முரளியை பற்றி எதுவும் கேட்பாளா என்று இருவருமே எதிர்பார்க்க அப்படி எந்த கேள்வியும் இல்லை வித்யாவிடம்.
குறைந்தபட்சம் அவனிருக்கிறானா என்கிற தேடல் கூட தென்படவில்லை அவளிடமிருந்து.
அதுவே இருவரையும் சோர்வுற செய்தது. ஆத்மாவிற்கு ஒருவிதமாகவும், ரிதுபர்ணாவிற்கு வேறு விதமாகவும்.
எப்படி முரளி இவள் இதயத்தில் இடம் பிடிக்க போகிறானோ என்று கவலையுடன் ஆத்மாவும், இப்படி இருப்பவள் எப்படி அவனின் விருப்பத்தை ஏற்பாள் என்று காத்திருக்கிறான் அவன் என ரிதுவும் நினைத்தனர்.
இவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லையே அவர்கள் இருவருக்குமான நள்ளிரவின் ஆர்ப்பரிப்பை.
உணர்வுகளின் சதிராட்டத்தில் தான் முரளி கிளம்பி சென்றிருப்பதும், அவனின் பிடியில் தன்னை கொடுத்து மீள முடியாமல் வித்யா சிக்கிக்கொண்டிருப்பதும் யாருமறியா நிலவின் நிழலாகி இருந்ததே.
அவள் முடிவுடன் இருப்பது புரிந்தது. அதுவே ரிதுவின் மனதை கலவரப்படுத்தியது.
“என்ன வித்யா? கேட்டிட்டிருக்கேன்ல?…” என்று அவளருகே வந்தமர, அந்த பைலை எடுத்து ஆத்மாவிடம் நீட்டியவள், வேலைக்கு செல்ல இருப்பதாக கூறினாள்.
“என்ன? ஜாப் போகனுமா? என்ன நினைச்சிட்டிருக்க நீ? உனக்காக நாங்க இவ்வளோ பேர் இருக்கோம். உன்னை நாங்க பார்த்துக்க மாட்டோமா? ஏன் வித்யா இப்படி பன்ற?…” என்றவள்,
“உன்னை எந்த விஷயத்துக்கும் கட்டாயப்படுத்தமாட்டோம்டா. எனக்கு புரியுது நீ மனசளவுல ரொம்ப பாதிப்புல இருக்கன்னு. கொஞ்சநாள் இங்க அமைதியா இரு. ஆனா இப்படி எல்லாம் முடிவுக்கு வராத…”
“யாரோ என்னவோ சொன்னா அதுக்கு மதிப்பு குடுப்பியா நீ? வித்யாக்குட்டி, அக்கா சொல்றதை கேளுடா. என்னவோ நான் உன்னை நல்லா பார்த்துக்காத மாதிரி இருக்கு. இப்ப என்ன அவசியம்ன்னு இந்த முடிவுக்கு வந்திருக்க?…” என்று படபடவென்று ரிதுபர்ணா பேச பேச வித்யாவின் முடிவு இன்னும் உறுதியானது.
“நீங்க சொல்லுங்களேன் கண்ணத்தான்…” என்று ஆத்மாவிடம் ரிது முறையிட,
“நீ அமைதியா இரு. வித்யா யோசிக்காம இந்த முடிவுக்கு வரலை…” என்றவனின் பதிலில் இன்னும் ஆற்றாமை தான் ரிதுவிற்கு.
“என்ன பேசறீங்க? அவ சின்ன பொண்ணு. அவளுக்கு வீடு, வீடு விட்டா காலேஜ். அதுக்கப்பறம் நம்ம கம்பெனி. வேற என்ன தெரியும் அவளுக்கு? வேலைக்கு போறளவுக்கு பெரிய மனுஷியா? அதோட அவ ஏன் வேலைக்கு போகனும்? நாம இல்லையா?…” என்றாள் ரிதுபர்ணா.
அவள் பேச பேச பதில் சொல்லமுடியாமல் வித்யாவின் கண்கள் விரிந்து, சுருங்கி, முகம் கன்றி அழுகை முட்ட, தாளமுடியாத ஷணத்தில் ‘ஆஆஆ’ என்று தொண்டையை பிடித்துக்கொண்டு கத்திவிட்டாள்.
ஆத்மா ரிதுவை சமாதானம் செய்து அமைதிப்படுத்தும் முன் வித்யாவின் சத்தத்தில் இருவருமே அதிர்ந்து திரும்பினார்கள்.
“வித்யா…” என்று அழைத்தவர்களிடம் பேச, சைகையில் கூட வார்த்தைகள் வரவில்லை.
நடுங்கும் இரு கைகளையும் அசைத்து விரல்களை முறுக்கியவள் இரண்டாம்முறை இயலாமையில் துடிதுடித்து போனாள்.
என்றைக்குமே தன்னால் பேசமுடியாததில் வருத்தப்பட்டதே இல்லை. இந்த வாழ்க்கை தனக்கு இதை கொடுத்திருக்க இதுதான் தனக்கானது என்று இல்லாததிற்கு ஏக்கப்பட்டதும் இல்லை.
ஆனால் இந்த நொடியும், முரளியிடம் கேள்வி கேட்க நினைத்த அந்தநொடியும் தன் கோபத்தை, ஆத்திரத்தை, மனவுணர்வுகளை வெளிப்படுத்தமுடியாமல் போனதினாலான அதிகபட்ச அழுத்தத்தில் மூச்சு திணறியது.
வித்யாவின் சத்தத்தில் ஆனந்தி கூட உள்ளிருந்து எட்டிப்பார்த்துவிட்டார் என்னவோ என்று.
ரிதுபர்ணாவும் ஆத்மாவும் அவளின் இந்த உணர்வு போராட்டத்தை கண்கொண்டு பார்க்க முடியாமல் மனம் கலங்கி நிற்க,
“வித்யாக்குட்டி…” என்று வந்து அணைத்துக்கொண்டாள் ரிதுபர்ணா.
அவளின் அணைப்பில் வித்யாவும் உடைந்துபோய் அக்காவை கட்டிக்கொள்ள அப்படி ஒரு இறுக்கம்.
அந்த அணைப்பில் ரிதுபர்ணா உணர்ந்தது தன் மனவலியை அடக்க முயலும் வித்யாவின் இறுக்கமான முயற்சியை தான்.
அவள் அணைத்திருந்த கைகள் அப்படி ஒரு வலியை தந்தது. இன்னும் சத்தமிட்டபடி பல்லை கடித்துக்கொண்டு தொண்டைக்குள் எச்சிலை விழுங்கும்பொழுது துக்கத்தையும் சேர்த்து விழுங்கினாளோ என்னவோ?
“ஒன்னும் இல்லடா, வித்யாக்குட்டி. அக்கா இருக்கேன்ல…” என்று ரிது சொல்லவும் தான் வித்யாவும் தன்னுணர்வு பெற அந்த அணைப்பில் முரளியின் நியாபகம் தான்.
அடுத்தநொடி சட்டென்று உதறி தள்ளி பின்னால் சென்று நின்றுவிட்டாள் வித்திவ்யா.