“உன் அண்ணனுக்கு ஆயிரம் கண்ணு. அதுல தொள்ளாயிரத்து தொண்ணூத்தி ஒன்பதும் ரிது மேல தான்…” என்று கிண்டல் பேசியபடி சபர்மதி சொல்ல,
“கண்ணு மட்டுமில்ல, காதும் இங்க தான் இருக்கும். போங்கடி முதல்ல…” என்றார் விசாலாட்சி.
“மதி, வித்யாவையும் உள்ள கூட்டிட்டு போ. நான் இங்க உறங்கறேன்…” என்று விசாலாட்சி சபர்மதியிடம் சொல்ல, முருகேஸ்வரியை பாராமல் வித்யா அவளுடன் சென்றுவிட்டாள்.
யாருக்கும் உறக்கம் கண்களை எட்டவில்லை. மேலும் சிலநிமிடங்கள் முணுமுணுப்பான சத்தங்களுடன் மெல்ல மெல்ல உறங்க ஆரம்பிக்க அதற்குள் விடிந்துவிட்டது.
அதிகமாய் ஆட்களிடம் எல்லாம் சொல்லவில்லை. வீட்டளவில் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர்.
அக்கம்பக்கத்தில் மட்டும் வெகு முக்கியமானவர்கள் என்று சிலருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அவர்களும் வர ஆரம்பிக்க தாமரைக்குளத்தின் அருகே பந்தல் போடப்பட்டிருக்க கீழே ஜமுக்காளம் விரிக்கப்பட்டு வருபவர்கள் அமர இருக்கைகளும் தனியே போடப்பட்டிருந்தது.
பிள்ளைகள் எல்லாம் இங்குமங்குமாய் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருக்க வீடே ஜேஜே என்று மகிழ்ந்திருந்தது.
செண்பகத்தின் முகத்தில் இப்போது தான் மகிழ்ச்சியே. மகன் இரவில் வந்து நின்றதும் அவரால் நம்பவே முடியவில்லை.
வித்யாவிற்காக அவன் வரமாட்டான் என்று நினைத்திருக்க அவனின் இந்த திடீர் வருகையில் அகமகிழ்ந்து போனார்.
ஆனால் இதுவுமே அவளுக்காக இருக்கலாம் என்று அவர் மனம் ஒருபக்கம் நின்று கூற, ‘இருந்துவிட்டு போகட்டுமே. வந்துவிட்டான். அது போதும்.’ என்னும் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தார் செண்பகம்.
அதிலும் முகமெல்லாம் புன்னகையும், சந்தோஷமுமாய் கண்கள் ஒளிர மகன் பழையபடி வளையவருவதை பார்த்து பார்த்து அவர் உள்ளம் குளிர்ந்தார்.
யாருக்காக, எதற்காக அவனின் இந்த மகிழ்ச்சி என்றெல்லாம் யோசிக்கவில்லை. அவனின் சிரித்த முகமே அவரை நிறைக்க செய்தது.
விசேஷம் ஆரம்பிக்க விருந்தினர்களும் வந்திருக்க ரிதுபர்ணாவை அழைத்துவந்து அவளுக்கான இருக்கையில் அமர வைத்தனர்.
குடும்பத்தினர் அனைவருமே ஒரே இடத்தில் ஒன்று கூடியிருக்க முரளியின் இருப்பும், மற்றவர்களின் பார்வை பரிமாற்றமும் வித்யா காணாமலே அவளால் உணரமுடிந்தது.
அங்கிருந்து செல்லவும் முடியாமல், அங்கேயே நிற்கவும் முடியாமல் அவளால் ஒருமனநிலையில் இருக்க இயலவில்லை.
அதனை அவ்வப்போது கவனித்தாலும் முரளியின் முகத்தில் வேறெந்த உணர்வும் இல்லை.
அவனின் பார்வை அவளை தொடர்ந்தால் நிச்சயம் அது வித்யாவை சங்கடத்திற்குள்ளாக்கும் என்றே அதனை தவிர்த்திருந்தான்.
ஆனாலும் அவனின் குரல், அந்த சிரிப்பு சத்தம் என்று அவன் அருகாமை வித்திவ்யாவின் மனதை அசைத்தது.
“இப்ப எதுக்கு நெளிஞ்சிட்டே நிக்கிற? பூர்விய பாரு…” என்று விசாலாட்சி கூட சொல்லிவிட்டார் வித்யாவிடம்.
‘நான் உள்ள போகட்டுமா?’ என அவரிடம் அவள் கேட்கவுமே அப்படி ஒரு முறைப்பு முறைத்தார் விசாலாட்சி.
“உன் அக்கா விசேஷம். நீ இருக்கவேண்டாமா? வீட்டுக்குள்ள இருக்கவா வந்த நீ?…” என்று மற்றவர்கள் கவனிக்காமல் வித்யாவை அதட்டினார்.
ஒருவழியாக விசேஷமும் நல்லவிதமாய் முடிய, வந்தவர்கள் உணவருந்திவிட்டு தாமரைக்குளம் அருகில் வந்து இருக்கையை எடுத்து போட்டு கூட்டமாய் அமர்ந்துகொண்டனர்.
வித்யா, சபர்மதி, மனோ மூவரும் பிள்ளைகளுக்கு உணவை அங்கே வைத்து ஊட்டிக்கொண்டே ரிதுபர்ணாவிடம் பேசிக்கொண்டிருக்க இன்னும் சில பெரியவர்கள் அங்கே அமர்ந்திருந்தனர்.
“இந்தா ரிது, இந்த மோரை கொஞ்சம் குடிப்பியாம். கண்ணா குடுத்துவிட்டான்…” என்று செண்பகம் சொல்ல,
“வேண்டாமே த்தை. பசிக்கவே இல்லை…” என்றாள் அவள் அயர்வுடன்.
“அதனால தான் மோர். இந்த வெக்கையில கசகசன்னு இருக்குது. மோரை குடி. நேரம் கழிச்சு கூட சாப்பிடு…” என்று சொல்லவும் வாங்கிக்கொண்டாள்.
“ஹ்ம்ம், நாத்தனார் மகளுக்கே இந்த கவனிப்புன்னா சொந்த மருமகளை என்னம்மா கவனிப்பா செண்பகம்?…” என்றனர் விசேஷத்திற்கு வந்திருந்த பெண்கள்.
“எல்லாம் நல்ல விஷயம் தான். உனக்கு தெரியுமே என் கொழுந்தன் மகளை சேலத்துல கட்டிக்குடுத்திருக்கோம்ன்னு. அவ வீட்டு வலசல்ல நம்ம முரளிக்கு ஒரு சம்பந்தம் இருக்குது செண்பகம்…” என்று சொல்லவும் அனைவரின் பார்வையும் அங்கே குவிந்தது.
பூர்விதாவிற்கு உணவை ஊட்டிக்கொண்டிருந்த வித்யாவின் கைகள் ஒருநொடி செயலற்று நின்று பின் பணியை தொடர்ந்தது.
“நேத்திக்கு அவக்கிட்ட இங்க வர்றதா போன்ல பேசினப்ப சொன்னா. நல்ல காரியம் நடக்கும் போது இப்படி விசேஷம் பேசறது எவ்வளோ நல்ல சகுனம்…” என்று அந்த பெண்மணி சொல்ல செண்பகம் செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்.
“இப்பவே என்ன அவசரம்? நீங்க எல்லாம் பேசிட்டிருங்க. நாங்களும் சாப்பிட்டு வரோம்…” என்று விசாலாட்சி சட்டென உள்ளே புகுந்துகொள்ள,
“இப்ப பேசாம எப்படி? நானும் கிளம்பனும்….” என்ற பெண்மணி,
“அதோட செண்பகம் என்னல்லாம் எதிர்பார்த்தாளோ அதே மாதிரி குடும்பம். எல்லாம் அம்சமா பொருந்தி இருக்கு…” என்று சொல்லியதோடு நில்லாமல்,
“கையோட ஜாதகத்தை வாங்கிட்டு போகலாம் பாருங்க. போட்டோ எடுத்து அனுப்பி வச்சா அவங்களும் பொருத்தம் பார்ப்பாங்க தானே? எவ்வளோ நாளா மகனுக்கு பொண்ணு தேடிட்டிருக்கா? முரளிக்கு இங்க தான் அமையனும்ன்னு இருந்திருக்கு…” என்றார் பெருமையாக.
ஆனந்தியுமே அங்கே தான் நின்றிருந்தார் அந்த பொழுதில். முருகேஸ்வரியும், விசாலாட்சியும், சுந்தரியும் ரிதுபர்ணாவை பார்க்க அவளின் முகத்திலுமே அருள் குறைந்தது.
“ஜாதகம் தான? கேட்ட உடனே எடுத்து குடுக்க முடியுமா? அதுக்குன்னு நல்லநேரம், காலம் பார்க்கனும்ல…” என்றுவிட்டார் ஆனந்தி.
செண்பகம் இன்னும் சிலை போல அமர்ந்திருக்க மற்றவர்களும் இதனை எப்படி கையாள்வது என பிடிபடாமல் திகைப்பில் இருக்க ஆனந்தி பேசிவிட்டார்.
“பொருத்தம் பார்க்கறது தானே? இதுக்குமா நல்லநேரம் பார்த்து ஜாதகம் குடுப்பீங்க?…” என்றார் அந்த பெண்மணி.
“எங்க வீட்டுல எல்லாம் அப்படித்தான். பொருத்தம் பார்க்கறதுக்கும் நீங்க நல்லநேரம் பார்த்து தான ஜோஸியர்கிட்ட போவீங்க? அப்ப இதுக்கும் பார்க்கனும்ல. ஜாதகம்ன்னா சும்மாவா?…” என்றார் ஆனந்தியும் விடாமல்.
“அப்படின்றீங்களா? சரி, நான் அவங்கட்ட பேசிடறேன். நாள் பார்த்து ஜாதகம் தருவீங்கன்னு சொல்லிடறேன்….” என்று சொல்லி எழுந்துகொண்டனர்.
“நாங்க புறப்படறோம். எப்ப என்னன்னு ஒரு போன் போடுங்க. நானே வந்து வாங்கிக்கறேன். பொண்ணோட ஜாதகத்தையும் வாங்கி வைக்கறேன். நீங்க கூட பாருங்க. அப்பறம் மேற்கொண்டு பேசுவோம்…” என்று சொல்லி கிளம்பிவிட்டார்.
“என்ன எல்லாம் வாயை பார்த்துட்டு இருக்கீங்க? வேலையை பாருங்க…” என்ற ஆனந்தி,
“எல்லா விஷயத்துலயும் நீ என்னை மாதிரி முடிவெடுக்கமாட்டன்னு நம்பறேன். பார்த்துக்கோ…” என்று செண்பகத்திடமும் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
அவர் செல்லவும் பிள்ளையுடன் வித்யாவும் வீட்டிற்குள் நுழைந்துகொள்ள, உடன் முருகேஸ்வரியும் சென்றுவிட இப்போது அனைவரின் கண்களும் செண்பகத்திடம் தான்.
யாரிடமும் எதுவும் பேசாமல் அவரும் அவரின் வீட்டிற்கு சென்றுவிட சட்டென்று அவ்விடமே களையிழந்ததை போலானது.
வீட்டின் ஆண்களுக்கு விசாலாட்சி மூலமாக இவ்விஷயம் தெரிவிக்கப்பட அந்தநேரம் முரளி அங்கே இல்லை.
கம்பெனிக்கு சென்றிருந்தவனிடம் இதனை சொல்லவேண்டாம் என்றுவிட்டான் ஆத்மா.
அண்ணாமலைக்கும், இளவரசுவிற்கும் செண்பகம் என்ன முடிவெடுப்பார் என தலைசுற்றி போயிருந்தனர்.
செண்பகம் சம்மதிக்காமல் ரிதுபர்ணா சம்மதிக்கபோவதில்லை. அது வித்யாவே விருப்பம் கொண்டிருந்தாலும் கூட.
முரளியுமே தாயின் விருப்பமின்றி மணந்துவிட போவதும் இல்லை. என் மனதை தெரிவித்துவிட்டேன். இனி உங்கள் முடிவு என்று விலகி நின்று தவிப்புடன் காத்திருந்தான்.
இதற்கு என்னதான் தீர்வோ என்று அனைவருமே கலங்கி போயிருந்தனர். பிள்ளைகளுடன் இருந்ததனால் அந்த கனம் அதிகமாய் அவர்களை அழுத்தவில்லை.
விசேஷம் முடிந்து மதிய உணவு முடிந்து கிளம்பிய முரளி இரவு தான் வீடு திரும்பியிருந்தான்.
போனில் பேசியபடி உள்ளே நுழைந்தவன் முகத்தில் அத்தனை சந்தோஷம். அந்த சந்தோஷத்தில் தகப்பனை அழைத்தான்.
“ப்பா…” என்று வந்த மகனை எதிர்கொண்ட இளவரசு,
“என்ன முரளி?…” என்று கேட்க,
“அம்மா எங்க?…” என்றான் கவனமாக.
“மனசே சரியில்லன்னு கோவிலுக்கு போகனும்ன்னு சொல்லி கிளம்பினாப்பா…” என்றவர் அவனின் அதீத சந்தோஷம் கண்டு,
“என்ன விஷயம் முரளி?…” என்றார்.
“வித்யாவுக்கு தலையில இருக்கற அந்த பிரச்சனை பத்தி சென்னைல ஒரு டாக்டர்கிட்ட டிஸ்கஸ் பண்ணியிருந்தோம்ல?…”
“ஆமா, நீயும் கண்ணாவும் போய் பார்த்ததா சொன்னியே. இப்ப கூட அடிக்கடி தலைவலின்னு சொல்றான்னு…”
“ஆமா, அந்த ஸ்பெஷலிஸ்ட் நெக்ஸ்ட் வீக் சென்னை வராராம். அப்பாயிண்மென்ட் கிடைச்சிருக்கு. தலையில இருக்கற ப்ளட் க்ளாட்டை ரிமூவ் பண்ணமுடியுமா என்னன்னு தெரிஞ்சிரும்…” என்றவன் சொல்ல,
“சர்ஜரி பன்றது ரிஸ்க்ன்னு இங்க உள்ள டாக்டர்ஸ் சொல்லியிருந்தாங்களேப்பா? இதனால வித்யா உயிருக்கு எதுவும் ஆபத்துன்னா?….” என்று யோசனையாக சொல்லியபடி திரும்ப, அங்கே சத்தமின்றி அந்த அதிர்ச்சியை உள்வாங்கமுடியாமல் நின்றிருந்தார் செண்பகம்.
அவரை சுத்தமாய் இளவரசு எதிர்பார்க்கவில்லை. அவரின் அகன்ற கண்களை கண்டு முரளியும் திரும்ப செண்பகம் கண்களில் நம்ப முடியாத ஒரு உணர்வு.
இருவருக்குமே தலையில் இடி இறங்கியதை போலிருந்தது செண்பகத்தின் இந்த வரவு.
முன்பே இந்த திருமணத்தை ஏற்கமுடியாமல் இருப்பவர் செண்பகம், இதற்கு மேலுமா சம்மதிக்க போகிறார் என்று இளவரசு மகனை பார்க்க, முரளியின் மனதோடு விழிகளுமே கலங்கிவிட்டது.