“என்னாச்சுடா?…” என்று திகைப்பாய் பார்த்த ரிதுவின் முகம் கண்டவளுக்கு இதுவரை இப்படி என்றுமே நடந்திடாத தன்னை குறித்தே அத்தனை வேதனை.
மென்மையை, புன்னகையை மட்டுமே காண்பித்திருந்தவளின் பரிதவிப்பை கண்டு ரிதுவும் கலக்கத்துடன் பார்த்தாள்.
“வித்யா…” என்ற ரிதுவின் முன் கைகூப்பிய வித்யா தன்னை அமைதிப்படுத்த முயன்று அதன்பின் தன் மொழியில் அவளுக்கு விளக்க முயன்றாள்.
சுற்றிலும் பார்த்துவிட்டு அங்கிருந்த நோட்பேடை, பேனாவை எடுத்துக்கொண்டு அவர்கள் முன் வந்தமர்ந்தாள்.
‘நான் எழுதறேன். எனக்கு புரியவைக்க முடியுமான்னு தெரியலை’ என்று பரிதவிப்புடன் சொல்லிவிட்டு கண்ணீரை துடைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தாள்.
வித்யாவின் இந்த செயல் இடிந்துபோக செய்தது ரிதுபர்ணாவை. கடகடவென்று நடுங்கும் கையுடன் எழுதுபவளையே பார்த்தபடி நின்றாள்.
வேகமாய் எழுதி அவளிடம் நோட்பேடை நீட்டிய வித்யா ஆத்மாவிடமும் அதனை படிக்கும்படி விழிகளால் கூறினாள்.
“போதும்க்கா. நீ என்னை நல்லா பார்த்துக்கற. இதுவரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டே. எதையுமே நான் மறக்கலை. புரியுதா?..” என்று கண்ணீர் சிந்த எழுதியிருந்ததை சைகையிலும் இப்போது வித்யா கேட்க ரிதுவின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.
அவள் படித்ததும் வாங்கி அதற்கு கீழ் அடுத்ததை எழுதி தர ரிதுபர்ணாவிற்கு வாங்கவே திடமில்லை. ஆத்மா தான் வாங்கினான்.
“நீ என்னை நல்லா பார்த்துக்கனும்ன்னு இப்பவும் நினைக்கிறது உன்னோட பாசம். எனக்குமே பாசம் எக்கச்சக்கமா இருக்கு. ஆனா அதுக்கும் மேல சுயம்ன்னு ஒன்னு இருக்கே. உன்கிட்ட அதை நிறைய பார்த்திருக்கேன். நீ என்கிட்ட பார்த்திருக்கியா? புரியுதா?…” என அதில் கேட்டிருந்தாள் வித்யா.
“புரியுதுடா…” என்று ரிதுபர்ணா கண்ணீருடன் சொல்ல தலையசைத்த வித்யா அடுத்ததை எழுதி நீட்டினாள்.
ஒவ்வொன்றிலும் புரியுதா, புரியுதா என்றும் பரிதவிக்கும் விழிகளுடன் அவள் கேட்டது நெஞ்சை கூறுபோட்டது.
“அப்பறம் ஏன் நான் எதுக்காக இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்னு உனக்கு புரியலை. நீ தானே எனக்கு சொல்லி குடுத்திருக்கனும்? பார்த்துக்கனும் பார்த்துக்கனும்ன்னு நீ சொல்ற? அந்த எண்ணம் எனக்கு வரவேண்டாமா? எனக்கும் பார்த்துக்க வேணும் தானே? தோணும் இல்லையா? நீ பார்த்துக்கிட்டா பாசம். நான் சொன்னா மட்டும் ஏன்க்கா உனக்கு புரியலை?…” என்றிருந்தாள் வித்யா.
“அம்மா எப்பவும் சொல்லுவாங்க ஒண்டி வாழறோம், நன்றியோட இருக்கனும்ன்னு. உரிமையான இடமில்லை இதுன்னு. அப்போ அங்க உரிமைன்னு ஒன்னு இருக்கா? நீ என்னை அம்மாவுக்கும் மேல பார்த்துக்கிட்டே. ஆனா உன் நிழல்ல மட்டுமே நான் இருக்கனும்ன்னா எப்படி?…”
“அம்மாவை யோசிச்சியா? இங்க உன் வீட்டுக்கு வர்றதுக்கு கூட பயப்படறாங்க. இங்க வரனும்ன்னா கூட அதுக்கும் நீ தான் காசு தரனும். இங்க நான் காசுன்னு பிரிச்சு பேசலை. என்னை பார்க்க என்னை பிரிய முடியாம இருக்கற அம்மாவை விட்டு போகமாட்டேன்னு சொல்லவும் எனக்கு உரிமை இல்லை. அம்மாவை கூட்டிட்டு தான் போவேன்னு சொல்லவும் எனக்கு இடமும் இல்லை…”
“என்ன செய்யட்டும் நான்? மூணு வேளையும் நல்ல சாப்பாடு, இருக்க ஒரு இடம், சுகமான வாழ்க்கை. பார்த்துக்க நீ. சுத்தி சொந்தங்கள். இப்ப வரைக்கும் அம்மா ஒன்னொன்னும் சொல்லும்போது அக்காவ கஷ்ட படுத்தாத. அக்காட்ட கேட்காம செய்யாத. அக்கா சொல்லட்டும் இப்படித்தான் சொல்லியிருக்காங்க….”
“ஆனா எனக்குன்னு கேட்டுக்கிட்டதில்லை. அவங்களுக்குன்னும் அவங்க வாழ்ந்ததே இல்லை. உனக்கு தெரியாதாக்கா? ஏன் வெளில வேலைக்கு போறதனால என்ன தப்பு? எதுவுமே எனக்கு தெரியாது. நிஜம் தான். உன்னை, நம்ம வீட்டை, அம்மாவை விட்டா எதுவுமே தெரியாது…”
“காலையில அம்மா சொல்றாங்க, அக்காவுக்கு கஷ்டம் குடுக்காத. அவங்க என்ன சொன்னாலும் கேட்டு நட. அவங்க எப்போ போன்னு சொல்றாங்களோ அப்போ இங்க வா. எப்போ என்னை கூப்பிடறாங்களோ, இங்கயும் உன்னை பார்க்க என்னை போக சொன்னா நானும் வரேன்னு. இது தான் நாங்க வாழ்ற வாழ்க்கை…”
“அதனால தான் எல்லா விஷயத்துலையும் என்னால எதுவுமே பேச முடிஞ்சதில்லை. இப்ப என்னை வச்சு எவ்வளோ பிரச்சனை? இப்பவும் என்னை உன் கைக்குள்ளவே வச்சுக்க நினைக்கிறியே? எனக்கு நீ தான சப்போர்ட்டா இருக்கனும்? பண்ணமாட்டியா நீ?…”
“நானும் போறேன். கொஞ்சநாள் மூச்சுவிடனும்ன்னு தோணுது. உன்னை நான் பார்த்துக்கனும்ன்னு ஆசையா இருக்கு. அம்மாவை யார் பர்மிஷனுக்கும் வெய்ட் பண்ணாம கூட்டிட்டு வரனும்ன்னு ஏக்கமா இருக்கு. இதெல்லாம் இத்தனை வருஷத்துல எனக்கு தோணினதே இல்லை….”
“ஆனா இந்த ரெண்டுநாள்ல தோணிருச்சு. பாசமாவே இருந்தாலும் கயறு கயறு தானே ரிதுக்கா. கையையும், காலையும் கட்டும். கழுத்தையும் நெறிக்கும். எனக்கு கை, கால்ல கட்டினது இனி கழுத்தை நெறிச்சிருமோன்னு பயமா இருக்கு ரிதுக்கா. எனக்கு நீ தானே கைட் பண்ணனும். நீயும் என் அம்மா தானே?…” என்று இறுதியாய் எழுதி இருக்க மடிந்தமர்ந்து கதறிவிட்டாள் ரிதுபர்ணா.
வித்யா எழுதிய ஒவ்வொன்றிலும் அவளின் எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள் தான் நிரம்பி இருந்தது.
அவளுக்கு எல்லாம் செய்ய தான் இருக்கிறோமே என்றிருந்த அந்த பாசத்தில் அவளை, அவளின் மனதினை பார்க்காமல் போய்விட்டோமே என்று துடிதுடித்து போனாள்.
முருகேஸ்வரி மீது எத்தனையோ முறை ஆதங்கப்பட்டிருக்கிறாள். வருத்தப்பட்டிருக்கிறாள்.
பலவருடங்களாக அதை மட்டுமே அல்லவா நான் செய்திருக்கிறேன் என்று இப்போது சம்மட்டியால் அடித்ததை போல தன் தங்கை தனக்கு புரிய வைத்திருந்ததில் சருகாகி போனாள்.
தன் திருமணம் முடிந்த நேரத்தில் ஆனந்தியுடனான ஒரு பிரச்சனையில், ‘பிச்சை’ என்றொரு வார்த்தையினால் எத்தனை தூரம் அவள் கொதித்தாள்.
இன்றுவரை தன் சுயத்தில் தானே அவளின் வாழ்க்கை. இத்தனை சொத்துக்கள் இருந்தாலும் தான் நிமிர்ந்திருக்க தன்னுடைய சுயம் தானே காரணம்.
அதனை ஏன் தன் தங்கைக்கு படிப்பினையாக்கவில்லை என்று இப்போது மருகிக்கொண்டிருந்தாள்.
சொல்லப்போனால் தான் தான் அதற்கு முதல்அடி எடுத்து வைத்திருக்க வேண்டும்.
தன் பார்வையில் தான் அந்த குடும்பத்தை பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் அடக்குமுறையை தானுமே செலுத்தியிருக்க மனக்கண்ணில் முருகேஸ்வரியின் குறுகிய தோற்றம்.
‘வேணாம் கண்ணு, அவங்க எதாச்சும் சொல்லுவாங்க. வேணாம் கண்ணு கோவப்படுவாங்க.’ என இன்னொருவர் என்ன சொல்லுவாரோ என்று வளைந்து வளைந்து இன்று ஒடிந்து சாயும் நிலைக்கு அவர் வந்து நிற்க தாளவே முடியவில்லை ரிதுவிற்கு.
சத்தமிட்டு அவள் தன் தவறை எண்ணி அழ ஆத்மா கைகட்டி பார்க்க வித்யா வந்து அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.
‘அழாதே அழாதே’ என்று பதறி, பயந்து மன்னிப்பை கேட்க அவளை அணைத்துக்கொண்ட ரிது,
“நான் தான் மன்னிப்பு கேட்கனும் வித்யா. ஸாரிடாம்மா. ஸாரி…” என்று சொல்லியவள் கண்ணீரில் வித்யாவும் மனமுருகி போனாள்.
‘உன்னை கஷ்டப்படுத்திட்டேனா?’ என்று பாவம் போல கேட்டவள் ஆத்மாவை பார்க்க, மென்மையாய் புன்னகைத்தான் அவன்.
“அழுதா சரியா போச்சா? முதல்ல ரெண்டுபேரும் எழுந்து உக்காருங்க…” என்று இருவருக்கும் குடிக்க தண்ணீரை எடுத்து வர திரும்பியவன் அப்போது தான் ஆனந்தி அறைக்குள் செல்வதை கண்டான்.
ஒரு பெருமூச்சுடன் தண்ணீரை எடுத்து வந்து இருவருக்கும் நீட்டியவன் வித்யா எழுதி தந்த நோட்பேடை பத்திரப்படுத்திக்கொண்டான்.
“இப்போ ஓகே வா?…” என்றான் இருவரிடமும்.
ரிதுபர்ணா கூட தேறிவிட்டாள். வித்யாவிற்கு மனதில் இருந்ததெல்லாம் பேசி முடித்த பின்னர் ரிதுவின் அழுகையை கண்டு வெகுவாய் கலங்கி போனாள்.
மனதில் இருந்த தைரியம் எல்லாம் வடிந்துவிட்டதை போலிருக்க அத்தனை பயத்துடன் ஆத்மாவை பார்த்தாள்.
“என்ன பயமா இருக்கா? இப்படி முழிக்கிற?…” என்றவன் சிரிப்புடன் அவளை அமர சொல்லிவிட்டு வித்யாவின் பைலை எடுத்தான்.
“அப்போ இங்க வரும்போதே வேலைக்கு போகனும், ஆனா ஷோரூம்க்கு வர கூடாதுன்ற முடிவோட தான் வந்திருக்க? அப்படித்தானே?…” என்றான் ஆத்மா.
“ஹ்ம்ம்..” என்று தலையசைத்தவள் இன்னுமே வெளிறிய முகத்துடன் தான் பார்த்திருந்தாள் தன் அக்காள் கணவனை.
“குட் டிசிஷன். தப்பே இல்லை. உங்கக்கா சப்போர்ட் பன்றாளோ இல்லையோ, என்னோட சப்போர்ட் உனக்கு தான் வித்யா. இப்படித்தான் இருக்கனும். ஆனா ரிதுவும் உன்னை விடமாட்டா. கண்டிப்பா உன்னை புரிஞ்சுப்பா…” என்று சொல்ல பாவம் போல ரிதுபர்ணாவை பார்த்தாள் வித்யா.
பெரிதாய் என்னவோ தவறு செய்துவிட்ட குழந்தையை போலிருந்தது வித்யாவின் முகபாவனை.
“ஒண்ணுமில்லடா. எப்பவும் போல இரு. எனக்கு சந்தோஷம் தான். நான் தான் புரிஞ்சுக்காம இருந்துட்டேன்…” என்று ரிது சொல்ல இன்னும் வித்யாவின் முகத்தில் தெளிவில்லை.
“ஓகே, என்ன மைன்ட் செட் உன்னோடது? என்ன ஜாப் போகலாம்ன்னு இருக்க?…” என்று கேட்க வித்யா விழித்தாள்.
வேலைக்கு செல்லவேண்டும். ஆனால் ஆத்மா, ரிதுவின் சம்பந்தப்பட்டதாக இல்லாமல் வெளியில் தான் பார்க்கவேண்டும் என்ற முடிவில் இருந்தவள் அதற்குமேல் யோசிக்கவில்லை.
இப்போது அவன் கேட்கவும் படபடவென்று வந்தது வித்யாவிற்கு. எங்கே என்ன வேலை என்று முடிவெடுக்காமல் இத்தனை பேச்சா? என்றுவிடுவானோ என அஞ்சி போய் பார்த்தாள்.
“ஒரு பிரச்சனையும் இல்லை. டிஸ்கஸ் பண்ணுவோம். கண்டிப்பா நீ ஜாப் போற. ஆனா ஒண்ணு. நீ இங்க இருந்து தான் வேலைக்கு போகனும். உன்னை பிக்கப் பண்ண ட்ராப் பண்ண நானோ, இல்லை ட்ரைவரோ தான் வருவோம். இதுக்கு நீ மறுப்பு சொல்லக்கூடாது…” என்றவனை மறுக்க வித்யா தலையசைக்க,
“என்னவோ சொன்ன ரிது அம்மா இல்லையான்னு? பூர்வி இங்க இருந்து வெளில வேலைக்கு போனா வெளில தங்குன்னு சொல்லுவோமா? அது மாதிரி தான். எங்க பொண்ணுன்னா இங்க இருந்து தான் போகனும். வேற வேறன்னாலும் இது நம்மோடது. நாங்க அப்படித்தான் நினைக்கிறோம்…” என்றான் ஆத்மா.
“சுயமரியாதை கண்டிப்பா இருக்கனும். அதேநேரத்துல உரிமையும் இருக்கனும். நீ வேலைக்கு போய் உங்கம்மாவை, அக்காவை பார்த்துக்க நினைக்கிறது சுயமரியாதைன்னா, இங்க இருந்து போறதும், கரூர்ல இருக்கறது உன்னோட வீடுன்றதும் உன் உரிமை. உன் அம்மாவே இல்லைன்னு சொன்னாலும் அதுதான் நிஜம். புரியுதா?…” என்றான் ஆத்மா.