அவள் தெரியும் என்பதற்குள் அவனே சொல்லத்துவங்கினான்.
“இந்த சிவப்பு கலர் காம்பு இருக்கே, இது பட்டுப்புடவைக்கு கலர் சேர்க்க யூஸ் பண்ணுவாங்க. டுசார்(Tussar Silk) சில்க் சொல்வாங்களே அதுக்கு. என்ன பார்க்கிற எல்லாம் எங்க ஊர்மி சொன்னது, காஞ்சிபுரம் பத்தி பேச சொன்னா பேசிட்டே இருப்பா.” என்றவன்
“கதையை விட்டேன் பாரு, ஒரு இளவரசி சூரியனை லவ் பண்ணி சூரியன் அவங்களை ப்ரேக் அப் பண்ணினதும் அவங்க தன்னை எரிச்சிக்கிட்டாங்களாம், அவங்க எரிஞ்ச சாம்பல்’ல வந்த மரம்தான் பவழமல்லி.” என்று வினயன் சொல்லும்போதே இடையிட்டு
“சூரியனை பார்க்க பிடிக்காம நைட்ல மட்டும் மலருமாம். அவங்க கண்ணீர்தான் பூ’வுன்னு கூட சொல்வாங்க” மின்மினி கொஞ்சும் தமிழில் கதையை முடித்து வைத்தாள்.
“அச்சம்மா பரஞ்ச கத” மின்மினி கண்கள் மின்ன சொன்னாள்.
“இந்த அச்சம்மா, அம்மம்மா சூடுற வடையும் கதையும் எந்த ஊர்லையும் மாறாது போல. எனக்கும் எங்கச்சம்மா சொன்ன கதை, அவங்க என்னை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க. பாவம் முட்டு வலி வேற..” என்று புலம்பினான்.
“மின்மினி! நான் சொன்னது யோசிச்சியா? லைப்ல எடுக்கிற முக்கியமான முடிவு. மனசிலாயோ?”
“மனசிலாயி! ஏட்டாவுக்குப் பிடிச்சிருந்தா எவ்வளவு ஜோலியிருந்தாலும் அது பத்தி பேசியிருப்பார். அவர் பேசாம இருக்கார்னா அவருக்குப் பிடிக்கலன்னு அர்த்தம்” என்று பிரதாபனை அறிந்தவளாக சொன்னாள் மின்மினி.
“மினி, எவிட போயி?” என்ற பொன்னச்சனின் குரல் கேட்க மின்மினி வீட்டினுள் ஓடினாள். அவள் கொலுசொலி வழக்கம்போல் செவியை நிறைத்தது. மின்மினி மீது வினயனுக்குப் பரிவு, நல்ல பெண் என்ற எண்ணம். அதை விட அவள் தந்த அந்த பழக்கப்பட்ட உணர்வு வினயனுக்கு விசித்திரமாக இருந்தது, இருந்தும் அவன் ஆராயவில்லை.
அடுத்த நாள் விடியல் வினயனுக்கு மிக மிக லாளிதமாக இருந்தது. மின்மினி தலைக்குக் குளித்திருக்க ஈரம் சொட்டிய கூந்தலோடும் பளிச்சென்ற முகத்தோடும் அவனை எழுப்பினாள். தினமும் எழுந்த பழக்கத்தில் இப்போது வினயனும் விரைவாகவே எழுந்தான்.
“குட் மார்னிங்” என்று மின்மினி சொல்ல, இன்னும் மூன்று நாட்கள் பின் தாமரக்குளத்திலிருந்து தேவிகுளம் செல்லலாம் என்ற உற்சாக எண்ணம் கொடுத்த உந்துதலில்
“குட் மார்னிங் மின்மினி” என்றான். காலை வேலைகள் முடிய, பொன்னச்சன் களரி பயிற்சி கொடுக்க, மின்மினி கோவிலுக்குப் புறப்பட்டு சென்றாள். வினயன் அவள் கோவிலுக்குப் போனபோது பார்க்கவில்லை.
வினயன் காலை வேளையில் அந்த தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான். தாரிணி அன்று வரவில்லை என்றதும் தோழிக்கு அழைத்துப் பேசினான்.
“என்ன மேடம் சேட்டா இல்லைனதும் அடிக்கடி லீவ் போடுற?” என்று தாரிணியை வம்பிழுத்தான்.
“டேய்! ஆபிஸ்ல அதிகம் வேலை. உடம்பு முடியல அதான் வரல”
“ஓஹ், டாக்டரைப் பாரு இல்லை ரெஸ்ட் எடு” என்று வினயன் சொல்ல, இருவரும் சில நிமிடங்கள் பொதுவாக பேச மின்மினி வீடு நோக்கி வந்துகொண்டிருந்தாள். வெண்பட்டில் பாவாடை, அடர்கிளிபச்சை நிறத்தில் சட்டை, முல்லைப்பூவு தலையில் சூடி புன்னகையோடு அவனை ஏறிட்டாள் மின்மினிகுட்டி.
கோவிலுக்குப் போய்விட்டு வந்தததால் நெற்றியில் சந்தனமும் குங்குமம் இருக்க, வினயனிடம் கையில் இருந்த சந்தனத்தை நீட்டினாள் மின்மினி. வினயன் பார்வை கொஞ்சம் அதிகமாகவே மின்மினி முகத்தில் நிலைத்தது, ரசித்துப் பார்த்தான். மின்மினி “எந்தோ?” என்று பார்க்க தலையசைத்தவன் சந்தனம் வைத்துக்கொள்ள, தாரிணி போனில் “டேய் இருக்கியா?” என்று கத்தினாள்.
மின்மினி சந்தனம் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் போய்விட, அவள் நகரவும் முல்லைப்பூவின் வாசம் ஒரு நொடி வினயனை பிடித்திழுத்தது.
“ஏன் தாரிணி? இந்த ஆலப்புழாக்காரி ஏன் கண்ணுக்கு அழகா தெரியறா?” என்று தாரிணியிடம் வினயன் கேட்க
“யார்டா?”
“மின்மினி” என்றதும்
“என்ன?” என்று அவள் அதிர
“எம்மா தாயே! ஜஸ்ட் அழகா இருக்கான்னு சொன்னா தப்பா? முன்னாடி ரொம்ப நோட் பண்ணினதில்லை” என்று வேறு கேட்க
“ப்ரண்ட் உங்களுக்குக் களரி தெரியுமா?” என்று கேட்டாள் தாரிணி.
“தெரியாதுனு உனக்குத் தெரியாதா?”
“முணு நாள்ல களரி கற்பது எப்படினு எதாவது கோர்ஸ் இருந்தா படிச்சிக்கோ, இப்படி போய் பிரதாபன் இருக்கப்ப சொல்லிடாத, எலும்பை எண்ணிடுவார்” என்று தாரிணி கிண்டலாக சொல்ல
வினயனோ சிரித்தவன்,
“அவர் மட்டும் என் ப்ரண்டை லவ் பண்ணுவாராம், நான் ஜஸ்ட் டாவடிச்சா தப்பா? தப்பா?” என்று பாவனையாகக் கேட்டான்.
“ஹேய் நீ டென்ஷன் ஆகாத, அழகா இருக்கான்னு சொன்னேன் வேற ஒன்னுமில்லை. ஆனாலும் அவளை பார்க்கிறப்ப ஒரு தெரிஞ்ச பீலிங், பட் அவளை நான் பார்க்க சான்ஸே இல்லை. தேஜாவு மாதிரி இருக்கு”
“டேய் நீ ஏண்டா டென்ஷன் ஆகுற? எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ற லூசே! உன்னை எனக்குத் தெரியாதா? விட்டுத்தள்ளு, சைட் அடிக்கிறதெல்லாம் தப்பா?” என்று தாரிணியும் தோழனை புரிந்தவளாக சொல்ல சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.
மதிய உணவு நேரம் முடிந்து வினயன் காற்றாட நடந்துகொண்டிருக்க, அந்த தெருவில் ஒரு கார் நுழைவது கண்ணில்பட்டது.
“நம்ம கார் மாதிரி இருக்கே…” என்று தொடங்கிய எண்ணம் “அய்யயோ, நம்ம கார்” என்று முடிந்தது.
மெல்ல வாசலுக்குள் நகர்ந்தபடி காரில் பார்வை பதிக்க, ஜெய்ச்சந்திரன் காரிலிருந்து இறங்கினான்.
“ஜெயேட்டா” என்றவன் விழிகள் அதிர்ச்சியில் மேலெழ, எடுத்தேன் பாரு ஓட்டம் என்றபடி எதையும் யோசிக்காது வீட்டின் பின்பக்கம் ஓட, மின்மினி நின்றாள்.
“எந்தோ?” என்று அவள் பார்க்க
“ஜெயேட்டா” என்றான் மூச்சு வாங்க.
“யாரானு?”
“என் அண்ணா இங்க வந்திருக்கான், ஏன்னு தெரியல” என்ற வினயன்
“எதுக்கு வந்திருக்கான் தெரியல.. நீ நான் இங்க இருக்கேன் சொல்லிடாத. நான் எங்காச்சும் ஒளியணும். உன் ஏட்டா கிட்ட மாட்டுவேன்னு பார்த்தா இதென்ன இவன் வந்து நிக்கிறான்?” என்று பரபரத்தான்.
“டென்ஷன் வேண்டா” என்ற மின்மினி யார் வந்திருக்கிறார்கள் என்று பின்வாசல் வழியே பார்க்க, ஜெய்ச்சந்திரனோடு இறங்கியவரை கண்டதும் அவள் விழிகள் மின்னின. ஜெய்யையும் அவளுக்கு அடையாளம் தெரிந்தது.
“முத்தஸ்ஸீ” என்றவள் முன்னே அடி வைக்க, “முத்தஸ்ஸீயா?” என்று வினயனும் திறந்திருந்த பின்வாசல் கதவு வழி பார்க்க, அவனது மினி ஜெய்யின் கை பிடித்து நின்றார்.
“அச்சம்மாவோட சேச்சி” என்று சொல்ல
“அவங்கதான் உன் அச்சம்மாவோட சேச்சியா?” என்றவனிடம்
“அதே, மினி முத்தஸ்ஸீ” என்று மின்மினி சொல்ல
“ஓஹ் மினி!” என்றவனின் காதில் அவன் அச்சச்சன் சொன்னது மீண்டும் கேட்டது.
“”மாவேலிக்கரகாரிக்கு இத்திரி அஹங்காரம் கூடுதலானு டா வினயா, (மாவேலிக்கரகாரிக்கு தலைக்கனம் அதிகம்டா) அழகை பார்த்து ஏமாறாதடா!” என்று சில வருடங்கள் முன் சொன்னது நினைவில் வந்தது.
வாழ்க்கையில் தற்செயலாக நடப்பவை எப்படி இத்தனை அழகாக இருக்கிறது?? என்ற ஆச்சரியத்தில் வினயன் உறைந்து நின்றான். மின்மினி அவனை கூப்பிடவும்தான் அண்ணன் ஞாபகம் வந்தது.
மின்மினியை எங்கோ பார்த்த ஞாபகம் ஏன் என்ற காரணமும் புரிந்தது. ஆனால் அதை ரசிக்க முடியாமல் ஜெய்யின் வரவு மனதை உறுத்தியது. பொன்னச்சன் வேறு இருக்க மின்மினி சொன்னது கேட்டு, வீட்டின் பின்பக்கம் நடந்து பிரதாபனோடு முன்பு சென்ற குளக்கரையில் போய் அமர்ந்துவிட்டான் வினயச்சந்திரன்.
ஜெய்ச்சந்திரன் மெல்ல அச்சம்மாவின் கை பிடித்து உள்ளே அழைத்து வந்தான்.
“பார்த்து அச்சம்மா, இவ்வளவு தூரம் உங்களை அச்சச்சன்கிட்ட சண்டை போட்டு அழைச்சிட்டு வந்திருக்கேன். மெதுவா நடங்க” என்று ஜெய் சொல்ல
“அவர் கிடக்குறார். இந்த புள்ளைங்கள எப்பவாச்சுதான் பார்க்க வரேன், அதுக்கு உன் அச்சச்சன் அவ்வளவு பண்றார்.” என்று திட்டியபடி நடந்தார் அம்மினிகுட்டியின் அக்காவான பத்மினிகுட்டி.