“இப்போ கேளு உன் அம்மாக்கிட்ட, நேத்து எங்க வீட்டுக்கு வந்து அவளை என்ன பேசினாங்கன்னு…” என்று சொல்ல,
“என்னம்மா?…” என்றாள் அப்பெண் தன் தாயிடம்.
“உன் அத்தையும் அங்க தான் இருந்தாங்க. வேணும்னா அவங்களை சொல்ல சொல்லேன்….” என்றவன் ஆனந்தியையும் பார்க்க அவர் தலையை உயர்த்தவே இல்லை.
“என்னாச்சுன்னு சொல்லுங்களேன்…” என்று அவள் மாற்றி மாற்றி கேட்க, வாயடைத்து போய் பார்த்தனர் அவள் பெற்றோர்.
“சொந்த பொண்ணுக்கிட்ட கூட சொல்ல முடியலையா? கூசுதோ?…” என்றவன்,
“நேத்திக்கு இதெல்லாம் ஒருவிஷயமா, இப்ப நான் என்ன பேசிட்டேன்னு நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு கேட்டீங்களாம்? என் வீட்டுல இன்னொரு பொண்ணை பேசினப்போ சின்ன விஷயமா தெரிஞ்சது இப்போ சொந்த பொண்ணுக்கிட்ட இதைத்தான் பேசினேன்னு சொல்ல சொன்னா சொல்லக்கூடாத விஷயமாவும், அசிங்கமாவும் தெரியுதோ?…” என்றான் இகழ்ச்சியாய்.
“என்னம்மா? என்ன பேசினீங்க? ஏன் இப்படி பன்றீங்க?…” என்று குருமூர்த்தி மகள் அழ,
தன் மகளிடம் எப்படி சொல்லமுடியும் அதையெல்லாம் என்று தலைகுனிந்து நிற்க,
“பேசுங்க. நேத்து வாய் கிழிய நீங்க பேசினது எதுவும் தப்பே இல்லைன்னு சொன்னீங்க தானே? இப்ப உங்க பொண்ணுக்கிட்ட சொல்லுங்க. எங்கம்மா எதுக்கு அடிச்சாங்கன்னும் சேர்த்து சொல்லுங்க…” என்று முரளி கூற குருமூர்த்திக்கு கோபமான கோபம்.
“வெளில போடா…” என்றார் கையை நீட்டி.
“வாயை மூடலை, வாய்லையே மிதிப்பேன். நீ என் அண்ணனுக்கு தான் தாய்மாமன். எனக்கு நீ யாருமே இல்லை. புரியுதா?…” என்று குருமூர்த்தி மீது பாயவிருந்தவனை பிடித்துக்கொண்டார் ஆனந்தி.
“அண்ணன் பாசம் தடுக்குதோ பெரிம்மா? இவ்வளோ பதறி பிடிக்கறீங்க? அங்க உங்க பார்வையில வளர்ந்த பொண்ணு மட்டும் யாரோவா? எத்தனை பார்த்திருப்பா உங்களுக்கு? பாசமோ, பரிவோ தான் இல்லை. சின்ன பொண்ணுன்ற மனுஷ தன்மையும், இரக்கமும் கூட இல்லைல?…” என்றவன்,
“யாருன்னே தெரியாத பிள்ளையை யாராச்சும் அப்படி பேசினாலே நமக்கு ரத்தம் கொதிக்கும் தானே? அப்படி இருக்கும்போது எப்படி இவங்களை பேசவிட்டீங்க நீங்க? உங்கமேல எவ்வளோ மதிப்பு வச்சிருந்தேன்…” என்றான் வருத்தமும், ஆதங்கமுமாய்.
“முரளி…” என்று அவர் என்னவோ சொல்ல வர,
“ம்ஹூம், உங்ககிட்ட நான் இதுவிஷயமா பேசவே கூடாதுன்னு தான் இருக்கேன். தெரியாம, சந்தர்ப்பத்தால நடந்தா விளக்கம் கேட்கலாம். யார் என்ன செஞ்சிடுவாங்கன்ற தைரியத்துல நீங்க தெரிஞ்சே வேடிக்கை பார்த்திருக்கும்போது இப்ப என்ன சொல்ல வந்தாலும் அதை என் மனசு ஏத்துக்காது…” என்றான் அவரிடம்.
குருமூர்த்தியின் பெண் முரளியை சஞ்சலத்துடன் பார்த்துக்கொண்டிருக்க தன் முகத்தை துடைத்த முரளி,
“இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். இதுக்கு மேல பேசின, ம்ஹூம், இருப்ப. ஆனா பேசமாட்ட. புரியுதா? அவளுக்காக நான் என்னவேணா செய்வேன். உன்னை என்னவும் செஞ்சிட போறேன்….” என்று சொல்ல,
“வித்யா கார்ல தனியா இருக்காப்பா…” என்றார் ஆனந்தி எதை சொன்னால் அவன் மனம் இறங்குவான் என்று புரிந்து.
“என்ன அவளையும் இங்க கூட்டிட்டு வந்திருக்கியா?…” என்று தடுமாறி குருமூர்த்தி எழ பார்க்க,
“அடிங், எட்டிக்கிட்டு மிதிச்சேன்னு வை…” என்றவன்,
“இந்த வீட்டுல கால் வச்ச பாவத்தை வேற நான் எங்க போய் கழுவன்னு இருக்கேன். இதுல உன் வீட்டுல அவ காலடி வைக்க விடுவேனா? என் வொய்ப் என் கார்ல தான் இருக்கா. அவ காலடி பதிக்கிற அளவுக்கு இந்த வீடும், இந்த ஜென்மங்களும் தகுதியானவங்க இல்லை…” என்று குருமூர்த்தியை ஒன்றுமே இல்லாது செய்துவிட்டான்.
“இனிமேலும் நான் பெரிய பருப்பு. என்னை எவனும் தொடமுடியாது, வேக வைக்க முடியாதுன்னு காலரை தூக்கிட்டு நின்ன, அவிச்சு கடைஞ்சிருவேன். ஊர் பக்கம் தலைகாட்டாம இரு…” என்று சொல்லிய முரளி,
“என்ன பெரிம்மா, இருந்து உங்க அண்ணனை ஆறுதல் படுத்திட்டு அப்பறமா வரீங்களா?…” என்று கேட்க, ஏற்கனவே மிரண்டிருந்தவருக்கு காய்ச்சலே கண்டுவிட்டது முரளி எடுத்திருந்த அவதாரத்தில்.
எதுவும் சொல்லாமல் விறுவிறுவென்று வெளியேறிவிட்டார் ஆனந்தி. முரளி அங்கிருந்தவர்கள் அனைவரையும் சொடுக்கிட்டுவிட்டு எச்சரித்துவிட்டு வெளியே வர வித்யா இப்போது காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தாள்.
பின்னிருக்கையில் ஆனந்தியை காணாமல் முரளி எட்டி பார்க்க அவர் நடுங்கியபடி படுத்தேவிட்டார்.
எப்போதும் முகத்தில் உறைந்திருக்கும் புன்னகையும் சாந்தமுமாய் வலம் வருபவனிடம் எவ்வளவு முரட்டுத்தனமும், ஆக்ரோஷமும் என்று அரண்டிருந்தார்.
எத்தனையோ நாட்கள் முரளியை போல் தன் மகன் ஆத்மகண்ணனும் அமைதியின் வடிவாய், புன்னகை முகமாய், சாந்தமே உருவாய் இருக்க கூடாதா என்று நினைத்ததுண்டு.
இப்போது முரளியின் இன்னொரு பக்கம் கண்டு, அதுவும் வித்யாவுக்காக என்னவும் செய்வேன் என்று சொல்லிய பொழுது அவன் முகத்தில் அவர் கண்ட கடினத்தில் அதிர்ந்துவிட்டார்.
அவர் வெளியே வந்தவேகத்தில் வித்யாவும் முன்னே அமர்ந்திருக்க பின்னிருக்கையில் சென்று படுத்துவிட்டார்.
எங்கே விழித்திருந்தால் மீண்டும் முரளி தன்னை காய்ச்சிவிடுவானோ என்று பயத்தில்.
தேவையில்லாமல் எதையோ பேச ஆரம்பித்து இதனை உளறி இத்தனை தூரம் கலவரத்தை இழுத்துவிட்டுக்கொண்ட தன் மீதே அத்தனை பட்சாதாபம்.
யாரும் தனக்கு இரங்க போவதில்லை என நினைத்து நினைத்தே தனக்கு தானே அனுதாபம் கொண்டார்.
அவன்பக்கம் பார்வையை திருப்பாமல் வெறித்த விழிகளுடன், வியர்த்து வடியும் முகத்துடன் அமர்ந்திருந்த வித்யாவின் உடலில் வெளிப்படையான நடுக்கம்.
அதுவும் அவள் கையிலிருந்த தன் கைப்பேசியை பார்த்தவனுக்கு புரிந்துபோனது.
காரை கிளப்பியவன் பத்துநிமிடங்களுக்கு எதுவும் பேசவில்லை. அவளாய் பதட்டம் தணிந்து போனை தருவாளா என்று பார்க்க அவன் கைப்பேசியே நொறுங்கிவிடும் போலிருந்தது.
தன் பதட்டத்தை எல்லாம் அதில் தான் காண்பித்துக்கொண்டிருந்தாள் வித்திவ்யா.
அவளாக தரப்போவதில்லை, தன் புறமும் திரும்ப போவதில்லை என்று முரளிக்கு புரிந்து போக இதழ்களில் குறும்பாய் புன்னகை.
“திவ்யா என் மொபைல்…” என்றான் அவள் புறம் கை நீட்டி.
அவன் கேட்டதுமே திடுக்கிட்டவள் நடுங்கும் கரத்துடன் அவனிடம் நீட்ட அதில் வியர்வை துளியினாலான பிசுபிசுப்பின் ஈரம்.
“ரொம்ப பயந்துட்டியோ?…” என்றான் அவனாகவே அவளிடம்.
ம்ஹூம், அப்புறமே திரும்பவில்லை. கண்களை மூடி சாய்ந்துவிடுவோம் என்றும் நினைக்க தோன்றாமல் அசைவற்ற நிலை.
“அண்ணா கால் பண்ணியிருந்தாங்களா?…” என்றான் தன் கைப்பேசியில் வந்த அழைப்பை கண்டு.
“ஹ்ம்ம்…” என்ற சத்தம் மட்டும் சிம்பொனி இசையாய்.
“மொபைலை என்கிட்ட குடுக்க வந்த சரி. உள்ள வந்து குடுத்திருக்கலாமே? இப்ப பாரு, பதட்டத்துல பின்னாடி உட்காராம, என் பக்கத்துல இங்க உக்கார்ந்திருக்க…” என்றவனை ஸ்தம்பித்த பார்வையுடன் வித்யா திரும்பி பார்க்க,
எவ்வளவு கோவம்? எத்தனை ஆவேசம்? இப்படி பூவாய் சிரிப்பவனின் இன்னொரு முகம் கண்டிருந்தவள் அடிமனத்தின் பயம் மிரட்சியுடன் இன்னும் கூடியது.
சென்னையில் அவளை விட்டுவிட்டு கிளம்ப இருந்தவனிடம் பொறுக்கமாட்டாமல் கேட்டும்விட்டாள்.
‘மயக்கத்துல இருந்த நேரம் குடுத்த முத்தத்துகெல்லாம் கல்யாணமா?’ என்று கேட்டவளிடம்,
“அப்போ இப்ப தரவா? கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்று அசராமல் அவளிடம் அவன் கூறிய பதிலில் மீண்டும் மயக்கம் வரும் போலிருந்தது வித்திவ்யாவிற்கு.
“ஷாக்லருந்து வெளில வந்துட்டு ஒரு மெசேஜ் பண்ணு. வந்து கூட்டிட்டு போறேன். இப்போது உங்களிடமிருந்து விடைபெறுவது மிஸ்டர். வித்திவ்யா…” என்று சொல்லி கிளம்பியவன், அவளிடம் தன் ஞாபகத்துடன் அச்சுறுத்தலுடனான இம்சையையும் விதைத்து சென்றான்.
உறக்கங்கள் அவனின் நினைவில் விழிக்க, மயக்கங்கள் அவள் மனதினை கைது செய்து அவன் கைச்சிறையில் அடைக்க பார்த்தது.