அண்ணாமலையிடம் பேசிக்கொண்டிருந்த ஆத்மாவுக்கு அப்படி ஒரு சிரிப்பு முகத்தில்.
ரிதுபர்ணாவை பார்த்தவனுக்கு ‘விஷயம் கேள்விப்பட்டால் இவள் வேறு என்ன செய்வாளோ?’ என்றும் ஒருபுறம் தோன்றியது.
இன்னும் தெளியாத முகத்துடன் அமர்ந்திருந்தவளை உண்ண வைக்கவே அத்தனை நேரம் பிடித்திருக்க இப்போது அண்ணாமலை சொல்லிய இந்த தகவல் வேறு.
பெருவிரலால் நெற்றியை கீறிக்கொண்டவன் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை ரிதுவிற்கு.
“வேற என்ன சொன்னா?…” என்றான் ஆத்மா அண்ணாமலையிடம்.
“அவங்கம்மாவும், அப்பாவும் பேசினதுக்கு மன்னிப்பு கேட்டா கண்ணா. அந்த கிறுக்குப்பய இன்னும் கோவத்துல இருக்கான் போல? இதுல பொண்டாட்டியை வேற அடிச்சிருக்கான்…” என்று சொல்ல,
“அடிச்சுக்கட்டும். அவங்களுக்குள்ளவே அடிச்சிக்கிட்டு கிடந்தா தான் அடுத்த வீட்டை என்ன பேசலாம்ன்னு யோசிக்கிறதை நிப்பாட்டுவாங்க…” என்றான் ஆத்மகண்ணன்.
“யாரும் எப்படியும் போகட்டும், இந்த பைய அங்க போவான்னு நான் நினைக்கவே இல்லை. சத்தமில்லாம என்ன காரியம் பண்ணிருக்கான் பாரு…” என்றார் அண்ணாமலை.
“நம்ம செய்யாததை அவன் செஞ்சிருக்கான். நல்லது தான். குருமூர்த்தி இனிமே நம்ம வீட்டை நினைக்கனும்ன்னாலே யோசிக்கனும். விடுங்க…” என்றுவிட்டான் ஆத்மா.
“சரி அப்பப்ப முரளிக்கு பேசிக்கோ…” என்றவர்,
“உங்கம்மாவையும் கவனி. அவ வாயை திறக்க போய் தான் இம்புட்டும். எனக்கு உறுத்திட்டே இருக்கு. இந்த முருகேஸு வேற கேட்டை பார்த்தவாக்குல உக்கார்ந்திருக்கா. நெஞ்செல்லாம் பிசையுது எனக்கு. தாயையும், பிள்ளைவும் பிரிச்சாக்குல விண்டு போச்சு…” என்றார் சஞ்சலமாக.
“கொஞ்சநாள் தான் ப்பா. முரளி, வித்யா கல்யாணம் முடிஞ்சதும் கூடவே தான இருக்க போறாங்க?…”என்று சமாதானம் செய்தான் இவன்.
அவனின் பேச்சை கேட்ட ரிதுபர்ணா இன்னும் கலக்கத்துடன் தன் கணவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“சரிப்பா, பார்த்துக்கோ. வச்சிடறேன்…” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார் அண்ணாமலை.
தானும் டீப்பாயில் தன் கைப்பேசியை வைத்துவிட்டு இருக்கையின் பின்னால் சாய்ந்தமர அதற்காகவே காத்திருந்தவள் போல அவனின் தோளை பிடித்து உலுக்கினாள் ரிதுபர்ணா.
“மாமா என்ன சொன்னாங்க? என்ன கண்ணத்தான் நடக்குது? திரும்பவும் என்ன பிரச்சனை?…” என்றாள் அவனிடம்.
“இவ எவடி, நானே வசனமே புரியலைன்ற ரேஞ்ச்ல முரளி பன்றதை பார்த்து முழிக்கறேன். இதுல என்னை போய் ஏந்திரி அஞ்சலின்னு உலுக்கிட்டு…” என்று சொல்ல,
“கிண்டல் பன்ற நேரமா இது? வித்யா போன் எடுக்கவே இல்லை. சித்தி அவ கிளம்பினதுல இருந்து அழறாங்க. எனக்கு தெரியல இப்ப நான் யாருக்குன்னு பேச?…” என்று சொல்ல,
“யாருக்காகவும் பேசவேண்டாம். யாரும் நம்ம பேச்சை கேட்கிற நிலமையில இல்லை. அதனால சைலண்டா வேடிக்கை மட்டும் பார்ப்போம்…” என்றவன் கைப்பேசியில் இப்போது முரளியிடமிருந்து அழைப்பு.
“இரு முரளி தான். பேசிட்டு சொல்றேன் என்னன்னு…” என்ற ஆத்மா,
“எங்கடா இருக்க?…” என்றான் தம்பியிடம்.
“சென்னைக்கு தான் வந்திட்டிருக்கோம் ண்ணா…” என முரளி சொல்லவும்,
“டேய் நீ சென்னைக்கு வராம செங்கல்பட்டுக்கா போற? நீயும் ஏன்டா?…” என்ற ஆத்மா,
“இப்ப எந்த லொகேஷன்…” என்று கேட்கவும் சொல்லிய முரளி,
“ரெஸ்ட் ரூம் போயிருக்காங்க ரெண்டுபேரும். அதான் உங்களுக்கு கால் பண்ணேன்…” என்றான்.
“நல்லா சொன்னடா? எதாச்சும் செஞ்ச பின்னாடியாச்சும் சொல்லி வை. அப்பா சொல்லவும் என்னடா இதுன்னு ஆகிடுச்சு…” என ஆத்மா கடிய,
“நான் என்ன பண்ணேன்?…” என்றான் முரளி அங்கிருந்த கடையில் சோடா சர்பத் வாங்கி அருந்திக்கொண்டே.
“பச்சை பிள்ளை தான் நீ. இனி சித்தி முரளி பாவம்ன்னு சொல்லட்டும், அப்ப இருக்கு…”
“இனி அம்மா மட்டுமில்லை, யாருமே என்னை அப்படி சொல்லமாட்டாங்க. கவலைப்படாதீங்க. உங்க எல்லாருக்கும் நான் நல்ல பேர் வாங்கிக்குடுத்துட்டேன்…” என்று சிரிக்க,
“எப்படிடா இப்படி? என்னவோ போ. ஆனா நல்ல அடி போல? குருமூர்த்தி இன்னும் அடங்கலைன்னு செய்தி….”
“இவ்வளோ கவலைப்பட்டு எந்த மருமகனையும் பார்க்கலை நான். சரி விடுங்க. அந்த கவலை எதுக்கு? திரும்ப கரூர் போகும்போது ஒரு காட்டு காட்டிட்டு போவோம்…”
“குருமூர்த்தி பொண்ணு தான் கால் பண்ணி அப்பாக்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு நீ அங்க வந்துட்டு போனதையும் சொல்லிருக்கா. இப்ப தான் அப்பாவும் எனக்கு கால் பண்ணினாங்க….” என்று சொல்ல,
“இதுதான் காத்துவாக்குல நாலு செய்தியா?…” என முரளி நக்கல் பேசியதோடு, தான் சென்று வந்ததை பற்றியும் கூறிமுடித்தான்.
“தெரிஞ்சே தான் நீ வித்யாவை கூட்டிட்டு போயிருக்காடா…” ஆத்மா சிரிக்க,
“சரியா போச்சு. நீங்க கால் பண்ணினதால போனை என்கிட்ட குடுக்க வந்தவ மொத்த ஸ்டன்டையும் பார்த்துட்டு, நாங்க கிளம்பின வேகத்துல எங்க அவ வந்ததை கவனிச்சிருவோமோன்னு பதட்டமா ஓடி வந்து பின் சீட்டுக்கு பதிலா முன் சீட்ல உக்கார்ந்துட்டா…” என்றான் முரளி.
“பிள்ளையை பயமுறுத்தி கூட்டிட்டு வர்ற நீ…”
“ப்ச், இல்லை ண்ணா. அவ வந்து உள்ள நடக்கறதை பார்ப்பானு நினைக்கலை. ஏற்கனவே என் பக்கமே வரக்கூடாதுன்னு நினைச்சிட்டிருந்தவளுக்கு நானே அல்வா மாதிரி இன்னொரு விஷயத்தை காமிச்சு குடுத்துட்டேன். இதைவேற சமாளிக்கனும்…” என்றான் சலிப்புடன் முரளி.
“ஹ்ம்ம், கொஞ்சநாள் போகட்டும். பார்த்துக்கலாம். பத்திரமா வந்து சேருங்க…” என்று வைத்துவிட்டான் ஆத்மா.
அழைப்பை துண்டித்துவிட்டு முரளி காரில் சாய்ந்து நிற்க ஆனந்தியும், வித்யாவும் வந்து சேர்ந்தனர்.
“சாப்பிட, இல்லைன்னா குடிக்க என்ன வேணும்?…” என்றான் முரளி இருவரிடமும் பொதுவாய்.
வித்யா எதுவும் சொல்லாமல் பின் இருக்கையில் சென்று அமர்ந்துகொள்ள ஆனந்தி முரளியை பார்த்தார்.
“சொல்லுங்க பெரிம்மா…” என்றவன் முகத்திலிருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை.
“காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு. சூடா காபி சொல்லேன். வேற எதுவும் வேண்டாம்…” என்றார் அவர் மெதுவாய்.
“சரி நீங்க உள்ள உக்காருங்க. கொண்டு வருவாங்க…” என்று சொல்லிவிட்டு காபி சொல்ல சென்றான்.
காரை கடையின் அருகில் நிறுத்தி இருந்ததால் தானே நின்று வாங்கிக்கொண்டு திரும்ப இப்போது வித்யா பின் இருக்கை கதவை திறந்துகொண்டு முன்னால் வந்து அமர்ந்தாள்.
முகமெல்லாம் வாடி இருக்க, கூடவே கோபமும் சுணக்கமும். அதை யாரிடம் காண்பிப்பது என்று தெரியாமல் தனக்குள்ளேயே பொசுங்கிக்கொண்டிருந்தாள்.
முரளி எதுவும் கேட்கவில்லை. ஆனந்திக்கு காபியை கொடுத்தவன் காரில் அமர்ந்துகொண்டான்.
அவர் குடித்து முடிக்கும்வரை பொறுத்திருந்துவிட்டு பேப்பர் கப்பை வெளியே வீசவும் காரை கிளப்பினான்.
மதிய உணவிற்கு கூட எங்கேயும் நிற்கவில்லை ஆனந்திக்கு ராணி தயிர்சாதம் கட்டி தந்திருக்க, மாத்திரை போடவேண்டும் என்பதனால் அவர் நேரத்திற்கு உண்டு முடித்து பின்னால் படுத்து உறங்கிவிட்டார்.
வித்யா உண்ணவில்லை என்று முரளியும் உணவை தவிர்த்துவிட வித்யாவிற்கு இன்னும் அச்சம் பிடித்தது.
நினைக்க நினைக்க கண்ணை விட்டு அந்த காட்சி அகலவில்லையே. உடலில் வெளிப்படுத்த முடியாத நடுக்கம்.
அது மனதை வெகுவாய் பாதித்தது. ‘என் பொண்டாட்டிக்கு நான் குடுப்பேன், அவளுக்காக என்னவும் செய்வேன்’ என்றவனின் வார்த்தையில் மிரண்டுதான் போனாள்.
அவனின் உயிர் காதல் கண்டு பூரிக்க முடியாமல் மனது வேதனையில் கலங்கியது.
அதனை வெளிப்படுத்தமுடியாமல் மருகியபடி உடலை குறுக்கிக்கொண்டு சாய்ந்திருந்தவள் ஒருகட்டத்தில் நன்றாக உறங்கியும்விட விழிக்கையில் சென்னை வந்திருந்தனர்.
ஆத்மாவும், ரிதுபர்ணாவும் அன்றைக்கு ஷோரூம் செல்லவில்லை. வீட்டில் நடக்கும் களேபரங்களை அங்கே வரை கொண்டுசெல்ல முடியாதே என ஆத்மா கிளம்பவில்லை.
ரிதுபர்ணாவை தனியே விட்டும் செல்லமுடியாமல், அழைத்தும் செல்லமுடியாமல் அவளுடன் தான் இருந்துகொண்டான்.
மகளும் பள்ளி முடிந்து வந்திருக்க தனியே அத்தனைமுறை அழைத்து ரிதுவிடம் சொல்லிவிட்டான்,
“பாப்பாவை வச்சிக்கிட்டு நீ வித்யாக்கிட்ட எதையாச்சும் பேசிட்டிருக்காத பார்த்துக்கோ…” என்று சொல்லியிருந்தவன்,
“அதேமாதிரி இன்னொரு விஷயம் ரிது. முரளியை அக்ஸப்ட் பன்றதும் பண்ணாததும் வித்யாவோட தனிப்பட்ட விஷயம். அதுல அவ முழுமனசா என்ன முடிவுக்கு வராளோ ஏத்துக்க தயாரா இரு. இது எனக்கும் தான்…” என்றிருந்தான் ஆத்மா.
“இது எப்படி சரிவரும்? அதுவும் வித்யா அவளை இவ்வளோ பேசின பின்னாடி கண்டிப்பா ஒத்துக்கவே மாட்டா…” என்றாள் ரிதுபர்ணா.
“ப்ச், அதை நம்ம சொல்லவேண்டாம்ன்னு சொல்றேன் ரிது. வித்யா முடிவெடுக்கட்டும். சும்மா மாட்டா மாட்டான்னு நாம சொல்லி சொல்லியே அவளை அந்த எண்ணத்தை விட்டு வெளிவராம பண்ணிருவோம்…” என்ற ஆத்மா,
“வீம்புக்கும், பிடிவாதத்துக்கும் இதுவா நேரம் ரிது? இது அவங்க வாழ்க்கை. அவங்க முடிவு பண்ணட்டும். தள்ளி நின்னு பார்ப்போம். நமக்கான எல்லைல நாம இருப்போம்…” என்றவன்,
“எல்லாருக்கும் இதுல சம்மதம்ன்னா உனக்கு மறுக்க தோணாது தானே?…” என்று கேட்க,
“எதுவும் செய்யவேண்டாம்ன்னு தான் நானும் சொல்றேன்…”என்றவனிடம் தலையசைத்தாள் ரிதுபர்ணா.
மாலையாகிவிட்டது முரளியின் கார் அங்கே வந்து சேர. உண்ணாமல் இருந்ததனாலும், மனவுளைச்சலினாலும் வித்யா வெகுவாய் சோர்ந்திருந்தாள்.
இதில் தலைவலி வேறு துவங்கியிருந்தது அவளுக்கு. அதிகபட்ச அழுத்தம், உறக்கமின்மை என்று எல்லாம் அவளை பந்தாடி இருக்க முகத்தை சுருக்கிக்கொண்டு சமாளித்தபடி வந்தவளை ஓடிவந்து அணைத்துக்கொண்டாள் ரிதுபர்ணா.
அடங்கியிருந்த கவலையும், கலக்கமும் மீண்டும் பெரிதாய் உருவம் எடுக்கவும் வித்யாவும் அவளை அணைத்ததோடு சரி.
பூர்விதாவையும் பார்த்துவிட்டு அங்கே தான் வரும்பொழுது எப்பொழுதும் தங்கும் அறைக்குள் சென்று படுத்துவிட்டாள் வித்யா.
“என்னாச்சு? ஏன் இப்படி போறா?…” என்று ரிது பதற,
“அண்ணி அவளுக்கு சாப்பிட குடுங்க. எதுவுமே சாப்பிடமாட்டேன்னுட்டா. தலை வேற வலிக்குதுன்னு நினைக்கறேன்…” என்றவனை ரிது வரவேற்க கூட இல்லையே என்று அப்போது தான் கவனித்தவள்,
“வா முரளி. முதல்ல நீயும் கையை கழுவிட்டு வந்து உக்கார். சாப்பிடு…” என்றவள் ஆனந்தியை பார்த்து தலையசைத்து, ‘வாங்க’ என்றதோடு சரி.