அது நாள்வரை தாரிணிக்குப் பிரதாபனை பிடிக்கும். பார்க்க பிடிக்கும், பேச பிடிக்கும், அவன் உடனிருப்பு பிடிக்கும். களரி பயிற்சி முடியவும் சிறிது நேரம் எதாவது பேசுவார்கள் இல்லை அமைதியாக அமர்ந்து அமைதியைப் பகிர்வார்கள். இல்லை சில கணங்கள் தேனீர் சுவையோடு கழிப்பர்.
பேச்சோ, தேனீரோ, அமைதியோ எதுவானாலும் பிரதாபனுக்குத் தாரிணியோடு இருக்கும் நிமிடங்கள் சுவையானவை! அவன் ரசிப்பவை!
பிரதாபன் கொஞ்சம் தனிமை விரும்பி என்றாலும் கூட அவன் மனதுக்குப் பிரியமானவர்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பான். ஒன்றிரண்டு பேரோடு பழகினாலும் அந்த உறவை மிகவும் மரியாதையாக அர்த்தமுள்ளதாகப் பார்ப்பவன்.
அது என்னவோ அவர்கள் குடும்பம் அம்மா உடன் இல்லையென்பதால் உடைந்த குடும்பமாக, வித்தியாசமாக பார்க்கப்படும். சிலர் கேள்வி கேட்பார்கள். அப்படி கேட்காதவர்களை, அவனை மட்டும் பார்ப்பவர்களை அவனுக்குப் பிடிக்கும்.
தாரிணியும் கொஞ்சம் அப்படியே. என்ன அவள் எல்லாரிடமும் நட்பாகப் பழகினாலும் சிலரிடம் மட்டுமே மிகவும் நெருங்கி இருப்பாள். அதே நேரம் அவளின் சொந்த, தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிரமாட்டாள். அம்மா இறந்த பின் அவள் வேலைகளை தனியே செய்து ‘தான்’ என்ற எண்ணம். நானே பார்த்துப்பேன் என்ற உணர்வு அவளிடம் அதிகமுண்டு. கிட்டதட்ட தாயை எதிர்ப்பார்த்து ஏமாறும் மனதை இப்படி சொல்லித் தேற்றிக்கொள்வாள்.
உங்களை எப்படி பிறர் நடத்த வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்களோ அப்படியே பிறரையும் நடத்துங்கள் என்கிறது ஒரு பொன்விதி. வன்பொன்(பிளாட்டினம்) விதியோ அவரவர் விருப்பப்படி அவர்களை நடத்த வேண்டும் என்கிறது. பிரதாபன் தாரிணியிடம் அப்படித்தான் நடந்தான். அவள் எதிர்ப்பார்க்கும் சுதந்திரம், அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் தனிமை என்று அவளை உணர்ந்து புரிந்து நடந்தான்.
பிரதாபன் தன்னிடம் அக்கறையாக அன்பாக இருக்கிறான் என்று தாரிணிக்குத் தெரியும். பிறந்த நாளன்று அவளுக்காக அவன் வேண்டிட, பிரதாபனின் பிரத்யேக பிரியம் தாரிணிக்குப் புரிந்தது. புரிந்தாலும் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ள ஒரு ஆவல்.
இலையில் கொடுத்த சந்தனத்தைத் தாரிணியிடம் நீட்ட நெற்றியில் வைத்துக்கொண்டாள். தண்ணீர் சுற்றியும் இருக்க, அந்த மழை நாளின் குளுமை உடலை, உள்ளத்தை நனைத்தது.
கோவிலுக்கு அருகே இருக்கும் குளக்கரைக்குப் பிரதாபன் தாரிணியை அழைத்துப்போக, பிரதாபன் பார்வை நீரில் நிலைத்திருக்க தாரிணி பார்வையின் குவியம் மொத்தமும் பிரதாபன் மேல்.
“நீங்க தமிழ் பேசினா அழகா இருக்கு தெரியுமா?” என்றாள்.
“தமிழ் யார் பேசினாலும் அழகா இருக்கும். தமிழர்கள் பேசினா கம்பீரமா இருக்கிற தமிழ் அதே வேற மொழிகாரங்க பேசினா கொஞ்சும். எப்படியிருந்தாலும் தமிழ் கேட்க அழகா இருக்கும்”
“சத்தியம்” என்று பிரதாபன் ஒத்துக்கொள்ள
“நீங்க பேசுற தமிழும் அழகா இருக்கு, நீங்களும் அழகா இருக்கீங்க” என்று தாரிணி சொல்லிவிட்டு குளக்கரையில் பறந்த பறவைகளின் மேல் பார்வை பதித்து சொல்ல, மழை நீங்கியிருந்தாலும் குளுமை நீங்கவில்லை. தாரிணியின் வார்த்தைகள் பிரதாபனுக்கு இன்னும் குளிர் கொடுத்தது.
சொல்லிவிட்டு அவனை ஓரவிழியால் பார்க்க,
“அம்மும்மகிளி(அம்மம்மா போல) வாயாடி” என்றான்.
“வாயாடியா யாரு?”
“நீதான்” பிரதாபன் சிரிப்பை அடக்கி சொல்ல, தாரிணி கண்கள் சிரிக்க உதட்டை மட்டும் வளைத்தாள். அந்த குறுகிய நேரத்தை குறுங்கவிதையில் அடக்கிவிடலாம்.
அப்பா தன்னோடு அன்று இல்லையே என்று வருத்தமிருந்தாலும், எனக்காகத்தானே அப்பா அங்கே தனியே கஷ்டப்படுகிறார் என்று தாரிணியும் புரிந்து நடந்தாள்.
அந்த இரண்டு வருடங்களும் தாரிணிக்குப் பூக்காலம். பிரியத்தின் பரிமளம்(வாசம்) பிடிக்காது இருக்குமா? தாரிணிக்கும் அப்படியே! தாரிணியின் வாழ்க்கையில் பிரதாபன் நுழைந்த நேரம் அவளுக்குப் பிரியத்தின் தேவையிருந்தது. அது பிரதாபனாக இருக்க, நேரம் அவளுக்கு நேசம் கொடுத்தது. ஆனால் பிரதாபனுக்கு அப்படியில்லை!!
பிரதாபன் அவன் படிப்பில் கவனமாக இருந்தான். படிப்பு, மாணவர் அரசியல் என்று அவன் பொழுதுகள் ஓடினாலும் தாரிணியையும் அவ்வப்போது கவனித்துக்கொள்வான்.
பிரதாபன் இறுதியாண்டு படிக்கும்போது அவன் அப்பா ஷங்கரனுக்கு உடல் நலமில்லை என்று செய்தி வர, பிரதாபன் மலப்புரத்திலிருந்து ஆலப்புழா புறப்பட்டான். அப்பா மருத்துவமனையில் இருக்கிறார் என்றதும் அவனுக்குப் பதட்டமானது. இரண்டு மாதங்களுக்கு மேல் மருத்துவமனையில் இருந்த ஷங்கரன் சிகிச்சை பலனிக்களிக்காமல் மறைந்து விட, பிரதாபனின் பிரிய காலங்கள் அவனை பிரிந்த உணர்வு.
பிரதாபன் அப்பா மருத்துவமனையில் இருக்கும்போது முடிந்தவரையில் அவரோடு இருந்தான். அவர் மறைந்த பின் பிரதாபன் மிகவும் உடைந்து போனான். தாரிணியோடு சில நேரம் பேசுவான், சில நேரம் அமைதியாக கடந்துவிடுவான்.
ஷங்கரனின் இழப்பு அவனை வெகுவாகப் பாதித்திருக்க, தாரிணியும் தாயின் இழப்பைத் தாங்கியவள் தானே? பிரதாபனை புரிந்துகொள்ள முடிந்தது. அவன் பேசினால் பேசுவாள். இல்லை அவன் அமைதியை ஏற்பாள். ஒருவழியாக பிரதாபன் படித்து முடித்து சென்றுவிட்டான்.
தாரிணி எப்போதாவது அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால் பிரதாபன் பதிலளிப்பான். அடுத்த வருடம் தாரிணியும் படித்து முடித்து எம்.பி.ஏ படிக்க கொச்சி சென்றுவிட்டாள்.
பழகியவை பாதுகாப்பு கொடுக்குமென்றால் புதுமை பரவசம் கொடுக்கும். அதனாலயே தாரிணி வேறு பல்கலைக்கழகத்தில் வேறு ஊரில் படிக்க சென்றாள். தனியே எல்லாம் பார்ப்பது முதலில் தடுமாற்றம் தந்தாலும் பின் தானாக ஒரு தைரியம் கொடுக்கும். மாதவனுக்கு எப்போதும் மகள் விருப்பம்தான். அவள் இஷ்டப்பட்ட ஊரில் இஷ்டப்பட்ட படிப்பை படிக்க வைத்தார். அங்குதான் வினயச்சந்திரன் அவள் நண்பனான்.
தாரிணி எம்.பி.ஏ முதல் வருடம் படிக்கையில் அவளின் இளங்கலை பட்டமளிப்பு விழா நடந்தது. அதற்கு ஒரு மாதம் முன்புதான் தாரிணியின் தந்தை மாதவன் மகளை வந்து பார்த்து, இருபது நாட்களுக்கு மேல் அவளோடு தங்கியிருந்து போனார். அதனால் உடனே அவரால் வர முடியவில்லை. தாரிணி இப்போது முன்புபோல் கோபம் கொள்ளவில்லை.
மலப்புரத்தில் அவள் பல்கலைக்கழகம் சென்றவளுக்குப் பிரதாபனின் நினைவுகள். இன்னும் பிரதாபன் பழைய மாதிரி பேசுவதில்லை, தாரிணிக்கு அவன் உணர்வு புரிய அவனை தொந்தரவு செய்வதில்லை. இங்கு போலவே அவளுக்கு கொச்சியிலும் நல்ல நட்புகள். அவள் பிரியத்தை மட்டும் உயர்த்தி, அதிலே உழலவில்லை. நட்பையும் நிகழ்காலத்தையும் அனுபவித்து அந்த கல்லூரி நாட்களை கடந்தாள்.
விரைவாகவே பல்கலைகழகம் சென்றவள் விழா தொடங்கும் முன் அவளின் ஆசிரியர்கள், நண்பர்களை எல்லாம் பார்த்து பேசினாள். களரி ஆசானையும் பார்த்து பேசியவள் சிறிது தூரம் நடக்க, கேண்டீன் வந்தது. அங்கு பருகிய தேனீர் சுவையோடு பிரதாபனும் நினைவில் வர அத்தனையும் ஆசையாய் அசைப்போட்டபடி விழா நடக்கும் இடம் நோக்கி நடந்து வர
“தாரிணி” என்ற குரல்.
அவளுக்குப் பிடித்த குரல்! பிரதாபனின் குரல்!
“ஏடாஆ!” என்றவள் ஆச்சரியமாகத் திரும்பினாள். கறுப்பு சட்டையும் வெள்ளை வேட்டியும் என்று கண்களை நிறைத்தான் பிரதாபன். கிட்டதட்ட ஆறேழு மாதங்கள் கழித்து கண்டாள். இடையே மாவேலிக்கரா சென்றவள் பொன்னச்சனை பார்க்கும் சாக்கில் பிரதாபனை பார்த்தாள். அப்போது அவன் சினேகமாக பார்த்தானே தவிர பேசவில்லை.
அப்பா வரவில்லை என்று சென்று வாரம் அவனோடு வருத்தமாகப் பகிர்ந்ததோடு சரி. அவனும் ‘அவருக்கு முடிஞ்சா வந்திருப்பார்’ என்றான். அவனே வந்து நிற்பான் என்று நிச்சயம் நினைக்கவே இல்லை.
தாரிணி முகம் கொள்ளா அளவு புன்னகை சுமந்தாள். மகிழ்ச்சி கால்களை வேகம் கொள்ள வைக்க, பிரதாபனை நோக்கி விரிந்த புன்னகையோடு நடந்தாள். வெங்காய நிறத்தில் சேலை அணிந்திருந்தது பிரதாபனின் பிரியம். ஆனால் பிரதாபன் ரசிக்கும் மன நிலையில் இல்லை. வேகமாக மூச்சிரைக்க அவனை நெருங்கிய தாரிணி சட்டென பிரதாபனின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
“நீங்க வருவீங்கன்னு நான் நினைக்கல” என்றதற்கு
“பக்கத்துல கொஞ்சம் வேலை, அதான் வந்தேன்” அவளின் ஆவலை ஒன்றுமில்லாமல் செய்தது பிரதாபனின் பதில்.
“இன்னிக்குன்னு கரெக்டா வேலை வருமோ?” கிண்டலாகக் கேட்ட தாரிணிக்குத் தெரியும் தனக்காகத்தான் வந்திருக்கிறான் என்று. பிரதாபனின் தோற்றம் மாறியிருப்பதை தாரிணி கண்டாள். முன்பை விட கொஞ்சம் எடை கூடியிருந்தான், வயதுக்கேற்ப கம்பீரமாக இருந்தான்.
தாரிணி குழந்தை போல் அவன் கையைப் பிடித்து கதைப் பேசி நடக்க, பிரதாபனுக்கு அதனை ரசிக்க முடியவில்லை. தாரிணிக்குத் தெரியும் பிரதாபன் தன்னை காதலிக்கிறான் என்று. சில விஷயங்கள் தெரியாமல் இருப்பதே தனி சுவாரசியம் தானே? அது தெளிந்த பின் சுக ரகசியமாக மாறிவிடுகிறது. சிலிர்ப்போடு எனக்குத் தெரியும் என்று அந்த ரகசியத்தைப் பொத்தி வைத்து காப்பதே தனி சுகம்!
அப்படித்தான் தாரிணி இருந்தாள். அவளுக்குமே பிரதாபனின் சூழல் புரிந்தது. தந்தை இல்லை, தாயும் உடனில்லை. தாத்தாவையும் தங்கையும் பார்க்கும் பொறுப்பு அவனுடையது. துயரப்பட கூட அவனுக்கு அவகாசமும் சுதந்திரமுமில்லை என்று மனது வருந்தியது. அவள் அம்மா இறந்த போது அம்மா இல்லை என்ற கவலை மட்டுமே. மற்றபடி பணத்தேவை இல்லை. தாரிணி இஷ்டப்பட்ட படிப்பு, இஷ்டப்பட்டபடிதான் வாழ்கிறாள். அப்பா எல்லாம் பார்த்துகொள்கிறார் என்ற பாதுகாப்பு உணர்வு.
பிரதாபனுக்கு அப்படியே தலைகீழ். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற அவனது ஆசை நிராசையானது. அப்பாவின் மருத்துவ செலவுகள் லட்சங்களைத் தாண்டி சென்றிருக்க, அந்த கடன் அவன் பொறுப்பு. மகனை இழந்த துக்கத்தில் பொன்னச்சன் மிகவும் துவண்டிருந்தார். சொத்துகள் இழப்பு, மகன் இழப்பு என்று அவர் முற்றிலும் முடங்கியிருக்க தொழிலை, நிலங்களை பார்ப்பது பிரதாபனுக்குப் பிரதானமானது. பணம்! அது அவனை ஆட்டி வைத்தது. கடன், வட்டி என்ற சொற்கள் எல்லாம் சோர்வைத் தந்தன.
கூடவே அப்பாவை இழந்து நிற்கும் தங்கை மின்மினிகுட்டி. அவனையே தேற்றிக்கொள்ள முடியாவிட்டாலும் தங்கையைத் தேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். எல்லாம் சேர பிரியம் பிரதாபனின் பிரதானமாக இருக்கவில்லை. பிரியமானவள் தூரமாகிப்போனாள்.
இருந்தும் தாரிணி அப்பா வரவில்லை என்று வருத்தமாக சொல்லியிருக்க, இவனுக்குத் தாங்கவில்லை. பட்டம் பெறுவது படிக்கும் காலத்தில் எத்தனை ஆசையான நிகழ்வு, அவளுக்கென்று யாராவது போக வேண்டுமே என்று தோன்ற வந்துவிட்டான்.
அவன் வருகை தாரிணியின் பிரியத்தைக் கூட்டியது. பிரதாபனுக்கோ தாரிணி முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சி பயம் கொடுத்தது. அவனுக்கிருக்கும் பிரச்சனைகளில் தாரிணிக்கான முக்கியத்துவத்தை அவனால் கொடுக்க முடியாது என்று புரிந்தது.
தாரிணி அன்றிலிருந்து பிரதாபனை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தாள். எப்போதும் தாரிணிக்குத் தேவையான பொழுதுகளில் பிரதாபனும் அவன் துணையும் அவளுக்குத் துணையாக இருந்திருக்கிறது. தாரிணி பிரதாபனுக்கென எதுவும் செய்ததில்லை. ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து அவனை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நித்தமும் அவன் நினைவில் கழித்தாள்.
அவன் தூரமிருந்தாலும் குறையவில்லை அவள் பிரியம். அவன் எத்தனை விலகி சென்றாலும் விட்டு விடாத அன்பு பெண்ணுடையது. முழுக்க முழுக்க அவனை புரிந்து நடந்து அவனுக்கான இடைவெளி விட்டாள். காட்ட முடியாத காதல் கனம் கொடுத்தாலும் அத்தனையும் ஒரு நாள் பெருமழையாகப் பொழிய காத்திருந்தாள் தாரிணி.
தந்தை இழப்பிலிருந்து மீளட்டும், அவன் பிரச்சனைகள் தீரட்டும் என்று தாரிணி காத்திருக்க காலங்கள் ஓடியது.
அன்று காலையில் வினயச்சந்திரன் விரைவாக எழுந்துவிட்டான். பிரதாபன் கட்சி மா நாடு முடிந்து ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான். பொன்னச்சன் வினயனை பெரிதாக எந்த குறையும் சொல்லவில்லை. மின்மினி குட்டி அண்ணனை பார்க்கவும் ஓடி வந்து குழந்தையாக அவன் கைப்பற்றிக்கொண்டாள்.
“ஐ மிஸ்ட் யூ ஏட்டா” என்று தங்கை சொல்ல, தங்கை தோளில் புன்னகையோடு தட்டினான் பிரதாபவர்மா. காலை களரிப்பயிற்சி முடிந்து வினயனோடு ஆலப்புழா சென்றான் பிரதாபன்.
வண்டியில் போகும்போது “ஏன் சேட்டா? நீங்க என்ன பெர்ப்யூம் யூஸ் பண்றீங்க? செமையா இருக்கு” என்று வினயன் கேட்க
“பெர்ப்யூம் அல்லே! அத்தர்” என்றான்.
“அத்தரா?”
“ம்ம், அத்தர். ஜவ்வாது அத்தர்” என்றவன்
“அத்தர் ஹலால் செண்ட். மோஸ்டா சந்தன எண்ணெய் இல்ல ஆலிவ் ஆயில் கலப்பாங்க. டைலுஷன் பொருத்து ரேட் மாறும். இண்டஸ் வேலி, மெசப்பொட்டமியா காலத்துலயே அத்தர் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்சம் போட்டாலும் வாசம் ரொம்ப நேரமிருக்கும். ஒட்டகத்தோட தோள்’ல செய்ற பாட்டில்ல இதை சேமிப்பாங்க. இதை செய்றதை சில நாட்ல ரகசியமா வச்சிருக்காங்க” என்றவன் வாசத்தின் கதையை சொன்னான்.
“பார்டா, எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க” என்று வினயன் சிலாகிக்க
அத்தர் செய்முறை மட்டும் ரகசியமில்லை. அவனுக்கு அந்த கதையை சொன்னவளும் அவன் ப்ரணய ரகசியமாகத்தான் இருந்தாள். தாரிணி சொன்னது அப்படியே நினைவில் இருந்தது, பிடித்தவர்களின் வார்த்தைகளை அப்படியே நினைவில் நிறுத்துவது கூட பிரியம் தானே?? அவர்களை நாம் நினைக்கிறோம் என்று சொல்வதை விட நமக்கே அவர்களை நினைப்பது பிடித்திருக்க, இப்படி அசைப்போடுவது காதலின் வெளிப்பாடுதானே?
தாரிணியை நினைக்கவும் பிரதாபனுக்கு சொல்ல முடியாத உணர்வு. அந்த பிரியத்தின் நிமிடங்களுக்கு அவன் ஏங்கினாலும் வெளிக்காட்டவில்லை.
ஆலப்புழா சென்றதும் ஷிகாராவில் வினயனும் பிரதாபனும் ஏற, முதல் நாளே பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். அப்படி ஏற்கனவே ஆளை ஷிபு உட்கார வைத்திருக்க
வினயன் “நான் வரல சேட்டா” என்றான்.
“ஏடா வினய், உனக்கு இஷ்டம்ல. வா” என்று அழைக்க
வினயன் மறுக்கவும் பிரதாபன் அவனை பார்க்க, அவனை யாரோ பார்க்கும் உந்துதலில் திரும்பினாள் தாரிணி ஷிகாரவின் நாற்காலியில் உட்கார்ந்தபடி பிரதாபனை பார்த்தாள்.
“நீ எங்க இங்க?” என்று அவன் கத்த
“சேட்டா! ஏன் கத்துறீங்க. யாராவது பார்க்க போறாங்க” என்று வினயன் சொல்ல
முயன்று தன்னை அடக்கியவன் “ஷிபு, நீ போ” என்று பிரதாபன் இறங்க
“நான் உங்ககிட்ட பேசத்தான் வந்தேன் பிரதாபன். எத்தன நாள் என்னை அவாய்ட் பண்ண போறீங்க? எங்க பார்த்தாலும் பேசாம போறீங்க. உங்க வீட்ல, ஊர்ல வச்சு பேச எனக்குத் தெரியாதா? பொறுமையா இருந்தா ரொம்ப பண்றீங்க” என்று தாரிணி பொறுமினாள்.
“உன்கிட்ட பேச எனக்கொன்னுமில்ல தாரிணி. நான் முன்னாடியே சொல்லிட்டேன்” என்று பிரதாபனும் பிடிகொடுக்காது பேசினான்.
“எனக்கு உங்ககிட்ட பேசணும். பேசியே ஆகணும்” தாரிணி பிடிவாதமாக கூற பிரதாபனுக்குப் பிடிக்கவில்லை.
இருந்தாலும் இவளோடு இனி பேச்சில்லை என்று சொல்லி புரிய வைக்க வேண்டுமே என்பதற்காக அந்த ஷிகாராவில் தாரிணியோடு ஆலப்புழாவின் நீரில் பயணித்தான்.
பிரதாபன் கோபத்தை அவன் வேகம் வெளிக்காட்ட,
“மெதுவா போங்க” என்று தாரிணி கத்த
“ஒன்னும் பரயண்டா! பேசாம வா” என்று பிரதாபனும் பதிலுக்குக் கத்தினான்.
சுற்றிலும் நீர் நிறைந்திருக்க காயலின் ஒரு இடத்தில் ஷிகாராவை நிறுத்தினான் பிரதாபன்.
பல வருடங்களுக்குப் பிறகு பிரதாபனும் தாரிணியும் மட்டுமே. சுற்றிலும் நீர் சூழ்ந்திருக்க அந்த பொழுது மிகவும் ரம்மியமாக இருந்தது. பழைய புத்தகத்தின் வாசமாக காதல் அவ்விடத்தை நிறைத்தது.
வினயனோ என்ன நடக்குமோ, எப்படியாவது தாரிணியைப் பிரதாபன் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆலப்புழாவில் நகத்தைக் கடித்துக் காத்திருந்தான்.
பிரியம் சேர வேண்டும் என்று வினயச்சந்திரன் காத்திருக்க, பிரதாபனோ பிரியத்தை உதறி தாரிணியை உடைத்துவிட்டான்.