“போன் வந்திருக்குமே உன் அண்ணன்கிட்ட இருந்து. குடும்பத்த கெடுத்த பைய. புருஷனும், பொண்டாட்டியும் இதே சோலியா இருந்தா என் வீட்டுல அதுக்கு இடமில்ல…” என்றவர்,
“இங்காரு, இனிமே அதுங்க சங்காத்தமே கூடாது. இந்த வீட்டுப்பக்கமே வர கூடாது. உள்ள விடாதன்னு நான் வாட்ச்மேன்கிட்ட சொல்றதும் சொல்லாததும் உன் கையில தான் இருக்கு. பார்த்துக்கோ…” என்று சொல்ல,
“அண்ணி இப்படி பேசுவாங்கன்னு நான் நினைக்கலைங்க…” என்றார் ஆனந்தி அழுகையுடன்.
“உன் வாய்ல இருந்து வார்த்தை அவங்க காதுக்கு போகாம தானா பேசுனாங்களாக்கும்? இனிமே என்கிட்ட எதாச்சும் பேசின. அவ்வளோ தான்…” என்றவர் விறுவிறுவென வெளியேறினார்.
இருந்தால் இன்னும் அடித்து துவம்சம் பண்ணிவிடுவோமோ என்னும் அளவிற்கு மனைவியின் மேல் அவ்வளவு ஆத்திரம்.
‘இவர் சொல்லாமல் இருந்திருந்தால் இத்தனை வருத்தம் அவசியமா?’ என யோசித்தபடி தளர்வுடன் ஹாலில் அமர்ந்திருந்தவரை சபர்மதி தேடி வந்தாள்.
ஆனந்தியும் இதனை கேட்டுக்கொண்டுதான் இருந்தார். ஆனால் வெளியே செல்லமுடியவில்லை.
இரண்டு கன்னங்களும் தடித்து சிவந்து வீங்கிப்போய் இருந்தது. திருமணமாகி இத்தனை வருடங்களுக்கு பின் இந்த வயதில் கணவரின் கையில் அடி வாங்கியதை காண்பிக்க முடியுமா?
ஏற்கனவே செய்த தவறின் வீரியத்தில் குற்றவுணர்வு. இப்போது இந்த அவமானத்தில் தலைகாட்டமுடியவில்லை.
எல்லாவற்றையும் விட இன்னும் மகன் அழைத்து என்ன ஏதென்று பேசவில்லை, கேட்கவும் இல்லை.
அவனின் இந்த தன்மையில் உள்வாங்கிய கடலின் அமைதியை போல் ஒரு உருவகம் அவருள்.
இப்பொது சபர்மதி சொல்ல பிரச்சனை இன்னும் பெரிதாகிறதே என்று பயந்துகொண்டே நின்றார்.
அண்ணாமலையும், சபர்மதியும் வேகமாய் முருகேஸ்வரி வீட்டை நோக்கி செல்ல பரத்தும் வந்துவிட்டான் அந்தநேரம்.
ஏற்கனவே விஷயம் கேள்விப்பட்டிருந்தாலும் கம்பெனியை விட்டு வரமுடியவில்லை அவனால்.
அவனுக்குமே ஆனந்தியும், அவரின் அண்ணியும் வித்யாவை பேசியதெல்லாம் ஒப்பவே இல்லை.
செண்பகம் செய்தது மிக சரி என்றுதான் தோன்றியது. அதேநேரம் முரளி வந்துகொண்டிருப்பதே கேள்விப்பட்டவன் கைகள் தன்னைப்போல் தன் கன்னத்தை தடவிக்கொண்டது.
தனக்கே இத்தனை அடி என்றால் அவர்களை அத்தனை சுலபத்தில் விட்டுவிடுவானா என்று தான் தோன்றியது.
பரத்திற்கு தோன்றிய இந்த விஷயம் வேறு யாரின் எண்ணத்திலும் தோன்றவில்லை.
அப்படியொரு நிகழ்வு நடந்த பின்னர் தான் அனைவரும் ஸ்தம்பிக்க, முரளி கொண்ட நேசத்தின் ஆழத்தில் வித்யா அவனை கண்டு மிரண்டு விலகும் எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்திக்கொண்டாள்.
அண்ணாமலை செல்லவும் தானும் அவருடன் சேர்ந்து செல்ல அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டு வாசல்ப்படியை மிதிக்க நினைத்தவருக்கு முடியவில்லை.
எத்தனை வருடங்கள்? தங்கை தமயந்தியுடனான உறவு முறிவிற்கு முன் எப்போதாவது செல்வதுண்டு.
அதன்பின் ரிதுபர்ணா வளர்ந்து, அவளை மருமகளாக முழுமையாய் ஏற்றுக்கொண்ட பின்னரும் கூட அந்த வீட்டினுள் அவர் நுழையவில்லை.
“ஓஹோ, நான்தான் இம்புட்டு நாளும் சின்ன புள்ளைன்னு நினைச்சுட்டேன். பெரியபெரிய முடிவெல்லாம் எடுக்குது. சரித்தான். அப்படித்தான் இருக்கனும்…” என்று வேதனையாய் சிரித்துக்கொண்டவர் பின் சத்தமாய்,
“வித்யா மாமா வந்திருக்கேன். நீ வெளில வருவியா? இல்ல உன்னை தேடி மாமா உள்ள வரனுமா தாயி?…” என்று சொல்ல அனைவருமே கண்ணீரும், நெகிழ்ச்சியுமாய் பார்த்தாலும் மனதினோரம் அண்ணாமலை நின்ற விதத்தில் அத்தனை ரணம்.
அவ்வளவு தளர்ந்திருந்தார் இதில். மகன் தான் இருக்கும் நம்பிக்கையில் தானே இத்தனை பிரச்சனையின் பின்னும் அவர்களை விட்டு சென்றது.
சொல்லால் இல்லையென்றாலும் பார்வையால் உணர்த்தி சென்றாளே தன் மருமகள்.
அனைத்தையும் இப்படி உடைத்துவிட்டாரே தன் மனைவி என்று உள்ளுக்குள் வெகுவாய் நொடிந்து போயிருந்தார்.
அவர் அடுத்து அழைக்கும் முன் கண்ணீரை துடைத்துக்கொண்டே தேம்பியபடி வந்து நின்ற வித்யா அழுகையை அடக்க போராட,
நடுங்கிக்கொண்டே வந்து நின்றவளின் உச்சந்தலையில் அண்ணாமலை கை வைத்ததும், பெரும் கேவலுடன் அவரின் தோள் சாய்ந்தாள் வித்யா.
இதுவரை தகப்பனின் அரவணைப்பு எப்படியிருக்கும் என்பதை உணராதவளுக்கு அதனை உணர்த்திக்கொண்டிருந்தார் அண்ணாமலை.
வெடித்து அழுதவளின் கதறல் அனைவரின் நெஞ்சையும் அறுத்தது. எதையும் சொல்லமுடியாமல் என்னென்னவோ வித்யா சொல்ல முயன்று வாயசைக்க புரியாத அந்த மொழியில் அனைவருமே குற்றுயிராகினர்.
‘அழாதே’ என்று சொல்லவும் திராணியற்று தான் அண்ணாமலை இறுகிப்போனார் அந்த கதறலில்.
கல்நெஞ்சையும் கரையவைக்கும் தருணம், அனைவரின் கண்ணிலும் நீர் ததும்ப பரத்துமே மனம் பிசைய பார்த்து நின்றான்.
“வா மாமா வீட்டுக்கு போவோம்…” என்று வித்யாவை அழைத்து செல்ல அங்கே யாரின் பேச்சுக்களும் எடுபடவில்லை.
அவளிடம் இத்தனை ஆணித்தரமான முடிவையும், பிடிவாதத்தையும் அதுவரை காணாதவர்கள் பேச்சற்று பார்த்தனர்.
எதுவும் செய்யமுடியவில்லை. செய்வதறியாமல் அவர்கள் கையை பிசைந்துகொண்டு அவளின் முடிவிற்கு தான் செல்லும்படியானது.
அண்ணாமலையால் அதற்குமேல் பொறுக்கமுடியவில்லை. தன் மனதும் ஆறாதென நினைத்தவர்,
“நீ உன் மகன் வீட்டுக்கு புறப்படு…” என்றார் ஆனந்தியை.
“என்ன? அங்கையா?…” ஆனந்தி பின்வாங்க,
“பின்ன, உன் அண்ணன் வீட்டுக்கா? போறதுன்னா அப்படியே போய்டு…” என்று பல்லை கடித்துக்கொண்டு சொல்ல,
“இத்தனை நாள் என்னை நீ தான் பார்த்துக்கிட்டியா? கிளம்புன்னா கிளம்பு…” என்று சொல்ல,
“என்னங்க நீங்க நான் இல்லாம…” என்ற ஆனந்தியிடம்,
“இங்க என்ன மனுஷங்களே இல்லையா? என் தங்கச்சிங்க இருக்காங்க. செண்பகத்துட்ட சொன்னா செஞ்சுட்டு போறா. அதுக்குமேல இங்க தான் ராணி இருக்காளே? அதெல்லாம் ராணி பார்த்துப்பா…” என்று சொல்ல விக்கித்துப்போனார் ஆனந்தி.
இத்தனை நாள் தான் அவரை பார்த்துக்கொள்ளவில்லை என்பது நிஜம் தான். ஆனால் இப்படி என்றுமே சொல்லியதோ, பேசியதோ இல்லையே?
எல்லாவற்றுக்கும் மேல், ‘தங்கச்சிங்க’ என்ற வார்த்தை முருகேஸ்வரியையும் சேர்த்தா என்னும் அதிர்ச்சியும், ‘ராணி பார்த்துப்பா’ என்ற பேச்சும் அவரை நிலைகுலைய செய்தது.
‘ஒரு வேலைக்காரி பார்த்துப்பான்னு சொல்றாரே?’ என்று முற்றிலும் சிதறி போனார் ஆனந்தி.
எத்தனை இருந்தாலும் தன் கணவன் தன்னை தன் கண் பார்வையில் வைத்துக்கொள்வதில் அவ்வளவு கர்வம் இருந்தது ஆனந்திக்கு.
இப்போது அந்த கர்வம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாக மனம் வெதும்ப மகனிடம் செல்ல கிளம்பினார்.
அங்கே அடுத்து என்ன இருக்கிறதோ என்று பயந்தபடி சென்னையை நோக்கி. அதற்கு முன்பே முரளி என்னும் புயல் சீற்றத்தை கடக்க வேண்டியுள்ளதையும் மறந்து போனார் ஆனந்தி.