம் முகம் திருப்புவதில்லை அவன். ஏனோ வளர வளர அம்மாவை புரிந்துகொள்ள முடிந்தது, அதுவும் அப்பா இப்போதெல்லாம் அதிகம் மதுவருந்த, அம்மாவின் செயல் நியாயமாகத் தோன்றியது. ஆனாலும் முழுதாக ஏற்கமுடியாத வயதும் பருவமும் அவனுக்கு.
எதுவும் கேட்காத பிரதாபனின் உடனிருப்பு அன்று தாரிணிக்கு உற்றதாக இருந்தது. அப்போது எரிச்சலிருந்தாலும் இப்போது அதெல்லாம் மறைந்திருக்க, பிரதாபனுக்கு தாரிணி மேல் எப்போதும் ஒரு பரிவுண்டு. அதனை வெளிக்காட்ட நேரமும் தேவையும் அதுவரை இருந்ததில்லை. முதலில் அதற்கு அவனுக்கும் பக்குவமில்லை.
தாரிணி அம்மா இல்லாத பெண், அப்பாவும் வெளி நாட்டில் இருக்க தனியாக உணர்வாள் என்று புரிதல் பிரதாபனுக்கிருந்தது. பொன்னச்சனுக்கு எப்படி தாரிணி களரியில் நன்றாக தேர்ச்சிப்பெற்றிருப்பது பிடிக்குமோ பிரதாபனுக்கும் அந்த வகையில் அவள் கலையார்வத்தின் மீது ஒரு ரசனை உண்டு. நட்பாக, காதலாக இல்லாத ஒரு வாத்சல்யம் மட்டுமே அவனுக்கு. அக்கறை, வாஞ்சையோடு தாரிணியைப் பார்த்தான்.
அந்த வயதில் அவனுக்கிருந்த தனிமையுணர்வு, அவனும் வீட்டை பிரிந்து விடுதியில் இருக்கிறான். தனக்கு தானே கொடுக்க முடியாத ஆறுதலை பிறருக்குக் கொடுத்து சிலர் தங்களை தானே ஆற்றிக்கொள்வார்கள். பிரதாபனின் நிலை அதுவே.
“அப்பாவ மிஸ் பண்ணினா நீயும் அவரோட துபாய் போயிருக்கலாமில்ல. அன்னிக்கு அங்கிள் என்கிட்ட சொன்னார் அவர் கூப்பிட்டும் நீ அடம்பிடிச்சன்னு” என்றதும் தாரிணி முகம் சுருக்கினாள்.
“வரமாட்டேனு சொன்னா அப்பா போகமாட்டாங்க நினைச்சேன். அவர் என்னை விட்டு போயிட்டார்” கோபமாக குறை சொன்னாள் தாரிணி.
தாரிணி அப்படி சொல்லவும் பிரதாபனின் புன்னகை விரிந்தது.
“இப்போ என்ன நீ சொன்னா உன்னை அப்பா அங்க கூப்பிட்டுப்பாங்க. சிம்பிள்” பிரதாபன் சொல்ல
“எனக்குப் போக இஷ்டமில்ல. ஏற்கனவே அம்மாவ மிஸ் பண்றேன், எனக்கு மாவேலிக்கராதானே நான் வளர்ந்த ஊர், ப்ரண்ட்ஸ் இருக்காங்க. இங்க நம்ம ஊர்னு ஒரு பீல் உண்டு. இங்கயே அப்பாவுக்கு நல்ல ஜாப்தான், அவருக்கு என்னமோ அம்மா திடீர்னு போகவும் பயம். எனக்கு நிறைய சொத்து சேர்த்து வைக்கணுமாம். பணமிருந்தா போதுமா?” தாரிணி கேட்க
அம்மா மீது அவனுக்கிருந்த கோபம், என்னமோ சுமா விட்டுச்சென்றதால்தான் மகன் வருத்தத்தில் குடிப்பதாக இருக்கும் பொன்னச்சன் பேச்சு. என்ன நடந்திருந்தாலும் பெண் குடும்பத்தை தாங்கியிருக்க வேண்டும் என்ற வகையில் பேச அம்மா உடனிருந்திருந்தால் அப்பா இப்படியிருக்க மாட்டாரோ என்றெல்லாம் அந்த பருவ வயதில் நினைத்திருக்கிறான் பிரதாபன். இதில் அம்மா இன்னொரு வாழ்வை தேடியிருக்க, மகனுக்கு மனத்தாங்கல் உண்டு.
ஆனால் சுமா மகன் கல்லூரி சேர்ந்த முதல் நாள் வந்து நின்றார். அவனுக்குத் தேவையான எல்லா நேரமும் அவனுக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைந்திருக்கிறார். இன்னமும் முயல்கிறார். பிரதாபனுக்கு இப்போதுதான் அந்த புரிதல் வந்திருந்தது, உடனிருந்தாலும் கவனிக்காது தன் சோகம் என்று உழலும் அப்பாவை விட, எங்கிருந்தாலும் அம்மா தங்களை நினைக்காமல் இல்லை என்று புரிதல் வந்தது.
“பணமிருந்தா போதாது! பட் பணம் போதாமயும் இருக்கக் கூடாது தாரிணி! உனக்காகத்தான் உன் அப்பா அங்க தனியா போய் கஷ்டப்படுறார். உனக்கு இங்க வளர்ந்த ஊர்ல இருக்க ஆசைன்னுதான் உன்னை கம்பெல் பண்ணல. அதெல்லாம் புரிஞ்சிக்கணும். பக்கத்தில இருந்தா மட்டும் உன் மேல பாசம்னு அர்த்தமில்ல, தூரமா இருந்தாலும் உன்னை நினைச்சிட்டு உனக்காகதானே அங்கிள் இருக்காங்க” தன் புரிதலை தாரிணிக்குப் புரிய வைக்க நினைத்தான் பிரதாபன்.
“உனக்காக அவங்க கஷ்டப்படுறாங்க. கூட இல்லைனு சொல்லி சண்டை போட்டு இன்னும் கஷ்டப்படுத்தக் கூடாது. உன் அம்மாவ நீ மிஸ் பண்ற மாதிரி அங்கிளும் ஆன்ட்டியை மிஸ் பண்ணுவாங்கதானே தாரிணி? நீதான் அவரை பார்க்கணும். காலேஜ் வந்துட்ட, பெரிய பொண்ணு நீ. அவங்களுக்கு அப்புறமும் உனக்கு பணம், படிப்பும்தான் துணையிருக்கும். என்ன மனசிலாயோ?” பிரதாபன் சொல்ல தாரிணிக்கு புரிந்தாலும் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.
“சரி அத விடு. உன் டிபார்ட்மெண்ட் ஒகேவா?” என்று வேறு கதை பேசினான். தாரிணியும் பதில் சொல்லி பல்கலைகழகம் பற்றி கேட்டு அறிந்துகொண்டாள்.
அதன்பின் அடிக்கடி பேசினார்கள். அவரவர் படிப்பை கவனித்தாலும் பார்க்கும் நேரம் சிரிப்பை பகிர்ந்தனர். பிரதாபன் தாரிணி கேட்காமலே அவளுக்குத் தேவையானதை செய்துகொடுத்தான். அவனுக்குக் கிட்டாததை எல்லாம் அவளுக்குக் கிடைக்கச் செய்து அதிலொரு திருப்தி கண்டான்.
அவனது தனிமையோடு அவளது தனிமையும் சேர்த்தே தீர்த்தான். பிரதாபன் முதலில் தேவைக்குப் பேசியவன் பின் தேடிப்போய்ப் பேசினான்.
தாரிணி பிரதாபனின் பிரிய கவிதையாகிப்போனாள். தாரிணியிடம் தன்னுணர்வை பகிரவில்லை. அந்தளவில் தெளிவாக இருந்தான்.
தாரிணிக்குப் பிரதாபன் பற்றி மனதிலிருந்த பிம்பங்கள் மொத்தமாக மாறிபோனது. பிரதாபன் பேசியது முதலில் பிடித்திருக்க, இப்போதெல்லாம் அவனை பிடித்ததால் அவன் பேச்சும் பிடித்தது.
அன்று தாரிணியின் பிறந்த நாள். தாரிணி செமெஸ்டர் விடுமுறையில் துபாய் சென்றிருந்தாள். விடுமுறை தினமாக இருக்க, தோழியர் எல்லாம் ஊருக்குச் சென்றிருந்தனர்.
கேண்டீனில் காலை சாயா முடித்து தாரிணி வேடிக்கை பார்த்துகொண்டிருக்க அவள் பார்வையில் விழுந்தான் பிரதாபன். கரு நீலத்தில் சட்டையும் வேஷ்டியும் அணிந்திருந்தான். தாரிணிக்கு இப்போதெல்லாம் பிரதாபனை பார்க்கையில் பருவம் பட்டாம்பூச்சியாக சிறகு விரிக்கத் தொடங்கியது. கட்டுகடங்காமல் கண்களவு செய்தாள். ஆனால் அவனிடம் சொல்லவில்லை. அழகாக இருக்கிறான், பார்க்கிறேன் அவ்வளவே!
“ஜென்ம தின ஆஷம்ஷகல் தாரிணி!” பிரதாபன் வாழ்த்த
“தேங்க்ஸ் பிரதாபன்” என்றாள் தாரிணி புன்னகையோடு.
“என்ன நீ புது டிரஸ் போடலயா?” ஒரு சிறிய டாப்ஸும் பாவாடையுமாக இருந்தவளை பார்த்து பிரதாபன் கேட்க
“ம்ப்ச் இல்லை. ரூம்ல இருக்கிறதுக்கு இது போதும்” அசட்டையாக அவள் சொல்ல
“என்ன முறைக்கிறீங்க? எனக்கு வேண்டியதை எல்லாம் பறிச்சிகிட்ட சாமி எனக்கு வேண்டாம்” என்றதும் பிரதாபன் பார்வையில் கண்டனம். என்னமோ அவனுக்கு சிறு வயது முதலே பக்தி அதிகம்.
“வேணும் வேண்டாம்னு கேட்க மட்டும் அம்பலம் போறதில்ல மோளே, நீ என்னோட வா. அங்க ஒரு அமைதி கிடைக்கும்.” என்று பிரதாபன் சொல்ல, தாரிணிக்கு இஷ்டமில்லை.
“எனக்கு இஷ்டமில்ல, கடவுள் கிட்ட கேட்கிறதுக்கும் ஒன்னுமில்லை” என்றாள் மறுப்பாக.
“கேட்கிறதுக்கு உன்னை கூப்பிடல, இருக்கிறதுக்கு நன்னி பரயு, இல்லெங்கில் சும்மா வா. நீ கேட்க வேண்டாம் நான் உனக்காக கேட்கிறேன்” என்றதும் அந்த நொடி தாரிணிக்கு நிலவு தாக்கிய தருணம்.(Moon struck moment).
“எனக்காக நீங்க ஏன் வேண்டனும்?” என்று தாரிணி உடனே கேட்டாள்.
“ஏன் நீ நல்லாயிருக்கணும் நான் வேண்ட கூடாதா? நீ நினைக்க மாட்டியா?” என்றான் புருவம் உயர்த்தி.
தாரிணிக்குப் பிடித்த பிறந்த நாளாக அந்த நாள் மாறிப்போனது. இருவரும் மலப்புரம் நீர்ப்புத்தூர் மகாதேவன் ஆலயம் சென்றனர். அவர்கள் பல்கலைகழகத்திலிருந்து இரண்டு மணி நேர பயணம். பேருந்து, ஆட்டோ என மாறிச் சென்றனர்.
மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் அது. கற்பகிரகம் சிவலிங்கம் வடிவல் நீரில் முழுமையாக மூழ்கியிருக்கும். அந்த பச்சை புற்கள் படர்ந்திருந்த வாசலில் கால் வைக்கும்போதே தாரிணி சந்தோஷமாக இருந்தாள். புற்களில் படர்ந்திருந்த மழை நீர் கால் தீண்ட, அதன் ஸ்பரிசம் சிலிர்ப்பைத் தந்தது.
இறைவன் உறைவிடம் சுற்றியும் நீர் இருக்க, சுற்றியிருந்த நடைபாதையில் இருவரும் நின்றனர். தாரிணி புதிதாக வந்திருந்தால் அம்பலத்தில் அவள் பார்வை இருக்க, பிரதாபனோ இறைவனிடம் தாரிணிக்காக மனமுருகி வேண்டினான்.
அவள் பிறந்த நாள் மழைக்காலமாக இருக்க, பிரியத்தின் மழைக்காலமும் அன்று தொடங்கியது. அளவான நிலையில் இருந்த தாரிணியின் உணர்வலைகள் அன்றிலிருந்து அடாதி(இடைவிடாத, அதிகம்) நிலைக்கு மாறின.