மருத்துவமனையில் ஆத்மா வெளியே அமர்ந்திருக்க அவனுடன் முரளியும் படபடப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வித்யாவை அழைத்து சென்ற வழி பார்த்திருந்தான்.
“இன்னும் எவ்வளோ நேரம் ஆகும்ண்ணா?…” என முரளி கேட்க,
“தெரியலை. செக்கப் முடியனுமே? என்ன அவசரம் முரளி?…” என்ற ஆத்மாவும் தன் கை கடிகாரத்தை பார்த்தான்.
“இல்லை, சும்மா தான்…” முரளி சொன்னாலும் அவன் குரலில் அத்தனை தவிப்பு.
அதற்குள் அண்ணாமலையிடம் இருந்து ஆத்மாவிற்கு அழைப்பு வர எடுத்து பேசிக்கொண்டிருந்தவன் பார்வை முரளியிடம் தான்.
அவனின் கவனம் முழுவதும் வித்யா இருக்கும் அறைக்கதவிலேயே நிலைகுத்தி நின்றது.
காரணமற்ற பயம் அவனை பிடித்து இறுக்க, அவ்வுணர்வின் தாக்கத்தில் காதோரம் வியர்த்து வழிந்தது.
“ப்ச், என்னடா?…” என்று அதட்டலாய் ஆத்மா அவனின் கையை பிடித்து தட்டிக்கொடுத்தான்.
“இல்லப்பா ரிது வரலை. அவக்கிட்ட நார்மல் செக்கப் தான். அடிக்கடி தலைவலிக்குதுன்னு வித்யா சொல்றதால என்னன்னு பார்த்திடுவோம்ன்னு கூப்பிட்டு போறேன்னு சொல்லிட்டு வந்தேன். வேற என்ன பன்றது?…” என அண்ணாமலையிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
“எதுவும் இப்ப தெரியவேண்டாம் ப்பா கண்ணா. மாசமாயிருக்க பிள்ளை. எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நினைப்போம்…” என்ற அண்ணாமலை,
“இரு உன் சித்தப்பா பேசறார்…” என இளவரசுவிடம் தந்துவிட்டார்.
“என்ன கண்ணா, பார்த்தாச்சா? என்ன சொல்றாங்க?…” என்று இளவரசு பதட்டமாய் கேட்க,
“சரியா போச்சு. இப்ப தானே அப்பாக்கிட்ட சொன்னேன் சித்தப்பா? உள்ள பார்த்திட்டிருக்காங்க. நம்பிக்கையோட இருப்போம்…” என்ற ஆத்மா,
“அதுவுமில்லாம கரூர்ல நம்ம பார்த்த டாக்டர்ஸும் சும்மா இல்லை. நல்ல ட்ரீட்மென்ட் தான். இருந்தாலும் இன்னும் கொஞ்சம் பெஸ்ட்டா பார்க்கறோம். அவ்வளோ தான்…” என்று சொல்லி பேசி வைத்துவிட்டு திரும்பினான்.
“சித்திட்ட சொல்லிட்டு வந்தியா முரளி?…” என அவனிடம் கேட்க,
“ஹ்ம்ம், நைட் கிளம்பும் போதே சொல்லிட்டேன். இதுக்காக தான் போறேன்னு. ஒன்னும் சொல்லலை. தலையாட்டினாங்க…”
“கொஞ்சம் டைம் எடுக்கும். பார்த்துக்கலாம்…”
“ஹ்ம்ம், புரியுது அண்ணா. இருந்தாலும் வாயை திறந்து பேசமாட்டேன்றாங்க. ஆனா எல்லாத்துக்கும் சேர்த்து பேசினாங்களே மொத்தமா. புகைஞ்சு போவேன்னு. தீ வச்சுப்பேன்னு எப்படி சூசகமா மிரட்டி பேசினாங்க தெரியுமா? மனசை விட்டு போகலை அந்த வார்த்தை எல்லாம்…”
“சரிடா, விடு. எங்கப்பாவும் தான் நான் உருப்படமாட்டேன்னு பேசினார். அதெல்லாம் ஒரு ஸ்டேஜ்….” என ஆத்மா மென் புன்னகை புரிய,
“உண்மை தான், அவங்க ஆதங்கத்தை, ஆற்றாமையை வேற எப்படி வெளிப்படுத்தன்னு தெரியாததோட எக்ஸ்ட்ரீம். ஆனா என்னவேணா பேசறதா? அட போங்கண்ணா. இந்த கல்யாணம் முடியறதுக்குள்ள நான் ஹார்ட் பேஷண்டா போய்டுவேன் போல?…” என்று முரளி புலம்புவதை போல தலையசைக்க,
“இதுக்கே வருத்தபட்டா எப்படி தம்பி? அட போங்க தம்பி…” என்று ஆத்மா அவனை இலகுவாக்க முயன்றான்.
மீண்டும் ரிதுபர்ணா அழைக்க அவளிடமும் பேசிவிட்டு வைத்துவிட இதோ அதொவென்று அவர்கள் எதிர்பார்த்த நேரமும் வந்தது.
“டாக்டர் கூப்பிடறாங்க…” என்றதும் இருவருமே வேகமாய் எழுந்து சென்றனர்.
மருத்துவரிடம் வணக்கம் வைத்துவிட்டு இருவருமே அமர அங்கே மூன்றுபேர் கொண்ட குழுவாக இருந்தனர்.
அங்கே திரையில் வித்யாவின் தலையை பரிசோதித்ததன் அடையாளங்கள் மாட்டப்பட்டிருந்தது.
அவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு மருத்துவர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு வெளியே வர இன்னும் நேரம் பிடித்தது.
வித்யா வெளியே காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்து வருவோர், போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
முரளியும், ஆத்மாவும் வரும் பக்கம் திரும்பியவள் அவர்களை பார்த்ததுமே எழுந்துகொண்டாள்.
“ரொம்ப நேரம் ஆகிடுச்சா வித்யா?…” என்று ஆத்மா கேட்க,
“ம்ஹூம்…” என்றவள் பார்வை முரளியையும் ஒருநொடி பார்த்துவிட்டே திரும்பிக்கொள்ள,
“ஏன் என்னை கூட ரெண்டுநிமிஷம் பார்த்தா இங்க யாரும் உன் கண்ணை கடத்திருவேன்னு மிரட்டியிருக்காங்களா?…” என்றான் கேலியாய் முரளி.
வித்யா திகைத்து, பின் முறைத்து ஆத்மாவை பார்த்துவிட்டு வேறு திசை பார்க்க,
“ஏன்டா வம்பிழுக்கற? நீ நேரா நம்ம ஷோரூம் போ. நான் வித்யாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன்…” என்றான் அவன்.
“ஆமா, நான் கிளம்பறேன். அவ்வளோ வேலை இருக்கு. சும்மா இருந்தவனை வேற அவசரம், வான்னு வர சொல்லி இங்க வரை இழுத்தடிக்கிறீங்க?…” என்று பல்லை கடித்துக்கொண்டு முரளி சொல்லியும் வித்யா எவ்வித பாவனையும் காண்பிக்கவில்லை.
அவள் எப்போதும் போல் நிற்க முரளிக்கு தான் இன்னும் தவிப்பானது அவளின் தவிர்ப்பில்.
“பை…” என்று சொல்லியவன் விறுவிறுவென்று முன்னே நடந்து செல்லவும் தான் அவன் திசை பார்த்தாள் அவன் நகர்ந்துசெல்லும் அரவத்தில்.
“ஹாங்…” என்று அவனை பார்த்தவள் இல்லை என மறுப்பாய் தலையசைக்க,
“போய்ட்டானேன்னு பீல் பன்ற மாதிரி இருந்ததே? அதான் கேட்டேன்…” என்று சிரித்தவன்,
“மெடிக்கல் தான் போயிருக்கான். வந்திருவான்…” என்று சொல்லவும் விழிகளை தழைத்துக்கொண்டாள் அவள்.
“சரி, வா. வீட்டுக்கு போய்ட்டு நாங்களும் கிளம்பிருவோம். நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு ஃபுல் டே லீவ் தானே?…” என கேட்டுக்கொண்டே நடக்க வித்யாவும் அவனுடன் சேர்ந்து நடந்தாலும் பார்வை முரளியை தேடித்தான் அலைபாய்ந்தது.
ரிதுபர்ணாவின் விசேஷம் முடிந்த நாளிலிருந்து செண்பகம் மீண்டும் வீட்டினுள் முடங்கிக்கொள்ள வித்யாவிற்கு தன்னைகொண்டே என்று புரிந்தது.
ஊரிலிருந்து கிளம்பும் வரை கூட செண்பகத்தை அவளால் காணமுடியவில்லை. அதுமில்லாமல் தானுமே அவருக்காக தான் அவரின் கண்ணில் படாமல் வீட்டினுள் இருந்துகொண்டது.
ஆனால் செண்பகம் அதற்கும் மேல், அவரின் இருப்பையே அங்கே காணமுடியவில்லை.
ரிதுபர்ணா தான் தானே தேடி சென்று கிளம்புவதாய் சொல்லிவிட்டு வந்திருந்தாள்.
இதற்கு முன்பு தாங்கள் கிளம்பியதும் அப்படியான ஒரு நிகழ்வில். அதையே மீண்டும் தான் சுயநினைவில் நின்றிருக்க முரளி செய்ததும், அதனை செண்பகம் மட்டுமல்லாமல் மற்றவர்கள் பார்த்ததும் தனக்கே அப்படி இருக்க, அவரால் தாங்கமுடியுமா?
அவளின் மனம் அவருக்காகவே யோசித்தது. அவரின் பார்வைகளை வைத்தே தன் ஆசைகளை சிறையிட்டது.
செண்பகத்தை தாண்டிய முரளியின் காதல் அவளை தொட்டு சென்றாலும் என்னவோ அவளால் செண்பகத்தை மீற முடியவில்லை.
தனக்கு தானே விதித்துக்கொண்ட எல்லைகளை மீறி அவனின் இருப்பை மனது தேட இதோ விழிகள் அவனின் நிழலை தேடி ஓடியது.
“வாங்கியாச்சா முரளி?…” என்ற ஆத்மாவின் குரலில் வித்யா வேகமாய் திரும்பி பார்க்க அங்கே கையில் மாத்திரைகளுடன் நின்றிருந்தான் அவன்.
“ஹ்ம்ம், டாக்டர்கிட்ட கேட்டு இன்னொரு கன்பர்மேஷன் முடிச்சிட்டேன். நீங்க கிளம்புங்க…” என்று மருந்தை நீட்டிவிட்டு முரளி வித்யாவை பார்க்க அவளின் கண்கள் என்னவோ பேசியது.
புரிந்தது. கல்லாய் நின்றுகொண்டான் முரளி. ஒவ்வொன்ற்கும் தன் பக்கத்து முன்னெடுப்பு மட்டுமே என்று பார்த்தபடி எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அவன் நின்றிருக்க, ‘என்ன இவன் கவனிக்கவில்லை?’ என்று தான் பார்த்தாள் வித்யா.
“போலாமா வித்யா?…” என்று மருந்தை அவளிடம் தந்தவன் அவள் வாங்காமல் இருக்க கண்டு,
“உன்னை தான். பிடி…” என்று மீண்டும் நீட்ட, செய்வதறியாமல் நின்றவள், மருந்தை பற்றி கேட்டாள்.
“இங்கயே சொல்லனுமா? வீட்டுக்கு போவோம்…” ஆத்மா சொல்ல, முரளி அப்போதும் கண்டுகொண்டான் இல்லை.
“என்ன வித்யா?…” மீண்டும் ஆத்மா கேட்க,
“ண்ணா நான் கிளம்பறேன். நீங்க வரப்போ என்னோட பேக் மட்டும் கொண்டுவந்திடுங்க. நான் அப்படியே கிளம்பிருவேன்…” என்று சொல்ல, ‘அப்போ பூர்வியை பார்க்க வரலையா?’ என்றாள் வித்யா அவனிடம் வேகமாய் கையசைத்து.
எங்கே கிளம்பிவிடுவானோ என்ற பதட்டத்தில் ஆத்மாவை தாண்டிக்கொண்டு அவள் கேள்வி எழுப்ப ஆழ்ந்த பார்வை பார்த்தவன் பதிலின்றி பேண்ட் பாக்கெட்டினுள் கைகளை நுழைத்துக்கொண்டு இலகுவாய் பார்த்தான் அவளை.
“வந்த வேலை முடிஞ்சது. கிளம்பவேண்டிய வேலை தான் பாக்கி….” என அப்போதும் அடக்கபப்ட்ட புன்னகையுடன் அமர்த்தலாய் முரளி சொல்ல, வித்யா ஆத்மாவை பாவமாய் பார்த்தாள்.
“அவனுக்கு வேலை இருக்கும் போல வித்யா…” ஆத்மா கூற,
“ஆமா, பெரிய வேலை….” கிண்டலாய் வேறு சொல்லிக்கொண்டான் முரளி.
“சரி, புறப்படறேன். இப்ப கிளம்பினா நைட் ஊருக்கு போயிருவேன். எனக்காக இங்க யார் இருக்கா? அங்க எங்கம்மா வெய்ட் பண்ணுவாங்க…” என வேண்டுமென்றே சொல்ல வித்யாவின் முகம் வாடிப்போனது.
செண்பகத்தை பற்றி சொல்லியதுமே முகம் கன்றியவள் கண்கள் கலங்கிவிடும் போலிருக்க இமைகளை சிமிட்டி ஆத்மாவின் பக்கவாட்டில் தள்ளி நின்றுகொண்டாள்.