“அப்பா! ப்ளீஸ்பா. இவங்க நம்ம அச்சம்மாவுக்கு சொந்தக்காரங்கன்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அது வேற. இன்னும் ரெண்டு நாள் பிரதாபன் வந்துடுவார், தாரிணி பாவம்லப்பா? இப்ப போய் சொன்னா என்னை என்ன நினைப்பாங்க. உங்களை நம்பி சொல்லியிருக்கேன், இப்படி பண்ணலாமா டாடி?”
“ஏண்டா நீ மட்டும் பூவம்பள்ளில் வீடுன்னு சொல்லியிருந்தா நாங்க சொல்லியிருப்போம். அச்சம்மாவோட தங்கச்சி வீடுன்னு, அது தெரியாம போய்… மகனே அய்யோ அய்யோ” என்று சிரித்தார்.
“அப்பா! இது ஏதோ கோ இன்சிடன்ஸ். சின்னவங்களுக்கு ஓகேன்னா பெரியவங்க பேசுறது சரி. இங்க பிரதாபன் என்ன நினைக்கிறார்னே தெரியலயே. தாரிணி கூட நின்னு பேச மாட்டேங்கிறார் மனுஷன். ஒரு மூணு நாள் நீங்க என்னை மாட்டிவிடாம இருங்க, அங்க வந்து ஜெய் கிட்ட நான் சொல்லிக்கிறேன். எனக்கு உங்ககிட்ட எதையும் மறைக்க முடியாதுன்னுதான் சொல்றேன். ப்ளீஸ் பா” என்று மகன் சொல்லவும்
“சரிடா. பார்த்து இரு” என்று பாலச்சந்திரனும் போனை வைத்தார். அப்போதே ஜெய்யிடம் சொல்லியிருக்கலாம்.
வினயனுக்கு அப்பாவிடம் உண்மையை சொல்லிவைக்கவும் பெரும் நிம்மதி. உறவுகளை பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் பிடித்தவர்கள் உறவானால் பிடிக்கிறது. வினயனின் மன நிலை அப்படித்தான் இருந்தது. எப்படி மின்மினிக்கு அம்மாவின் கைப்பக்குவம் வரும் என்று யோசித்து, அவளுடன் இருக்கும்போது உணரும் நெருக்கத்தை நினைத்து பயந்து, நிறைய யோசித்தவனுக்கு பெரும் ஆறுதல். அது அச்சம்மாவின் கைப்பக்குவம், மின்மினியைக் காணும்போதெல்லாம் அன்னியமாகத் தோன்றாத காரணம் அவளிடம் தென்பட்ட அச்சம்மாவின் சாயல், அவர் தங்கையின் சாயல்.
வினயன் எதார்த்தவாதி. அவன் தர்க்கங்களை நம்புபவன். அதுவரை காணாத பெண்ணிடம் எப்படி ஒரு பழகிய உணர்வு வருகிறது என்று ஆராயந்த மனதின் அத்தனைக்குக் கேள்விக்கும் இப்போது விடை கிட்டியது. அவன் அம்மா சுஜாதா திருமணமாகி வந்தபோது அவரின் அம்மா உயிரோடு இல்லை. அதனால் சுஜாதாவோடு அச்சம்மாவுக்கு மிகுந்த நெருக்கம். அவரின் பழக்கங்களை சுஜாதா பற்றிக்கொள்ள, அது வழக்கமாகிவிட்டது.
உணவைத் தவிர அந்த சாயல், அவனுக்குப் பிடித்த அச்சம்மாவின் சாயல்! அதனால் உண்டான உணரப்பட்ட அனுபவம் (தேஜா ஊ) எல்லாம் விளங்கியது.
அந்த குளக்கரையின் எதிரே நெடிது வளர்ந்திருந்த தென்னைமரங்களின் பின்பக்கம் சூர்யன் அஸ்தமிப்பது நன்றாய்த் தெரிந்தது. பொன்மஞ்சளில் செந்தூரம் கலந்த நிறம், குளத்தில் பூத்திருந்த செந்நிற அல்லிமலர்கள். எல்லாம் அத்தனை அழகாய் இருக்க, வருடிச்சென்றது வாசந்தம் (தென்றல்). அந்த இயற்கையில் லயிக்காமல் வினயனின் மனம் ஏனோ காரணமின்றி சந்தோஷமாக இருந்தது.
மின்மினி உறவு என்றதாலா, பிரதாபனுக்கும் தாரிணிக்கும் பிரச்சனை வராமல் விஷயம் முடியும் என்பதாலா இல்லை அப்பாவிடம் எல்லாம் சொல்லிவிட்டோம் என்ற ஆசுவாசமா தெரியவில்லை.
பொன்னச்சன் தொலைக்காட்சி பார்க்க, பின்பக்கம் வினயனைத் தேடி வந்தாள் மின்மினி. குளக்கரையில் பெரிதாக இருந்த சுவரில் உட்கார்ந்திருந்தவன் மின்மினியைப் பார்க்கவும் துள்ளி குதித்தான்.
“அது ஒரு பெரிய ப்ரணய(காதல்) கதை” என்றான் சிரிப்போடு.
“பரயு”
“ஒரு பழஞ்சன் ப்ரணய கதை(ஒரு பழைய காதல் கதை)… அது தேவிகுளத்துல இருந்து காயம்குளத்துக்கு போய் அப்படியே காஞ்சிபுரம் போய் மறுபடியும் தேவிகுளம் வந்து சேர்ந்த கதை” என்றான்.
“உனக்கு ராஜீவன் மாமா தெரியுமா?”
“ஆஹ்ன், வலியச்சன். மிலிட்டரில போய்..” என்று அரைகுறையாக தெரிந்ததை மின்மினி சொன்னாள். அவர்கள் வீட்டு கதையே பெரிதாக இருக்க, அவள் அறிந்தது ராஜீவன் மிலிட்டரியில் இருந்தார், வேறு மதப்பெண்ணை காதல் செய்து ஊரை விட்டு போய்விட்டார்.
“கவனி! சொல்றேன்” என்று குளக்கரையின் படியில் அவளை அமர சொல்ல, மின்மினியும் உட்கார்ந்தாள்.
“ராஜீவன் மாமா ப்ளஸி அத்தையை லவ் பண்ணி ஊரை விட்டுப்போய்ட்டார். ப்ளஸியத்த டெலிவரி அப்போ இறந்துட்டாங்க, மாமாவுக்கு அத்த மேல லவ்ஸோ லவ்ஸ். அவருக்கு அப்போ தனியா அத்த இல்லாம இருக்க முடியல. அவரோட வேலை பார்த்தவர்தான் பிரபாகரன் மாமா, ப்ரம் காஞ்சிபுரம். அவங்களுக்கு குழந்தை இறந்துப்போச்சு. சோ ஊர்மிளாவை பிரபாகரன் மாமாகிட்ட ராஜீவன் மாமா கொடுத்துட்டாங்க. அவர் பொண்ணாதான் ஊர்மி வளர்ந்தா. அவளுக்கு இது தெரியாது”
“எந்தோ?” என்று மின்மினியின் விழிகள் வினயன் கதை சொல்லவும் வெவ்வேறு பாவனை காட்டவும் வினயனால் அதனை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. என்னவோ என் அச்சம்மா பேத்தி என்ற உரிமை வந்தது. சட்டென்று கதையை நிறுத்த அவள்
“பின்ன?” என்று கேட்க
“ஊர்மிக்கு ஒரு நாள் விஷயம் தெரிஞ்சுப்போச்சு” என்றதும் மின்மினி வருத்தப்பட்டாள்.
“சேச்சி பாவம்ல?” மின்மினி வருந்த
“பாவம்தான். அதை விட நானும் எங்கப்பாவும் பாவம்”
“எங்கனே?”
“அது நாங்க ராஜீவன் மாமாவுக்கு பொண்ணு இருக்குன்னு பொய் சொல்லி, விஜயன் லவ்வர் பிந்துவை கூட்டிட்டு வந்துட்டோம். ஊர்மிக்கும் அப்போதான் விஷயம் தெரிஞ்சு தேவிகுளம் வந்துட்டா. எங்கப்பா எனக்கு ஊர்மி போட்டோவை அனுப்பி பிக்-அப் பண்ண சொல்றதுக்குப் பதிலா ஜெய்க்கு அனுப்பிட்டார். அவன் அவனுக்குப் பார்த்த பொண்ணு போட்டோன்னு நினைச்சிட்டான், சோ அங்க தொடங்கிச்சு ஜெயேட்டாவோட ப்ரணயம். அப்புறம் அவனுக்கு உண்மை தெரிஞ்சு காஞ்சிபுரத்துக்கு நடையா நடந்து… அத்தன வருஷம் அச்சச்சனோட, அச்சம்மாவோட பேசாம இருந்த ராஜீவன் மாமா ஊருக்கு வந்து சேர்ந்துட்டார். இப்போ கூட அப்பா பேசினாங்க மாமா ரீடையர் ஆகப்போறாங்க, இரண்டு மாசத்துல ஊருக்கு வந்துடுவாங்களாம்.” என்று சொல்லி முடித்தவனுக்கு மூச்சு வாங்கியது.
“கள்ளன்! எத்தர கள்ளம், எப்போலும் கள்ளம்” என்று மின்மினி வினயனை கிண்டல் செய்ய
“ஹேய்! எல்லாம் எனக்காகவா சொன்னேன்? இப்படித்தான் ஒரு காதல்ல ஆரம்பிச்ச கதை இன்னொரு காதல்ல முடிஞ்சது”
“ஊர்மி சேச்சியோட அப்பா..?” மின்மினிக்கு இப்போது என்ன சொல்ல தெரியவில்லை. ஊர்மிளா யாரின் மகள்? பாவம் எத்தனை கஷ்டமாக இருந்திருக்கும் என்று நினைத்து கேட்க, அவள் கேட்க வந்தது வினயனுக்குப் புரிந்தது.
அங்கிருந்த தாத்தா பூ செடியின் பூவைப் பறித்து ஊதியவன் படியிலிருந்து எழுந்தன. சின்ன விஷயத்தைக் கூட ரசிப்பவனை மின்மினி மனம் ரசித்தது.
“மின்மினியும் லக்கிதான்! ஊர்மி உனக்கு சேச்சின்னா நாங்க எல்லாம் உனக்கு ரிலேட்டிவ்ஸ் தானே?” என்று அவன் ஏன் இந்த கதை சொல்ல ஆரம்பித்தான் என்று முடிக்க மின்மினி புன்னகைத்தாள்.
அவளுக்கு உறவில்லை என்றாலும் வினயச்சந்திரனை பிடித்தது. அவளுக்கு இந்த காரணங்கள் தேவையில்லாதவையாக இருந்தது. அவளுக்குத் தர்க்கங்கள் வேண்டாதவை.
பொழுது சாயும் நேரமாகியிருக்க ஜெய் வந்த விஷயத்தை கேட்டறிந்த வினயன்
“இன்னும் மூணே நாள். நான் ஊருக்குப் போய்டுவேன். ஜாலி..” என்று சொல்லியபடி முன்னே செல்ல
“அவிட போயால் வினயன் என்னை மறக்குமோ?” மின்மினி சட்டென்று தோன்ற கேட்டுவிட்டாள்.
“ஹேய் மின்மினி! என்ன இப்படி கேட்டுட்ட? ஏற்கனவே தாரிணி கல்யாணமானாலே நம்ம ப்ரண்ட்ஸ்தானே? இப்போ ரிலேட்டிவ் வேற, எப்படி மறப்பேன்?” என்றவன் இயல்பாக முன்னே நடந்து சென்றான்.
“இப்போ லாஜிக் படி பார்த்தா இந்த தாரிணி எரும எனக்குத் தங்கச்சியா?” என்று பேசியபடி அவன் செல்ல, மின்மினிக்கு நிதர்சனம் உரைத்தது.
நித்தியமாக அவன் வேண்டும் என்ற எண்ணம் எப்போது தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் அவன் இங்கு இருக்க காரணம் தாரிணியும் பிரதாபனும் தானே? என்னை ஏன் இவன் நினைக்க போகிறான் என்று நினைக்கவும் அவளுக்கு உள்ளுக்குள் அடைத்தது. பூ பூக்கும் நேரம் யாருக்குத் தெரியும், சட்டென ஒரு கணத்தில் மலர்ந்துவிடும். அப்படித்தான் மின்மினிக்கு வினயனை பிடித்தது.
*************
அன்று பிரதாபனின் கட்சி மாநாடு மிகச்சிறப்பாக நடந்துகொண்டிருந்தது. தொலைக்காட்சி செய்திகளிலும் கூட அது ஒலிபரப்பாக, யூடியூப்பில் அதனை பார்த்திருந்தாள் தாரிணி.
பிரதாபனை கண்ட நொடி கண்கள் அவனில் நிலைத்தன. வெள்ளை சட்டை, வேஷ்டி. வலக்கையில் ப்ரவுன் லெதர் ஸ்ட்ராப் வைத்த வாட்ச் என்று அவனின் தோற்றம் அப்படியே மனதில் பதிந்தது. இதே போல் ஒரு அரசியல் நிகழ்வில் அவனோடு கதைத்த பொழுதினை மனது ஆசையாய் அசைப்போட்டது.
அந்த வருடம்தான் தாரிணி பல்கலைகழகத்தில் சேர்ந்திருந்தாள். பிரதாபன் கல்லூரி இரண்டாம் வருடத்தில் இருந்தான். மாணவர்களுக்கான தேர்தல் நடந்திருக்க எஸ்.எப்.ஐ வேட்பாளராக நின்றான் பிரதாபன். அப்போது பிரதாபன் கொஞ்சம் இளைத்திருப்பான். அன்று தேர்தல் முடிவுகள் வெளிவந்திந்திருந்தன. மாலை நேரம் அவர்கள் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதி பக்கமிருக்கும் கடையில் நின்றாள் தாரிணி. பிரதாபன் அவன் நண்பர்களோடு பேசியபடி சென்றவன் தாரிணியைக் கவனிக்கவில்லை.
“ஏடாஆஆஆஅ!” என்று சத்தமாக அழைத்த தாரிணி அடர் சிவப்பில் காட்டு சூர்யகாந்தி பூக்கள் இருந்த பக்கமாக சென்று உட்கார்ந்தாள்.
பிரதாபன் சிறிது நேரத்தில் திரும்பி வந்து அவள் முன்னே நின்றான். கறுப்பு சட்டையும் அன்று பார்த்து அவன் அணிந்திருந்த முண்டும் பார்த்தவளுக்கு தலைவன் கண்குளிராக இருந்தான். சொற்களால் அதை சொல்லாமல் இருக்க, தாரிணி தன்னை கண்ட பார்வை அவனுக்குப் புரிந்தது. பிடித்தது.
“ஏடா சொல்லுவியா?” வலக்கையில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தபடி முறைப்பாக கேட்டான்.
“நீங்கதானே பெயர் சொல்லக்கூடாது சொன்னீங்க? அப்போ எப்படி கூப்பிடுறது. கங்கிராட்ஸ் சொல்லத்தான் கூப்பிட்டேன்” தாரிணி உதடு நெளிய சொல்ல
“துபாய்ல இருந்து வாங்கியிருக்க? அம்மே! என்னது பைவ் தவுசண்ட்டா?”
“அங்க கம்மிதான். நீங்க அதெல்லாம் பார்க்காதீங்க. செகரெட்டரி ஆகிட்டீங்க, Perfume is a story in odor, sometimes poetry in memory.’ன்னு Jean-Claude Ellena சொல்லியிருக்காங்க. இது யூஸ் பண்றப்ப எல்லாம் என் ஞாபகம் வரணும்” என்று ஆவலாக சொன்ன தாரிணியைப் பார்த்தான் பிரதாபன்.
பிரதாபனுக்கு அதெல்லாம் தெரியவில்லை. தாரிணி மட்டுமே நினைவின் கவிதையாக, வாசத்தின் கதையாக அந்த நேரம் தெரிந்தாள். இன்றுவரை அவள் கொடுத்த அத்தர் பாட்டில்கள் பொக்கிஷமாக அவனிடம் உண்டு. அவன் பயன்படுத்துவதும் அத்தரே.
“இது யூஸ் பண்ணலன்னாலும் உன் ஞாபகமிருக்கும்”
“அது ஏன்?”
“ஏன்னா பிரதாபனுக்குத் தாரிணின்னா விசேஷம்” என்றவனின் கண்கள் தாரிணியைப் பார்த்த பார்வை இன்னும் அவளுக்கு நினைவில் இருக்கிறது.
தாரிணிக்கு பிரதாபனை நினைக்க நினைக்க அந்த நினைவேக்கம் இன்னும் நினைவினை தூண்டிவிட, அடுத்த நாள் அவனை பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் தன்னை சமாதானம் செய்தாள்.
‘உன் நினைவின்
போர்வைகளைப் போர்த்திக்கொண்டால்
இன்னும் குளிர்கிறது’ என்ற கலாப்ரியாவின் கவிதையின் நிலையில் தாரிணி.
அவள் அன்று பார்த்த பிரதாபன் வேறு, இப்போது இருக்கும் பிரதாபன் வேறு என்று தெரியவில்லை. அவளை போல் அவனும் மாறாது இருப்பான் என்று நினைக்க, பிரதாபனுக்குத் தாரிணி பிரதானமாக இல்லை.