விடியும்வரை விழித்தே இருந்தாள் வித்திவ்யா. உறக்கம் என்பது கிஞ்சித்தும் அவளை அண்டவில்லை.
முரளியின் அச்செயலின் விளைவால் உண்டான அதிர்வில், இரக்கமற்ற அந்த மனநிலை அவளை வலுவாய் வதைத்துக்கொண்டிருந்தது.
‘பார்த்திருக்கவே கூடாது. போயிருக்கவே கூடாது. பேசியிருக்கவே கூடாது.’ என்ற எண்ணம் லட்சங்களை கடந்து கோடியை தொடவிருந்தது.
எத்தனை தைரியம்? எவ்வளவு துணிச்சல்? முரளியிடம் இதனை எதிர்பார்க்காத அதிர்வில் மட்டுமா அவள் சிலையாய் நின்றது என அடிமனத்தின் கேள்வி காதில் ஒலிக்க தவற அவனை தவறாகவும் எண்ண முடியாமல், தனக்கானவனாகவும் எண்ண முடியாமல் தடுமாறினாள்.
தன்னுடைய முடிவில் உறுதியாய் இருக்கிறோம் என்பதில் மட்டுமே அவளின் கவனமிருக்க முரளியின் மனதை அவள் உணரவே தயாரில்லை.
ஆனாலும் அவனை வெறுக்கவோ, கோபம் கொள்ளவோ அவளால் முடியவில்லை.
இதோ இப்போதும் அவள் இதயத்தினுள் அவனின் துடிப்பையும், மார்பின் கதகதப்பையும், தன்னை சுற்றி வளைத்த கைகளின் வலிமையையும் அவளுள்ளம் ஸ்பரிசித்தது.
அவன் கிளம்பி சென்றதிலிருந்து ஜன்னலினோரம் அமர்ந்திருந்தவள் விழிகள் கடலலையை வெறித்துக்கொண்டிருந்தது.
எழுந்து திரும்பி சென்றவளின் கை பிடித்து நிறுத்திய வித்யா, ‘பூர்வி எங்கே?’ என்று கேட்க,
“ஸ்கூலுக்கு போயாச்சுடா…”
“ஓ…” என்று இதழ் குவித்தவள் தலையசைக்க,
“லீவ் போடறேன்னு தான் சொன்னா, ஆனா நான் தான் ஸ்கூலுக்கு அனுப்பிட்டேன். நேத்தும் நீ ரொம்ப டயர்டா இருந்த, இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டா நாளைக்கு போட்டுக்கலாம்ன்னு சொல்லிட்டேன்….” என்றதும் வித்யா தலையசைத்தாள்.
“சிரிடா வித்யா. இப்படி இருக்காத. ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று சொல்ல அதற்கும் அதே புன்னகை தான்.
“சரி குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்…” என்று சொல்லி ரிது கிளம்ப எழுந்துகொள்ளவே மனமின்றி மீண்டும் ஜன்னலின் ஓரம் தலைசாய்ந்துவிட்டாள்.
நினைக்க கூடாது என்றாலும் அவனின் நினைவுகள் மட்டுமே அவளை சுற்றி வளைத்து சுவர் எழுப்பியிருந்தது.
அதிலிருந்து மீண்டு வெளியே செல்ல முடியாமல் தத்தளித்தவள் அதற்குமேலும் இருந்தால் சரிவராது என்று எழுந்துவிட்டாள்.
நடப்பது நடக்கட்டும். தன் முடிவில் மாற்றமில்லை என நினைத்தபடியே குளித்து வர சென்றாள்.
தங்கையை பார்த்துவிட்டு தெளிவில்லா முகத்துடன் கீழே வந்த ரிதுபர்ணாவை கவனித்தான் ஆத்மா.
“ரத்னாக்கா, நீங்க போய் மதியத்துக்கு என்ன வேணுமோ பார்த்து வாங்கிட்டு வாங்க…” என்று சொல்லி அவரை அனுப்ப, அவருமே கிளம்பிவிட்டார்.
“வித்யா என்ன பன்றா?…” என்றான் மனைவியிடம் ஆத்மா.
அவனுக்கு பதில் சொல்லாமல் விழிகளால் அவ்வீட்டினை அலசினாள் ரிதுபர்ணா.
“அம்மா இன்னும் ரூம்ல தான் இருக்காங்க. அவங்களா வர நினைக்கும்போது வரட்டும். நீ கூப்பிட்டுக்க வேண்டாம்…” என்றான் அவள் கேளாமலே அவளுக்கான பதிலை.
“ரொம்ப திட்டிட்டீங்களா?…” என்று அவனருகில் அமர்ந்தாள்.
“பேசவேண்டிய அவசியம் வந்தா பேசித்தானே ஆகனும்? பிள்ளைங்க புத்தி சொல்ற அளவுக்கா நடந்துப்பாங்க. அதுவும் எதை பேசனும், எதை யார்கிட்ட சொல்லனும்ன்றது கூடவா தெரியாது?…” என்று பல்லை கடித்த ஆத்மா,
“எல்லாருக்குமே தெரியும் என் மாமாவையும், அத்தையையும் பத்தி. அப்படி இருக்கும்போது இவங்க சொல்லலாமா? அதான் கேட்டேன் மனோவுக்கு இப்படின்னா சொல்லியிருப்பீங்களான்னு. அவங்க பொண்ணை சொன்னா மட்டும் சுருக்குன்னு உரைக்குது போல?…” என்றான் இன்னும் கோபம் குறையாமல்.
“ப்ச், விடுங்க நடந்திருச்சு. இனி பேசி, சொல்லி என்ன பிரயோஜனம்?…” ரிது அதனை ஆயாசத்துடன் தவிர்த்தாள்.
மீண்டும் மீண்டும் பேசி மட்டும் என்னவாகிவிடும்? சிலரின் பிறவி குணம் மாறப்போவதில்லை.
அதிலும் ஆனந்தியை போலுள்ளவர்கள் செய்துவிட்டு அதன்பின் அந்த பின்விளைவுகளில் அனுபவிப்பவர்கள்.
எத்தனை பேசினாலும், போதித்தாலும் மாற்றம் என்பது நடக்கவே நடக்காதென்று தெரிந்திருந்தது.
“வெரிகுட். இப்படித்தான் இருக்கனும். விஷயம் கேள்விப்பட்டப்போ கொந்தளிச்சதென்ன? இப்போ விடுங்கன்னு சொல்றதென்ன? இங்க நான் தான் வில்லனா? போடி எந்திச்சு…” என்றான் கோபமாக.
“பச், நான் அப்படி சொல்லலை கண்ணத்தான்…”என அவனின் கையை பிடிக்க,
“யாராச்சும் சொல்லித்தான் ஆகனும். இனிமே பேசவும், சொல்லவும் நினைக்கிறதுக்கு முன்ன அதனால என்னென்ன விளைவு வரும்ன்னு அவங்களே சிந்திக்கனும். அவங்க இப்படித்தான்னு சொல்லி சொல்லியே பாதி பேரை கெடுத்து குட்டிச்சுவராக்கிடறது…” என்றான் ஆத்மா.
“சரி, நீங்க இப்ப கூட போய் திட்டுங்க. நான் எதுவும் சொல்லலை…” என்று அவனிடம் பணிந்து வந்தவள்,
“வித்யாவுக்கு ஒரு செக்கப் இங்க பார்த்திடுவோமா கண்ணத்தான்? கண்ணெல்லாம் ரத்தமா நிக்குது. நைட்ல எப்போ எழுந்தாளோ தெரியலை. அதுக்கப்பறம் தூங்கின மாதிரி இல்லை…”
“ஹ்ம்ம், நான் தான் அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு உன்னை அவளோட தூங்க விடலை. ஓகே, வித்யா வரட்டும். கேட்டுக்கிட்டு இங்கயும் ஒரு சிட்டிங் போய்ட்டு வருவோம்…” என்றான் யோசனையுடன்.
அவளின் உடல்நிலை மேல் இப்போதுதானே இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.
அவளை எவ்வித மனஅழுத்தத்திற்கும் ஆளாக்கக்கூடாது என்றிருக்க நடப்பவை எல்லாம் அதனை நோக்கிதான் என்று இட்டு சென்றது விதி.
“உன் சித்தி கூப்பிட்டாங்களே, பேசிட்டியா ரிது?…”
“ஹ்ம்ம், பேசியாச்சு. பேசாம இங்க வந்திடுங்கன்னா அதுக்கும் அழறாங்க, நீங்க என்ன சொல்லுவீங்களோ, மாமா என்ன பேசுவாங்களோ, மதிக்காம வந்துட்ட மாதிரி ஆகிடும்ன்னு…” என்றவள் முகம் கலவரமாகியது.
“கண்ணத்தான்…” என்று வேகமாய் அவனின் கையை பற்றி,
“நேத்து சித்தி இப்படி சொல்லும்போது வித்யா முகமே சரியில்லை. ஒருமாதிரி, எப்படி சொல்ல எனக்கென்னவோ அவ சித்தி சொன்னதுல இன்னுமே டிஸ்டர்ப் ஆகிட்டான்னு தோணுது. இதை எப்படி யோசிக்காம விட்டேன்?…” என்றவளை கவலையுடன் பார்த்தான் ஆத்மா.
“கண்ணத்தான், வித்யாவை நாம கண்ட்ரோல் பன்றோம்ன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாளோ?…” என்றும் கேட்க,
“ப்ச், ச்சே என்ன பேசற நீ? அதுவும் வித்யாவா? வாய்ப்பே இல்லை…” என்று சொல்லிக்கொண்டிருக்க வித்யா வரும் அரவம் அவளின் கொலுசு சப்தத்தில் தெரிந்தது.
“நார்மலா இரு ரிது. அவளை மாதிரியே இருக்காம எப்பவும் வித்யா வந்தா எப்படி இருப்பியோ அதுமாதிரி இரு. ஓவரா அவளை பொத்தி வச்சு கவனிக்காத. அதுவே வித்யாவுக்கு சங்கடமா இருக்கும். புரியுதா?…” என்று சொல்ல வித்யா மாடிப்படியில் இறங்கி வந்தாள்.
“பேசாம ஷோரூம்க்கு கூட்டிட்டு போய்டுவோமா? அவளுக்கும் டைவேர்ட்டான மாதிரி இருக்கும்….” என்று சொல்ல,
“ஹ்ம்ம், பர்ஸ்ட் ப்ரேக்பாஸ்ட்…” என்றான் ஆத்மா.
அதற்குள் வித்யாவும் இவர்களை நோக்கி வர, அவளின் கையில் ஒரு பைல் இருந்தது.