அண்ணாமலை வீடு வந்து சேரும்முன் ஆனந்திக்கு அவரின் அண்ணன் வீட்டிலிருந்து விஷயம் வந்து சேர்ந்துவிட்டது.
“உன் அண்ணி செஞ்சது சரின்னு சொல்ல வரலைம்மா ஆனந்தி. அதுக்குன்னு உறவையே அறுத்துட்டு போய்ட்டாரு உன் வீட்டுக்காரர். என்கிட்ட சொல்லிருந்தா நான் கண்டிச்சிருக்க போறேன்….” என்று குருமூர்த்தி தங்கையிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“ஏற்கனவே கண்ணா விஷயத்துல இப்படித்தானே பிரச்சனையாச்சு. என் மேல தான் தப்புண்ணே. நான் அண்ணிக்கிட்ட சொல்லியிருக்கக்கூடாது…” என்ற ஆனந்தியின் பேச்சில் நடுக்கம்.
“என்ன பேசிருக்கக்கூடாது? உன் மனசுல நடந்த பிரச்சனையால என்னவோ ஒரு ஆதங்கம். மனசு பொறுக்காம ஒரு ஆதங்கத்துல நீ உன் அண்ணிக்கிட்ட சொல்லிட்ட. அடுத்தவங்கட்டையா சொன்ன? இவ ஒரு கூறுகெட்டவ, யார்கிட்ட பேசனும்ன்னு இல்லாம பேசிட்டா…” என்ற குருமூர்த்தி,
“அவங்கல்லாம் நமக்கு சமமா எதிர்க்க கூட நிப்பாட்டக்கூடாது. உன் அண்ணி தேடி போய் பேசியிருக்கா. அதுக்கே என்கிட்ட சொல்லியிருந்தா நாலு சாத்தியிருப்பேன்…” என்று சொல்ல ‘திரும்பவுமா?’ என்று ஆனந்தி பேச்சை தவிர்க்க நினைத்தார்.
“அண்ணே, இப்படியெல்லாம் பேசாதீங்க. அவருக்கும், கண்ணனுக்கும் இது தெரிஞ்சா இன்னும் கோவப்படுவாங்க…”
“இதுக்கு மேல கோவப்பட என்ன இருக்கு? நேரா இங்க என் வீட்டுக்கு வந்து என் முன்னாடியே அடுத்த வீட்டு பொம்பளைங்கள பேசற அளவுக்கு நான் தாழ்ந்து போகமாட்டேன்னு சொல்லி கோவத்தை கண்ணாடி டேபிள் மேல காமிச்சு உடைச்சுட்டுட்டு அதுக்கு காசை தூக்கி என் மூஞ்சில எரியற மனுஷனை என்னன்னு சொல்ல?…” என்று பொங்கினார் குருமூர்த்தி.
“நான் என்ன ண்ணே செய்யட்டும்?…” ஆனந்தி அழ,
“ம்க்கும், இது ஒன்னை மட்டும் விட்டுடாத. எப்ப பாரு அழு. இங்க என்னடான்னா காசை போட்டதோட எங்க நிழல் கூட அங்க வரக்கூடாதாம்ல. வீட்டு வாசப்படிய மிதிச்ச பார்த்துக்கோன்னு மிரட்டிட்டு போறார்…” என்று குருமூர்த்தி கொந்தளிக்க,
“இப்பத்தான் கொஞ்ச நாளா வந்துபோக இருந்தீங்க. உங்க பொண்ணுக்கு கல்யாணம், அதுல அத்தையா நான் உரிமையா வந்து நிக்கலாம்ன்னு நினைச்சேன். இவரும் கோவத்தை குறைச்சிருந்தார். திரும்பவும் இப்படியாகிருச்சே. வீட்டுக்கு வந்து என்ன செய்வாரோ?…” என்று சொல்ல,
“என்னம்மா, நான் என்ன சொல்றேன்? நீ என்ன பேசற? உன் புருஷன் இப்படி வீடேறி வந்து காறி துப்பாத குறையா அசிங்கப்படுத்திட்டு போய்ட்டாருன்னு சொல்றேன். உனக்கு உன் கவலை தான் பெருசா போச்சா?…” என்று கேட்க,
“என்ன செய்ய சுயநலமான அண்ணனும், அண்ணியும் இருந்தா நானும் என்னை பத்தி மட்டும் தானே யோசிக்க முடியும்?…” என்றுவிட்டார் ஆனந்தி.
“உன் மேல, என் தங்கச்சின்னு நான் உயிரையே வச்சிருக்கேன்? நீ என்னன்னா எங்களை சுயநலம்ன்னு சொல்லி ஒத்தை வார்த்தைல என் மனசை உடைச்சிட்டியே?…” என்றார் குருமூர்த்தி ஆனந்தியிடம்.
“ஆமாண்ணே, இல்லைன்னு சொல்லுவீங்களா நீங்க?…”
“எனக்கு உனக்கப்பறம் தானம்மா என் குடும்பம். என்னை போய்…”
“அப்ப என்னை இந்த வயசுல என் புருஷன் வெளில போடின்னு சொன்னா, வச்சு பார்த்துப்பேன்னு சொல்றீங்களா?…” என்றார் ஆனந்தி உடனடியாக.
“என்ன? என்ன சொல்ற?…” என்று தடுமாறிய குருமூர்த்தியின் பேச்சில் ஆனந்திக்கு அழுகை தான் கூடியது.
இப்படி ஒரு உடன்பிறப்பை வைத்துக்கொண்டு தான் எல்லாம் மற்றவர்களிடம் வாய் திறந்து ஊர் நியாயம் பேசலாமா? என்று தான் தோன்றியது.
“நான் இருக்கேன், வாம்மான்னு சொல்ல வாய் வரலை உங்களுக்கு. அப்ப இருக்கற இடத்துல தான நான் என்னை பார்த்துக்கனும். மனோ பிறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் அவருக்கு நான் ஒரு சுமை தான். ஆனா ஒருநாள்ல சொல்லி காமிச்சதில்லை. பார்த்துக்க முடியலைன்னும் சலிச்சுக்கிட்டதில்ல….” என்ற ஆனந்தி,
“தப்பு முழுக்க என் மேல. இந்த விஷயத்தை அண்ணிக்கிட்ட சொன்னது முதல் தப்பு. அண்ணியை அந்த இடத்துல செண்பகம் கேட்கும்போது நான் பிரச்சனையை பெருசாக்க வேண்டாமேன்னு அண்ணியை கண்டிக்காம விட்டது ரெண்டாவது தப்பு. இப்படி இருக்கும்போது என் புருஷன் செஞ்சது தப்புன்னு நான் எப்படி சொல்லுவேன்?…” என்றார்.
பிரச்சனை எங்கோ ஆரம்பித்து எதிலோ முடிவதை போலிருந்தது குருமூர்த்திக்கு.
ஏற்கனவே ரிதுபர்ணாவை பேசி அண்ணாமலையை கோபப்படுத்தி அந்த பிரச்சனையை சமாளித்து அவரை மலையிறக்கும் முன் இத்தனை வருடங்களாகியிருக்க மீண்டும் முதலிலிருந்தா என்று கண்ணை கட்டியது.
இப்போது தங்கையும் தன்னிடம் பேச கண்டவருக்கு ஆனந்தியின் பரிவு கிடைக்காதென்று புரிந்துபோனது.
“கைல காசு பணம்ன்னு நீங்க பெருசா வாழறப்பவே நான் உங்களுக்கு பாரமா தெரியறேன். நான் பார்த்துக்கறேன்னு கூப்பிட மனசில்லை. இதுல என் மேல பாசமாம். வைங்கண்ணே…” என்று ஆனந்தி சொல்ல,
“நான் எவ்வளோ மனசொடிஞ்சு இருக்கேன்னு புரியாம பேசற ஆனந்தி. உன் மகன் என்னன்னா போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண போறேன்னு நிக்கறான் தெரியுமா? ஒரு தாய்மாமனை பார்த்து கேட்கவேண்டிய கேள்வியாமா இது?…” என்று பிரச்சனையை திசைமாற்ற நினைக்க,
“அவன்கிட்ட நீங்க என்ன சொன்னீங்களோ? சும்மா எல்லாம் என் பிள்ளை வார்த்தையை விடமாட்டான். நீங்க எதோ சொல்லியிருப்பீங்க. அவனும் பதிலுக்கு அவன் பேசியிருப்பான்…” என்றார் ஆனந்தி.
குருமூர்த்தி திகைத்துவிட்டார் மகனை பற்றிய தங்கையின் இந்த புரிதலான பேச்சில்.
ஆத்மாவிடம் அவன் அழைத்து பேசுகையில் அப்படித்தான் பேசவும் செய்திருந்தார் குருமூர்த்தி.
“அந்த மூணு பொம்பளைங்களையும் நான் கம்பி எண்ண வைக்கலைன்னா என் பேர் குருமூர்த்தி இல்லைடா. பொட்டக்கோழிங்க நாட்டாமையா பண்ணுதுங்க. என் பொண்டாட்டிய கை நீட்டி அடிக்காங்கன்னா எம்புட்டு திமிரு இருக்கனும்?…” என்று சொல்லி,
“அப்படித்தா பேசுவா அவ. நாதியத்ததுங்க ரெண்டுக்கும் என் பொண்டாட்டி எதுக்க நிக்கவே ஒரு தகுதி வேணும். அவ கூப்பிட்டு பேசினது பொல்லாப்பா போச்சா? இதை நான் சும்மா விடமாட்டேன்…” என்று ஆத்மாவிடமே அவர் எகிறி இருக்க,
“தாராளமா கம்ப்ளைண்ட் குடுங்க. இதோ இப்பவே நான் வரேன். பார்த்துடலாம். இதுக்கு மேலையும் நான் இதை சும்மா விட்டா நான் அந்த வீட்டு மனுஷன்றதுல அர்த்தமே இல்லை. போலீஸ் ஸ்டேஷன்ல பார்ப்போம்….” என்று சொல்லிய ஆத்மா,
“ரிது. பேக் எதுவும் பண்ணவேண்டாம். கிளம்பு, இப்பவே கரூர் போறோம்….” என்று குருமூர்த்தி இணைப்பில் இருக்கையிலேயே கூற, அவனின் கர்ஜனையான பேச்சில் வெலவெலத்து போனார்.
சென்னையில் இருந்துகொண்டே அவர்களை ஆட்டி வைத்தான் ஆத்மா. அவன் பேசுவான் தான். ஆனால் போலீஸ், கோர்ட் என்றெல்லாம் செல்வான் என நினைக்கவே இல்லை.
அதுவும் பெண் பிள்ளை விஷயம் என்பதாலும், அடித்தது செண்பகம் என்பதாலும் காவல் நிலையம் என்றால் யோசிப்பான் என நினைத்தார்.
சிறிதளவேணும் அவனை ஆட்டிவைக்க வேண்டும் என்னும் கீழ்புத்தியில் இப்போது தானே சிக்கிக்கொண்டு நின்றார் குருமூர்த்தி.
“என்னய்யா சத்தத்தையே காணும்?…” என ஆத்மா கேட்க,
“கண்ணா நான் உன் தாய்மாமா…” என குருமூர்த்தி எச்சரிப்பதை போல பேசினார்.
“தப்பு பண்ணின பொண்டாட்டியை கண்டிக்க துப்பில்லை. நீ பேசற? தாய்மாமாவா இருந்தா என்ன?…” என்றவன் அடுத்தவார்த்தை என்னவாக வரும் என்று தெரிந்து அதற்குள் முந்திக்கொண்டு,
“கண்ணா போதும். குடும்ப பிரச்சனை, பேசி தீர்த்துக்குவோம்…” என்றிருந்தார் அவனிடம்.
“நீ என் குடும்பமே இல்லைன்றேன். குடும்ப பிரச்சனையாம். மரியாதையா இப்பவே உன் வீட்டம்மா பேசினதுக்கு எங்க வீட்டு லேடீஸ்கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு. இல்லைன்னா நான் அங்க வந்து நிப்பேன்…” என்று அழைப்பை துடித்துவிட்டான் ஆத்மா.
அண்ணாமலை தன் வீடிருக்கும் திசை பக்கமே வரக்கூடாதென்று மிரட்டி சென்றிருக்க, ஆத்மா வந்து மன்னிப்பை கேள் என்றிருந்தான்.
இப்போது செய்வதறியாமல் வழக்கம்போல தங்கையிடம் விஷயத்தை கொண்டுசெல்ல அவர் பேச்சு வேறுவிதமாய் திரும்பிவிட குருமூர்த்தி திணறி போனார்.
“அவர் பேசினது தான் சரி. இனிமே இந்த பக்கம் வராதீங்க…” என ஆனந்தி கூறிவிட்டார்.
“அப்ப இந்த அண்ணனும், அவன் உறவும் வேண்டாமா உனக்கு?…” என்று நயமாக குருமூர்த்தி கேட்க,
“ஒவ்வொருதடவை பிரச்சனை நடக்கும் போதும் உறவுன்னா என்னன்னு எனக்கு இங்க இருக்கறவங்க புரிய வைக்கிறாங்க. எனக்கொன்னுன்னா நான் கூப்பிடாமலே நிப்பாங்க. அதுதான் உறவு. அவங்களுக்கு பெருசா நான் ஒண்ணுமே பண்ணினதில்லை. யாருக்கும் நின்னதில்லை…” என்ற ஆனந்தி,
“இவ்வளோ பிரச்சனைக்கு அப்பறமும் செண்பகம் வித்யாவை பேசினதுக்கு கொதிச்சு போனா. என் மருமக இடத்துலருந்து வித்யாவை பார்த்துக்கவேண்டிய நான் வேடிக்கை பார்த்ததோட இல்லாம செண்பகத்துக்கிட்ட போய் மூஞ்சியை காமிச்சேன். நீங்கல்லாம் உறவுன்னு பேசாதீங்க…” என்று போனை வைத்துவிட்டார் ஆனந்தி.
ஒவ்வொருமுறையும் எதையாவது செய்துவிட்டு அதன்பின்னர் அதனை எண்ணி யோசிப்பதும், வருந்துவதுமே தன் வாடிக்கையாகிவிட்டதே என்று நொந்துகொண்டார்.
அண்ணாமலை வரும்முன் இடையில் சென்று முருகேஸ்வரி வீட்டை எட்டி பார்த்தவர் உள்ளே செல்லவில்லை.
செண்பகமும் அவரின் வீட்டிற்குள் தான் இருந்தார். வித்யாவை பார்க்க செல்லவில்லை என்று புரிந்தது.
சபர்மதி வெளியே வந்து நிற்க கண்டவர் இன்னும் வேகமாய் அவளிடம் சென்றார்.
“வித்யா என்ன பன்றா? எதுவும் சொன்னாளா?…” என்று ஆனந்தி கேட்க,
“ஏன்? தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? உங்கண்ணிக்கு போன ரெண்டுபல்லு பத்தாதாமா? செண்பகம் சித்தியாங்காட்டி அறையோட விட்டாங்க. நானாக்க உச்சிமுடியோட விட்டிருப்பேன். இங்கிட்டு வந்துடாம இருக்க சொல்லுங்க. பொம்பளையா இது? நல்ல சொந்தக்காரங்க…” என கோபமாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் அவள்.
ஆனந்திக்கு கண்ணீர் மேலும் வர எதுவும் பேசாமல் மீண்டும் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
அவ்வப்போது ராணி தான் அங்கே செல்வதும், பார்த்துவிட்டு வருவதுமாக இருக்க, இதோ அண்ணாமலையின் கார் சீறிக்கொண்டு வாசலில் நின்றது.
ஜன்னலில் இருந்து பார்க்கும் பொழுதே அவர் தோளில் கிடந்த துண்டை கையில் பிடித்தபடி வரும் வேகத்தில் ஜன்னலோடு ஒண்டிக்கொண்டார் ஆனந்தி.
பயத்தில் உடலெல்லாம் நடுங்க அவரே தன்னை அழைக்கட்டும் என்று நினைத்தவரின் எண்ணத்தை மெய்யாக்காமல் அந்த அறைக்குள் புயல்போல் நுழைந்தவர், நுழைந்த வேகத்தில் ஆனந்தியின் இரு கன்னங்களிலும் தன் கைத்தடத்தை அழுத்தமாய் பதித்துவிட்டார்.
திருமணம் முடிந்து இத்தனை வருடத்தில் அவர் மனைவியை கை நீட்டியதே இல்லை.
சொந்த தங்கை மகள் ரிதுபர்ணாவின் பிரச்சனையின் போதும் கூட எச்சரிக்கை செய்தாரே தவிர கை நீட்டவில்லை.
இப்போதும் நோகும்படி பேச போகிறார். வலிக்கும்படி என்னவோ சொல்ல போகிறார் என்று நினைத்திருக்க இந்த அறைகள் அவரை நிலைகுலைய செய்திருந்தது.
நிற்கமுடியாமல் உடல் தள்ளாட தலை சுற்றிக்கொண்டு வர தடுமாறி கட்டிலில் சாய்ந்துவிட்டார் ஆனந்தி.
“எங்க போய் சேர்ந்துடுவியோன்னு ரெண்டு அறையோட விடறேன். பொம்பளையை அடிக்கிறவன்லாம் பூமிலையே வாழ தகுதியில்லாதவன்னு நினைக்கிறவன் நான். இப்ப என்னை தகுதியிழக்க செஞ்சிட்டேல? இன்னும் என்னத்த செய்ய போற?…” என்றார் அவ்வளவு ஆவேசமாய்.
“ஒவ்வொருவாட்டியும் நான் சொல்றது தான், நடத்தையில, வாழற வாழ்க்கையில மட்டும் ஒழுக்கத்தை பார்க்கமாட்டேன். பார்வையில, பேச்சுல இருக்கனும். இன்னைக்கு செண்பகம் செஞ்சதை நீ செஞ்சிருந்தேன்னா உன்னை கட்டினதுக்கு பெருமைப்பட்டிருப்பேன். ஆனா என்னை முச்சந்தில நிக்கவச்சு செருப்பால அடிச்சிட்ட நீ…” என்றார் கோபத்துடன்.
“சூதுவாது தெரியாத சின்ன பிள்ளைட்ட பேசற பேச்சா உன் அண்ணி பேசினது? வெக்கமாயில்ல? தரத்தை பத்தி உன் அண்ணன் பேசறானே? அவன் மட்டும் என்ன ஒழுங்கோ? ரிதுவை அத்து விட்டுட்டு அவன் மகளை கட்டி வைக்க நினைச்சவங்க தானே உன் அண்ணனும், அண்ணியும். அந்த புத்தி தான் இப்படி பேச சொல்லுது. இவன் யாருக்கு யார் சமம்ன்னு எல்லாம் பேசலாமா?…”