“எதுக்குன்னா? வித்யாவுக்கும் பார்க்க ஆரம்பிச்சு வரனும் வந்திருக்கு. அவ என்னடான்னா பெரிய மனுஷி மாதிரி என்னலாம் சொல்லியிருக்கா? காலையில தான் இந்த முருகேஸ் சொன்னா. இல்லைன்னா அப்பவே வித்யாக்கிட்ட பேசிருப்பேன். வரட்டும், சாயந்தரம் பேசனும்…” என்றவர்,
“அடுத்து நீ தான் இருக்க. இப்ப பார்க்க ஆரம்பிச்சா தான் நாளும் கூடி வரும் முரளி. அம்மா சொல்றது சரி தானே?…” என்று பேச அவனால் பதில் கூற முடியவில்லை.
“இன்னும் நீங்க கார்ல சாப்பாட்டை எடுத்து வைக்கலையா?…” என்று பேச்சை மாற்ற,
“அட ஆமா பாரேன்…” என்று செண்பகம் சென்றுவிட்டார்.
அவர் நகர்ந்ததும் தான் அடைத்து நின்ற மூச்சு சீரானது. ஆழ்ந்த பெருமூச்சுடன் கட்டிலில் அமர்ந்துவிட்டான் முரளிவினோகரன்.
தன்னிடம் வித்யாவை பற்றிய விருப்பத்தை ஆத்மா கேட்டபொழுது அத்தனை எளிதாய் சொல்லிவிட்டான் தான்.
குடும்பத்தின் ஒற்றுமை தன்னால் குலைந்துவிட கூடாது. வித்யாவை திருமணம் செய்ய போகிறவன் நல்லவனாக, அவளை பார்த்துக்கொள்பவனாக இருந்தால் போதும் என்று.
ஆனால் சொல்லிய நொடியிலிருந்து ‘ஏன் தான் பார்த்துக்கொள்ளமாட்டோமா?’ என்னும் எண்ணம் வலுபெற ஆரம்பித்துவிட்டது.
அதுவரை தன் விருப்பம் யாருமறியாமலே போய்விடும். போகட்டும் என்று நினைத்தவன் அதன்போக்கில் ஆத்மாவிடம் சொல்லியும் இருக்க, சொல்லிய நிமிடத்திலிருந்து வேறாகிவிட்டிருந்தான் முரளி.
‘நீ என்ன சொல்லிட்டு என்னடா பன்ற?’ என்றவன் பார்வைகள் இப்போதெல்லாம் சிலவேளைகளில் அவளிடம் வெளிப்படையாகவே வெளிப்பட துவங்க அவளால் தான் அதனை பிரித்தறிய முடியவில்லை.
‘உன் எண்ணம் புரியாம வெகுளியா பார்த்து பழகுது அந்த பிள்ளை. நீ கள்ளத்தனம் பன்ற’ என்று இடித்துரைக்கும் மனதை சமாதிகட்ட படாதபாடுபட்டு போனான்.
போதாததிற்கு அவனின் பார்வை மாற்றத்தினை கூட கண்டுகொள்ளாமல் எப்போதும் போலவே பேசி, நகர்ந்து செல்லும் வித்யாவை எண்ணி நொந்துகொள்ளாத நாளில்லை.
‘இவளுக்கு புரியவே செய்யாதா?’ என்னும் ஆற்றாமைகள் எல்லாம் அவளை விட்டுக்கொடுக்க விடாமல், தட்டி தூக்கி செல்லவேண்டும் என்னும் ஆவேசத்தை தான் கொழுந்துவிட செய்யும்.
அதிலும் காலை அவன் கேள்விப்பட்ட விஷயம் அவனை அத்தனை கோபத்தில் ஆழ்த்தியிருந்தது.
அதனுடனே கிளம்பி வெளியே வர செண்பகம் காரில் அனைத்தையும் வைத்துவிட்டு உள்ளே நுழைந்தார்.
“முரளி வாட்சை மறந்துட்டு போற பார்…” என்று மகனுக்கு ஞாபகப்படுத்த,
“மறக்கலைம்மா, அதை எடுக்கத்தான் வந்தேன்…” என்று எடுத்து கையில் மாட்டிக்கொண்டான்.
“சரி பத்திரமா போய்ட்டு வா….” என்று அவனுடன் வாசலுக்கு வர ஆனந்தியும் வந்துவிட்டார்.
“ரிதுவையும், பாப்பாவையும் பார்த்து கூட்டிட்டு வா முரளி…” என்று ஆனந்தி சொல்ல,
“இல்லைன்னாலும் அவனுக்கு தெரியாதாக்கா?…” என்று நொடித்துக்கொண்ட செண்பகம்,
“லேசா பிசக்கிட்ட மாதிரி இருக்கு. அதான் எண்ணெய் தேய்ச்சிருக்கேன்…” என்று சொல்ல,
“நல்லா தேய்ச்சீங்க போங்க. வாங்க உருவி விடறேன்…” என்று செண்பகம் அழைக்க அவர் முரளியை பார்க்க,
“அவன் கிளம்பிப்பான் க்கா. வாங்க…” என்று ஆனந்தியை அழைத்துக்கொண்டு சென்றார் செண்பகம்.
அவர்கள் செல்லவும் காரில் அமர்ந்தவன் காரை கிளப்பி, பாட்டை ஒலிக்கவிட்டு மெல்ல நகர்த்த கேட் திறக்கப்பட்டிருந்தது.
கேட்டை ஒட்டி காரை நகர்த்தியவனுக்கு எதிரே ரிதுபர்ணாவின் இருசக்கர வாகனத்தில் வந்தாள் வித்திவ்யா.
அந்தநேரத்தில் வித்யாவின் வருகையை முரளி சுத்தமாய் எதிர்பார்க்கவே இல்லை.
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை செண்பகம், இந்த பொண்ணை பாரேன். அவளை மாதிரியே வாய் பேசாத பையனா இருந்தா தான் அவளோட உணர்வுகள் புரியுமாம். அவங்க வாழ்க்கையும் நல்லா இருக்குமாம். ஏற்ற தாழ்வில்லாம சமமா இருக்குமாம். அவளை நல்லா புரிஞ்சுக்க முடியுமாம். இப்படி பார்க்க சொல்லியிருக்கா…” என்று காலை இளவரசு வீட்டில் சொல்லியதை கேட்டதில் இருந்தே அத்தனை கொதிப்பு முரளிக்கு.
அந்த வார்த்தைகளின் தாக்கம் இப்போது முகத்தில் தென்பட வித்யாவின் புன்னகைக்கு பதில் புன்னகையை தராமல் காரையும் பின்னே எடுக்காமல் முன்னேறி சென்றான் அவன்.
அவனின் முகபாவனை எதுவும் வித்யாவிற்கு பிடிபடவில்லை. அதற்குள் கிளம்பிவிட்டானே என்று ஸ்கூட்டியை பின்னே நகர்த்த நகர்த்த அவளை இடித்துக்கொண்டு செல்வதை போல முரளி முன்னேறினான்.
இது வேலைக்காகாது என்று நினைத்தாளோ என்னவோ? சட்டென ஸ்கூட்டியை வாசலின் ஒருபக்கம் ஓரமாய் நிறுத்திவிட்டு காரை நோக்கி வர திகைப்புடன் அசையாது அமர்ந்துவிட்டான்.
முதல் சிரிப்பில் இதயத்தை எடுத்த
அடுத்தமுறை உறக்கத்தை கெடுத்த
தெளியவச்சு மயக்கத்தை கொடுத்த
பெண்ணே உன்மேல் எனக்கு கிறுக்கோ கிறுக்கோ
காருக்குள் ஒலித்த பாடல் வரிகள் அவனின் மனதினை ஒப்பிப்பதை போலிருக்க தன்னை நோக்கி வந்தவள் மீதான பார்வையை ஆழப்படுத்தினான் முரளி.
வந்தவள் தன் பக்கமிருந்த கார் கண்ணாடியை இறக்க சொல்லி மெல்ல குனிந்து பார்த்தவள்,
“டூ மினிட்ஸ்…” என்றாள் கண்களில் கெஞ்சுதல் காண்பித்து, மெல்ல இதழ் குவித்து, கைகளில் அபிநயம் பிடித்து.
மை பூசிய அந்த கரிய பெரிய கண்கள் அவனை உள்ளிழுக்க அசைவற்று பார்த்தவன் எவ்வித பாவனையையும் காண்பிக்கவில்லை.
அவனிடம் சொல்லியவள் பதிலை எல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. அதே சிரிப்புடன் வேகமாய் வீடு நோக்கி நடக்க ஆரம்பிக்க அவளின் கொலுசின் ஓசை அவளின் தூரத்தை எடுத்துக்கொடுத்தது.
“தம்பி…” என்ற வாட்ச்மேனின் அழைப்பில் அவரின் பக்கம் மெதுவாய் திரும்பி பார்த்தான்.
“வித்யாவோட ஸ்கூட்டியை எடுத்து உள்ள நிழல நிப்பாட்டுங்க…” என்று சொல்லி காரை பின்னால் நகர்த்தியவன் ஸ்ட்ரியரிங்கில் கைகளை கோர்த்தபடி அமர்ந்துவிட்டான்.
வெயிலில் அவள் அத்தனை வேகத்துடன் வந்திருப்பது வியர்த்து கலைந்த முகத்தினை வைத்தே தெரிந்தது.
இத்தனை வருடங்களில் இப்படி என்றுமே வித்யாவிடம் அவன் நடந்துகொண்டதே இல்லை.
அவனின் உணர்வுகளை, கோபத்தை எல்லாம் காண்பித்ததும் இல்லை. என்னவோ அத்தனை சஞ்சலமாக இருந்தது மனதிற்குள்.
‘ஏன் இவளை நான் உணர்ந்துகொள்ள மாட்டேனா? என்னால் புரிந்துகொள்ள முடியாதா? நான் பார்த்துக்கொள்ளமாட்டேனா? என்னோடு சேர்ந்தால் எங்கள் வாழ்க்கை சிறக்காதா?’ இப்படியான ஏகப்பட்ட ஆதங்கம் அவனின் இயல்பை தொலைக்க செய்துகொண்டிருந்தது.
மனது வேகமாய் அடித்துக்கொள்ள அதற்கு இணையாய் அவளின் கொலுசின் ஓசை நெருக்கமாய் கேட்க அவள் வரும் திசையில் தான் பார்த்துக்கொண்டிருந்தான் முரளி.
கையில் என்னவோ பார்சல் போல் வைத்திருந்தாள் வித்யா. இப்போது தன் புறம் வராமல் தன்னெதிரே இருந்த கதவின் பக்கம் வந்தவள் கண்ணாடியை இறக்க சொல்லவும் சொல்லியபடி செய்தான்.
அந்த பார்சலை காண்பித்து அது ரிதுவின் குழந்தை பூர்விதாவிற்கு என்றாள் வித்யா.
வார்த்தைகள் உருவெடுக்கவில்லை என்றாலும் அவளின் விழிகள் ஆயிரம் பாஷைகள் பேசும், காற்றாய் முதல் எழுத்தோடு தொண்டையிலிருந்து எழுந்துவரும் அந்த பாஷைக்கு எந்த மொழிகளும் அழகு சேர்த்துவிடாது.
அதன்பின்னான வலியை அவன் என்றுமே உணர்ந்ததில்லை. அதை குறையென்று நினைத்தால் தானே வலி என்பதும்.
இப்போதும் அவள் சொல்ல வந்தவை அவனில் உருவமெடுத்துவிட்டது. இதைவிட இவர்கள் வாழ வேறு என்ன வேண்டுமாம் என்றது அவனுள்ளம்.
“என்னாச்சு? உடம்பு சரியில்லையா?…” என்றாள் அவனின் பதிலற்ற நிலை கண்டவள் அவனிடத்தில் கையசைத்து.
“ஹ்ம்ம்…” என்றவன் ஆமோதிப்பான பதிலில் இன்னும் பதறியவள்,