காரில் ஏறியதில் இருந்து ஆனந்தியிடம் ஒற்றை வார்த்தை பேசவில்லை முரளி.
ஆனால் அவனின் பார்வை அவ்வப்போது அவரை அழுத்தமாய் பார்ப்பதும், துளைப்பதுமாக இருக்க என்னவோ சஞ்சலமாய் உணர்ந்தார்.
அவராக இருமுறை முரளியை அழைத்த பொழுதும் கூட அவரிடம் வாய் திறந்தான் இல்லை.
உடன் வித்யாவும் இருக்க ஆனந்தி அதற்குமேல் அழைக்க முயலாமல் மௌனமாய் இருந்துகொண்டார்.
அவரின் அருகில் தான் வித்யா அமர்ந்திருந்தாள். ஆனால் அவளும் அவரின் முகம் காணவில்லை.
பொம்மை போல் வாகனத்தில் அமர்ந்தவள் தான். கண்களை மூடிக்கொண்டு யாரையும் பார்க்க விரும்பாததை போல இருக்கையில் சாய்ந்துகொண்டாள்.
விழி திறவாவிடினும் முரளியின் கவனத்தை அவளால் சந்தேகமின்றி உணரமுடிந்தது.
முதல்நாள் இரவே ஆத்மாவும், ரிதுவும் அழைத்து முருகேஸ்வரியிடம் பேச பெருங்குரலெடுத்து மன்றாட ஆரம்பித்துவிட்டார் முருகேஸ்வரி.
“என் புள்ளை இல்லாம இங்கின நான் மட்டும் என்ன செய்யிவேன் கண்ணு? என்னியவும் கூப்பிட்டுக்க ஆத்தா…” என்று ரிதுவிடம் கெஞ்சியவர், ஆத்மாவிடம் சத்தம் உயர்த்தாமல் விசும்பிக்கொண்டே கேட்டார்.
“நான் பார்த்துக்கறேன் சித்தி. வித்யா கொஞ்சம் நார்மலாகவும் நீங்களும் வாங்க…” என்ற ரிதுபர்ணாவிடம் கூட வித்யா பேசவில்லை.
யாரிடமும் பேசாமல் உடைகளை இயந்திரமாய் எடுத்து வைத்து கிளம்ப தயார்நிலையில் வைத்துக்கொண்டாள்.
உறங்கும் பொழுது முருகேஸ்வரியின் அருகில் வந்து அவரை அணைத்துக்கொண்டு படுத்துக்கொள்ள, மகளை வருடியபடியே தானும் உறக்கம் தொலைத்திருந்தார் முருகேஸ்வரி.
இப்படியாக கிளம்பி ஒருவழியாய் மகளை அனுப்பி வைத்துவிட்டு தாமரைக்குளம் அருகிலேயே வெளிவாசல் பார்த்து அமர்ந்துகொண்டார் முருகேஸ்வரி.
“எம்புட்டுநேரம் இப்படியே இருப்ப முருகேஸு. கொஞ்சநாளைக்கு வெறுக்குன்னு இருக்கும். அப்பறம் சரியா போகும்…” என விசாலாட்சி அவரை தனியே விடவே இல்லை.
கிளம்புகையில் கண்ணீருடன் அழுகையை அடக்கிக்கொண்டு ஆதரவற்றவர் போல் நின்ற தன் தாயை நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் வெடித்துவிடும் போலானது வித்யாவிற்கு.
சொந்தம் என்று சொல்லி வளர்த்ததை விட இவர்களிடம் நன்றியுடன் தான் இருக்கவேண்டும் என்று நன்றியை ஊட்டி வளர்த்திருக்க எங்கிருந்து அந்த உணர்வை தாண்டி வரமுடியுமாம்?
நன்றியுணர்வை தாண்டிய ஒரு பார்வை என்றால் அன்பாய், பாசமாய் பார்த்துக்கொள்வது.
அதையும் மீறி எவ்வித எண்ணங்களுக்கும் அவளிடம் இடமில்லையே? எதைகொண்டு வளர்த்தார்களோ அதுவாகவே அவள் வளர்ந்து நிற்க எதையும் ஏற்கும் மனநிலை இல்லாது தடுமாறி போயிருந்தாள் வித்யா.
எத்தனைநேரம் கண்களை மூடியிருந்தாளோ திடீரென்று கார் நின்றதும் விழி திறக்க ஏதோ ஒரு வீட்டின் முன் நின்றிருந்தது அவர்களின் வாகனம்.
கேள்வியாய் ஒரு பார்வை கூட அவனிடம் செலுத்தாமல் வெளியே ஆராயும் பார்வை பார்த்தவளை,
“திவ்யா…” என அழைத்தான் முரளி.
திடுக்கிட்டு திரும்பியவள் திரும்பிய வேகத்தில் புருவங்களை சுருக்கி அவனின் அழைப்பை ஏற்காத பாவனையை காண்பித்தாள்.
“கார்லயே இரு. ஒரு சின்ன வேலை. முடிச்சிட்டு வந்திடறேன்…” என்று சொல்லியவன் ஆனந்தியை திரும்பி பார்த்தான்.
“இறங்குங்கன்னு சொன்னா தான் இறங்குவீங்களா பெரிம்மா?…” என்றவனின் குரலிலேயே ஆனந்திக்கு பயம் பிடித்தது.
இன்னும் இந்த பிரச்சனை முடியவில்லையோ என்று தடதடக்கும் நெஞ்சை பிடித்தபடி மௌனமாய் இறங்கி நின்றார்.
வித்யாவிற்கு அது குருமூர்த்தியின் வீடு என்பது கூட தெரியாது. வேறு என்னவோ என்பதை போல கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
அவளின் நினைவுகள் இங்கிருந்தால் தானே? முரளியை விட்டு வெகுதூரம் சென்றுவிடவேண்டும் என்ற யோசனை மட்டுமே அவளின் மனம் முழுவதும் வியாப்பித்திருந்தது.
‘காதலாம். பிதற்றல், என்னவோ ஆகிவிட்டது இவனுக்கு’ என்னும் வகையான யோசனைகளில் ஆனந்தியை கூட அவள் கவனிக்கவில்லை.
கைகளை ஊன்றி நெற்றியை கையில் தாங்கிக்கொண்டவளை ஒருகணம் ஆதுரமாய் பார்த்துவிட்டு முகம் இறுக கீழே இறங்கினான் முரளி.
“முரளி இப்ப எதுக்குப்பா?…” என்ற ஆனந்தி, திரும்பி கேட்டில் நின்றிருந்த வாட்ச்மேனை பார்த்தார்.
அவர் இவருக்கு சல்யூட் வைத்துவிட்டு அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்துகொள்ள இப்படி இங்கே கொண்டுவருவதற்கு தான் இத்தனை அமைதியோ என்று கெஞ்சுதலாய் நின்றார் ஆனந்தி.
“முன்னாடி போங்க…” என்று அவருடன் இரண்டடி பின்னால் நடந்து சென்றான் முரளி.
வீட்டினுள் நுழையவுமே ஹாலில் அமர்ந்திருந்த குருமூர்த்தி மனைவி ஆனந்தியை பார்த்ததும் அத்தனை வேகமாய் எழுந்து நின்று வீங்கிய கன்னத்தை ஒரு கையால் பற்றிக்கொண்டு கத்த உள்ளிருந்து வந்துவிட்டார் குருமூர்த்தி.
“வாம்மா ஆனந்தி…” என்று முதலில் அவரை மட்டுமே பார்த்தவர் மனைவியின் சத்தத்தில் திரும்பி முறைத்தார்.
என்னவோ தன் தங்கை சமாதானம் பேச வந்திருப்பதாக நினைத்தவருக்கு அவ்வளவு நிம்மதி.
எங்கே அப்பாவும், பிள்ளையுமாக தன்னை ஒருவழி செய்துவிடுவார்களோ என்று நினைத்திருந்தவருக்கு, மறுநாளே தங்கையை அனுப்பும் அளவிற்கு தணிந்துவிட்டாரா தங்கையின் கணவர் என்று ஒருபுறம் யோசனையாகவும் இருந்தது.
“அவ கிடக்கறா விடும்மா. பல்லு உடைஞ்சிடுச்சுல. அதான் கன்னமெல்லாம் வீக்கம். உடைஞ்ச பல்லு வேற உள்ள வேரோட பாதி தொடுக்கிட்டிருக்கு. காயம் ஆறனுமாம்…” என ஆனந்தி கேட்காமலே குருமூர்த்தி சொல்ல முரளியும் உள்ளே நுழைந்தான்.
முரளியை பார்த்ததுமே முகம் மாறியது குருமூர்த்திக்கு. இவன் எதற்கு இங்கே என்ற யோசனையுடன் தன் தங்கையையும் பார்த்தவர்,
“என்ன விஷயம்?…” என்றார் கோபமாக.
“ஏன் விஷயம் தெரியாதா என்ன? நான் எதுக்கு வந்திருப்பேன்னு கூடவா தெரியாது?…” என்ற முரளியின் எள்ளலான பேச்சில்,
“ஓஹ் அந்த நாதியத்தவளுக்கு ஏந்துக்கிட்டு நியாயம் கேட்க புறப்பட்டு வந்திருக்கியோ? அவளை பத்தி என் வீட்டுல பேச நான் அனுமதிக்கமாட்டேன். வெளில போடா…” என்றார் குருமூர்த்தி ஆவேசமாய்.
“ஆனா எங்க வீட்டுக்கே வந்து உங்க வீட்டம்மா என் வீட்டம்மாவை பேசறது மட்டும் எந்தவகையில நியாயமாம்?…” என்றான் இன்னும் குருமூர்த்தியை நெருங்கி.
அவனை முடிந்தமட்டும் முறைத்த குருமூர்த்திக்கு கோபம் எல்லை கடந்தது. முரளியை விலக்கிவிட்டு ஆனந்தியிடம் சென்ற குருமூர்த்தி,
“என்ன ஆனந்தி, இவனை என்ன அடியாள் மாதிரி கூட்டிட்டு வந்திருக்க? உன் புருஷன் அனுப்பினாராக்கும் போய் கேளுன்னு….” என்றவர் இளக்காரமாக முரளியை பார்த்து,
“இன்னொருவார்த்தை திவ்யாவை பத்தி எதாச்சும் பேசின…” என்று நாக்கை மடித்து, கண்களால் மிரட்டியவன்,
“அவ என் பொண்டாட்டிய்யா, என் பொண்டாட்டிக்கு முத்தம் குடுக்கறதென்ன? என்னை மொத்தமாவும் குடுப்பேன். உனக்கேன்ய்யா எரியுது? தொலைச்சுக்கட்டிருவேன் பார்த்துக்கோ…” என்றிருந்தான் முரளி.
“முரளி, விடுப்பா அவங்களை. விடு…” என்று ஆனந்தியும், குருமூர்த்தி மனைவியும் அவனின் கையை பிடித்து கெஞ்ச,
“எல்லாத்துக்கும் காரணம் நீங்க. உங்களை நான் எதுவும் பேசப்போறதில்லை. தள்ளி போங்க…” என்றான் ஆக்ரோஷமாய்.
அத்தனை வேகமும், ஆத்திரமும் அவனின் முகத்தில் ஜுவாலையாய் பற்றி எரிய ஆனந்தி பின்வாங்கினார்.
“நீயெல்லாம் ஒரு மனுஷனா? எவ்வளோ பேச்சு பேசிருக்க? நீ கெட்டகேட்டுக்கு உனக்கு மரியாதை வேறையா?…” என்று சொல்லி அவரை கீழ இறக்கிவிட தொண்டையை பிடித்துக்கொண்டு செருமியவர் அப்போதும் நில்லாமல்,
“கூப்பிடேன். நானும் கூப்பிடறேன். என்னதான் நீ கேஸ் குடுக்கன்னு பார்ப்போமே?…” என்று இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு முரளி சொல்ல, சற்றுநேரத்தில் தெரிந்துவிட்ட எமனின் நிழல் கண்டு குருமூர்த்தியின் கண்களில் கலங்கி நீர் நிரம்பிவிட்டது.
“என்னாச்சு? என்னம்மா?…” என்று மாடியிலிருந்து ஒரு பெண் ஓடி வருவது தெரிந்தது.
குருமூர்த்தியின் மகளை கண்டு ஆனந்தியும், முரளியும் திரும்பி பார்க்க வந்தவள் தகப்பனை பார்த்தாள்.
“என்னம்மா?…” என்று தாயிடம் கேட்டுக்கொண்டே ஆனந்தியை பார்க்க,
“இங்க வாம்மா…” என்றான் முரளி.
இதற்கு முன்புமே குடும்ப விழாக்களில் அவனை அவள் பார்த்திருந்ததால் பெரிதாய் எவ்வித அறிமுகமும் தேவை இருக்கவில்லை.
“சொல்லுங்கத்தான்…” என்றாள் வந்ததுமே உறவு முறையான அழைப்பில்.
“நாங்க எதுக்கு வந்திருக்கோம்ன்னு தெரியுமா?…” என்று கேட்க ஓரளவு அவளுக்குமே என்னவோ பிரச்சனை என்று புரிந்திருந்தது.
தாய் தந்தை இருவருமே சொல்லியிருக்கவில்லை. ஆத்மாவின் அழைப்பில் அவனுடன் தான் பிரச்சனை என்று நினைத்திருந்தாள்.
மீண்டும் ரிதுபர்ணாவை தன் பெற்றோர் பேசி அதனால் என்னவோ பிரச்சனையோ என்று தான் நினைத்திருக்க முரளி வந்திருக்க கண்டு யோசனையானாள்.
“என்னய்யா உன் பொண்ணுக்கிட்ட சொல்லிடவா?…” என்று முரளி படுநக்கலாக கேட்டான் குருமூர்த்தியிடம்.
“அத்தான், எங்கப்பாவை மரியாதையா பேசுங்க….” உடனே சுள்ளென்று வந்தது அவளிடமிருந்து வார்த்தை.
“ஓஹ், ரொம்ப மரியாதை தெரிஞ்சவங்க போல? அப்படின்னா என்னன்னு உங்கப்பாம்மா சொல்லிக்குடுத்து வளர்த்திருக்காங்களா…” என்று கோபமாய் சத்தமிட்டு கேட்டவன் கேள்வியில் திடுக்கிட்டு தாயை திரும்பி பார்த்தாள் அப்பெண்.