ஆத்மா, ரிதுபர்ணாவின் மகள் பூர்விதாவிற்கு பிறந்தநாள் வருகிறது. அதற்கு முதல்பரிசை அக்காவின் மகள் தன்னிடம் கேட்டிருக்க முதலில் தானே கொடுத்தனுப்புவதாக சொல்லியிருந்தாள்.
இப்போது முரளி கிளம்புவது தெரிந்ததும் அதனை எடுத்து தரவேண்டுமே என தானும் கிளம்ப தயாரானாள்.
உடனே எழுந்துகொண்டவள் பரத்தின் அறைக்கு வர அவன் ஆத்மாவுடன் போனில் விவாதித்துக்கொண்டிருந்தான்.
தான் வந்தும் தன்னை கவனிக்காமல் அவன் பேச கண்டவள் கண்ணாடி கதவில் இரண்டுமுறை தட்டிவிட்டு பார்க்கவும், திரும்பினான் பரத்,
“அத்தான் வித்யா…” என்று சொல்லியவன்,
“என்ன?…” என்றான் அவளிடம்.
“வீட்டுக்கு போய்ட்டு வரனும்…” என்று அவனிடம் அனுமதி கேட்டு அவள் நிற்க சட்டென அவளின் வேகமான சைகை புரியவில்லை பரத்திற்கு.
“ப்ச், மெதுவா சொல்லு. என்ன அவசரம்? நீ என்ன சொல்றன்னு யோசிச்சு புரிஞ்சுக்கிட்டு பதில் சொல்றதுக்குள்ள எனக்கு மண்டை காயுது…” என்று வெடுக்கென்று சொல்லிவிட வித்யாவின் முகம் வாடிவிட்டது.
அதன்பின்னரே தான் பேசியதன் தவறை புரிந்துகொண்டவன் ஆத்மாவும் இன்னும் அழைப்பில் நிற்பதில் அதிர்ந்து போய் சுதாரித்தான்.
“ப்ச், கொஞ்சம் மெதுவா சொல்லு வித்யா. என்ன சொல்ல வந்த?…” என்று அவன் கேட்க தன் வருத்தத்தை கூட அவள் சட்டென்று மறைத்துக்கொண்டாள்.
‘அவங்க யாரையும் கோவப்படுத்திடாம இரு. அவங்க எதாச்சும் சுருக்குன்னு சொன்னாலும் பெருசு பண்ணாம கேட்டுக்க கண்ணு. வருத்தத்தை காமிச்சுக்காத’ என்று சொல்லியிருந்த தாயின் வளர்ப்பில் அவள் மாறவில்லை.
மெல்லிய புன்னகையை காண்பித்தவள் மிக மிக மெதுவாய் அவனுக்கு புரியும்படி கையசைத்து தொண்டை வலிக்க சில வார்த்தைகளை உச்சரிக்க முயன்று கூற பரத்திற்கு அத்தனை கஷ்டமாக போனது.
“வீட்டுக்கு போகனுமா? இப்பவே என்ன?…” என்று மணியை பார்த்தவன், மீண்டும் அவள் பேசும்முன்,
“சரி, போய்ட்டு வா…” என்றான்.
“தேங்க்ஸ்…” என்று முகமெல்லாம் சட்டென்று ஒரு மலர்ச்சி.
பரத்தின் கடுமையை கூட அவள் பெரிதுபடுத்தாமல் அவனுக்கு நன்றி சொல்லி செல்ல இங்கே இவனுக்கு உதறல்.
கைபேசியில் ஆத்மாவின் ஆழ்ந்த அமைதியில் பரத் அச்சத்துடன் நிற்க சில நொடிகள் மௌனத்தில் கடந்தது.
“ஸாரி அத்தான். நான்…” என்று தன்னிலை விளக்கம் சொல்லும்முன்,
“ஷட்அப் பரத். உன்னோட எக்ஸ்க்யூஸ் தேவை இல்லை. வித்யாவுக்கு எப்படியோ, அவ வேலைக்கு வந்திருக்கறதாவே நினைச்சு இருக்கட்டும். ஆனா எனக்கு அவ என் பொண்ணுக்கு சமம். என்னோட ஷேர் அவளோடதும். உனக்கு அவ பேசறது புரியலைன்னா அது உன் கஷ்டம். அதுக்கு அவளை பேசுவியா? நீ இப்படி பேசறது இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும்…” என்று சொல்லி,
“இந்த சுத்திகரிப்பு பத்தி ஈவ்னிங் பேசறேன்…” என அழைப்பை பட்டென்று துண்டித்துவிட்டான் ஆத்மகண்ணன்.
தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக தன் பேச்சை எண்ணி அமர்ந்துவிட்டான் பரத்.
அங்கே சென்னையில் அதற்குமேல் கோபத்தில் தன்னிருக்கையில் சுழன்றுகொண்டிருந்தான் ஆத்மகண்ணன்.
பரத் அப்படித்தான் என்றாலும் அவனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால் முன்பே பட்டென்று சொல்லிவிடுபவன் தான் ஆத்மா.
அதிலும் வித்யா என்று வருகையில் எப்படி விட்டுவிட முடியும்? மனதிற்குள் அத்தனை வருத்தம். அத்தனை மருத்துவரிடம் காண்பித்தாகிற்று வித்யாவை. பிரயோஜனமற்று போனது.
“அது பை பெர்த் ஆத்மா. ஸ்பீச் தெரபி குடுத்தாலும் அவங்களால அந்த வார்த்தைகளுக்கு வடிவம் குடுக்கமுடியாது. சில வார்த்தைகள் ஆரம்ப எழுத்து வரும். ஆனா முழுசா அழுத்தம் திருத்தமா பேசமுடியாது. மத்தபடி ரொம்ப டேலன்ட்டடான பெர்சனாலிட்டி…” என்று பார்த்த மருத்துவர்கள் அனைவருமே சொல்லியிருந்தனர்.
“என்னவோ நான் பண்ணின பாவம் என் பொண்ணோட குரலை வாங்கிருச்சு…” என்று முருகேஸ்வரி அதையும் தன் மீதே தான் போட்டுக்கொள்வார்.
“இதெல்லாம் பாவத்துல சேருற விஷயமா? என்ன பேசறீங்க சித்தி நீங்க?…” என்று ரிதுபர்ணா தான் சத்தம் போடுவாள்.
இன்றும் ஆத்மாவின் கோபமான பேச்சில் என்னவென்று கேட்க அவனிடம் வந்து நிற்க,
“நாளைக்கு முரளியோட திரும்ப அங்க தான் வர போறேன். ஒருநாள்ல என்ன வேணுமாம் த்தை?…” என சிரித்தாள்.
“அட உனக்கில்லைடா. கண்ணனுக்கு. அவன் வர ஒருவாரமாகிருமே? அதான் வேணும்னா செஞ்சு குடுத்துவிட தான். உன் பெரியம்மா கறிவேப்பிலை தொக்கு பண்ணி வச்சிருக்கேன். குடுத்திருன்னு சொல்லிட்டு போனாங்களாம் முரளிட்ட…” என்றதும்,
“அதான் நீங்களும் குடுக்கறீங்களா?…” என ரிது கேட்க,
“என்ன இப்படி ஆரம்பிச்சிட்டீங்க சித்தி?…” என்று சிரித்தான் ஆத்மா.
“போட்டியா போடறேன். ஒருவேளை தேவைப்பட்டா அனுப்புவோமேன்னு சொன்னேன். என்னவோ போங்க. நைட்டுக்கு மட்டும் நான் சேர்த்தே செஞ்சு அனுப்பறேன். குக்கை எதுவும் நைட்டுக்கு செய்யவேண்டாம்ன்னு சொல்லிரு…” என்று வைத்துவிட்டார்.
“அநியாயம் பன்றாங்க…” என்ற ஆத்மா சிரிப்புடன் முரளிக்கு அழைத்து பேசிவிட்டு வைத்தான்.
காட்டன் ஷர்ட்டின் பட்டன்களை போட்டபடி மெல்லிய சீட்டிகையுடன் கிளம்பிக்கொண்டிருந்தவனுக்கு தம்ளர் நிறைய மோரை கொண்டுவந்தார் செண்பகம்.
“யார் முரளி போன்ல?…” என்று மகனிடம் கேட்க,
“அண்ணா தான்ம்மா. கிளம்பும்போது கம்பெனிக்கு போய்ட்டு பைல் ஒன்னு எடுத்துட்டு வர சொன்னார். பெரியப்பாட்ட இருக்காம். அதான் ஞாபகப்படுத்தினார்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், சரிப்பா. இதை குடி…” என்று நீட்ட,
“பசிக்கலைன்னு சொன்னேன்ல. எதுக்கு இப்ப மோர்?…”
“சாப்பிட்டும் போகமாட்டேன்னு சொல்லிட்ட. மோராவது குடி. நான் போய் செஞ்ச சாப்பாட்டை எல்லாம் கார்ல கொண்டுபோய் வைக்கறேன்…” என்றார்.
“ஆனந்தி பெரிம்மா பார்த்தாங்கன்னா அவங்க பங்குக்கும் எதாச்சும் வைக்க வருவாங்க. நாளைக்கு தான் அண்ணி பாப்பாவோட வந்திருவாங்க இல்ல?…” என்றவன் சலிப்புடன் காலி மோர் தம்ளரை அவருக்கு நீட்டினான்.
“உன் பெரிம்மாவுக்கு தெரிஞ்சா தானே? அதெல்லாம் சத்தமில்லாம தான் எடுத்து வச்சிருக்கேன்….” என்றவர்,
“அப்பறம் முரளி, நாளைக்கு கார் ட்ரைவ் பண்ணிட்டு வரும்போது பாப்பா சொன்னான்னு வேகமா ஓட்ட கூடாது. அவ என்ஜாய் பன்றான்னு சொல்லிட்டு நீயும் பண்ணின பார்த்துக்கோ…” என்று மகனை கண்டிக்க,
“அதெல்லாம் பார்த்து தான் வருவேன். அண்ணி இருக்காங்களே?…” என்று முரளி தலை வார,
“ம்க்கும், அவ பேச்சை நீங்க ரெண்டுபேரும் அப்படியே கேட்டுடுவீங்க பாரு….” என்று பெருமூச்சு விட்டவர் மகனை அமைதியாய் பார்த்தார்.
“என்னம்மா? அப்படி பார்க்கறீங்க?…” செண்பகத்தின் பார்வையில் முரளியின் முகத்தில் புன்னகை பூக்கள்.
“வருஷம் போய்ட்டே இருக்கு முரளி. இந்ததடவை ரிது வரவும், கண்ணனையும் வச்சு பேசனும். உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடலாம்ன்னு நினைக்கறேன்…” என்று சொல்ல சிலநொடிகள் அவனின் கைகள் அசைவற்று நின்றுவிட்டன.
“நானும் இதோ அதோன்னு ஆரம்பிக்கலாம்ன்னா உங்கப்பா பொறுன்னு என்னை நிறுத்தி வச்சிருக்கார். நீ தான் கொஞ்சநாள் போகட்டும்ன்னு சொன்னியாமே?…” என்று அவர் பேசிக்கொண்டே செல்ல முரளியிடம் மௌனம் மட்டுமே.
“நம்ம குடும்பத்துல எல்லாருக்கும் கல்யாணமாகிருச்சு. நீ ஒருத்தன் தான் இருக்க. என் சொந்தத்துலையாச்சும் பார்க்கலாம்ன்னா அப்படி எல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஏத்தமாதிரி இல்லை…”
“ப்ச், இப்ப எதுக்கும்மா இந்த பேச்சு?…” என அதனை மனம் அதிர கவனமாய் தவிர்க்க பார்த்தான்.