எழில் குழுமத்தின் அலுவலக கட்டிடத்தினுள் கணினியின் முன் அமர்ந்திருந்தவளுக்கு தேநீர் வைக்கப்பட, நிமிர்ந்து பார்த்தவள் வாயசைத்து நன்றி என்றாள் புன்னகை முகமாக.
வித்திவ்யா. அனைவருக்கும் வித்யா. பிறந்ததிலிருந்தே ‘நமக்கான உரிமைப்பட்ட இடம் இதுவல்ல’ என்று பெற்ற அன்னையால் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள்.
சொந்த தங்கை பெண்ணையே தங்களின் தொழிலில் நுழைக்கக்கூடாதென்று கட்டளையிட்டிருந்த அண்ணாமலையின் அழைப்பின் பெயரில் அங்கே பணிநிமித்தம் சேர்ந்திருந்தாள் வித்யா.
எழில் குழுமத்தின் மூத்த தலைமை அண்ணாமலை. அவரின் உடன்பிறந்தவர்கள் இளவரசு, விசாலாட்சி, அதற்கடுத்ததாக தமயந்தி.
கடைசி தங்கையின் மரணத்தின் பின்னர் தங்கை கணவர் உடனடியாக வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வந்து நிற்க, அதுவும் அவருக்கு பெண் குழந்தை இருக்கையில், யாருக்கும் தெரிவிக்காமல் முருகேஸ்வரியை திடீர் திருமணம் செய்து அழைத்துக்கொண்டு வந்து தங்களின் எதிரே ஒரு வாழ்க்கை.
அறவே வெறுத்து ஒதுக்கிவிட்டார் அண்ணாமலை. அதன்பின்னர் தங்கை மகளான ரிதுபர்ணாவிடமும் அந்த வெறுப்பை காண்பிக்க, சூழ்நிலை தன் மகன் ஆத்மகண்ணனே தங்களின் சம்மதமின்றி தங்கை மகளை தன் சரிபாதியாக்கிக்கொண்டது முற்றிலும் எதிர்பாராதது.
காலமும், சூழலும் மனித மனங்களின் மாற்றங்களையும், அன்பு சூழ் உறவுகளையும் காண்பிக்க அண்ணாமலை மட்டுமின்றி அனைவரின் மனதிலும் முருகேஸ்வரி, வித்திவ்யா இடம்பெற்றிருந்தனர்.
எதிர்பார்ப்பில்லா அன்பின் நெஞ்சங்களுக்கு அந்த குடும்பத்தின் ஒற்றுதல் எதிர்காலத்தின் மீதான பற்றுதலை அதிகப்படுத்தியது.
“வேலைக்கு போறதோட சரி. எதுவானாலும் அவங்க சொல்றபடி கேட்டுட்டு தான் நடக்கனும். சம்பளத்துக்கு தான் போற கண்ணு. அக்காவும், மாமாவும் உன்மேல உள்ள பாசத்துல என்னனாலும் செய்யலாம். ஆனா அவங்க குடும்பத்து மனுஷங்களும் ஒரு பரிதாபத்துல நமக்கு உதவி செஞ்சா நாம அதை தலையில ஏத்திக்க கூடாது. நன்றி மட்டுமே இருக்கனும். புரியுதா?…”
முருகேஸ்வரி மகளுக்கு விடாமல் நன்றிக்கடன் என்னும் போதனையை செய்துகொண்டிருந்தார்.
தன் கணவர் தனசேகரனின் முதல்மனைவி தமயந்தியின் மகளுக்காக வாழ்ந்தவர் அவர். இப்போது அவளின் குடும்பத்தினர் எல்லாம் தங்கள் மீது சிலவருடங்களாக தான் அன்பு காட்டுகின்றனர்.
அதனை எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்திக்கொள்வதை போல தாங்கள் நடந்துகொள்ள கூடாதென்பதில் அத்தனை கவனம்.
அந்த கவனத்தை மகளுக்குமே சொல்லி வளர்த்திருக்க, அண்ணாமலை வித்யாவை வேலைக்கு வர சொல்லிவிட எதிர்பார்க்கவே இல்லை.
“அவ படிச்ச ஸ்கூல்ல அவளை மாதிரி வாய் பேச முடியாத புள்ளைங்களுக்கு வகுப்பெடுக்கறேன்னு சொல்லியிருக்கா ரிது. இந்த வேலை வேண்டாம்ன்னு நீ உன் மாமனார்கிட்ட சொல்லேன்…” என்று அண்ணாமலையிடம் பேச பயந்துகொண்டு ரிதுபர்ணாவிடம் கூற,
“அத்தை நான் தான் அப்பாக்கிட்ட இதை சொன்னேன். நம்ம கம்பெனில வித்யா வேலைக்கு போறதுல உங்களுக்கு விருப்பமில்லையா?…” என்று இடையிட்டு ஆத்மா பேச அதனை மறுத்துவிடுவாரா முருகேஸ்வரி?
“சரிங்க தம்பி…” என்றுவிட்டார் அவர்.
“எல்லாம் சொல்றவங்க சொன்ன அதான் அனுப்புவீங்க, என்ன சித்தி?…” என்று ரிதுபர்ணா தன் சித்தியிடம் வினவ,
“என்ன கண்ணு நீ? எனக்கு நீ வேற, தம்பி வேறையா?…” என அதற்கே பதறி போனார்.
“நீங்க மாறவேமாட்டீங்க சித்தி. சரி வித்யாவை அங்க அனுப்புங்க….” என்று சொல்லிவிட அதன்பின் கவனமெல்லாம் மகள் வித்யாவிடம்.
“நம்மால யாருக்கும் எந்த கஷ்டமும் வரக்கூடாது வித்யா…” என்று சொல்லி சொல்லியே வேலைக்கு அனுப்பி வைத்தார் முருகேஸ்வரி.
“அந்த பிள்ளை படிச்சதும் மறந்து, எல்லாம் மறந்து நன்றி நன்றின்னு சுத்த போகுது. என்ன பண்ணிட்டிருக்க நீ? ஒரு வேலைக்கு நிம்மதியா போக விடுறியா?…” என்று அண்ணாமலையின் தங்கை விசாலாட்சி அதட்ட,
“நிசத்தை சொல்லி தான புரியவைக்கனும்ங்க…” என்றுவிட்டார் முருகேஸ்வரி.
இப்படியாக எழில் குழுமத்தில் வித்யா சென்று அமர்வதற்குள் அத்தனை ஆர்ப்பாட்டங்கள்.
நிஜத்தில் முருகேஸ்வரிக்கு அத்தனை பயம். வேலையில் மகள் எதுவும் தவறு செய்துவைத்து, அதனால் ரிதுபர்ணாவுக்கும், அண்ணாமலைக்கும் மனசங்கடம் எதுவும் நேர்ந்துவிட்ட கூடாதென்று தினமும் மனதிற்குள் ஆயிரம் வேண்டுதல்கள்.
தாயின் சொல்லுக்கிணங்க வித்யாவும் அப்படி எந்த சறுக்கலும் இன்றி வேலை செய்ய அங்கிருப்பவர்களுக்கும் அவளின் அமைதியும், புன்னகையும் பிடித்துப்போனது.
கணினியின் முன் அமர்ந்திருந்தவள் டீயை குடித்தபடி வந்திருந்த மெயில் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்க,
“வித்யா…” என்று வேகமாய் உள்ளே நுழைந்தான் பரத். விசாலாட்சியின் மகன்.
அவனை பார்த்ததும் டீயை வைத்துவிட்டு பதட்டமாய் நிமிர்ந்துபார்த்தாள் வித்யா.
குடும்பத்தில் அத்தனைபேரும் அவர்களை ஏற்றுக்கொண்டாலும், இயல்பாய் பேசினாலும் இன்றளவும் பரத் மட்டும் எப்போதும் போல ஒதுக்கத்துடன் தான் நடந்துகொள்வான்.
ஒரே ஒரு நிம்மதி, முன்பை போல வெறுப்பை காண்பிப்பதில்லை. அதற்காக ஒட்டி உறவாடுவதும் இல்லை.
பரத்திடம் தான் அவளை அண்ணாமலை பயிற்சி பெற சொல்லியதும். அவனும் அந்தளவில் கற்றுக்கொடுத்திருந்தான் அவளுக்கு.
எப்போதுமே அவனிடம் ‘அவனும் தன் அண்ணன் தான்’ என்ற பார்வையை காண்பித்துவிட முடியாது. இப்போது தலையசைத்து என்னெவென்று அவள் கேட்க,
“அடுத்தமாசம் ரசாயன சுத்திகரிப்பு செய்யறதுக்கான டீட்டெய்ல்ஸ் அன்னைக்கு ரெடி பண்ணினோமே? அந்த டாக்குமெண்ட் எங்க?…” என்று கேட்க, அவனுக்கு கையமர்த்தியவள் தன் முன்னிருந்த கம்ப்யூட்டரில் எதையோ தேடி காண்பித்தாள்.
“ஹ்ம்ம், இதை என்னோட மெயிலுக்கு இப்பவே அனுப்பு. நான் போய் செக் பன்றேன்…” என்று சொல்லிவிட்டு திரும்ப எதிரே இளவரசு வந்துவிட்டார்.
“என்னடா பரத், உன் கேபின்ல உன்னை காணும்ன்னு பார்த்தேன்…” என்றார் தங்கை மகனிடம்.
“லாஸ்ட் வீக் நானும், வித்யாவும் ஒரு டாக்குமெண்ட் ரெடி பண்ணியிருந்தோம் மாமா. அது சம்பந்தமா பேச அத்தான் கால் பண்ணியிருந்தாங்க. அதான் வித்யாக்கிட்ட என் மெயிலுக்கு அனுப்ப சொன்னேன்…” என்றவன் கையிலிருந்த கைபேசியில்,
“என்னடா இவன் பேச வந்துட்டு, பேசாம இருக்கானேன்னு சிரிக்கிற? இல்லையா?…” என்றதும் கண் சிமிட்டியவள் முகமும் கள்ளமின்றி மலர்ந்திருந்தது.
“சரி சரி நானே சொல்றேன். உன் அம்மாக்கிட்ட என்ன சொன்ன?…” என்றார் அவளிடம்.
“நானா? அம்மாக்கிட்டையா? என்ன?..” என கை விரித்து புரியாததை போல அவள் கேட்க,
“உன் கல்யாண விஷயம் பத்தி…” என்றார் இளவரசு.
“ஓஹ், அம்மா சொன்னாங்களா?..” என இலகுவாய் கேட்டாள் கன்னம் குழியும் புன்னகையுடன்.
“ஹ்ம்ம்…” என்றவர்,
“நல்லா யோசிச்சி தான் சொன்னியா நீ? ஏன் இப்படி ஒரு முடிவு?…” என்றவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை அவளுக்கு.
‘புரியவில்லை’ என்று இதழ் பிதுக்கி அவரிடம் அவள் கையசைத்து கேட்ட பாங்கில் மனம் உருகிற்று.
“இல்லை, உன்னை மாதிரியே வாய் பேசாத பையனை பார்த்து சொல்ல சொல்லி நீ சொன்னியாம். ஏன்ம்மா?…” என்றவருக்கு வார்த்தைகளில் படர்ந்த ஏமாற்றத்தை மறைக்க முடியவில்லை.
வித்யா தன்னை போலுள்ள ஒருவனால் தான் தன்னை புரிந்துகொள்ளமுடியும் என்று முருகேஸ்வரியிடம் சொல்லியிருக்க, அதை எப்படி அவள் சொல்லலாம் என்றொருவன் அங்கே பொங்கிக்கொண்டிருப்பதை அறியாது போனாள்.
“சொல்லும்மா…” என்ற இளவரசுவிடம் என்ன சொல்ல முடியும் என்று தெரியவில்லை.
அவளின் பார்வையில் மெல்லிய வருத்தத்தையும், ஒரு சங்கடத்தையும் கண்டவர்,
“சரி நான் அம்மாக்கிட்ட பேசறேன். அவசரப்பட்டு நீயா எதையாச்சும் நினைச்சிட்டு இருக்கக்கூடாது. புரியுதா?…” என்று கேட்க தலையசைத்தாள் வித்யா.
“சரி, நீ என்னவோ பாப்பாவுக்கு வாங்கி வச்சிருக்கன்னு சொல்லியிருந்தியே? முரளி மதியமே சென்னை கிளம்பறான். குடுத்துட்டியா அவன்கிட்ட?…” என்று கேட்க வித்யாவிற்கு அது தெரிந்திருக்கவில்லை.
இரு கைகளையும் விரித்து ‘தெரியாது’ என்று தலையசைத்தவள் நேரத்தை பார்த்தாள்.
“அம்மாக்கிட்ட சொல்லி எடுத்து குடுக்க சொல்லிடு. சாயந்தரம் தான் கிளம்பனும்ன்னு சொன்னான். ஆனா ஆத்மா சீக்கிரம் வர சொல்லிட்டான் போல? அதான் மதியமே கிளம்பறான்…” என்று சொல்லி அவர் செல்ல வித்யாவும் யோசித்தாள்.