பூவம்பள்ளில் வீட்டுக்குப் புதிதாய் வந்தபோது இருந்த உணர்வுக்கும் இப்போது வினயச்சந்திரனுக்கு இருக்கும் உணர்வுக்கும் நிறைய வித்தியாசமிருந்தது. அப்போது அவனுக்கு அந்த வீட்டோடு எந்த சம்மந்தமுமில்லை. தாரிணிக்காக வந்தான், இப்போதும் அவன் நோக்கம் அதுவென்றாலும் புது மனிதர்களின் பிரியம் அவனுக்குக் கிடைத்திருந்தது. பிரதாபன், நசீர், மின்மினி என்று புது மனிதர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம், ஆனால் அத்தனை பேரையும் பிடித்திருந்தது.
பொன்னச்சனுக்கும் தனிமை, பிரதாபனுக்கும் தனிமை, மின்மினிக்குத் தனிமை. எல்லாரும் அவர்களின் தனிமையை தனியாக அனுபவித்தனர். பொன்னச்சன் மட்டும் வினயனிடம் சாதாரணமாகப் பேசியிருந்தால் அவன் இயல்பாக அவரோடு நன்றாக ஒட்டியிருப்பான். அவரோ வேலை செய்பவன் என்று விலக்கி வைக்க, அவன் விலகி நின்றான்.
பிரதாபன் தனிமையை வேலை விழுங்கிக்கொண்டது. இருந்தாலும் உள்ளுக்குள் உறையும் தனிமையை விரட்ட அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, அதனோடு பழகிவிட்டான். மின்மினி கல்லூரி சென்றால் அங்கே தோழிகளோடு நன்றாகப் பேசுவாள். மின்மினிக்கு அண்ணன் வீட்டில் இல்லை, நசீரேட்டா இல்லை என்ற எண்ணமின்றி வினயன் அவள் நேரத்தையும் மனதையும் பறித்துக்கொண்டான். பூவம்பள்ளில் வீட்டிற்கு வந்ததுக்குப் பரிசாக வினயனையும் தனிமை ஆட்கொண்டது.
மின்மினிகுட்டியோடு இத்தனை நாள் அவனுக்குப் பழக வாய்ப்பில்லை, எண்ணமுமில்லை. இப்போது பேச்சுத்துணைக்கு ஆளில்லை, பொழுது போகவில்லை என்று பேசத்தொடங்கி வினயன் பொழுதெல்லாம் பேசும் துணையாகிப்போனாள் மின்மினி.
மாலை நேரம் மதிய நேரத்தின் வெயில் குறைந்து, இரவின் குளிர்க்காற்று மெல்ல அடியெடுத்து வைத்தது. காற்றில் பவழமல்லி மலர்கள் வாசம் நிறைந்திருந்தது. பொன்னச்சன் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். மின்மினி அவள் அறையில் இருந்தாள்.
இன்னும் நான்கு நாட்கள், அதன்பின் ஊரில் அவனுக்கு வேலை சரியாய் இருக்கும், பிரதாபன் எப்படியாவது தாரிணியின் விருப்பத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நிச்சயம் தாரிணியை மறுக்க அவனுக்குக் காரணங்கள் இல்லை, பிரதாபனை அறிந்த இந்த சில நாட்களில் அவன் பெண்களிடம் பேசி கூட பார்த்ததில்லை. அப்படியானவன் தாரிணியிடம் கல்லூரி காலத்தில் பேசியிருக்கிறான், தாரிணியிடம் அன்பாக நடந்திருக்கிறான் என்றால் நிச்சயம் பிரதாபனுக்குத் தாரிணி என்றால் விசேஷம்தான் என்று வினயச்சந்திரன் உறுதியாக நினைத்தான்.
ஊருக்குச் சென்றதும் அண்ணனை காஞ்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும், கண்டிப்பாக ஊர்மிளா ஊரில் இல்லையென்றால் ஜெய் வாடித்தான் இருப்பான் என்று வினயனுக்குக் கலவையான யோசனைகள். சுஜிம்மாவோடு விளையாட வேண்டும், அவர்கள் வளர்க்கும் ரொனால்டோவைப் பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்தான். அச்சம்மா, அச்சச்சனைப் பார்க்க வேண்டும், இந்த ராஜீவன் மாமா வேற ரீடையர் ஆகப்போறார், அப்பாவுக்கு இனி ஜாலி என்று ஏதேதோ தொடர்பில்லாத எண்ணங்கள், அவனோடு தொடர்புடையவர்கள் குறித்து வினயனின் மனதில் எழுந்தன.
தரையெல்லாம் காலையில் உதிர்ந்த பவழமல்லி பூக்கள் கம்பளம் விரித்தது போல் அடர்த்தியாய் நிலத்தில் கொட்டிக்கிடந்தன, தலைமுடி காற்றில் மெல்ல அசைய, சாம்பல் வண்ணத்தில் அரைக் கை சட்டை, வேட்டியை மடித்துக் கட்டி அந்த மரத்தின் கிளையைப் பிடித்து யோசனையில் நின்றவனைத்தான் கண்களில் நிறைத்தாள் மின்மினி.
ஒருத்தி தன்னை பார்ப்பதை கூட உணராது, வினயச்சந்திரன் அங்கிருந்த செடி கொடிகளை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். மென்மையாகப் பூவைப் பறித்து நாசியில் நிறைத்தவனை நினைவுகள் நிறைத்தன. சின்ன வயதில் அம்மாவோடு வினயனும் அவன் அண்ணனும் ஜெய்ச்சந்திரனும் பூச்செடிகளை பராமரித்தது எல்லாம் பூவாசமாய் நினைவை நிறைத்தது. இப்போதும் ஊர்மிளாவுக்காக, மகளுக்காக என்று வீட்டில் நிறைய செடிகள் வளர்த்திருந்தான் ஜெய்.
‘இந்த மரம் நல்லா பூக்குது, நசீரேட்டா எங்க இந்த கண்ணு வாங்கினார்னு கேட்கணும்’ வினயன் நினைக்க, மின்மினிக்கு மதியம் வினயன் சொல்லிய வார்த்தைகளும் அதில் விரவியிருந்த வாத்சல்யமும் மனதை இன்னும் வருடியது. பெரிதான உறவுகளோடு வளராததால் மின்மினிக்கு உறவுகளை நிறைய பிடிக்கும், இல்லாதததின் மீது இயல்பாய் வரும் ஈர்ப்பு. அவளுக்குத் திருமணம் என்றதும் பெரிய கவலையெல்லாம் இல்லை, என் வாழ்க்கையில் இன்னும் நிறைய உறவுகள், நிறைய அன்பு இப்படித்தான் நினைத்தாள். கணவன் அழகனாய், நல்லவனாய் இருக்க வேண்டும் என்று மிகவும் சராசரியான எண்ணம். எப்படியும் பிரதாபன் சட்டென்று யாரையும் பார்க்க மாட்டான் என்பதில் மின்மினிக்கு அலாதி நம்பிக்கை, அண்ணனின் தேர்வு சரியாக இருக்கும் என்று நிச்சயம் தெரியும்.
மின்மினி முற்பகலில் அவனுக்குக் குடிக்க மோர் கொண்டு வந்து கொடுக்க, அந்த பக்குவம் அவனுக்குப் பிடித்தது. அவன் அச்சச்சன் வீட்டில், அவன் வீட்டில் செய்வது போல் ஒரு பக்குவம். இஞ்சி மெல்லியதாக கீறிப்போட்டு, கொஞ்சமாக கொத்தமல்லி இலைகள் தூவி என்று ஒரு இதமான பதத்தில் இருந்தது.
“மின்மினி, நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்காம கொஞ்சம் யோசிப்பியா?” என்று வினயன் கேட்கவும்,
வினயச்சந்திரன் அப்படியென்ன கேட்கப்போகிறான் என்ற ஆவலில் மின்மினி தலையாட்டினாள்.
“உன்னை பொண்ணு பார்த்திட்டு போனாங்க இல்லை மினி..?” என்றதும் மின்மினி அவனை யோசனையாகப் பார்த்தாள்.
“அதினு?” (அதுக்கு?)
மதிய நேரம் பொன்னச்சன் உறக்கத்திலிருக்க, மின்மினிக்கும் இப்போது கல்லூரி படிப்பு முடிந்துவிட்டதால் வீட்டில் இருந்தாள். வினயனுக்கு மின்மினியைப் பெண் பார்த்து சென்ற அன்றிலிருந்து மனதிலிருப்பதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது, அப்போது தான் யார் என்று தெரியாது, இப்போதும் இதனை சொல்லும் உரிமையெல்லாம் அவனுக்குக் கிடையாது என்று அறிவான். இருந்தாலும் அப்போது வீட்டில் வேலை செய்பவனாக சொல்வதற்கும் இப்போது நட்பு என்ற நிலையில் சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறதே.
“அந்த விஷயத்துல உன் ஏட்டா என்ன சொன்னாலும் உன் மனசுக்கு அந்த மாப்பிள்ளையைப் பிடிச்சா, ப்ச் இல்லை அந்த மாப்பிள்ளை எப்படினு எனக்குத் தெரியாது. நான் தெரியாதவங்களை பத்தி பேச விரும்பல, ஆனா அந்த குடும்பம் உனக்கு செட் ஆகுமா யோசிச்சுக்க, அவங்க பேசினதும் பேசின விதமும் எனக்கு சுத்தமா பிடிக்கல மின்மினி. பணம் முக்கியம் இல்லைனு சொல்லல, ஆனா அது வியாபாரத்துல பார்க்கணும். கல்யாணத்துல பணத்தைப் பேசுறது எனக்கு விருப்பம் கிடையாது. உன் வாழ்க்கையில கருத்து சொல்ல எனக்கு உரிமையில்லை, பட் உன் கையால இத்தனை நாள் சாப்பிட்டிருக்கேன். நீ நல்லாயிருக்கணும்னு நினைக்கிறது தப்பில்லைதானே? சேட்டா கிட்ட இதை பேச எனக்கு இப்போ சூழ்நிலை இல்லை. உனக்கு என்னைப் பத்தி இப்போ கொஞ்சம் தெரியும்ன்றதால சொல்றேன், மாப்பிள்ளையைப் பிடிச்சாலும் அந்த வீட்ல இருக்க மனுஷங்களோட நீ இருக்கணும். அதனால சொல்றேன்”
“சேட்டா வந்துட்டா நான் தாரிணி பத்தி பேசிட்டு கிளம்பிடுவேன், நான் வந்து ஒரு மாசம் ஆகப்போகுது. அப்பாவும் அண்ணாவும் தனியா கஷ்டப்படுவாங்க. அப்போ மறந்திடுவேன் அதான் இப்போ சொல்றேன்” என்று வினயன் அமைதியாக சொல்ல, அவன் சொன்னதெல்லாம் மறந்து மறந்திடுவேன் என்றது மட்டும் மறக்காமல் மின்மினி மனதில் நின்றது.
வினயச்சந்திரன் மின்மினிக்கு நல்லதொரு கதை பேசும் களித்தோழனாக இருந்தான். அவனோடு இருக்கையில் நேரம் கரைந்து போவதை மின்மினி உணர்ந்தாள். வினயனுக்கு மின்மினியோடு பேசி பொழுதுகள் கரைய, பேசா பொழுதில் கூட வினயனோடு பேசியதை எண்ணி களித்தாள் மின்மினி. எப்போதும் ஒரு வாடா புன்னகை முகத்தில் நிலைத்திருந்தது. பொன்னச்சன் கூட பேத்தி படித்து முடித்த சந்தோஷத்தில் இருக்கிறாள் என்று நினைத்தார். நசீர் மட்டும் இருந்திருந்தால் வினயனோடு மின்மினியைப் பேச விட்டிருக்க மாட்டார். வினயனுக்கும் பேச வாய்ப்பிருந்திருக்காது.
இன்றும் அப்படி அவன் அக்கறையாகப் பேசியிருக்க அகத்தின் கரையெங்கும் அவன் பேச்சே சத்தமில்லா சந்தியாராகமாக இசைத்தது. மின்மினி அதையெல்லாம் முன் யோசிக்கவில்லை. இப்போது யோசித்தால் இவன் சொல்வது சரிதானே? அந்த மாப்பிள்ளையின் படத்தைப் பார்த்ததோடு சரி, பேசியது இல்லை. பிரதாபனும் அதைப் பற்றி பேசவில்லை, வேலை காரணமா இல்லை வேண்டாம் என்ற காரணமா மின்மினிக்குத் தெரியவில்லை.
அந்த மாப்பிள்ளை இவனை போல் இருப்பானா? இவனை போல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று மின்மினியின் எண்ணங்களில் கலந்தான் ‘வினயச்சந்திரன்’. தாரிணிக்காக இங்கு வந்ததாகட்டும், அவன் அண்ணி பற்றி பேசுவதாகட்டும், அண்ணன் மகள், அம்மா, அச்சம்மா என்று அவன் பேசும் பெண்களாகட்டும், தன்னோடு பேசுவதாகட்டும் தனி ரகமாகத்தான் இருந்தான் வினயன். ஒன்று பெண்களிடமே பேசாத அவள் அண்ணனை போன்ற ஆண்கள், இல்லையா பெண்கள் என்றாலே பேசும் ஆண்கள். இருதுருவங்களுக்கு மத்தியில் இவன் இயல்பாக இருந்தான்.
தன் செல்போனை சார்ஜில் போடவந்த மின்மினி ஜன்னலோரம் எதேச்சையாகப் பார்க்க, பார்வையில் விழுந்தவன் மேல் மின்மினியின் கவனம் மொத்தம் விழுந்தது.
சிறிது நேரம் அவனை பார்த்தவள், அறையை விட்டு வெளியே வந்தாள். பொன்னச்சன் டீவியில் கவனமாக இருந்தார். இல்லாவிட்டாலும் வினயனிடம் பேத்தி வேலை விஷயமாக பேசுகிறாள் என்றே நினைப்பார்.
“எந்தா?” என்றபடி மின்மினி வெளியே வந்தவள் பார்வை வினயனின் விரல்களில் இருந்த பவழமல்லி பூ மீதிருந்தது. அதன் வாசம் அருகே நிற்கவுமே அவ்விடத்தை இதமாய் நிறைத்தது. மாலை நேரங்களில் அவ்விடம் வரும் வாசம் மின்மினிக்குமே பிடிக்கும்.
“பவளமல்லி பூ கதை தெரியுமா மின்மினி?” பூவைப் பார்த்திருந்த பாவையிடம் கேள்வி கேட்டான் வினயன்.